தமிழ் உலகு

தமிழ் மற்றும் தமிழர் பெருமை

பக்கங்கள்

▼

வெள்ளி, 4 நவம்பர், 2022

திருக்குறளில் உள்ள #கடவுள்_வாழ்த்து எனும் அதிகாரம் #திருவள்ளுவர்_எழுதியது_இல்லை !

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02smZkmpF9EXEKZ4B8Jizi2BF2EncLLinYsapZjNRM5XuFwMVqFNBYvTacnxj8BQ6ul&id=100000324268158
திருக்குறளில் உள்ள #கடவுள்_வாழ்த்து எனும் அதிகாரம் #திருவள்ளுவர்_எழுதியது_இல்லை !

இப்படி சொல்பவர் பெரியாரோ அல்லது கடவுள் நம்பிக்கை இல்லாத அறிஞர் ஒருவரோ அல்ல.

திருக்குறளை ஆய்வு செய்து திருக்குறளில் உள்ள இடைச்செருகல்களை ஆதாரங்களுடன் நிறுவியவர் #வ_உ_சி அவர்கள்.ஆம் இந்திய சுதந்திர போராட்ட தியாகி என புகழப்படும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களேதான். வ.உ.சி.கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவர் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

திருக்குறளில் #கடவுள்_வாழ்த்து எனும் அதிகாரம் மட்டுமல்ல,#வான்_சிறப்பு, #நீத்தார்_பெருமை ஆகிய அதிகாரங்களும் திருவள்ளுவர் எழுதியவை அல்ல.அவை #இடைச்செருகல்களே என்று ஆய்வு செய்து கூறுகிறார் வ.உ.சி.“அவை திருவள்ளுவர் காலத்திற்குப் பிற்காலமும் முந்திய உரையாசிரியர்கள் காலத்திற்கு முற்காலமுமாகிய இடைக் காலத்துப் புலவர் ஒருவரால் பாடிச் சேர்க்கப் பட்டவையென்றும் யான் கருதுகிறேன்” என்று கூறுகிறார்.

பரிமேலழகர் என்பவர் எழுதிய திருக்குறள் உரை ஆரிய சார்பானதாக இருப்பதை ஏற்க மறுத்து (அப்போது சுயமரியாதை இயக்கமோ,பகுத்தறிவு கருத்துக்களோ வீரியமாக பேசப்படாத காலம் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.) ஏற்கும்படி இருக்கும் மணிகுடவர் எழுதிய திருக்குறள் உரையிலிருந்து திருக்குறள் அறத்துப்பால் மணிக்குடவர் பதிப்பு எனும் தலைப்பில் 140 பக்கங்கள் கொண்ட நூலை 1917  ஆம் ஆண்டு பதிப்பித்தார் வ.உ.சி.

1930 - 1932 களில் வெளிவந்த ''தமிழ்ப் பொழில்'' (துணர் 5/மலர் 6) எனும் இதழில் பாயிர ஆராய்ச்சி எனும் தலைப்பில் (பக்கம்: 232-237)எழுதியுள்ள கட்டுரையில் வ.உ.சி.அவர்கள் இந்த ஆய்வுகளை தொடராக எழுதியுள்ளார்.

பாயிர ஆராய்ச்சி எனும் ஆய்வு கட்டுரையில் வ.உ.சி அவர்கள் திருக்குறளின் இடைச்செருகல்கள் குறித்து எழுதியுள்ள கருத்துக்களின் சாரம் :

திருக்குறளின் இம்மூன்று அதிகாரங்களும் தற்காலத்தில் மிகவும் புகழ் பெற்றவை. கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை ஆகிய இம் மூன்று அதிகாரங்களிலுள்ள முப்பது குறட்பாக்களையும் திருவள்ளுவர் எழுதியிருக்க முடியாது என்பதற்கு காரணங்களை முன் வைக்கிறார் வ.உ.சி.

1.            கடவுள் வாழ்த்து,வான் சிறப்பு, நீத்தார் பெருமை பாடல்களில் பிற பாடல்களைப்போலச் சொற்செறிவும் பொருட்செறிவும் இல்லை.

2.            கடவுள் வாழ்த்து,வான் சிறப்பு, நீத்தார் பெருமை ஆகிய பாடல்களின் பொருள்கள் பல தடைகளுக்கு இடம் கொடுக்கின்றன.

3.            மெய்யுணர்தல், துறவு என்ற தலைப்புகளில் நூலின் உள்ளே அதிகாரங்கள் இருப்பதால் இதற்கு முரணான தலைப்புகளான கடவுள் வாழ்த்து, நீத்தார் பெருமை ஆகியவற்றை நூலின் தொடக்கத்தில் அதாவது பாயிரத்தில் வைத்திருப்பது பொருத்தமானதல்ல.

4. மெய்யுணர்தல் எனும் தலைப்பிலுள்ள அதிகாரத்தில் கடவுளுக்குக் கூறியுள்ள இலக்கணங்களைக் கொண்டு பார்க்கும்போது அவற்றையும் இம்மூன்று அதிகாரங்களையும் ஒருவரே எழுதியிருக்க முடியாது. (வ.உ.சியின் இக்கருத்து விரிவான ஆய்வுக்குரியது).

5.            துறவு மற்றும் நீத்தார் பெருமை ஆகிய அதிகாரங்களில் உள்ள பாடல்களை ஒப்பிட்டுப் பார்த்தால், இரண்டையும் ஒருவரே இயற்றியிருக்க முடியாது.

6.            மழையைச் ‘சிறப்பிற்றணிப்பாருமில்லை, வறப்பிற்றரிவாருமில்லை.” எனவே, ‘வான் சிறப்’பைக் கூறுவதால் பயன் ஒன்றுமில்லை.

7.  திருக்குறள் 10 என எண்ணிக்கையில் இருக்கும் போது 10ன் மடங்குகளாக 130 அதிகாரமும் 1300 குறள்கள் மட்டுமே இருந்திருக்க வேண்டும்.

---------------------------------------------------------------------------------

திருவள்ளுவரே கடவுள் வாழ்த்தை எழுதி இருக்கிறார் கடவுள் இருப்பதை ஏற்றுக்கொண்டார் என ஏமாற்றி வந்தவர்கள் இப்போது திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூச முயலும் அயோக்கியத்தனமான முயற்சியில் இறங்கியிருக்கும் இவ்வேளையில் கடவுள் வாழ்த்து,வான் சிறப்பு, நீத்தார் பெருமை ஆகியவை திருக்குறளே அல்ல.அவை திருவள்ளுவர் எழுதியவையும் அல்ல.இந்த 3 அதிகாரங்களும் இடச்செருகல்களே என்கிற வ.உ.சி.அவர்களின் ஆய்வுக்கட்டுரையை நாம் மீள வாசிக்க வேண்டியதும் அதனை பரப்புவதும் அவசியமாகும்.
- பரிமள ராஜன் முகநூல் பக்கத்திலிருந்து.... ஆண்டு 2019
parthasarathy r நேரம் 8:33 AM கருத்துகள் இல்லை:
பகிர்

2 ஆயிரம் ஆண்டு பழைமையான தமிழ் எழுத்துகள் பொறித்த பானை ஓடுகள் கண்டுபிடிப்பு



  November 04, 2022 • Viduthalai

காளையார்கோவில், நவ.4- காளையார் கோவில் பாண்டியன் கோட்டையில் 2 ஆயிரம் ஆண்டு பழைமையான தமிழ் எழுத்துகள் பொறித்த பானையோடு கண்டுபிடிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில்  பாண்டியன் கோட்டையில் 2 ஆயிரம் ஆண்டு பழைமையான தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு  சிவகங்கை தொல்நடைக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் காளிராசா கூறியதாவது: பாண்டியன்கோட்டை பகுதியில் மேற்பரப்பில் கிடந்த ஓட்டை எடுத்து சுத்தம் செய்து பார்த்ததில் அது 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானையோடு என்பது உறுதி செய்யப் பட்டது. கீழடியில் வெட்டப்பட்டுள்ள அகழாய்வு குழிகளைப்போல, இதன் இரண்டு புறங்களிலும் மண் அடுக் குகளும் பானை ஓட்டு எச்சங்களும் உடைந்த நிலையில் அரைகுறையான பானைகளும் காணப்படுகின்றன.

இந்த வாய்க்காலில் தான் தமிழ் எழுத்து பொறித்த பானையோடு கிடைக்கப் பெற்றுள்ளது. தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓட்டில், கருப்பிலும் சிவப்பிலும் எழுத்துப்பொறிப்பு காணப்படுகிறது, பானை ஓட்டின் உட்புறம் முழுமையாக கரிய நிறமாக உள்ளது. இந்த ஓடு 7 செமீ அகலமும் ஏழரை செ.மீ உயரமும் உடையதாக உள்ளது. அய்ந்து எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன, மோ, ச, ர, ப, ன்   ஆகிய தமிழி எழுத்துகள் வெளிப்படையாக தெரிகின்றன.

எழுத்துகள் தெளிவுற வாசிப்ப தற்காக தொல்லியல் அறிஞர்களின் பார்வைக்கு அனுப்பப்பட்டதில் அவர்கள் அய்ந்து எழுத்துகள்  மோ, ச, ர, ப, ன்   போன்று வெளிப்படையாக தெரிந்தாலும் ர என்கிற எழுத்து ‘த’ வாக இருக்கலாம். சற்று ஒரு கோடு சிதைவுற்று இருக்கலாம். மோசதப[ன்] மோசிதப[ன்] என்று இருந்திருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் சங்க காலத்திலே மோசிகீரன் என்ற பெயர் வழக்கில் உள்ளதால் மோசிதபன் என்று கருதவும் இடம் உண்டு. முறையான அகழாய்வை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மேற்கொண்டால் காளையார்கோவி லின் தொன்மையும், பாண்டியர்களின் கோட்டை கட்டுமானங்களும் தமிழ் நாட்டின் தொன்மையும் வெளிப்படும். இவ்வாறு கூறினார். காளையார்கோவில் பாண்டியன் கோட்டையில் கிடைக்கப் பெற்ற தமிழ் எழுத்துப் பொறித்த பானை ஓட்டை, அதன் தொன்மை, பெருமை, பாதுகாப்பும் கருதி சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் ஒப் படைக்க சிவகங்கை தொல்நடைக்குழு முடிவு செய்துள்ளது.

parthasarathy r நேரம் 7:22 AM கருத்துகள் இல்லை:
பகிர்
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.