பக்கங்கள்

செவ்வாய், 28 அக்டோபர், 2014

தமிழின் தனித்தன்மை

தமிழ்மொழியின் தனித்தன்மையும் தனிமைத் தன்மையும்

பகுதி II - தமிழின் தனித்தன்மை


தவிர்க்க இயலாத தத்துவம்
மாற்றம் என்பது மாறாத உலகத்தியற்கை; எத்துறையும் இதில் விலக்கன்று. மொழியும் இதிலடங்கும். தமிழ்மொழியும் இதிலடங்கும்.
சமுதாயம் மாற்றம், வளர்ச்சி இவற்றிற்கேற்றபடி மொழியிலும் மாற்றம், வளர்ச்சி ஏற்படும்; ஏற்படவேண்டும். இது, தவிர்க்க இயலாத் தத்துவம் _ விதி _ நியதி _ இயற்கைச் சட்டம்.
தமிழின் இன்றியமையாத அடிப்படையான இலக்கண அமைதியை இந்த மாற்றம் அடிப்படையில் வைத்து ஆராய்வோம்.
தனிமையிலே இனிமை காண முடியுமா?
நம் தமிழ்மொழி _ தனித்தன்மைகள் கொண்ட நம் தமிழ்மொழி, தவிர்க்க இயலாத சில அல்லது பல மாற்றங்களை வளர்ச்சி நோக்கில் கையாள வேண்டும்.
இல்லையேல்,
தமிழ் காலத்தால் பின்தங்கி, பிற்போக்கு நிலைபெற்று, பிற மொழிகளோடு ஒப்பிடுகையில் அது தனிமையாகிவிடும். அல்லது தனிமைப்படுத்தப்பட்டுவிடும்.
வருந்தத்தக்க இந்நிலை ஏற்படாவண்ணம் தடுக்கப்பட வேண்டும் என்றால் இலக்கணத்தில் இன்றியமையாத சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
ஏற்புடைய புத்திலக்கணத்தின் இன்றியமையாமை
மொழிவளர்ச்சியும், புதிய இலக்கணத்தின் தேவையும் ஒன்றுக்கொன்று மிக நெருங்கிய தொடர்புடையவை. மொழிவளர, புதிய இலக்கணங்களும் தோன்றியாக வேண்டும்; தோன்றியேயாக வேண்டும். இன்றேல், மொழியில் குழப்பங்கள், தெளிவின்மை மிகுதியாகும். மொழிவழக்கில், ஓர் ஒருமைப்பாடும் (Uniformity) செம்மையும், சீர்திருத்தமும் (reform)  இல்லாமல் போய்விடும். விளைவு?
நம் தமிழ் தனிமைப்படுத்தப்பட்டுவிடும். ஓடும் நீரோடையாக அல்லாமல் தேங்கிய குட்டையாகிவிடும். ஆதலின், மொழிவளர, புதிய இலக்கணங்கள், காலத்தின் போக்குக்கு இயைப _ ஏற்ப தேவை என்பது தெளிவாகும்.
அவற்றுள் ஒரு சிலவற்றை மட்டும் பார்ப்போம்:
முக்காலமும் தற்காலமும்
வந்தான், வருகிறான், வருவான் - என்கிற முக்கால வினைகள்தான் பண்டைய இலக்கணத்துடன் இடம்பெற்றுள்ளன. ஆனால், இந்த முக்காலங்களோடு, வந்துவிட்டான்;
வந்திருக்கிறான்;
வரப்பார்த்தான்;
வரமுடியும்;
வரவேண்டும்;
வரலாம்; என்பன இன்றைய வழக்காற்றில் உள்ளன. இவற்றைத் தவிர்க்க இயலாது; பழைய இலக்கண வழக்கில் இல்லை என விலக்க இயலாது; முடியாது, முயன்றால், தமிழ் தனிமைப்படுத்தப்பட்டு விடும்.
பலர்பால் வினைமுற்று படும்பாடு
ஆசிரியர் வந்தார் என்பதில் ஆசிரியர் என்பது பலர்பால்; வந்தார் என்பது பலர்பால் வினைமுற்று. இன்று, அது உயர்திணை ஒருமைப் பலர்பாலுக்கு உரியது.
வேற்றுமொழி எழுத்துகளின் பயன்பாடு
தனித்தமிழ் சொற்களை எழுத வடமொழிக் கிரந்த எழுத்துகள் தேவையில்லை. ஆனால், வேற்றுநாட்டுப் பெயர்; ஆள் பெயர்கள்; இடப்பெயர்கள்; வேற்றுநாட்டார் உண்டாக்கி நாம் பயன்படுத்தும் பொருள்களின் பெயர்கள்; போன்றவற்றைக் குறிக்கும்போதும் தமிழ் எழுத்துகளில் குறிக்கப்பட முடியாத போதும் தமிழ்நாட்டில் ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தலாம். இதனால், தமிழ்ப் பண்பாடோ, தனித்தன்மையோ கெடுவதில்லை.
எடுத்துக்காட்டு
ஆகஸ்டு - இதனை அப்படியே எழுதலாம். ஆகச்சுட்டு என்று எழுதவேண்டியதில்லை. பெர்னாட்ஷா - இதனை, பெருனாருடுசா என எழுத வேண்டியதில்லை. இவற்றைத் தனித்தன்மை காக்கும் நோக்குடன் மேற்கண்டவாறு குறித்தால் அந்தச் சொற்கள் நாம் எதை, யாரைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோமோ அவற்றை வெளிப்படுத்த முடியாமல் போய்விடுகிறதல்லவா?
தலைநிமிரவா? தடம் புரளவா?
பழமை, பழம்பெருமை, பழைய பண்பாடு, மொழியின் தனித்தன்மை, தூய்மை முதலானவை நாம் தலைநிமிரவும் பயன்படலாம்; தடம் புரளவும் பயன்படலாம்.
நீரோடும் நிலத்தோடும்
அறிவியல் _ தொழில்நுட்பம் (Science - Technology) என நாம் இன்று குறிப்பிடும் கல்வித்துறை முழுமையாக மேலைநாட்டினரின் படைப்பாகும்.
தனித்திருந்து வாழும் தவமணி
நாம் அறிந்த, நம் நாடு கண்ட தொழில் நுட்பம் நம் மொழியில் இல்லை. அறிவியல் தொழில்நுட்பம் நம் மொழியிலிருந்து விலகி நிற்கிறது என்பது இல்லை. அது, நம்மிடமிருந்தும், நம் மண்ணிலிருந்தும் விலகி நிற்கிறது. தனித்திருந்து வாழும் தவமணியாக நம் மொழி _ செம்மொழி இருக்கிறது. இதனால், தந்தை பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றார்.
அய்யா வழியில் அடிகளார்:
தந்தை பெரியாரின் கருத்துக்கு, தமிழ்மா முனிவர் குன்றக்குடி அடிகளார் பின்வருமாறு விளக்கம் தந்தார். இன்று வாழ்க்கையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் விஞ்ஞானம் _ தொழில்நுட்பம் தமிழில் உண்டா? என, பெரியார் கேட்டார். ஆம்! காலத்திற்குக் காலம் தமிழ் வளரவேண்டும். உலகம் தழீஇய(தழுவிய) ஒட்பத்துடன் (சிறப்புடன்) வளரவேண்டும். அங்ஙனம் தமிழ் வளர்ந்ததா? வளர்க்கப் பெற்றிருக்கிறதா?... இன்று, தமிழ் அறிவியல் தமிழாக வளரவில்லை; வளர்க்கவேண்டும் என்ற முனைப்பும் இல்லை. தெருவில் வழக்கமான பட்டிமன்றம்தான்! கைகேயியா? கூனியா? என்பன போன்ற தலைப்புகள்...
காலந்தொட்டு இயைந்த நிலையில் தமிழன் தன்னை வளர்த்துக் கொள்ளாது போனால் அவன் தலைவர் பெரியார் பார்வையில் காட்டு மிராண்டிதான்! அவன் பேசும் மொழியும் காட்டுமிராண்டி மொழிதான்! (பெரியார் 116ஆம் பிறந்தநாள் விடுதலை மலர்)
அறிவியல் தமிழாக்கத்திற்கான சிலவழி முறைகள் புதிய சொற்கள் புனைவதா?
எல்லாப் பிறமொழிச் சொற்களையும் அவற்றை அப்படியே ஒலிக்காமல் அவற்றைத் தமிழில் மொழிபெயர்ப்பதோ புதிய சொற்கள் புனவைதென்பதோ இயலும் ஒன்றல்ல; தேவையானதுமல்ல. அவற்றை அப்படியே தாய்மொழியில் பயன்படுத்துவதால் தமிழின் தனித்தன்மை கெட்டுவிடாது.
அவற்றை மொழிபெயர்த்தே ஆதல் வேண்டும் என்று அடம்பிடித்தால் தமிழ்மொழி தன் தனித்தன்மையைக் காப்பாற்றிக் கொள்ளும்.
அய்யமில்லை! அதேசமயம், நடைமுறைத்  தடுமாற்றத்தால், தெளிவின்மையால் தமிழ் தனிமைப்பட்டுவிடும்.
சான்றாக, புதிய ஆங்கில மருந்துகளான பென்சிலின் (Pencillin), ஸ்டெரப்டோமைசின் (Streptomycin), இன்சுலின் (Insulin) முதலான பெயர்கள் மொழிபெயர்க்கப்பட வேண்டியமை அல்ல.
தனித்தன்மையா? தனிமையா?
நம் தமிழின் தனித்தன்மையைக் காப்பதாக எண்ணி அறிவு வளர்ச்சியில் நம்மைத் தனிமைப்படுத்துவதோடு தமிழையும் தனிமைப்படுத்தி விடுகிறோம்.
மாற்றம் எதுவுமின்றி உலக அளவில் பொதுமையாகப் பயன்பாட்டில் உள்ள குறியீடுகள் (symbols) இவற்றைத் தமிழில் எழுதித்தான் ஆகவேண்டும் என்பது இல்லை.
அவ்வண்ணம், குறித்தால்தான் தமிழ்ப்பற்று, தமிழுணர்வு இருப்பதாகக் கூறுதல் சரியான அணுகுமுறையோ, கொள்கையோ ஆகாது.
சான்று பி2ளி இருமடங்கு நீரிய (Hydrogen)மும் ஒரு பங்கு உயிரிய (Oxygen)மும் இணைவதால் உண்டாவது நீர். இது வேதியியல் விளைவு. இதற்கான உலகளாவிய குறியீடுதான் பி2ளி என்பது. இதனை, ஆங்கில மொழிச் சொற்குறியீடு என்பதால் நீ2_ என்று தமிழ்மொழியாக்கம் செய்தல் கூடாது.
அறிவியல் மாணவர்கள் குழப்பம் அடைவர். மாற்றமில்லாது அப்படியே பயன்படுத்த வேண்டிய சொற்களை ஏற்றல்.
சான்று: ஓம் (Ohm),, ஆம்பியர் (Ampere) டயர் (Tyre) இவற்றிற்கு வேறு பெயர்களைத் தமிழில் காண, உருவாக்க முயல்வது தேவையற்றது.
மேற்கண்ட பெயர்கள் அவற்றுடன் தொடர்புடைய இயற்றுநர் (Inventor) பெயர்களைத் தாங்கி நிற்பன. இவற்றை மொழிபெயர்த்தல் என்ற எண்ணமே, முயற்சியே தேவையில்லை. செய்தால் தமிழ் தனிமைப்படுத்தப்பட்டுவிடும்.
எழுத்துச் சீரமைப்பு
தமிழ் வளர்ச்சிக்குத் தேவையான முதல்படி எழுத்துச் சீரமைப்பு. ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம் தந்தை பெரியார் அவர்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்ட எழுத்துச் சீர்திருத்தத்தில் ஒரு பகுதி அரசுஆணையாக எம்.ஜி.ஆர். அவர்களால் வெளியிடப்பட்டது.
குறைந்த குறியீடுகள்
தந்தை பெரியார் அவர்கள் ஐ, , என்ற 2 உயிரெழுத்துகளுக்குப் பயன்படுத்திய மாற்றங்கள் மட்டும் அரசு ஆணையாக நடைமுறைப் படுத்தப்படவில்லை. தமிழ் வரிவடிவத்தில் கடந்த 2000 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் மிகப்பல. அறவே, அடையாளம் கண்டுகொள்ள முடியாத அளவிற்கு வரிவடிவம் மாறுபட்டுள்ளது. இப்போதைய வரிவடிவங்களில் சில வீரமாமுனிவரால் மாற்றம் செய்யப்பட்டன. ஒலிகளுக்காக, நாம் அமைக்கும் குறியீடுகள் மிக எளிய _ முடிந்த அளவு குறைந்த எண்ணிக்கையும் கொண்டதாக இருத்தல் வேண்டும்.
பெரியாரைத் துணைக்கோடல்:
தந்தை பெரியார் அவர்கள் 1948_ல் கூறிய பின்வரும் கருத்தினை இந்த இடத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும்.
மாற்றுவதும், திருத்துவதும் எதற்கும், யாருக்கும் இழிவாகவோ, குற்றமாகவோ ஆகிவிடாது. பிடிவாதமாய்ப் பாட்டி காலத்திய, பண்டைக்காலத்திய பெருமைகளைப் பேசிக் கொண்டிருந்தால் அழிபட்டுப் போவோம். பின்தங்கிப் போவோம்.
மொழி என்பது, உலகப் போட்டிப் போராட்டத்திற்கு ஒரு போராட்டக் கருவியாகும். போர்க்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும். _ (தந்தை பெரியார் கட்டுரைத் தொகுப்பு. பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவன வெளியிடு, திருச்சி-_1948)
தனித்தமிழின் தகைமை காப்போம்!
வரம்பு மீறி, தேவையில்லாமல், தாராளமாக வரைமுறையில்லாமல் அயல்மொழிக் கலப்பு தேவையற்றது; தவிர்க்கப்பட வேண்டியது; தடுத்து நிறுத்தப்படுவதற்கு உரியது ஆகும்.
ஓர் இனத்திற்கும் மொழிக்கும் தனித்தன்மை உண்டு. அது, தேவைப்படும் போதெல்லாம் பாதுகாக்கப்படல் வேண்டும்; முடிந்தவரை வளர்க்கப்படல் வேண்டும். அதற்காக, ஓர் இனமோ, மொழியோ, தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு விடுதல் கூடாது.
பாதையும் பயணமும்
கடந்த கால வரலாறு; இன்றைய நடைமுறை; அனைத்துக்கும் மேலாக, உலகு அளவிய கோட்பாடு ஆகிய அனைத்துக்கும் மாறான பாதையில், நம் மொழி _ தமிழ்ப் பயணமும்; முயற்சியும் சென்றுவிடுதல் கூடாது!
காப்போம்! தவிர்ப்போம்!!
நாம், நம் தமிழின் தனித்தன்மையைக் காப்பதாக எண்ணி, நாளுக்குநாள் நம்மை அறிவுலக வளர்ச்சிப் பாதையில் தனிமைப்படுத்துவதோடு, நம் தமிழையும் தனிமைப்படுத்தும் நிலைக்குத் தள்ளிவிடுகிறோம்.
தனிமைப்படலும் (Isolation), தேக்கமும் (Stagnation) வளர்ச்சிக்கு வழி அன்று. தமிழின் தனித்தன்மையைக் காப்போம்! அதே சமயம், தமிழ் தனிமைத்தன்மை அடைவதைத் தவிர்ப்போம்!

- பேராசிரியர் ந.வெற்றியழகன்
உண்மை, ஜூலை16-31, 2012