பக்கங்கள்

சனி, 16 பிப்ரவரி, 2019

அரசு அலுவலகங்கள், கடைகளில் தமிழில் பெயர் பலகை அரசாணை அமல்படுத்தப்பட்ட விவரம் தெரிவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, பிப்.16 அரசு அலுவலகங்கள், தனியார் கடைகளில் தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பாக, அரசின் அரசாணையை அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத்துறை செயலர் மார்ச் 8இல் பதிலளிக்க வேண்டுமென உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ராமநாதபுரத்தை சேர்ந்த   திருமுருகன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள்,  தனியார்  கடைகள்,  தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்துவிதமான அலுவலகங்கள்,  கடைகளில்  தமிழக அரசின் அர சாணைப்படி,  5:3:2 என்ற விகிதத்தில்  தூய தமிழ்,  ஆங்கிலம்,  பிறமொழியில் எழுதப்பட்ட பெயர் பலகைகள் தான் கடைகளுக்கு முன் வைத்திருக்க வேண்டும்.  இந்த அரசாணையை அமல்படுத்தக் கோரி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

ஸ்டோர்ஸ், பேக்கரி,  மெடிக்கல் ஷாப், சில்க்ஸ், ஓட்டல்  என ஆங்கில வார்த்தைகளை தமிழில் எழுதி உள்ளனர். இவற்றை மாற்றி  அங்காடி, அடுமனை,  மருந்துக்கடை,  பட்டு மாளிகை,  உணவகம் என தமிழில்  பெயர்  இருக்க வேண்டும். ஆனால் அந்த ஆங்கில வார்த்தைகளை தமிழில் மொழி பெயர்த்து எழுதியுள்ளனர். எனவே, தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள்,  தனியார்  கடைகள்,  தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்துவிதமான அலுவலகங்கள்,  கடைகளில்  அரசின் அரசாணைப்படி,  5:3:2 என்ற விகிதத்தில் தூய தமிழில் கடையின் பெயர் பலகை  எழுத உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அனைத்து விதமான அலுவலகங்கள்,  கடைகளில்  தமிழக அரசின் அரசாணைப்படி,  தூய தமிழில் பெயர் பலகை  எழுத வேண்டும் என்ற அரசாணையை அமல் படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத்துறை செயலர்  மார்ச்  8ல்  பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
- விடுதலை நாளேடு, 16.2.19

வியாழன், 14 பிப்ரவரி, 2019

தமிழரின் தொன்மையையும், தமிழின் தொன்மையையும் விளக்கும்



                     


ஆசிரியர்:    முனைவர் கருவூர் கன்னல்


வெளியீடு:  கௌரா ஏஜென்ஸீஸ்,


                    4, சிங்கப்பெருமாள் கோவில் தெரு,


                   திருவல்லிக்கேணி, சென்னை - 600005.


                   தொலைபேசி: 9790706548/9790706549


                   044-28443791


விலை: ரூ.60/-                பக்கங்கள்: 68


 

தமிழரின் தொன்மையையும், தமிழின்தொன்மையையும் விளக்கும் சான்றுகளான கல்வெட்டுகள், தொல்பொருள் பற்றிய செய்தியையும் அவற்றை ஆராய்ச்சி செய்து ஆய்வாளர்களின் கருத்துகளையும் தொகுத்து இந்நூலை அளித்துள்ளார் முனைவர் கருவூர் கன்னல்.


 

அமெரிக்காவின் தொல் குடிகளான மாயா இனம் என்பது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியாவின் தென்பகுதியிலே இருந்து சென்று குடியேறிய இனம்தான் என்பது நம்பக் கூடியதாக இருக்கிறது என்று எரிக்வான் டானிக்கன் என்ற செர்மானிய ஆய்வாளர் கூறியுள்ளார்.

கால்டுவெல்லும், வடஇந்தியருக்குப் பெயரே தெரியாத சில பழங்காலத்துப் பப்பரப் புலி அல்லது யானைப்புலி என்னும் ஆப்பிரிக்க மரங்கள் தென்இந்தியாவின் தென்கோடியில் உள்ள கோட்டாற்றிலும், பழைய கொற்கையிலும் இன்னும் காணப்படுகின்றன என்கிறார். மேலும், உலகில் கண்டெடுக்கப்பட்ட மாந்த எலும்புக் கூடுகளில், 1891இல் துபாயிசு என்பவரால் சாவாவில் எடுக்கப்பட்ட நிமிர்ந்த குரங்கு மாந்தனின் காலம் கி.மு.5 இலட்சம் ஆண்டு எனக் கணிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவையும், இந்தியாவையும், சாவாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரு நாடே குமரிக் கண்டம் எனலாம் என்ற தேவநேயப் பாவாணர் அவர்கள் தம் ‘தமிழர் வரலாறு’ என்னும் நூலில் விளக்கிக் கூறியுள்ளார்.

சுமத்திராவில் வாழும் காரோ படக் என்னும் இனத்தவர் சேரர், சோழர், பாண்டியர், கலிங்கர் என்னும் பெயர்களை இக்காலத்தும் வழங்கி வருகின்றனர். மேலும், தமிழுக்கும் சப்பானிய மொழிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.  ஐந்நூறுக்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்கள், உறவுப் பெயர்கள்  சப்பானிய மொழியில் இன்றும் வழங்கி வருகிறது.


இச்செய்தி உண்மை என்பதற்குச் சான்றாக, சுமத்திராவில் வாழும் காரோ படக் என்னும் இனத்தவர் சேரர், சோழர், பாண்டியர், கலிங்கர் என்னும் பெயர்களை இக்காலத்தும் வழங்கி வருகின்றனர். மேலும், சப்பானிய மொழியியலார், தமிழுக்கும் சப்பானிய மொழிக்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது என்றும் ஐந்நூறுக்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்கள், உறவுப் பெயர்கள் அதுவும் சப்பானிய மொழியில் இன்றும் வழங்கி வருகிறது என்றும், தமிழகத்திற்கு வந்து தமிழைக் கற்றுத் தெளிந்து ஆய்ந்து கூறியுள்ளார்கள்.

உலகின் முதல் மாந்த இனமான திராவிட இனத்தின் உற்பத்திக் கருவிகள் பிற மாந்த இனப் பெருங் கற்கால நாகரிகத்திலேயே பயன்பாட்டிற்கு வந்துள்ளன. பிற மாந்த இனக்குழுக்கள் தங்களுடைய உற்பத்திக் கருவிகளாகப் பெருங்கற்களைப் பயன்படுத்தியபோது பிரும்மகிரியில் வாழ்ந்த திராவிடர்கள் இரும்பையே தங்களுடைய உற்பத்திக் கருவிகளாகப் பயன்படுத்தி உள்ளார்கள்.


இலெனின் கிராடு நகரத் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினர், குபான் வட்டாரத்தில் தமது அகழ்வு ஆராய்ச்சிகளை நடத்தியபோது அக்குழுவின் தலைவர் வி.போச் கரோர் செய்தியாளர்களுக்கு நேர் உரை அளித்தபோது ‘குபான் வட்டாரத்தில் ஒரு கல்லறையைப் பார்வையிட்ட பொழுது அங்கு ஒரு மண் மேட்டைக் கண்டோம். அதைத் தோண்டிய போது பெண்கள் அணியும் தங்க நகைகளைக் கண்டெடுத்தோம். அவை இரண்டு தங்க வளையல்களும், இரண்டு தோடுகளும், ஒரு தொடரியும்  (Chain) ஆகும். இந்த அழகான தங்க நகைகள் கி.மு. முதலாம் நூற்றாண்டைச் சார்ந்ததாகும். இந்நகைகளின் வேலைப்பாடு மிக அருமையானது. இந்நாகரிகம், கிறித்து பிறப்பதற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உச்சக்கட்டத்தில் இருந்தது எனத் தோன்றுகிறது’’ என்று கூறியுள்ளார்.

இச்செய்தியிலிருந்து இந்நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பதும், கி.மு. வுக்கு முன்னர் வழங்கிய தமிழ் இலக்கியங்களில் பேசப்படும் தலைவியர் தங்கத்தால் செய்யப்பட்ட வளையல்களையும், காதணிகளையும், தொடரிகளையும் அணிந்துள்ள செய்தியை அந்நூல்களின் மூலம் நன்கறியலாம். எனவே, உருசியாவில் கண்டெடுக்கப்பட்ட நகைகளால் தமிழர் நாகரிகம் அந்நாட்டில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பரவியிருந்தது என்பதற்கும், தமிழர் அங்கு வாழ்ந்திருந்தனர் அல்லது வணிகம் செய்தனர் என்பதற்கும் கட்டியம் கூறுவது போல இருக்கிறது.

கி.மு.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோயில் ஒன்று உருசிய நாட்டு உசுபெசுகித்தானில் செராபாத் இசுடெப்பியில் அகழ்ந்தெடுக்கப்பெற்றுள்ளது. இது 45 மாத்திரி (மீட்டர்) அகலமும், 65 மாத்திரி (மீட்டர்) நீளமும் கொண்டது. 4 மாத்திரி (மீட்டர்) உயரமுள்ள சுற்றுச்சுவருடன் காணப்படுகிறது. இக்கோயிலின் கருவறையில் நான்கு வழிபாட்டுப் பீடங்கள் காணப்படுகின்றன. நிலம், நீர், தீ, காற்று ஆகியவற்றின் எச்சமாக விளங்கும் நான்கு வழிபாட்டுப் பீடங்களாக இக்கருவறை இருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். நிலம், நீர், தீ, காற்று விசும்பின் மயக்கமே உலகம் என்ற கருத்து பழந்தமிழ்  மாந்தரிடம் சிறந்து விளங்கியது. தமிழர் கி.மு. விற்கு முந்தைய தமிழ் இலக்கியங்களில் நிலம், நீர், தீ, காற்று, விசும்பின் இயக்கத்தைப் பற்றிய செய்திகளைப் பலபடப் பாடியுள்ளனர். எனவே, குமரிக்கண்டம் சிதைந்த போது சென்று தங்கிய மாந்தர்களில் எச்சமாகக்கூட இக்கோயில் இருக்கலாம் என்பதற்கு மேலே கண்ட செய்திகள் அரணாக விளங்குகின்றன.

உசுபெசுக்கித்தான் குடியரசைச் சார்ந்த குசான் நகரின் பக்கலில், கி.பி.2ஆம் நூற்றாண்டைச் சார்ந்த புத்தர் கோயில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் ‘அமுதார்யா’ ஆற்றின் வடகரையில் உள்ளது. இங்குத் தோண்டி எடுக்கப்பட்டுள்ள காசுகளும், புத்த சமயத்தை நினைவுபடுத்துகின்றன.

வரலாறு என்பது ஓர் இனக் குமுகாயத்தின் உற்பத்திக் கருவியிலும், உற்பத்தி உறவிலும் தொடங்குகிறது. ஏனென்றால், மாந்தர்கள் கூடி வாழும் குமுகாய அமைப்பின் கட்டுமானமே உற்பத்தி உறவில்தான் வளர்ந்து வந்திருக்கிறது. எனவே, உற்பத்தி உறவின் வளர்ச்சியே பண்பாடு _ நாகரிகம் எனப்படும். ஓர் இனத்தின் பண்பாட்டையும், நாகரிகத்தையும், கலைகளையும் உண்டாக்குவதே உற்பத்தி உறவுகள்தான் எனத் துணிந்து கூறலாம். எனவே, மாந்த இனத்தின் தோற்றத்தைக் கூட உற்பத்திக் கருவிகளைக் கொண்டும், உற்பத்திப் பொருள்களைக் கொண்டும் ஆய்ந்துணரலாம்.

 உலகின் முதல் மாந்த இனமான திராவிட இனத்தின் உற்பத்திக் கருவிகள் பிற மாந்த இனப் பெருங் கற்கால நாகரிகத்திலேயே பயன்பாட்டிற்கு வந்துள்ளன. பிற மாந்த இனக்குழுக்கள் தங்களுடைய உற்பத்திக் கருவிகளாகப் பெருங்கற்களைப் பயன்படுத்தியபோது பிரும்மகிரியில் வாழ்ந்த திராவிடர்கள் இரும்பையே தங்களுடைய உற்பத்திக் கருவிகளாகப் பயன்படுத்தி உள்ளார்கள். எனவே, உற்பத்திக் கருவிகளிலேகூட உலக நாகரிகத்தின் முன்னோடி திராவிடர்களே என்பது வெளிப்படுகின்றது.

புதிய கற்கால மாந்தர்கள் இன்றைய தமிழகத்தின் எல்லாப் பகுதியிலும் வாழ்ந்திருக்கின்றனர். பஃறுளியாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கோள் கொண்ட பகுதிகளிலும் வாழ்ந்திருப்பர் என்பதற்குச் சான்றுகள் பல தேவையில்லை.

இன்றைய பெரியார் மாவட்டத்தில் உள்ள கொடுமணல் என்னும் ஊரிலும், வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் முட்டம் என்னும் இடத்திலும் புதிய கற்கால மாந்தர்களின் கருவிகள் கண்டெடுக்கப்பட்டு ஈரோடு கலைமகள் பள்ளி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டம், கோவலன்பொட்டல் என்னும் இடத்திலும், வடஆற்காடு மாவட்டத்தில் ஆம்பூர் அருகில் உள்ள அர்மாமலை என்னும் இடத்திலும், புதிய கற்காலக் கைக்கோடாரிகளும், பிற கருவிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தருமபுரி மாவட்டத்தில் உள்ள மலைப்பாடி என்னும் ஊரில் கற்காலத்திய ஓவியங்கள் கண்டுபிடிக்கப் பெற்றுள்ளன. நீலகிரி மலையில் உள்ள பெல்லிச்சி என்னும் இடத்திலும் கற்காலத்திய ஓவியங்கள் கண்டுபிடிக்கப் பெற்றுள்ளன.

வரலாற்றுக்கு முற்பட்ட வாழ்வியல் சின்னங்கள் தென்னகத்தின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றன. இச்சான்றுகள் மாந்த இனம் தோன்றி உலக நாகரிகத்தையும், பண்பாட்டையும் விளைவித்த இடம் குமரிக் கண்டமே என்பதை உணர்த்துகின்றன.


உடுமலையில் இருந்து 35 கல் தொலைவில் உள்ள மறையூர் என்னும் இடத்தில் புதிய கற்காலத்தைச் சேர்ந்த வண்ண ஓவியங்கள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ள கீழ்வாலை என்னும் ஊரில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திய ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

காமராசர் மாவட்டம், சிவகாசிக்கு அருகில் உள்ள திருத்தங்கல் என்ற இடத்தில் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட நுண் கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இக்கருவிகள் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே இப்பகுதியில் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை உணர்த்துகின்றன.

மிகப் பழங்காலத்திலேயே கெய்ரோ நகருக்குத் தெற்கே செங்கடல் கரையோரமாய் இருக்கும் கியூசேயிர்-அல்-கடிம் என்ற துறைமுகத்தருகே சில இடங்களைத் தோண்டியபோது அங்கு ஒரு கொல்லன் பட்டறையும், ஒரு பானை ஓடு மீதுள்ள ஒரு தமிழ் பிராமிக்  (Brahmi) கல்வெட்டும் அகப்பட்டிருக்கின்றன.

இன்னும் தமிழ் பிரமியிலேயே உள்ள ஒரு கல்வெட்டினைத் தாங்கி நிற்கும் பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. முதல் பானை ஓடு மீதுள்ள கல்வெட்டு சாதன் (Caatan) எனவும், இரண்டாவது பானை ஓட்டின் மீதுள்ள கல்வெட்டு காணன் (Kanan) எனவும் தமிழ் எழுத்துகள் காணப்படுகின்றன.

இந்த இரண்டு இந்தியர்கள் காதன் அல்லது சாதன், காணன் ஆகியோர் அங்கு வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் தாதுப் பொருட்களை உருக்கி உலோகம் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள் என்பது நம்மால் உணர முடியும் செய்திகளே. பொதுவாக இந்தியர்கள் என்று குறிக்கப்பட்டாலும் அவர்கள தமிழர்களாய்த் தான் இருந்திருக்க வேண்டும். இவ்வுண்மை அந்தத் தமிழ் பிரஹமி பானை ஓட்டுக் கல்வெட்டுகள் மூலம் நமக்குத் தெளிவாகிறது. இந்த அரிய கல்வெட்டை அமெரிக்க தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இன்றுள்ள சிந்து சமவெளியோ, கங்கைச் சமவெளியோ அன்று இல்லை. அவை கடலுள் இருந்து பல நூறாயிரம் ஆண்டுகளுக்கப் பிறகே வெளிக் கிளம்பின. இமயமலையும் அவ்வாறே.

இந்தியப் பூலோகத்திலும் சரி, அதனைச் சுற்றியுள்ள பகுதியிலும் சரி, முதன்முதலாக வரலாற்றுக்குரிய இடமாகத் தென்புலந்தான் இருந்திருக்கிறது என முத்தமிழறிஞர் டாக்டர் மு.கருணாநிதி அவர்களும் விளக்கியுள்ளார்கள்.

கோவையில் இருந்து 25 கல் தொலைவில் உள்ள வெள்ளருக்கம் பாளையத்திற்கு அருகில் வேட்டைக்காரன் மலை என்னும் இடத்தில் ஒரு குகைக் கோயிலில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திய ஓவியங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இதுபோலவே,

திருச்சி மாவட்டம், அரியலூருக்கு அருகில் உள்ள கொட்டை ஆதனூர் என்னும் ஊரில் கல்மரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதேபோல நீலகிரியில் உள்ள கல்மரமும், உதகை மண்டிலப் பூங்காவில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வரலாற்றுக்கு முற்பட்ட வாழ்வியல் சின்னங்கள் தென்னகத்தின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றன. இச்சான்றுகள் மாந்த இனம் தோன்றி உலக நாகரிகத்தையும், பண்பாட்டையும் விளைவித்த இடம் குமரிக் கண்டமே என்பதை உணர்த்துகின்றன.

இந்தியக் கடல் தோன்றுவதற்கு முன்னர் அங்கே பெரும் நிலப்பரப்பு ஒன்றிருந்தது. அது நாவலந் தீவு எனப்பட்டது. அய்ரோப்பிய மக்கள் அதற்கு இலெமூரியா எனப் பெயரிட்டனர். சிலர் காண்டுவானா என்றும் கூறினர். இதன் நடுவில் மேருமலை நின்றது. அதன் ஒரு கொடுமுடியே இலங்கைத் தீவு, வடக்கே ஆசியாக் கண்டம் இருப்பது போன்று தெற்கே நாவலந் தீவு இருந்தது என ந.சி.கந்தையா பிள்ளை அவர்கள் நன்கு விளக்கிக் கூறியுள்ளார்கள்.

இவ்வாறு தென்னிந்தியாவும், ஈழமும், மலேசியாவும், ஆசுதிரேலியாவும், ஆப்பிரிக்காவும், இலங்கையும் இணைந்திருந்த ஒரு பெருந்தீவாக விளங்கிய நாவலம் தீவே இன்றைய மாந்த இனத்தின் தாய் மண் என்பதையும், தமிழ் நிலமே உலக மக்களின் நாகரிகப் பண்பாட்டுக் கருப்பை என்பதையும் நன்குணரலாம்.

  நூல்:                தமிழ் இனத்தின்தொன்மையும்


                தமிழின் தொன்மையும்


ஆசிரியர்:       முனைவர் கருவூர் கன்னல்


வெளியீடு:    கௌரா ஏஜென்ஸீஸ்,


                4, சிங்கப்பெருமாள் கோவில் தெரு,


                திருவல்லிக்கேணி, சென்னை - 600005.


                      தொலைபேசி:9790706548/9790706549


                044-28443791


விலை: ரூ.60/-                பக்கங்கள்: 68


செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

'தை’ மாதத்தை ஆண்டின் முதல் மாதமாக குறிப்பிடும் பழங்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!



ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் தை மாதத்தை ஆண்டின் முதல் மாதமாக குறிப்பிடும் பழங்கால கல்வெட்டு.

ராமநாத புரம் மாவட்டம் கீழக்கரையில் வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள ஜும்மா பள்ளிவாசலில் காலச்சக்கரபழங்கால கல் வெட்டு ஒன்று உள்ளது. அந்த கல்வெட்டில் தை மாதத்தை தமிழ் வருட ஆரம்ப மாத மாக குறிக்கப்பட்டு உள்ளது. அதாவது சூரியன் உத்ரா யணத்தில் பிரவேசிக்கும் மாதமாகிய ‘தை’ மாதத்தில் ஆரம்பித்து ஆனியில் முடிவுற்று பின் அங்கிருந்து தட்சனாய ணத்தில் பிரவேசிக்கும் மாத மாகிய ஆடியில் ஆரம்பித்து மார்கழியில் முடிவடைகிறது.

முற்காலத்தில் கோள்களின் சுழற்சியை அடிப்படையாக கொண்டே காலத்தை கணித் துள்ளார்கள். பூமியின் சுழற்சி யால் சூரியன் பூமியின் தென் பகுதியில் இருந்து வடபகுதி யின் கடைசிக்கும், வடபகுதி யில் இருந்து தென்பகுதியின் கடைசிக்கும் செல்ல முறையே 6 மாத காலங்கள் எடுத்துக் கொள்கிறது.

தை மாதத்தில் அதிக வெப்பம் மற்றும் அதிக குளிர் இல்லாமல் இதமான சூழல் இருக்கும். தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப சுப காரியங்கள் இந்த மாதத்தில் ஆரம்பிப்பதும், செயல்படுத்துவதும் சிறப் படையும் என்ற நம்பிக்கை மக்களிடம் உண்டு. மார்கழியில் அறுவடை முடித்து புது அரிசி கொண்டு சூரியனுக்கு பொங்க லிட்டு உழவர்கள் தை மாதத்தை வரவேற்கின்றனர். இந்த வழக்கம் பண்டைய காலத்தில் இருந்தேதொடர்கிறது என்பதை இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.

இதனால்தான் 2006 -  11  திமுக ஆட்சியில் அப்போ தைய தமிழக முதல்வராக இருந்த கலைஞர்  ‘தை’ மாத பிறப்பை தமிழ் புத்தாண்டாக அறிவித்தார். பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இந்த அறிவிப்பை நீக்கி மீண்டும் சித்திரை மாதத்தின் முதல் தேதியே தமிழ் புத்தாண்டு பிறப்பாக அறிவிக்கப்பட்டது. தற்போது காணப்பட்டுள்ள முன்னோர்களின் பழங்கால கல்வெட்டு தை மாதத்தை தமிழ் மாதத்தின் தொடக்க மாதமாக ஆரம்பித்துள்ளதை நிரூபித்துள்ளது. 300 ஆண்டு களுக்கு முன்பு தை மாதத்தை தமிழ் வருடத்தின் முதல் மாதமாக கடைப்பிடிக்கப் பட்டு வந்துள்ளது என்பதற்கு சான்றாக இந்த பழங்கால கல்வெட்டு உள்ளது. இந்த தகவலை கீழக்கரை வரலாற்று தொல்லியல் ஆய்வாளர் விஜயராமு தெரிவித்தார்.

 - விடுதலை ஞாயிறுமலர், 12.1.19

இலக்கியத்தில் - தை மாதத்தின் சிறப்பு

பொங்கல் விழா நாளையே தமிழர்கள் புத்தாண்டுத் தொடக்க மாகப் பல்லாண்டுக் காலமாகக் கொண்டாடி வந்துள்ளனர் என்ப தற்கு ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கழக இலக்கியங்களில் சான்றுகள் உள.


“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” - நற்றிணை

“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” - குறுந்தொகை

“தைஇத் திங்கள் தண்கயம் போல்” - புறநானூறு

“தைஇத் திங்கள் தண்கயம் போல" - ஐங்குறுநூறு

“தையல் நீராடி தவம் தலைப்படுவாயோ" - கலித்தொகை

தமிழ்ப் புத்தாண்டைப் பற்றிய குறிப்புகள் - மு.மணிவெள்ளையன்

* தீய்ந்த தீபாவளி வந்தாலென்ன? காய்ந்த கார்த்திகை வந்தாலென்ன? மகா ராசன் பொங்கல் வரவேண்டும் என்பது நாட்டுப்புற நடைமுறை மொழி வழக்கு.

* பண்டைத் தமிழர் பொங்கல் விழா கொண்டாடும் வெற்றியைப் பற்றிப் புற நானூற்றிலே ஒரு பாடல் உண்டு. தொன்மையுடைய பொங்கலைப் பற்றிக் கருவூர் கந்தப் பிள்ளை சாத்தனார் என்ற புலவர் பாடியுள்ளர். பாடல்: 168.

* தைப் பிறந்தால் வழி பிறக்கும் - தை மழை; நெய் மழை-என்பன போன்ற பழமொழிகள் தமிழர் புத்தாண்டு வரவேற்பை உறுதிப்படுத்துவனவாகும்.

-  விடுதலை ஞாயிறுமலர், 12.1.19

தமிழ்ப் புத்தாண்டு எது?

2001 - மலேசியா - கோலாலம்பூர் மாநாட்டில் சிறப்புத் தீர்மானங்கள்




தை முதல் நாள்தான் தமிழாண்டுத் தொடக்கம் எனும் முடிவு தமிழ்ச் சான்றோர் களால் 1921 ஆம் ஆண்டு உறுதிச் செய்யப் பெற்று 1935 ஆம் ஆண்டு தெளிவுபடுத்தப் பட்டுத் தொடர்ந்து பல்வேறு கூட்டங்களில், மாநாடுகளில், கருத்தரங்கங்களில் தீர் மானமாக அமையப் பெற்றது.

அம் முடிவு தமிழர் வாழும் உலக நாடு கள் அனைத்தும் ஏற்றுக் கொண்டு நடை முறைப்படுத்துவான் வேண்டி தி.பி.2031 சிலைத் திங்கள் 22 ஆம் பக்கல் (1.6.2001) மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் அமைந்துள்ள பிரிக்பீல்ட்ஸ், அசோகர் அரங்கத்தில் நடைபெற்ற -

தை முதல் நாளே தமிழாண்டுத் தொடக் கம் எனும் உலகப் பரந்துரை மாநாட்டில் பரந்துரை செய்யப் பெற்று அறிஞர் பெரு மக்களால் கீழ்க்காணும் சிறப்புத் தீர்மானங் கள் முன்மொழிந்து, வழிமொழிந்து ஏற்றுக் கொள்ளப்பட்டன.

1) தை முதல் நாளே தமிழாண்டுத் தொடக்கம் என்பதனை உலகத் தமிழர்கள் அனைவரும் ஏற்று இனித் தொடர்ந்து அனைத்து வாழ்வியல் நிலைகளிலும் பின் பற்றுமாறு இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

2) இவ்வுலகில் வெளிவரும் செய்தி ஊடகங்கள் (தாளிகைகள், ஏடுகள், வானொலி, தொலைக்காட்சி, இணையதளம்) அனைத்தும் தமிழ் இன, மொழி, நெறி நலங்கருதி இனித் தொடர்ந்து திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கத்தைப் பின்பற்றி தமிழர் இறைமைக்குத் துணை நிற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

3) உலகெங்கும் தமிழர் பரந்து வாழ் கின்றனர். அவர்களைப் புரந்து வருகின்ற நாடுகளைச் சேர்ந்த அரசு, அரசியலார் இப்பரந்துரையினை ஏற்று அதைத் திங்கள் முதல் நாளில் தமிழ் மக்களுக்குப் பொது விடுமுறை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றது.

4) “நாள் காட்டியும் அதன் வரலாறும்” என்ற தொகுப்பினைச் செய்து வரும் இங் கிலாந்து நாட்டின் எருதந்துறை பல்கலைக் கழக அச்சகத்தார் தங்களுடைய உலக இனங்களின் புத்தாண்டு வரலாற்றுத் தொகுப் பில் தமிழர்க்குரிய ஆண்டுத் தொடக்கமாக “தை மாத முதல் நாளே தமிழாண்டுத் தொடக் கம்” என்பதை இணைத்துக் கொள்ளுமாறு வேண்டப்படுகிறது.

5) பாராட்டுகிறோம்: தை முதல் நாளே தமிழாண்டு எனும் கருத்துருவாக்கத்தை வலியுறுத்தி நீண்டகாலமாக நடைமுறைப் படுத்தியும் பரப்பியும் வரும் போராட் டத்தில் முன்னோடியாக விளங்கய உலக நாடுகளைச் சேர்ந்த செய்தி ஊடகங்கள், தமிழர் அமைப்புகள் குறிப்பாகத் தனித் தமிழியக்க உணர்வாளர்கள் தமிழ் அறிஞர் பெருமக்கள், அரசியல் இயக்கங் கள் முதலான அனைவரையும் இம்மா நாடு நினைவு கூர்ந்து நன்றி பாராட்டு கின்றது.

கரு: “தை முதல் நாளே தமிழாண்டுத் தொடக்கம்” உலகப் பரந்துரை மாநாடு

இடம்: அசோகா அரங்கம், பிரிக் பீல்ட், கோலாலம்பூர்

நாள்: 6.1.2001

நோக்கங்கள்


1) இம்மாநாட்டின் வழி, தமிழ்ச் சான்றோரும் அறிஞர் பெருமக்களும் ஒட்டு மொத்தமாகப் பண்பாட்டியல் அறிவியல், வானியல், வரலாற்றியல் சான்றுகள் வழி உறுதிப்படுத்திய தை - மாதம் முதல் நாளே தமிழாண்டுத் தொடக் கம் என்பதை உலகத் தமிழருக்கு உணரச் செய்து ஏற்றுப் பின்பற்ற வைத்தல்.

2) இம்மாநாட்டின் வழி தாய்மொழிக் கல்வி நிலைப்பாட்டினையும் தமிழ் நெறிச் சிந்தனைகளையும், தமிழியல் கோட் பாடுகளையும் தடம்புரளும் தலைமுறை யினர்க்கு உணர்த்தி நல்ல மனம் நலம் சார்ந்த தமிழ்ப் பண்பாளர்களை உரு வாக்குதல்.

3) இம் மாநாட்டின் வழி தமிழ் மக்கள் மனத்தின் கண் புத்துணர்ச்சியையும், புத்தெழுச்சியையும் தமிழர் அறிவு கோட் பாட்டின் அடிப்படையில் உருவாக்கி மொழியியல், இனவியல், வரலாற்றியல், பண்பாட்டியல், மெய்யியல் தன்மைகளை உணர்த்துதல்.

4) தை முதல் நாளே தமிழாண்டுத் தொடக்கம் என்ற நீண்ட கால உலகத் தமிழர் போராட்டத்தைத் தமிழக அரசு, புதுவை அரசு, இந்திய நடுவணரசு, யுனே கக்கேர் அமைப்பு மற்றும் உலகளாவிய தமிழ் மக்களை புரக்கும்  நாடுகளின் அர சுகளை மதிக்கச் செய்து நடைமுறைப் படுத்தத் தூண்டுதல்.

உயர்வு நாடிச் செல்வோம்! ஒன்றுபட்டு வெல்வோம்!

மாநாடு ஏற்பாடு: மலேசியத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், மலேசியத் தமிழ் நெறிக்கழகம், மலேசிய திராவிடர் கழகம்.

-  விடுதலை ஞாயிறுமலர், 12.1.19

தைத்திங்கள் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!



ஆண்டுகள் வரலாற்றைத் தொடர்ச்சி யாகப் பதிவு செய்யப் பயன்பட வேண்டும். அவை குழப்பத்திற்கு இடமின்றி இருத்தல் வேண்டும். தமிழர் வரலாற்றில் காலக்குழப்பம் இருப்பதற்குத் தொடராண்டு முறை இல்லாதது முக்கியக் காரணமாகும்.

பழந்தமிழரிடையே வியாழ ஆண்டு என் கிற அறுபதாண்டு கணக்குமுறை இருந்துள் ளது என்பதை வரலாற்றில் அறிய முடிகிறது. இந்த அறுபதாண்டு கணக்கு முறையைப் பின்னாளில் ஆரியர்கள் தாங்கள் கையகப் படுத்திக் கொண்டு ஆரியமயமாக்கி 60 ஆண்டுகளுக்கும் சமஸ்கிருதப் பெயர்களைச் சூட்டி, காலப் போக்கில் தமிழரின் ஆண்டு முறையையும், வானியல் கலையையும், அய்ந்திற அறிவையும் அழித்து ஒழித்தனர். தமிழரிடையே தொடராண்டு முறை இல்லாமல் போனதால் இன்று நாம் காணுகின்ற பல்வேறு தாக்குறவுகளும் பின்னடைவுகளும் தமிழினத்திற்கு ஏற்பட்டு விட்டது.

இந்தக் குழப்பத்தை நீக்க அய்ந்நூறு தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள் மறைமலை அடிகளார் தலைமையில் 1921ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒன்று கூடி ஆராய்ந்தார்கள். திருவள்ளுவர் பிறந்த ஆண்டை கி.மு.31 எனக் கொண்டு, திருவள் ளுவர் பெயரில் தொடர் ஆண்டை ஏற்படுத் துவதென முடிவு செய்தனர். இழந்த தொன் மைச் சிறப்புக்குரிய தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமென அவர்கள் அறிவித்தனர். சைவம், வைணவம், புத்தம், சமணம், கிறித்தவம், இசுலாம் எனப் பல்வேறு சமயத்தைத் தழுவிய அந்த அய்ந்நூறு சான்றோர்கள் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்ததற்குச் சரியான காரணம் சான்றுகளும் இருக்கின்றன.

தை முதல் நாள்தான் தமிழ்ப் புத் தாண்டு என்பதற்கு ஈராயிரம் ஆண்டு களுக்கும் முற்பட்ட கழக இலக்கியங் களில் காணப்பெறும் சான்றுகள் சில:

1. தைஇத் திங்கள் தண்கயம் பாடியும் - நற்றிணை

2. தைஇத் திங்கள் தண்ணிய தரினும் - குறுந்தொகை

3. தைஇத் திங்கள் தண்கயம் போல் - புறநானூறு

4. தைஇத் திங்கள் தண்கயம் போல - அய்ங்குறுநூறு

5. தையில் நீராடித் தவம் தலைப்படு வாயோ - கலித்தொகை

தை பிறந்தால் வழி பிறக்கும். தை மழை நெய் மழை முதலான பழமொழிகள் தமிழ் மக்கள் நாவில் இன்றும் பயின்று வருகின்றன. இவை வாழையடி வாழையாக வாய் மொழிச் சான்றாக அமைந்துள்ளன.

இனி, தை முதல் நாளே புத்தாண்டு என்பதற்கு உரிய வானவியல் அடிப்படை யிலான காரணத்தைக் காண்போம். பூமி ஒரு முறை கதிரவனைச் சுற்றி வரும் காலமே ஓர் ஆண்டாகும். இச்சுழற்சியில் ஒருபாதிக் காலம் கதிரவன் வடதிசை நோக்கியும் மறுபகுதிக் காலம் தென்திசை நோக்கியும் செல்வதாகக் காணப்படுகிறது. இதனால் ஓராண்டில் சூரியனின் பயணம், வடசெலவு (உத்ராயணம்) என்றும் தென் செலவு (தட்சாயணம்) என்றும் சொல்லப்படும். தை முதல் ஆனி வரை ஆறு மாதம் வடசெல வும் ஆடி முதல் மார்கழி வரை தென் செலவுமாகும். அந்த வகையில், கதிரவன் வடசெலவைத் தையில்தான் தொடங்கு கிறது. இந்த வானியல் உண்மையை அறிந்த பழந்தமிழர் தைத் திங்களைப் புத்தாண்டாக வைத்தது மிகவும் பொருத்தமானதே.

இப்படியும் இன்னும் பல அடிப்படை உதாரணங்களாலும் தை முதல் நாளை அய்ந்நூறு தமிழ்ச் சான்றோர்கள் புத்தாண்டாக அறிவித்தனர். தமிழ்நாடு அரசு அதனை ஏற்றுக் கொண்டு 1972 முதல் அரசுப் பயன் பாட்டிலும் ஆவணங்களிலும் நடைமுறைப் படுத்தி வருகிறது.

பத்தன்று நூறன்று பன்னூ றன்று

பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்

புத்தாண்டு, தை முதல் நாள்,

பொங்கல் நன்னாள்!

என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடலும் தமிழருக்குத் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்பதைத் தெளிவாக்குகிறது.

தமிழ் மொழி, இன, சமய, கலை, பண்பாடு, வரலாற்று மீட்பு வரிசையில் பிற இனத் தாரின் தாக்குதலால், படையெடுப்பால், மறைப்புகளால், சூழ்ச்சிகளால் இடைக் காலத்தில் சிதைக்கப்பட்ட தமிழரின் வானி யல் கலையை அய்ந்திரக் (சோதிடம்) கலையை நாம் மீட்டெடுக்க வேண்டும். அப்போது தான் தமிழரின் செவ்வியல் நெறியை நிலைப் படுத்த முடியும்.

- லெட்சுமணன், ஈப்போ

நன்றி: முகம், சனவரி 2019
- விடுதலை ஞாயிறு மலர், 12.1.19

திங்கள், 4 பிப்ரவரி, 2019

சுறவம் (தை) முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு

#திருவள்ளுவராண்டே #தமிழராண்டு

#சுறவம் (தை) #முதல் #நாளே #தமிழ்ப்புத்தாண்டு
-------------------------------

ஒரு முறை கதிரவன் தோன்றி, மறைந்து மீண்டும் தோன்றுவதற்கு முந்திய பொழுதுவரை உள்ள காலத்தையே ஒரு நாள் என்கிறோம். இவ்வாறு கொள்ளுதலே இயற்கையொடு பொருந்தியதும் தமிழ்மரபு பற்றிய நடைமுறையில் உள்ளதும் ஆகும். ஆகவே நாள் என்பது இயல்பாகக் கதிரவன் தோற்றத்தையே தொடக்கமாகக் கொண்டுள்ளது.
கிழமை (வாரம்) என்பதும் கதிரவனில் இருந்தே தொடங்குகின்றது.
கிழமையின் முதல்நாள் ஞாயிற்றுக்கிழமையே.
மாதத்தின் தொடக்கமும் கதிரவனை அடிப்படையாகக் கொண்டதே.

திங்கள் வளர்தலும் தேய்தலும் ஆகிய, இரு பதினைந்து நாள் அடங்கிய, ஒளிப்பக்கம் (அமர பட்சம்),
இருட் பக்கம் (கிருட்டிணபட்சம்) என்னும் இரு பக்கங்களால் ஆன, முப்பது நாட்களைக் கொண்டது ஒரு மாதம் என்னும் அளவீடு, திங்களை அடிப்படையாகக் கொண்டதே ஆயினும், மாதம் என்னும் சொல்லும் மதியான் வந்தாய் இருப்பினும் மாதத்தின் தொடக்கம் திங்களின் அடிப்படையில் அமைந்ததன்று. அப்படி அமைந்திருப்பின் காருவா (அமாவாசை) நாளே மாதத் தொடக்கமாக அமைந்திருக்கும். கதிரவன் ஓரைக்குள் புகுந்துசென்று வெளியேறுங்காலம் முப்பது நாள் கொண்டதாய் இருத்தலாலேயே அது மாதம் எனப்படுகிறது. அவ்வகையில் மாதத்தின் தொடக்கம் என்பது  கதிரவனை அடிப்படையாகக் கொண்டே மாதம் தொடங்குகிறது என்பது தெளியப்படும்.
மேற்கூறியாங்குச் சுறவம் (தை) முதல் நாளில் தொடங்கும் வடசெலவும், கடகம் (ஆடி) முதல்நாளில் தொடங்கும் தென்செலவும் எனும் இருவகைச் செலவும் கதிரவனை அடிப்படையாய்க் கொண்டனவேயாம்.

ஆகவே, ஓர் ஆண்டின் தொடக்கமும் கதிரவன் இயக்கத்தின் அடிப்படையில் அமைதலே இயற்கை நெறியும் தமிழ்மரபுமாம், தமிழ்நாட்டு மக்கள் தாம் வாழும் தென்றிசையில் இருந்து வடசெலவு தொடங்கும் சுறவ(தை) முதல்நாளில் கதிரவனைப் போற்றியும் பொங்கலிட்டு மகிழ்ந்தும் புதுநாளாகக் கொண்டாடியும் வருவதால் அதுவே ஆண்டின் தொடக்கமாகும்.

ஆனால், விக்கிரமாதித்தன் என்னும் வடபுல மன்னன் பெயரான் அமைந்த விக்கிரம சகம் என்னும் ஆண்டு முறையின்படி, மேழ(சித்திரை) மாத முதல்நாளே ஆண்டின் தொடக்கமாகக் கொள்ளப்பட்டு, இக்காலத்தில் அதுவே தமிழ்ப் புத்தாண்டு நாள் எனக் கொண்டாடப்படுகின்றது.

வேளாண்மைத் தொழிலுக்கான வாய்க்கால் வெட்டு, எருவடி முதலான வேலைகள் பெரும்பாலும் மேழ(சித்திரை) மாதத்தில் தொடங்கி நடைபெற்றுப் போரடி, வைக்கோற்போர் என பெரும்பாலும் மீனம்(பங்குனி) மாதத்தில் நிறைவடைதலின் , மேழம் முதல் மீனம் ஈறான பன்னிரு மாதக் காலப்பகுதி ஓராண்டாக மக்களிடையே வழக்கூன்றியிருக்கிறது, அது, கல்வியாண்டு, கணக்கியல் ஆண்டு என்பன போல் வேளாண்மை ஆண்டாம்.
ஆயினும் அதுவே எல்லா நிலைக்கும் ஏலாது.

அன்றியும், விக்கிரம சகயாண்டு ‘பிரபவ’ முதல் ‘அட்சய’ ஈறான பெயர்களைக் கொண்ட அறுபதாண்டு வட்டமாகச் சுழன்று வருவதால், நெடுங்கால வரலாற்றுக்கும் அது பயன்படுமாறில்லை.
மேலும் ‘பிரபவ’ முதலான அறுபது பெயர்களும் சமற்கிருதமே யன்றித் தமிழ்சொற்கள் அல்ல.      ‘ஆண்டுப் பிறப்பு’ என்பதில் உள்ள பிறப்பை மகப்பேறெனத் தவறாகக் கொண்டு ‘அட்சய’ ஈறான அவ்வறுபதும் குழந்தைகள் என்றும், அவை பெண்கோலம் பூண்ட நாரதனும் அவன் பாட்டனான கண்ணனும் கூடியதனால் உடனேயும் தொடர்ந்தும் பிறந்தன என்றும் கூறும் தொன்ம(பாகவத)க் கதையும் மிகவும் இழிவானதாக இருக்கிறது.

ஆகவே தமிழ்ப் பேரறிஞர்கள் கடந்த எண்பத்தைந்து ஆண்டுகட்கு முன், சென்னைப் பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் தவத்திரு மறைமலையடிகளார் தலைமையில் கூடி நிறுவிய தொடராண்டான திருவள்ளுவர் ஆண்டே தமிழாண்டாகக் கொள்ளத்தக்கது; இன்று தமிழுணர்வாளர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

திருவள்ளுவர் ஆண்டான தொடராண்டின் தொடக்கம், இப்போது பெருவாரியாக வழங்கிவரும் கிரிகேரியன் ஆண்டெனப்படும் ஆங்கில ஆண்டிற்கு முப்பத்தோராண்டு முற்பட்டது.
அக் கிறித்துவ ஆண்டு கி.மு –கி.பி என வழங்கப்படுதல் போல் திருவள்ளுவர் ஆண்டும் தி.மு–தி.பி என வழங்கப் பெறும்.
இவ்வாண்டு கி.பி.2019 ஆதலின் இதற்குச் சம்மான திருவள்ளுவராண்டு தி.பி.2050 ஆகும்.

ஆகவே, மேழ(சித்திரை) முதல் நாளைத் தொடக்கமாகக் கொண்டதும் தமிழாண்டு என வழங்கப்பட்டு வருவது போலியானதும் பெரும் பயனற்றதும் தமிழுக்கு அயலானதும் ஆகும்! எனவே, தமிழாண்டெனக் கடைப்பிடிக்கத் தக்கது தொடாராண்டான திருவள்ளுவர் ஆண்டே என்பதும்
இத் தமிழாண்டின் தொடக்கம் பொங்கல் திருநாளான சுறவ (தை) முதல் நாளே என்பது தெள்ளத் தெளிவாம்.

தமிழ் மாதங்கள் - சமற்கிருதம் - திரிபு மாதங்கள்:
``````````````````````````````````````````````````````````````````````````````````````

1. சுறவம் - புனர்தை - தை
2. கும்பம் - மகசி - மாசி
3. மீனம் - பல்குணா - பங்குனி
4. மேழம் - சைத்திரம் - சித்திரை
5. விடை - வைசாகி - வைகாசி
6. ஆடவை - மூலன் - ஆனி
7. கடகம் - உத்திராடம் - ஆடி
8. மடங்கல் - அவிட்டம் - ஆவணி
9. கன்னி - புரட்டாதி - புரட்டாசி
10. துலை - அகவதி - ஐப்பசி
11. நளி - கிருத்திகா - கார்த்திகை
12. சிலை - மிருகசீரச - மார்கழி
--------------------------------
குறிப்பு: தமிழாண்டு தொடர்பாக மேலும் தெளிவு பெற,
புலவர் இறைக்குருவனார் ஐயா எழுதிய நூல் இருக்கிறது. அதன் தேவைக்கான தொடர்புக்கு:

இறை பொற்கொடி அம்மா,
திருவள்ளுவர் தமிழ்வழிப் பள்ளி,
இராசாராம் தெரு,
அரங்கநாத புரம்,
சென்னை-600100
பேச:9841633927