பக்கங்கள்

ஞாயிறு, 19 மார்ச், 2023

தமிழர்களுக்கு என தனியே மரபணு அமைப்பு உள்ளதா? ஆய்வுகள் கூறும் உண்மைகள்

 


உலகில் அனைத்து உயிரினங்களும் பரிணமிக்கின்றன. சமகாலத்திய உயிர்கள் அனைத்தும் பரிணாம கிளைகளின் தொடர் சங்கிலியின் தற்போதைய கண்ணி. பரிணாம தொடர்ச்சியில் தற்போதைய உயிரினங்களில் மனிதனுக்கு நெருக்கமானது சிம்பன்சி. சுமார் 65 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதனுக்கான பரிணமித்த பாதையும் சிம்பன்சி பயணித்த பாதையும் பிரிந்தன. இருந்தும், ஒப்பீட்டளவில் 98.8% மரபணு தொகுப்பு ஒன்று போல் இருக்கும்.

அறிவியல் ரீதியாக மனிதனை புரிந்து கொள்ள, சிற்றினம், பேரினம், குடும்பம் போன்ற சில அடிப்படை அறிவியல் வழங்கு வார்த்தகளை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக Pantheraஎனும் ஒரே பேரினத்தை சேர்ந்தவைதான் சிங்கம் (leo), புலி (tigris), சிறுத்தை  (pardus). இவை மூன்றும் பூனை (Felidae) குடும்பத்தை சார்ந்தவை.

ஆக, புலியின் அறிவியல் பெயர் pandarus tigris,  சுருக்கமாக P. tigris எனவும் தொடர்ந்து குறிக்கலாம். சிங்கம் - P. leo, சிறுத்தை  P. pardus.

மனிதனின் அறிவியல் பெயர் Homo sapiens. Homo பேரினம்,  sapiens சிற்றினம். தற்போது உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் H. sapiens தான். இந்த  H. sapiens எப்போது எங்கே எப்படி உருவானாது, எப்போது, எப்படி பரவியது? Sahelanthropus tchadensis என்னும் மனிதக் குரங்குதான்(Primate)என்று கூறுவர், முதனி என தமிழ்படுத்துகின்றனர்) தற்கால மனிதனுக்கும், சிம்பன்சிக்குமான பொதுவான மூதாதையின் நெருங்கிய உறவாக கருதப்படுகிறது. ஆப்ரிக்க கண்டத்தின் மேற்கு பகுதியில் சுமார் 70 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருக்கிறது. இது எப்போதும் அல்லாமல், அவ்வப்போது மட்டும் நிமிர்ந்து நடந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

அதாவது மனிதன் எனும் உயிரினம் உருவாவதற்கான முதல் படிநிலை இந்த உயிரினத்தினிடமிருந்து தொல்லியல் ஆதாரத்தில் அறியப்படுகிறது.

பின் மனித பரிணாமத்தில் பாதையில் முக்கிய திருப்புமுனையில் இருந்த உயிரினம் Orrorin tugenensis எனும் கிழக்கு ஆப்ரிக்காவில் வாழ்ந்த பிரைமேட். அது கிட்டத்தட்ட முழுவதுமாக நிமிர்ந்த நடை கொண்டிருந்தது. இந்த O. tugenensis  மனிதனின் மூதாதை வழியில் அல்லாமல், ஆனால் மூதாதை விலங்கின் நெருங்கிய பரிணாம தொடர்பு கொண்ட உயிரியாக இருக்கலாம் என்றும் கருத்துகள் உண்டு. அதன் தொடர்ச்சியாக, 55 லட்சம் ஆண்டுகளுக்கு முன் கிழக்கு ஆப்ரிக்காவில் Ardipithecus kadabba  எனும் விலங்கு இரு கால்களைக் கொண்டு நிமிர்ந்து நடக்கும்படியான ஆற்றல் பெற்றிருந்ததை அதன் தொல் எலும்பு படிமங்கள் மூலம் அறியப்படுகிறது(Gobbons 2009).

இதன் நெருங்கிய உயிரினமாக 44 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த Ardipithecus ramidus  எனும் விலங்கும் நேர் நிமிர்ந்து நடத்துள்ளது.

ஆனாலும், இந்த  Ardipithecus பேரின விலங்குகள், மரத்தினை பற்றும் படியான உள்ளங்கை உள்ளங்கால்களை கொண்டிருந்தன. இவைகளின் மூளை அளவும் 300 - 350cc (1ccஎன்பது ஒரு கன செண்டிமீட்டர்) அளவிலேயே இருந்தன.

இந்த Ardipithecus பேரினத்திலிருந்து தான் Australopithecus பேரினம் பரிணமிக்கிறது. இந்த நிகழ்வுமனித பரிணாமத்தில் முக்கிய மைல்கல்.

சுமார் 40 லட்சம் ஆண்டு காலம் முன் வாழ்ந்த Australopithecis anamensis எனும் விலங்கின் தொல் படிமத்தால் அறியப்படும் முக்கிய நிகழ்வு, அதன் உள்ளங்கைகள், உள்ளங்கால்கள் மரத்தில் ஏறும்படியாக இல்லாது இருந்தது, பரிணாமத்தில் முக்கிய நிகழ்வு (Leakey et al.1995).

பின் 35 லட்ச ஆண்டுகளுக்கு முன் பலப்பல Australopithecus பேரினத்தின் சிற்றினங்கள்,A. afarensis, A. bahrelghazali தோன்றி, மிக முக்கியமாக 30 லட்சம் ஆண்டுகளுக்கு முன், தெற்கு ஆப்ரிக்காவில் தோன்றிய A. africanus மிக முக்கிய திருப்புமுனை உயிரியாக கருதப்படுகிறது.

இதன் மூளை அளவு420 - 510cc ஆக அதிகரிக்கிறது. இதன் பின் கால சுழற்சியில் பரிணாமத்தில் Australopithecus  பேரினம் பல வேறுபட்ட சிற்றினங்கள் என, (உதாரணம் A. garhi) பரிணமிக்கிறது. இதன் கிளையாக paranthropus aethiopicus எனும் உயிரினமும் வாழ்ந்தது அறியப்படுகிறது. இதே காலகட்டத்தில்தான் (25-27 லட்சம் ஆண்டுகளுக்கு முன்) கற்களை கருவிகளாக இந்த விலங்குகள் பயன்படுத்தி இருக்கின்றன என உறுதிபட கூற முடியாவிட்டாலும், அதற்கான சமிக்ஞைகள் பரிணமித்திருக்கும் என கருதப்படுகிறது.இதன் அந்திம காலத்திலேயே (23 லட்சம் ஆண்டுகளுக்கு முன்) Homo habilis  எனும் Homo  பேரினத்தை சார்ந்த விலங்கும் தோன்றுகிறது. மனிதனான Homo sapiens sapiensசும், H. habilis-சும் ஒரே பேரினத்தை சார்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

இனி, அது இது என அஃறிணையில் குறிக்காமல் உயர்திணையிலேயே குறிப்போம்.  H. habilis கற்களை குச்சிகளை கருவிகளாக மாற்றி, அதை உபயோகப்படுத்தியதும் கண்கூடாக, தொல் எச்சங்கள் மூலம் அறியப்படுகிறது (இந்த கருவிககளை இதற்கு முன்னும், இதே காலகட்டத்திலும் வாழ்ந்த Australopithecus garhi, paranthropus aethiopicus விலங்குகள் செய்திருக்கலாம் எனும் வாதமும் உண்டு). Homoபேரினத்தில் வெளிப்புறத் தோற்றம் தாண்டி, மூளை/அறிவு சார்ந்த பரிணாமமும் மிகப்பெரிய மாற்றங்களை உண்டாக்கியுள்ளது. இவரை முதல் மனிதன் என்றே சொல்லும் அளவுக்கு மனிதனுக்கான பண்புகள் உருவாகிவிட்டிருந்தன. இவர் சுமார் 23 லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவாகி, 16.5 லட்சம் ஆண்டுகள் வரை வாழ்ந்துள்ளான். இவரை‘HANDY MAN’  என்று அழைக்கலாம். காரணம் ஆயுதங்களை செய்யக் கற்றுக்கொண்டார்.அதனை பத்திரப்படுத்தி மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்தினார் (இதற்கு முந்தைய விலங்குகள், தற்போதும் சில குரங்குகள் கற்ளை குச்சிகளை கருவிகளாக பயன்படுத்தினாலும், பத்திரப்படுத்தி மீண்டும் மீண்டும் உபயோகித்ததில்லை). அதாவது, எதிர்காலத்தில் தேவை உண்டு எனும் சிந்தனை மேலோங்கத் தொடங்கிய காலம். குறிப்பிடத்தகுந்த மாற்றமாக, இவரது மூளையின் அளவு 500 - 900cc வரை விரிவடைந்திருந்தது. இது மூளை/அறிவு சார்ந்த பரிணாமத்தின் மிகப் பெரிய லாங்ஜம்ப் என்றே சொல்லலாம். இந்த  H. habilis,பிற Homo சிற்றினங்களுக்கும், முந்தைய Australopithecus பேரினத்திற்குகான இடைப்பட்ட குணாதிசியங்களுடனே இருந்தார்  (Tobias 2006). வெளித்தோற்றமும் சற்றே குரங்கு ஜாடை இருந்தது.  (Tobias 2006). என்றால் நிமிர்ந்த என்று பொருள். இவரை ‘UPRIGHT MAN’’ என்றும் குறிப்பிடுவதுண்டு.  Homo erectus சுமார் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் கிழக்கு ஆப்ரிக்காவில் தோன்றியது. உடல்ரீதியாக மனிதனாகவே தெரிந்தார். H. habilisக்கு இருந்தது போல அல்லாமல், குரங்கு முகஜாடை பெருமளவு மறைந்து மனித முகஜாடை கொண்டிருந்தார். இவரது மூளை அளவு 546 - 1,251cc வரை விரிவடைந்திருந்தது. இவர் பயன்பாடு சார்ந்த பலதரப்பட்ட விதவிதமான கல் ஆயுதங்களை செய்தார்.

அதாவது, இன்ன வேலைக்கு இன்ன ஆயுதங்கள் என பிரித்தறியும் அறிவு பெற்றிருந்தார். மிக முக்கியமாக, நெருப்பை உண்டாக்க கற்றுக்கொண்டாரா என்பதில் அய்யப்பாடு இருந்தாலும், நெருப்பை பயன்படுத்த கற்றுக்கொண்டார். இயற்கையாக தோன்றிய நெருப்பை, தொடர்ந்து எரிய விட்டு பயன்படுத்தியிருக்கலாம் என்றே கருதப்படுகிறது. ஹோமோ எரக்டஸ் மனிதர்கள் அறிவு சார்ந்த ஆதிக்கம் செலுத்தி ஆப்ரிக்கா முழுவதும் பரவினர்.

இவர்களே முதல் முறையாக ஆப்பிரிக்காவை விட்டும் வெளியேறினர். மத்திய கிழக்கில் இரண்டாக பிரிந்து, அய்ரோப்பாவிலும் ஆசியாவிலும் நுழைந்தனர். மேற்கு அய்ரோப்பா வரையிலும், ஆசியாவில் இந்திய நிலப்பரப்பை தாண்டி, இந்தோனீசியா தீவுகள் வரையிலும் பரவினர். இவர்கள் மிதவைகளை பயன்படுத்திய முதல் கடலோடியாக இருக்கவும் வாய்ப்புண்டு என்றும் நம்பப்படுகிறது. பின், சென்ற இடங்களுக்கு ஏற்ப தன்னை தகவமைத்து பல்வேறு புதிய  Homo சிற்றினங்களாக பரிணமித்தனர். தெற்கு ஆப்ரிக்காவில் பரவிய  H.erectus, கால சூழ்நிலைக்கேற்ப மாற்றமடைந்து H. ergaster - ராக பரிணமித்தது. இந்தH. ergaster சுமார் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றி, 14 லட்சம் ஆண்டுகளுக்கு முன் அழிந்தே போகிறது. ஆயினும்H.erectus மற்றும் H.ergaster அவ்வப்போது கலந்து இணை சேர்கின்றன.மேற்கு அய்ரோப்பாவை வந்தடைந்த H. erectus,அங்குள்ள சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு H. antecessor ராக பரிணமித்தது. இந்த இனம் 12 லட்சம் ஆண்டுகள் முன் தோன்றி, 8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் முற்றாக அழிந்தது.

சமகாலத்தில் ஆப்பிரிக்காவிலிந்து கிழக்கே நகர்ந்து சீனா மற்றும் இந்தியா வரை வந்தடைகின்றது H. erectus. இந்தியா வந்தடைந்த H.erectus, இந்தியா முழுவதும் பரவி, தரைவழியாக கிழக்கு ஆசியா வரை பரவி, பின் கடல் மார்கமாக இந்தோனீசியா தீவுகள் வரை பரவியது.

தென் இந்தியாவில் சென்னைக்கு அருகில் அதிரம்பாக்கத்தில், கற்கருவிகளை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் காலம் 3,85,000 ஆண்டுகளுக்கு முன் வரை இருக்கலாம் என தெரிகிறது. இதனை உருவாக்கி பயன்படுத்தியதுH.erectus என்றே ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.இந்த கற்கருவிகளுக்கும், அங்கே தற்போது வாழும் தமிழர்களுக்கும், ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் எந்தவித வரலாற்றுத் தொடர்பும் இல்லை.

இந்தோனீசியா வரை சென்றH.erectus, அங்கே ஃப்ளாரன்ஸ் தீவில், உருவமாற்றம் பெற்று, H. florensisஎனும் குட்டையான மனிதனாக உருவெடுத்தது. தீவின் சூழல் இவனை மூன்றடிக்கு வளரும் இனமாக மாற்றிவிடுகிறது. அங்குள்ள, குள்ள யானைகளை கூட வேட்டையாடியது.

H. florensis-ä ‘HOBBIT MAN’, ‘FLORES MAN’என்றும் அழைக்கின்றனர்.  H. florensis இனம் சுமார் 1,90,000 ஆண்டுகளில் தொடங்கி, மிக சமீபமாக 12,000 ஆண்டுகளுக்கு முன் வரை அந்த தீவுகளில் வாழ்ந்துள்ளது. வடக்கு ஆப்பிரிக்காவில் வாழ்ந்த H.erectus,மெல்ல மெல்ல மாற்றமடைந்து, H.ergester சில சந்தர்ப்பங்களில் கலந்து, H. heidelbergensis உருவெடுத்தது. இந்த இனமே தற்கால மனித இனமான பி.  H. sapiens-ன் நேரடி மூதாதை. இந்த H. heidelbergensis மீண்டும் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி, அய்ரோப்பா, ஆசியாவில் சீனா, இந்தியா, இந்தோனீசியா வரை பரவியது. இந்த இனம் வாழ்ந்தது 6 லட்சம் முதல் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வரை.

நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன், நெருப்பை பயன்படுத்துவது இந்த இனத்துக்கு கைவந்த கலையாக மாறிவிட்டிருந்தது. இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் பண்பு இந்த  H. heidelberginsis காலத்தில் தான் தொடங்குகிறது. சீனா மற்றும் கிழக்காசியா வரை பரவிய இவன், அங்கே H. denisova எனும் புதிய மனித இனமாக பரிணமித்தது. Denisovans  என அழைக்கப்பட்ட இந்த மனித இனம் வாழ்ந்தது இரண்டு லட்சம் தொடங்கி 50,000 ஆண்டுகள் வரை. அய்ரோப்பவை வந்தடைந்த H. heidelbergensis, அங்கே குளிருக்கு ஏற்றபடி H. neanderthalensis, ‘NEANDERTHAL MAN’  என்றும் அழைக்கப்படும் நியாண்டர்தால் மனிதனாக மனித இனமாகப் பரிணமித்தது. வெள்ளை தோலுடன், செம்பட்டை முடியுடன், பருத்த உடலுடன், வாழ்ந்த இந்த இனத்துக்கு என்று மொழிகள் இருந்திருக்கும் என நம்பப்படுகிறது. புறத்தோற்றத்தில் சகமனிதனாகவே நாம் கருதும் அளவுக்கு தற்கால மனித இனத்தை இந்த இனம் ஒத்திருந்தது.

H. neanderthalensis வாழ்ந்த காலம் சுமார் நான்கு லட்சம் முதல் 1,30,000 ஆண்டுகள் முன் உச்சம் பெற்று, சுமார் 35,000 ஆண்டுகளுக்கு முன், மனிதன்(H. sapiens)  வரவை தொடர்ந்து முற்றாக அழிந்தது. H. neanderthalensis மனித இனம்  H.sapiens இனப்பெருக்கம் செய்துள்ளது வரலாற்றில் முக்கிய நிகழ்வு. நியாண்டர்தால்களிடம் கலை பண்பாடு இருந்ததும் பரிணாமத்தின் முக்கிய மைல்கள்.வடக்கு பகுதி ஆப்ரிக்காவில் தங்கிய H. heidelbergensis,  மெல்ல மெல்ல பரிணமித்து, மூன்று முதல் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன் H. sapiensஎனும் புதிய மனிதனாக பரிணமித்தது, அதாவது நாம் தான். H. sapiens இனத்தை ‘MODERN HUMAN’ என்றே அழைத்தனர்.  H. sapiens- இடம் கட்டமைந்த மொழி இருந்தது.

உலகத்தை கைப்பற்றுதல்

இந்த  H. sapiens,2 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மீண்டும் ஆப்ரிக்காவை விட்டு வெளியேறி, மத்திய கிழக்காசியாவிலும், அய்ரோப்பாவிலும் நியாண்டெர்தல்களுடன் கலந்தது. நியாண்டர்தால்கள் புதிய மனிதனுடன் இரண்டற கலந்து சுமார் 35,000 ஆண்டுகளுக்கு முன் முற்றாக வரலாற்றிலிருந்து காணாமல் போகிறது.

H. sapiens -ன் ஆசிய வரவால், இங்கே இந்தியாவில் வாழ்ந்து வந்த H. erectus,  போட்டியிட முடியாமல் வாழமுடியாமல் மெல்ல மெல்ல அழிகிறது. அவ்வப்போது, இரண்டு இனங்களும் இணை சேர்ந்த நிகழ்வும் நடந்ததாக கருதுகோள் உண்டு, ஆயினும் போதிய தரவுகள் இல்லை.

கிழக்காசியாவை அடைந்த H. sapiens, அங்கிருந்த டெனிசோவியன்ஸிடம் கலந்தது. காலப்போக்கில் டெனிசோவியன்ஸும் மறைகின்றனர். சுமார் 40000 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவையும் கடல் வழியாக இந்த புதிய மனித இனம் அடைந்தது. கிழக்கு ரஷ்யா வழியாக, நிலவழியாக அலாஸ்காவை 20000 ஆண்டுகளுக்கு முன் அடைந்து, வட அமெரிக்கா தாண்டி, 12000 ஆண்டுகளுக்கு முன் தென் அமேரிக்காவிலும் அடைந்து, அண்டார்டிகா தவிர்த்து, மொத்த உலகத்திலுமான ஒரே மனித இனமாக பரவி வாழத்தொடங்குகியது.

தமிழன் தனித்துவமானவனா?

மரபணு ரீதியில் தமிழன் தனித்துவமானவனா என்றால் இல்லை என்றே பதிலளிக்க வேண்டியிருக்கும். ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறிய மொத்த மனித கூட்டம் அதிகபட்சமாக 10,000 இணைகள் மட்டுமே என நம்பப்படுகிறது.

அதாவது, ஆப்பிரிக்காவுக்கு வெளியே வாழும் அனைத்து மக்களின் மூதாதையர்கள் இந்த பத்தாயிரம் பேர்களே என நம்பப்படுகிறது. ஆப்ரிக்காவில் வாழும் மனிதர்கள் ஒன்று போல நமக்கு தோன்றினாலும், மரபணு ரீதியாக அதிக வேறுபாடுகளை கொண்டவர்கள். அதாவது, ஒரு வெள்ளை அய்ரோப்பியரும், பழுப்பு இந்தியரும், மஞ்சள் சீனரும், கருப்பு ஆஸ்திரேலியரும் வேறுபாடுகளாக நம் கண்களுக்கு தெரிந்தாலும், அனைவரும் மரபணு நெருக்கம் கொண்டவர்கள். காரணம், மரபணு வேறுபாடு அடைய பல லட்சம் ஆண்டுகள் பிடிக்கும்.

நாம் தோன்றியதே சுமார் மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்தான். வெறும் பத்தாயிரம் இணைகள் மூலமே ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி, அதிகபட்சம் இரண்டு லட்சம் ஆண்டுகள்தான் பரிணாமப் பாதையில் நடந்துள்ளோம். தனித்த மரபணு தொகுப்பு உருவாக, புவியியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டு, பல லட்சம் ஆண்டுகளாவது ஆகும்.

சுமார் 65 லட்சம் ஆண்டுகளுக்கு முன் நம்மை பிரிந்த சிம்பன்சிக்கும் நமக்குமான மரபணு தொகுப்பு வேறுபாடே 1.2% தான் எனும் போது, வெறும் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றி, புவியியல் ரீதியாக தனிமைப்படுத்தப்படாத நாம், எப்படி மரபணு தொகுப்பில் அதிகப்படியான வேறுபாட்டை கொண்டிருக்கமுடியும்? அதற்கான வாய்ப்போ, காலமோ நமக்கு அமையவில்லை என்பதே நிதர்சனம்.

தமிழன் மட்டுமல்ல, உலகில் உள்ள எந்த இனக்குழுவிற்கும் தனித்த மொழி, கலாசார அடையாளங்கள் இருக்குமே தவிர, தனித்த மரபணு தொகுப்பு அமைப்பு, அறிவியல் ரீதியாக இல்லவே இல்லை.

(தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கட்டுரையாளர் ராம்குமார், சுமார் 15 ஆண்டுகளாக மரபணு சார்ந்த ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது அமெரிக்காவின் ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் முதுமுனைவர்பட்ட ஆய்வாளராகவும், திருச்சி அரசுக் கல்லூரியின் வருகைதரு ஆசிரியராகவும் இருக்கிறார்.)

வியாழன், 9 மார்ச், 2023

மைசூரு ஆய்வகத்தில் இருந்து தமிழ் கல்வெட்டுகள் மீட்பு

 மைசூரு ஆய்வகத்தில் இருந்து தமிழ் கல்வெட்டுகள் மீட்பு

சென்னை,நவ.23- கருநாடகாவில் இருந்து மீட்கப்பட்ட தமிழ் கல் வெட்டுகளில் சோழர் காலத்தைச் சார்ந்தவை அதிகம் இருப்பதாகக் கூறப் படுகிறது. இதுவரை வெளியிடப்படாத 15,000 கல்வெட்டு படிகளின் தகவல் களை உடனே வெளியிடவும் தொல் லியல் அறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பிரிட்டிஷ் தொல்லியல் அறிஞர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் என்ப வரால் இந்திய தொல்லியல் ஆய்வகம்(Archaeological Surveyof India)1861ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் கோயில்கள், மலைகள், குகைகள் உள்ளிட்டஇடங்களில் இருக்கும் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டு ‘படி எடுத்தல்’ முறையில் காகிதத்தில் நகல் எடுக்கப்படுகின்றன. முதலில் பெங்களூ ருவில் இருந்த இந்திய தொல்லியல் ஆய்வகம் 1862இல் சென்னைக்கு மாற்றப்பட்டது.

கல்வெட்டு படிகளை குளிர்ச்சியான இடத்தில் பாதுகாக்க வேண்டும் என்பதால், அந்த ஆய்வகம் 1903இல் ஊட்டிக்கும், பின்னர், நிர்வாக கார ணங்களுக்காக 1966இல் மைசூருவுக்கும் மாற்றப்பட்டது. இந்த ஆய்வகத்தில் தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்த சுமார் 1 லட்சம் கல்வெட்டுகளின் படிகள் பாதுகாக்கப்படுவதாக கூறப்பட்டது.

இதற்கிடையே, இங்கு தமிழ் கல்வெட்டுகள் சிதைக்கப்படுவதாக பரவலாக புகார் எழுந்தது. இதனால், அவற்றை தமிழ்நாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. இதுதொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றமும் அவ்வாறே உத்தர விட, மைசூரு ஆய்வகத்தில் இருந்து முதல்கட்டமாக 13 ஆயிரம் தமிழ் கல்வெட்டு படிகள் கடந்த வாரம் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.

இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: சமீ பத்திய கணக்கெடுப்பின்படி, மைசூரு ஆய்வகத்தில் 70 ஆயிரம் கல்வெட்டு படிகள் உள்ளன. அதில் தமிழ் கல்வெட்டு படிகள் சுமார் 24 ஆயிரம். நீண்ட போராட்டத்துக்கு பிறகு, அதில் 13 ஆயிரம் படிகளை சென்னைக்கு அனுப்பியுள்ளனர். அவை அனைத்தும் பார்கோடு முறையில் டிஜிட்டல் வடிவத்துக்கு மாற்றப்பட்டு, ஒவ்வொரு கல்வெட்டு தொடர்பான தகவல்களும் அதில் தெளிவாக குறிப்பிடப் பட் டுள்ளன. தற்போது வந்திருப்பதில் சோழர், பாண்டியர், பல்லவர், விஜய நகர மன்னர்களின் கல்வெட்டுகள், குறு நில மன்னர்களில் வானாதிராயர்கள், முத்தரையர், சம்புவரையர், நுளம்பர் மரபினரின் கல்வெட்டுகள் உள்ளன. சோழர்களின் கல்வெட்டுகள் அதிகம் காணப்படுகின்றன.

இவை தமிழ்நாட்டுக்கு கொண்டு வரப்பட்டாலும், ஒன்றிய அரசின் பரா மரிப்பிலேயே உள்ளது. எனவே, கல்வெட்டு தகவல்களை வெளியிட ஒன்றிய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

மொத்தம் உள்ள 24 ஆயிரம் தமிழ் கல்வெட்டுகளில் 15 ஆயிரம் கல் வெட்டுகள் இதுவரை தொல்லியல் துறையால் வெளியிடப்படாத புதியவை ஆகும். அவற்றில் மன்னர்களின் வரலாறு மட்டுமின்றி மருத்துவம், கல்வி, கலைகள், கோயில்களில் அரங் கேற்றப்பட்ட நாடகம், நடனம் உள் ளிட்ட மக்கள் வாழ்வியல் முறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே, மைசூருவில் உள்ள மற்ற தமிழ் கல் வெட்டு படிகளையும் விரைந்து பெற்று, அதில் உள்ள அரிய விவரங் களை தொகுத்து வெளியிட்டால், 18ஆம் நூற்றாண்டு வரையிலான தமிழ் நாட் டின் புதிய வரலாற்று தகவல்கள் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

சமூக ஆர்வலர் சண்முக சுப்ர மணியன் கூறும்போது, ‘‘மைசூரு ஆய்வ கத்தில் 48 ஆயிரம் தமிழ் கல்வெட்டு படிகள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது 24 ஆயிரம் படிகளே உள்ளன. எனவே, எஞ்சியவற்றையும் விரைந்து மீட்கவேண்டும்.

மீட்கப்பட்ட படிகளை மாநில தொல்லியல் துறையின் கீழ் கொண்டுவர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவற்றை குளிர்ந்த நிலையில் பராமரிப்பது அவசியம் என்பதால், ஊட்டி போன்ற மலைப் பகுதிகளுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். தமிழ் கல்வெட்டுகளில் இருந்து, இதுவரை வெளிவராத முக்கிய வரலாற்று பதி வுகள், குறிப்புகளை வெளியிட வேண் டும்’’ என்றார்.

பார்ப்பன பனியாக்களுக்காக உருவாக்கப்பட்டதே ஹிந்தி


ஆண்டுதோறும் செப்டம்பர் 14ஆம் தேதியில்  ஹிந்தி நாள் என்று கொண்டாடி வருகின்றனர். இன்றுவரை ஹிந்தி நாள் கொண்டாட்டத்திற்கு ஏன் செப்டம்பர் 14ஆம் தேதியை தேர்ந்தெடுத்தார்கள் என்ற விபரம் எங்கும் கிடைக்கவில்லை. 

ஹிந்தியை வலுக்கட்டாயமாக திணிக்க வாஜ்பாயை விட அதிவேகத்தில் அச்சுறுத் தும் விதமாக மோடி அரசு நடந்து வருகிறது.  மோடி மற்றும் அமித்ஷா ஒரே குரலில் கூறு வது பல்வேறு மொழிகள், எழுத்து வடிவங் கள் மற்றும் பேச்சுவழக்குகளைக் கொண்ட நாட்டில் ஒருங்கிணைக்கும் சக்தியாக ஹிந்தி வேண்டும் என்று -  பழைய தேய்ந்த இசைத்தட்டுப் போல் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்

ஹிந்தியின் ஆதிக்கம் பற்றிய விவாதம் புதிதல்ல. 1800-களின் நடுப்பகுதி யில் இருந்து, இந்திய துணைக்கண்டத்தில் அம்மொழி பேசப்படும் பகுதிகளில் உருதுவு டன் முரண்பட்டது. இன்று நாம் அதை ‘ஹிந்தி பகுதி’ என்று அழைக்கிறோம்

வரலாற்றாசிரியர் சுமித் சர்க்கார், ‘நவீன இந்தியா'  என்ற தனது புத்தகத்தில், “உருது வட இந்தியாவின் பெரும்பகுதியில், இஸ்லா மியர்களுக்கு கண்ணியமான கலாச்சாரத் தின் மொழியாக இருந்த அளவுக்கு ஹிந்துக் களுக்கு இல்லை” என்று குறிப்பிட்டார்.  1800-1880-க்கு இடைப்பட்ட காலத்தில் ஹிந்தியை விட இரண்டு மடங்கு உருது புத்தகங்கள் வெளியிடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். பத்திரிகைகளுக்கும் இதே நிலைதான் இருந்தது. ஹிந்தியில் வெளியான 8002 செய்தித்தாள்களுடன் ஒப்பிடுகையில் 16,256 உருது செய்தித்தாள்கள் வெளியானது.

ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி இந்திய துணைக்கண்டத்தில் காலடி எடுத்து வைத்த வுடன் விஷயங்கள் மாறத் தொடங்கின. 

19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் வட இந்தியாவில் ஏற்பட்ட சமூக-அரசியல் மாற்றங்கள், ஹிந்தி மற்றும் உருது ஆகிய இரு வட்டார மொழிகளின் பிளவுகளுடன் அரசாங்கக் கல்வி முறையின் விரைவான விரிவாக்கத்துடன் சேர்ந்து கொண்டது.   பார்ப்பனர், ராஜ்புத் மற்றும் பனியா பிரிவு களை சேர்ந்தவர்கள் ஹிந்தி பள்ளிகளுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என் றும், பாரசீக மற்றும் உருது பள்ளிகள் முஸ் லீம்கள் மற்றும் இதர ஜாதியினர் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்ததாகவும் அக் கால ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. 

நிர்வாகத்தில் ஒரு வேலையைப் பெறு வதற்கான ஆசை, ஹிந்தியின் பல ஆதர வாளர்களை அதன் தகுதிகளை பேசத் தூண்டியது. அது துணைக்கண்டத்தின் பூர்வீக குடிகளின் மொழி என்பதும், முக லாய ஆட்சியின் போக்கில் அது அடக்கப் பட்டது என்பது உள்பட பேசப்பட்டது. ஹிந்தி இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படும் பரதேந்து ஹரிச்சந்திரா மற்றும் அகில பாரதிய ஹிந்து பரிஷத்தை நிறுவிய பண்டிட் மதன் மோகன் மாளவியா போன்றவர்கள் ஹிந்தியை பிரபலப்படுத்து வதற்கான இயக்கத்தின் முக்கிய நபர்களாக இருந்தனர்.

கே.எம்.முன்ஷி மற்றும் என்.கோபால சுவாமி அய்யங்கார் குழு ஹிந்தி ஆதரவா ளர்கள் மற்றும் ஆங்கிலத்திற்கு அரசமைப்பு தகுதி வேண்டும் என்று விரும்பிய தென்னிந் தியாவில் இருந்து வந்த பிரதிநிதிகளின் கோரிக்கைகளை கணக்கில் எடுத்துக் கொண்டது.

இறுதியாக ஒரு சமரசம் எட்டப்பட்டது, அதில் ஹிந்தியுடன் ஆங்கிலமும் 15 ஆண்டு களுக்கு இந்தியாவின் அலுவல் மொழியாக மாற்றப்பட்டது. பிறகு, அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் ஒரே மொழியாக ஆங்கிலத்துக்கு பதிலாக ஹிந்தி மாறும் என்றனர்.

15 ஆண்டு காலம் முடிவடைந்தபோது, ஹிந்தி பேசாத இந்தியாவின் பெரும் பகுதி களில், குறிப்பாக தமிழ்நாட்டில் ஹிந்தி திணிக்கப்படும் என்ற அச்சத்தில் போராட் டங்கள் வெடித்தன.  1965 ஜனவரியில் மதுரையில் தொடங்கிய கலவரம், விரைவில் சென்னைக்கும் பரவியது. போராட்டங் களின் விளைவாக, அலுவல் மொழிச் சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றியது. அதில் ஹிந்தியுடன் ஆங்கிலம் தொடர்ந்து அதிகாரப்பூர்வ மொழியாக நிலைநிறுத்தப் படும் என்று கூறியது.

அடுத்தடுத்த ஆண்டுகளில், ஹிந்தி மொழியை இந்தியாவின் ஒருங்கிணைக்கும் மொழியாகப் பிரச்சாரம் செய்ய அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டது. அவற் றில் ஹிந்தி தினம் கொண்டாட்டமும் ஒன்று. 2011 மொழிவாரி மக்கள்தொகை கணக் கெடுப்பின்படி, அரசமைப்பின் 8ஆவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள 22 மொழிகள் உட்பட 121 தாய்மொழிகள் உள்ளன.

52.8 கோடி தனிநபர்கள் அல்லது 43.6% மக்கள் ஹிந்தி மொழியைத் தங்கள் தாய் மொழியாக அறிவிக்க வலிந்து கட்டாயப் படுத்தப் படுகின்றனர் . அடுத்ததாக அதிகபட்சமாக பெங்காலியை 9.7 கோடி மக்கள் (8%) தாய்மொழியாக அறிவித்துள் ளனர் - இது ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் எண்ணிக்கையில் அய்ந்தில் ஒரு பங்கிற்கும் குறைவானது.

ஹிந்தி தெரிந்தவர்களின் எண்ணிக்கை யைப் பொறுத்தவரை, இந்த எண்ணிக்கை நாட்டின் பாதிக்கு மேல் உள்ளது. ஏறக் குறைய 13.9 கோடிக்கும் அதிகமானோர்) ஹிந்தியை இரண்டாவது மொழியாக அறி வித்துள்ளனர். மக்கள்தொகையில் கிட்டத் தட்ட 55% பேருக்கு ஹிந்தி மொழி தாய் மொழி அல்லது இரண்டாவது மொழியாக வலிந்து திணிக்கப்பட்டுள்ளது.

ஹிந்தி கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு களாக வட இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் தாய்மொழி போல் உயர்ஜாதியினர் நடத்தும் ஊடகங்களின் வழியே மக்களி டையே கொண்டு செல்லப்பட்டது.  அடுத் தடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பில் மக்கள்தொகையில் ஹிந்தி பேசுவோரின் விகிதம் அதிகமாவது போல் பார்த்துக் கொள்ளப் படுகிறது.

1971 இல், 37% இந்தியர்கள் ஹிந்தி மொழி யைத் தங்கள் தாய் மொழியாக அறிவித் ததுபோல் அறிக்கை வெளியிடப்பட்டது. இது அடுத்த நான்கு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 38.7%, 39.2%, 41% மற்றும் 43.6% ஆக உயர்ந்துள்ளது. 1971 மற்றும் 2011 க்கு இடையில், தங்கள் தாய்மொழியை ஹிந்தி என்று அறிவித்த தனிநபர்களின் எண்ணிக்கை 2.6 மடங்கு அதிகரித்து 20.2 கோடியிலிருந்து 52.8 கோடியாக உயர்ந் துள்ளது. பஞ்சாபி, மய்திலி, பெங்காலி, குஜராத்தி மற்றும் கன்னடம் ஆகியவற்றில் இந்த எண்ணிக்கை இருமடங்காகவும், மராத்தியில் கிட்டத்தட்ட இரு மடங்காகவும் அதிகரித்தது. ஹிந்தி ஒன்றிய அரசின் இரண்டு அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாகும்.

 2011 கணக்கெடுப்பின்படி இந்தியாவில் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண் டாடுபவர்களின் எண்ணிக்கை 2.6 லட்சம் மட்டுமே.

2011-இல் இரண்டாவது மொழியாக ஹிந்தி மொழி பேசுவதாக 13.9 கோடி பேர் தெரிவித்தனர். அதற்கு அடுத்தபடியாக, 8.3 கோடி பேர் ஆங்கிலத்தை பேசுவதாக தெரிவித்தனர். 1880-களின் நடுப்பகுதியில் இருந்தே இங்கே பார்ப்பன பனியாக்களுக்கு என்று தனிக்கலாச்சாரத்தை உருவாக்க வலுக் கட்டாயமாக திணிக்கப்பட்ட மொழியே ஹிந்தி என்று தெளிவாக இதன் மூலம் தெரியவருகிறது. 

 இன்று அதிகாரத்தில் இருக்கும் பாஜக அரசு ஹிந்தி பேசாத கடற்கரைப் பகுதி மாநிலங்களில் ஹிந்தியை சர்வாதிகாரப் பாணியில் திணிக்கும் வேலையை ஜரூராக நடத்திக்கொண்டு வருகிறது.   எத்தனை வேடங்கள் போட்டு வந்தாலும் தமிழ்நாட் டில் பெரிதும் உள்ள ஹிந்தி எதிர்ப்பு உணர்வு ”சாயம் வெளுத்த நரிக்கதைபோல்” ஹிந்தித் திணிப்பின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டிவிடும்.

- பாணன்

ஞாயிறு, 5 மார்ச், 2023

ஹிந்தித் திணிப்புக்கு எதிரான தீர்மானம்

 சட்டமன்றத்தில் இன்று

ஹிந்தித் திணிப்புக்கு எதிரான தீர்மானம் 

சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்

சென்னை,அக்.18. அலுவல் மொழி தொடர்பான நாடாளு மன்றக் குழுத் தலைவரால் கடந்த 9.9.2022 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களிடம் அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும், அம்மொழிகளைப்பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது என ஒன்றிய அரசினை இப்பேரவை வலியுறுத்துகிறது என சட்டமன்றத்தில் இன்று இதுதொடர்பான தீர்மானத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

சட்டமன்றத்தில் இன்று (18.10.2022) கேள்வி நேரம் முடிந்தவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அரசினர் தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார்.

அதில் அவர் கூறியதாவது,

ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சராகவும், அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழுத் தலைவராகவும் உள்ள அமித் ஷா தலைமையிலான குழு சமீபத்தில் குடியரசுத் தலைவரிடம் அளித்துள்ள அறிக்கை இன்று நாடுமுழுவதும் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

குறிப்பாக, தமிழ்நாடு உள்ளிட்ட ஹிந்தி பேசாத மாநில மக்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் வகையிலும், இந்த நாட்டின் பிரதமராக இருந்தநேரு அவர்கள் அளித்த வாக்குறுதிக்கு முரணாகவும் பல பரிந்துரைகளை அளித் துள்ளது.

அந்த பரிந்துரைகளில், 

ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களான அய்அய்டி, அய்அய்எம், எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் ஆங்கிலத்துக்கு பதில் ஹிந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும்;

ஹிந்தியை பொது மொழி­யாக்கிடும் வகையில் தொழில் நுட்ப மற்றும் தொழில் நுட்பம் சாரா கல்வி நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளிட்ட ஒன்றிய அரசின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஹிந்தி மொழியே பயிற்று மொழியாக ஆக்கப்பட வேண்டும்;

இளைஞர்களின் வேலைவாய்ப்பில் கட்டாயத்தாள்களில் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு ஹிந்தியை மட்டும் முதன்மைப் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்டவையும் அடங்கும்.

இப்படி ஆங்கிலத்தைப் புறந்தள்ளி, அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள ஹிந்தி பேசாத மாநில மக்களின் 22 மாநில மொழிகளையும் அடி யோடு ஒதுக்கிவைத்து எதிர்காலத்தையே கேள்விக் குறியாக்கும் வகையில் அரசமைப்புச்சட்டத்தின் கூட்டாட்சிக் கொள்கைகளுக்கு எதிரான - நம் நாட்டின் பன்மொழி கட்டமைப்பிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அளிக்கப் பட்டுள்ள இந்தப் பரிந்துரைகளை ஏற்கக் கூடாது. நடை முறைப்படுத்தக் கூடாது என இந்திய பிரதமர் அவர்களுக்கு 16.10.2022 அன்று தமிழ்நாடு அரசால் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இந்த மாபெரும் அவையில் பேரறிஞர் அண்ணா கொண்டு வந்து நிறைவேற்றிய இருமொழிக் கொள்கை தீர்மானத்துக்கு எதிராக, பிரதமராக இருந்த நேரு அவர்கள் ஹிந்தி பேசாத மாநிலங்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு மாறாக 1968 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் அலுவல் மொழி தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதன் அடிப் படையில் ஆங்கில மொழி பயன்படுத்துவது உறுதி செய்யப் பட்டுள்ளதற்கும் எதிராக இப்பொழுது அளிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றக் குழுவின் பரந்துரைகள் அமைந்திருப்பது கவலைக்குரியதாக இப்பேரவை கருதுகிறது.

அன்னைத் தமிழ்மொழியைக் காத்திட ஆங்கிலம் அலுவல் மொழியாக தொடர்ந்திட, ஏன் அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் அழியாது காத்திட ஹிந்தி பேசாத மாநில மக்களின் உரிமைகளை நிலைநாட்டிட தமிழ்நாடு மீண்டும் முன்னோடி மாநிலமாக நின்றிடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழுத் தலைவர் அவர்களால் கடந்த 9.9.2022 அன்று குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும், அம்மொழிகளைப் பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் வழங்கப்பட்டுள்ள பரிந்துரை களை நடைமுறைப்படுத்தக்கூடாது என ஒன்றிய அரசினை இப்பேரவை வலியுறுத்துகிறது என இத்தீர்மானத்தை முன்மொழிகிறேன் என முதலமைச்சர் கூறினார்.

அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்

சட்டமன்றம் இன்று கூடியதும் கேள்வி நேரத்துக்கு முன்பாக அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோர் எழுந்து நின்று பேச முற்பட்டார். அதற்கு பேரவைத் தலைவர் மு.அப்பாவு அவர்கள் கேள்வி நேரம் முடிந்தவுடன் உங்களுக்கு பேச வாய்ப்பு தருகிறேன் என்றார். அதனை ஏற்க மறுத்த எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து எழுந்து நின்று கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தினர். அவையின் மய்யப்பகுதி, பேரவைத்தலைவரின் இருக்கை அருகே கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தினர்.

பேரவைத் தலைவர் பல முறை எச்சரித்தும் அவை நடவடிக்கைக்கு தொடர்ந்து குந்தகம் விளைவித்ததால் அவர்களை அவைத்தலைவர் வெளியேற்றுமாறு அவைக்காவலர்களுக்கு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவைக்காவலர்கள் குண்டுகட்டாக அவர்களை வெளியேற்றினர்.

மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் 22.9.2016 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலைகள் மற்றும் சந்தர்ப்பங்கள் குறித்தும் அதனைத் தொடர்ந்து 5.12.2016 அன்று அவரின் எதிர்பாராத மரணம் வரையில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை செய்ய அமைக்கப்பட்ட நீதியரசர் திரு. அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையை இந்த அவையில் வைக்கப்பட்டது.

நீதியரசர் திருமதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் அறிக்கை தாக்கல்

22.5.2018ஆம் நாள் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டின் விளைவாக இறப்பு, காயங்கள் ஏற்பட்டதற்கான காரணங்கள், சூழ்நிலைகள் குறித்தும் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்குலைவுக்கு காரணமாக பொதுச்சொத்துக்கள் தனியார் சொத்துகள் ஆகியவற்றுக்கு ஏற்படுத்தப்பட்ட சேதம் உள்ளிட்ட பிந்தைய நிகழ்வுகள்குறித்து விசாரிப்பதற்கு அமைக்கப்பட்ட நீதியரசர் திருமதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் அறிக்கை அவையில் தாக்கல் செய்யப்பட்டது.

ஹிந்தித் திணிப்புக்கு எதிராக மேற்கு வங்கத்தில் பேரணி!

 ஹிந்தித் திணிப்புக்கு எதிராக

கேரளம் - ஆந்திரா - தெலங்கானா - கருநாடகா - அகில இந்திய விவசாயிகள் சங்கம் களத்தில் குதிப்பு: மேற்கு வங்கத்தில் பேரணி!

புதுடில்லி, அக்.14- ஒன்றிய அரசின் அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் அனைத்திலும் ஹிந்தி மட்டுமே அலுவல் மொழியாக இருக்கும் என்ற நரேந்திர மோடி அரசின் முடிவு நாடு முழுவதும் எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது. 

இந்த எதிர்ப்பு நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. வழக்கமாக தமிழ்நாடு, கேரளா, கருநாடக மாநிலங்களில் மட்டுமே ஹிந்தித் திணிப்புக்கு எதிரான குரல்கள் எழுந்து வந்த நிலையில், தற்போது ஆந்திரா, தெலங்கானா தாண்டி மேற்குவங்கத்திலும் ஹிந்தித் திணிப்புக்கு எதிரான குரல்கள்  வேகமாக எழுந்துள்ளன. அங்கு போராட்டங்களும் துவங்கி யுள்ளன. 

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் கடந்த மாதம் அறிக்கை ஒன்றை  அளித்தது. அதில், ஒன்றிய அரசின் கல்வி நிறுவ னங்களான அய்.அய்.டி., அய்.அய்.எம்., எய்ம்ஸ்  போன்ற வற்றிலும், மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் ஹிந்தியே கட்டாய பயிற்று மொழியாக இருக்க வேண்டும்; ஆங்கிலம் உள்ள இடங்களில் ஹிந்தியை இடம்பெற செய்ய வேண் டும் என்று பரிந்துரை செய்தது.  இது ஹிந்தி பேசாத மாநிலங்களில் சலசலப்பை ஏற்படுத்தியதுடன், கடும் கண்டனங்களும் எழுந்தன. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு, கேரள முதல மைச்சர்கள் உடனடியாக தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

“பன்முகத்தன்மைதான், இந்திய துணைக் கண்டத்தின் பெருமையும், வலிமையுமாக இருக் கிறது. அப்படியிருக்க, ‘பாரத் மாதா கீ ஜே’  என்று நாடாளுமன்ற அவையில் அதனை ஓர்  அரசியல் முழக்கமாக்கி குரல் எழுப்பிக் கொண்டே ஹிந்திக்கு தாய்ப்பாலும், இந்தியாவின் மற்ற மொழிகளுக்கு கள்ளிப்பாலும் புகட்ட  நினைப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு பேராபத்தை விளைவிக்கும்” என்று கூறிய தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “ஹிந்தியை கட்டாயமாக்க முயன்று, இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம்” என்று எச்சரிக்கை விடுத்தார். சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணி சார்பில் அக்டோபர் 15 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஹிந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங் களுக்கும் அழைப்பு விடுக் கப்பட்டுள்ளது. 

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பிரதமர்  மோடிக்கு நேரடியாக கடிதம் ஒன்றை எழுதினார். 

“நமது நாட்டில் பல மொழிகள் உள்ளன. அப்படி இருக்கும்போது ஒரு மொழியை மட்டும் நாட்டின் மொழியாக அறிவிக்க முடியாது. உயர்கல்வி நிறுவனங்களில் ஹிந்தியை முக்கிய பயிற்றுமொழி ஆக்க முடியாது. இது வேலை தேடுவோர்களையும், மாணவர்களையும் பயத்தில் ஆழ்த்தி உள்ளது. எனவே, ஒன்றிய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் வினாத்தாள்கள் அரசியல் சாசனத்தின் 8 ஆவது  அட்டவணையில் உள்ள எல்லா மொழிகளிலும்  இருக்க வேண்டும். இளைய தலைமுறையினர்  தங்கள் தாய்மொழி தவிர்த்து பிற மொழிகளைக் கற்றுக்கொள்ள ஊக்கப்படுத்தலாம். அதே  வேளையில் ஒரு மொழியை திணிக்கும் முயற்சி என்பது பொதுவாக மக்களிடமும், குறிப்பாக வேலை தேடுவோர் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தி விடும். எந்த ஒரு குறிப்பிட்ட மொழியை யும் பயிற்றுமொழியாக்க முன்னுரிமை தரக் கூடாது.

அப்படி செய்வது திணிப்பாகவே பார்க்கப்படும். அது, நமது கூட்டுறவு கூட்டாட்சி முறைக்கு  நல்லதல்ல. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி  கூடிய விரைவில் தலையிட்டு, தேவையான, சரிப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்” என்று அந்த கடிதத்தில் அவர் வலியுறுத்தினார். 

தமிழ்நாடு கேரள முதலமைச்சர்களைத் தொடர்ந்து,  ஹிந்தி எதிர்ப்புக் களத்தில் குதித்த தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகரராவின் மகனும், அம்மாநில அமைச்சருமான கே.டி. ராமா ராவ், “இந்தியாவுக்கு தேசிய மொழி என்று ஒன்று கிடையாது. பிற அலுவல் மொழிகளுடன் இந்தி யும் ஒன்று. அய்.அய்.டி.களிலும், பிற ஒன்றிய அரசின்  வேலை வாய்ப்பு தேர்வுகளிலும், இந்தியை கட் டாயமாக திணிப்பதன் மூலம், பாஜக கூட்டணி  அரசு கூட்டாட்சி உணர்வினை மீறுகிறது. மொழியை தேர்வு செய்வதற்கு இந்தியர்களுக்கு வாய்ப்பு இருக்க வேண்டும். இந்தித் திணிப்பு கூடாது” என்று எச்சரித்தார். இதேபோல கருநாடகா, ஆந்திரா மாநிலங்களிலும் எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது.

மேற்கு வங்கம்

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் பெங்கால் போக்கோ (ஙிணீஸீரீறீணீ ஜீஷீளீளீலீஷீ) எனும் அமைப்பு  ஹிந்தி மொழி திணிப்புக்கு எதிராக உடனடியாக பேரணி ஒன்றை நடத்தி, தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. வங்கமொழி இலக்கியவாதிகளான சிஷேந்து முகோபாத்யாய், கவிஞர் ஜெய் கோஸ்வாமி, கல்வியாளர் பவித்ரா சர்க்கார் போன்றோர் ஆதரவுடன் நடைபெற்ற இந்த பேரணியில், ஒன்றிய  அரசின் பணிகள், தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட வற்றில் ஆங்கிலத்திற்கு பதிலாக ஹிந்தியை திணித்து ஹிந்தி தெரியாத மாநிலங்களை ஒன்றிய அரசு தண்டிப்பதாக முழக்கங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

மேலும், இந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்கள், வங்கத்தின் காவலர் என்று அழைக்கப்படும் சித்தரஞ்சன் தாஸ், கன்னட தேசியக் கவிஞர் குவேம்பூர் ஆகியோரின் படங்கள் மட்டு மன்றி, தமிழ்நாட்டின் மேனாள் முதலமைச்சர்கள்  அறிஞர் அண்ணா, கலைஞர், தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் படங்களையும் ஏந்திச் சென்று தங்களின் ஹிந்தித் திணிப்புக்கு எதிரான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். 

பங்களா பக்சாவின் பொதுச்செயலாளர் கர்க் சட்டோபாத்யாய் அளித்துள்ள பேட்டியில்,  

“விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற வங்கதேச வீரர்கள், தங்களின் அடுத்த தலைமுறையினர் இந்திக்கு அடிமையாக வேண்டும் என்பதற்காக உயிர்த் தியாகம் செய்யவில்லை என்று ஆவேசத்துடன் கூறியுள்ளார். 

மேலும், ஹிந்தித் திணிப் புக்கு எதிராக அக்டோபர் 16 ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களி லும் போராட்டம் நடைபெறும்” என்றும் அவர் அறிவித்துள்ளார்.

அகில இந்திய விவசாயிகள் சங்கம் கண்டனம்

மாநில மொழிகளைக் காவு கொடுத்து ஹிந்தியை தூக்கிப்பிடிப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அகில இந்திய விவசாயிகள் சங்கம், ஆங்கிலத்தை அகற்றிவிட்டு ஹிந்தியைத் திணிப்பதை அனுமதியோம் என்று எதிர்ப்பும்  தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக அகில இந்திய விவசாயி கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

ஆர்எஸ்எஸ் இயக்கம், “ஹிந்தி, ஹிந்து,  ஹிந்துஸ்தான்” மற்றும் “கலாச்சார தேசிய வாதம்” என்கிற தன்னுடைய நிகழ்ச்சி நிரலை அமல்படுத்திட மோடி அரசாங்கத்தின் மூலம் நடவடிக்கை எடுத்திருப்பது, தேச விரோத மற்றும் அரசமைப்புச்சட்ட விரோதம் என்றும், இது நாட்டின் பல்வேறு மொழிகள் மற்றும் கலாச்சாரத்துடன் ஒன்றுபட்டு வாழ்ந்துவரும் பண்பை அழித்துவிடும் என்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது.  

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தலைமையிலான ஆட்சி மொழி மீதான நாடாளு மன்றக் குழு, நாட்டிலுள்ள தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத நிறுவனங்கள் அனைத்திலும் பயிற்று மொழியாக, ஆங்கிலத்திற்குப் பதிலாக ஹிந்தி மட்டுமே கட்டாய மாக இருக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்குத் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.

தொழில்நுட்ப நிறுவனங்கள் என்பதன் கீழ் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மெண்ட், இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப்  டெக்னாலஜி மற்றும் ‘எய்ம்ஸ்’ ஆகியவை வருகின்றன. மத்தியப் பல்கலைக் கழகங்கள், கேந்திரியா வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா போன்றவை தொழில்நுட்பம் அல்லாத நிறுவனங்களின் கீழ் வருகின்றன. இந்த நிறுவனங்கள் அனைத்திலும் ஹிந்தி பேசாத மக்கள் நுழைய முடியாதவாறு செய்திருப்பதோடு மட்டுமல்லாமல், இந்தக் குழு இவற்றுக்குத் தெரிவு செய்திடும் தேர்வுகளில் கட்டாயமாக ஆங்கில மொழிக் கேள்வித் தாள்களையும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்றும் பரிந்துரைத்திருக்கிறது.

இந்தப் பரிந்துரைகள் அனைத்தும் நாட்டு மக்கள் மத்தியில் காணப்படும் பல்வேறு வேற்றுமைப் பண்புகளிலும் உள்ள ஒற்றுமையை வளர்த்தெடுக்கப்படும் என்று அரசமைப்புச்சட்டம் அளித்துள்ள உறுதி மொழிகளையும், சுதந்திரப் போராட்டத்தின் பாரம்பரிய மரபுகளையும் மறுதலிக்கிறது. . இதர  மொழிகளைக் காவு கொடுத்து ஹிந்தியைத் தூக்கிப்பிடிப்பது தேசிய ஒருமைப்பாட்டின் மீதான நேரடித் தாக்குதலாகும். பாசிஸ்ட் ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட அமித்ஷா, இந்தியர்களை இப்படி மொழி அடிப்படையில் பிரித்தாள முயல்வதும், இதன்மூலம் நாட்டையே பிளவுபடுத்த முனைவதும் ஆச்சரியப்படக்கூடிய ஒன்று அல்ல.

மோடி அரசாங்கத்தின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கையால் ஏற்கெனவே வேதனையை அனுபவித்துவரும் விவசாயிகள் குடும்பங்களுக்கு இந்த நடவடிக்கையானது கடும் பாதிப்பை ஏற்படுத்திடும். விவசாய நெருக்கடியால் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள விவசாயக் குடும்பங்களில் உள்ள இளைஞர்கள், குறைந்த கட்டணத்தில் அரசு நிறுவனங்களில் கல்வி கற்று, அதன்மூலம் ஒன்றிய அரசாங்கத்தின்கீழ் உள்ள நிறுவனங்களில் வேலைக்குச் செல்லலாம் என்று கருதிக் கொண்டிருக்கும் நிலையில், இந்தப் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டால், அவர்களின் எதிர்காலக் கனவுகள் தகர்ந்து தரைமட்டமாகிவிடும்.   ஆர்எஸ்எஸ்ஸின் பாசிஸ்ட் சூழ்ச்சியை முறியடித்திட நாட்டிலுள்ள ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒன்றுபட்டுப் போராட முன்வர வேண்டும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் அறைகூவி அழைக்கிறது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்தைத் தூக்கி எறிந்திட விடுதலைப் போராட்டத்தின் போது ஒன்றுபட்ட பல்வேறு தேசிய இன மக்களின் ஒற்றுமையையும் பாதுகாத்திட இது மிகவும் முக்கியமாகும். 

இவ்வாறு விவசாயிகள் சங்கத்தின் அறிக்கையில் கூறியுள்ளது.

‘தமிழ்நாடு' எனும் வரலாற்றுப் பொன்னேடும் தந்தை பெரியாரின் அரும் பணியும்

 பதிலடிப் பக்கம்

‘தமிழ்நாடு' எனும் வரலாற்றுப் பொன்னேடும்

தந்தை பெரியாரின் அரும் பணியும்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

பேராசிரியர் ப.காளிமுத்து எம்.ஏ.,பி.எச்.டி

‘தமிழ்நாடு' என்பது தமிழ் மக்களின் உணர்வோடும் உயிரோடும் ஒன்றிக் கலந்த உயிரோவியம்! அது தமிழர்களின் அடையாளச் சின்னம்! அது ‘தமிழகம்' என்றும் 'தமிழ்நிலம்' என்றும், ‘தமிழ்கூறும் நல்உலகம்' என்றும் ‘தென்னாடு' என்றும் தொன்று தொட்டு பல்வேறு சிறப்புப் பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தது. ஆனால் அதன் வரலாற்றுப் பெயர் ‘தமிழ்நாடு' என்பதுதான் என்பதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

‘தமிழ்நாடு' என்னும் பெயர் நம் இன எதிரிகளுக்கு இன்று எரிச்சலூட்டும் பெயர்! அது மட்டுமா? ‘திரா விடம்', தமிழ், தமிழ்நாடு என நம்மை அடையாளப் படுத்தும் அனைத்தும் பார்ப்பனர்க்கு எரிச்சலூட்டுகின் றன. இவை நம் கோட்பாடுகளின் குறியீடுகள்! அத னால் அவர்களுக்கு எரிச்சல்!

1920இல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 12 பிரிவு களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. பின்னர் அதனை மொழி அடிப்படையில் 21 பிரிவுகளாகப் பிரித்தனர். அவ்வாறு பிரிக்கப்பட்டபோது ஆந்திர, கருநாடக, கேரளக் காங்கிரஸ் கமிட்டிகள் என்று பெயர் பெற்ற போது ‘சென்னை மாநிலக் காங்கிரஸ் கமிட்டி' என்றே தமிழகக் காங்கிரசிற்குப் பெயரிட வேண்டும் என்று பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்தனர். அப்போது காங்கிர சில் பார்ப்பனர் ஆதிக்கம் அதிகம்! இந்தச் சூழ்நிலை யில் பெரியார் 1919இல் தன்னைக் காங்கிரசில் இணைத் துக் கொண்டார். ஓராண்டுக் காலத்திற்குள் காங்கிரசில் அசைக்க முடியாத தலைவராகப் பெரியார் உருவெடுத்தார்.

இந்தச் சூழ்நிலையில் 1920இல் காங்கிரசுக் கமிட்டி யின் பெயர் மாற்றம் பற்றிய கருத்துக்கள் முன்வைக்கப் பட்டன. ‘தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி' என்று பெயர் வைப்பதைப் பார்ப்பனர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. 1920இல் மட்டுமல்ல, 1956லும் மொழிவழி  மாநிலங்கள் உருவாக்கப்பட்ட காலத்திலும் ‘தமிழ்நாடு' என்ற பெயரைச் சென்னை மாநிலத்திற்குச் சூட்ட விடாமல் பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்தார்கள் என்பதைப் பெரியாரின் அறிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன.

1920இல் ‘தமிழ்நாடு' காங்கிரஸ் கமிட்டி என்ற பெயர் வைப்பதில் பெரியாரும் அவருடைய நண்பர் களும் வெற்றி பெற்றார்கள்!

ஓர் அரசியல் கட்சிக்குத் ‘தமிழ்நாடு' காங்கிரஸ் என்று பெயர் சூட்டப் பெற்ற முதல் நிகழ்வு இதுதான்.

ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ்நாடு ‘சென்னை ராஜ்ஜியம்' என்ற பெயரைச் சுமந்து கொண்டிருந்தது. இதனை மாற்றக் கருதிய பெரியார் போகுமிடமெல்லாம் ‘தமிழ்நாடு' ‘தமிழ்நாடு' என்று வாய்வலிக்கப் பேசினார்! கைவலிக்க எழுதினார்! ‘தமிழ்நாடு' என்ற பெயரை வழக்காற்றில் கொண்டு வந்து மக்கள் உள்ளங்களில் ஆழமாக வேரூன்ற வைத்தார். ‘தமிழ்நாடு' என்ற இந்த ஒற்றைச் சொல்லால் தமிழ் மக்களை உயிர்த்தெழச் செய்ய முடியும் என்று பெரியார் உறுதியாக நம்பினார்.

2.5.1925இல் வெளிவந்த முதல் ‘குடிஅரசு' இதழ் ‘தமிழ்நாடு' என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்துவ தோடு அதனைத் ‘தாய்த் திருநாடு' என்று போற்றுவ தைக் காண்கிறோம். அதே இதழில் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் மறைவையொட்டி எழுதப் பட்ட இரங்கலுரையில் மூன்று இடங்களில் ‘தமிழ்நாடு' இடம் பெற்றிருக்கிறது. இதனைத் தொடர்ந்து வந்த ‘குடிஅரசு'இதழ்கள் எல்லாவற்றிலும் ‘தமிழ்நாடு' என்ற பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப் பிடத்தக்கதாகும்.

1917இல் நீதிக்கட்சியினர் தொடங்கிய ‘திராவிடன்' நாளிதழ், அதன் பத்தாவது ஆண்டில் (1927) விற்பனை சரிந்து இதழ் நின்று விடும் நிலைக்கு வந்து விட்டது. இதனை அறிந்த பெரியார் பெரிதும் வருந்திப் பின் வரும் அறிக்கையை வெளியிட்டார்.

‘தமிழ்நாடு என்பதாக 10 ஜில்லாக்கள் கொண்ட ஒரு நாடு, தமிழ் மக்கள் - அதாவது பார்ப்பனர் அல்லாதார் என்பதாக 2 கோடி மக்களைக் கொண்ட ஒரு சமூகம் தங்கள் முன்னேற்றத்திற்கும் சுயமரியாதைக்கும் விடு தலைக்கும் என்பதாக ஏற்பட்ட ஒரு தமிழ் தினசரி பத்திரிகையை நடத்த முடியாமல் விட்டு விடுவ தென்றால் நமது சமூகத்தின் தாழ்ந்த நிலையைக் காட்ட இதைவிட வேறு ஆதாரம் வேண்டியதில்லை என்றே சொல்லுவோம்." (குடிஅரசு, 6.3.1937)

தமிழ்நாடு அப்போது (1927) பத்து மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருந்தது. மக்கள் தொகை இரண்டு கோடிப் பேர், அதுவும் பார்ப்பனரல்லாத மக்களாக இரண்டு கோடிப் பேர் வாழ்கிறார்கள்! என்று வரை யறை செய்து தமிழ்நாட்டைப் பற்றிய ஓர் உருவக் காட்சியை நம் உள்ளத்தில் தோற்றுவிக்கிறார் பெரியார்.

தம் (சுய) நினைவின்றி வாழ்ந்த மக்களுக்கு அவர்தம் இனப் பெயரை எடுத்துரைத்துத் தாய்மொழி உணர்ச்சியூட்டி ‘தமிழ்நாடு உன் தாய்த்திருநாடு‘ என்று ஊர்தோறும் முழங்கி மக்கள் நெஞ்சில் தமிழ்நாட்டைப் பதிய வைத்த பெருமை தந்தை பெரியார் அவர்க ளையே சாரும். ‘தமிழ்நாடு' என்பதைப் பற்றி எவரும் பேசாத காலத்தில் பெரியார் தொலைநோக்குப் பார்வையோடு ‘தமிழ்நாட்டை' முன்னெடுத்து முழங்கி வந்தார்.

‘தமிழ்நாடு' என்ற சொல்லாட்சியைக் கேட்டதும் மக்களிடையே ஒரு புத்துணர்ச்சி ஏற்படுவதைப் பெரியாரும் அவர் உருவாக்கிய தலைவர்களும் உணர்ந்து மகிழ்ச்சியடைந்தனர். பெரியார் ஊன்றிய ‘தமிழ்நாடு' என்னும் உணர்ச்சி, முளைத்துச் செழித்து வளர்ந்து அவர் காலத்திலேயே பயன் தந்ததைப் பார்த்து மகிழ்ந்தார் பெரியார்.

1937இல் இராசகோபாலாச்சாரியார் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது. ஆச்சாரியார் பள்ளிகளில் ஹிந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார்.

ஹிந்தி ஆரிய மொழி; அதைக் கட்டாயமாக்கித் திணிக்க நினைப்பது மறைமுகமாக சமஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சிஎன்றும் இது திராவிட மக்கள் மீது ஆரியர்கள் நடத்தும் பண்பாட்டுப் படையெடுப்பு என்றும் பெரியார் கருதினார். தமிழ் மொழி, தமிழர் நாகரிகம், தமிழர் பண்பாடு ஆகியவை ஹிந்தியாலும் சமஸ்கிருதத்தாலும் சீரழிக்கப்பட்டு அழியும் நிலை உருவாகி விடும் என்பதைத் தொலைநோக்குப் பார்வையோடு உணர்ந்து கட்டாய ஹிந்தியை எதிர்த்துக் களம் அமைத்தார் பெரியார். பெரியாரின் அழைப்பை ஏற்று அலை அலையாகத் தமிழ் மக்கள் ஹிந்தி எதிர்ப்புப் போர்க் களத்தில் குதித்தனர்.

ஹிந்தியை எதிர்த்துத் திருச்சியிலிருந்து புறப்பட்ட தமிழர் பெரும் படையை வரவேற்கச் சென்னைக் கடற்கரையில் ஒரு மாபெரும் பொதுக் கூட்டம் நடை பெற்றது. ஓரிலக்கத்திற்கு மேற்பட்டோர் திரண்டிருந்த அக்கூட்டத்தில் பேசும் போதுதான் தந்தை பெரியார் "தமிழ்நாடு தமிழருக்கே" என்று முழங்கினார். பெரியாரின் உள்ளத்தில் அடக்கி வைக்கப்பட்டிருந்த உரிமை உணர்ச்சி அணை உடைத்துப் பாய்ந்த வெள் ளத்தைப் போலப் பீறிட்டுக் கிளம்பியதைக் கேட்ட மக்கள் "தமிழ்நாடு தமிழருக்கே" என்று விண்ணதிர முழங்கினார்கள்.

தமிழ்நாடு தமிழ்நாடு என்று முழங்குவது எதற்காக? இதோ தந்தை பெரியார் 1938இல் விளக்குகிறார்.

"தமிழ்நாட்டுத் தொழில்துறைகள் தமிழனுக்குப் பயன்படவில்லை. இரும்புத் தொழிலில் பம்பாய்க்காரர்; துணித் தொழிலை ஆமதாபாத்காரர்கள் கைப்பற்றிப் பயனடைகிறார்கள் தமிழ்த் தொழிலாளிக்கு இங்கு வேலையில்லை; லேவாதேவித் தொழிலை மார்வாரி நாட்டானும் குஜராத்தி நாட்டானும் ஏகபோக உடை மையாக்கி அவர்கள் கொண்டு போகும் செல்வம் கொஞ்சமா? அவை எப்படிப் போகின்றன என்பதைப் பார்த்தால், தமிழ்க் கூலிகள், தொழிலாளர்கள், ஏழைகள் ஆகியவர்களின் செல்வத்தைக் கையைத் திருகிக் கொண்டு போவதுபோல் மார்வாரிகள் கொண்டு போகிறார்கள். இவ்வாறு ஏமாற்றி வஞ்சித்துத் தேடும் செல்வம் அத்தனையும் பகற்கொள்ளை - வட்டிக் கொள்ளை என்று சொல்லப்படுவது போல் கோடி கோடியாய்ச் சிந்து மாகாணத்திற்குக் கடத்திச் செல்லப்படுகிறது. அதன் பயனாகத் தமிழ்நாட்டில் உள்ள பெரும் பெரும் வர்த்தகர்கள் மிக மோசமான நிலைக்கு வந்து விட்டார்கள். மணல்வீடு கட்டிச் சரிந்து மட்டமாவது போல் தமிழ் வியாபாரிகள் தினம் தினம் கடன்காரராகி - பாப்பராகி - இன்சால்  வென்டாகித் தற்கொலை செய்து கொள்வதும் நாட்டை விட்டு ஓடுவதுமான நிலையில் இருந்து வருகிறார்கள்."

எனவே தோழர்களே! உதைக்கும் காலுக்கு இதுவரை முத்தமிட்டுப் பூசை செய்கிறோம். மலத்தை மனதார முகருகிறோம், மானமிழந்தோம், பஞ்சேந்திரி யங்களின் உணர்ச்சியை இழந்தோம், மாற்றானுக்கு அடிமையாகி வணங்குகிறோம், இதற்குத் தானா தமிழன் உயிர் வாழ வேண்டும்? எழுங்கள்! நம்மை ஏய்த்து அழுத்தி நம் தலைமேல் கால்வைத்து ஏறி மேலே போக வடநாட்டானுக்கும் தமிழனல்லாதவ னுக்கும் நாம் படிக்கல் ஆகிவிட்டோம்.

இனிமேலாவது "தமிழ்நாடு தமிழருக்கே" என்று ஆரவாரம் செய்யுங்கள்.

உங்கள் கைகளில் ‘தமிழ்நாடு தமிழருக்கே' என்று பச்சை குத்திக் கொள்ளுங்கள்!

உங்கள் வீடுதோறும் ‘தமிழ்நாடு தமிழருக்கே' என்ற வாசகத்தை எழுதிப் பதியுங்கள்!

‘தமிழ்நாடு தமிழருக்கே‘ (குடிஅரசு, 23.10.1938)

தந்தை பெரியாரின் இப்போர் முழக்கம் தமிழ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்தது! 1938 டிசம்பரில் சென்னையில் நடந்த தென்னிந்தியர் நல உரிமைச் சங்க (நீதிக்கட்சி) மாநாட்டில் வாசிக்கப்பட்ட பெரியாரின் உரையிலும் ‘தமிழ்நாடு தமிழருக்கே‘ என்ற முழக்கம் இடம் பெற்றிருந்தது. இதற்கு முதல் நாள் வேலூரில் நடந்த தமிழ் மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்திய சர்.ஏ.டி.பன்னீர்செலவம் ‘தமிழ்நாடு தமிழருக்கே‘ என்பதை விளக்கி உரை நிகழ்த்தினார்.

இதுகுறித்துப் பேராசிரியர் அன்பழகனார் 1947இல் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.

"தமிழ்நாடு தமிழருக்கே என்ற குரல் இன்று பல திசைகளிலே கேட்கப் பட்டாலும் அதை முதலில் எழுப்பிய பெருமையும் எதிர்ப்புகளுக்கும் ஏளனங்க ளுக்குமிடையே வளர்த்த சிறப்பும் தமிழர் தலைவர் பெரியார் இராமசாமி அவர்களுக்கே உரியதாகும். தோழர் இராசகோபால ஆச்சாரியார் சென்னை மாகாண முதலமைச்சராக அமர்ந்து வடநாட்டு ஹிந்தியை வலுக்கட்டாயமாகத் தமிழ்ச் சேய்களின் வாய்களிலே திணிக்க முயன்றபோது அந்தக் கொடு மையை எதிர்த்துத் தமிழ்ப் பெருங்குடி மக்கள் நடத் திய பெரியதொரு போராட்டத்தில் சிறந்ததொரு விளைவாகத் "தமிழ்நாடு தமிழருக்கே" என்ற உரிமை யொலி அன்று எழுந்தது" (வாழ்க திராவிடம், 2017).

- தொடரும்

பதிலடிப் பக்கம்

பேராசிரியர் ப.காளிமுத்து எம்.ஏ.,பி.எச்.டி

‘தமிழ்நாடு' எனும் வரலாற்றுப் பொன்னேடும்

தந்தை பெரியாரின் அரும் பணியும்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

நேற்றைய (3.2.2023) தொடர்ச்சி...

‘தமிழ்நாடு தமிழருக்கே' என்ற முழக்கத்தை எவருமே எதிர்க்கவில்லையா என்றால் எதிர்க்கத் துணிந்தவர்கள், ஏளனம் செய்தவர்கள் மிகச் சிலரே! பெரியாரே இதைத் தெளிவுப்படுத்துகிறார்:

"தமிழ்நாடு தமிழருக்கே என்பதில் யாருக்காவது அதிருப்தியோ அபிப்பிராய பேதமோ இருப்பதாக இதுவரை நமக்கு எவ்விதத் தகவலோ மறுப்போ வந்தது கிடையாது. பார்ப்பனப் பத்திரிகைகள் சிலவற் றிலும் அவர்களது கூலிகளின் வாய்கள் சிலவற்றிலும் ஏதோ பொருத்தமற்ற கூப்பாடுகள் இரண்டொன்றைக் காணவும் கேட்கவும் நேர்ந்தது. என்றாலும் அதுவும் மறுமுறை கிளம்பினதாகத் தெரியவில்லை. ஒரு பார்ப் பனப் பத்திரிகை மாத்திரம் ‘தமிழ்நாடு தமிழருக்கே' என்றால் ‘எலிவளை எலிகளுக்கே' என்று எழுதிற்று" (தமிழர், தமிழ்நாடு, தமிழர் பண்பாடு, 2011)

இவ்வாறு எலிகளைத் துணைக்கழைத்து ஏளனம் செய்தவர்களும் கேலிச் சித்திரம் தீட்டியவர்களும் எல் லோரும் பார்ப்பனர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

பெரியார் எதற்காக இவ்வளவு பாடுபட்டார்? தமிழ்நாட்டைத் ‘தாய்த்திருநாடு' என்றாரே ஏன்? ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தண்டனை பெற்றுச் சிறை செல்வதற்கு முன்பாக 30.11.1938 அன்று சென் னையில் நடைபெற்ற கூட்டத்தில் பெரியார் இதற்கு விளக்கம் அளிக்கிறார்:-

1938ஆம் வருடத் தென்னிந்தியர் நல உரிமை சங்க மாநாட்டிற்குப் பிறகு ‘சென்னை மாகாணம்', ‘தமிழ்நாடு' என்று பெருமை பெற்றதென்றால் அது தமிழர்களின் ஒற்றுமையால் என்றிருக்க வேண்டும், மானத்தைக் கருதுங்கள், சுயநலம், பெருமை, பதவி ஆசை முதலிய வைகளைக் கைவிடுங்கள்.

பெரியாரின் பேருரையைக் கேட்க முப்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்தார்கள் என்று குடிஅரசு (11.12.1938) கூறுகிறது. சென்னை மாகா ணம் ‘தமிழ்நாடு' என்று தன்னால் பெருமை பெற்றது என்று கூறாமல் தமிழர்களின் ஒற்றுமையால் பெருமை பெற்றது என்று கூறவேண்டும் என்று தன்னடக்கத் தோடு தலைவர் பெரியார் குறிப்பிடுவதை உற்று நோக்குங்கள்!

இதன்பின்னர் 21.11.1939 தொடங்கி 25.11.1939 வரை அய்ந்து நாட்கள் ‘விடுதலை' இதழில் ‘தமிழ்நாடு தமி ழருக்கே' என்ற தலைப்பில் அய்ந்து தலையங்கங்கள் எழுதப்பட்டுள்ளன. இவற்றில் தமிழ்நாடு என்பதற்குத் திராவிட நாடு என்றுதான் பொருள். இது தமிழ்நாடு பிரிவினையைக் கருத்தில் கொண்டு அல்ல என்றும், திராவிட மக்களின் நாகரிகம், பண்பாடு, கலை, தொழில், இலக்கியம் முதலானவை ஆரியர்களின் நாகரிகப் பண்பாடுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை என் றும் பல்வேறு சான்றுகளோடு பெரியார் விளக்குகிறார். 25.11.1939ஆம் நாள் எழுதப்பட்ட தலையங்கத்தின் முடிவில் "தமிழ்நாடு தமிழருக்கே" என்று மும்முறை எழுதப்பட்டிருக்கிறது.

1956இல் மொழி வழி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட நேரத்தில் கூடத் தமிழ்மொழி வழங்கும் மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்ற பெயர் வைக்கப்படவில்லை. இது பற்றிப் பெரியார் வருந்தி எழுதுகிறார்.

“சுமார் 3 கோடித் தமிழர்கள் வாழும் நாட்டிற்கு அதி காரப் பூர்வமாகத் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் இல்லை. இராஜ்ய சீரமைப்புக் கமிசன் (State - Reorganisation Commission)  அறிக்கை வெளிவந்தவுடன் நான் பதறிப்போய், பெயரிடு வது பற்றி 12.10.1955இல் விடுதலையில் அறிக்கை வெளியிட் டேன்.”

“திராவிடத்தை அல்லது தமிழ்நாட்டை விட்டு ஆந்திரர், கருநாடகர், மலையாளிகள் பிரிந்து போன பின்புகூட மீதியுள்ள - யாருடைய ஆட்சேபனைக்கும் இடமில்லாத தமிழகத்திற்குத் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் கூட இருக்கக் கூடாதென்று பார்ப்பானும் வடநாட்டானும் சூழ்ச்சி செய்து இப்போது அந்தப் பெயரையே மறைத்து ஒழித்துப் பிரி வினையில் ‘சென்னை நாடு’ என்று பெயர் கொடுத்திருப் பதாகத் தெரிகிறது.

“இது சகிக்க முடியாத மாபெரும் அக்கிரமமாகும். எந்தத் தமிழனும் அவன் எப்படிப்பட்ட தமிழன் ஆனாலும் இந்த அக்கிரமத்தைச் சகித்துக் கொண்டி ருக்க மாட்டான் என்றே கருதுகிறேன். அப்படி யார் சகித்துக் கொண்டிருந்தாலும் என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாது என்ற சொல்ல வேண்டிய வனாக இருக்கிறேன்.”

இதைத் திருத்த தமிழ்நாட்டு மந்திரிகளையும் சென்னை, டில்லி சட்டசபை, கீழ் மேல்சபை அங்கத்தினர்களையும் மிக மிக வணக்கத்தோடு இறைஞ்சி வேண்டிக்கொள்கிறேன்.”

“தமிழ் தமிழ்நாடு என்கிற பெயர்கூட இந் நாட்டுக்கு, சமுதாயத்திற்கு இருக்க இடமில்லாதபடி எதிரிகள் சூழ்ச்சி செய்து வெற்றிபெற்று விட்டார்கள் என்கின்ற நிலைமை ஏற்பட்டு விடுமானால் பிறகு என்னுடையவோ எனது கழகத்தினுடையவோ என்னைப் பின்பற்றும் நண்பர்களுடையவோ வாழ்வு வேறு எதற்காக இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை.”

மேற்காணும் அறிக்கை வெளிவந்த விடுதலையின் (11.10.1955) இரண்டாம் பக்கத்தில் ‘சென்னை ராஜ்யமல்ல. ‘தமிழ்நாடு’என்றே கூறுவோம்’ என்று பெரிய எழுத்தில் அச்சிட்டுக் காட்டியிருக்கிறார் பெரியார்! உலக நாடுக ளெல்லாம் மொழியை அடிப்படையாகக் கொண்டே அழைக்கப்படும்போது தமிழ் பேசப்படுகின்ற நாட்டைத் ‘தமிழ்நாடு’ என்று அழைக்காமல் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்றோ சென்னை நாடு என்றோ அழைப்பதற்குத் தமிழ் மக்கள் வெட்கப்பட வேண்டாமா?

“தமிழர்கள் இனிப் பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் ‘தமிழ்நாடு’ என்றே வழங்கி வர வேண் டும். இயற்கையான, இன உணர்ச்சி, மொழிப்பற்று இல்லாவிட்டாலும் மற்றவர்களைப் பார்த்தாவது திருந்தக் கூடாதா? மற்ற நாடுகளைப் பார்த்தாவது மான உணர்ச்சி பெறக் கூடாதா?”

என்று பெரியார் கேட்கிறார். இது மட்டுமல்லாது தொடர்ந்து நடந்த மாநாடுகளில் எல்லாம் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும் என்ற தீர்மானத்தைப் பெரியார் முன்மொழிந்து உரையாற்றியிருக்கிறார்.

“தமிழர்களே உங்கள் உடலில் இருப்பது ஆரிய இரத்தக் கலப்பில்லாத தனித் தமிழர் இரத்தம் என்று கருதிக்கொள்ளுங்கள். உடனே உங்களுக்குப் புதிய உணர்ச்சி வரும்; புதிய ஊக்கம் வரும்; உங்கள் அறிவு ஒளிபெற்று உங்கள் மனத்தில் படிந்துள்ள தும்பும் தூசியும் விலகி உங்கள் நரம்புகளுக்கும் நாடிகளுக்கும் முறுக்கேறும்; அப்பொழுதே நீங்கள் உண்மைத் தமிழராகி, தமிழ்நாடு தமிழருக்காகி தமிழர் வாழ்வு மானமும் உயர்வும் பெறும் என்று பணிவோடு விண்ணப்பித்துக் கொள்கிறோம்.” (பெரியார் கொட்டிய போர் முரசு)

பெரியாரின் இந்த அறிக்கையைப் படிக்கும் ஒவ்வொரு தமிழனும் வீறு கொண்டெழுவான் என்பது உறுதி.

தமிழ்நாட்டைத் ‘தாய்த் திருநாடு’ என்றும் ‘தமிழ்த் திருநாடு’ என்றும் பலமுறை குறிப்பிடும் பெரியார் தாய்த் திருநாட்டிற்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும் என்று. ‘வணங்கி வேண்டிக் கொள்கிறேன்’ என்றும், ‘வணக்கத்தோடு இறைஞ்சி வேண்டிக் கொள்கிறேன்’ என்றும் வணக்கத்தோடு கேட்டுக் கொள்கிறார். யாருக்கும் தலை வணங்காத பெரியார் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும் என்பதற்காக வணங்கி இறைஞ்சி வேண்டிக் கொள்கிறார்!

தொடர்ந்து ‘தமிழ்நாடு’ என்பதைப் பற்றிப் பெரியார் எப்படிப்பட்ட அணுகுமுறைகளையெல்லாம் கையாண்டார் என்பதைப் பாருங்கள்.

“தமிழ்நாட்டின் பஞ்சப் பகுதியான இராமநாதபுரம் மாவட்டத்தைச் செழிப்படையச் செய்ய மேற்குத் தொடர்ச்சி மலைக்கு மேற்கே வீணாக ஓடிக் கொண்டிருக்கும் பம்பை யாற்றுத் தண்ணீரைக் கிழக்கே திருப்பிவிடும் முயற்சியைத் தமிழ்நாடு ஆட்சியினர் மிக விரைவாகச் செய்யுமாறு இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

“இலங்கையிலிருந்து துரத்தப்படுகிற தமிழ் மக்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுக்கும்படி தமிழ்நாடு ஆட்சியாளரையும் மத்திய ஆட்சியையும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.”

“பண்டைக் காலத்தில் உலகமே கண்டு வியக்கும் பேரரசாக விளங்கிய ‘தமிழ்த் திருநாடு’  தமிழ் நாட்டுக்குள் இன்று டில்லி ஹிந்தியைத் திணித்திருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழுக்குரிய இடங்களையெல்லாம் ஹிந்தி ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.”

“தமிழ்நாடு 400 லட்சம் மக்களைக் கொண்டது...” (மன்னார்குடி மாநாட்டுத் தீர்மானங்கள்.)

“இன்று தமிழ்நாட்டில் சமஸ்கிருதம் என்ற ஒரு மொழி உண்மையிலேயே தேவைதானா?”

“தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பு,ஆதிக்கம் முழு வதும் தமிழர்களிடத்திலேதான் இருக்க வேண்டும். தமிழர் கள் என்பது இங்கு தமிழ்நாட்டிலுள்ள ஆரியர் அல்லாத - பார்ப்பனரல்லாதார் ஆகும்.”

இவ்வாறு ‘தமிழ்நாடு தமிழ்நாடு’ என்று போகும் இடமெல்லாம் முழக்கமிட்டு மக்கள் உள்ளங்களில் ‘தமிழ் நாட்டை’ ஆழமாக வேரூன்ற வைத்து வளர்த்தெடுத்தவர் தந்தை பெரியார். அதனால் மக்கள் வழக்காற்றில் மிக இயல்பான - இயற்கையான பேசு பொருளாகத் ‘தமிழ்நாடு’ அமைந்துவிட்டது. பெரியார் அரும்பாடுபட்டுத் ‘தமிழ்நாடு’ என்னும் பெயரை மக்கள் உள்ளங்களில் நிலைநிறுத்திய பிறகு சங்கரலிங்கனார் 12 கோரிக்கைகளோடு தமிழ்நாடு என்று பெயரிட வேண்டும் என்ற கோரிக்கையையும் சேர்த்து உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தார். அதன் பின்னர் அறிஞர் அண்ணா, மாநிலங்களவையில் பொதுவு டைமைக் கட்சித் தலைவர் புபேஷ்குப்தா, ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும் என்று கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து மிக விரிவாகப் பேசியிருக்கிறார். சென்னைச் சட்டமன்றத்திலும் ‘தமிழ்நாடு’ பெயர் மாற்றத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அது ஏற்கப்படாமையால் எதிர்க் கட்சியினர் வெளிநடப்புச் செய்தனர். இதே காலத்தில் தமிழரசுக் கட்சித் தலைவர் ம.பொ.சி.யும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சி.பா.ஆதித்தனாரும் இதே கோரிக் கையை வலியுறுத்திப் பேசியுள்ளனர். ஆனால், இதற்காக அவர்கள் வேறு எத்தகைய போராட்டங்களையும் நடத்த வில்லை.

இவையெல்லாம், தந்தை பெரியார் 1920-களிலிருந்து ஏறக்குறைய நாற்பதாண்டுக் காலம் தமிழ்நாட்டைப் பண்படுத்தி விழிப்புணர்ச்சி உண்டாக்கிய பிறகு நடந்த நிகழ்வுகள். பெரியாரைப் பின்பற்றி அறிஞர் அண்ணாவும் தி.மு.கழகத் தலைவர்களும் ‘தமிழ்நாடு’ என்ற பெயரிட வேண்டுமென்று ஓயாமல் முழங்கி வந்தனர்.

‘தமிழரின் மறுமலர்ச்சி’ என்ற ஒரு சிறு நூலில் மட்டும் ஏறக்குறைய 40 இடங்களில் ‘தமிழ்நாடு’ என்ற பொன் னெழுத்துகளை அண்ணா பொறித்திருக்கிறார்! (எ.டு) 

“தமிழ்நாட்டிலே தமிழருடைய மொழியிலே தகாத மொழிகள் கள்ளிபோல் படர்ந்துவிட்டன.”

“தமிழ்நாட்டிலே தமிழனுக்கு வேலை கிடைப்ப தில்லை.”

“தமிழ்நாட்டிலே தமிழ்ப் பாடல் கிடையாது.”

“தமிழ்நாட்டிலே தமிழே இருத்தல் வேண்டும்.”

“தமிழ்நாட்டைப் போலவே எந்த நாட்டிலும் அந்த நாட்டின் மொழியல்லாத வேறு மொழியிலே சங்கீதம் பாடுவதைக் கேட்க முடியாது.”

“தமிழ்நாட்டிலே தமிழ்ப் பாடல்களை வளர்க்க வேண்டும்; தமிழ்ப் பாடல்கள் பாடுவோருக்கு ஆதரவு தர வேண்டும்.”

இவ்வாறு அண்ணாவின் நூல்களைத் திருப்பிய பக்கமெல்லாம்‘தமிழ்நாடு’ காட்சியளிக்கிறது.

1967 வரை தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரசுக் கட்சி, கடைசி வரையில் ‘தமிழ்நாடு’ என்று பெயர் வைப்பதற்கு முரண்பட்டு முற்றுப் பெற்றுவிட்டது. காங்கிரசின் இந்தப் பிடிவாதம் தமிழ்நாடு அரசியலில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திவிட்டது. 1967 தேர்தலில் காங்கிரஸ் தோற்றுப் போயிற்று. அறிஞர் அண்ணா முதல் அமைச்சர் ஆனார்.

1967 ஜூலை 18ஆம் நாள் சட்டப் பேரவையில் தீர்மானத்தை அண்ணா கொண்டு வந்தார். ‘மெட்ராஸ் ஸ்டேட்’ ((MADRAS STATE) என்ற பெயர் ‘தமிழ்நாடு’ என்று தமிழில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட தீர்மானம் எவரு டைய எதிர்ப்புமின்றி நிறைவேறியது. அப்போது உரை யாற்றிய அண்ணா,

“இந்த வெற்றி தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ் வரலாற்றுக்கும் தமிழ்நாட்டுக்கும் கிடைத்த வெற்றி என்ற விதத்தில் நாம் அனைவரும் இந்த வெற்றியில் பங்குகொள்ள வேண்டும்.”

என்று குறிப்பிட்டார். அதன் பின்னர் ‘தமிழ்நாடு’ என்று உரத்த குரலில் அண்ணா முழக்கமிட அவை உறுப்பினர் அனைவரும் எழுந்து நின்று ‘தமிழ்நாடு வாழ்க!’ என்று முழங்கினர். மூன்று முறை ‘தமிழ்நாடு வாழ்க’ என்று அனைவரும் முழங்கினர். 1968ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் தேதியன்று நாடாளுமன்றத்திலும் இத்தீர் மானம் எதிர்ப்பின்றி நிறைவேறியது.

‘தமிழ்நாடு அரசு - தலைமைச் செயலகம்’ எனும் புதிய பெயர்ப் பலகை வைக்கப்பட்டது. 1968 டிசம்பர் முதல் நாள் தமிழ் நாடெங்கும் பெயர் மாற்ற வெற்றி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சென்னையில் கலை வாணர் அரங்கில் (அப்போது அது பாலர் அரங்கம்) நடை பெற்ற விழாவில் அண்ணா கலந்து கொண்டு உரையாற் றினார். அடையாறு மருத்துவமனையிலிருந்து நேரடியாக விழா அரங்கிற்கு அண்ணா வந்து சேர்ந்தார்.

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த அந்த விழாவில் அண்ணா, “என் தாய்த்திரு நாட்டிற்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டக்கூடிய இந்த நேரத்திலே இந்த விழாவிலே கலந்து கொள்ள வேண்டாம் என்று சொன்னார்கள். ஆனால், என் தாய் நாட்டிற்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டக் கூடிய இந்த விழாவிற்கு நான் வராமல் இருப்பதை விடக் கொடுமை வேறு இருக்க முடியாது. இந்த விழாவிற்கு வராமல் இருந்து இந்த உடல் இருந்து என்ன பயன்? இத்தகைய வாய்ப்பு வாழ்க்கையில் ஒரு முறைதான் வரும். பெற வேண்டும் என்று நினைத்ததைப் பெற்றிருக்கிறோம். அடைய வேண்டியதை நாம் அடைந்திருக்கிறோம்.”

என்ற உணர்ச்சி பொங்க அண்ணா உரையாற்றினார்.

இதனிடையில் ‘தமிழ்நாடு’ என்பதை ஆங்கிலத்தில் எழுதும்போது "TAMIL NAD’ ’ என்றுதான் எழுத வேண்டும்; TAMIL NAD’ ’ என்று எழுதக் கூடாது; ஆங்கில மரபை அப்படியே நாம் பின்பற்ற வேண்டும்; என்ற ராசகோபாலாச் சாரியார் ‘சுயராஜ்யா’ இதழில் தம் எதிர்ப்பை வெளிப்படுத்தி யிருந்தார். இதுகுறித்து சட்டப் பேரவையில் கேள்வி எழுப் பப்பட்டபோது அண்ணா சொன்னார்:- ‘அவர் ஆங்கில மரபைக் காப்பாற்ற நினைக்கிறார்; நான் தமிழ் மரபைக் காப்பாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன்.”

‘TAMIL NAD’ என்ற ஆச்சாரியாரின் கருத்தை மறுத்து ‘TAMIL NAD’  என்பதுதான் சரியென்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆச்சாரியாருக்குப் பதிலடி கொடுத்து விடுதலையில் எழுதினார். 1920களில் தொடங்கிய ‘தமிழ்நாடு’ பெயர்ப் போராட்டம் இன்றுவரை தொடர்கிறது. ஒன்றை மட்டும் நாம் தெளிவாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.

தந்தை பெரியாரின் வேர்வைத் துளிகளாலும் ரத்தத் தினாலும் வரையப் பட்ட ‘தமிழ்நாடு’ எனும் வரலாற்றுப் பொன்னேட்டை மாற்றுவதற்கும் மறைப்பதற்கும் பீகார் பார்ப்பனர்களோ தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களோ செய்யும் முயற்சிகள், ஒற்றைத் தமிழன் உள்ளவரை ஒருபோதும் வெறி அடையா! அயலார் எம் தாய் நிலத்திற்குப் பெயர் சூட்டுவதை உயிரைக் கொடுத்தேனும் தடுப்போம்!

தந்தை பெரியார் வாழ்க! தமிழ்நாடு வாழ்க!

- முற்றும்