பக்கங்கள்

வெள்ளி, 30 நவம்பர், 2018

தந்தை பெரியார் எழுத்து சீர்திருத்தம் தினமலர்' ஒப்புதல்

ஆர்.நூருல்லா, தலைமை நிருபர், தினமலர் (பணி நிறைவு), சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'தமிழ் நாளிதழ்களில் முதல்முறையாக, ஈ.வெ.ரா.,வின் எழுத்து சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தியவர், அய்ராவதம் மகாதேவன்' என, தமிழ் நாளிதழ் ஒன்றில், ஒருவர் கட்டுரை எழுதி இருந்தார்; அது, தவறான கருத்து!


நான், 'தினமலர்' நாளிதழில், பல ஆண்டுகள் நிருபராக பணியாற்றி ஓய்வு பெற்றவன். அதன் ஆசிரியர், டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியுடன் பழகியவன் என்ற அடிப்படையில், வாசகர்களுடன் சில கருத்துகளை பகிர்ந்து கொள்ள விரும்பு கிறேன்...


தமிழக முதல்வராக, எம்.ஜி.ஆர்., இருந்தபோது, 1977 இல், ஈ.வெ.ரா.,வின் எழுத்து சீர்திருத்தத்தை, முதன் முதலில், தினமலர் நாளிதழில் அறிமுகப்படுத்தியவர், இரா.கிருஷ்ணமூர்த்திதான். அப்போது, நான், 'தினமலர்' நாளிதழின் நிருபராக பணிபுரிந்தேன்.


ஆனால், வரலாற்று உண்மை தெரியாமல், 'அய்ராவதம் மகாதேவன்' என தவறாக, அந்த கட்டுரையாளர் கூறியுள்ளார். அய்ராவதம் மகாதேவன், தொல்லியல் துறையிலும், தமிழ் வளர்ச்சித் துறையிலும் சாதித்தவர் என்பதில் மாற்று கருத்து கிடையாது.


ஆனால், தமிழில் முதன்முதலாக, ஈ.வெ.ரா.,வின் எழுத்து சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தியது, 'தினமலர்' நாளிதழ்தான். அதை, பத்திரிகை வாயிலாக அறிமுகப்படுத்திய பெருமை, அதன் ஆசிரியர், இரா.கிருஷ்ணமூர்த்தியை சாரும் என்பதை, பெருமிதத்துடன் கூற விரும்புகிறேன்.


தமிழ் எழுத்து சீர்திருத்தம் தொடர்பாக, அந்த கட்டுரையாளர் கூறிய கருத்து, வரலாற்று பிழையாக கருதுகிறேன்!


(தினமலரில் (30.11.2018) வெளிவந்த கடிதம்)
-  விடுதலை நாளேடு, 30.11.18
குறிப்பு:-

தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை, 'தமிழக அரசின் ஆணைக்கு பின் முதலாவதாக இதழில் அறிமுகப்படுத்தியது தினமணி தான் என்று எழுதி இருந்தால் கூட பரவாயில்லை; ஆனால் தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை அய்ராவதம் மகாதேவன் தான் கண்டுபிடித்தார் என்று கூறுவது மகா மகா அயோக்கியத்தனம்.

தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்திற்கு யார் முன்னோடி?

தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்திற்கு யார் முன்னோடி?




தினமணி' ஆசிரியர் அய்ராவதம் மகாதேவன் அவர்கள் கல்வெட்டு ஆய்வாளர் - தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்திலும் ஆர்வம் கொண்டவர் என்பதற்காக அவர்தான் பெரியாருக்கு முன்பாகவே தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தின் முன்னோடி என்று தினமணி' (27.11.2018) தலையங்கத்தில் எழுதியிருப்பது எத்தகைய மோசடி!

இன்று பரவலாகப் பெரியார் எழுத்து' என்று அழைக்கப்படும் எழுத்துச் சீர்திருத்தம் உண்மையில் அய்ராவதம் மகாதேவன் ஏற்படுத்திய இதழியல் சீர்திருத்தம், தமிழகத்தில் முதன்முதலில் எழுத்துச் சீர்திருத்தத்தை தினமணி' நாளிதழில் அன்றைய ஆசிரியராக இருந்த அய்ராவதம் மகாதேவன் தான் அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்துதான் அனைத்து இதழ்களும், எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தின என்பது உண்மை வரலாறு'' என்று இந்த 2018-லும் தினமணி' தலையங்கத்தில் தீட்டப்படுகிறது என்றால், இந்தப் பார்ப்பனர்கள் பொய்யென்று தெரிந்திருந்தும் கொஞ்சம்கூடக் கூச்ச நாச்சமில்லாமல் இப்படி ஒரு அண்டப் புளுகை, ஆகாயப் புளுகை அவிழ்த்துக் கொட்டும் கேடு கெட்ட தனத்தை என்னவென்று சொல்லுவது! தந்தை  பெரியார் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை செயல்படுத்தியது 1935 ஆம் ஆண்டிலேயே - இதோ ஆதாரம்:

உண்மை இவ்வாறு இருக்க, அய்ராவதம் மகாதேவன் தினமணி' ஆசிரியராகப் பணியாற்றியது 1987 ஆம் ஆண்டுமுதல் 1991 ஆம் ஆண்டுவரை நான்காண்டுகள்!



தினமணி'யின் கணக்கில் 1935 ஆம் ஆண்டு என்பது 1987-க்குப் பிந்தியதோ!

நமது காலத்தில் நம் கண்முன் நடைபெற்றதையே இப்படி மோசடியாகத் திரித்து வெளியிடுகிறார்கள் என்றால், கடந்த காலத்தில் எப்படியெல்லாம் தில்லுமுல்லு திருகு தாளத்தில் ஈடுபட்டு இருப்பார்கள்.

இந்த வெட்கக்கேட்டில் அய்ராவதம் மகாதேவன்தான் முதன் முதலில் தினமணி'யின் எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தது வரலாற்று உண்மையாம்.  பரவலாக பெரியார் எழுத்து' என்று அழைக்கப்படுகிறதாம். இப்படி எழுதுவதற்கு வெட்கப்பட வேண்டாமா தினமணி?

உடனடியாகத் திருத்தம் வெளியிடுவதுதான் ஆரோக்கியமானது.

அய்ராவதம் மகாதேவன் அவர்களுக்கு எவ்வளவோ சிறப்புகள் உண்டு. அவர் உடல்மீது பொய்யில் தொடுத்த ஒரு அழுக்கு மாலையைச் சூட்டுவது கூட மரணம் அடைந்த அவரைச் சிறுமைப்படுத்துவதாகும்.

-  விடுதலை நாளேடு, 30.11.18

வியாழன், 29 நவம்பர், 2018

பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் - வைத்தியநாத அய்யருக்கு பைத்தியமா?

வைத்தியநாத அய்யருக்கு பைத்தியமா?
பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் உண்மையில் அய்ராவதம் மகாதேவன் ஏற்படுத்தியதாம்!
இதைவிட வரலாற்று மோசடி வேறு உண்டா?
=============================================
- மஞ்சை வசந்தன்
-----------------------------------------------------------------------------
திருக்குறளே மனுதர்மத்திலிருந்து வந்தது என்ற திரித்துக் கூறும் ஆரிய கூட்டமல்லவா? இப்போது பெரியார் எழுத்துச் சீர்திருத்தத்தையும் அவருக்கு உரியதல்ல என்று கூறிவிட்டது!
தினமணி 27.11.2018 இதழில் தலையங்கத்தில் (ஆசிரியர் உரையில்) அதன் ஆசிரியர் வைத்தியநாதன், இன்று பரவலாகப் பெரியார் எழுத்து என்று அழைக்கப்படும் எழுத்துச் சீர்திருத்தம், உண்மையில் ஐராவதம் மகாதேவன் ஏற்படுத்திய இதழியல் சீர்திருத்தம்.

தமிழகத்தில் முதன்முதலில் எழுத்துச் சீர்திருத்தத்தை தினமணி நாளிதழில் அன்றைய ஆசிரியராக இருந்த ஐராவதும் மகாதேவன்தான் அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்துதான் அனைத்து இதழ்களும் எழுச்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தின என்பது வரலாற்று உண்மை என்று எழுதியுள்ளார்.

பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வந்தது 1935இல். அதுகுறித்த அறிவிப்பை  06.01.1935

பகுத்தறிவு இதழில் அறிவித்தார். அப்பகுதி இதோ:

க், ங், ச், க்ஷர்க்ஷ், ர்ஹ், ர், ர்பீ  எழுத்துகள் மாற்றம்
சென்ற வாரம் பகுத்தறிவில் எழுத்தில் சீர்திருத்தம் என்று ஒரு சிறு உபதலையங்கம் எழுதி இருந்ததில் இவ்வார முதல் கொண்டு நமது பத்திரிகை பழைய பெயராகிய குடிஅரசு என்னும் பெயராலேயே வெளியிடலாம் என்று கருதி அதில்  க், ங், ச், க்ஷர்க்ஷ், ர்ஹ், ர், ர்பீ  என்கின்ற எழுத்துகளை முறையே ணா - றா - னா - ணை - லை - ளை - னை என்று அச்சில் பிரசுரிக்கப்படும் என்பதாக எழுதி இருந்தோம் அந்தப் படிக்கே விஷயங்களை எழுத்துக் கோர்த்து இருந்தோம்.

வாசகர்கள் விஷயத்தைப் படிக்கும்போது ணா-றா-னா என்கின்ற எழுத்துகள் வரும் போது அவற்றை க், ங், ச்,  என்ற உச்சரிப்புப் போலவும், ணை - லை - ளை - னை என்கின்ற எழுத்துகள் வரும்போது ர்க்ஷ், ர்ஹ், ர், ர்பீ என்ற உச்சரிப்புப் போலவும் உச்சரித்துக் கூட்டி  வாசித்துக் கொள்ள வேண்டுமாய் கோருகிறோம். இந்தப்படியே சில புஸ்தகங்களும் பிரசுரிக்க இருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

[பெட்டிச் செய்தி -  பகுத்தறிவு அறிவிப்பு - 06.01.1935]
மேலும் 20.01.1935 நாளிட்ட குடிஅரசு தலையங்கத்தில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என்ற தலைப்பின் கீழ்,
தமிழ் பாஷை எழுத்துகள் விஷயமாய் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பது அனேகருக்குள் வெகுகாலத்திற்கு முன்பு இருந்தே ஏற்பட்டிருந்த அபிப்பிராயங்களாகும்.......

தமிழ் ஏற்பட்டது இன்று நேற்றல்ல. எழுத்துகள் ஏற்பட்டது இன்று நேற்றல்ல. ஆனால் எழுத்துகள் கல்லிலும், ஓலையிலும் எழுதும் காலம் போய் காகிதத்தில் எழுதவும், அச்சில் வார்த்துக் கோர்க்கவும் ஏற்பட்ட காலம் தொட்டு இன்று வரை அவற்றில் யாதொரு மாற்றமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஆதலால் யாராவது ஒருவர் துணிந்து இறங்க வேண்டிய தாயிற்று.

புதிய மாறுதல்களால் அதாவது போக்குவரத்து வசதியின் காரணத்தால் ஏற்பட்ட பல தேச மக்கள் கூட்டுறவாலும், பல தேச பாஷை  சொற்களும், பல தேசப் பொருள்களும் கலக்கும்படி ஏற்பட்ட சம்பவங்களாலும், இன்று அநேக வார்த்தைகள், உச்சரிப்புகள் தமிழில் சர்வ சாதாரணமாய் கலந்து விட்டன. அவைகளை உச்சரிக்கும்போதும், எழுதும் போதும் தமிழ் பாஷையும், தமிழ் எழுத்தும் விகாரமாய் வெட்கப்பட வேண்டி இருக்கிற தன்மையில் இருக்கின்றன.

(அதற்கு தத்துவார்த்தமும், விதியும் இருக்கலாம்) ஆதலால் சில எழுத்துகள் வேறு பாஷைகளில் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டியதுகூட மிக அவசியமாகும். அதற்கு வெட்கமாய் இருக்கும்பட்சம் புதியதாகவாவது எழுத்துகளை உண்டாக்கிக் கொள்ள வேண்டும்.

இவைகள் ஒருபுறமிருக்க, இப்போது உயிர் மெய்  எழுத்துகள் என்று சொல்லப்படும் 18 எழுத்துகளிலும் ஒவ்வொன்றுக்கும் உள்ள இகரம், ஈகாரம், உகரம், ஊகாரம் ஆகிய நான்கு சப்தங்கள் கலந்த எழுத்துகள் தனித்தனி வடிவம் கொண்டு அதாவது கி, கீ, கு, கூ என்பது மாதிரியே 18 எழுத்துகளும் தனித்தனி உருவம் பெற்று 18 ஜ் 4 = ஆக மொத்தம் 72 எழுத்துகள் அதிகமாக அனாவசியமாக இருந்து வருகின்றன.

இந்தத் தனித்தனி வடிவங்கள் எதற்காக இருக்க வேண்டும்? எல்லா உயிர் மெய் எழுத்து களுக்கும் ஆ காரம், ஏ காரம் ஆகிய சப்தங்களுக்கு ,  ஆகிய குறிப்புகளைச் சேர்த்து எப்படி கா, கே என்று ஆக்கிக் கொள்ளுகின்றோமோ அதுபோலவே மேற்கண்ட கி, கீ, கு, கூ முதலிய சப்தங்களுக்கும் ஒரு தனிப்பட்ட குறிப்பு அடையாளத்தை ஏன் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பது மிகவும் யோசிக்கத்தக்க விஷயமாகும்.

உதாரணமாக ஜ, ஷ முதலிய கிரந்த அட்சரங்கள் என்று சொல்லப்படுபவைகளுக்கு இன்றும் உகரம், ஊகாரம் சப்தங்களுக்கு கு, கூ என்கிற மாதிரி தனி எழுத்துகள் இல்லாமல் உ, கரத்துக்கு  இந்த மாதிரி குறிப்புகளையும் ஊகாரத்திற்கு  இந்த மாதிரி குறிப்புகளையும் சேர்த்து ஜு, ஜூ, ஷு, ஷூ, ஸு, ஸூ, ஹு, ஹூ என்பதாக ஏற்படுத்தி இருக்கிறார்கள். அதுபோல் தமிழ் எழுத்துகளிலும் கி, கீ, கு, கூ ஆகியவைகளுக்கு ,  என்பது போன்றவைகளையோ அல்லது வேறு விதமான குறிப்புகளையோ சேர்த்தால் அச்சில் 72 தனி எழுத்துகள் தேவையில்லை என்பதோடு பிள்ளைகள் தமிழ் கற்பதற்கும் 72 எழுத்துகளைத் தனியாக இந்த ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லாத சௌகரியமும் ஏற்படும். மற்றும் எழுத்துக் குறைவால் அச்சில் சவுகரியம் ஏற்படுவது போலவே தமிழ் எழுத்து டைப்ரையிட்டிங் என்று அச்சடிக்கும் யந்திரம் செய்வதிலும், மிகுந்த சவுகரியமும், விலை சகாயமாய் செய்யக்கூடிய நிலைமையும் ஏற்படும். எழுத்துகள் உருவம் மாற்றுவது, குறிப்புகள் ஏற்படுத்துவது, புதிய எழுத்துகளைச் சேர்ப்பது, என்பது போலவே சில எழுத்துகளை அதாவது அவசியமில்லாத எழுத்துகளை குறைக்க வேண்டியதும் அவசியமாகும்.

உதாரணமாக, உயிரெழுத்துக்கள் என்பவைகளில் ஐ, ஔ என்கின்ற இரண்டு எழுத்துகளும் தமிழ் பாஷைக்கு அவசியமில்லை என்பதே நமது வெகுநாளைய அபிப்பிராயமாகும். ஐகாரம் வேண்டிய எழுத்துகளுக்கு , இந்த அடையாளத்தைச் சேர்ப்பதற்கு பதிலாக ய் என்ற எழுத்தை பின்னால் சேர்த்துக் கொண்டால் ஐகார சப்தம் தானாகவே வந்து விடுகின்றது. உதாரணமாக கை என்பதற்குப் பதிலாக கய் என்று எழுதினால் சப்தம் மாறுவதில்லை என்பது விளங்கும்.

அதுபோலவே ஔ காரத்துக்கும், கௌ என்பதற்குப் பதிலாக கவ் என்றோ, கவு என்றோ எழுதினால் சப்தம் மாறுவதில்லை. கௌமதி - கவ்மதி, கவுமதி என்கின்ற சப்தங்கள் ஒன்று போலவே உச்சரிப்பதைக் காணலாம். இந்த வகையில் ஐ, ஔ, இரண்டு எழுத்து உயிரெழுத் திலேயே குறைத்து விட்டால் அதனாலும் பெரிதும் அனுகூலம் உண்டு.
ஆகவே கி, கீ, கு, கூ என்கின்ற சப்தங்களுக்கு தனிக் குறிப்பு வடிவங்கள் ஏற்படுத்துவதன் மூலம் குறிப்புகள் அதிகமானாலும் ஒ, ஔ குறிப்புகள் குறைபடுவதன் மூலம் கிட்டத்தட்ட சரி பட்டுப் போக இடமேற்படும். கையெழுத்து எழுதுவதற்கும் அசௌகரியமிருக்காது.

தமிழ் எழுத்துகளில் மேலே குறிப்பிட்ட இந்தப்படியான சீர்திருத்தங்கள் எல்லாம் செய்யப்படு மானால் அப்போது தமிழில் மொத்த எழுத்துகள் 46-ம் 7 குறிப்பு எழுத்துகளும் ஆக 53 எழுத்துகளில் தமிழ் பாஷை முழுவதும் அடங்கிவிடும். அதாவது உயிர் எழுத்து 10, உயிர் மெய் எழுத்து க முதல் ன வரை) 18, ஒற்றெழுத்து  19 எழுத்துகளின் குறிப்புகள் (அதாவது , , , ,   இதுகள் போல்) 7 ஆக மொத்தம் 54 எழுத்து களுக்குள் அடங்கி விடும்.  அச்சுக்கும் 54 அறைகள் (கேஸ்கள்) இருந்தால் போதுமானதாகும். பிள்ளைகளுக்கும் இந்த 54 எழுத்துகள் ஞாபகமிருந்தால் போதுமானதாகும்.

ஜ, ஸ, ஷ, ஹ, க்ஷ என்கின்ற கிரந்த அட்சரங்களான எழுத்துகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமானால் அதில் குற்றெழுத்து உள்பட ஒரு பத்து எழுத்து அதிகமாகி 64 எழுத்துகளாகலாம். ஆனால் இப்பொழுதோ மேற்படி 64 எழுத்துகளுக்குப் பதிலாக சுமார் 150க்கு மேல் 160 எழுத்துகள் வரை இருந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

பாஷையின் பெருமையும், எழுத்துகளின் மேன்மையும் அவை சுலபத்தில் தெரிந்து கொள்ளக் கூடியதாகவும், கற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருப்பதைப் பொருத்ததே ஒழிய வேறல்ல. ஆத லால் இந்த மாற்றங்கள் நாளாவட்டத்தில் செய்யக் கூடியது என்று சொல்லுவதானாலும் ண, ணை முதலிய 7 எழுத்துகளைப் பொறுத்தவரையில் உள்ள மாற்றத்தை வாசகர்கள் இப்போது முதலே அனுமதிப்பார்கள் என்றே கருதுகின்றோம். இதுவரை பல தோழர்கள் ஆதரித்ததோடு மற்ற மாறுதல்களையும் எழுதியிருப்பதும் இப்பொழுதே செய்ய வேண்டுமென்று குறிப்பிட்டிருப் பதும் நமக்கு தைரியத்தைக் கொடுக்கின்றது. அவர்களுக்கு நமது நன்றியும் பாராட்டுதலும் உரியதாகும் என்று எழுதியுள்ளார்.

ஆக, தந்தை பெரியார் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டுவந்தது 1935. அய்ராவதம் மகாதேவன் தினமணி ஆசிரியராய் இருந்தது அதற்குப் பின் பல ஆண்டுகள் கழித்து.
அப்படியிருக்க, இன்று பெரியார் எழுத்து என்று அழைக்கப்படும் எழுத்துச் சீர்திருத்தம் உண்மையில் ஐராவதம் மகாதேவன் ஏற்படுத்திய இதழியல் சிர்திருத்தம் என்பது எப்படிப்பட்ட மோசடிப் பிரச்சாரம்.

பெரியார் எழுத்துச் சீர்திருத்தத்தை திராவிடர் கழக ஏடுகள் பின்பற்றிய பின் தினமணியில் அதை அய்ராவதம் மகாதேவன் பின்பற்றி மற்ற இதழ்களுக்கு வழிகாட்டினார் என்பதே உண்மை. மாறாக, அய்ராவதம் மகாதேவன் உருவாக்கியது அல்ல.

அய்ராவதம் மகாதேவன் சிறந்த தமிழ் ஆய்வாளர். பெரியார் எழுத்தை தினமணியில் பின்பற்றியவர். அப்படிப்பட்டவர் அமர்ந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களும் அமர்ந்து கொண்டு மோசடியாகக் கருத்துக்களைப் பரப்புவது கண்டிக்கத்தக்கது.

பத்திரிகை தர்மமும், நீதி நேர்மையும், நாணயமும் கிஞ்சிற்றேனும் வைத்தியநாத அய்யரின் அடிமனதில் ஒட்டிக் கொண்டிருக்குமானால் தவறான செய்திக்கு திருத்தம் வெளியிட்டு அய்ராவதம் மகாதேவன் இடத்திற்கு ஏற்பட்ட களங்கத்தை துடைக்க முயலட்டும்!

ஞாயிறு, 25 நவம்பர், 2018

தமிழருக்குத் தமிழ் மொழியைத் தந்தவர்களே ஆரியர்களா?

#வாட்சப்பில்
தமிழருக்குத் தமிழ் மொழியைத் தந்தவர்களே ஆரியர்கள் தான் என்பது ஆரியர்களின் கூற்று. தமிழர்கள் காட்டுமிராண்டிகளாயிருந்தார்கள். அவர்களை நாகரிகமுடையவர்களாக்கித் தமிழைச் செம்மையாக்கித் தந்தவர் குடத்திலிருந்து பிறந்த அகத்திய முனிவர் என்பது ஆரியர்கள் கூறுங்கதை. இதனையேதான் தமிழின் பெருமையாக உலக மகாகவி கூறுகின்றார்.

"ஆதிசிவன் பெற்று விட்டான் என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு...... இலக்கணஞ் செய்து கொடுத்தான்"

எனவும்

"ஆன்ற மொழிகளினுள்ளே உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்"

இவ்வடிகளின் பொருளை நன்றாகச் சிந்தியுங்கள். இவை ஆரியத்தின் பெருமையை விளக்குகின்றதா? தமிழின் பெருமையை விளக்குகின்றதா?

வஞ்சத்திற்கு ஆண்மை என்பது ஆரியர்களின் அகராதிப் பொருள். வாலியை மறைந்து கொன்ற இராமன் பேராண்மையாளர் புருடோத்தமன் என ஆரியங்கூறும். அதே போல பாரதியார் ஆசையைப் பாருங்கள்!

"ஆரிய நாட்டினர் ஆண்மை யோடியற்றும் சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கோங்குக"

எனக் கூறுகின்றார். இவ்வாறு, பாரதியார் ஆரிய நாடு, ஆரிய இனம், ஆரிய மொழி, ஆரியக் கலை, ஆரியக் கடவுள், பெருமைகளையே பெருமையாகப் போற்றிப் பாராட்டியிருக்க, அவரைத் திராவிட இனத்தவர் போற்றுவது மானத்தோடு பொருந்திய செயலாய் இருக்க முடியுமா?
...........................................

'ஈட்டி' என்ற புனைப்பெயரில் தந்தைபெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை."குடிஅரசு", 18-10-1947

புதன், 21 நவம்பர், 2018

தமிழ் செம்மொழி: நீதிக்கட்சியின் தீர்மானம்

தமிழைச் செம்மொழி என அறிவிக்க 1918 ஆம் ஆண்டில் நீதிக்கட்சி மாநாட்டுத் தீர்மானம்.


1918 மார்ச் 30, 31 ஆகிய நாள்களில் தஞ்சை, திருச்சி பார்ப்பனரல்லாதார் முதல் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டுத் தீர்மானங்களில் ஒன்று:

தீர்மானம் 8 (ஆ)

எல்லாப் பழைமையான மொழிகளைப் போல பழைமையான, வளமான, உயர் தரமாக உருவாக்கப்பட்ட பலதிறப்பட்ட இலக்கியங்களைக் கொண்டது தமிழ் மொழி. இது பல்கலைக் கழகத்தால் பாரசீக, அரேபிய, சமஸ்கிருத மொழிகட்கு ஈடாக மதிக்கப்பட்டுச் செம்மொழி என ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

முன்மொழிந்தவர்: திரு.ஜே.பி.நல்லுசாமி பிள்ளை பி.ஏ., பி.எல்., மதுரை.

வழிமொழிந்தவர்: திரு.ந.மு.வேங்கட சாமி நாட்டார், தமிழ்ப் பண்டிதர், எஸ்.பி.ஜி. கல்லூரி, திருச்சிராப்பள்ளி.

ஆதரித்தவர்: திருமதி.அலர்மேலு மங்கை தாயாரம்மாள், சென்னை.

தீர்மானம் நிறைவேறியது. அரசு ஆணையிலும் பதிவு செய்யப்பட்டது.

- விடுதலை நாளேடு, 20.11.18

செவ்வாய், 20 நவம்பர், 2018

பெரியாரின் பேருள்ளம்! திருவிகவிற்கும் தமிழுக்கம் தந்த மரியாதை!

தமிழ்த் தென்றல் திரு.வி.க அவர்கள் தான் இறந்தால் பேராசிரியர் அ. ச. சம்பந்தன், மு. வரதராசன் இருவரையும் கொள்ளி வைக்கச் சொல்லியிருந்தார்.
   சொல்லி சிறிது காலத்திற்குள் திருவிக இறந்துவிட்டார். அவர் இறந்தபிறகு சிதையில் அவர் உடல் வைக்கப்பட்டிருந்து. சுடுகாட்டில் தந்தை பெரியார் தடியோடு நின்று கொண்டிருந்தார். அவரது தொண்டர் படை கடைசி நிகழ்வுகளை செய்வதற்காக சிறுசிறு பந்தங்களோடு நின்று கொண்டிருந்தனர்.
      சம்பந்தம் அவர்களுக்கும், வரதராசனார் அவர்களுக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை.
       தயங்கியபடியே பெரியாரிடம் வந்து திருவிக அவர்கள் எங்களை கொள்ளி வைக்கச் சொல்லியிருக்கிறார் என்று கூறியிருக்கிறார்கள்.
    இப்பொழுது பெரியாரின் பெருமை வெளிப்பட்டது.
       "அப்படியா சொன்னார்? அப்படீன்னா நீங்களே செய்யுங்க" என்று சொல்லிவிட்டு, தீப்பந்தங்களுடன் சிதையை சுற்றியிருந்த தோழர்களை தள்ளி வந்துவிடுமாறு பணித்தார்.
    ஆனால் அவர்களோ வருவதாக இல்லை. உடனே பெரியாருக்கு சினம் வந்தது. "சொல்றனே காதுல விழல, தீப்பந்தங்களை ஓரமா வச்சுட்டு வாங்கப்பா "என்று கர்ஜித்தார்.
     என்னைப் பார்த்து "தம்பி நீங்க எப்படி செய்வீங்க இதை " என்று கேட்டார்.
     சின்னய்யா அவர்களுக்கு மிகவும் பிடித்த திருவாசகம், சிவபுராணத்தை சொல்லி சிதைக்கு தீ மூட்டுவோம் என்றேன்.
   " அப்படியே செய்யுங்க தம்பி "என்று சொல்லிய பெரியார் அவ்விடத்தை விட்டு புறப்படாமல் அங்கேயே நின்றார்.
     நானும் வரதராசனும் தலைமாட்டில் அமர்ந்து சிவபுராணத்தை தொடங்கினோம். நாங்கள் பாடுகின்றவரை நின்று கொண்டு இருந்த பெரியார் ஆகிய அப்பெரியார், தம்முடைய நண்பருக்கு இறுதியாக ஒரு கும்பிடு போட்டுவிட்டு தொண்டர் படை சூழ புறப்பட்டார்.
     தேசத்தொண்டு, தமிழ்த் தொண்டு, சைவத் தொண்டு புரிந்து வாழ்ந்த அம்மகானின் இறுதி ஊர்வலத்தில் தேசபக்தி தொண்டர்கள், தமிழ்ப் புலவர்கள், சைவர்கள் யாரும் வரவில்லை. எதிர்க்கட்சியினர் என்று குறிக்கப் பெற்ற பெரியார் ஈ. வெ. ராவும் அவரது தொண்டர்கள் தான் இறுதிவரை நின்று இறுதி வணக்கம் செய்து போயினர்.
      தமிழகம் தனக்கும், மொழிக்கும் இறுதிவரை தொண்டாற்றிய திருவிக போன்ற பெருமக்களுக்கு எப்படி நன்றி பாராட்டுகிறது என்பதை அன்று காண முடிந்தது.
  (அ. ச. ஞான சம்பந்தன் எழுதிய "நான் கண்ட பெரியவர்கள்" தமிழ்த்தென்றல் திரு.வி.க., பக்கம் 131-133)

புதன், 14 நவம்பர், 2018

முருகன் தமிழ்க் கடவுளா? :வி.இ.குகநாதன்



பிரதான பதிவுகள்இன்றைய செய்திகள்அரசியல்

முருகன் தமிழ்க் கடவுளா? :வி.இ.குகநாதன்

11/25/2017 இனியொரு... 3 COMMENTS

முருகன் தமிழ்க்கடவுள் என்பது காலகாலமாக இருந்துவரும் ஒரு கருத்தாயினும், அண்மைக் காலத்தில் தமிழ்த் தேசிய அரசியல் தொடர்புடைய உரையாடல்களால் மீண்டும் ஒருமுறை கவனம் பெற்றுள்ளது. அண்மையில் ஒரு தமிழ்த்தொலைக்காட்சியிலேயே (Vijay tv) “தமிழ்க்கடவுள் முருகன்” என்ற தொடர் ஒளிபரப்பப்படுமளவிற்கு இக் கருத்து பரவலடைந்துள்ளது. உண்மையில் முருகன் தமிழ்க்கடவுளா? என்ற கேள்விக்குப் பதிலளிப்பதே இக் கட்டுரையின் நோக்கம். இதற்கு நேரடியாக பதிலளிப்பதற்கு முன் சில விடயங்களைத் தெளிவுபடுத்த வேண்டியிருப்பதால், இதற்கான பதிலினை கட்டுரையின் இறுதியில் பார்ப்போம்.

பழங்காலத் தமிழர் வழிபாடுகளில் முருகன்:

முதலில் பழங்காலத்தில் தமிழர்கள் முருகனை வழிபட்டார்களா எனப் பார்ப்போம். பழைய வரலாறுகளிற்குச் சான்றாகப் பொதுவாக தொல்பொருளாய்வுச் சான்றுகளையும், பழைய இலக்கியங்களையும் கொள்வர். இவ்வாறான தொல்பொருள் சான்றாக நடுகல் வழிபாட்டினைக் காட்டி நிற்கும் நடுகற்கள் காணப்படுகின்றன. தமிழரும், அக்காலத்தில் வாழ்ந்த பிற இனத்தினரைப் போன்று, முதலில் மூதாதையோரை வழிபட்டு வந்தனர். இம் மூதாதையர் வழிபாட்டினை நினைவூட்டும் ஈம அடக்கங்கள், ஈமப்படையல்களின் எச்சங்கள் என்பன தமிழகத்தில் மட்டுமன்றி, யாழ்ப்பாணத்தில் கந்தரோடை போன்ற இடங்களிலும் அகழ்வராட்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டன (1). இத்தகைய மூதாதையர் வழிபாட்டு முறையின் ஒரு பகுதியாக மரித்தோர் நினைவாக நடுகற்கள் நடப்பட்டன. அதற்குப் பின்னரான காலப்பகுதியில் இதே முறையில் போரில் வீரச்சாவு அடைந்தவர்களிற்கு நடுகற்கள் நடப்பட்டன. மூதாதையர் நடுகல் வழிபாட்டிலிருந்தே வீரர்களிற்கான நடுகல் வணக்கமுறை தோன்றியதாக கலாநிதி கைலாசபதி நிறுவுவார்(2). பழங்காலத்தில் நடுகல் வணக்கம் தவிர வேறு கடவுள் வழிபாடு இல்லை என்பதனை மாங்குடி கிழார் “அடலருந் துப்பின்…” என ஆரம்பிக்கும் பாடலில்
“கல்லே பரவின் அல்லது
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.”

என புறநானூறில் பாடுவார் (3). இத்தகைய முன்னோர் மற்றும் வீரர்களின் நடுகல் வழிபாடும் ஒரு வகை முருக வழிபாடாகக் கருதப்பட்டது. இத்தகைய நடுகல்லான கல் தூண் என்பதையே சுருக்கி கந்து எனக்கூறிப் பின்னர் கந்தன் (ஸ்கந்தா Skanda என்பது வேறு) என அழைக்கப்பட்டது எனவும் கூறுவர். மேற்கூறியவாறு இத்தகைய நடுகல் வழிபாடு ஒரு வகைப் பழங்காலத் தமிழரின் முருக வழிபாடாகும்.

இதே போன்று குறிஞ்சி நிலத் தலைவனாகவும் முருக வழிபாடு காணப்பட்டது. இதனையே தொல்காப்பியம் “சேயோன் மேய மைவரை உலகமும்..” எனப் பாடும். அதாவது மலைசார்ந்த பகுதிகளில் தமிழர்கள்/ தமிழர்களின் முன்னோர் வாழ்ந்தபோது, அப் பகுதியின் தலைவனாக சேயோன்/ முருகன் கருதப்பட்டார். இதே போன்று இயற்கை வழிபாடான சூரிய வழிபாட்டின் மருவிய வடிவமும் மற்றொரு வகை முருக வழிபாடாயிற்று என சாரங்கபாணி எனும் அறிஞர் பரிபாடற் திறன் எனும் நூலில் “மாக்கடலினின்று நிவர்ந்தெழுந்த … செவ்வேள்” எனக் குறிப்பிட அதனை மறைமலை அடிகளாரும் பின்னர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

முருகனின் மற்றொரு வடிவம் வேலினை அடிப்படையாகக்கொண்ட வேலன் ஆகும். பழங்கால முன்னோர் வேட்டையினையும், உணவு சேகரித்தலையும் அடிப்படையாகக்கொண்டு வாழ்ந்த காலத்தில் தோன்றியதே இந்த வேலன் எனும் வடிவமாகும். வேட்டையினை முடித்து வந்தவர்கள் மீண்டுமொரு முறை வேட்டையில் நடந்தவற்றை செய்து பார்த்தனர். இதன்போது நாடகம், கூத்து என்பன தோன்றியதாகவும், இதன்போது வேலை ஏந்துபவன் வேலனாகக் கருதப்பட்டான். இவ்வாறான காலப்பகுதியில் பூசாரி வேல் ஏந்தி உருக்கொண்டதாக எண்ணிக்கொண்டு ஆடும் ஆட்டமே வெறியாட்டு என கலாநிதி க. கைலாசபதி கூறுகிறார்(4). இத்தகைய வெறியாட்டத்தின்போது வேலை ஏந்துபவரும் வேலனாகவே கருதப்பட்டார்.

மேற்குறித்த பலவகையான பழந்தமிழ் வழிபாடுமுறைகள் நமது முன்னோர்களிடம் காணப்பட்டன என்பது எவளவு உண்மையோ அதேயளவிற்கு உண்மை யாதெனில் இன்றைய நிலையிலுள்ள வழிபாடுமுறைகள் எதுவும் அன்றைய முறைகளுடன் அறவே தொடர்பற்றன என்பதாகும். இதனை விளங்கிக்கொள்வதற்கு நாம் முருகன் சுப்பிரமணிய ஸ்வாமி/ ஸ்கந்த(Skanda) ஆகிய கதையினை அறிந்துகொள்ளவேண்டும்.

ஆரியப் படையெடுப்பால் சுப்பிரமணிய ஸ்வாமியாகிய முருகன்:

இற்றைக்கு சுமார் 5000 ஆண்டுகளிற்கு முன்னர் (பொதுயுகத்திற்கு முந்திய 3000 ஆண்டளவில்/ BCE 3000) இடம்பெற்ற ஆரியப்படையெடுப் பானது இந்தியப் பழங்குடி மக்களிற்கு மட்டுமல்லாமல், அவர்களின் இயறகையோடு ஒன்றிய வழிபாட்டுமுறைகளிற்கும் இருண்ட காலத்தினைக் கொண்டுவந்தது. ஆரியப் பார்ப்பனர்கள் முதலில் அக்கினி,இந்திரன்,சோமன் போன்ற கடவுள்களிற்கே முக்கியத்துவம் கொடுத்து வழிபட்டதுடன், அவற்றையே ஏனையோரிடமும் பரப்பவும் முனைந்தனர். இதனை நாம் ரிக்,யசூர் ஆகிய வேதங்களில் அக் கடவுள்களிற்கு கொடுத்த முக்கியத்துவத்திலிருந்து அறிந்துகொள்ளலாம். இன்று இந்துக்களிடையே பரவலடைந்துள்ள எந்தவொரு கடவுளும் அன்று வேதங்களில் முக்கியம் பெற்றிருக்கவில்லை.

இதற்கு சுப்பிரமணிய ஸ்வாமியாகிய ஸ்கந்தாவும் விதிவிலக்கல்ல. ஸ்கந்தா (Skanda)என்பவர் குமார (Kumara)என்ற பெயருடன் அக்னியுடன் தொடர்புள்ளவராக ரிக் வேதத்தில் முதன்முதலில் காணப்படுகிறார்(5). வேதத்தின் மற்றொரு பகுதியில் ஸ்கந்தா ருத்திரா- Rudra (பிற்காலத்தில் சிவனாகப்போகும் ருத்திரா) உடன் தொடர்புடையவராக, சிறு குற்றவாளிகளின் (The lord of petty criminals) அதிபதியாகக் காணப்படுகிறார்(6). இவ்வாறு வேதங்களில் முக்கியத்துவமிளந்து சிறு சிறு இடங்களில் காணப்பட்ட ருத்திரா, ஸ்கந்தா போன்ற கடவுள்கள் திடீரென முக்கியத்துவம் பெற்று விஸ்வரூபம் எடுப்பதற்கு ஒரு வரலாற்றுப் பின்னனி காரணமாகவுள்ளது. பார்ப்பனியப் பிற்போக்குக் கருத்தியலிற்கு எதிராக பவுத்தப்புரட்சி ஒன்று பொ.முந்திய ஆறாம் நூற்றாண்டளவில் (BCE 6th century) ஏற்பட்டு இந்தியா முழுவதும் பரவலடைந்தது. இந்தப் பவுத்தப் புரட்சியினை எதிர்கொண்டு தமது பார்ப்பனிய ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்கு பார்ப்பனர்கள் தமது அக்கினிக்குப் பலியிட்டு வழிபடும் முறையினைக் கைவிட்டு ஆதிக்குடிகளின் வழிபாட்டுத் தெய்வங்களைத் தமது வேத காலக் கடவுள்களுடன் இணைத்து பல புராணக்கதைகளை உருவாக்கினார்கள். இந்தப் பின்புலத்திலேயே ஏனைய தொல்குடி மக்களின் வழிபாட்டுமுறைகள், வேதத்தில் வரும் ஸ்கந்தா,குமாரா போன்றவர்கள், உபநிடதங்களில் வந்த சனத்குமார் (Sanath Kumar)என்பவற்றுடன் தமிழர்களிடையே இருந்த பல்வேறுவகைப்பட்ட முருக வழிபாட்டுமுறைகளையும் இணைத்து சுப்பிரமணிய ஸ்வாமி உருவாக்கப்பட்டார். இதுவே சுப்பிரமணிய ஸ்வாமி தோன்றிய வரலாறாகும்(7). இவ்வாறான பல்வேறு கடவுளின் தொகுப்பாக அமைந்ததாலேயே வேறு எந்தக் கடவுள்களிற்குமில்லாதளவில் சுப்பிரமணிய ஸ்வாமிக்கு அதிகளவில் பெயர்கள் இருப்பதும், அவரின் பிறப்பு, வளர்ப்புடன் தொடர்புடையதாகப் பல பெற்றோர்கள் (ருத்திரா, பார்வதி, அக்கினி, கார்த்திகைப் பெண்கள்…)காணப்படு வதும் அமைந்துள்ளது.

இவ்வாறு முற்றிலும் பார்ப்பன மயப்படுத்தப்பட்ட ஸ்கந்தா என்ற போர்க் கடவுள் குப்தர் காலத்தில் இந்தியா முழுவதும் பரவலடைந்திருந்த போதும், குப்த பேரரசின் வீழ்ச்சியுடன் இந்தியாவின் ஏனைய பகுதிகளில் வீழ்ச்சியடைய, தமிழ் நாட்டில் மட்டுமே பழந்தமிழர்களின் பண்பாட்டுடன் இணைக்கப்பட்டிருந்த காரணத்தால் முக்கியத்துவமிளக்காமலிருந்தது. இந்தப் போர்க்கடவுளின் ஒன்றிணைப்பு மூலமான தோற்றத்தினை நியாயப்படுத்தும் நோக்கில் ஸ்கந்த புராண (Skanda Purana) உருவாக்கப்பட்டது. இதனையடிப்படையாகக் கொண்டு இப்புராணக்கதையினை தமிழர்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்காக கந்தபுராணம் எனும் புராணம் கச்சியப்ப சிவாச்சாரியாரால் தமிழில் இயற்றப்பட்டது.

கந்த புராணத்தின் முரண்கள்:

கந்த புராணத்தை எவளவோ சிரத்தை எடுத்து இயற்றியபோதும் அதில் பல தர்க்கரீதியான முரண்கள் காணப்படுகின்றன. குறிப்பாக சுப்பிரமணிய ஸ்வாமி சூரனை அழித்து அவனை மயில் வாகனமாகவும் சேவற்கொடியாகவும் ஆக்கியதாக கந்தபுராணம் பாடும். அவ்வாறாயின் அதற்கு முன்னரே சிறுவனாகவிருக்கும்போதே பிள்ளையாருடன் மாம்பழத்திற்கு சண்டையிட்டு மயிலேறி உலகம் சுற்றியது எவ்வாறு என்ற கேள்வி எழும். தூங்கும் குழந்தைகள் உட்பட மொத்த ஊரையே கடலுள் மூழ்கடித்தவர் ( “முஞ்சு தானை களார்ப்பொடு குழீ …” பாடல்- படத்தில் காண்க) எவ்வாறு கருணையே உருவான கடவுளாக முடியும். இவ்வாறான முரண்கள் கந்த புராணத்தில் காணப்படுவதாலேயே தமிழக கிராமப்புறங்களில் ஒருவர் நம்ப முடியாத பொய்களை/ புழுகுகளைக் கூறும்போது, “இந்தப் புழுகு கந்த புராணத்திலும் இல்லாத புழுகு” எனக் கூறுவார்கள். (இதனை சில பக்தர்கள் “கந்த புராணத்தில் இல்லாதது வேறு எந்த புராணத்திலும் இல்லை” என மாற்றிக்கூறிவருகின்ற போதிலும் முன்னையதே நாட்டுப்புற வழக்கிலுள்ளது).

முருக வழிபாட்டின் இன்றைய நிலை:

பழந் தமிழர்களிடையே காணப்பட்ட இயற்கையோடு ஒன்றியும், அவர்களுடைய வாழ்வியலுடனும் கலந்திருந்த முருக வழிபாட்டின் பல்வேறு வடிவங்களும் இன்று பார்ப்பனப் புராணக்கதைகளிற்குட்பட்டு வேறு ஒரு வடிவிலேயே உள்ளது. இன்னும் கடுமையாகப் பார்த்தால் தமிழர்களிற்கு எதிரான நிலையினை இன்றைய முருகவழிபாடு எடுத்துள்ளதனை சூரன்போர், சமசுகிரதத்திலேயே முருகனிற்கு பூசை என்ற இடங்களில் காணக்கூடியதாகவுள்ளது. தமிழர்களுடைய கோயில்களில் சமசுகிரதத்தில் பூசை நடைபெறும்போதே” தமிழ் நீசபாசை” என்பதனை ஏற்றுக்கொள்வதாகவே பொருளாகிறது. இன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் “தமிழ்க்கடவுள் முருகன்” எனும் தொடரும் முற்றுமுழுதாக ஸ்கந்த புராணக்கதையினை

அடிப்படையாகக்கொண்டுள்ளதே தவிர மாறாக பழந்தமிழர் வாழ்வியலையோ அல்லது அவர்களின் வழிபாட்டையோ சிறிதும் பிரதிபலிக்கவில்லை.

முருகன் தமிழ்க் கடவுளா? கேள்விக்கான பதில்:

இப்போது கேள்விக்கான பதில் காண்பதற்கான நேரம் வந்துவிட்டது. இங்கு பதில் காண்பதற்கு முன் கேள்வியினை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள வேண்டியுள்ளது. முருகன் பற்றித் தேவையானளவு மேலே ஏற்கனவே பார்த்துள்ளோம். அடுத்த சொல்லான தமிழ் என்பது “அ” முதலிய 247 எழுத்துக்களையுடைய நமது மொழியைக் (பழைய வட்டெழுத்துக்கள், தமிழி, பேச்சுமொழி உள்ளடங்கலாக) குறிக்கும். இறுதிச் சொல்லான கடவுள் என்பது சற்றுச் சிக்கலானது. அகராதியின் படி கடவுள்(God) என்பவர் அண்டம் (Universe) முழுவதையும் படைத்துக் காப்பவர் என்றும், அவர் எல்லாச் சக்திகளும் பொருந்தியவர்(Supreme power) என்றும்,எல்லாச் செயல்களிற்கும் காரணமானவர் எனவும் வரைவிலக்கணப்படுத்தப்படுகிறார் (Oxford dictionary). இப்போது பதிலிற்கு வந்தால் முருகன் தமிழ்க்கடவுளா என்பதற்கு முன் தமிழிற் கு எனத் தனியாகக் கடவுள் இருக்கலாமா எனப் பார்த்தால் பதில் கடவுளின் வரைவிலக்கணப்படி இல்லை என்பதேயாகும். விளங்கக் கூறின், ஒரு வாதத்திற்கு கடவுள் இருக்கிறார் எனக்கொண்டாலும் அவர் இந்த பிரபஞ்சம் முழுவதற்கும் பொதுவானவாராக இருப்பாரேயன்றி மாறாக தமிழர்களிற்கு முருகன், சமசுகிரத ஆரியரிற்கு இராமர், ஐரோப்பியரிற்கு இயேசு, அராபியரிறகு அல்லா என இருக்கமுடியாது.
இதுவரைப் பார்த்தவற்றைச் சுருக்கமாகக் கூறினால், முருகனின் (கொற்றவை போன்றவையும்) பல்வேறு நிலைகளிலான வழிபாட்டு முறைகள் எமது முன்னோர்களிடம்/பழந் தமிழர்களிடம் காணப்பட்டன. அவையெல்லாம் இன்றைய நிலையில் பார்ப்பன ஆதிக்கத்திற்கு உட்பட்டு முற்றுமுழுதாக உரு மாறிவிட்டன. அவற்றினை மீட்டெடுக்காமல் வெறுமனே முருகன் தமிழ்க்கடவுள் எனக்கூறுவது பார்ப்பனியத்திற்கு முண்டுகொடுக்கும் வேலையேயன்றி வேறில்லை. அவ்வாறு மீட்டாலும், அதற்குப் பின்னர்கூட , இன்றைய அறிவியல்நிலையில் “எல்லாம் வல்ல கடவுள்” என்ற வரைவிலக்கணத்திற்குள் அடைக்கத்தேவையில்லை, மாறாக பழந்தமிழ்க் கலை-பண்பாட்டு வரலாற்று அடையாளங்களாகக்கொள்ளலாம்.

துணை நின்றவை
(1)= பொ.இரகுபதி- பெருங்கற்கால யாழ்ப்பாணம்(பக்கம்6-7)
(2)= க.கைலாசபதி- பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும். (பக்கம்37)
(3)= புறநானூறு- பாடல் 335
(4)= க.கைலாசபதி- பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும். (பக்கம்172)
(5)= Pandit Pundalik Madhav (1967), translation of The Rigveda Samhita Vol 1, (p 167)
(6)= Narayan Aiyangar (1987), Kumara in Essays on Indo-Aryan Mythology Vol 1 (p 29)
(7)= Nath Vijay (2001), Acculturation Process Mythicised in Puranas and Acculturation: A Historico-Anthropological Perspective, (pp 98-99)

செவ்வாய், 13 நவம்பர், 2018

தமிழில் பெயர் பலகை: ஆய்வுக்கு உத்தரவு



திண்டுக்கல், நவ. 13- 'தமிழக கடைகள், உணவகங்கள், வணிகநிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் உள்ளதா...' என, ஆய்வு செய்து, அறிக்கை அனுப்ப அலுவலர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக கடைகள், உணவ கங்கள் மற்றும் வணிக நிறுவ னங்களின் பெயர் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும். மேலும், 5:3:2 விகிதாச்சார அடிப்படையில் தமிழ், ஆங்கி லம் மற்றும் பிற மொழிகளில் பெயர் இடம் பெற வேண்டும். இவை அனைத்தும், ஒரே பெயர் பலகையில் இருக்க வேண்டும். ஆனால், பல நிறுவன பெயர் பலகைகள் ஆங்கிலம் மற்றும் பிற மொழி களில் எழுதப்படுகின்றன. அந் நிறுவனங்களிடம், 50 ரூபாய் மட்டுமே அபராதமாக வசூலிக் கப்படுகிறது. அதனால், பலரும் தமிழில் பெயர் பலகை வைக்காமல் அலட்சியமாக உள்ளனர். எனவே, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனரகம் புதிய உத்தரவை பிறப்பித்து உள்ளது.

அதில், தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள், மாதந்தோ றும் அரசு அலுவலகங்கள் மற் றும் 100 கடைகள், வணிக நிறு வனங்களில் ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப வேண்டும். தமிழில் பெயர் பலகை வைக் காத, நிறுவனங்களின் விவரம் தொழிலாளர் துறை ஆணைய ருக்கு அனுப்பப்படும். அவர் கள் மூலம் வழக்கு பதிவு செய் யப்படும் என, உத்தரவிடப் பட்டுள்ளது.

- விடுதலை நாளேடு, 13.11.18

சனி, 10 நவம்பர், 2018

தமிழர் சங்கம்

07.07.1929 - குடிஅரசிலிருந்து...
சென்னையில் சீர்திருத்தத்திற்காகத் தமிழர் சங்கம் என்பதைத் திருத்தி அமைக்கப்பட்டு இருக்கின்றது. இச்சங்கத்தை ஆதியில் தோற்றுவித்தவர் பச்சையப்பன் கலாசாலைத் தமிழ்ப் பண்டிதர். திரு.மணி, திருநாவுக்கரசு முதலியார் ஆவார். இவர் சைவ சமயப் பற்றுடையவர். தமிழ்ப் பாஷை, கலை, இலக்கிய இலக்கணம் ஆகியவைகளில் வல்லவர் எனினும் சமயமும் கலையும், பாஷையும் நாட்டிற்கும் பொதுமக்களுக்கும் பயன்படாமல் ஒரு சிறு துறையாகிய அதுவும் ஜாதிமத சமயத் துறையையே முக்கியமாய் பற்றிக் கொண்டிருப்பதால் நாட்டில் அவர்களின் வளர்ச்சி குன்றிவருவதைப் அறிந்து அவைகள் உண்மையில் வளர்ச்சி பெறவும், நாட்டின் பொது நலத்திற்கும் பயன்படவும் ஏற்றவாறு செய்ய எண்ணி அச்சங்கத்தை முன் குறிப்பிட்டபடி சமுக சீர்திருத்தத் துறைக்குத் திருத்தி அமைத்து அதற்குத் தற்கால தேவைக்கேற்றபடி கொள்கைகளையும் வகுத்து அக்கொள் கைகளைப் பரப்புவதற்கேற்ற நிர்வாக சபையையும் அமைக்கப்பட்டி ருக்கின்றதாக அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம்.
சங்கத்தின் முக்கியக் கொள்கைகள் தீண்டாமை ஒழிப்பது, மதுபானத்தை விலக்கச் செய்வது, சுகாதாரத்தை ஏற்படுத்துவது, தமிழ் மொழியை வளர்ப்பது, வாழ்க்கை சுப, அசுப காரியங்களில் போலிச் சடங்குகளை ஒழித்து சிக்கன முறையில் நடத்தச் செய்வது. கலப்பு மணம், மறுமணம், ஆகியவைகளை ஆதரிப்பது முதலிய சமுகச் சீர்திருத்தக் காரியங்களைச் செய்வதே முக்கியமாகக் கொண்டது.
நிர்வாகஸ்தர்கள்
திரு.டாக்டர் எம்.மாசிலாமணி முதலியார் போஷகராகவும் திரு.மணி, திருநாவுக்கரசு முதலியார் தலைவராகவும், பண்டிதர் எஸ்.எஸ்.ஆனந்தம். உபதலைவராகவும், திருவாளர்கள் ஜகந்தாதப்பிள்ளை, பக்கிரிசாமி செட்டியார் காரியதரிசிகளாகவும் மற்றும் பத்து கனவான்கள் நிர்வாக அங்கத்தினராகவும் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்.
சமயப் பற்றில் மூழ்கி, பரலோகத்திற்கும், பரலோகக் கடவுளுக்கும் பாடுபட்ட பெரியார்கள் பிரத்தியட்ச லோகத்திற்கும் பிரத்தியட்ச கடவுள் களுக்கும் பாடுபட முன் வந்ததை நாம் மனதாரப் போற்றி வரவேற்கின்றோம். மற்றும் ஆங்காங்கு சமயத்தின் பேராலும் ஜாதி வகுப்புகளின் பேராலும் அமைக்கப்பட்டிருக்கும் சங்கங்கள் தமிழர் சங்கத்தைப் பின்பற்றி நாட்டிற்குப் பயன்படத்தக்க வண்ணம் திருத்தியமைத்தால் அது மிகவும் போற்றத்தக்க தாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
- விடுதலை நாளேடு, 10.11.18