பக்கங்கள்

சனி, 26 டிசம்பர், 2015

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? -புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்-3

திராவிடம்
இது தமிழம் என்பதன் திரிபு, ஆதலின் தமிழ்ச் சொல்லே. ஆரியம் அன்று. இதுபற்றிப் பல தடவைகளில் என்னால் எழுதப்பட்ட வெண்பாக்கள் இங்கே தரப்படுகின்றன.
பாலி மொழியிற் பகர்ந்த மகாவமிச
நூலில் ஒருசெய்தி நோக்குகின்றோம்! மேலாம்
தமிழ் என்ற சொல்லைத் தமிழோஎன் றார்! ஏன்?
தமிழரல்லார் நாக்குத் தவறு.
தமிழ் நாட்டை ஆசிரியர் தாலமி முன்னாள்
தமிரிசி என்றுரைத்தார். தாம்ஓர் - தமிழரல்லர்!
ஆதலினால் தோழா அயலார் ஒருசொல்லை
ஓதலினால் மாறுபடல் உண்டு.
தமிழென்று சாற்றுதற்கு மச்ச புராணம்
த்ரமிளென்று சாற்றியதும் காண்க - தமிழா
படியைப் ப்ரதிஎன்னும் பச்சைவட வோரிப்
படியுரைத்தால் யார்வியப்பார் பார்.
தமிழோவும் மற்றும் தமிரிசியும் வேறு
த்ரமிள த்ரமில் எல்லாம் சாற்றின் - தமிழன்
திரியே அவைகள்! செந்தமிழ்ச் சொல் வேந்தன்
பிரிந்ததுண் டோ இங்கவற்றில் பேசு.
திரிந்ததமிழ்ச் சொல்லும் தமிழ்ச்சொல்லே ஆற்றில்
பிரிந்தவாய்க் காலும் பிரிதோ? - தெரிந்த
பழத்தைப் பயம் பளம் என்பார் அவைகள்
தழைந்த தமிழ்ச்சொற்கள் தாம்.
உரைத்த இவை கொண்டே உணர்க தமிழம்
திராவிடம்என் றேதிரிந்த தென்று! - திராவிடம்
ஆரியர்வாய் பட்டுத் திரிந்தாலும் அந்தச்சொல்
ஆரியச்சொல் ஆமோ அறி.
தென் குமரிப் பஃறுளியும் சேர்வடக்கு மாமலையும்
நன்கெல்லை கொண்ட நடுவிடத்தில் - மன்னும்
பொருள்கள் பலவாம்! பொலிந்தனவே அந்தப்
பொருள்கள் தமிழ்ப்பெயரே பூண்டு.
திராவிடம் தன்னந் தனியா ரியமா?
திராவிடம் இன்பத் தமிழின் - திரிபன்றோ!
இன்பத் தமிழகத்துக் கிட்டார் திராவிடப்பேர்
என்பார்சொல் ஏற்புடைய தன்று.
திராவிடம் என்னல் தமிழின் திரிபே
திராவிடம் ஆரியச்சொல் அன்று - திராவிடம்
வெல்கஎன்று சொன்னால்நம் மேன்மைத் தமிழர்கள்
வெல்கஎன்று விண்டதுவே யாம்.
வந்தார் மொழியா திராவிடம்? மாநிலத்தில்
செந்தமிழ்ச் செல்வமா அந்தச்சொல்! - முந்தியே
இங்குள்ள நற்பொருள்கள் எல்லாவற் றிற்குமே
எங்கிருந்து கொண்டுவந்தார் பேர்
-(குயில், 15---07-1958)

உண்மை,1-15.7.15
ஆசாரம்
ஆசு+ஆர்வு+அம். குற்றத்தை ஆய்ந்து ஒழுகுவதோர் ஒழுக்கத்திற்குக் காரணப் பெயர். ஆர்வு என்பதில் வு தொக்கது.
பெருவாயின் முள்ளியார் அருளிச் செய்த ஒழுக்கப் பகுதியின் தொகுப்புக்கும் ஆசாரக் கோவை என்று பெயர். இத்தொடர் தமிழானதால் அப் பெயர் வைத்தார்.
அதி
இஃது அதைத்தலில் முதனிலை வேறுபட்ட தமிழ்ச்சொல், அதைத்தல், அதை, அதி, என்பனவற்றிற்கு மிகுதி என்பது பொருள்.
(குயில், குரல்: 1, இசை: 7, 15---07-1958)
8
அதி
இது தூய தமிழ்ச்சொல் என்றும் அதைத்தலின் முதனிலையாகிய அதை என்பதுதான் அதி என்றாயிற்று என்றும் கூறியிருந்தோம். அது பற்றி நண்பர் ஒருவர் (பெயரைக் குறிப்பிட வேண்டாமாம்) அதை என்பது அதி வர இலக்கணச் சட்டம் இடந்தருகின்றதா என்று கேட்டுள்ளார். ஒரு சொல் வேறுபாடு உறுவதையும் மருவி வருவதையும் தமிழிலக்கணம் ஒத்துக் கொள்கிறதல்ல. அதன்படியே அதை என்பது என அறிதல் வேண்டும்.
இதற்கு மற்றொரு மேற்கோள் அவைத்தல், அவித்தல் என்றும், அவை என்பது அவி என்றும், வந்தது காண்க.
ஆசிரியர்
இது வடசொல் என்று ஏமாற்றுவார் -தூய தமிழ்ச் சொற்றொடர் ஆகும். ஆசு --குற்றம். இரியர் -- நீங்கியவர். மடமை என்னும் குற்றத்தினீங்கியவர் ஆசிரியர். காரணப்பெயராதல் அறிக.
மடம்
அறியாமை உணர்த்தும் போது மடம் தூய தமிழ்ச் சொல்லே. அது நிலையத்துக்கு ஆகும்போது வடமொழி என்க!
அரங்கு
அரக்குதல் என்னும் தொழிற் பெயர் உடலில் புடை பெயர்ச்சி செய்தல் என்று பொருள்படும். அதன் முதனிலையாகிய அரக்கு என்பதற்கும் அதுவே பொருள்.
அரக்குதல், அரக்கு என்பவற்றின் தன்வினைகள் அரங்குதல், அரங்கு என்பது. பொருள் என்னவெனில் (உடல்) புடைபெயர்தல், அஃதாவது உடலசைதல், ஆடல் ஆகும். இனி அரங்கு என்பது அம் இறுதி பெற்றும் பெறாமலும் ஆடுமிடத்திற்கு ஆனது ஓர் ஆகுபெயர் என்க!
இச்சொல் நம் செந்தமிழ்ச் செல்வமாகும். இதை வடசொற் சிதைவென்று கூறுவார். கூற்று நூற்றுக்கு நூறு பொய்யென மறுக்க.
முரலை
அண்மையில் வடசொற் பற்றுடையவர் ஒருவர், இது முரலா என்ற வடசொற் சிதைவு என்று கூறினார். எரிச்சல் வந்துவிட்டது. இதனால் சிரிக்க வாய்ப்பிழந்தேன்.
ஆரியர் நாற்றமே இந்த நாவலந்தீவில் ஏற்படாத காலத்திலேயே, வட நாட்டிலிருந்து நருமதை ஆற்றுக்குத் தமிழர் முரலை என்று பேரிட்டு அழைத்தனர். முரலை என்ற தொழிற் பெயருக்கு, முரலுவது - ஒலிப்பது, அதிலும் புறத்தால் ஒலிப்பது என்பது பொருள். அஃது தொழிலாகு பெயர். முரலை ஆற்றைக் குறித்தது. எனவே தூய தமிழ்ச்சொல்.
முரலி
இது முரலுதலை - ஒலித்தலையுடையது என்ற பொருள் கொண்டது. மேலும் உள்ளால் ஒலிப்பது என்று கொண்டனர் பண்டைத் தமிழர். இதை வடவர் முரளி என்று கூறுவார்கள். முரலி என்பது குழலுக்கு - புல்லாங் குழலுக்குப் பெயர். தூய தமிழ்ச் சொல் என்பதை அறிந்து மகிழ்க!
மா
இஃது மஹா என்ற வடசொற் சிதைவாம். என்னே மடமை!
மா! எனின் பெரியது, சிறந்தது, விலங்கு, மாமரம், முதலிய பலபொருள் குறிக்கும் உரிச்சொல் என்று, வடமொழி என்பது இந்நாட்டிற்கு புகுவதற்கு முன்னமே தமிழ் நூல் கூறிற்று. பெரிது என்ற பொருளில், மாப்பெரிய என்று எழுதவேண்டும். (இடையில், ப் விரிக்காவிடில் மா பெரிது) மா என்பது மகா என்ற வடசொற் சிதைவு என்று கொண்டதாகிவிடும். மா இருக்க மஹா எதற்கு?
கண்ணியம்
இது கண்யம் என்பதன் சிதைவு என்பர் பார்ப்பனரும் அடியாரும். கண்ணல், எண்ணல் சிறத்தல், என்பன ஒன்றே. கண்ண, கண்ணிய எனச் செய, செப்பிய எனும் வாய்ப்பாட்டு வினையெச்சங்களாயும் வரும்.
கண்ணியம் இகரச் சாரியையும் அம் இறுதி நிலையும் பெற்ற பெயர். வடவர் சொல்லும் கண்யம் வேறு, தமிழர் கொண்ட கண்ணியம் வேறு என அறிதல் வேண்டும்.
- (குயில், குரல்: 1, இசை : 8, 22-07-58)
காமம்
இது வடசொல் என்றே கூறிப் பொய்ப்பர். ஏனெனில் வடமொழி நூற்களில் பெரிதும் வருவதான ஒரு சொல் இது. தமிழினின்று திருடியது.காமக்கணிப் பசலியார் என்பது ஒரு பெண்பால் புலவர் பெயர். இதுல் காமம்,கண் என்பன முதலிரு சொற்களாகும். இது காமாட்சி என்பதனின் தமிழ் மொழி பெயர்ப்பு. இவ்வாறு மொழி பெயர்த்தவர் சங்கப் புலவர் என்க. சாம்பூநதம் என்னும் ஒருவகைப் பொன்னை, நக்கீரனார் நாவலொடு பெயரிய பொலம் என்று தமிழிற் பெயர்த்ததும் காண்க. காமாட்சி என்பதில் காமம், ஆட்சி என்ற இரு சொற்கள் உண்டு. ஆட்சி மட்டும் வடசொல் ஆதலால் காமாட்சி - காமக்கண் என்றார். எனவே காமம் தமிழச் சொல்லே. ஆதலும் அதை வடவர் எடுத்தாண்டார் ஆதலும் காண்க. காமம் - தோற்றத்துக்கு முன்னது. அது காம்பு என்பதன் வேர்ச்சொல் ஆகிய காம் என்பதனின்னு தோன்றியது.இது போல் ஓம்பு என்பதன் வேர்ச்சொல்லாகிய ஓம் என்று வழங்கி வருவதும் ஊன்றி அறியற்பாலது.
ஓம்
இது வடசொல் அன்று. தூய தமிழ்ச் சொல். காக்க என்பது இதன் பொருள்.
சங்கம்
சங்கமே, கணைக்கால், ஓரம், சவை, சங்கு, புலவர், நெற்றி என்பது நிகண்டு. சங்கம் இத்தனைப் பொருளைத் தருகிறது. சவை புலவர் என்று குறிக்குமிடத்தில் அது தமிழ்ச் சொல்லா, வடசொல்லா என்றுதான் ஆராய்ச்சி இங்கே.தொல்காப்பிய காலத்துக்கு முன்பே தென்பால் தென் கழகம் என்பதொன்றும் வடசொல், வடகழகம் என்பதொன்றும் இருந்ததாக பழைய இலக்கியங்கள் நமக்கு நவிலுகின்றன.
வடகழகமிருந்து கருத்து வேறுபட்டு, அகத்தியர் தென் கழகம் போந்தார் என்றும் கூறுவார். தென் கழகம் என்பது தென்னகம் என்றும், தெங்கம் என்றும் செங்கம் என்றும் ச என்ற எழுத்துத் தமிழில் சொல்லுக்கு முதற்கண் வரத்துவங்கிய பின் சங்கம் என்றும் வழங்கலாயிற்று என அறிதல் வேண்டும். வடபுலம், தென்புலம் என்பன கூட முதற்கண் வடகழகம், தென்கழகம் என்ற பொருளிலேயே வழங்கினவாதல் வேண்டும். 
புலம் - அறிவு.தென்கழகம் என்பதே சங்கம் என மருவியது எனின், வடபால் சங்கம் என்ற சொல் என்ன பொருளில் வழங்குகின்றது என்றால், வழங்கவில்லை என்றுதான் பதில் இறுப்போம். சங்கம் என்ற சொல் பிற்பட்ட தமிழிக்கியத்துள் மட்டும் காணப்படுகின்றதும் காண்க.
சங்கம் வடமொழியன்று என்று அறுதியிட்டுக் கூறுவோம். அது தமிழ்ச் சொல்லே என்று உறுதியிட்டுக் கூறுவோம்.
பதி
அரசன், இடம், கொழுநன், தலைவன், பதிவு, வீடு இத்தனை பொருள் பயக்கும். பதி என்பது வடசொல்லன்று. வழங்கிடுவோர், வடவரும் அவர் அடியார்களும்.
எஞ்சிய எல்லாம் எஞ்சிய இலவே.
(தொல்காப்பியம் மொழிமரபு - சச)
என்ற நூற்பாவின் உரையில் பதி என்பது குறிக்கப்பட்டது காண்க. அது வடசொல்லாயின் குறியார் என்க. எனவே பதி தூய தமிழ்ச் சொல்லே.
கலை
இதுவும் தூய தமிழ்ச்சொல்லே. மேற்படி நூற்பாவுரையும் இதை வலியுறுத்திற்று. கல்வி, ஆண்மான் என்பன இதன் பொருள்.
பிலம்
பில்கல் என்பதன் முதநிலையாகிய பில் என்பது நீர் பொசியும் இடம். அதாவது கீழ் அறையைக் குறிக்கும் - பில் அம் பெற்று பிலம் ஆயிற்று. இது தூய தமிழ்ச் சொல்.
குலம்
இது குலை என்பதன் திரிபு. இதை வடவர் எடுத்தாண்டதில் நமக்கு வருத்தமில்லை. அது வடசொல்லே என்று புளுகும்போது தான் எரிச்சல் உண்டாகிறது. இது தூய தமிழ்ச்சொல் என்பதற்கு முன் காட்டிய தொல்காப்பிய நூற்பாவின் உரையே சான்றாகும்.
(குயில், குரல்: 1, இசை: 9, 29.7.1958)
உண்மை,1-15.8.15
அந்தணர்
இதை அந்தம்+அணர் என்று பிரித்து முதலில் உள்ள அந்தம் என்பது வடசொல் என்று கூறி, அழி வழக்காடுவர் இழிவுறு பார்ப்பாரும் இனம் கண்டு வேர்ப்பாரும்.
வேதாந்தத்தை அணவுவோர் என்பது அதன் பொருள் என்று பொய்ப்பர் அவரே!
அம்+தண்=என்பன அந்தண் என்றாயிற்று.
இதன் பொருள்: அழகிய தட்பம், அஃதாவது நாட்டார் கண்கட்கு. அழகு செய்வாரின் தொண்டின் அருட்தன்மை.
இந்த, அந்தண் என்பது தமிழ்ப் பெருநூற்களில் பெரும்படியாய் வந்து பயில்வது அந்தண் சோலை, அந்தண் காவிரி என வந்துள்ளவை காண்க.
அந்தணர் என்பவர் யார்? - கூறுவோம்.
அறந்தான் இயற்றும் அவனிலுங்
கோடி அதிகம் இல்லம்
துறந்தான்.........
என்பது பட்டணத்தடிகள் பகர்ந்தது.
இல்லறத்தானைவிட மக்கள் நலம் கருதி இல்லம் துறந்தான் சிறந்தவன் என்று குறித்தார். மேலும் அதைத் தொடர்ந்தே அவர், அவனிற் சத கோடி உள்ளத் துறவுடையான் என்றும் கூறினார். அவ்வாறு இல்லந் துறந்தவனைவிடச் சிறந்தவன் உள்ளத் துறவுடையான்.
எனவே துறவு இல்லத்துறவு, உள்ளத்துறவு என இரு வகைப்படும். இவ்விரண்டில் இல்லத்துறவே மேலானது மக்கட்குப் பயன்படுவதால்.
இக்கூறிய இல்லத் துறவிகளையே நம் தமிழ் முன்னோர் அந்தணர் என்றார் என்று கடைபிடிக்க. அந்தணர் என்ற சொல் அயலவர் மாசு படாத செந்தமிழ்ச் செல்வம்.
மனம்
மனசு என்ற வடசொல்லின் சிதைவு என்பார் வந்தவரும், சில கந்தல்களும்.
மன்னுவது மனம் என்பதைத் தமிழ் மக்கள் அறிந்து ஏமாறாதிருக்க வேண்டும்.
உலகுக்கு முதன்முதலில் தத்துவ நூல் (கபிலர் எண்ணூல்) தந்தவர்கள் தமிழர்கள். அதில் மனம் என்பதின் இலக்கணத்தைத் தெளிவுறுத்தியதை மன்னுவது என்ற காரணத்தினால் மனம் என்று அதற்குப் பெயர் என்று அமைத்தமையே காட்டும். மனமானது புலன் வழிச் செல்லாமல் தன்னிலையில் மன்னுவதே உணர்வு நிலை என்றும் அந்த உணர்வு நிலையிலே விடுதலை வீடு என்றும் கூறும் கபிலர் எண்ணூல்.
தூய தமிழ்ச் சொல்லாகிய, மனம் என்பதை வந்தவர் எடுத்துக் கொண்டனர். வேறு வழியில்லாததால் என்று அறிந்து வைக்க.
பிணம்
பிண் என்ற வேர்ச் சொல் நீக்கம் என்ற பொருளுடையது. உயிர் நீக்கிய உடலைக் குறிப்பது எனக் கொள்க. அதில் அம் இறுதி நிலை. எனவே பிணம் தமிழ்ச் சொல்லே.
(குயில், 05-08-1958)
-உண்மை,16-31.8.15
கன்னி
இதை வடசொல் என்று பார்ப்பனரும் அவர் அடிவருடிகளும் சொல்லுவார்கள். இது தூய தமிழ்ச் சொல்லென்றே அறியவேண்டும். கன்னி-இளமை. கன்னித்தமிழ் என்றால், இன்றும் இளமையோடு திகழும் தமிழ் என்பது பொருள்.
இது தூய தமிழ்ச்சொல் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு வருமாறு:
தொல்காப்பியம் நூன் மரபு 30-ஆம் பாட்டு.
மெய்ந்நிலை சுட்டின் எல்லா எழுத்தும்
தம்முற் றாம்வருஉம் ரழஅலங் கடையே
என்பது. இஃது என்ன சொல்லிற்றெனின் ர், ழ் என்னும் இரண்டு எழுத்துகள் தம்முன் தாம் வரும் என்றது.
இதில் ன் என்பதன் முன் ன வருவதற்கு எடுத்துக்காட்டாகக் கன்னி என்ற தூயதமிழ்ச் சொல் காட்டப்பட்டிருக்கின்றது.
காலம்
கால், காலை, காலம் ஒரு பொருட்சொற்கள். இது தூய தமிழ்ச்சொல்லே, எனினும் பார்ப்பனரும் பழிப்பனரும் இதையும் வட்சொல் என்று ஏமாற்றுவர். இதனாலன்றோ தொல்காப்பியச் சொல்லதிகார உரைகாரர் காலம் உலகம் என்ற 58 ஆம் நூற் பாவுரையில், காலம் உலகம் வடசொல்லன்று. ஆசிரியர் வடசொற்களை எடுத்தோதி இலக்கணங்கூறார் என்று விழிப்பூட்டினார்.
உலகம்
இது லோகம் என்ற வடசொல்லின் சிதைவு என்று புகலும் பொய்யரும் உள்ளார் அன்றோ! மேலே காலம் என்பதன்கண் உரைத்த தொல்காப்பியச் செய்யுள் உரையாய் இதுவும் தமிழ்ச் சொல் என்றே வற்புறுத்தியுள்ளார். உலகம்- உலகு என்றும் வரும். உலகத்தில்- - துன்பம், --துன்பம் நிறைந்ததாதலின் உலகம் காரணப்பெயர். இவ்வாறு மறைமலையடிகளாரும் வரைந்தனர்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
என்ற குறளின் முதற்பாட்டில் திருவள்ளுவர் தம் பெற்றோர் நினைவாக அவர் பேர்களாகிய ஆதி பகவன் என்பனவற்றை வைத்தாராம்.
ஆதி பகவன் என்பது வடசொற்றொடர் என்று பரிமேலழகர் கதைத்ததற்குக் காரணம் கண்டு கொள்க. இன்னொரு முறையும் இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் கூறுகிறேன், பகவன் தூய தமிழ்ச் சொல்.
ஆகுலம்
இது வடமொழியன்று தூய தமிழ்ச் சொற்றொடர், ஆகு+உலம் எனப்பிரியும்? ஆகு-ஆகின்ற (ஒருவன் முயற்சியாலாகின்ற) உலம்- - -ஒலி. வினைத்தொகை நிலைத்தொடர். கடல் முதலியவற்றில் உண்டாகும் இயற்கை ஒலியைப் பிரிப்பதற்கு ஆகு என்ற அடை வேண்டியதாயிற்று.
உலம் என்பது உலம்பு என்றதன் கடைக்குறை என்பர். ஆகவே ஆகுலம் என்றது தூய தமிழ்ச் சொற்றொடர் என்க. வியாகூலம் என்பது போன்ற சொற்கள் வடமொழியிற் கேட்ப்படுகின்றன. ஆயினும் அவற்றிற்கும் ஆகுலம் என்பதற்கும் தொடர்பில்லை என அறிதல் வேண்டும். ஆகுலம் என்ற சொற்றொடரை வள்ளுவர் தக்க இடத்தில் வைத்து செய்யுள் செய்து காட்டியருளினார்.
மனத்துக்கண் மாசு இலன்ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற.
என்பது குறள்.
மனத்துக்கண் மாசற்ற நிலையில் உண்டாகும் நினைப்பும் செயலும் அறமாகும். அல்லாதவை அனைத்தும் அறமாகா. வேறு என்ன எனின் நான் அறம் செய்தேன், நான் அறம் செய்தேன் என்று ஒலிபரப்புதலும் ஒலிபரப்பும்படி செய்தலும் ஆகிய தன்மையுடையவைகளே என்பது இதன் கருத்து. ஈண்டு ஆகுலம் என்பது இன்றியமையாத சொற்றொடர் ஆதல் கண்டு இன்புறவேண்டும்.

(குயில்: குரல்: 1, இசை: 11, 12-08-1958)
-உண்மை,1-15.9.15

காமம்
இது வடசொல் என்றே கூறிப் பொய்ப்பர். ஏனெனில் வடமொழி நூற்களில் பெரிதும் வருவதான ஒரு சொல் இது. தமிழினின்று திருடியது.காமக்கணிப் பசலியார் என்பது ஒரு பெண்பால் புலவர் பெயர். இதுல் காமம்,கண் என்பன முதலிரு சொற்களாகும். இது காமாட்சி என்பதனின் தமிழ் மொழி பெயர்ப்பு. இவ்வாறு மொழி பெயர்த்தவர் சங்கப் புலவர் என்க. சாம்பூநதம் என்னும் ஒருவகைப் பொன்னை, நக்கீரனார் நாவலொடு பெயரிய பொலம் என்று தமிழிற் பெயர்த்ததும் காண்க. காமாட்சி என்பதில் காமம், ஆட்சி என்ற இரு சொற்கள் உண்டு. ஆட்சி மட்டும் வடசொல் ஆதலால் காமாட்சி - காமக்கண் என்றார். எனவே காமம் தமிழச் சொல்லே. ஆதலும் அதை வடவர் எடுத்தாண்டார் ஆதலும் காண்க. காமம் - தோற்றத்துக்கு முன்னது. அது காம்பு என்பதன் வேர்ச்சொல் ஆகிய காம் என்பதனின்னு தோன்றியது.இது போல் ஓம்பு என்பதன் வேர்ச்சொல்லாகிய ஓம் என்று வழங்கி வருவதும் ஊன்றி அறியற்பாலது.
ஓம்இது வடசொல் அன்று. தூய தமிழ்ச் சொல். காக்க என்பது இதன் பொருள்.

சங்கம்
சங்கமே, கணைக்கால், ஓரம், சவை, சங்கு, புலவர், நெற்றி என்பது நிகண்டு. சங்கம் இத்தனைப் பொருளைத் தருகிறது. சவை புலவர் என்று குறிக்குமிடத்தில் அது தமிழ்ச் சொல்லா, வடசொல்லா என்றுதான் ஆராய்ச்சி இங்கே.தொல்காப்பிய காலத்துக்கு முன்பே தென்பால் தென் கழகம் என்பதொன்றும் வடசொல், வடகழகம் என்பதொன்றும் இருந்ததாக பழைய இலக்கியங்கள் நமக்கு நவிலுகின்றன.வடகழகமிருந்து கருத்து வேறுபட்டு, அகத்தியர் தென் கழகம் போந்தார் என்றும் கூறுவார். தென் கழகம் என்பது தென்னகம் என்றும், தெங்கம் என்றும் செங்கம் என்றும் ச என்ற எழுத்துத் தமிழில் சொல்லுக்கு முதற்கண் வரத்துவங்கிய பின் சங்கம் என்றும் வழங்கலாயிற்று என அறிதல் வேண்டும். வடபுலம், தென்புலம் என்பன கூட முதற்கண் வடகழகம், தென்கழகம் என்ற பொருளிலேயே வழங்கினவாதல் வேண்டும். புலம் - அறிவு.தென்கழகம் என்பதே சங்கம் என மருவியது எனின், வடபால் சங்கம் என்ற சொல் என்ன பொருளில் வழங்குகின்றது என்றால், வழங்கவில்லை என்றுதான் பதில் இறுப்போம். சங்கம் என்ற சொல் பிற்பட்ட தமிழிக்கியத்துள் மட்டும் காணப்படுகின்றதும் காண்க.சங்கம் வடமொழியன்று என்று அறுதியிட்டுக் கூறுவோம். அது தமிழ்ச் சொல்லே என்று உறுதியிட்டுக் கூறுவோம்.
பதி
அரசன், இடம், கொழுநன், தலைவன், பதிவு, வீடு இத்தனை பொருள் பயக்கும். பதி என்பது வடசொல்லன்று. வழங்கிடுவோர், வடவரும் அவர் அடியார்களும்.
எஞ்சிய எல்லாம் எஞ்சிய இலவே.
(தொல்காப்பியம் மொழிமரபு - சச)
என்ற நூற்பாவின் உரையில் பதி என்பது குறிக்கப்பட்டது காண்க. அது வடசொல்லாயின் குறியார் என்க. எனவே பதி தூய தமிழ்ச் சொல்லே.
கலை
இதுவும் தூய தமிழ்ச்சொல்லே. மேற்படி நூற்பாவுரையும் இதை வலியுறுத்திற்று. கல்வி, ஆண்மான் என்பன இதன் பொருள்.
பிலம்
பில்கல் என்பதன் முதநிலையாகிய பில் என்பது நீர் பொசியும் இடம். அதாவது கீழ் அறையைக் குறிக்கும் - பில் அம் பெற்று பிலம் ஆயிற்று. இது தூய தமிழ்ச் சொல்.
குலம்
இது குலை என்பதன் திரிபு. இதை வடவர் எடுத்தாண்டதில் நமக்கு வருத்தமில்லை. அது வடசொல்லே என்று புளுகும்போது தான் எரிச்சல் உண்டாகிறது. இது தூய தமிழ்ச்சொல் என்பதற்கு முன் காட்டிய தொல்காப்பிய நூற்பாவின் உரையே சான்றாகும்.
(குயில், குரல்: 1, இசை: 9, 29.7.1958)
-உண்மை,1-15.10.15
காரணம்
இது தமிழ்ச் சொற்றொடர்.
கருமை+அணம் = காரணம் ஆயிற்று. மையீறு போதலும் ருகரத்தின் மேலுள்ள உகரம் போதலும், முதல் நீளலும் தமிழிலக்கணச் சட்டம்.
எனவே, கார்+அணம் = காரணம் ஆயிற்று. கருமையின் வேற்றுமையான் உற்ற கார் என்பதற்குப் பொருள் முதன்மை. அணம் அணுகுவது ----அஃதாவது நெருங்குவது, முதன்மையை நெருங்குவது என்ற பொருளில் அமைந்ததாகும்.
காரியம்
கார்+இயம் = காரியம். கார் முதன்மை. இயன்றது என்பது இயம் என வேறுபடுத்தும் காரணத்தால் இயன்றது காரியம் என்க. காரணமே காரியம் என்னும் கபிலர் எண்ணூலையும் எண்ணுக.

காரியம் தூயதமிழ்ச் சொற்றொடர். காரணம் காரியம் இரண்டையும் வட மொழியாளர்கள் எடுத்தாண்டார்கள் வேற்றுமையின்மையால்.
கடிகை
இது கடிகா என்ற வடசொல்லின் சிதைவாம். இவ்வாறு கூறுவார் பார்ப்பனரும் ஏய்ப்பனரும். கடி, என்பதற்கு எத்தனை பொருள்கள் உண்டு?
கடி---வியப்பு, அளர், அச்சம், அழகு, இடுப்பு, இரப்போர்கலம், இன்பம், சினம், ஐயம், ஒளிக்கை ஒளி, ஓசை கடிதமும், கரிப்பு, திருமணம், களிப்பு. கால நுட்பம், காலம், காவல், கூர்மை, கைப்பற்றல், சீறல், சிறுகொடி, விரைவு, ஓசை, பூங்கா, நீக்கம், பேய், பிணம், புணர்ப்பு, புதுமை, பொழுது, மிகுதி, மணம், விளக்கம்.
இங்குக் கடி என்பது கால நுட்பத்துக்கானது. கடி வினைத்தன்மை யடைந்து தொழிற்பெயர் இறுதி நிலை பெற்றது. நாழிகை என்பது பொருள். எனவே கடிகை வடசொல் என்பது கரடி. அது தூய தமிழ்ச் சொல்லே.
கடிகாரம்
இது கடிகார யந்திரம் என்பதின் திரிபென்று கதைப்பர். கடிகை ஆர்வது _- காட்டுவது - ஈற்று திரிவுற்றது. எனவே கடிகாரம் தூய தமிழ்ச் சொல்லே.
கற்பனை
இது கல்பனா என்ற வடசொல்லின் சிதைவு என்பார் வடவர். ஆம் என்பார் தமிழறியாத தமிழர் சிலர்.
கற்பனை கல்பனாவின் சிதைவு என்பவர், கற்பனையை வில்பனா என்பதன் சிதைவு என்பார் போலும். நகைப்புக் கிடமாகிறது.
கல்+பு = கற்பு. அனைத்துமோர் முதல்சிலை என்க. இது கற்பனையின் முதனிலையாயிற்று.
கற்பு+அன்+ஐ = கற்பனை என்க. அன் சாரியை, தொழிற்பெயர் இறுதி நிலை.
முதனிலையாகிய கற்பு என்பதன் பொருள் தோண்டுதல் என்பது. ஆகுபெயராய் தோண்டுதலின் பயன், எண்ணத்தின் ஊற்று, புதுப்புது கருத்துக்கள் என்க. எனவே கற்பனை தூய தமிழ்ச்சொல் என்பது வெட்ட வெளிச்சம்.
கல்பனா என்பதொரு சொல் வடமொழியில் இருக்கலாம். அது தமிழில் கற்பனை என்றுதான் திரிக்கப்படும். திரிக்கப்படவே, நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? வடவர் சொல்லும் கற்பனைக்கும், தமிழர் சொல்லும் கற்பனைக்கும் தொடர்பில்லை என்பதாகும்.
அன்றித் தமிழின் கற்பனையையே வடவர் எடுத்தாண்டார்கள். எனினும் பொருந்துவதே. இந்த உலகில் சமஸ்கிருதம். தமிழுக்குப் பிந்தியது என்பதும், சமஸ்கிருதக்காரர் தமிழுக்குப் பிந்திய நாகரிகம் உடையவர்கள் என்பதும் மறத்தற்குரியன அல்ல.
வடிவு
இது அம் சாரியை பெற்று வடிவம் என்றும் வரும். இச்சொல் வடசொல் என்று ஏமாற்றுவர், ஏமாறற்க.
வார்ப்படக்காரர் தொழிலிடத்தினின்று தோன்றிய பெயர்களில் ஒன்று. வடி+வு = வடிவு. தொழிற்பெயர். தொழிலாகுபெயராக வடிவு செய்தலால் வரும் வடிவத்துக் காயிற்று. செம்பு முதலியவைகளைக் காய்ச்சி அச்சில் கசடு நீங்க வடித்தூற்றலின் ஆகும் வடிவம் எனக் காரணப் பெயராதல் காண்க. வார்ப்படம் என்பதும் இதே பொருளில் அமைந்த காரணப் பெயரே என ஒப்பு நோக்கித் தெளிக!
(குயில்: குரல்:  1, இசை 14, 02.09.58,  இசை 15, 09-09-58)
-உண்மை,16-31.10.15
படிவு
இதுவும் அம் சாரியை பெற்றுப் படிவம் எனவரும். இதையும் வடசொல் எனக் கதைப்பாரும் உளர்.
படிவு, படிதல் என்ற பொருளுடைய தொழிற்பெயரே இதுவும், அச்சுக்குப் பெயர். அச்சிற் படிவு செய்யப் பெற்ற வடிவப் பொருளுக்கு ஆகுபெயர்.
படிமம்--வடிவம், படிவம் ஆயினவெனக் கூறுவர் ஏமாற்றுக்காரர்கள். அதற்கு ஒத்து ஊதுவார்கள் மீனாக்கி அழகு, சேது ஆகிய பிள்ளைகள். படிவு தூய தமிழ்க் காரணப் பெயர் என முடிக்க.
(குயில்: குரல்: 1, இசை: 15, 9-9-58)
தாரம்
தாரம் அரும்பண்டம், வெள்ளி, அதன் ஒளி சேரும் ஏழ் நரம்பில் ஓர் நரம்பும் செப்பும் என்பது திவாகரம். இதில் தாரம் என்பதற்கு நான்கு பொருள் காணப்படுவதைக் காண்க.
வல்லிசைப் பெயரும், வாழ்க்கைத் துணைவியும், யாழின் நரம்பும், அரும்பண்டமும், தாராவும், நாவும், தாரம் என்பன. (வெண்தாதும்) என்பது பிங்கலந்தை.
இதில் தாரம் என்பதற்கு, ஏழு பொருள் காணப்படுவதைக் காண்க.
தாரம், வல்லிசை, நா, வெள்ளி,
தலைவி, ஓரிசை, கண், என்பன.
என்பது சூடாமணி நிகண்டு. இதில் கண் என்பதும் குறிக்கப்படுவதைக் காண்க.!
தாரம் என்ற சொல் வடமொழியே என்று சொல்லுகின்றவர்கள் அதற்கு எடுத்துக் காட்டாக என்ன சொல்லுகின்றார்கள் எனில், தாரம் ஏழிசையின் ஒன்று என்ற பொருள் வட மொழியில்தான் உண்டு என்கிறார்கள். அரும்பண்டம் முதலிய பொருள் தரும் போது அது தமிழ்ச் சொல்லே என்பதை அவர்களே ஒத்துக் கொள்கின்றார்கள்.
நாம் கேட்கின்றோம், ஏழிசையில் ஒன்றைக் குறிக்கின்ற போது அது வடசொல் என்றால், ஏழிசை வடவர்க்கு எப்போது எங்கிருந்து கிடைத்தது? -- ஏழிசை தமிழரிடமிருந்து வடவர் எடுத்தனர் என்பதை மறுக்கக் கூடியதா? இல்லவே இல்லை. ஆதலின் ஏழிசையின் ஒன்றுக்கு அமைந்த தாரம் என்பதையும் வடவர் தமிழினின்றே எடுத்தனர் அல்லவோ?
இனி, அரும்பண்டம், ஏழிசையின் ஒன்று ஆகிய இரு பொருளிலும் வரும் தாரம் செந்தமிழ்ச் செல்வமே. ஆனால் நிகண்ட, பிங்கலம் முதலியவற்றில் பிற பொருளில் வரும் தாரம் என்ன மொழி? எனில், கூறுவோம்.
தாரம் என்பதை வடவர், வல்லோசையானும் மெல்லோசை யானும் சொல்லிக் கொண்டனர். ஆயினும் முதல் தாரம் என்பது தான் அது ஆகுபெயர் முதலிய சார்புப் பொருள் பெற்று வந்திருக்கலாம். அவையும் தமிழரால் வந்தனவே என்று உணர்தல் வேண்டும்.
எனவே, தாரம் என்பது தூய தமிழ்ச் சொல் என முடிக்க. இனியும் இசை இலக்கணம் தமிழினின்றே  வடவர் எடுத்தார்கள் என்பதற்குச் சில எடுத்துக் காட்டுகள் வருமாறு:
க. இன்றைக்கு ஆயிரத்து நானூறு யாண்டின் முன் வடமொழியில் இசை நூல் இயற்றிய பரதரும், அறுநூற்றெண்பது யாண்டின் முன் இசைநூல் இயற்றிய சாரங்க தேவரும், தமிழிசையிலிருந்து எடுத்தே வடமொழிக் கண் இசை வகுக்கப்பட்டது எனக் கூறினார் என்பர், இவ்வாராய்ச்சி வல்ல விருதைச் சிவஞான யோகிகள்.
உ. இசைத் தமிழிலிருந்தே எல்லா இசைவகைகளும் வடமொழிக்கண் சென்ற உண்மை ஆபிரகாம் பண்டிதர் மிக விரிவாக இயற்றி வெளியிட்ட கருணாமிர்த சாகரம் என்னும் இசைத் தமிழ் நூலில் நன்கு விளக்கிக் காட்டப்பட்டிருக்கின்றது.
(குயில்: குரல்: 1, இசை: 16, 16-9-58)
-உண்மை,1-15.11.15

பரதர், பாரதர், பாரதம், பரதன்
இந் நான்கு சொற்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இவை தூய தமிழ்ச் சொற்களே யாதலால் இங்கு விரித்துரைக்கப்படும். தொல்காப்பியம் அகத்திணை இயல் 20ஆம் நூற்பாவின் உரையின் பகுதி வருமாறு;-- நால்வகை நிலத்துக்கும் மருவிய குலப் பெயர் ஆவன. முல்லைக்குக் கோவலர், இடையர், ஆயர், பொதுவர், இடைத்தியர், கோவித்தியர், ஆயத்தியர், பொதுவியர்.
நெய்தற்கு நுளையர், திமிலர், பரதவர், நுளைத்தியர், பரத்தியர்.
இதனால் நாம் அறிய ண்டுவது என்னவெனில் பரதவர் அஃதாவது பரதர் என்ற பெயர் தொல்காப்பிய காலத்திலேயே, தமிழில் வழங்கியது என்பதாகும்.
மீனெறி பரதவர் மடமகள்
மானேர் நோக்கம் காணா ஊங்கே
என்ற நற்றிணையிலும் காண்க.
இதில் வரும் பரதவர்தானா பரதவர் எனின் ஆம் என்க. பரதவர் என்பதன் பெண்பால் பரத்தியர் என வருதலை நோக்குக.
இனி, பரதர் என்று தமிழ் நூலில் வரும் பெயர்தான் பரதர்---பரதன், பாரதர், பாரதம் என வந்ததா எனின் ஆம் ஆம் என்று கூறி, மறைமலையடிகளார் சொல்லியருளிய விளக்கத்தையும் இங்கு சுருக்கி எழுதுவோம்.
தமிழ் மண்டலம் ஐந்தும் தாவிய ஞானம் என்ற திருமந்திரச் செய்யுள்--பஞ்ச திராவிடராகிய தமிழரின் மேம்பாட்டைக் குறிக்கின்றது. இத் தமிழர் தாம், முதன்முதலில் கடவுளைத் தீ வடிவில் வைத்து வழிபடலாயினர்.
இவ் வைவகைத் தமிழ் மரபினர்க்கு தலைவராயிருந்து அந்நாளில், அரசு புரிந்த பரதன் என்னும் தமிழ் வேந்தன் வழியில் வந்தவர் பரதர்கள் என்று சொல்லப்பட்டனர்.
பாரத மரபினரான தேவசிரவர், தேவபரதர் என்னும் இருவரும் பயன்மிகுந்த தீயை மிக்க வலிமையோடும் தேய்த்து உயிர்ப்பித்தனர். (இருக்கு 3--23--2)
ஓ நெருப்பே, வலிய படைவீரர்களுடைய பழைய பரதர்கள் தமக்குப் பேரின்பம் வேண்டி நின்னையே இரந்தனர். (இருக்கு 16-6-4)
இவ்வாறு இருக்கு மறையில் பல இடத்தில் காணப்படுகின்றன. இதனால் தமிழ் மக்கட்குத் தலைவரான பரதர்களே முதன் முதலில் தீ யெழுப்பினர், தீயின் பயன் கண்டனர். தீயே கடவுள் என்று வழிபட்டனர் என்று அறிய வேண்டும். தீயைப் பரதன் என்று சொல்லுகிறது இருக்கு மறை இரண்டாம் மண்டிலத்து ஏழாம் பதிகம்!
அன்றியும் செந்நிறக் கடவுள் எனக் காரணப் பெயரான உருத்திரன் என்ற தமிழ் பெயருடைய கடவுளுக்கும், பரதன் என்று பெயரிட்டழைக்கிறது, மேற்படி இரண்டாம் மண்டிலத்து முப்பத்தாறாம் பதிகம். தென்னாட்டவர் கண்டறிந்தது தீக்கடவுள் என்பதுனாலன்றோ வடநூல்களில் நெருப்புக்குத் தென்றிசையங்கி தக்ஷிணாக்கிளி என்று சொல்லப்படுகிறது. இங்ஙனமாக இறைவனை நெருப்பொளியில் வைத்து வழிபடும் முறையை உணர்ந்த பரதர், பண்டை நாளில், இந்த நாவலந்தீவு முழுதும் ஒருங்கு செங்கோல் ஓச்சினராதலின், அவர் பெயரால் அது (இந்தியா) பரத கண்டம் எனப் பெயர் பெறுவதாயிற்று. இப் பரதர்கள் முதன் முதல் கடல் சார்ந்த நெய்தல் நிலத்தின் கண் இருந்து, அதன் கண் பட்டினங்கள் அமைத்து நாகரிகத்திற் சிறந்து வாழ்ந்தாராதலின் அந் நெய்தல் நிலத்து மக்கள் பரதர், பரத்தியர் எனப் பெயர் பெறலாயினர்.
வடக்கிருந்து வந்து இந்திய நாட்டின் வடமேற்கு எல்லையில் குடியேறிய ஆரியர், நாகரிகம் இல்லாதவராய் உயிர்க்கொலை புரிந்த வரைதுறையின்றி ஊனுண்டும் கட்குடித்தும் மகளிர்ப் புணர்ந்தும் தமிழர் அருவருக்குமாறு ஒழுகினமையால் அவர்களை இந்நாட்டில் நுழையாதபடி அக்காலத்தில், எதிர்த்து நிறுத்தினர் என்று இருக்கு மூன்றாம் மண்டிலத்து 33ம் பதிகம்    கூறுகிறது.
இன்னும் இதை விவரிக்க வேண்டாம். இங்கு கூறியவற்றால் அறியலானவை எவை?
ஆரியர் வருமுன்னரே தமிழர் நல்ல நாகரிகத்துடன் இந் நாவலந் தீவில் எங்கணும் பரவி இருந்தனர். அக்கால், தமிழே இருந்தது. அக்கால தமிழ்ப் பெயர்களே எப்பொருட்கும் அமைந்திருந்தன. இன்றும் பண்டைய நூல்களில் காணப்படும் பரதர், என்பதே அக்காலத்தில் பரதன், பாரதன், பாரதம், பரதகண்டம் என விரிந்தது. பரதன், பரதவர் முதலிய அனைத்தும் தூய தமிழ்ச் சொற்களே என்பனவாம்.
பாரதகண்டம் என்பதில் கண்டம் தமிழா என ஐயுற வேண்டாம். கண்டம் தூய தமிழ்ச் சொல்லே. அஃதேயுமன்றி காண்டம் என்பதும் தூய தமிழ்ச் சொல்லே. கண்டம், காண்டம் என்பன பிரிவு என்பது. கண்டம் நிலப்பிரிவு, காண்டம் நூற்பிரிவு என்க.
(குயில்: குரல்: 1, இசை: 18, 30----09-19--58)
-உண்மை,16-30.11.15
ஓரை
இது தூய தமிழ்ச் சொல். இராசிகளின் பொதுப் பெயர். ஆனால், வடமொழி நூலுள்ளும், கிரேக்க மொழியுள்ளும் காணப்படுதலின், வடமொழியே என்று புகலுவர். அதற்குக் காரணம் இரண்டு. தமிழரை ஏமாற்றி விடலாம் என்று அவர்கள் நினைப்பதொன்று. ஆராய்ச்சியில்லாமை மற்றொன்று.
தொல்காப்பியத்துக் களவியல் 44_ஆம் நூற்பாவாகிய
மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும்
என்பதன் கண் காணப்படும் ஓரை என்னும் சொல்லைக் கிரேக்க மொழி எனக் கொண்டு, அவ்வாற்றால் தொல்காப்பிய காலத்தையே கி.மு. மூன்றாம் நூற்றாண்டென்று கூறி மகிழ்ந்து கொள்ளும் பகைவரும் உண்டு. இதையே சிலர் வடசொல் என்று கூறிக் கொக்கரிப்பர். ஓரை என்னும் இது மட்டுமன்று. ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்களையும் வடசொல் என்றே ஏமாற்றித் திரிவார்கள், அவர்கள் யார்? தமிழ்மொழி கொண்டு தம் மொழி பெருக்கிய மொழிவெறியர். தொல்காப்பயித்துக்கு முற்பட்ட காலத்திலேயே ஓரை என்னும் சொல் வடமொழியிலேனும் கிரேக்க மொழியிலேனும் வழங்கப்பட்டிருக்குமாயின் அது அப் பிறமொழிச் சொல் எனலாம். காட்டட்டுமே!
மறைமலையடிளார் கூறுகின்றார்: ஆராய்ந்த மட்டில் கி.பி. மூன்றாம் நூற்றாண்டாதலால் அதற்கு முற்பட்ட காலத்திலாதல் இயற்றப்பட்ட கிரேக்க ஆரிய நூற்களில் ஓரை என்னும் சொல் வழங்குவதைக் காணோம். கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இருந்தவராகமிகிரரால், கிரேக்கரின் வானநூல் ஆராய்ச்சியைத் தழுவி ஹோரா சாத்திரம் என்னும் ஒரு நூல் வடமொழியில் எழுதப்பட்டிருக்கிறது.
அதைக்கொண்டு ஹோரா என்னும் சொல் கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்குச் சிறிது முற்பட்ட காலத்திய கிரேக்க மொழியில் வழங்கப்படாமை மட்டும் அறியப்படும்.
கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கிரேக்க ஆசிரியரான ஹிப்பார்க்கஸ் காலத்திலேதான், கிரேக்கரின், வான் நூலாராய்ச்சி ஓர் ஒழுங்குபெறத் தொடங்கியது. அதன் பின் அது தாலமி என்பவரால் முற்றுப் பெற்றாயிற்று.
(குயில்: குரல்: 1, இசை: 17, 23.09.1958)
வித்தகம்
இது தூய தமிழ்ச் சொற்றொடர். இரு சொற்களால் அமைந்தது. வித்து+அகம்.
வித்தகம் என்பது பழந்தமிழ் நூற்களில் பல்லிடத்து எடுத்தாளப்பட்டிருக்கிறது.
நத்தம் போற் கேடும், உளதாகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது.    (குறள்)
வித்தகப் பெண்பிள்ளை நங்காய்.                        (ஔவையார்)
வித்து எனில் முதன்மை: காரணம், அகம் எனில் மனம். எனவே வித்தகம் (வெற்றிக்குக்) காரணமாகிய மனம் ஆற்றல்! அவ்வாற்றலும் தோல்வியடையாத ஆற்றல் ஆகும். மேற்படி குறளில் வரும் வித்தகர் என்பதற்கு பரிமேலழகரும் சதுரப்பாடு உடையவர் என்று பொருள் கூறினார்.
சதுரப்பாடு _ -ஆற்றல்.
வித்தகம் என்னும் இது நாளடைவில் வித்துக்கும் வழங்கலாயிற்று. அதன் அருமை காட்ட உழவர்கள் வித்து என்ற சொல்லை வித்தகம் என்றே சொல்லுவதுண்டு. மணிமேகலையில் பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை 227ஆம் அடி நெல்வித் தகத்துள் நெல்முனை தோற்றம் என்பது.
வித்தகம் தமிழ்ச் சொற்றெடர் என்பதில் ஐயப்பாடு அடையக் காரணமே இல்லையாகவும், தமிழ் மாணவர் நலம் கருதி நாம் இதற்கு விளக்கம் தர முன் வந்தோம், இது வடசொல் என்று ஒரு நண்பர் சொன்னதால்.
(குயில்: குரல்: 1, இசை: 20, 14.10.1958)
- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
-உண்மை,1-16.12.15
தாசர்
தாஸ என்று வடமொழியில் சொல்லப்-படினும் இது வடமொழியன்று. தாஹி என்று பார்சி மொழியில் வழங்குவதால் இது பார்சி மொழியாகிவிட்டது.
தாதர் என்ற தூய தமிழ்ச் சொல்லையே ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முன்-அதாவது ஆரியர் நாவலந் தீவில் நுழைவதற்கு முன் -வடவராலும், பார்சிக்காரராலும் தாஸ, தாஹி என எடுத்தாளப்பட்டது என அறிதல் வேண்டும்.
தாத்தல்_-கொடுத்தல், இது தாத்து என்று இன்றும் வழங்குகிறது. அன்றியும் தாதம் என்றும் கொடுத்தல் என்ற பொருளில் வழங்குகிறது. இதன் முதனிலை தா என்பதைக் காண்க தா-_கொடு, தாத்தல், தாத்து, தாதம், கொடுத்தல் கொடை என்க.
எனில், தாசர் என்ற சொல்லுக்கு, கொடையாளிகள், வள்ளல்கள் என்று பொருளா என்று கேட்போரை நாம் வேறென்ன தான் என்று கேட்கின்றோம்.
தாசர் என்றால் அடிமைகள் என்பதல்லவா பொருள் எனில், அது பின்னாளில் என்றும் எடுத்துக்காட்ட நம்மால் முடியும். ஏமாந்த காலத்தில் ஏற்றங் கொண்டவர்கள் தமிழ்ச் சொல் ஒவ்வொன்றையுமே தலைகீழாக்கி வைத்தார்கள். அவர்களின் ஏமாற்று_--விழிப்புற்ற _ --ஆராய்ச்சிமிக்க இக்காலத்திலும் செல்லுமோ!
ஆரியர்_-மிலேச்சர் என்பது பிங்கலந்தை. அதை அநாரியர்_-மிலேச்சர் என்று இதே நூற்றாண்டில் உ.வே. சாமிநாத அய்யர் முயற்சியால் அகரவரிசை நூல் ஒன்றும் வந்திருப்பதை நாம் கண்டோம் அல்லவா? இருபது ஆண்டுகளின் நிலையே இப்படி-யானால், ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் நிலைமை எவ்வாறு தலைகீழாக்கப் பட்டிருக்கும்?
பாலிமொழி ஆராய்ச்சியில் உலகப் புகழ் வாய்ந்த தருமானந்த கோசம்பி தம் “பகவான் புத்தர்” என்ற நூலில் அடியில் வருமாறு கூறுகின்றார்:
ஆரியர் வருமுன்பு சிந்து பஞ்சாப் பெருமாவட்டங்களில் தாசர்களின் ஆட்சி நிலவியிருந்தது. இப்போதுதான் தாசன் என்ற சொல்லுக்கு அடிமை என்பது பொருள் ஆக்கி வைத்திருக்கின்றார்கள். ஆனால், ஆரிய மறையில் தாச, தாஸ் என்ற இரண்டு வினைப் பகுதிகளுக்கு கொடுத்தல் என்ற பொருளே அமைந்திருக்கிறது. அண்மையில் வெளிவந்த அகரவரிசை நூற்களிலும் கொடுத்தல் என்ற பொருளிலேயே தாஸ, தாச் என்ற சொற்கள் அமைந்துள்ளன. எனவே, தாசன் என்ற சொல்லுக்கு முதலில் உண்டான பொருள் கொடைவள்ளல், நாவலந்தீவின் உயர்குடித் தோன்றல்! என்று யாகும். ஆவெஸ்தாவில் பர்வதின்யஸ்து என்ற வட்டாரத்தில் தாச நாட்டு பிதிரர்கள் வழிபாடு பற்றி செய்தி வருகிறது. அதில் அவர்களை “தாஹி” என்று  குறித்துள்ளார்கள்.
தாஸ, தாச் என்ற தமிழ்ச் சொற்களை ஆரிய மறை எடுத்தாண்டதும் இங்கு நோக்கத்தக்கது. தாசன் -தமிழ்ச் சொல்லே என அறுதியிட்டுக் கூறுக!
(குயில்: குரல்: 1, இசை: 19, 07-10-1958)
மளிகை
இது தமிழ்ச் சொல்லா? விளக்கித் தருக என ஒரு அன்பர் கேட்கின்றார். மலிகை என்ற தூய தமிழ்ச் சொல் மளிகை என்று மருவிற்று. ஆதலின் தமிழ்ச் சொல்லே, அன்றியும் ஒரு தமிழ்ச்சொல் சிறிது வேறுபாடு ஆயினும் அதன் தூய்மை கெடாது என்ற உண்மையை மனதிற் கொள்க! ஆகவே மளிகை என்பது தமிழ்ச்சொல் என்று மட்டும் சொல்லி அமையாமல், தூய தமிழ்ச் சொல் என்றே சொல்லுக!
மலிகை_நிறைதல். பெருகல் இத்தொழிற் பெயர் மலிதல் எனத் தல் இறுதிநிலை பெற்று வரும்.
இனி மளிகை எனில் பல்பொருள் நிறைதல் என்க. மளிகைக் கடை எனின் பல்பொருள் நிறைந்த விற்பனை இல்லம்.
(குயில்: குரல்: 1, இசை: 21, 21-10-1958)
-உண்மை,16-31.12.15

புதன், 9 டிசம்பர், 2015

புரட்சிக்கவிஞரின் வள்ளுவர் உள்ளம்!

Image result for புரட்சிக் கவிஞர்
புரட்சிக்கவிஞர் அவர்கள் எழுதிய திருக்குறள் உரை யான வள்ளுவர் உள்ளம் என்னும் நூலின் முன்முகம் பகுதியில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
தமிழர்கள் ஆண்ட நாளில் அரசியல் ஆறு துறை யாய் வகுத்து ஆட்சி நடத்தப்பட்டது. அவை உழவு, தொழில், வணிகம், கல்வி, தச்சு, வரைவு என்பன.
உழவும், தொழில் என்னும் துறையில் அடங்கு மேனும், சிறப்புக் கருதி, உழவுத் தொழிலைத் தனித் துறையாக வைத்துக் கருத்தூன்றிக் காத்து வந்தார்கள். உழவும் தச்சும் (சிற்பம்) நீங்கிய பிற வேலை அனைத்தும் தொழிற்துறையில் அடங்கியவை.
எழுத்து, சொல், பொருள் என்பனவும் கோள் நிலையறிதல், மருத்துவம் முதலியனவும் போர்ப் பயிற்சியும் கல்வி என்ற துறையில் அடங்கும்.
வரைவு என்னும் துறையாவது யாது? எல்லைப் பிரிவை உறுதி செய்தல், கோட்டை கட்டுதல் முதல் குளம் வெட்டுதல் வரைக்குமுள்ள இடங்களை வரையறுத்தலும் அளவு செய்தலும் முதலியவை.
இந்த ஆறு துறைக்கும் அக்காலத்தில் ஆறு அமைச்சர்களை அமைத்துத் திறம்பட நாட்டைக் காத்து வந்தான் தமிழரசன்!
ஆறு துறையே அன்றிப் போர்த்துறை ஒன்று தனியே இருந்து வந்ததோ எனில் அவ்வாறில்லை. கல்வி என்னும் துறையில் போர்ப் பயிற்சியும் அடங்கியது என்று முன்னமே சொன்னேன். ஒரு துறைக்கு ஓர் அமைச்சனே அன்றிப் பல அமைச்சரை அமைத்தலும் உண்டு.
இந்த ஆறு துறையின் ஆறு அமைச்சர்களுக்கும் அலுவலகம் ஒன்றே; அது இந்நாளைய செக்ரடேரியேட் போன்றது. அந்த அலுவலகத்தில் கருமத் தலைவன் ஒருவனிருப்பான். அவன் எல்லாத் துறையிலும் வல்லவன். அவனுடைய அலுவலற் பெயர் வள்ளுவன் என்பது.
வள்ளுவன் சாக்கை எனும் பெயர் மன்னற்கு
உள்படு கருமத் தலைவற்கு ஒன்றும்
என்னும் பிங்கலந்தைச் செய்யுளும் இங்குக் கருதத் தக்கது. உள்படு கருமத் தலைமை என்பது வள்ளுவன் என்ற அலுவற் பெயரையே குறித்து நின்றது காண்க.
எனவே, வள்ளுவர் என்பது ஒரு ஜாதி அல்ல. வள்ளு வன் என்பது ஒரு அலுவல். ஒரு அமைச்சர். அந்த ஆறு அமைச்சர்களுக்கும் வழிகாட்டக்கூடிய ஒரு அறிவார்ந்த பேரறிஞன். எனவே, அப்படிப்பட்ட அறிஞன் என்ற கருத்தை புரட்சிக்கவிஞர் அவர்கள் இங்கே எடுத்துச் சொல்லி, இன்றைக்கு அதன்மூலமாக ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டது. இல்லையென்றால், பழைய கதைகள்தான் நிற்கும். இந்த ஜாதிக்குப் பிறந்தவர், அந்த மதத்திற்கு உரியவர் என்றெல்லாம் சொல்லி வள்ளுவரைக்கூட ஒரு சிமிழுக்குள், ஒரு எல்லைக்குள் அடக்கவேண்டும் என்று சொல்லி, கொச்சைப்படுத்திய காலத்தை மாற்றிய பெருமை இந்த இயக்கத்தைச் சார்ந்தது.
ஆகவே, பெரியார் செய்த பெரும்பணி, அதைப் பெரியார் சமூக சேவை மன்றம் இந்த சிங்கப்பூர் நாட்டிற்குக் கொண்டு வந்து, நல்ல அறிஞர்கள் மத்தியில், ஆற்றல் மிகு தலைவர்களை அழைத்து, சிந்தனையாளர்களை அழைத்து இந்த விழாவை நடத்தியது என்பது மிகப்பெருமை!
-ஆசிரியர் கி.வீரமணி
-விடுதலை,22.11.15

ஞாயிறு, 6 டிசம்பர், 2015

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? - 1

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?
-புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
தமிழ் அழிப்பாரின் எண்ணத்துக்கு வலிமை சேர்த்துவிடக் கூடும் என்று கருதினார் புரட்சிக்கவிஞர். தம் கருத்தை வலியுறுத்தி ஆராய்ச்சித் தொடர் ஒன்றினை எழுதினார்;  வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? எனும் கட்டுரைத் தொடர், தமிழ்ப் பகைவர்களுக்குச் சாட்டையடி கொடுத்தது: தமிழ் ஆர்வலர்களுக்கெல்லாம் புது வழி காட்டியது; தெளிவூட்டியது.
- சு.மன்னர்மன்னன்
காட்சி
தமிழ்ச் சொற்களையெல்லாம் வடசொற்கள் என்று ஆக்குவதில் பார்ப்பனர்க்குத் தனி ஆசை. அவ்வாறு செய்வதால் இந்நாட்டுக்கும் அவர்கட்கும் இல்லாத தொடர்பை உண்டு-பண்ணிக் கொள்கிறார்கள். ஆனால் இந்தத் தீய முயற்சியை அறிவுடைய தமிழர்களும், நடுநிலை-யுடைய உலகமும் அறிந்து நகையாடக்கூடுமே யென்பதை அவர்கள் கருதுவதேயில்லை.
தூங்கிக் கொண்டிருந்தார்கள் தமிழர்கள். அது அந்த நாள். பார்ப்பனர் அல்லல் புரிந்தார்கள் அளவில்லாமல்.
விழித்துக் கொண்டார்கள் தமிழர்கள். இது இந்த நாள். அல்லல் புரியாது அடங்கினார்களா எனில் இல்லை.
காட்சி _- தொழிற்பெயர். அதில் காண், முதனிலை, சி_-தொழிற்பெயர், இறுதிநிலை. காண் என்பதின் இறுதியில் உள்ள _ -ண், என்ற மெய்யானது _- சி, என்ற வல்லினம் வந்தால் _- ட் -_ ஆகும் என்பது சட்டம். அதனால்தான் காட்சி என்றாயிற்று. காணல், காண்டல், காட்சி அனைத்தும் ஒரே பொருள் உடையவை. எனவே காட்சி தூய தமிழ்ச் சொல். இதைப் பார்ப்பனர் தம் ஏடுகளில் காக்ஷி என்று போடுவார்கள்.
காட்சியைக் காக்ஷி ஆக்குவதில், தமிழ்ச்-சொல்லை வடசொல் ஆக்குவதில் அவர்-கட்குள்ள ஆசை புரிகிறது அல்லவா? இவ்வாறு காக்ஷி என்று பார்ப்பனர்கள் தம் ஏடுகளில் கொட்டை எழுத்துகளில் வெளியிடுவதால் நம்மவர்களும் அதையே பின்பற்றத் தொடங்கி விடுகிறார்கள்.
பார்ப்பான் சொன்னது பரமசிவன் சொன்னதல்லவா? அதனால்தான் நாம் பொதுவாக நம்மவர்கட்குச் சொல்லுகிறோம்.
தமிழ் தமிழர்க்குத் தாய்! தமிழிற் பிழை செய்வது தாயைக் குறைவுபடுத்துவதாகும். படக் காட்சிக்குரிய அறிவிப்போ, திருமண அழைப்பிதழோ, வாணிக அறிவிப்புப் பலகையோ எழுதும் போது தமிழறிஞர்களைக் கலந்து எழுதுங்கள் என்கிறோம்.
இனி இவ்வாறு தமிழ்ச் சொற்களையெல்லாம் பார்ப்பனர் வடசொற்கள் என்று சொல்லிக்-கொண்டு போகட்டுமே, அதனால் தீமை என்று தமிழரிற் சிலர் எண்ணலாம்.
அவ்வாறு அவர்கள் இந்நாள் வரைக்கும் விட்டு வைத்ததால் என்ன ஆயிற்று தெரியுமா? வடமொழியினின்றுதான் தமிழ் வந்தது, வடவர் நாகரிகத்திலிருந்துதான் தமிழர் நாகரிகம் தோன்றியது என்றெல்லாம் அவர்கள் சொல்வ-தோடு அல்லாமல், உலகையும் அவ்வாறு நம்பவைக்கவும் முயல்கிறார்கள்.
அது மட்டுமா? மேற்சொன்ன காரணங்-களைக் காட்டி, அவர்கள் பிறப்பிலேயே உயர்ந்தவர்கள் என்னும் முடிச்சுமாறித்-தனத்தையும் மெய் என்று நிலைநாட்டி வருகிறார்கள்.
இது வட சொல்லன்று; இன்ன காரணத்தால் இது தமிழ்ச் சொல் என்று விளக்கிவர முடிவு செய்துள்ளோம். தமிழர்கள் ஊன்றிப்படிக்க.
பிப்ரவரி-2015-2

ஊன்றிப் படிக்க: உண்மையை உணருக!
வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
இலக்கணம்
இலக்கம்_-குறி. அஃதாவது, ஒருவன் எந்த இடத்தில் அம்புவிட வேண்டுமோ அந்த இடம் இலக்கம்; எந்த இடத்தை அடைய வேண்டுமோ அந்த இடம் இலக்கம்.
இலக்கம் தூய தமிழ்ச் சொல். எல்லே இலக்கம் என்பது தொல்காப்பிய நூற்பா. இனி அந்த இலக்கம் என்பது, அம் என்ற சாரியை குறைந்து இலக்கு என நிற்பதும், அணம் என்பதைச் சேர்த்துக் கொண்டு இலக்கணம் என நிற்பதுண்டு.
(இலக்கு+அணம்) இலக்கணம் என்றால் அதன் பொருள் எனில், இலக்கை நெருங்குவது என்பதாம். அணம்_அணுகுவது. ஈறு திரிந்த ஆகு பெயர் என்பார்கள் இதை. அண என்று மட்டும் இருந்தால் என்ன பொருள் எனில், நெருங்க என்பது.
இது செய எச்சம். (இலக்கு+அண) இலக்கண என்றால் இலக்கை நெருங்க என்று பொருள். இவ்வாறு சொற்றொடர் ஆட்சியில் வந்துள்ளதா எனில் மணிமேகலையில் 30_-வது பவத்திறம் அறுகெனப்படுவ நோற்றகாதை 18_-வது அடியில், இலக்கணத் தொடரில் (இலக்கு+அண) என வந்துள்ளது காண்க.
இதைத் தொடர்ந்தும், சொற்றகப்பட்டும் இலக்கணத் தொடர்பால் என வந்துள்ளது. இவற்றால் இலக்கணம் என்பது தூய தமிழ்ச் சொற்றொடர் என்பது பெற்றாம். இலக்கணம் என்பது லக்ஷணம் என்ற வடசொல்லினின்று வந்ததாம்.
இவ்வாறு தமிழாராய்ச்சி வல்லவர் என்று பிழையாக நம்மவரால் கருதப்படும் தெ.பொ.மீனாக்ஷி, அழகு, சேது முதலியவர்கள் கூட எழுதியும் பேசியும் வந்துள்ளார்கள்.
இவர்கள் பார்ப்பனரின் கூலிக்காக, வடமொழியினின்று வந்தது என்று பிதற்றும் ஆட்கள் என்பதையும், ஆங்கிலம் படித்து பிழைக்கத் தெரியாதென்று, தமிழ் தெரியும் என்றும் தமிழர்களை ஏமாற்றித் திரிகின்றனர் என்பதையும் தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டும். (குயில், 8.-6.-1958)
நேயம்
இது நேசம் என்னும் வடசொல் சிதைவாம். சீவக சிந்தாமணியில் 3049_-ம் செய்யுள், நெய் போதி நெஞ்சு என வந்துள்ளதும், அது நேயம் என்பதையே குறிப்பதும் அறியாதார் பார்ப்பன, பார்ப்பன அடிவருடிகளும் கூறுவதைக் கொண்டு, நேயம் வடசொற் சிதைவு என்று கூறித் திரிகின்றார்கள்.
நெய் என்ற சொல்லினடியாகப் பண்புப் பெயர். ஆதலின் தூய தமிழ் என அறிக.
மீன்
இது கூட மீனம்  என்று வடசொற் சிதைவாம். மின்னல் என்பது அல் இறுதி நிலைபெற்ற தொழிற் பெயர். அது அவ்விகுதி நிலை கெட்டு மின் என நிற்பதுண்டு. அந்நிலையில் அதை முதனிலை தொழிற்பெயர் என்பார்கள்.
அம் முதனிலையாகிய மின் என்பதும் முதல் நீண்டு மீன் என்று ஆகும். அந்நிலையில் அதை முதனிலை திரிந்த தொழிற்பெயர் என்பார்கள்.
எனவே, மீன் என்பதும் முதனிலை தொழிற்பெயர். அது தொழிலாகு பெயர் என்னும் கோளைக் குறிக்கும். எனவே, மீன் தூய தமிழ்ச் சொல் பெயர்.
கோள் மின்னும் மீன் சூழ் குளிர்மாமதித் தோற்றம் என்ற சான்றோர் செய்யுளையும் நோக்குக. மின்னுவது மீன் எனக் காரணப் பெயர் என்று உணர்க.
குயில் 28. 6. 1958
மார்ச்-2015

ஊன்றிப் படிக்க : உண்மையை உணருக! 

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?
- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
ஆசை
இது ஆசா என்ற வடசொல்லின் திரிபு என்று கதைப்பர் பார்ப்பனரும், அவர் வால்பிடிக்கும் தமிழர் சிலரும்.
மனம் தன்னிலை நிற்றல் பொருள் அடையத் தக்க நிலை என்பர் அறிந்தோர். அஃதன்றி அம் மனம் வெளிப் பொருள் நோக்கி அசைதல் என்பது துன்பம் பயப்பது அன்றோ? எனவே அசைதல், அல்லது அசைவு என்பது மனத்தின் அசைவாயிற்று. அசைதல் தொழிற் பெயர். அசை முதனிலைத் தொழிற் பெயர். ஆசை முதனிலை திரிந்த தொழிற் பெயர். ஆசை தூய தமிழ்ச் சொல் என்க. மனம் பிறவற்றில் செல்லுதல் என்பது அதன் பொருள். உதவி என்பதற்கு ஒத்தாசை என்றது இழிவழக்காக வழங்கி வருகிறது. இந்த ஒத்தாசை என்பதில் அசை என்பதுதான் ஆசை என நீண்டது என அறிதல் வேண்டும். அசைதல் என்பதற்கு ஆசை என ஆனதற்குப் பேச்சு வழக்கில் வந்துள்ள இதையும் கண்டு நினைவுறுத்தினோம்.
பூசை
இது பூசா என்ற வடசொல்லின் சிதைவு என்று ஏமாற்றுவார் ஏமாற்றுவர்.
பூசு+ஐ என்பன தொழிற் பெயர் முதனிலையும் இறுதி நிலையுமாகும். பூசுதல் என்பதுதானே இது?
பூசுதல் என்றால் தூய்மை செய்தல், கழுவுதல் என்பது பொருள். இவ்வழக்கு இன்றும் திருநெல்வேலிப் பாங்கில் இருக்கக் காணலாம். இனிப் பூசு என்ற முதனிலை அன் சாரியை பெற்றுப் பூசனை என்றும் வரும். எனவே, பூசை, பூசனை தூய தமிழ்ச் சொற்கள் என முடிக்க.
நாடகம்
இது தூய தமிழ்ச் சொற்றொடர், வடமொழியன்று. நாடுகின்ற அகம் என விரியும் நிகழ்தி வினைத்தொகை நிலைத்தொடர் என்பர் தொல்காப்பியர்.
இனி அகம் என்ற சொல்லுக்கு
அகம், மனம், மனையே, பாவம்
அகவிடம் உள்ளும் ஆமே
என்ற நூற்பாவினால் பொருள் காண்க. நாடு அகம் என்பதில் வரும் அகத்துக்கு புகலிடம் என்று பொருள் கொண்டு (மன) உள்ளம் நாடுகின்ற அகன்ற இடம் எனக் கொள்க. இது நாடகமாகிய இடத்தைக் குறித்தது. இனி, நாடுகின்ற பாவம். அதாவது மெய் எனக் கொண்டு நாடுகின்ற ஆடல்நிலை எனப் பொருள் கொள்க.
எவ்வாறாயினும் நாடகம் என்றது தமிழ்ச் சொற்றொடர் என்பதில் தமிழர்க்கு ஓர் ஐயம் வேண்டா.
- (குயில், 28.6.58)\
ஏப்ரல்-2015-1

ஊன்றிப் படிக்க உண்மையை உணருக!
- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
காவியம், காப்பியம்
இவை இரண்டு சொற்களும் ஒரே பொருள் உடையவை. இவை வடசொற்கள் என்று கூறிப் பிழைப்பர் பார்ப்பனரும் அவர் அடி நத்துவாரும். காத்தல், காப்பு இவை இரண்டும் தொழிற்பெயர்கள். முன்னதில் தல் தொழிற்பெயர் இறுதிநிலை. பின்னதில் பு தொழிற்பெயர் இறுதி நிலை. இந்த இரண்டு தொழிற்பெயர் இறுதிநிலைகட்குப் பதிலாக அம் என்ற இறுதி நிலை பெற்றுக் காவம், காப்பம் என வரின் அது பிழையாகாது. எனவே, காவம், காப்பம் என்ற இரு தொழிற் பெயர்களும் இடையில் இகரச்சாரியை பெற்று காவியம், காப்பியம் என வந்தன என அறிதல் வேண்டும். இது எதுபோல எனில், ஓவம் என்பது இகரச்சாரியை பெற்று ஓவியம் என வந்தது போல என்க.
நெஞ்சைப் பயனற்ற வழியிற் செல்லாது நன்னிலைப்படுத்திக் காப்பது காப்பியம் காவியம் எனப் பொருள்பட்டுக் காரணப் பெயர்களாகியவாறு காண்க. காவியம் காப்பியம் வடமொழி இலக்கியத்திலும் வருவதால் அவை வடமொழியே எனக் கூறுவாரை நோக்கி உங்கள் வடமொழி இலக்கியத்தின் ஆண்டு என்ன? சொற்கள் உங்கட்கு ஏது? நீங்கள் இந்த நாட்டுக்கு வரும்போதே எல்லாச் சொற்களையும் கொண்டு வந்தீர்களா? என்று கேட்க வேண்டும். எல்லாச் சொற்களையும் நாங்கள் கொண்டு வந்தோம் என்று அவர்கள் கூறினால் இமையம் என்ற சொல்லை வரும்போதே கொண்டு வந்தீர்கள் எனில் நீங்கள் இருந்த இடத்தில் இமையம் என்ற மலை இருந்திருக்க வேண்டுமே- _ இருந்ததா? என்று கேட்க வேண்டும்.
இமையம் இமைத்தல் _ --ஒளித்தல். இமையமலை பனிமூட்டத்தால் ஒளி செய்தலால் அப்பெயரிட்டு அழைத்தார்கள் பண்டைத் தமிழர்கள்.
எனவே, காவியம், காப்பியம், இமையம் என்பன செந்தமிழ்ச் செல்வங்கள். அனைவரும் வந்தவர் மொழியல்ல என நெஞ்சில் நிறுத்துக.
வேதம்
வேதம் வந்தவர் மொழியன்று, வேய்தல்- _ மறைத்தல், வேதல் என மருவியது. வேய்ந்தான் என்பது வேய்ந்தன் என மருவியது போல, பின் வேதல் என்பது வேதம் என ஆனது. ஈறுதிரிந்த தோர் ஆ.குபெயர். கபிலம் என்பதிற் போல.
வேய்ந்தன் என்பதின் வேய்தல் எனின் கொற்றக் குடையால் மறைத்து காத்தல் என்று கொள்ளுதல் வேண்டும். இவ்வாறு மறைமலையடிகளும் உரைத்தார். எனவே, வேதம் செந்தமிழ்ச் சொல்லே எனக் கொள்க.
மானம்
மன்னல் தொழிற் பெயர். மன் ஈறுகெட்ட தொழிற்பெயர். அதாவது முதனிலைத் தொழிற் பெயர். மான் முதனிலை திரிந்த தொழிற்பெயர். அது முதனிலைப் பொருள் இறுதிநிலையாகிய அம் பெற்று மானம் என ஆயிற்று. மேற்சொன்ன மன்னல் அதாவது மன்னுதல் என்றால் தன்னிலையில் மாறாது நிற்றல் என்பது பொருள். அதனால்தான் மானம் என்பதற்குப் பொருள் கூறிய தமிழ்ச் சான்றோர் தன்னிலையில் மாறாது நிற்றலும், மாற்றம் நிகழ்ந்துழி வாழாது சாதலும் என்று பொருள் கூறிச் சென்றார்கள்.
தீப் பார்ப்பனர்களும் தேப்போ மீக்களும் இதை வட சொல் என்று தமக்குத் தோன்றியவாறே கூறி மகிழ்வர். மானம், உலகம் தோன்றியது முதல் மானத்துக்காக வாழ்ந்து வரும் தமிழரின் சொல் என்க.
ஆதி
ஆதி என்பது வடசொல்லாம். அச்சொல்லும் திருவள்ளுவருக்கு தாயின் பெயராம். அந்தத் தாய்கூட ஒரு புலைச்சியாம். ஆதி வட சொல்லன்று. தூய தமிழ்ச் சொல்லே. அஃது ஆதல் எனப் பொருள்படும் தொழிற்பெயர். ஆ_முதனிலை, தி_-இறுதிநிலை செய்தி, உய்தி என்பவற்றிற் போல, ஆதி_-முதன்மை, இதை வடவர் மூலப் பிரகிருதி என்பர்.
(குயில், 24.6.58)

மே2015-1

கங்கை
நவ்வல், நாவல் என்பன ஒரு பொருள் உடைய தமிழ்ச் சொற்கள். இது இந்தியாவின் நடுப்பகுதியில் மிகுதி. நாவல் மிகுதியாக நடுப்பகுதியில் இருந்த காரணத்தால் பண்டைத் தமிழர்கள் இத்தீவை நாவலந் தீவு என்றார்கள்.
தென் என்பது அழகு. அது கண்ணுக்குப் பொருளாகும் போது அழகு எனப்படும். மனத்துக்குப் பொருளாகும் போது இனிமை எனப்படும். எனவே தென்_-அழகு, இனிமை என்க. தென் என்பதிலிருந்து தென்னை தென்கு என்பன தோன்றின.
இவற்றின் பொருள் அழகியது, இனியது என்பன. எனவே தென்னையும் தென்கு அல்லது தெங்கும் அவ்வகையான மரத்துக்குக் காரணப் பெயர். தென்னை மரம் அதாவது தெங்கு அழகியதாக இருத்தலையும் நோக்குக!
இத் தென்னை நாவலந்தீவின் தென்புறம் மிகுதி. தென்னை இருந்த காரணத்தினாலேயே இப்புறத்திற்கு தெற்கு என்று கூறினார்கள் பண்டைத் தமிழ் மக்கள்.
வடம் என்பது ஆலமரம். அது வட்டமாக மேலோங்கித் தழைப்பதால் அவ்வாறு காரணப் பெயர் பெற்றது.
வடமரம் அதாவது ஆலமரம் நாவலந் தீவுக்கு வடபுறத்தில் மிகுதி. அந்தப் பக்கத்தை வடக்கு என்ற சொல் வடமரம் இருந்ததால் வந்த காரணப் பெயர் என அறிக. எனவே நாவல் மரங்கள் மிகுதியாக நடுவிடத்தை அழகு செய்ததால் இத்தீவுக்கு நாவலந்தீவு என்கிறார்கள் பண்டைத் தமிழர்கள்.
தென்னை மரங்கள் அழகு செய்து சிறக்க இருந்ததால் இப்பக்கத்தை தெற்கு என்கிறார்கள். வடமரம் மிகுந்திருந்த காரணத்தால் அப்பக்கத்தை வடக்கு என்றார்கள். யார்? பண்டைத் தமிழ் மக்கள். இன்னும் மேற்கு என்பதற்கு மேல் (உயரம்) என்பதுதான் பொருள். உயர்ந்திருக்கும் பக்கம் ஆதலால் அது மேற்கு என்கிறார்கள்.
கிழக்கு என்றால் கீழ் (தாழ்ந்த) என்பதுதான் பொருள். அப்பக்கம் தாழ்ந்திருத்தல் கருதியே கிழக்கு என்கிறார்கள். இதுவரைக்கும் சொல்லியவற்றால் தெரிந்து கொள்ள வேண்டியவை என்னவெனில்:
1.    நாவலந்தீவு முழுவதும் இருந்தவர்கள் தமிழர்கள் மட்டும்தான்.
2.    நாவலந்தீவு முழுவதும் வழங்கியது தமிழ் மட்டும்தான்.
3.    நாவலந்தீவு முழுவதும் இருந்த _ -இருக்கின்ற பொருள்கள் அனைத்துக்கும் உள்ள பெயர்கள் அனைத்தும் தமிழர் இட்ட தமிழ்ப் பெயர்களே!
ஆரியர்கள் பிறகு வந்தவர்கள். பிறகு வந்தார்கள் என்றால் அவர்கள் பிறகு இந்நாட்டுப் பொருள்களுக்குப் பெயர் வைத்திருக்கலாம் என்றால் அது எப்படி முடியும்? எந்த இடத்திலிருந்து வந்தார்களோ அந்த இடத்தில் இல்லா இமையத்துக்குப் பெயர் எப்படி அவர்கள் கொண்டு வந்திருக்க முடியும்?
கங்கு என்பது கரைக்குப் பெயர். தமிழில் கங்கு _- கங்கை என்று வருவதற்கு இலக்கணச் சட்டம் இருக்கிறது. அதை அய்யீற்றுடைக் குற்றுகரச் சொல் என்பார்கள். கங்கையாறு கரையாற் சிறப்புற்றது பற்றி அதைக் கங்கு அல்லது கங்கை என்கிறார்கள் அங்கிருந்த பண்டைத் தமிழர்கள்.
கங்கா என்ற வடமொழிச் சிதைவுதான் கங்கை என்று பார்ப்பனர் பகர்வர். அவர் கால்நத்திகள் கழறுவர்.
நாவலந்தீவுக்கே உரிய பொருள்களுக்-கெல்லாம் நாவலந்தீவின் மொழியாகிய தமிழ்ப் பெயர்தான் உண்டு என்று காட்டப்பட்டது இதுவரைக்கும்.
பொதுவான பொருள்களுக்கு அமைந்த சொற்களிற் பெரும்பாலனவும் தமிழ்ச் சொற்களாகும் என்பது மறுக்க முடியாததாகும்.
(குயில், 1.7.58)

மே2015-2

ஊன்றிப் படித்து உண்மையை உணருக!
- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
பகவன்
பகவான் என்று வடவர் சொல்லுகிறார்களே அதுதானாம் இது. இது கலப்பில்லாத முட்டாள்தனமான பேச்சு. பகல் என்பதும் பகவு என்பதும் ஒரே பொருளைய சொற்கள். பகல் என்பதில் பகு முதனிலை. பகவன் என்பதில் பகவு முதனிலை. பகல் என்பதற்கும் பகவு என்பதற்கும் நடுவுநிலை. அறிவு என்பன பொருள்கள்.
பகவு என்பதற்கு பாவேந்தர்கள் அன் இறுதிநிலை சேர்த்துப் பகவன் என்று சிறப்புறுத்துவார்கள். எனவே பகவு, பகவன் இவைகட்கு அறிவு, அறிவன் என்பன பொருள். பகவன் தூய தமிழ்ச்சொல். பகவன் வடசொல்லாம், அது திருவள்ளுவரின் தந்தையின் பெயராம். அந்த பகவனும் பார்ப்பனனாம். ஆதியும் பகவனும், புலைச்சியும் பார்ப்பனனுமாம். திருவள்ளுவர் பேரறிஞராகத் திகழக் காரணம் அவர் பகவன் என்னும் பார்ப்பனனுக்குப் பிறந்ததாகும். இப்படி அந்தப் பாவிகள் ஒரு கதை கட்டி விட்டிருக்கிறார்கள்.
(குயில், 24.6.58)
சலம்
ஜலம் என்ற வடசொல்லின் சிதைவு என்று கூறுவார்கள் கலகக்காரர்கள்.
சலம் என்பது காரணம் பற்றிவந்த தூய தமிழ்ச் சொல். சல, சல என்று இயங்குவது காரணமாக தண்ணீர் சலம் என்று பெயர் பெற்றது. இவ்வாறு மறைமலையடிகளும் கூறியருளினார். இதைப் பார்ப்பனர் ஜலம் என்கிறார்கள் அல்லவா? நாத்திருந்தாமை அவர் கொண்ட குற்றம். அதனால் சலம் அவர் மொழியாகிவிட்டது.
(குயில், 1.7.58)
உவமை
உவமை என்பது உபமானம் என்பதன் சிதைவாம். இவ்வாறு மொட்டைத் தலைக்கும் முழந்தாளுக்கும் முடிபோடுவர் பார்ப்பனரும், அவர் அடியாரும். பொருள் நிலை உணர்வித்து உவப்புறச் செய்வது உவமை. உவத்தல், உவமை ஒரு பொருட் சொற்கள். தாமரை மலர் முகம் என்பதில் தாமரை மலர் உவமை முகம் உவமை ஏற்கும் பொருள். இவ்வாறு கூறாமல் முகம் என்று மட்டும் சொன்னால் முகம் என்ற பொருளின் நிலையை நன்கு உணரச் செய்ததாகாது என்பதை நோக்குக. உவப்புறச் செய்வது உவமை எனின் இச்சொல் காரணப் பெயராதலும் அறிக. எனவே, உவமை செந்தமிழ்ச் செல்வமே என்க.
அமிழ்து
இது குன்று, குன்றம் என அம் சாரியை பெற்றது போல், அமிழ்தம் என்றும் வரும். அன்றியும் அமுதம் அமுது என்றும் மருவி வழங்கும். இதை பார்ப்பனரும் அவர்களின் அடியார்க்கடியாரும் அம்ருதம் என்னும் வடசொற் சிதைவு என்று கதைப்பர். அது கான்றுமிழத் தக்கதோர் கதை என்க. அமிழ்து என்பது அமிழ்+து எனப்பிரியும். இதன் பொருள் மேலிருந்து அமிழ்கின்ற உணவு என்பது மழைக்குப் பெயர். அமிழ்+து வினைத்தொகை நிலைத் தொடர். அமிழ்து மழைக்குப் பெயர் என்பதென்ன? மழையானது வாழ்வார்க்குப் பயன்படும் வகையில், வளவயல் வறளாது உயிர் மருந்தாய்ப் பெய்யும் நிலையில் அமுது எனப்படும். மேலிருந்து அமிழும் உணவும் என்றும் இத்தொடரின் பொருள் கண்டு இன்புறுக. து_-உணவு. இதனாற்றான் வள்ளுவரும்,
வானின்று உலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று
என்று குறித்தார். எனவே அமிழ்து, அமிழ்தம், அமுதம், அமுது என்பன அனைத்தும் தூய தமிழ்ச் சொற்களே என்க.
மழை என்று தோன்றிற்று. அன்று தோன்றிற்று அதன் பெயராகிய அமிழ்து என்பது. அதன்பின் அதாவது கிரேதாயுகத்தில் பாற்கடல் கடைந்ததில் வந்ததாக உள்ள பொய்க்கதையில் வந்துள்ளது அம்ருதம் என்ற சொல். இதனால் அமிழ்தை அம்ருதம் என்று எடுத்தாண்டனர் வடவர் என்று தெளிதல் வேண்டும்.
(குயில், 08.07.1958)
ஜூன்2015-1

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?


- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
ஆலயம் இதையும் வடசொல் என்று கூறுகின்றார்கள் பார்ப்பனரும் அவர் அடியார்க்கடியாரும். ஏன் கூறமாட்டார்கள். ஏமாந்தாரும் காட்டிக் கொடுத்தாரும் நிறைந்த தமிழகத்தில்? ஆல் என்பதனடியாகப் பிறந்தது இச்சொல். ஆல்+அ+அம் எனின் அவ்வும், அம்மும் சாரியைகள். அம் என்பது அகம் என்பதன் திரிபு எனினும் அமையும். ஆலயம் என்பன் நேர்பொருள் ஆலாகிய இடம் என்பதாம். முன்நாளில் ஆலின் அடியில் அமைந்த நிழல் மிக்க பேரிடத்தை வழக்குத் தீர்ப்பிடமாகவும், கல்வி பயிலிடமாகவும், விழா நடைபெறுமிடமாகவும் கொண்டு பெருமைப்படுத்தினார்கள். அதுவே பிற்காலத்தில் உருவ வணக்கத்திற்குரிய இடமாயிற்று என்றும் ஆராய்ந்துரைத்தார்கள் அறிஞர்கள் பலர். ஆலயம் இடம் என்ற பொருளில் இலக்கியங்களிலும் வந்துள்ளது.
.................. மழை இடிப்புண்டு ஓர் நாகம் ஆலயத்தழுங்கி யாங்கு மஞ்சரி அவல முற்றாள். (சீவக சிந்தாமணியின் 897 ஆவது பாடல்) என்று வரும் அடிகளில் ஆலயம் என்பது நாகம் தங்கும் இடம் என வந்துள்ளது. தான் விளையாடி மேனாள் இருந்ததோர் தகைநல் ஆலைத் தேன் விளையாடும் மாலை யணிந்தபொற் பீடம் சேர்த்தி யான் விளையாடும் அய்ந்தூர் அதன்புறம் ஆக்கி னானே! என்ற சிந்தாமணிச் செய்யுளையும் நோக்குக.
எனவே, ஆலயம் காரணப் பெயராகிய தூய தமிழ்ச் சொல்லே. நாகரிகம் நகர சம்பந்தம் நாகரிகம் என்று கரடி விடுவார் தமிழின் பகைவர். அன்று! நாகரிகம் தூய தமிழ்ச் சொற்றொடர் என்க, என்னை? நாகம் என்ற சொல்லுக்கு, நாகன் விண் குரங்கு புன்னை நற்றூசு மலை பாம்பு யானை என்ற நூற்பாவினால், இத்தனை பொருள்கள் இருப்பது அறியப்படும். எனவே, நாகம் மலைக்கும் பெயர். நாகர் என்பது மலையாளிகள் என்பதாயிற்று. இனி இகத்தல் என்பது பகைத்தல் வெறுத்தல் என்பதாம். நாகரிகம் என்பது நாகர்களை _ மலையாளிகளை வெறுப்பதோர் பண்பாடு என்க. நாகரிகம் ஈறு திரிந்ததோர் ஆகுபெயர். பண்டு தீயொழுக்கத்தவரான ஆரியர் தமிழரால் புறந்தள்ளப்பட்டனர். அவ்வாரியர் மலைப்பாங்கில் ஒதுங்கி வாழ்ந்தனர். அவர் தீயொழுக்கம் தமிழர்க்குத் தீரா வெறுப்பை உண்டாக்கிற்று. தமிழரிடத்து _ ஓர் புதிய பண்பாடு தோன்றியது. நாகரை _ நாகரின் தீயொழுக்கத்தை வெறுப்பதென்று அன்று தோன்றியதே நாகரிகம் என்பது. ஆதலின் நாகரிகம் காரணம் பற்றி வந்த செந்தமிழ்ச் செல்வமே என்க. (குயில், 08.07.1958) வேட்டி! இது வேஷ்டி என்ற வடசொல்லின் சிதைவாம். இவ்வாறு பார்ப்பனரும், பார்ப்பனர் அடியாரும் பகர்வர்.
வெட்டப்படுதலின் வேட்டி எனத் தூய தமிழ்க் காரணப்பெயர். வெட்டல் என்ற தொழிற் பெயரின் அல், இறுதிநிலை கெட, வெட்டு என நின்று முதல் நீண்டது வேட்டு என. அது இ என்னும் பெயர் இறுதி பெற்று வேட்டி ஆனது. அறுக்கப் படுதலின் அறுவை என்றும், துணிக்கப் படுதலின் துணி என்றும், துண்டிக்கப் படுதலின் துண்டு என்றும் வருவதும் ஒப்பு நோக்கத் தக்கதாகும். முட்டி இது முஷ்டி என்ற வடசொற் சிதைவாம். முட்டுதல், முட்டு, முட்டி என வந்தது காண்க.
(குயில், 15-07-1958)
ஜூன்2015-2