பக்கங்கள்

புதன், 26 ஏப்ரல், 2017

அய்யய்ய... இதுதான் தமிழ் வருஷப் பிறப்பாம்!அய்யய்ய... இதுதான் தமிழ் வருஷப் பிறப்பாம்!

நாரதனுக்கும் - கிருஷ்ணனுக்கும் பிறந்த பிள்ளைகளாம்! 

வருஷம் 1: ஒருமுறை நாரதமுனிவர், கிருஷ்ணமூர்த்தியை நீர் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு கன்னிகையாவது தரலாகாதா என்ன, அதற்குக் கண்ணன், நான் இல்லாத பெண்ணை வரிக்க என உடன்பட்டுத்தான் வீடுகளிலும் (60,000) சென்று பார்த்து இவர் இல்லாத வீடு கிடைக்காததனால் கண்ணனிடம் வந்து அவர் திருமேனியில் மையல் கொண்டு அவரை நோக்கி நான் தேவரீரிடம் பெண்ணாக இருந்து ரமிக்க எண்ணங் கொண்டேன் என்றார். கண்ணன் நாரதரை யமுனையில் ஸ்நானம் செய்ய ஏவ, முனிவர் அவ்வகை செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினார். இவருடன் கண்ணன், அறுபது வருடம் கூடி, கிரீடித்து அறுபது குமாரர்களைப் பெற்றனர். அவர்கள் பெயர் பிரபவ முதல் அட்சய இறுதியானவர்களாம். இவர்கள் வருஷமாகும் பதம் பெற்றனர்.

2. (60) பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரஜோத்பத்தி, ஆங்கிரஸ, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதான்ய, பிரமாதி, விக்கிரம, விஷு, சித்ரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய, இவ்விருபதும்  உத்தம வருஷங்கள். ஸர்வஜித்து, சர்வதாரி, விரோதி, விக்ருதி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துர்முகி, ஏவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விசுவாவசு, பராபவ இவ்விருபதும் மத்திம வருஷங்கள். பிலவங்க, கீலக, சௌமிய, சாதாரண, விரோதிகிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, ராக்ஷஸ, நள, பிங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரௌத்திரி, துன்மதி, துந்துபி, உருத்ரோத்காரி, இரக்தாக்ஷி, குரோதன, அக்ஷய இவ்விருபதும் அதம வருடங்களாம்.
(ஆதாரம்: அபிதான சிந்தாமணி - 6ஆம் பதிப்பு - ஜூன் 2009 - பக்கம் 1691)

-விடுதலை,13.4.17

திங்கள், 24 ஏப்ரல், 2017

தில்லையாடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழைமையான உறை கிணறு, பானை கண்டெடுப்பு



நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகே தில்லை யாடியில் பழைமையான உறை கிணறு, பானை, கத்தி உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளன.

தில்லையாடியில் தியாகி வள்ளியம்மை நினைவு மணிமண்டபம் பின்புறத்தில் பொறையாறு டி.பி.எம்.எல். கல்லூரியின் வரலாற்றுத்துறை மாணவர் கள், திருச்சி  பெரியார் ஈ.வெ.ரா. அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் இணைந்து தொல்லியல் பாட கள ஆய்வுப் பணியில் புதன்கிழமை ஈடுபட்டனர்.

பொறையாறு கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற கள ஆய்வில், திருச்சி கல்லூரி வரலாற்று பேராசிரியர்கள் சேவியர், செந்தில்குமார், ராமலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது அப்பகுதியில் புதைந்திருந்த சுமார் 7 அடி உயரமுள்ள பானை வடிவிலான உறை கிணறு, பழைமையான துருப்பிடித்த கத்தி, இறுதிச்சடங்கின் போது பயன்படுத்தக்கூடிய பானை, எண்ணெய் கிண்ணம் உள்ளிட்ட பொருள்களும், மனித எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டன.

இதுகுறித்து பேராசிரியர்கள் கூறியதாவது:

இந்த பொருள்கள் 2,000 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்க வாய்ப்புள்ளது. மேலும், பொருள்களில் வலைப் பின்னல் போன்ற கலை நுணுக்க அச்சுகள் உள்ளன. உரிய ஆய்வுக்குப் பிறகு, இந்தப் பொருள்கள் தொல்லியல் துறையிடம் ஒப்படைக் கப்படும் என்றனர்.

-விடுதலை ஞா.ம.,22.4.17

பெரியார் பார்வையில் தமிழ்

தமிழுக்காக வேண்டுமானால் தமிழ் படிக்கலாம். இலக்கிய நயம், கவி நயம் என்பதற்காக வேண்டுமானால் தமிழ் கற்கலாம். மற்றபடிப் புதுமையான கருத்துக்களை அறிந்து கொள்வதற்குத் தமிழில் எதுவுமே கிடையாது.

-விடுதலை,22.4.17

ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

தந்தை பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்


அய்யாவின் அடிச்சுவட்டில்....137

தந்தை பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்
20.8.1978 அன்று தஞ்சையில் தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் மண்டலச் செயலாளர் (தற்பொழுது திராவிடர் கழக சட்டத்துறைச் செயலாளர்)  வழக்குரைஞர் இன்பலாதன்_மலர்க்கண்ணி மணவிழா என்னுடைய தலைமையில் நடைபெற்றது. அந்த விழாவில் முகவை மாவட்ட தி.க. தலைவர்  ஆர்.சண்முகநாதன்  பி.ஏ., பி.எல்., அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
விழாவில், நான் தலைமை உரையாற்றும் போது, இந்த விழாவானது ராகுகால மணவிழா மணவிழாவிலே எல்லோரும் நேரத்தை மிக முக்கியமாகக் கருதுவார்கள். மணவிழா 4 மணியிலிருந்து 6 மணி வரை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 6 மணிக்குள் இந்த விழா நடைபெற வேண்டும் என்பதிலே நண்பர் இன்பலாதன் அவர்களும் அய்யா சண்முகநாதன் அவர்களும் மிகுந்த ஆவலாக இருந்தனர்.
இப்படி எல்லாம் புதியதாக நடக்கப் போகும் போது நாம் ஏன் எமகண்டம், ராகுகாலம் பார்க்க வேண்டும்? எல்லா நேரமும் நல்ல நேரம்தானே. இருதயத்தை மாற்றிக்கூட மனிதனை வாழ வைக்கிறார்கள். இக்காட்சியை சமீபத்தில் தொலைக்காட்சியில் பார்த்தோம். இன்றைக்கு மதிப்பிற்குரிய ஜெயபிரகாஷ் நாராயணனுக்கு செயற்கை சிறுநீரகத்தின் மூலமாக சிறுநீர் வெளியேறுகிறது. இப்படிப்பட்ட நிலையில் நாம் ஏன் நல்லது கெட்டது பார்க்க வேண்டும்.
நாடு புதிது புதிதாக முன்னேறி வந்த காரணமே தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுப் பிரச்சாரம்தான். பெண்களுக்கு இருக்கும் தொல்லை மகப்பேறு தான். இதனால் வெளியேகூட வரமுடியாமல் இருக்கிறார்கள். வெளிவே வராமல் இருப்பதைக் கண்டு எங்கே அவர்கள் என்று கேட்டால் ‘She is Family way’  என்று கூறிவிடுகிறார்கள். காரணம் அவர்கள் மகப்பேறு தொல்லைதான். இவர்களுக்கு மதிப்பும் இல்லையாம். ஆண்களுக்கு வரமுடியாத நிலை உண்டா? இல்லை ஆணும், பெண்ணும் சேர்ந்துதானே வாழ்க்கை நடத்துகிறார்கள் ஆணுக்கு மட்டும் ஏன் ‘Family Way’ இல்லை. இனிமேல் ஆணும் பெண்ணும் இருவரும் வெளியே எப்போதும் வரும் நிலை வரும் என்று குறிப்பிட்டேன்.
``திட்டமிட்டு வாழுங்கள் உறுதி மனப்பான்மையுடன் வாழுங்கள். இப்படி நடக்கும் திருமணங்களில் மணமக்களுக்கு ஒரு குறையும் வராது. பிறருக்கு எடுத்துக்காட்டாக வாழுங்கள் என்று குறிப்பிட்டு என்னுரையை நிறைவு செய்தேன்.
விழாவில் கழகப் பொறுப்பாளர் கா.மா. குப்புசாமி, தஞ்சை தொகுதி எம்.எல்.ஏ, தஞ்சை நடராசன், முன்னாள் நகரத் தந்தை பெத்தண்ணன், முகவை மாவட்ட தி.க. செயலாளர் என்.ஆர். சாமி, மாரிமுத்து, சிதம்பரம், வக்கீல் சண்முகம், சுப்ரமணியம், ஆகியோர் கலந்து கொண்டார்கள். மணமகன் இன்பலாதன் நன்றியுரை ஆற்ற விழா முடிவடைந்தது. விழாவில் ஏராளமான கழகத் தோழியர்கள், தோழர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தந்தை பெரியாரின் நூற்றாண்டில் வரலாற்றுப் பிரகடனமாக அய்யா அவர்கள் உருவாக்கிய தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை, தமிழக அரசு ஏற்றுக்கொண்டு, இனி, அரசாங்க அலுவலகங்களில் இந்த எழுத்துச் சீர்திருத்த முறைதான் பின்பற்றப்படும் என்று அறிவித்தது  குறிப்பிடத்தக்கது. தந்தை பெரியார் அவர்கள் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழக அரசின் கவனத்திற்கு அறிக்கை வாயிலாகவும்,  திராவிடர் கழகம் பலமுறை வலியுறுத்தி வந்ததை முன்பே நாம் பார்த்தோம்.
தந்தை பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்று தமிழ்நாடு அரசு பத்திரிகைகளுக்கு அனுப்பிய செய்திக் குறிப்பின் முழுவிவரம் இங்கு தரப்படுகிறது.
தமிழ்நாடு அரசு
பொது (செய்தி, மக்கள்_தொடர்பு)த் துறை
செய்தி வெளியிடு எண்:449 நாள்:19.10.1978
பெரியார் மேற்கொண்ட தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்
தமிழ்நாடு அரசு அமலாக்குகிறது
பெரியார் ஈ.வெ.இராமசாமி அவர்கள் மேற்கொண்ட தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைத் தமிழக அரசு ஏற்று, அதனை நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழ்மொழி எழுத்துத் தொகுதி எளிதில் கையாளமுடியாதபடி அதிகமாக உள்ளதால், அச்சிடுதல், தட்டச்சு செய்தல் போன்றவற்றில் அதிக நேரம், விரயம் செய்யப்படுவதைத் தவிர்க்கும் வகையில் தமிழ் எழுத்துத் தொகுதிகளில் சீர்திருத்தம் தேவை என பெரியார் ஈ.வெ.இராமசாமி அவர்கள், தமது வாழ்நாளில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைக் கையாண்டு வந்ததுடன் அது அனைத்துத் துறைகளிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்று மிகவும் வலியுறுத்தி வந்தார். அதனை நடைமுறைப்படுத்தத் தக்க ஆணை வெளியிட வேண்டி பெரியார் நூற்றாண்டு விழாக் குழுவினர் அரசைக் கேட்டுக் கொண்டனர்.
பெரியார் நூற்றாண்டு விழாவினை 18.9.1978 அன்று ஈரோட்டில் தொடங்கிவைத்து, பெரியார் ஈ.வெ.இராமசாமி அவர்கள் மேற்கொண்ட தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை தமிழக அரசு செயற்படுத்துமென தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்திருந்தார்கள். தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநரும் பெரியார் மேற்கொண்ட தமிழ் எழுத்துச் சீர்திருத்தங்களை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவரத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டி பரிந்துரை செய்துள்ளார்.
தமிழக முதல்வர் அறிவிப்பிற்கிணங்கவும், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநரின் பரிந்துரையை ஏற்றும், சீர்திருத்திய எழுத்துக்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென அரசு ஆணை பிறப்பித்துள்ளது. சீர்திருத்திய தமிழ் எழுத்து வடிவங்கள் அனைத்து அரசு அலுவலகங்களிலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும், உள்ளாட்சித்துறை வரம்பிற்குட்பட்ட நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி ஒன்றியங்களிலும், தமிழக அரசின் வரம்பிற்குட்பட்ட வாரியங்கள், கழகங்கள், நிறுவனங்களிலும் பின்பற்றப்பட வேண்டும்.
தமிழ் மொழியில் வெளிவரும் நாளிதழ்களும் பருவ ஏடுகளும், தமிழ்ப் புத்தகம் வெளியிடுவோரும், அச்சிடுவோரும் சீர்திருத்திய தமிழ் எழுத்து வடிவங்களைக் கையாள வேண்டுமென அரசு பரிந்துரை செய்துள்ளது. தமிழக அரசு வெளியீடுகளிலும், அரசிதழ்களிலும் மற்றும் தமிழில் அச்சிடப்படும் எல்லா இனங்களிலும் சீர்திருத்திய எழுத்து வடிவங்கள் கையாளப்படும் என அரசு செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இன்றைக்கு தமிழக அரசு ஏற்றுக் கொண்டிருக்கும் எழுத்துச் சீர்திருத்த முறையை ஆரம்பகாலம் முதல் நடைமுறைப்படுத்தி வரும் ஒரே ஏடு விடுதலை! விடுதலை ஏடு இந்த இடைவிடாத முயற்சியினால், எழுத்துச் சீர்திருத்த முறை தங்குதடையின்றி இன்று எல்லோரும் எழுதும், படிக்கும் நிலையை உருவாக்கியிருக்கிறது.
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் வெளியீடுகளிலும் இந்த எழுத்து முறையே பின்பற்றப்பட்டு வருகிறது. பல லட்சக்கணக்கான மக்கள் அந்த நூல்களை வாங்கிப் படித்து வருவதால், இந்த எழுத்துச் சீர்திருத்த முறை தமிழகத்தில் மிகவும் வழக்கமாகிவிட்ட ஒன்றாகிவிட்டது.
தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடும் இந்த ஆண்டில், தமிழக அரசின் பாராட்டத்தக்க சாதனையாக, பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களால் கடந்த நாற்பது ஆண்டுகளாகவும் அதற்கு மேலாகவும் உருவாக்கப்பட்டு, கடைபிடித்து நடைமுறைப்படுத்தப்பட்ட தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை நூற்றாண்டு விழாவின்போது அறிவித்தபடி, செயல்படுத்த முன்வந்து ஆணை பிறப்பித்த தமிழக அரசுக்கும் அதன் முதலமைச்சர் மாண்புமிகு எம்.ஜி.ஆர் அவர்கட்கும், நமது இயக்கத்தின் சார்பாகவும், லட்சோபலட்சம் பெரியார் தொண்டர்கள் சார்பாகவும் நெஞ்சார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்து நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று 30.10.1978 அன்று விடுதலை இதழின் இரண்டாவது பக்கத்தில் எழுதியிருந்தேன், அந்த அறிக்கையிலிருந்து சில பகுதிகளை இங்கே தருகின்றேன்.
``இந்தக் காரியம் மிகப் பெரிய சரித்திர சாதனையாகும். அ.தி.மு.க. ஆட்சியின் கிரீடத்தில் ஜொலிக்கும் ஒரு வரலாற்றுப் புகழ்வாய்ந்த வைரம் ஆகும்.
அறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட சுயமரியாதைத் திருமணச் சட்டம் போன்றே, கலைஞர் கருணாநிதி அவர்களது ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற கடுமையான சட்டம் போன்றே, இதுவும் திராவிட இயக்க சரித்திரத்திலும், தமிழ்நாட்டு வரலாற்றிலும், தமிழ்மொழியின் வரலாற்றிலும் முக்கிய திருப்பமானதோர் அரிய சரித்திரச் சாதனையாகும்.
தமிழ்மொழியின் வளர்ச்சியில் அக்கறையும் கவலையும், பற்றும் உள்ள எவரும் இதனை இருகரம் நீட்டி வரவேற்கவே செய்திடுவர் என்பது பாராட்டத்தக்கது.
தமிழக அரசு விளம்பர வாசகங்களில் இந்தச் சீர்திருத்த எழுத்து மாற்றங்கள் உடனடியாக இடம் பெற்றது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
பள்ளிப்பாட நூல்களில் இவை உடனடியாக இடம் பெற வேண்டுமென்று ஆணை பிறப்பித்த அரசும் கல்வி அமைச்சரும் பாராட்டத்தக்கவர்கள் ஆவார்கள்.
தமிழ்நாட்டுப் பத்திரிகைகளும் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை இம்முறையில் பின்பற்ற வேண்டும் என்று கண்டிப்பாக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.
அ.தி.மு.க. நடத்தும் ஏடுகளிலும் இது உடனடியாக இடம்பெற வேண்டும். தி.மு.க. ஆட்சிக் காலத்திலேயே இம்மாற்றம் நடைபெற்றிருக்க வேண்டும், அது எப்படியோ தவறிவிட்டது! என்றாலும் இப்போது இதை அ.தி.மு.க. அரசு அறிவித்திருக்கிறது என்பதால் இதனை எவரும் கட்சிக் கண்ணோட்டத்தோடு பார்க்கக் கூடாது என்பது நமது அன்பு வேண்டுகோள்.
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களும் ஏனைய கட்சித் தலைவர்களும் இதனை வரவேற்பதோடு அவரவர்கள் நடத்தும் ஏடுகளில் இம்முறையை உடனடியாக புகுத்திக் காட்டவேண்டும். அது தந்தை பெரியாருக்கு மரியாதை செய்வது மட்டுமல்ல, தமிழ் வளர்ச்சிக்கும் ஆக்கரீதியான தொண்டாற்றுவதும் ஆகும்.
எல்லா ஏடுகளிலும் கடைபிடிப்பது மிகவும் அவசியம் ஆகும் என எல்லா தலைவர்களையும், எழுத்துத் துறையாளர்களையும், ஏடு நடத்துவோர்களையும் இயக்கத்தின் சார்பில் விரும்பிக் கேட்டுக்கொள்வதுடன் தமிழ்மொழி உள்ளவரை இச்சீர்திருத்தச் சாதனை இருக்கும் என்பதால் அரசும், முதல்வரும் நமது நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவர்கள், என்றும் நம் இயக்கத்தின் சார்பாக தெரிவித்து அன்று இவ்வாறு எழுதினேன் என்பது குறிப்பிடத்தக்கது.

-       (தொடரும்)
-உண்மை இதழ்,1-15.9.15

சனி, 15 ஏப்ரல், 2017

தமிழ் எண்கள்

உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது*.
----------------------------
*தமிழ் எண்கள்*
1 - க, 2 - உ, 3 - ங, 4 - ச, 5 - ரு, 6 - சு, 7 - எ, 8 - அ, 9 - கூ, 10 - கo,
11 - கக, 12 - கஉ, 13 - கங, 14 - கச, 15 - கரு, 16 - கசு, 17 - கஎ, 18 - கஅ, 19 - ககூ, 20 - உo
21 - உக, 22 - உஉ, 23 - உங, 24 - உச, 25 - உரு, 26 - உசு, 27 - உஎ, 28 - உஅ, 29 - உகூ, 30 - ஙo
31 - ஙக, 32 - ஙஉ, 33 - ஙங, 34 - ஙச, 35 - ஙரு, 36 - ஙசு, 37 - ஙஎ, 38 - ஙஅ, 39 - ஙகூ, 40 - சo,
41 - சக, 42 - சஉ, 43 - சங, 44 - சச, 45 - சரு, 46 - சசு, 47 - சஎ, 48 - சஅ, 49 - சகூ, 50 - ருo
51 - ருக, 52 - ருஉ, 53 - ருங, 54 - ருச, 55 - ருரு, 56 - ருஎ, 57 - ருஎ, 58 - ருஎ, 59 - ருகூ, 60 - சுo
61 - சுக, 62 - சுஉ, 63 - சுங, 64 - சுச, 65 - சுரு, 66 - சுசு, 67 - சுஎ, 68 - சுஅ, 69 - சுகூ, 70 - எo
71 - எக, 72 - எஉ, 73 - எங, 74 - ஏசு, 75 - எரு, 76 - எசு, 77 - எஎ, 78 - எஅ, 79 - எகூ, 80 - அo
81 - அக, 82 - அஉ, 83 - அங, 84 - அச, 85 - அரு, 86 - அசு, 87 - அஎ, 88 - அஅ, 89 - அகூ, 90 - கூo
91 - கூக, 92 - கூஉ, 93- கூங, 94 - கூச, 95 - கூரு, 96 - கூசு, 97 - கூஎ, 98 - கூஅ, 99 - கூகூ, 100 - கoo
101 - கoக, 102- கoஉ, 103 - கoங, 104 - கoச, 105 - கoரு, 106 - கoசு, 107 - கoஎ, 108 - கoஅ, 109 - கoகூ, 110 - ககo
111 - ககக, 112- ககஉ, 113 - ககங, 114 - ககச, 115 - ககரு, 116 - ககசு, 117 - ககஎ, 118 - ககஅ, 119 - கககூ, 120 - கஉo
121 - கஉக, 122- கஉஉ, 123 - கஉங, 124 - கஉச, 125 - கஉரு, 126 -கஉசு, 127 - கஉஎ, 128 - கஉஅ, 129 - கஉகூ, 130 - கஙo
131 - கஙக, 132- கஙஉ, 133 - கஙங, 134 - கஙச, 135 - கஙரு, 136 - கஙசு, 137 - கஙஎ, 138 - கஙஅ, 139 - கஙகூ, 140 - கசo
141 - கசக, 142- கசஉ, 143 - கசங, 144 - கசச, 145 - கசரு, 146 - கசசு, 147 - கசஎ, 148 - கசஅ, 149 - கசகூ, 150 - கருo
151 - கருக, 152- கருஉ, 153 - கருச, 154 - கருச, 155 - கருரு, 156 - கருஎ, 157 - கருஎ, 158 - கருஅ, 159 - கருகூ, 160 - கசுo
161 - கசுக, 162- கசுஉ, 163 - கசுங, 164 - கசுச, 165 - கசுரு, 166 - கசுசு, 167 - கசுஎ, 168 - கசுஅ, 169 - கசுகூ, 170 - கஎo
171 - கஎக, 172- கஎஉ, 173 - கஎங, 174 - கஏசு, 175 - கஎரு, 176 - கஎசு, 177 - கஎஎ, 178 - கஎஅ, 179 - கஎகூ, 180 - கஅo
181 - கஅக, 182- கஅஉ, 183 - கஅங, 184 - கஅச, 185 - கஅரு, 186 - கஅசு, 187 - கஅஎ, 188 - கஅஅ, 189 - கஅகூ, 190 - ககூo
191 - ககூக, 192- ககூஉ, 193 - ககூங, 194 - ககூச, 195 - ககூரு, 196 - ககூசு, 197 - ககூஎ, 198 - ககூஅ, 199 - ககூகூ, 200 - உoo
மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.10 தமிழில் ௧௦) இடம் பெற்றிருக்கிறது. எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே.
மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர்.
----------------------------
*இந்த செய்தியை நம் தமிழ்  நண்பர்களுக்கு அவசியம் பகிரவும்🚗🔥

வெள்ளி, 14 ஏப்ரல், 2017

உண்மையில் தமிழ்ப் புத்தாண்டு எது?

தமிழ்ப் புத்தாண்டு எது ??அன்பு உறவுகளே கட்டாயம் அறிந்து கொள்ளுங்கள் ...!! அனைவருக்கும் பகிருங்கள் .....

ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டிய, அறிந்து பின்பற்ற வேண்டிய உண்மை இது.

காரணம், உலகுக்கு எல்லாவற்றையும் கொடுத்த தமிழன், இடையில் எல்லாவற்றையும் இழந்து, இன்று எல்லாவற்றையும் இரவல் பெற்று வாழ்கிறான். அவற்றுள் ஒன்றுதான் ஆண்டு.
தமிழன் கோயிலில் சமற்கிருத மந்திரம், தமிழன் திருமணத்தில் சமற்கிருத மந்திரம் என்பதுபோல, தமிழன் ஆண்டையும் சமற்கிருதமாக்கிய ஆதிக்க நிலையே இது.
தமிழிலே பெயரில்லாத, சமற்கிருதத்தில் பெயருள்ள ஆண்டு எப்படித் தமிழாண்டாகும்? என்று சிந்தித்தாலே இங்கு உண்மை வெளிப்படும்.

உண்மையில் தமிழ்ப் புத்தாண்டு எது?

தமிழர்கள் வாழ்வே இயற்கையை அடிப்படையாய் வைத்தது. அவ்வகையில், ஆண்டு மட்டுமல்ல, மாதம், நாள் இவற்றையும் இயற்கையின் அடிப்படையிலே கணித்தனர்.

நாள்: நாள் என்பது சூரியன் தோன்றி மீண்டும் சூரியன் தோன்ற எடுத்துக்கொள்ளும் கால அளவு.

மாதம்: மாதம் என்பதற்கு திங்கள் என்ற பெயருண்டு. திங்கள் என்பது நிலவு. நிலவை அடிப்படையாக வைத்துக் கணக்கிடப்பட்ட காலம் என்பதால் அது திங்கள் (மாதம்) எனப்பட்டது.

ஆண்டு: சூரியன் ஆண்டின் எல்லா நாள்களிலும் தலைக்கு நேர் இருப்பதில்லை. ஒரு காலத்தில் தென்கோடியில் இருக்கும்; அடுத்து தலைக்கு நேர் வரும்; அடுத்து வடகோடிக்குச் செல்லும். மீண்டும் தலைக்கு நேர் வரும். அதன்பின் மீண்டும் தென்கோடிக்குச் செல்லும்.

சூரியன் தென்கோடியிலிருந்து, வடக்கு நோக்கத் தொடங்கும் நாளை, ஆண்டின் முதல் நாளாகக் கொண்டு தமிழர்கள் ஆண்டைக் கணக்கிட்டனர். அதன்படி தை முதல் நாள் சூரியன் தென்கோடி முனையிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லத் தொடங்கும் - சித்திரை மாதம் தலைக்கு நேர் இருக்கும். ஆனி மாதக் கடைசியில் வடகோடிக்குச் செல்லும்; புரட்டாசி மாதக் கடைசியில் தலைக்கு நேர் மீண்டும் வரும்; மார்கழி கடைசியில் தென் கோடிக்குச் செல்லும்.

ஆக, சூரியன் தென்கோடியிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லத் தொடங்கி, மீண்டும் தென்கோடியைச் சென்றடைய எடுத்துக் கொள்ள ஆகும் காலம் ஓர் ஆண்டு.

மீண்டும் தை முதல் நாள் வடக்கு நோக்கிச் செல்லத் தொடங்கும். எனவே, தை முதல் நாள் தமிழ் ஆண்டின் தொடக்க நாளாகத் தமிழர்கள் கொண்டனர்.

இதை அடிப்படையாக வைத்தே ஆங்கில ஆண்டு உருவாக்கப்பட்டது. இங்கிலாந்து இருப்பது நமக்கு 6000 மைல்களுக்கு அப்பால் வடமேற்கில் தள்ளியிருப்பதால் 13 நாள்கள் முன்னமே அவர்கள் கணக்கீடு வந்து ஜனவரி 1 ஆண்டின் தொடக்கமாகக் கொள்ளப்படுகிறது.

மற்றபடி ஏசு பிறப்பை வைத்து ஜனவரி 1 என்று உருவாக்கப்படவில்லை. 2012 என்பது ஏசு பிறந்து அத்தனை ஆண்டுகள் என்பதுதானேயன்றி, அவர் பிறந்ததிலிருந்து ஜனவரி 1 என்று கொள்ளப்படவில்லை.

அவர் பிறப்புதான் ஆங்கில ஆண்டின் தொடக்கம் என்றால், டிசம்பர் 25ஆம் தேதிதான் அவர் பிறந்தது. டிசம்பர் 25 ஆண்டில் தொடக்கம் அல்லவே!

எனவே, தமிழாண்டை ஒட்டியே ஆங்கில ஆண்டும் சூரியன் இருப்பைக் கொண்டு உருவாக்கப்பட்டது.

ஆனால், சித்திரையை ஆண்டின் தொடக்கமாகக் கொள்ளும், பிரபவ முதல் அட்சய வரையிலான 60 ஆண்டுகள் நாரதருக்கும் கிருஷ்ணனுக்கும் பிறந்த பிள்ளைகள் என்று புராணக்கதை கூறி, அறிவிற்கு ஒவ்வாத, அறுவறுப்பான ஆண்டைத் தமிழாண்டு என்று சூடும், சொரணையும், மானமும் உள்ள தமிழன் ஏற்கலாமா? சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நாரதரும் கிருஷ்ணனும் ஆண்கள். ஆணுக்கும் ஆணுக்கும் குழந்தை பிறக்குமா? அதுவும் ஆண்டு பிறக்குமா? ஆண்டு என்பது கால அளவு. அது எப்படி குழந்தையாய்ப் பிறக்கும்?

எனவே, இழிவை விலக்கி உண்மையை உணர்ந்து தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாட வேண்டியது தமிழன் ஒவ்வொருவனின் கடமை! மாறாக சித்திரை மாதத்தைத் தமிழ்ப் புத்தாண்டாக, தமிழனாய்ப் பிறந்தவர்கள் கொண்டாடக் கூடாது.

நன்றி :குமரன் வெற்றி

செவ்வாய், 4 ஏப்ரல், 2017

லெமூரியா கண்டத்திட்டுகள் கண்டுபிடிப்பு


பல்லாயிரம் ஆண்டுகளுக்கு
முற்பட்டது. லெமூரியா கண்டம். உலகிலேயே முதன் முறையாக இந்த கண்டத்தில்தான் மனிதர்கள் வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் பேசிய மொழி தமிழ் என்ற நம்பிக்கை நெடுங்காலமாக உயிர்ப்புடன் இருந்து வருகிறது. எனினும் அறிவியல் ஆய்வுகள் வாயிலாக உறுதிப்படுத்தப் படவில்லை.

சங்க இலக்கியங்களில் குமரிக்கண்டம் கடல் கோளால் விழுங்கப்பட்டது என்பது தொடர்பான பதிவுகள் காணப்படுகின்றன. பரந்து விரிந்திருந்த தமிழர்களின் நிலப்பரப்பு கால மாற்றத்தால் படிப்படியாக அருகி விட்டது.

இப்போது உலகில் முழுக்க முழுக்க தமிழர்களுக்கென ஒரு நாடு கூட இல்லாமல் போய்விட்டது. ஆனால் பன்னெடுங் காலத்திற்கு முன்பு 49 நாடுகளில் தமிழர்கள் செம்மையாகவும், செழுமையாகவும் வாழ்ந்து வந்தனர் என்பதை இலக்கியப் பதிவுகள் உணர்த்துகின்றன. இல்லாத சரஸ்வதி நதியை கண்டுபிடிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதைப் போல குமரிக்கண்டம் குறித்தும் கடல் பகுதியில் அறிவியல் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் ஒலித்து வருகிறது.

இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் உள்ளவிட்வாட்டர்ஸ் ராண்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் லூயிஸ் ஆஷ்வால் மொரீசியஸ் நாட்டின் அருகே உள்ள ஆழ்கடல் பகுதியில் ஆய்வு நடத்தினார். ஆய்வாளர்கள் சிலர் அவருக்கு உறுதுணையாக செயல்பட்டனர். இந்த ஆய்வின் வாயிலாக, ஆழ்கடல் பகுதியில் கோண்டுவானா கண்டத் திட்டுகள் மூழ்கிக்கிடக்கின்றன என்பது கண்டறியப் பட்டுள்ளது. கோண்டுவானா, லெமூரியா, குமரிக்கண்டம் ஆகிய யாவும் ஒன்றே,

இவை வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. மொரீசியஸ் நாட்டின் பாறைப் பகுதியில் சிலிகான் படிவுகள் காணப்பட்டன. இப்படிவுகள் 300 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பது தெரியவந்துள்ளது. இதை மய்யப் புள்ளியாக வைத்து ஆழ்கடலில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக பயனுள்ள தகவல்கள் பெறப்பட்டுள்ளன. ஆய்வை மேலும் விரிவாகவும், ஆழமாகவும் நடத்தினால் லெமூரியா கண்டம் பற்றி இன்னும் பல முக்கிய தகவல்களை சேகரிக்க முடியும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
- நன்றி: “முகம்”, மார்ச் - 2017

-விடுதலை ஞா.ம.,1.4.17

ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

தாய் மண்ணை நேசிக்கும் தமிழ்ப் பிரதமர்!


இந்தியாவில் தமிழன் இன்னும் பிரதமராக முடியவில்லை, ஆனால் கயானாவில் நடந்தேறிவிட்டது. உலகின் முதல் தமிழ்ப் பிரதமர் அந்நாட்டிற்கு கிடைத்துள்ளார். தென் அமெரிக்க நாடான கயானாவின் பிரதமராக அந்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்-பட்டிருக்கிறார் வீராச்சாமி நாகமுத்து. தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட தமிழர். 1860களில் ஆயிரக்கணக்கான தமிழர்களை பிரிட்டிஷார் பல்வேறு கூலி வேலைகளுக்காக அழைத்துச் சென்றார்கள். அதில் நாகமுத்துவின் மூதாதையர்களும் அடங்குவர். அவர்களின் வம்சா வழியினர் இப்போதும் தமிழ் பெயர்களுடன் கயானிஸிந்தியன் என்றே அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.
கயானாவின் பிரதமராக தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தமிழர் நாகமுத்து, துணை ஜனாதிபதியாகவும் இருக்கிறார். இவரது அமைச்சரவையில் 25 பேர் இடம் பெற்றிருக்கிறார்கள்.
பல நாட்டுத் தமிழர்களும் வாழ்த்திக் கொண்டிருக்கும் சூழலில்... டெல்லித் தமிழ் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான ராம்சங்கர், கயானாவுக்குச் சென்று பிரதமர் நாகமுத்துவைச் சந்தித்தார். இது பற்றி ராம்சங்கர் கூறியதாவது நான் தமிழன் என்று அறிந்த மாத்திரத்தில் என்னை கட்டிப் பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் பிரதமர் நாகமுத்து. திருக்குறள், சிலப்பதிகாரம், பாரதிதாசன் கவிதை தொகுப்புகள் உள்ளிட்ட நூல்களை நான் பரிசளிக்க, புதிய உலகில் மதராஸியின் (தமிழன்) வாழ்க்கை என அவர் எழுதிய புத்தகத்தையும் கயானா நாட்டின் பரிசையும் எனக்களித்து சந்தோசப்பட்டார்.
கயானாவின் விடுதலைக்காகவும் கருப்பின மக்களின் உரிமைக்காகவும் போராடியதை அவர் என்னிடம் நினைவு கூர்ந்தபோது, அந்தப் போராட்டத்தின் வலியை உணர முடிந்தது. தீண்டாமை, மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பகுத்தறிவு பிரச்சாரம் செய்வதையும் அவர் விவரித்தார். தமிழகத்தில் தனது மூதாதையர்கள் எங்கு பிறந்தனர் என்பது அவருக்குத் தெரியவில்ல. அதைக் கண்டறிந்து தருமாறு இந்தியத் தூதரகத்தைக் கேட்டுக் கொண்டிருப்பதாக கூறியவர், மூதாதையர்கள் பிறந்த கிராமத்தை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டுமென்பதே எனது நீண்டநாள் கனவு என்றார்.

தனது நாட்டின் காவல்துறைக்கு, இந்திய தண்டனைச் சட்டங்கள், சைபர் க்ரைம் பற்றி உரை நிகழ்த்துமாறும் அதற்கான அழைப்பு அரசு முறைப்படி அனுப்பி வைக்கப்படும் என்றும் தவறாமல் வரவேண்டும் என்றும் என்னைக் கேட்டுக் கொண்டார். 10 நிமிடம் தான் எனக்கு நேரம் தரப்பட்டிருந்தது. அதை நான் நினைவூட்டியபோது, ஒரு தமிழனைப் பார்க்க 30 மணி நேரம் செலவு செய்து வந்திருக்கிறாய். உன்னோடு 1 மணி நேரம் கூட நான் செலவழிக்கவில்லையெனில் தமிழன் என சொல்வதில் அர்த்தம் கிடையாது என்றுகூறி நீண்ட நேரம் பேசினார் என்று மகிழ்ச்சியுடன் கூறினார். டெல்லித் தமிழ் வழக்கறிஞர்கள் நடத்தும் பாராட்டுவிழாவில் கலந்துகொள்ள இந்தியா வர சம்மதித்திருக்கிறாராம் கயானா பிரதமர் நாகமுத்து என்று கூடுதல் செய்தியையும் கூறினார்.
-உண்மை இதழ்,16-30.11.15

திராவிடமும் தேசியமும்




- புலவர் க.முருகேசன்
வேற்றுமொழிச் சொல்லான வடசொல் ஒலிவடிவிலும், எழுத்துவடிவிலும் மாறுப்-பட்டிருப்பதால் அதைத்தமிழில் கையாளும்-போது தமிழின் ஒலி வடிவம் மாறாமல் கையாள வேண்டுமென்பதற்காக தொல்-காப்பியர் இலக்கணம் வகுத்துள்ளார். எச்சவியல்-- -_ நூற்பா - 401 _- வடசொற்கிளவி வடவெழுத்தொரீஇ _ -எழுத்தொடு புணர்ந்த சொல்லாகுமே.
வடசொல்லைத் தமிழில் பயிலும்போது வடசொல்லிற்கே உரிய எழுத்தை நீக்கி விட்டு அவ்விடத்தில் இருமொழிக்கும் பொதுவான எழுத்தைச் சேர்த்து வழங்கவேண்டும். தேஷ் _ தேஷம் - இதுவடசொல், இச்சொல்லில் உள்ள ஷ வடவெழுத்தாகும். இதை நீக்கி விட்டு அதற்கு மாற்றாக இரு மொழிக்கும் பொதுவான உயிரெழுத்தான எகரத்தை சேர்த்து தேஎம் என்றெழுத வேண்டும் சொல்ல வேண்டு-மென்கிறார் தொல்காப்பியர். இச்சொல் வழக்கில் தேசம் என்றாகியது.
இந்நால்வகைச் சொல்லில் திராவிடம் என்னும் சொல் தமிழின் திரிசொல்லாகும். திரவிடம் அல்லது-திராவிடம் என்னும் சொல் திரிந்த தமிழ்ச்சொல் என்பதற்கான சான்று-களைக் காண்போம். நாட்டுப்பெயர்களும், மொழிப்பெயர்களும் பண்டைய காலத்தில்  அம் ஈறு பெற்றே வழங்கின என்பதற்கான சான்று வருமாறு
அங்கம் வங்கம் கலிங்கம் கௌசிகம் சிந்து சோனகம் திரவிடம் சிங்களம் மகதம் கோசலம் மராடம் கொங்கணம்   துளுவம் சாவகம் சீனம் காம்போசம்
பருணம் பப்பரமெனப் பதினென்பாடை
-_- எனும் திவாகர நூற்பாவும்,
சிங்களம் சோனகம் சாவகம் சீனம் துளுக்குடகம் கொங்கணம் கன்னடம் கொல்லம்
தெலுங்கம் கலிங்கம் வங்கம் கங்கம் மகதம் கடாரம் கௌடம் கடுங்குகலம்
தங்கும் புகழ்தமிழ்சூழ்பதி னேழ்புவி தாமிவையே
என்னும் பழஞ்செயுளுமாகும். இம்முறை பற்றியே தமிழும் தமிழம் என வழங்கிற்று. தமிழ் என்னும் சொல் முதலாவது வடமொழியில் திரிந்த வடிவம் த்ரமிளம் என்பதே, ழகரம் வடமொழியில் இல்லை-யதலால் உயிர் முதலை மெய் முதலாக்கி ரகரத்தை இடையில் சேர்த்தல் அம்மொழிக்கு இயல்பாதலாலும் அச்சொல் அம்மொழியில் அவ்வடிவை அடைந்தது, திரமிளம் என்னும் சொல்லிற்கே (1) பஞ்ச திராவிட தேசங்கள் (2) தமிழ் என இரு பொருள் கூறும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதி.
வடசொல்லால் திரிந்த வரலாறு தமிழம்-த்ரமிளம்-த்ரவிடம்-த்ராவிடம்-திராவிடம்
த்ரமிளம் என்பது த்ரமிடம் எனத்திரிந்தது. திரமிடம் என்பதும் சிறிது காலத்தின் பின்பு த்ரவிடம் எனத் திரியலாயிற்று இவ்விறு திரிந்த வடிவத்தின் நீட்சியே த்ராவிடம் என்பதாகும். இது தமிழில் திராவிடம் என்றாகும். கி.பி. 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தாயுமானவர் வடமொழியிலே வல்லான் ஒருத்தன் வரவுந் திராவிடத்திலே வந்ததாய் விவகரிப்பேன். வல்ல தமிழறிஞர்வரின் அங்ஙனே வடமொழியில் வசனங்கள் சிறிது புகல்வேன் என்று பாடியுள்ளார். திரவிடம், தமிழ் இரு சொல்லும் ஒரு பொருளையே குறிக்கின்றன என்பதே இதன் பொருள்.
அய்நூறு ஆண்டுகளுக்கு முன் ஆழ்வார்கள் பாடிய தெய்வப் பாடல்கள் திராவிடவேதம், திராவிடப் பிரபந்தம் எனும் பெயர்களால் வழங்குகின்றன.
பாகவதபுராணத்தில் சத்தியவிரதன் என்னும் பெயரால் குறிப்பிடப்படும் ஒரு தமிழரசன் திராவிடபதி எனப்படுகின்றான். கி.பி. 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குமாரிலப்பட்டர் ஆந்திர திராவிடபாஷா என்று தெலுங்கைக் குறிக்கிறார். தமிழைத் திராவிடமென்றும் தெலுங்கை ஆந்திரத்தின் திராவிடம் என்றும் கூறுகின்றார்.
மனுதருமநூல் ஆரியரல்லாத பல்வேறு இனத்தாரைக் குறிக்குமிடத்து தமிழரையும் தெலுங்கர் கன்னடர் முதலியோரையும் வேறு-படுத்தாமல் திராவிடர் என்றே குறிப்பிடுகிறது. மனுதருமம் தோன்றிய காலத்தில் திராவிட-மென்னும் தமிழிலிருந்து தெலுங்கு கன்னடமாகிய மொழிகள் தோன்றவில்லை. எனவே அவரனைவரையும் திராவிடர் என்றே குறித்தது. மனுவின் காலம் கி.மு.150 என்பர். .
மகாபாரதத்தில் யுதிட்டிரன் யாகம் செய்தபோது திராவிட மன்னர்களும் அதில் கலந்து கொண்டதாக கூறப்பட்டுள்ளது. மகாபாரதக் காலம் கி.மு. 1100 என்கின்றார் தேவநேயப்பாவாணர்.
இதுகாறுங்கூறியவற்றால் தொன்று தொட்டுத் தமிழையே தனிப்படவும் தலைமை-யாகவும் குறித்து வந்த திராவிடம் என்னும் சொல் தமிழம் என்பதன் திரிபே என்பது வரலாற்றறிவுடையோருக்கெல்லாம் தெற்றென விளங்குவது திண்ணம். இதனையேற்றுத்தான் பேராசிரியர் சுந்தரம்-பிள்ளையவர்கள் தம் மனோன்மணிய மெனும் காவியத்தில் தெக்கணமுமதிற் சிறந்த திராவிட நல்திருநாடு என்று பாடினார். வங்கத்துக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், பஞ்சாபசிந்து சிராட்டமராட்டா திராவிட உத்கலவங்கா எனப் பாடியுள்ளார்.
திராவிடமா அப்படி ஒரு இனமே இல்லை. அப்படி ஒரு மொழியே இல்லையென்று பிதற்றுவோர் மேற்கண்ட சான்றுகளை மறுக்கத்தக்கத் தரவுகளை எடுத்துக்காட்ட-வேண்டும்.
தேசம் என்னும் சொல் தேஷம் என்னும் வட சொல்லிலிருந்து திரிந்த வடசொல் என்பதை முன்னமே தொல்காப்பிய நூற்பா 401அய்க் கொண்டு நிறுவியுள்ளோம். எனினும் ஒரு சொல்லாய்வாளர் நாம்தாம் வடபாற் மொழிகளுக்கும் சமற்கிருதத்திற்கும் நம்தேசத்தையே வழங்கினோம் என்கிறார். இவர் கூற்றுப்படித் தேசமென்னும் தமிழ்ச்சொல்தான். சமற்கிருதம் உள்ளிட்ட வடபால் மொழிகளி-லெல்லாம் நாடு என்னும் பொருளில் பங்களாதேஷ், உத்தரப்பிரதேஷ் என்று வழங்கி வருகிறதென்றால் சொல் பிறந்த இந்தத் தமிழ் நிலப்பகுதியை சோழ தேசம், சேர தேசம், பாண்டிய தேசம் என்று வழங்கியிருக்க வேண்டுமல்லவா! அதற்கான சான்றை அந்தச் சொல்லாய்வாளர் காட்டவில்லையே? அவர் கூற்று எப்படியுள்ளதென்றால் தனக்குடுத்தக் கோவணமின்றி நின்று கொண்டிருக்கும் ஒருவன் நான்தான் எல்லோருக்கும் பட்டு-வேட்டிகளைப் பரிசளித்தேன் என்று கூறுவதற்கொப்பாக உள்ளது.
தேசம் தமிழ்ச் சொல்லாயிருந்தால் இந்தத் தமிழ் நிலத்தின் எந்தப்பகுதியையாவது குறித்து எக்காலத்திலாவது வழங்கி வந்திருக்கவேண்டும். அதற்கான சான்றாவணங்கள் வரலாறு, கல்வெட்டு, செப்பேடு, இலக்கியம் ஆகியனவாகும்.
வரலாற்றைக் காண்போம் கடல் கொண்ட தமிழ் நிலத்தில் ஏழ்தெங்குநாடு, ஏழ்மதுரைநாடு ஏழ்முன்பாலைநாடு, ஏழ்பின்பாலைநாடு ஏழ்குன்றநாடு, ஏழ்குணக்காரைநாடு, ஏற்பனை-நாடு என்று நாற்பத்தி ஒன்பது நாடுகள் இருந்ததாக வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர். இவற்றில் ஒன்றேனும் தேசமென்றிருந்ததாகக் கூறவில்லை.
தமிழ் வழங்குமித்தமிழ் நிலம் செந்தமிழ் பேசும் பகுதியாகவும் கொடுந்தமிழ் பேசும் பகுதியாகவும் இருந்ததென்று ஒரு பழம் பாடல் கூறுகிறது. பாடல் வருமாறு,
தென்பாண்டி குட்டம்குடம் கற்கா வேண்பூமி பன்றி அருவா அதன்வடக்கு -- நன்றாய சீதம் மலாடு புனநாடு செந்தமிழ்சேர்
ஏதமில் பன்னிரு நாட்டெண்
செந்தமிழிலிருந்து சற்றுத் திரிந்து வழங்கிய பகுதியைக் கொடுந்தமிழ் நாடுகளென்று குறித்ததேயன்றி தேசமென்று குறிக்கவில்லை.
நாடு என்னும் செந்தமிழ்ச் சொல் நந்தமிழ் நிலத்தில் வழக்கேறி வழங்கி வருவதை வரலாற்று வழியில் காண்போம். வடக்கில் வேங்கட-மலையும் தெற்கில் குமரியாறும் கிழக்கிலும் மேற்கிலும் கடல்களை எல்லையாகக் கொண்ட இத்தமிழ் நிலம் முடியுடை மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் ஆளப்பட்டு வந்திருக்கிறது.
இம்மூவேந்தர்களும் தங்கள் நாடுகளை பல ஆள்நிலப் பகுதிகளாக, இன்றைய மாவட்டம், வட்டங்களைப் போலப் பிரித்து அவற்றிற்கும் நாடுகளென்றே பெயரிட்டு வழங்கி வந்தனர். சோழ நாட்டில் பல ஊர்களைக் கொண்டது நாடு, பல நாடுகளைக் கொண்டது . வளநாடு, பல வளநாடுகளைக் கொண்டது மண்டலம் என்று வழங்கப்பட்டு வந்திருக்கின்றன அவை வருமாறு:
சோழ நாட்டில் மங்கலநாடு, மருகல்நாடு, மழநாடு, புலியூர்நாடு, அழுந்தூர்நாடு, ஆக்கூர்-நாடு, அம்பர்நாடு, அதிகைமங்கலநாடு இடையளநாடு, நரையூர்நாடு, தேவூர்நாடு, பொய்கைநாடு, மண்ணிநாடு, நன்மலிநாடு, புறங்கரம்பைநாடு, பனையூர்நாடு, திரைமூர்நாடு, பிரம்பூர்நாடு, குரும்பூர்நாடு, மிழலைநாடு, குறுக்கை-நாடு, விளத்தூர்நாடு, நாங்கூர்நாடு, ஒக்கூர்-நாடு,  உரத்தநாடு, பாப்பாநாடு, அம்பு-நாடு, காசாநாடு, தென்னமநாடு, மீசெங்கிளிநாடு, புறங்கிளியூர்நாடு, குழித்தண்டலைநாடு, நல்லாற்றூர்நாடு, ஊற்றத்தூர்நாடு, மீகோழை-நாடு, வளநாடுகள் அருண்மொழித் தேவவள-நாடு, பாண்டிய குலோசினி வளநாடு, நித்தவினோதவளநாடு, இராசராசவளநாடு, இராசேந்திர வளநாடு, உய்யக் கொண்டான் வளநாடு, சத்திரியசிகாமணி வளநாடு, கேரளாந்த கவளநாடு, செயசிங்க குலகால வளநாடு, இராசாசிரைய வளநாடு, கடலடையாதிலங்கை கொண்டவளநாடு, என்னும் வளநாடுகள் இருந்ததாகக் கல்வெட்டுகளில் காணக் கிடைக்கின்றன.
பாண்டிய நாட்டில் நாடுகள்
மேல்நாடு, சிறுகுடிநாடு, வெள்ளூர்நாடு, மல்லாக்கோட்டைநாடு, பாகநேரிநாடு, கண்டரமாணிக்கநாடு, கண்டதேவிநாடு, புறமலைநாடு, தென்னிலைநாடு, பழையநாடு, நடுநாடு, அஞ்சூர்நாடு, ஆற்றூர்நாடு பட்டமங்கலநாடு, குன்னக்கோட்டைநாடு, பதிநாலுநாடு,  திருவாதவூர்நாடு, கிழக்குடிநாடு, சிலம்பாநாடு இரும்பாநாடு, தேர்போகிநாடு, ஆங்கரைநாடு, ஏழுகோட்டை நாடு, முத்துநாடு, வல்லநாடு, கானநாடு, கல்வாயில்நாடு, தென்வாரிநாடு தளையூர்நாடு.
சேரநாட்டில் நாடுகள்
கொங்குமண்டலத்தில் பூந்துரைநாடு, காங்கேயநாடு, ஆரைநாடு, திருவானக்குடிநாடு, தலையநாடு, பூவாணிநாடு, ஒருவங்குநாடு, கிழங்குநாடு, வாழவந்திநாடு, வெங்காலநாடு, ஆனைமலைநாடு காஞ்சிகோயில்நாடு, தென்கரைநாடு, பொங்கலூர்நாடு, வாரக்கநாடு, மணநாடு, தட்டையநாடு, அரையநாடு, வடகரைநாடு, நல்லுருக்காநாடு, அண்டநாடு, காவடிக்காநாடு, இராசிபுரநாடு, குறும்புநாடு, பருத்திப்பள்ளிநாடு, ஏமூர்நாடு என மேலும் பல நாடுகள் உள்ளன.
(தொடரும்)
....நவம்பர் 01-15 இதழின் தொடர்ச்சி
கல்வெட்டில் நாடுகள்
சோழர் கல்வெட்டு முதற்பராந்தகச் சோழன் கி.பி.(907--957) ஆனைமலை நாசிங்கப்பெருமாள் சபையோர் சாசனம் -- சோழ நாட்டுப் புறங்கரம்பை நாட்டு மருதூர்.
தென்னவன் மூவேந்தவேளான் சாசனம் 995--பொய்கைநாடு இராசேந்திரசிங்க வளநாடு, தியாக வல்லி வளநாடு, திரிபுவன முழுதுடைய வளநாடு, திருவாலி நாடு, நித்தவினோத வளநாடு, இராசராசக்கிணறு மன்னன் இராசராசன் (885--1014) வேங்கைநாடு, இராசிபுரத்து நகரத்தார் சாசனம் மன்னன் இராசராசன் வேங்கைநாடு, குடமலை நாடு, சாமுண்டப்பை நிபந்தம் மன்னன் முதலாம் இராசேந்திரன் (1012--1044) பங்கள நாடு, வகைமுகைநாடு இந்த கல்வெட்டில் மன்னனின் வெற்றிச்சிறப்பைக் கூறுமிடத்தில் வங்காள தேசம் ஆரியதேசம் வென்றதாகக் குறிப்பிடப்படுகிறது. தமிழ் நிலத்திற்குப் புறத்தே உள்ள நாடுகள் தேசமென்று வழங்கப்-பட்டதால் தன்னாட்டுப் பகுதியை நாடு என்று குறிப்பிடும் கல்வெட்டு பிறநாட்டை அவர்கள் வழங்கியபடியே தேசமென்று குறிப்பிடுகிறது. இதிலிருந்து தேசம் பிறமொழிச்சொல் பிறநாடுகளைக் குறித்து வழங்கிய சொல் என்பது தெளிவாகிறது.
மணிமங்கலம் சபையோர் சாசனம் மன்னன் இரண்டாம் இராசேந்திரன் (கி.பி. 1052---64) செயங்கொண்ட சோழபுரத்து மாகனூர் நாடு.
வில்லவராயன் சாசனம் மன்னன் முதற் குலோத்துங்கன் (1070) கல்வெட்டு உள்ள இடம் திருவானைக்காவல் பாண்டிய குலாசினி வளநாடு, தென்கவிர்நாடு, மணிமங்கலம் கோவில் சாசனம் மன்னன் மூன்றாம் இராசராசன் (1216) குலோத்துங்கசோழ வளநாடு, குன்றத்தூர்நாடு. பாண்டியநாட்டுக் கல்வெட்டு புதுக்கோட்டைச் சீமைக்கல்வெட்டு குலசேகரப்பாண்டியன் (1199---1216) திருமயம் தாலுகாமலைக்கோவில் விருதராசபயங்கரவள-நாடு, கானநாடு இரயிலேசுசாசனம் தென்காசி மன்னன் மாறவன்மன் சுந்தரபாண்டியன் (1219) துருமாநாடு, கானநாடு, என்று பல நூறு ஆதாரங்கள் காட்டமுடியும்!
வீரபாண்டிச் செப்பேடு மாரியம்மன் கோயில் வழிபாட்டிற்கான கொடைபற்றியது. மன்னன் மதுரை விசுவநாத நாயக்கன் (1529) பிறதலை வளநாட்டில் சேர நாட்டு எல்லைக்கும் வருசை நாட்டு மத்தியில் புல்ல நல்லூரான வளநாட்டில் குடியிருக்கிற காமாட்சியம்மன் பக்தராகிய யாகச்சத்திரிய தெலுங்கதேசாதி-பதிகள் வமிசத்தார்கள் தலைமை புல்லன்-செட்டி. புல்லன்செட்டி. மாரியம்மன் கோயிலுக்குக் கொடையளிக்கிறார். புல்லன் செட்டி குடியிருக்கும் தமிழ் நிலப்பகுதியைக் குறிப்பிடும்.
செப்பேடு பிறதலை வளநாடு, சேர நாடு, வருசை நாடு, புல்ல நல்லூர் வளநாடு என்று குறிப்பிடுகிறது. புல்லன்செட்டியின் முன்னோர்கள் வாழ்ந்த இடம் தெலுங்கு மொழி பேசப்படும் தேசமாகும். இதுவும் இராசேந்திரசோழன் செப்பேட்டுக் குறிப்பிற்கு வலுச்சேர்க்கும் வகையில் தமிழ்-நிலத்திற்கு புறத்தேயுள்ள தெலுங்கு நாட்டைத் தேசமென்று குறிப்பிடுகிறது
முசிறிச் செப்பேடு கோயில் பூசகர் தேவரடியார்க்குக்காணி வழங்கியப்பட்டையம் மன்னன் மதுரை முத்துவீர சொக்கநாத நாயக்கன் (கி.பி. 1710) வெற்றிச்சிறப்பைக் குறிக்கிறது. இதில் கண்ட நாடு கொண்டு கொண்ட நாடு குடாதூ.ன் என்று அவனின் வெற்றிச்சிறப்பு குறிப்பிடப்படுகிறது. இதில் வரும் நாடு, இராச வளநாடு ஆமூர்நாடு குறிக்கப்படுகிறது
தஞ்சை கள்ளர் மகாசங்கத்தின் அமைச்சர் திரு.நடராசப்பிள்ளை மூலம் கிடைத்த ஆவணம். -- காசாநாடு, கீழ்வேங்கைநாடு, கோனூர்நாடு, பின்னையூர்நாடு, தென்னமநாடு, கன்னந்தங்குடிநாடு, உரத்தநாடு, ஒக்கூர்நாடு, திருமங்கலக்கோட்டைநாடு, தென்பத்துநாடு, இராசவளநாடு, பைங்காநாடு, வடுகூர்நாடு. கோயில்பத்துநாடு, சுந்தரநாடு, தளநீள்வளநாடு, பாப்பாநாடு, அம்புநாடு, வாகரைநாடு, வடமலைநாடு, கொற்கைநாடு, எரிமங்கலநாடு, செங்களநாடு, மேலைத்துவாகுடிநாடு, மீசெங்கிளி-நாடு, தண்டுகமுண்டநாடு, அடைக்-கலங்காத்தநாடு பிரம்பைநாடு கண்டிவளநாடு, வல்லநாடு வாராப்பூர்நாடு, ஆலங்குடிநாடு, விரக்குடிநாடு, கானாடு, கோனாடு பெருங்களூர்நாடு, கார்போகநாடு, ஊமத்தநாடு, பல்வேறு ஆவணங்களின் திரட்டென்பதால் வந்த நாடுகளையே பல இடங்களில் மீண்டும் வந்துள்ளன. அதை உறுதிப்பாடாக எடுத்துக்கொள்ளவும்.
தேஎம் என்னும் சொல் பத்துப்பாட்டில் பதினைந்திடங்களிலும் எட்டுத்தொகையில் நாற்பத்திநான்கிடங்களிலும் பதினெண்கீழ்க்கணக்கில் மூன்றிடங்களிலுமாக அறுபத்தியிரண்டிடங்களில் பயின்று வருகிறது. இவற்றில் முப்பதிடங்களில் திசை, திக்கு, வழி, இடம் என்று இடப்பொருளில் வருகிறது. மூன்றிடங்களில் தேயம் என்று இடையினயகரம் பெற்று அழிவு, கலக்கம் என்னும் பொருளில் வருகிறது.
தேஎம் என்னும் சொல் நாடு என்னும் பொருளில் முப்பத்தியிரண்டிடங்களில் பயின்று வருகிறது. இவற்றில் ஆறிடங்களில் தன்னாட்சி செல்லாத வேறு பல, அகன்ற இடத்தையுடைய, பணிந்தவருள்ள தேசமென்று வருகிறது. ஒன்பதிடங்களில் பகைவர் தேசமென்றும், ஆறிடங்களில் முன்பின் அறியாத தேசமென்றும் பதினைந்திடங்களில் மொழி வேறாகிய தேசமென்றும் ஓரிடத்தில் வடுகர்தேச-மென்றும் வருகிறதேயன்றி தமிழ் நிலத்தையோ தமிழ் நிலத்தின் எந்த ஒரு பகுதியையோ தேசமென்று குறித்து வரவில்லையே? வடுகர் தேசமென்று வந்திருக்கும்போது தமிழர் தேசம் என்றோ தமிழ்த்தேசமென்றோ குறித்து வரவில்லையே தமிழ்த்தேசியம் என்போர் எண்ணிப்பார்க்க வேண்டும்.
அகநானூறு பாடல்---349இல் நன்னனது நாட்டிலுள்ள ஏழில்மலை என்று அவனது ஆட்சிப் பகுதியை நாடு என்று குறிப்பிடுகிறது. தலைவன் சென்றுள்ள இடத்தைக் குறிப்பிடும்-போது சொல்பெயர். தேஎம் என்று குறிப்பிடுவதை நோக்குக. திருக்குறள் கல்வி 397 யாதானும் நாடாம் - -ஊழியல் பத்து குறட்பாக்களிலும் நாடு வருகிறது. பொருள் செயல்வகை 753-ஆம் குறளில் தேயம் இடப்பொருளில் வருகிறது. சிலப்பதிகாரம் - கொடுங்கருநாடர் முத்தொள்ளாயிரம் - வியன்தமிழ்நாடு, காவிரிநீர்நாடு, குடநாடு, புறநானூறு, வாடாயாணர்நாடு, ஒல்லையூர் நாடு, மேலும் பல சங்க இலக்கியத்தில் -- - அகநாடு, இடைகழி-நாடு, ஏறுமாநாடு, கோனாடு, மலையநாடு, மழவர்நாடு, மாறாக்கநாடு, முக்காவனநாடு என்று வருகின்றன.
தேவாரத்தில் நாடு: மருகல் நாடு, கொண்டல் நாடு, குறுகைநாடு, நாங்கூர்நாடு, நறையூர்நாடு, மிழலைநாடு, வெண்ணிநாடு, பொன்னூர்நாடு, புரிசைநாடு, வெள்ளூர்நாடு. விளத்தூர்நாடு, பெரியபுராணத்தில் - நாடு - மேன்மழநாடு, மேற்காநாடு, கோனாடு, மருகல்நாடு என்று வந்துள்ளன.
சங்ககாலந்தொட்டு மன்னர் காலந்-தொடர்ந்து மக்களாட்சிக் காலமான இன்றுவரை தமிழ்நிலமோ, தமிழ்நிலத்தின் எந்த ஒருபகுதியோ தேசமென்று குறித்து வழங்கப்-படவில்லை யென்பதை மேற்கண்ட வரலாறு கல்வெட்டு, செப்பேடு, இலக்கியம் ஆகிய சான்றுகள் நிறுவுகின்றன.
எக்காலத்திலும் இத்தமிழ் நிலங்குறித்து வழங்காத ஒருசொல் எப்படித் தமிழ்ச் சொல்லாக இருக்கமுடியும். எனவே தேசம் தமிழ்ச் சொல்லில்லை. தேஷ் என்னும் வடசொல் தமிழர்களால் திரிக்கப்பட்ட வடமொழித் திரிசொல்தான் தேசம். தமிழம் என்னும் தமிழ்ச்சொல்  திரிக்கப்பட்ட தமிழ்த்திரி சொல்தான் திராவிடம். இதுதான் மொழிநூல் காட்டும் வரலாறு.
ஒருபொருள் குறித்துவரும் பல சொல்லும், பலபொருள் குறித்து வரும் ஒரு சொல்லுமென இருவகைப்படுந்திரிசொல் என்றும் உரை சொல்லியுள்ளார் சேனாவரையர். அவர் கூற்றுப்படி தமிழைக் குறித்த இயற்சொல் தமிழம். தமிழைக் குறித்தத் திரிசொல் திராவிடம் இவ்விரு சொல்லும் தமிழென்னும் ஒரு பொருள் குறித்த இருசொற்களாகும்.
வடவேங்கடந்தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுகம் என்று பனம்பாரனரால் கட்டப்பட்டத் தமிழ் நிலம் இன்றும் உள்ளது. அந்த மண்ணின் மைந்தர்களின் மரபுவழித் தோன்றலான மக்களும் இன்றும் அந்த மண்ணில் வாழ்ந்து வருகின்றனர். அவர்-களுடைய - பண்பாடு, கலை நாகரிகத்தில் பெரியளவில் மாற்றமில்லை. ஆரியத்தின் நுழைவால் மொழி - திரிந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று தமிழ்பெயர் மாற்றம் பெற்றுள்ளது.  இதைத் தந்தை பெரியாரவர்கள் என்னருந்தமிழே நீயேதான், தெலுங்கு, நீயேதான். கன்னடம், நீயேதான் மலையாளம் என்று சரியாகக் கணித்துச் சொல்லியுள்ளார்.
தமிழிலிருந்து திரிந்த அத்திரிபு மொழி-களுக்கு தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பெயராகி அதைப் பேசுவோர் தெலுங்கர், கன்னடர், மலையாளி என்றான பிறகு அவர்களைத் தமிழரென்றும் அவர்கள் பேசும் மொழியைத் தமிழென்றும் ஒரு வரையறைக்குள் கொண்டுவர முடியாது.
அவர்களும் தமிழரென்று குறித்து வழங்கி வந்த காலத்தில் தோன்றிய தமிழின் திரிசொல்லான திராவிடம் என்னும் சொல் அவர்களையும் நம்மையும் ஒருங்கிணைத்துக்  குறித்து வழங்குவதற்கு பயன்பாட்டுச்சொல்லாக அமைந்துள்ளது. இந்த வரலாற்று நோக்கில்-தான் மொழி நூலறிஞர்கள் தமிழோடு தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மூன்று மொழிகளையும் சேர்த்து திராவிட-மொழி என்றனர்.
நாம் தமிழர்கள் நம்மோடு அவர்களையும் சேர்த்தால் நாம் திராவிடர், நம்மொழிதமிழ், நம்மொழியோடு அவர்கள் மொழிகளையும் சேர்த்தால் திராவிட மொழி, நம்நாடு தமிழ்நாடு, நம் நாட்டோடு அவர்கள் நாடுகளையும் சேர்த்தால் திராவிடநாடு (அதாவது பனம்பாரனார் கூறிய தமிழுலகம், இதுதான் திராவிடமென்னும் சொல் பிறந்த வரலாறு, பயன்பாடு நம்மிலிருந்து ஆரியத்தை வேறு-படுத்திக் காட்டியது திராவிடம். சாதிச்சகதியில் சாய்ந்து கிடந்தவனை தூக்கி நிறுத்தி துடைத்துக் கழுவித் தமிழனென்று தலை நிமிரவைத்தது. திராவிடம், மதமெனும் மலக்குழியில் மடிந்துகிடந்தவனை இனத்திமிரோடு எழுந்து நிற்க வைத்தது திராவிடம், இந்தமண்ணில் இந்திக்கென்னவேலை என்று எட்டி உதைத்துத் துரத்தியது திராவிடம். இனித்தமிழ் தனித்தமிழ்-தான், தூயதமிழ் பேசுவதால் மற்றவேற்று மொழிச் சொற்களை நீக்கிப்பேசுவதால் நம்மிடையேயுள்ள இழிவு நீங்குவதோடு மேலும் மேலும் நன்மையடைவோம் என்றார் தந்தை பெரியார்.
அக்ராசனர் அவைத்தலைவரானார், நமஸ்காரம் வணக்கமானது, விவாகசுபமு-கூர்த்தம் திருமண அழைப்பானது. இந்த நிலையைத் தந்தது திராவிடம். இந்தியா ஒரு நாடில்லை எங்கள் நாடு தமிழ்நாடு என்ற எண்ணத்தைத் தந்தது திராவிடம். இந்த மண் இழந்த பெயரை எடுத்துக் சூட்டித்தமிழ் நாடென்றது திராவிடம்.  இவற்றில் ஏதேனும் ஒன்றின் மயிர்க்காலை-யாவது அசைத்துப் பார்த்தது உண்டா தேசியங்கள்? எதையும் செய்யாமல் எழுத்து வணிகம் செய்து திராவிடத்தைக் குறைத்துப் பேசுவதையே தொழிலாகக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு தமிழின் திரிசொல்லான திராவிடம் கசக்கிறது ஆரியத் திரிசொல்லான தேசம் இனிக்கிறது. இல்லாத தேசியத்தைக் கட்டியழுகிறார்கள். இந்தத் தமிழ் மண்ணில் என்றுமே இல்லாத தேசம் அதற்கொரு தேசியமாம். அதற்குத் தமிழ் என்னும் ஒட்டுப்போட்டு தமிழ்த்தேசியமாம். அதற்கொரு தமிழ்த்தேசிய இனமாம். தேசமே இல்லாதபோது தேசியமும் தேசிய இனமும் எங்கிருந்து முளைத்தன.

நல்லதமிழ் நாடிருக்க நீசமொழி தேசம் நமக்கெதற்கு. தேசியம் பேசுவோர் திருந்த வேண்டும். நாடு நாட்டினம் தமிழ்நாடு, தமிழினம் என்று பேசவேண்டும். அதுதான் சரியாகும்.
-உண்மை இதழ்,16-30.11.15