பக்கங்கள்

திங்கள், 26 மார்ச், 2018

தமிழ் உயர்வு பெற தந்தை பெரியாரின் பணிகள்!

எத்தர்களை

முறியடிக்கும் எதிர்வினை (8)

தமிழ் உயர்வு பெற

தந்தை பெரியாரின் பணிகள்!

 இந்த ஆரிய வர்க்கத்தார் தமிழரிடையே தங்கள் சதிச் செயல்களை நிறைவேற்றி, தமிழர்களையும் தமிழ்நாட்டையும் அடிமைப் படுகுழியில் ஆழ்த்திக் கொண்டு வருவதற்கு, இவ்வளவு துணிவாக அவர்கள் செயல்படுவதற்குத் தமிழர்களின் தைரியம் இன்மையே காரணம். ஓரிரு எதிர்ப்புகள் இருப்பினும் அது போதிய அளவு இல்லை. படித்த தமிழர்கள்கூட ஆரியத்திற்கு அடிவருடிகளாகவே இருந்து வருகின்றனர்; தமிழர்க்குத் துரோகமும் செய்கின்றனர். ஒரு சிலர் விலாங்குமீன்போல் இரு பக்கமும் நடிக்கின்றனர்.

தங்கள் தாய்நாட்டிற்கும், தாய்மொழிக்கும் எதிராக உள்ளவர்கள் எவராயினும் அவர்களை வீழ்த்த, விரட்டியடிக்க முன்வர வேண்டும். எவர் பாராட்டுக்கும், புகழ் மொழிக்கும் இச்சை வைக்காமல் உழைத்தால்தான் இதைச் சாதிக்க முடியும்.

1.            தமிழ்ப் பாட்டுக்கள் முழுக்க முழுக்க தமிழ் மொழியில் இருக்க வேண்டும். 100க்கு 99 வடமொழி வார்த்தைகள் கலந்ததாக இருக்கக் கூடாது.

2.            புராண மூடநம்பிக்கைகளைக் கொண்ட பாடல்களாக இருக்கக் கூடாது.

3.            நல்ல தமிழில், இயற்கை எழில்களையும், தமிழரின் வீரத்தையும், அன்பையும், சமத்துவத்தையும், மானத்தையும், நேர்மை, நீதி நெறிகளையும், தமிழ்நாட்டுப் பற்றையும், மொழிப் பற்றையும், ஒற்றுமையையும், வரலாற்று அறிவையும் உள்ளடக்கி இருக்க வேண்டும்.

4.            வாழ்வியல் கேடுகளை அகற்றி, அறிவூட்டக் கூடியதாக இருக்க வேண்டும்.

இவற்றைச் செய்ய தமிழர்கள் துணிவு கொள்ளாதவரை, தமிழ்நாட்டுச் செல்வர்கள் இதற்குத் தொண்டாற்ற முன்வராத வரையில் நம் முயற்சி வெற்றி பெறாது.

தமிழர்கள் இனியேனும் உணர்வு பெற்று, உற்சாகமடைந்து, துணிவு கொண்டு, தங்கள் மொழியையும், நாட்டையும் நயவஞ்சகர்களிடமிருந்து காக்க வேண்டும். தமிழ் இசையின் பெயராலும், பிற வகையிலும், தமிழர்களையும் தமிழ் மொழியையும் குலைப்பதற்குச் செய்யப்படும் முயற்சிகளை வேருடன் களைந்து, தமிழ் உயர்வு பெறும் வகையில் வழிகாண வேண்டும். முன் வாருங்கள் தமிழர்களே! அதற்குத் தருணம் இதுதான்.             (25.12.1943 - குடிஅரசு - தலையங்கம்)

இப்படியெல்லாம் பெரியார் தமிழுக்கும் தமிழர்க்கும் நாள் தவறாது ஓயாது உழைத்ததால்தான், அண்ணாமலைப் பல்கலைக் கழக தமிழ்ப் பேரவை இலக்கிய மன்றத்தார் அவருக்கு சிறந்ததொரு பாராட்டு மடல் வரவேற்பிதழாக அளித்தனர்.

“தமிழகத்தின் தனிப் பெருந் தலைவர், பெருந்தகை, பெரியார் ஈ.வெ. இராமசாமி அவர்களுக்கு அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரவை, தமிழ் இலக்கிய மன்றத்தார் ஆகியோர் இன்புடன் படித்து அன்புடன் அளித்த,

வரவேற்பிதழ்

தமிழ்நாடு தந்த தக்கோய்!

வருக! வருக!

தங்கள் வரவு நல்வரவாகும்!

வண்டமிழ் நாட்டு வளர்ச்சி எண்ணி உடல் வாட்டமுறினும் உள்ளம் வாட்டமுறாது. உழைத்திடும் உண்மைத் தலைவர் வருக! முன்னோர் மொழி பொருளேயன்றியவர் நிலையும் பொன்னே போற்றுவோம் போற்றுவோம் என்றெண்ணிப் புரிந்து வரும் செயல்களே, கீழ்நாட்டைக் கீழ்நாடாக்கிற்று என்ற உண்மையை உணர்த்திய உணர்வின் வடிவோய் வருக! தமிழரின் மேன்மையைத் தடுத்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன் என்று வஞ்சினக் காஞ்சி கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சியைக் குலைப்பதற்குத் தறுகனோடு புகுத்தப்பட்ட இந்தியைத் தடுத்து நிறுத்திய செயற்கறிய செய்த செம்மலே வருக! அவரவர் தம் நாகரிகத்தை அளந்து காட்டவல்லது அவரவர் தம் பொருளறி இசையே எனப் புகன்று தனித் தமிழிசையே தமிழ்நாட்டிற்குத் தக்கதென்று அன்று முதல் புகன்று வரும் தமிழர் தலைவரே வருக! வருக!

அறிவுத்துறை வல்ல அண்ணலே! அண்ணாமலைப் பல்கலைக் கழகத்து மாணவ மாணவிகளாகிய யாங்கள் அளப்பிலா உவகை கொள்கிறோம். (எங்களுக்கு முன்னும் பின்னும் பயில்வோருக்கு தங்களைச் சந்திக்கும் வாய்ப்பு இல்லை)......................

திராவிட நாட்டுச் சீர்சால் கிழவ! மனிதன் மனிதனாக வாழ வேண்டும், அதற்கு அறிவைப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தினை வழங்கிய கருவூலமே வருக! ஆணும் பெண்ணும் அமைப்பால் வேறுபட்டோராயினும் வாழ்வில் ஒன்றுபட்ட உயர்வுடையரே எனும் நம் பொன்மொழி தழைக்க! வேற்றுமையை வளர்த்து வீணர்களை வரவேற்பது, விளக்கமற்ற மதவுரைகளே எனும் நம் விரிவுரை செழிக்க! ஆக்கந்தருவன மக்களின் தொண்டேயாகும் என்று, ஆண்டுகளாக ஆண்மையிழந்த தமிழ்நாட்டிற்கு, அடுக்கடுக்காய்ச் செய்து வரும் அரும்பெரும் பணிகள் வாழ்க! சோர்வைப் போக்கும் சுடரொளி வழங்கும் தோன்றால் வாழ்க! பெருநலம் பயக்கப் புதுநெறி வகுத்த இருபதாம் நூற்றாண்டு பெரியோய் இனிது வாழ்க!

சிதம்பரம்,       அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

07.02.1944                             (குடிஅரசு -26.02.1944)

உலகில் உயர் தகுதி பெற்று அன்றைக்கு விளங்கிய, அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையே பெரியாரை தமிழர் தலைவர், தமிழுக்கும், தமிழர்க்கும் தொண்டாற்றி ஏற்றம் பெறச் செய்த ஏந்தல் என்பதிலிருந்து பெரியார் எந்த அளவிற்குத் தமிழுக்குத் தொண்டாற்றினார் என்பதை அறியலாம், தமிழை உயர்த்திப் பிடித்தார் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

தமிழ் உயர்வு பெற, மேன்மை பெற, இவ்வளவு முயன்ற பெரியார்,  தமிழுக்கு இடுக்கண் வரும் போதெல்லாம் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தார். தமிழ்மொழி மீது இந்தி ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்று எண்ணிய பெரியார் 1926 லே இந்தி மொழியைப் பரப்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது, அதை எதிர்த்து, தமிழுக்குத் துரோகமும் இந்தி மொழியின் இரகசியமும் என்று சித்திரபுத்திரன் என்ற பெயரில் கட்டுரை எழுதினார் பெரியார்.

இந்திக்குப் பெருந்தொகை செலவிடப்படுவதால் எந்தப்பயனும் இல்லை. 100க்கு 97 பேர் ஆரியப் பார்ப்பனர்களே அதைப் படிக்கின்றனர். எந்தத் தமிழரும் அதைப் படிக்கவில்லை. அப்படியிருக்க தமிழ் மொழி வளர்ச்சிக்கு இந்திக்குச் செலுத்தும் அக்கறையில் 100 இல் ஒருபங்குகூட செலுத்தவில்லை என்று கடுமையாகச் சாடினார் பெரியார்.

1938இல் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த சி. இராஜகோபாலாச்சாரியார் கட்டாய இந்தித் திணிப்பைக் கொண்டு வந்த போது, அதை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டு இரண்டாண்டு சிறைத்தண்டனை பெற்றார். பின்பு, 1948ஆம் ஆண்டு மறுபடியும் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (ஓ.பி.ஆர்) முதலமைச்சராக இருந்த போது கட்டாய இந்தித் திணிப்பு ஏற்பட்ட போது, தந்தை பெரியார் போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றி கண்டார். 1952, 1953, 1954 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து இந்தித் திணிப்பிற்கு எதிராக இரயில் நிலையங்களில் உள்ள பெயர் பதாகைகளில் உள்ள இந்தி எழுத்துகளை தார் கொண்டு அழித்துப் போராட்டம் நடத்தினார். 1955ஆம் ஆண்டு கட்டாய இந்தித் திணிப்பை எதிர்த்து தேசியக் கொடியை எரிக்கும் போராட்டத்தை அறிவித்தார். உடனே, தமிழக முதலமைச்சராக இருந்த கல்வி வள்ளல் காமராசர் அளித்த உறுதிமொழியின் காரணமாக போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. தமிழ் நாட்டு மக்கள் விரும்புகிறவரை இந்தி திணிக்கப்படமாட்டாது என்று இந்திய பிரதமர் நேரு அவர்கள் உறுதி அளித்தார். அதன்பேரில் இந்தி திணிப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

தமிழர் இல்லத் திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் தமிழ் மொழியிலும், கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்தல், தமிழ் இசை, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக உரிமை போன்ற பல உரிமைகளைத் தமிழனுக்குப் பெற்றுத் தந்து தமிழுக்கும் பெருமை சேர்த்தவர் தந்தை பெரியார் ஆவார்கள். தமிழன் வீட்டுத் திருமணத்தில், துக்க நிகழ்வுகளில் சமஸ்கிருத மந்திரம் ஒலிப்பதை எதிர்த்த ஒரே ஒருவர் பெரியாரையன்றி வேறு யார்? தமிழ்ப் பற்றில்லாமலா பெரியார் இதற்காகக் காலமெல்லாம் போராடினார்? ‘குடிஅரசு’ ஏட்டில் தமிழுக்காக எழுப்பப்பட்ட உணர்வு பொங்கும் முழக்கங்களை கீழே காணுங்கள்.

(தொடரும்......)

- உண்மை இதழ், 16-28.2.18

தமிழை நீசபாஷை என்று சொல்லும் மகாபாவிகளும் பார்ப்பனர்களில் இன்றும் உண்டு

திராவிட நாட்டில் இருக்கும் பார்ப்பனர்கள் அத்தனைப்பேரும் பித்தலாட்டக்காரர்கள், வஞ்சனைக்காரர்கள்; தமிழுக்கு, தாய்நாட்டு மொழிக்குத் துரோகிகள் என்பதற்கு அவர்கள் சுதந்திரம் வருமுன்பே இந்தியை ஆதரித்ததும், வரவேற்றதும், இந்த நாட்டில் பள்ளிகள் வைத்துப் பரப்பியதும் - அரசியலின் மூலம் இந்திக்கு ஆக்கமும் ஆதரிப்பும் செய்ததான காரியங்களின் மூலமே விளங்கவில்லையா? ஆச்சாரியார் தன்னைத் தமிழர் லிஸ்டில் சேர்த்துக்கொள்கிறார். அவர் கோஷ்டி பத்திரிகாசிரியர்கள் தங்களைத் தமிழர் கோஷ்டியில் சேர்த்துக் கொள்கிறார்கள். ஒருகாலத்தில், இப்போது அய்க்கோர்ட் ஜட்ஜுகளில் பச்சைப் பார்ப்பனராக இருக்கும் ஜஸ்டிஸ் ஏ.எஸ். பஞ்சாபகேச அய்யர் அவர்கள் என்னைப் பார்த்து, நாயக்கரே! நான் ஆரியனா? திராவிடனா? என்னைப் பார்த்துச் சொல்லுங்கள். நீர் என்னையும் ஆரியனில் சேர்த்துக் கொள்ளுகிறீரே! என்று கேட்டார். காலஞ்சென்ற ஸ்ரீனிவாசய்யங்கார் அவர்களும் அப்படியே கேட்டார். கல்கி கிருஷ்ணமூர்த்தி முதலிய பார்ப்பன ஆசிரியர்களும் தமிழ் பேசுபவர்கள் எல்லோரும் தமிழர்கள் என்று கிளர்ச்சி துவக்கி, தமிழர் மாநாடு கூட்டினார்கள். இந்தக் கூட்டத்தார்தானே இன்று இந்தியைத் தேசிய (தேச) மொழியாக்கவும், இந்திய அரசியல் (ஆட்சி) மொழி ஆக்கவும் பாடுபடுகின்றனர்; சூழ்ச்சிகள் பல புரிகின்றனர்; எதிர்ப்புக் கிளர்ச்சியை அடக்க அண்டர் கிரவுண்ட் வேலை செய்கின்றனர்.

கம்யூனிஸ்டு கட்சியில் பார்ப்பனர் இருந்தாலும், சோஷியலிஸ்ட் கட்சியில் பார்ப்பனர் இருந்தாலும், தமிழ் இலக்கியக் கட்சியில் பார்ப்பனர் இருந்தாலும் இன்னும் எந்தக் கட்சியில் - எந்தக் கூட்டத்தில் - எந்த வேடத்தில் பார்ப்பனர் இருந்தாலும் எல்லோரும், இந்தியைத் தேசமொழியாக, ஆட்சி மொழியாக இருக்க வரவேற்பார்களே ஒழிய, -வரவேற்கிறவர்களாக இருக்கிறார்களே ஒழிய எதிர்ப்பவர்களைக் காண்பது அரிது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானாலும், பார்ப்பானுக்குச் சென்னை இராஜ்யம் - திராவிட தேசம் சொந்த நாடல்ல, தாய் நாடல்ல என்பதோடு - தமிழ் மொழி சொந்த மொழியல்ல, தாய்மொழியும் அல்ல. அது மாத்திரமல்ல; தமிழை நீச பாஷை என்று சொல்லும் மகா பாவிகளும் பார்ப்பனர்களில் இன்றும் உண்டு; அதற்கேற்ற ஆதாரங்களும் உண்டு என்று சொல்லவும் கூசமாட்டேன். ஆகவே, இந்தி எதிர்ப்பு ஒரு தேசிய(தேச)ப் போராட்டம்; ஒரு தேச மொழி(தமிழர்)ப் போராட்டம் என்பதைச் சுத்த (கலப்படமற்ற) தமிழ் (திராவிட) மக்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து தமது கடமையைச் செய்வார்களாக! (விடுதலை, தலையங்கம், 24.7.1952)

-  உண்மை இதழ், 1-15.2.18

தமிழை உயர்த்திப் பிடித்த தந்தை பெரியார்(1-2)


நேயன்

 

பாடப் புத்தகக் கமிட்டியில் உள்ளவர்கள் தமிழர்களுக்கு மான உணர்ச்சி, நாட்டு உணர்ச்சி, இன உணர்ச்சி இருக்குமானால் இராமாயண, மகாபாரதக் கதைகளைச் சரித்திரத்தில் சேர்க்கச் சம்மதிப்பார்களா?

பண்டிதர்கள், உபாத்தியாயர்கள் இவற்றை நாம் சொல்லும் போது நம்மீது பாய்கிறார்களே தவிர, தமிழர்களுக்கு இழிவு தரக் கூடிய, நமக்குத் தொடர்பில்லாத, நமது முற்போக்கைத் தடுக்கக் கூடிய, பகுத்தறிவுக்கு ஒவ்வாதவற்றை கற்பிப்பது குறித்து கவலைப்படுவதில்லை. இனியாவது தமிழ்ப் பண்டிதர்கள் இதில் கவனம் செலுத்த மாநாடு கூட்டி, இவற்றைத் தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

தமிழிலே, தமிழ்மொழி இலக்கியத்திலே, தமிழர் நல்வாழ்விலே, தமிழர் தன்மானத்திலே, தமிழர் தனி ஆட்சியிலே கவலையுள்ள நம் செல்வர்களுக்கு (கல்வி நிலையம் நடத்துகின்றவர்களுக்கு) இந்தக் காரியமெல்லாம் முக்கிய கடமையல்லவா என்று கேட்கிறோம்.

நிலைகுலைந்த தமிழ் மக்களைத் தட்டி எழுப்பி, உணர்ச்சி ஊட்டி அவர்களுக்குத் தன்மான உணர்வும், விடுதலை உணர்வும் ஊட்ட வேண்டாமா? தமிழ் மக்களை (அவர்கள் படித்தவர்களானாலும், பண்டிதர்க ளானாலும், மந்திரி, கவர்னர், வைசிராய், நிர்வாக சபை மெம்பர் ஆனாலும் பகுத்தறிவு விஷயத்தில் மரக்கட்டையாக்கிவிட்டு) தமிழர் அல்லாதவர்கள் அடிமைப்படுத்திச் சுரண்டிக் கொள்ளை கொள்வதைத் தடுக்க வேண்டாமா?

தமிழ் மக்களின் நலத்தில் கவலை யுள்ளவர்கள் எது எதற்கு என்றுதான் அழுவது? தமிழர்க்குத் தொண்டாற்றுவது என்றால் என்னதான் அர்த்தம்? ஆகவே, பிள்ளைகளில் மூடக்கருத்துக்களை, தமிழர் விரோதக் கருத்துக்களை நீக்கி, அறிவு வளர்ச்சிக்கு, மான உணர்ச்சிக்கு உகந்த பாடங்களை வைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். நமக்குச் சுதந்திரம் உள்ள கல்வி இலாகாவில் இம்மாற்றம் செய்யாமல் வேறு எதில் விடுதலை பெறப் போகிறோம்?

(‘குடிஅரசு’ - 12.02.1944)

“நம்முடைய தமிழ்ப்புலவர், பண்டிதர், தமிழறிஞர்களுக்கு இலக்கிய, இலக்கண அறிவு இருக்க முடியுமே தவிர உலகம், சரித்திரம், பூகோளம், பகுத்தறிவு, விஞ்ஞானம் என்னும் துறைகளில் அறிவோ, ஆராய்ச்சியோ இருக்க முடியுமா? இதைச் சொன்னால் நம் புலவர்களுக்குக் கோபம் வருவதில் குறைவில்லை. ஆனால் அப்புலவர்கள் தங்களைப் பற்றிச் சிந்திக்கட்டும். சமூகப் பயனுள்ள காரியம் ஏதாவது அவர்கள் செய்கிறார்களா? செய்யத் தகுந்த சக்தியோ, அறிவோ அவர்களுக்கு இருக்கிறதா? (புராண, இலக்கிய அறிவு தவிர வேறு துறை அறிவு பெற்றுள்ளார்களா?)

புலவன், வித்வான் என்றால் அறிவுடையவன் என்பதாகும். நம் புலவர்களுக்குப் பொது அறிவோ, பொதுமக்களுக்கு வழி காட்டும் திறமையோ, முன்னேற்றத்திற்கு வழிகோலவோ, புதுமைகள் செய்யவோ இன்றைய புலவர்களுக்குப் புலமை உள்ளதா? அதற்கு அவர்களுக்குப் பயிற்சி உண்டா?......

புலவர்கள் அல்லது அறிஞர்கள் என்பவர்களுக்கு உலக மாறுபாட்டை அறிந்து, அதற்கேற்ப வாழ்வியலை அமைத்துக் கொடுக்க வேண்டியது அவர்கள் கடமையாகும். ஆனால், நம் புலவர்கள், பண்டிதர்கள் மாறுபாட்டை விரும்பாதவர்கள். 3000 வருஷத்திற்கு முன்பிருந்ததை, மூடச் செய்திகளைப் பரப்பவும், நிலைநாட்டவும் முயற்சிப்பவர்கள்.

இப்படிப்பட்டக் கல்வியைக் கல்வியாளர் களைக் கொண்ட நாடோ, மக்களோ எவ்வாறு முன்னேற்றமடைய முடியும்? புலவர்களைக் குறை கூறுவதாகக் கொள்ளாமல், பாராட்டும்படியாக அவர்கள் தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காகவே இதைச் சொல்கிறோம் என்று கொள்ளவேண்டும்.இளம் புலவர்கள் சிலர் நம் கருத்தை ஏற்றுச் சமுதாய மாற்றத்திற்குப் பாடுபடுவது மகிழ்ச்சியைத் தருகிறது. என்றாலும், இன்னும் துணிவாய் வெளியில் வர வேண்டும்.

(‘குடிஅரசு’ - 15.01.1944)

மேலும்,

“மொழி என்பது உலகப் போட்டிப் போராட்டத்துக்கு ஒரு போர்க் கருவியாகும். போர்க் கருவிகள் காலத்துக்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும். அவ்வப்போது கண்டுபிடித்துக் கைக்கொள்ள வேண்டும்.’’

மொழியைப் பற்றிய தெளிவான சிந்தனையாக இது விளங்குகின்றது; உலகில் மக்கள் வாழ்க்கையென்பது போட்டியும் போராட்டமும் நிறைந்தது என்பதை யாவரும் அறிகின்றோம்.

இந்தப் போட்டிப் போராட்ட வாழ்வில் வெற்றியோ, தோல்வியோ அடைவதற்கு மொழி ஒரு பெரிய காரணமாக இருக்கின்றது. இங்குப் போராட்டம் என்பது ஆயுதங்கள் கொண்டு சண்டையிடுவது மட்டும் இல்லை. ஆனால், அறிவு கொண்டு வாய்ப்புகளை மற்றவருக்கு விடாமல் உள்ள வாய்ப்புகள் அவ்வளவையும் தமக்கே பயன்படுத்திக் கொள்ளுதலும் போராட்டம்தான். தொடர்ந்து அதனையே நிலைபெறச் செய்வது என்பதும் இப்போராட்டத்தின் வெற்றிதான். சான்றாக, நம் நாட்டுப் பார்ப்பனர் இந்தியா முழுமையிலும் கல்வி வாய்ப்புகளையும் உத்தியோக வாய்ப்புகளையும் தங்களுடையதாகத் தொடர்ந்து பல நூறு ஆண்டுகளாக வைத்துக் கொண்டிருக்கின்றனர். இது ஆயுதம் தாங்கிப் போர் புரிந்து பெற்ற வெற்றியல்ல. இது அறிவு அடிப்படையில் சூழ்ச்சியையும், தந்திரத்தையும் பயன்படுத்தி வென்ற வெற்றியாகும். இன்றும் அந்த வெற்றியை அடைந்து கொண்டிருக்கின்றனர். இந்த நீண்ட நெடிய போராட்டத்தில் உள்ள உண்மைகளை நன்குணர்ந்த நம் பெரியார், தம்முடைய அறிவார்ந்த போராட்டத்தால் வென்று, மொழி என்பது (கல்வி என்பது) உலகில் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரை வெல்லவும், வீழ்த்தவும் அதை ஒரு கருவியாய்ப் பயன்படுவதால் அதை ஒரு கருவியாய் அவ்வப்போது புதுப்பித்துப் பயன்படுத்த வேண்டும். மாறாக,  பூசிப்பதற் குரியதாகக் கொள்ளக் கூடாது என்றார். வாழ்வில் பல துறைகட்குப் பயன்படும் அறிவியல், பொறியியல், கணிதம், சட்டம் போன்றவை தமிழில் நிறைய ஆக்கப்பட வேண்டும், மொழிபெயர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் தமிழால் இப்போட்டி உலகில் போட்டியிட்டு நிலைக்கமுடியும் என்றார் பெரியார்.

தமிழிலும், தமிழ்ப் புலவர்களிடமும் உள்ள குறைகளைச் சுட்டி, மேம்படுத்த கடுமையாகப் பேசிய பெரியார் தமிழை உயர்த்திப் பேசத் தவறவில்லை.

1.            தமிழ்மொழி செய்யுள் தன்மையில் கிரேக்க மொழியை விடவும், இலக்கியப் பெருமையில் இலத்தீன் மொழியையும் வெல்லக்கூடியது என்று வின்ஸ்ஸோ கூறுகிறார்.

2.            கால்டுவெல், தமிழ்மொழி பண்டையது, நலஞ்சிறந்தது, உயர்நிலையில் உள்ளது, இதைப் போன்ற திராவிட மொழி வேறெதுவும் இல்லை என்று சிறப்பித்துக் கூறுகிறார்.

3.            சிலேட்டர் என்பவர், திராவிட மொழி எல்லாவற்றுள்ளும் மக்கள் பேசும் மொழிக்கு உரிய தன்மையைப் பெற்றுள்ள மொழி தமிழ் மொழியே; தக்க அமைப்புடையதும் தமிழ்மொழியே என்கிறார்.

4.            மர்டாக் என்பவர், துராணிய மொழிகள் பலவற்றுள்ளும் மிகச் சீரிய மொழியாயும், அழகிய இலக்கியங்களைப் பொருந்தப் பெற்றதாயும் விளங்குவது தமிழே என்றும் கூறியுள்ளார்.

தாய்மொழியிடத்து அன்பில்லாதவர்களுக்குத் தாய்நாட்டின் மீதும் அன்பிராது. எனவே, ஒவ்வொரு தமிழ் மாணவனும் தமிழ் கற்க வேண்டும்.

ஜாதிபேதம் தமிழரிடம் இல்லை. எகிப்து, கிரேக்கம், ரோம் முதலிய நாடுகளோடு அன்றைக்கே வணிகத் தொடர்பு கொண்டவர்கள் தமிழர்கள். தமிழ்ப் பெண்களும் கல்வியில் புலமை பெற்று விளங்கினர்.

தமிழ் மன்னர்கள் நீதியோடு ஆண்டனர்.

தமிழர்கள் அஞ்சாது வீரப்போர் புரியும் ஆற்றல் உள்ளவர்கள்.

நம் தாய்நாட்டுத் தமிழர்கள் ஒவ்வொருவரும் தாய்மொழியாம் தமிழைக் கட்டாயம் கற்று சிறப்புப் புலமை அடைய வேண்டும். இதனால் தமிழ் வளர்ச்சி அடையும், தாய் நாடான தமிழ்நாடு சிறப்புற்றோங்கும்.                                                (‘குடிஅரசு’ _ 18.12.1943)

என்று தமிழ் தமிழர் மேன்மையை எடுத்தியம்பும் கட்டுரையைக் குடிஅரசு இதழில் வெளியிட்ட பெரியாரா தமிழுக்கும், தமிழர்க்கும் எதிரானவர்? தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.

(தொடரும்...)

 - உண்மை இதழ், 16-31.1.18

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (7)

நேயன்

 



 

தமிழிலும், தமிழ்ப் புலவர்களிடமும் உள்ள குறைகளைச் சுட்டி, மேம்படுத்த கடுமையாகப் பேசிய பெரியார் தமிழை உயர்த்திப் பேசத் தவறவில்லை.

1.    “தமிழ்மொழி செய்யுள் தன்மையில் கிரேக்க மொழியை விடவும், இலக்கியப் பெருமையில் இலத்தீன் மொழியையும் வெல்லக்கூடியது’’ என்று வின்ஸ்ஸோ கூறுகிறார்.

2.    கால்டுவெல், “தமிழ்மொழி பண்டையது, நலஞ்சிறந்தது, உயர்நிலையில் உள்ளது, இதைப் போன்ற திராவிட மொழி வேறெதுவும் இல்லை’’ என்று சிறப்பித்துக் கூறுகிறார்.

3.    சிலேட்டர் என்பவர், “திராவிட மொழி எல்லாவற்றுள்ளும் மக்கள் பேசும் மொழிக்கு உரிய தன்மையைப் பெற்றுள்ள மொழி தமிழ் மொழியே; தக்க அமைப்புடையதும் தமிழ்மொழியே’’ என்கிறார்.

4.    மர்டாக் என்பவர், “துராணிய மொழிகள் பலவற்றுள்ளும் மிகச் சீரிய மொழியாயும், அழகிய இலக்கியங்களைப் பொருந்தப் பெற்றதாயும் விளங்குவது தமிழே’’ என்றும்     கூறியுள்ளார்.

தாய்மொழியிடத்து அன்பில்லாதவர்களுக்குத் தாய்நாட்டின் மீதும் அன்பிராது. எனவே, ஒவ்வொரு தமிழ் மாணவனும் தமிழ் கற்க வேண்டும்.

ஜாதிபேதம் தமிழரிடம் இல்லை. எகிப்து, கிரேக்கம், ரோம் முதலிய நாடுகளோடு அன்றைக்கே வணிகத் தொடர்பு கொண்டவர்கள் தமிழர்கள்.

தமிழ்ப் பெண்களும் கல்வியில் புலமை பெற்று விளங்கினர்.

தமிழ் மன்னர்கள் நீதியோடு ஆண்டனர்.

தமிழர்கள் அஞ்சாது வீரப்போர் புரியும் ஆற்றல் உள்ளவர்கள்.

நம் தாய்நாட்டுத் தமிழர்கள் ஒவ்வொருவரும் தாய்மொழியாம் தமிழைக் கட்டாயம் கற்று சிறப்புப் புலமை அடைய வேண்டும். இதனால் தமிழ் வளர்ச்சி அடையும், தாய் நாடான தமிழ்நாடு சிறப்புற்றோங்கும்.                                                

(‘குடிஅரசு’ - 18.12.1943)

என்று தமிழ் தமிழர் மேன்மையை எடுத்தியம்பும் கட்டுரையைக் குடிஅரசு இதழில் வெளியிட்ட பெரியாரா தமிழுக்கும், தமிழர்க்கும் எதிரானவர்? தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.

இவை மட்டுமல்ல, தமிழுணர்ச்சியைத் தமிழைப் பரப்ப வழிகளையெல்லாம் குடிஅரசில் வெளியிட்டார்.

1.    தமிழர் தமிழ்ப் பெயர் இட வேண்டும்.

2.    தமிழ்நாட்டுப் பிரிவு, ஊர், தெரு, வீடு பெயர்கள் தமிழில் இருக்க வேண்டும்.

3.    வீட்டிலும் கடைத்தெருவிலும், அலுவலகங்களிலும், வழிப் போக்கிலும் ஆங்கிலச் சொல்லும், சமஸ்கிருதமும் தமிழில் கலப்பதைத் தவிர்க்க வேண்டும்.

4.    தமிழில் இல்லாதவற்றிற்கு ஆங்கிலச் சொல்லைக் கலக்கலாம்.

5.    தமிழில் இல்லாதவற்றிற்குப் புதிய சொல் உருவாக்க வேண்டும். அறிஞர்கள் உருவாக்கும் புதுச் சொல்லைப் பொது மக்கள் பயன்படுத்த வேண்டும்.

6.    கோயில்களிலும், விழாக்களிலும் தமிழே ஒலிக்க வேண்டும்.

7.    தமிழைப் பிழைபட வழங்குபவரைத் திருத்த வேண்டும். என்று சென்னை தமிழறிஞர் கழகத்தின் கோரிக்கைகளை 04.12.1943 ‘குடிஅரசு’ ஏட்டில் பெரியார் வெளியிட்டு தமிழைத் தூக்கி நிறுத்த முயன்றார்.

சென்னை சாந்தோம் சாலையில் அமைந்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அமைத்த ‘முத்தமிழ் நிலையம்’ அழைப்பை ஏற்றுச் சென்ற பெரியார் ஆற்றிய உரையில்,

“நீங்கள் ஆரம்பித்திருக்கும் இந்த அமைப்பிற்கு தமிழனிடத்தில் உண்மைப் பற்றும், தமிழும் தமிழரும் மேன்மை அடைய வேண்டும் என்ற உண்மை கவலையும் உள்ள ஒவ்வொரு சுத்தமான தமிழ் மகனும் ஆதரிக்கக் கடமைப்பட்டவர் ஆவார்கள்.

உங்களுக்கு நண்பர் பாரதிதாசன் அவர்கள் கிடைத்திருப்பது உங்கள் நல்வாய்ப்பிற்கும் உங்கள் வெற்றிக்கும் அறிகுறியாய் இருக்கும். இன்று இந்த நாட்டில் தமிழும், தமிழ்க் கல்வியும், தமிழ் இசையும் தமிழர்களுடைய முன்னேற்றத்திற்கும், தன்மானத்திற்கும் பயன்படும்படி மக்கள் உணர உழைக்க ஏற்ற கவிகள் செய்து மக்களை ஊக்குவிக்க அவர் ஒருவரே என் கண்ணுக்குத் தென்படுகிறார். அவரை நாம் பயன்படுத்திக் கொள்வதில் நம் வெற்றித் தன்மையிருக்கிறது.

உங்கள் கழகம் வெற்றியடைய தளராத முயற்சி, ஒற்றுமை, கட்டுப்பாடு என்பவைகளோடு, ஒழுக்கம், நாணயம் என்பவைகளும் தக்கபடி கவனித்துப் பின்பற்ற வேண்டியதாகும். இம்மாதிரி பணிகளுக்கு என்னாலான உதவியைச் செய்ய எப்போதும் காத்திருக்கிறேன்.

தமிழ்நாட்டு இளைஞர்களும், நாட்டுப்பற்று, மொழிப்பற்று, தன்மானப் பற்று உண்மையாய்க் கொண்ட செல்வவான்களும் உங்களுக்கு உதவ வேண்டியது அவர்களது கடமையாகும்’’ என்று பேசினார் பெரியார்.
(‘குடிஅரசு’ -  08.01.1944)

தமிழன் தலை நிமிர்ந்து தன்மானத்தோடும், கல்வியும், அறிவும், உயர்வும் பெற்று வாழ வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் தட்டியெழுப்பிக் கொண்டேயிருந்தார்.

“ஏ தமிழா! உன்னுடைய நாட்டில் நீ தாசி மகனா? உனது செல்வத்தாலும், உழைப்பாலும் கட்டப்பட்ட பொது இடங்களில் உனக்கு உரிமை இல்லையா? உனது நாட்டில் உன்னை நம்பி வைத்திருக்கும் உணவுச் சாலையில் நீ தீண்டப்படாதவன் என்று உனக்கொரு தனியிடம் ஒதுக்கி வைப்பதா? என்று அடிக்கடி உணர்வூட்டினார். (குடிஅரசு  04.12.1943)

தமிழ் மொழிக்கு மட்டுமல்ல தமிழர் தழைக்கவும் பெரியார் பாடுபட்டார். திராவிடர் இயக்கம் பாடுபட்டது. கே.பி. சுந்தராம்பாள் என்ற கீழ் ஜாதிப் பெண் புகழ் பெறுவது விரும்பாத ஆரிய கூட்டமும், ஆரியப் பத்திரிகைகளும், அவரது இசைப் புலமையை இழித்துப் பேசியபோது, அந்த அம்மையாருக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் பெரியார். இத்தனைக்கும் அந்த அம்மையார் சுயமரியாதை இயக்கத்திற்கு எதிராகச் செயல்பட்டவர்.

“தமிழ்நாட்டில் தமிழ்ப் பாட்டுக்கள் பாடப்பட வேண்டும்; தமிழில் இசை இருக்க வேண்டும் என்று கூறுபவர்களை முட்டாள்கள் எனக் கூறுவோருக்குத் தமிழ்நாடு இடங் கொடுத்துக் கொண்டிருக்கிறது. தமிழர் களிடையில் தமிழ்நாட்டில் தமிழ் இசைக்கு எதிராக இருப்பவர்கள், எதிராக வேலை செய்பவர்கள், தமிழில் பாட மறுப்பவர்கள், தமிழர்களின் இக்கோரிக்கையை ஏளனம் செய்பவர்கள் யார்? ஆரியர்கள்தானே. இவர்களைத் தவிர, இத்துணிவுடன் தமிழர்களின் உப்பைத் தின்றுவிட்டு, தமிழ் நாட்டில் வாழ இடம் பெற்று, தமிழர்களின் உழைப்பால் உடலை வளர்த்துக் கொண்டு, தமிழர்களையும் அடிமைப்படுத்தி, தாழ்ந்தவர் களாக்கி, தமிழ் கலைகளுக்கு ஆரிய மேற்பூச்சிட்டு, தமிழோடு வடமொழியைக் கலந்து கெடுத்து, தமிழர்களின் வாழ்வைச் சீர்குலைத்து, தமிழ்நாட்டைத் தங்களுடைய அடிமை நாடாக ஆக்கி வைத்துக் கொள்வதற்கு (பன்னூற்றாண்டு காலமாக) பெரும் துணிவு ஆரியர்களைத் தவிர்த்து வேறு யாருக்கு இருக்க முடியும்?
(தொடரும்...)

- உண்மை இதழ், 1-15.2.18

“தை முதல் நாளே தமிழாண்டுத் தொடக்கம்’’ எனும் கருத்துக்கு ஒப்புரவளிக்கும் வள்ளலார்

ஓர் ஆண்டினை வடபுலம், தென்புலம் என இரண்டு மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.

வடபுலம் (உத்தராயன்) - தை முதல் ஆறு மாதங்கள் பகற்பொழுது அதிகம்.

தென்புலம் (தட்சிணாயனம்) -ஆடி முதல் ஆறு மாதங்கள் இராப்பொழுது அதிகம்.

இதனை ஒளிப்பக்கம், இருட்பக்கம் என்பர். ஒளி - அறிவுடைமை, ஞானம்; இருள்-அறியாமை, அஞ்ஞானம்; ஒளி- சுவர்க்கம்; இருள் - நரகம்.

இருளினின்றும் நாம் ஒளிக்குச் செல்ல வேண்டும். அஞ்ஞானத்தினின்றும் ஞானத்திற்குச் செல்ல வேண்டும். அஞ்ஞானம் நீங்கி ஞானம் உதிக்க வேண்டும். அறியாமை அகன்று அறிவுடைமை வரவேண்டும். எனவே, அறிவுடைமைக்குச் சான்றாக விளங்கும் ஒளிப்பக்கத் தொடக்க நாள், தை மாதத் தொடக்க நாளே!

இதனை வலியுறுத்தியவர் வள்ளலார். “புரட்சித் துறவி வள்ளலார்’’ எனும் நூலில் இக்கருத்து விளக்கப்பட்டுள்ளது.

“தை முதல்நாளே தமிழாண்டுத் தொடக்கம்’’ உலகப் பரிந்துரை மாநாடு, கோலாலம்பூர், 6.1.2001.

- உண்மை இதழ், 1-15.18

திங்கள், 19 மார்ச், 2018

தமிழை தந்தை பெரியார் இழிவாய்ப் பேசினாரா ?


“மொழி என்றால் என்ன? அது எதற்காகப் பயன்படுகிறது? ஒருவனுடைய கருத்தை மற்றொருவனுக்குத் தெரிவிக்க மொழி முக்கிய சாதனமாக இருந்து வருகிறது. அது ஒலி மூலமாகவே பெரிதும் இருந்து வருகிறது. மேலும், இச்சாதனம் மனிதர்களுக்கே சிறப்புடையதாக அமைந்திருக்கிறது. மிருகங்களும், பட்சிகளும் கூட சில செய்கைக் குறிப்புகளாலும், சிலவித சப்தங்களாலும் தம் கருத்தைத் தமக்குள் பரிமாறிக் கொள்கின்றன’’ என்று பெரியார் குறிப்பிடுகிறார்.

தமிழ் எழுத்துகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று விரும்பிய தந்தை பெரியார் அதற்கான தேவைகளையும், காரணங்களையும் பற்றிக் குறிப்பிடும் போது, “தமிழ் மிகுதியும் நம் முற்போக்குக்கு ஏற்றபடி செம்மைப்படுத்தப்பட வேண்டும். மக்கள் கற்க மேலும் இலகு வாக்கப்பட வேண்டும். பயனுள்ள பரந்த மொழி யாக்கப்பட வேண்டும். இன்றைய தமிழ் மிகவும் பழைய மொழி, வெகுகாலமாகச் சீர்திருத்தம் செய்யப்படாதது, மற்ற மொழிகளைப் போல திருத்தப்படாதது என்பதான இவைகள் ஒரு மொழிக்குக் குறையாகுமே தவிர, பெருமை யாகாது என்பேன். ஏன்? பழமை எல்லாம் அநேகமாக மாற்றமாகி இருக்கிறது; திருத்தப்பட்டிருக்கிறது. மாற்றுவதும், திருத்துவதும் யாருக்கும் எதற்கும் இழிவாகவோ, குற்றமாகவோ, ஆகிவிடாது. மேன்மை யடையவும், காலத்தோடு கலந்து செல்லவும், எதையும் மாற்றவும் திருத்தவும் வேண்டும். பிடிவாதமாய்ப் பாட்டி காலத்தில், பண்டைக் காலத்திய பெருமைகளைப் பேசிக் கொண்டிருந்தால், சுழிபட்டுப் போவோம். பின்தங்கிப் போவோம். மொழி என்பது உலகப் போட்டிப் போராட்டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும். போர்க் கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும். சுலபமாகத் தமிழ்மொழியைக் கற்றுக் கொள்வதற்காகவும், சுலபமாக அச்சுக் கோர்க்கவும், டைப் அடிக்கவும், தமிழ் எழுத்துக்களில் சில சீர்திருத்தங்கள் செய்யப்படுவது நலம் என்று நினைக்கிறேன்.

ஒரு மொழியின் சிறப்புக்கும், வளர்ச்சிக்கும் மற்றொரு காரணம் உண்டு. ஒரு மொழியை எவ்வளவுக்கெவ்வளவு சுலபமாகக் கற்றுக் கொள்ள முடிகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அது வளர்ச்சியடைவதும் சுலபமாகிறது. சுலபமாகக் கற்றுக் கொள்ளப்படுவதற்கு எழுத்துகள் சுலபத்தில் எழுதக் கூடியனவாகவும் எண்ணிக்கையில் குறைவாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும்.



தமிழ் எழுத்துக்களின் வேறுபட்ட வடிவங்களை யுடைய எண்ணிக்கை நூறுக்கு மேலாக இருப்பதைக் குறைத்து 54 எழுத்துக்களுக்குள் அடக்கி விடலாம் என்பதை விளக்கிக் காட்டி, இன்றைய தமிழ் எழுத்துக்களில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் பல என்பதைப் பற்றிப் பலருக்கும் அபிப்பிராயம் இருந்தாலும் எவரும் தைரியமாய் முன்வராமலே இருக்கின்றார்கள். இவ்வளவு பெரிய காரியத்துக்கு பாஷை ஞானம், இலக்கண ஞானம், பொதுக் கல்வி இல்லாத ஒரு சாதாரண மனிதன் முயற்சிக்கலாமா என்பது ஒரு பெரிய கேள்வியாக இருக்கலாம். அது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், தகுந்த புலமையும், பாஷா ஞானமும் இலக்கண அறிவும் உள்ளவர்கள் எவரும் முயற்சிக்காவிட்டால் என்ன செய்வது? அதனால் நான் செய்கிறேன்’’ என்று தந்தை பெரியார் கூறுகின்றார்.



தந்தை பெரியார் அவர்கள் மேலும் விளக்குகையில், சாதாரணமாகத் தமிழ் உயிர் எழுத்துக்களில் ஐ, ஔ ஆகிய இரண்டு எழுத்துக்களைக் குறைத்து விடலாம். இந்த இரண்டும் தேவையில்லாத எழுத்துக்கள். மேலும், இவை சுட்டெழுத்துக்களே ஒழிய, தனி எழுத்துக்கள் அல்ல. எவ்வாறு எனில், ‘ஐ’ என்பதை அய் என்றும், ஔ என்பதை அவ் என்றும் எழுதலாம் என்று பெரியார் விளக்குகிறார்.





மேலும் நடைமுறையில் இருந்த

 முதலிய எழுத்துகளை ணா,ணை, ணொ, ணோ, லை, ளை, றா, றொ, றோ, னா, னை, னொ,னோ என்றவாறு மாற்றம் செய்து தனது பத்திரிகைகளான ‘விடுதலை’, ‘குடிஅரசு’, ‘உண்மை’ போன்ற இதழ்களில் 1935ஆம் ஆண்டு முதல் நடைமுறைப் படுத்தினார். தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாவினையொட்டி தமிழக முதல்வராக இருந்த மாண்புமிகு எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் 19.10.1978 ஆம் ஆண்டு முதல் தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த அரசாணை பிறப்பித்துப் பெருமை தேடிக் கொண்டார். ஆக, தமிழில் பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் செய்தது தமிழ் வளர்ச்சிக்காகவே என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.


தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றது ஏன்?

“தமிழ் மொழியானது ஏன் காட்டுமிராண்டி மொழி என்று சொல்லுகின்றேன்? எதனால் சொல்லுகிறேன் என்று இன்று கோபித்துக் கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர் கூட சிந்தித்துப் பேசுவதில்லை. வாய் இருக்கிறது எதையாவது பேசி வயிறு வளர்ப்போம் என்று நினைத்து அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத்தைப் பற்றிக் கூடச் சிந்திக்காமல் பேசி வருகிறார்கள். இப்படிப்பட்ட இவர்கள் போக்குப்படியே சிந்தித்தாலும் தமிழ் மொழி மூவாயிரம், நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மொழி என்பதை தமிழின் பெருமைக்கு ஒரு சாதனையாய்ச் சொல்லிப் பேசுகிறார்கள்.

நானும் ‘தமிழ் காட்டுமிராண்டி’ மொழி என்று அதைத்தானே முக்கிய காரணமாய்ச் சொல்லுகின்றேன். பிரிமிட்டிவ் (றிக்ஷீவீனீவீtவீஸ்மீ) என்றால் அதன் தத்துவம் என்ன? பார்பேரியன், பார்பேரியனிசம் என்றால் அதன் பொருள் என்ன? 3000, 4000 ஆண்டுகளுக்கு முன் என்பது பிரிமிட்டிவ், பார்பேர்யனிசம் என்பதற்கு அக்கால மக்கள் அறிவு, அக்கால மக்கள் நிலை முதலியவை என்பதற்கு என்ன பேதம் கற்பிக்க முடியும். ‘நாகரிகம் அடையாத கூட்டம் என்றுதானே பொருள்’ என்று விளக்குகிறார்.

தமிழ்ப்புத்தாண்டு கதை சொல்லுகிறார்கள். 60 ஆண்டுகள் என்று பிரபவ, விபவ, குரோதி, விரோதி ஆண்டுகள் என்று சொல்லுகின்றார்களே. இந்த 60 ஆண்டுகளை எடுத்துப் பார்த்தால் ஒரு ஆண்டாவது தமிழ்ச் சொல் பெயர் உண்டா? தமிழ் வருஷப் பிறப்பு என்று சொல்லுகிறார்கள். தமிழர் ஆண்டு என்று சொல்லுகிறார்கள் வெட்கப்பட வேண்டாமா? தமிழ் வருடங்கள் நாரதருக்கும் கிருஷ்ணருக்கும் பிறந்தது என்று ஏற்பது காட்டுமிராண்டித்தனமல்லவா?
வெறும் புராணங்களும் இதிகாசங்களும் மட்டும் கொண்ட ஒரு மொழி வளர்ச்சி அடையாது, அறிவியல் கருத்துக்களை, உலக மாற்றங்களை, பொருளாதார நடைமுறைகளை உடனுக்குடன் அறிய முடிவெடுக்க ஆங்கில அறிவு கட்டாயம். ஆங்கிலத்திலுள்ள காலத்துக்கேற்ற, அறிவுள்ள உயரிய கருத்துகளை தமிழுக்குக் கொண்டு வரவேண்டும்’’ என்பதே பெரியார் கொள்கை. தமிழும், தமிழ்ப் புலவர்களும் எப்படி காலத்திற்கு ஏற்பத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பெரியார் அளவுக்கு அதிக அக்கறையோடு கூறுகிறார்.

“இந்த நாட்டுத் தமிழ்ப் பெருங்குடி மக்களாகிய நம்மைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள ஏதாவது சாதனமிருக்கிறதா?’’ 

பள்ளியில் படிக்கும்போது தெரிந்து கொள்ளலாம் என்றால் அங்கு தமிழர்களைப் பற்றி ஒரு சேதியும் இல்லை. எவ்வித பாடப் புத்தகமும் இல்லை. அய்யர்  பிராமணன் போன்ற வார்த்தைகள் காணப்படு கின்றனவே அன்றி, “தமிழர் - திராவிடர்’’ என்ற வார்த்தைகளுக்கு அங்கு இடம் கிடையவே கிடையாது. மேல் வகுப்புக்கு வந்தால் தமிழ்நாட்டு சரித்திரம் இல்லை. இராமாயணம், மகாபாரதம், அசோகன், முஸ்லீம், வெள்ளையர் ஆட்சியும்தான் விளக்கப்படுகிறதே தவிர திராவிடர் தமிழர் என்கிற ஆட்சியைப் பற்றி காண்பது மிகவும் அருமை. அப்படி ஏதாவது காணப் பட்டாலும் அது பெரும் பித்தலாட்டமும் மோசடியுமாய் இருக்கும்.

ஆகவே, நமது (தமிழ்) பிள்ளைகள் நம்மைப் பற்றித் தெரிந்து கொள்ள வழியில்லை. ஆரியருக்குமுன் தமிழன் என்ன சமயத்தவன் அவன் கடவுள் எப்படிப்பட்டது. அவன் வாழ்க்கை முறை எப்படிப்பட்டது என்ற சரித்திர ஆதாரம் ஏதும் இல்லை. தமிழர்கள் காட்டுமிராண்டியாக இருந்தார்கள் என்பதற்கே ஏராளமான ஆதாரங்கள் கற்பிக்கப் படுகின்றன. நம் பிள்ளைகளுக்கு நம்மைப் பற்றி கீழ் வகுப்பிலிருந்து தெரிந்து கொள்ள வழி செய்தால் ஒழிய, எப்படி அவர்கள் தங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்!


(தொடரும்...)
-  நேயன்


- உண்மை இதழ், 1-15.1.18

புதன், 14 மார்ச், 2018

மயிலை சீனி. வேங்கடசாமி

(16.12.1900 - 8.7.1980)


சீனி.வேங்கடசாமி ஒரு தமிழறிஞரும், எழுத்தாளருமாவார். தமிழக வரலாறு பற்றி பல அரிய ஆய்வு நூல்களை எழுதியவர்.

வேங்கடசாமி சென்னையின் மயிலாப்பூர் பகுதியில் 1900 இல் பிறந்தார். அவரது தந்தை ஒரு சித்த மருத்துவர். வேங்கடசாமியின் மூத்த அண்ணன் தந்தையைப் போல சித்த மருத்தவரானார். இரண்டாவது அண்ணன் சீனி. கோவிந்தராஜன் ஒரு தமிழறிஞர். திருக்குறள் காமத்துப்பால் நாட்கள், திருமயிலை நான்மணி மாலை ஆகிய படைப்புகளை எழுதியவர். வேங்கடசாமி கோவிந்தராஜனிடம் தமிழ் பயின்றார். பின் மகா வித்வான் சண்முகம் பிள்ளை, பண்டித சற்குணர் ஆகியோரிடம் தமிழ் படித்தார். பின்னர் நீதிக்கட்சி நடத்திய திராவிடன் இதழின் ஆசிரியர் குழுவில் பணிக்குச் சேர்ந்தார். ஓவியக்கலையில் கொண்ட ஆர்வத்தால் சில காலம் எழும்பூர் ஓவியப் பள்ளியில் படித்தார். குடும்பப் பொருளாதாரச் சூழல் காரணமாக ஆசிரியர் பயிற்சி பெற்று சாந்தோம் மாநகராட்சிப் பள்ளியில் ஆசிரியராகப் பணிக்குச்  சேர்ந்தார். தனது விடுமுறை  நாள்களில் தமிழகமெங்குமுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களுக்கும், வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று ஆய்வு செய்தார். தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல் ஆகிய துறைகளில் அரிய களப்பணியாற்றினார். தென்னிந்திய எழுத்து முறைகள் யாவற்றையும் கற்றுத் தேர்ந்தார். பிராமி, கிரந்தம், தமிழ் என அனைத்து எழுத்துமுறை கல்வெட்டுகளைப் படித்து ஆராயும் திறன் பெற்றார். கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளையும் கற்றறிந்திருந்தார். இந்து சமய வரலாற்றாளர்கள் அதிகம் கவனம் செலுத்தாத சமண, புத்த சமய கோயில்களையும் தொல்லியல் களங்களையும் ஆய்வு செய்தார். இரு முறை (1963-64) சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

வேங்கடசாமியின் தமிழ்ப்பணியை பாரதிதாசன் பின்வருமாறு பாராட்டியுள்ளார்:
தமிழையே வணிகமாக்கித்

தன்வீடும் மக்கள் சுற்றம்
தமிழிலே பிழைப்பதற்கும்
தலைமுறை தலைமுறைக்குத்
தமிழ் முதலாக்கிக் கொண்ட
பல்கலைத் தலைவன் எல்லாம்
தமிழ்ச் சீனி வேங்கடத்தின்
கால்தூசும் பெறாதார் என்பேன்

2000ஆம் ஆண்டு தமிழக அரசு சீனி.வேங்கடசாமியின் நூல்களை நாட்டுடைமை ஆக்கியது.

- உண்மை இதழ், 16-31.12.17

திங்கள், 12 மார்ச், 2018

சிந்து சமவெளியில் பேசப்பட்ட மொழி தமிழ்தான் கீழடி அகழாய்வு மூலம் உறுதியாகிறது


சென்னை, மார்ச் 12- -சிந்து சம வெளியில் பேசப்பட்டமொழி தமிழ்தான் என்று கீழடி அக ழாய்வு மூலம் தெரியவந்திருப் பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ள னர்.

தமிழகத்தில் ஆதிச்சநல் லூருக்கு அடுத்தபடியாக கீழடியில்தான் பெரிய அளவிலான அகழாய்வு மேற்கொள்ளப்பட் டது. தற்போது நிறுத்தி வைக் கப்பட்டு இருந்த ஆதிச்சநல்லூர் ஆய்வு மீண்டும் தொடங்கப் படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கீழடி யில் கிடைத்து இருக்கும் தமிழ் எழுத்துக்கள் பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளன.

இதுநாள்வரை கூறப்பட்டு வந்த வரலாற்றை மொத்தமாக மாற்றும் வகையில் இந்த செய் திகள் அமைந்துள்ளன. 2017-இல் நடத்தப்பட்ட அகழாய்வு முடிவுகளின் படி கீழடியில் கிடைத்தபொருட்கள் மிகவும் பழமையானவையாக உள்ளன. அங்கு கிடைத்த வீட்டு உப யோக பொருட்கள் எல்லாம் 2200 ஆண்டுகள் பழமையானது என்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதால், இதுதான் மிகவும் பழமையான நாகரிகம் என்று மதிப்பிடப்படுகிறது.

மேலும், கீழடியில் காணப் பட்டது அனைத்தும் தமிழ் எழுத்துக்கள். அதிலும் பழைய தமிழ் எழுத்து முறைகளே பயன்படுத்தப்பட்டு இருக்கின் றன. அத்துடன், சங்ககால தமிழ் ஓலைச்சுவடிகளைச் போலவே இந்த எழுத்துக்கள் இருக்கின் றன. இந்த மாதிரியான எழுத் துக்கள் சிந்து சமவெளி ஆய் விலும் கிடைத்து இருப்பதால், சிந்து சமவெளியில் பயன்படுத் தப்பட்ட மொழி தமிழ்மொழி தான் என்றும், அங்கு பயன் படுத்தப்பட்ட வார்த்தைகளும் தமிழ் வார்த்தைகள் என்றும் ஆய்வாளர்கள் முடிவுக்கு வந் திருக்கின்றனர்.

இதுகுறித்து இன்னும் ஆராய்ச்சிகள் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. கீழ டியில் நடத்தப்படும் ஆய்வுகள் பல முக்கியமான வரலாற்று உண்மைகளை வெளிப்படுத் தும் என்று சங்க கால குறியீட்டு ஆராய்ச்சியாளர் சுபாஷ் சந்திர போஸ் தெரிவித்துள்ளார்.

- விடுதலை நாளேடு, 12.3.18