பக்கங்கள்

செவ்வாய், 24 செப்டம்பர், 2019

மக்களினம் மாண்புற வள்ளுவர் தந்த குறள்! (5)

13.11.1948-குடி அரசிலிருந்து...

ராவணனை விட்டு விபீஷணன் நீங்கிய தற்கும், சுயமரியாதைக் கட்சியை விட்டு ராம நாதன் நீங்கியதற்கும் ஒப்புதல் காட்டிவிட்டாரே ராஜகோ பாலாச்சாரியார். இது போலவே வெங்கிடசாமி நாயுடு விஷயத்திலும் சொன் னார். இந்த ராமாயண சம்பிரதாயந்தானே அன்று முதல் இன்று வரைக்கும் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

கீதையை ஆரியர்கள் போற்றுவதேன்?

நீங்களே சிந்தித்துப் பாருங்கள், பார்ப்ப னர்கள் குறளுக்கு எவ்வளவு மரியாதை செய்கிறார்கள். கீதைக்கு எவ்வளவு மரியாதை செய்கிறார்கள். அவர்கள் பகவத்கீதையை அச்சுப் போட்டு இனாமாக வழங்கி வருவதும் அதைப்பற்றிப் பெருமையோடு எங்கும் பேசிவருவதும் உங்களுக்குத் தெரியாத தல்லவே! இது ஏன் என்று நீங்கள் சிந்தித்ததுண்டா? கிருஷ்ணன் கீதையின் மூலம் 4 ஜாதிமுறை உண்டென்பதையும், அதில் பார்ப்பனர்களே முதல் ஜாதியினர் என்பதையும் - கடவுளுக்கும் பெரியவர்கள் பார்ப்பனர்கள் என்ற தத்துவம் இருப்பதோடு, எப்படியும் அதர்மம் செய்தவர்களுக்கு மன்னிப்பு உண்டு, வர்ண அதர்மம் செய்பவர்களுக்கு மன்னிப்பு இல்லை என்று ஒப்புக் கொண்டிருப்பதுதான் அதற்குக் காரணம் என்பதை உணருக! வேதாந்தி களுக்கும், பார்ப்பனர்களுக்கும் கீதையில் 1000 வரி தெரிந்திருப்பது ஏன்? குறளில் 2 வரி கூடத் தெரியாதது ஏன்? என்பதையும் சிலர் காவி வேட்டி கட்டிக்கொண்டு திராவிடர் கூடக் கீதைப் பிரசாரம் செய்துவருவது ஏன்? என்பதையும் யோசித்துப் பாருங்கள். கீதை எவ்வளவு அக்கிரமத்துக்கும் முக்காடுபோட்டு விடும் காவி உடையைப் போல் ஏன்? கீதைக்குத் தலைவனான கிருஷ்ணனே அக்கிரமத்தின் தலைவனான காரணத்தால்.

பித்தலாட்ட போர்வை கீதை! அதற்கு பெரிய நெருப்பு குறள்!

தோழர்களே! நாம் எதிர்க்கும் நான்கு ஜாதிமுறையைக் கடவுளின் பேரால் வலி யுறுத்தத்தான் கீதையும் கிருஷ்ண பஜனையும் என்பது உங்களுக்கு நினைவிருக்கட்டும்.

கீதை படிப்பவர்கள் எத்தகைய தர்மத் தையும், ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டிய அவசிய மில்லை. ஏனெனில் பகவானே இதைச் செய்துள்ள போது சாதாரண மனிதனான நான் எம்மாத்திரம் என்றோ, எல்லாம் பகவான் செயல் என்றோ, நான் ஏன் பார்ப்பான் என்பதைக் கிருஷ்ண னிடம் கேட்டுத் தெரிந்துக் கொள் என்றோ சுலப மாகப் பதில் கூறிவிடலாம். ஆனால் குறளைப் படித்தாலோ தர்மத்தின் படி நடக்க வேண் டும். பித்தலாட்டம் செய்ய முடியாது. பித்த லாட்டம் செய்பவரைக் கண்டாலும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. குறளிலும் இன்றைய நிலைக்குப் புறம்பான கருத்துக்கள் சில இருக்கலாம். அவற்றை மாற்றிவிட வேண்டியதுதான். அத்தகைய மாற்றத்திற்கு இடம் தருவதுதான் குறள்.

மனித சமுதாயத்திற்கே வழிகாட்டி குறள்!

குறளை முசுலிம்கள், கிறிஸ்தவர்கள் உட் பட யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். மாமி சம் சாப்பிடுவது மறுக்கப்பட்டிருக்கிறது என்னலாம். காய்கனி தானியம் இவை அபரி தமாகக் கிடைக்குமானால், மாமிசம் தின்ன வேண்டிய அவசியம்தான் என்ன இருக்கிறது.

முகம்மது நபியவர்களால் கூறப்பட்டுள்ள பல கருத்துக்களைக் குறளில் அப்படியே காணலாம். முசுலிம்களுக்கு எதிராக அதில் ஒன்றுமே காணமுடியாது. அது மனு தர்மத்துக்கு உண்மையான விரோதி நூல் என்று திடமாகவே சொல்லலாம். மனுதர்ம சூத்திரங்களுக்கு நேர்மாறான கருத்துக் களைக் கொண்ட குறள் அடிகளை ஏராள மாகத் திருக்குறளிலிருந்து எடுத்துக்காட்ட லாம்.

மனித சமுதாயத்திற்கே நல்வழிகாட்டி, நன்னெறி யூட்டி, நற்பண்புகளையும் ஒழுக் கங்களையும் கற்பிக்கும் வகையில் எழுதப் பட்ட நூல்தான் திருக்குறள். எனவேதான், எல்லா மக்களும் எல்லா மதத்தவரும் எங்கள் குறள், எங்கள் மதக்கருத்தை ஒப்புக் கொள்ளும் குறள் என்றெல்லாம் அதைப் போற்றி வருகிறார்கள்.

எனவேதான், அதன் ஆசிரியரைக் கூட சில மதத்தினர் தம்மவர் என்று உரிமைப் பாராட்டிக் கொள்கிறார்கள். ஜைனர் தம்மவர் என்று கூறி அவரை மொட்டைத் தலையராகக் காட்டுகிறார்கள். சைவர்கள் அவரை தம்மவர் என்று கூறி ஜடாமுடி யுடன் விபூதிப் பட்டையுடன் காட்டு கிறார்கள். அவரோ எம்மதமும் இல்லா தவராகவே தோற்று கிறார். ஒரு இடத்தில் மயிரும் வைத்துக்கொள்ள வேண்டியதில்லை. மொட்டையும் அடித்துக்கொள்ள வேண் டியதில்லை. யோக்கியனாய் இருக்க வேண்டு மானால் என்று கூறியிருக்கிறார். அப்படியான பெரியாரை வைணவர்கள் தம்மவர்தான் என்று கூறிக்கொண்டு வடகலை நாமம் போட்டுக் காட்டு கிறார்கள். அவரை ஆழ்வாரில் ஒருவராகவும் ஆக்கிவிடுகிறார்கள். அவருக்கு வடகலை நாமம் போட்டது மகாமகாக் கொலைபாதகத்தனமாகும்.

இராமாயணக் கூத்து ஏன்?

திருவள்ளுவர் தவிர்த்த வேறு யாரையும் மற்ற மதத்தவர்கள் இம்மாதிரி மதிப்ப தில்லையே. இதிலிருந்தே தெரியவில்லையா, குறளில் காணப்படும் திராவிடப் பண்பு எத்தகையது என்று? இப்படிப்பட்ட திருக் குறளை விரும்புவதை விட்டு நம் நாட்டவர்கள் இராமாயணத்தை வைத்துக் கொண்டு கூத்தடிக்கிறார்களே அது நியாயமா?

எவளோ ஒருத்தி சொன்னாளாம் பன்னாடைக்குப் பிறந்ததெல்லாம் பந்தம் பிடிக்குது. பண்டாரத்துக்கு பிறந்ததெல்லாம் மணியம் பார்க்குது என்று. அதாவது மதிக்கப்பட வேண்டியது மதிக்கப்படாமல், மதிக்கப்படக் கூடாதன மதிக்கப்படுகின்றன என்று அர்த்தம். மேற்படி பழமொழி எப்படி வந்ததென்றால், முன்பெல்லாம் மிராசு தாரர்கள் கூத்திகளை வைத்துக் கொள் வார்கள். அவர்கள் கூத்தியோடு இருந்தால் அவர்கள் மனைவிமார் ஊர் பண் டாரத்தைத் துணைக்கு வைத்துக் கொள்வார்கள்.

தொடரும்

ஆரியரின் ஆத்திரம்


வள்ளுவரை ஆரிய மதத்தோடு சேர்த்துக் கொண்டு எப்படி அவர் மறைக்கப்பட்டு வந்தாரோ, அப்படியே புத்தரையும் பார்ப்பனர் மறைத்து வந்ததை வெட்ட வெளிச்சமாக்கு கிறோமே என்கின்ற ஆத்திரத்தின் காரண மாகப் பார்ப்பனர் கண்டபடிப் பேசுகிறார்கள். நமக்கு அதைப்பற்றிக் கவலையில்லை. மேலெல்லாம் மலம் பூசிக் கொண்டு திரிபவன் மற்றொருவ னைப் பார்த்து, 'உன்மேல், கெட்ட நாற்றம்; அடிக்கிறது' என்பது போல்தான் அது.

("புரட்சிக்கு அழைப்பு", என்ற நூலிலிருந்து)

 - விடுதலை நாளேடு, 13 .9 .19


 


வெள்ளி, 6 செப்டம்பர், 2019

ஆதிபகவான் யார்?



திருக்குறளுக்கு புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் உரை எழுதத் துவங்கி - தனது குயில் ஏட்டில் அதனை வெளியிட்டு வந்தார்; பரிமேலழகரின் பார்ப்பனக் கண்ணோட்டமின்றி, அறிவார்ந்த  கண்ணோட்டத்தில் புரட்சிக்கவிஞர் எழுதிய உரை 85 குறட்பாக்களோடு நின்று விட்டது; டாக்டர் ச.சு.இளங்கோ அவர்களால் தொகுக்கப்பட்டு - பாரி நிலையத்தால் வெளியிடப்பட்ட  குறளை வெளியிடுகிறோம்.


"அகர முதல வெழுத்தெல்லா மாதி

பகவன் முதற்றே யுலகு" என்பது பாட்டு.

"அகரம் முதல எழுத்து எல்லாம் ஆதி

பகவன் முதற்று உலகு" என்பது அப்பாட்டின் சொற்களைப் பிரித்துரைத்தது.

அகரம் முதல, எழுத்து எல்லாம் ஆதி

உலகு பகவன் முதற்று ஏ என்பது சொற்களைப் பிரித்து,  மொழி மாற்றி யமைத்தது. மேற்செய்யுட்களுக்கெல்லாம் சொற்பிரித்தலை மட்டும் குறிக்க பி என்பதையும், அதனோடு மொழி மாற் றையும் குறிக்க பி.மா என்பதையும் குறிக்கப்படும்.

பொருள்: அகரம் முதல - அகரத்தை முதலாக உடைய, எழுத்து - எழுத்துக்களும், எல்லாம் - அவ்வெழுத்துக் களாலாகிய சொற்களும், அச்சொற்களால் பெறப்படும் பொருள்களுமாகிய  எல்லாம். ஆதி முதன்மையினின்று தோன்றியவை. உலகு பகவன் முதற்று - மக்கள் பகவனை முதல்வனாகக் கொள்ளத்தக்கவர்.

கருத்து: உலகும், உயிர்களும், மற்றுள்ள வைகளும் ஆதி என்பதினின்று தோன்றி யவை, ஆயினும் உலக மக்கள் பெறத்தக்க பேறு மெய்யுணர்வு ஒன்றே. ,

ஏ-ஈற்றசை, முதல - குறிப்புப் பெயரெச்சம். மலர, காய (அகம்) என வந்தன காண்க. ஆதி வட சொல்லன்று. தூய தமிழ்ச்சொல்லே. அஃது ஆதல் எனப் பொருள்படும். தொழிற்பெயர். ஆ - முதல் நிலை, தி - இறுதி நிலை. செய்தி, உய்தி என்பவற்றிற்போல். ஆதி - முதன்மை ஒரு பொருட் சொற்கள். இதை வடவர் மூலப் பிரகி ருதி என்பர்.

ஆதியாவது எல்லாப் பொருளும் தோன்றுதற்கிடமாவது. இதை,

"தனையறிவரிதாய்த் தாமுக் குணமாய்

மனநிகழ் வின்றி மாண்பமைப் பொரு ளாய்

எல்லாப் பொருளும் தோன் முதற் கிடமெனச்

சொல்லுதல் மூலப் பகுதி.

(மணி -சமய 203-206)

என்பதாலும் அறிக.

காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மூன்று பண்புகளும் ஒன்றுபட்ட நிலை ஆதி என்று உணரப்படும். அவற்றின் கலங்கிய நிலையே இவ்வுலக மெல்லாம் என்க. எல்லாம் ஆதி என்றதால், உலகம் ஆதி அல்லது முதன்மையினின்று தோன்றியது என்றவாறாயிற்று. எல்லாம் ஆதியினின்று தோன்றின என்னாது, எல்லாம் ஆதி என்றது என்னையெனில் காரணத்தில் உள்ளதே காரியத்திலும் உள்ளது என்னும் உள்ளது சிறத்தல் (சற்காரியவாதம்) ஆனதோர் முறை கொண்டு, மகனறிவு, தந்தையறிவு (நாலடி) என்பது போல. எல்லாம் எழுவாய். ஆதி. பயனிலை.

பகவன் வட சொல் அன்று; பகல் எனப் பொருள்படும் பகவு ஆண்பால் இறுதிநிலை பெற்றது. பகல் அறிவு, ஆகுபெயர், உணர்வு எனலும் அஃது. பகவன் ஆண்பாலாற் சொல்லப் படினும், பகவு அஃதாவது உணர்வு என்றே கொள்க.

இக்குறட்பாவுக்குப் பலரெல்லாம் பலவாறு பொருள் கூறினர். அவையனைத்தும் தத்தம் சமயத்தை அடிப் படையாகக் கொண்டவை. திருவள்ளுவர் சமயக் கணக்கர் மதிவழியே நூல் செய்தாரிலர்.

ஆத்திகன்: பகவன் என்பதற்கு மெய்யுணர்வு, அதாவது அறிவு என்று பொருள் கூறிக் கடவுள் என ஒருவர் இல்லை என்று ஆக்க எண்ணுகின்றீரா?

உரை ஆசிரியர்: ஆமாம் - அறிவான தெய்வமே என்று. தாயுமானாரும், அறிவை அறிவது பொருளென அருளிய குருநாதா என்று அருணகிரிநாதரும் அய்யுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர்வில்லாதவர்க்கு என்று இந்நூலாசிரியரும் போல.

நாத்திகன்: அறிவு ஒன்றே பெறத்தக்கது என்று கூறிக் கடவுள் ஒருவர் உண்டு என்பதை உறுதி செய்கின்றீர்களா? உரை ஆசிரியர்: பெறத்தக்கது அறிவு என்று நான், உண்மை உரை. கூறினேன். அதனால் கடவுள் ஒருவர் உண்டு என்று ஆய்விடாது. அப்படி ஆய்விடுமானால் ஆய்விடட்டும். அதனால் உமக்கென்ன முழுகிப்போகும்?

ஆத்திகன்: மக்கள் பெறத்தக்கது அறிவு என்று மட்டும் கூறிய நீவிர் அறிவாகிய கடவுள். என்று ஏன் கூற

வில்லை?

உரை ஆசிரியர்: கடவுள் என்ற சொல் மக்கள் அறிவு பெறாத காலத்தில் ஏற்பட்ட தாய் இருக்கலாம். கடவுள் - கடந்தது; அறிவுக்கு எட்டாதது என்ற அதன் பொருளையும் நோக்குக. எட்டாத ஒன்றுக்குப் பெயர் எப்படி எட்டியிருக்கும்?, இவைகளைக் கருதியன்றோ வள்ளுவர் தம் நூலில் கடவுள் என்ற பெயரையே எடுத்தாளாது விட்டார்.

நாத்திகன்: சாங்கியம் என்பது ஒரு மதமா?

உரை ஆசிரியர்: இல்லை . தமிழர்பால் தொன்றுதொட்டு இருந்துவரும் பண்பாடு. இடையில் திருவாரூர்க் கபிலர் எண்ணூல் என்ற பெயரால் நூலாக இயற்றியருளினார்,

நாத்திகன்; அந்தப் பண்பாடுகளை அடிப்படையாகக் கொண்டே அக்கால நூல்கள் உண்டாகும் என்பதை விளக்க முடியுமா? உரை ஆசிரியர்: மேல் என்றால் வானத்தை நோக்கி அண்ணாந்து பார்ப்பது இந்நாள் வழக்கம். இந்நாளில் ஏற்படும். நூற்களும் அதை அடிப்படையாகக் கொண்டு தான் உண்டாகும். கீழ்ப்புறத்திற்கும் மேல் என்பது பொருந்தும் என்று கொண்டு கீழ்நோக்கார். அதுபோலவே அக்காலத் தமிழர்கள் இந்த உலகம் என்றைக்கு உண்டானது என்று ஆராய்வது பயனற்ற வேலை என்பார், உலகம் ஆதியினின்று முதன்மையினின்று தோன்றிற்று என்பார்! அந்தக் கருத்தின், பண்பாட்டின் அடிப்படையில்தான் அக்கால நூற்களும் அமைந்தன, உலகம் ஒருவனால்  உண்டாக்கப்பட்டது என்பதை அடிப்படையாகக் கொண்டு நூல் அமையாது. இதுதான் சாங்கியத்தின் அடிப்ப டையில் குறள் உண்டாயிற்று எனப்பட்டது. சாங்கியம் மதமன்று. அது எவராலும் உண்டாக்கப்பட்டது அன்று, அக்கருத்துக் களின் தொகுதியே எழுதாக்கிளவி எனப்பட்டது. எழுதியபின் எண்ணூல் என்றார்கள்.

எண்ணூல் பல மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. ஆரியர் - திபேத்தியர் முதலியவர்களால் பலவாறு திரித்து எழுதப்பட்டது, சாங்கியக் கருத்துக்கள் இயற்கையோடு இயைந்தவை, பகுத்தறிவுக்கு ஒத்தவை. ஆதலால்தான் அக்கருத்துக்கள் தத்துவ நூற்கள் என எழுந்த அனைத்திற்கும் அடிப்படையாகி மிளிர்கின்றன.

மதம், சமயம் என்று சொல்லப்படுவன அனைத்தும் ஒருவனால் - ஒரு கொள்கையை நோக்கி மக்களை இழுக்க உண்டாக்கப்படுவன, சாங்கியம் - கருத்துக்கள் - பண்பாடுகள் எவராலும் - எவரைத் தம்பக்கம் இழுக்கவும் ஆக்கப்பட்டன அல்ல என்பதை உணர்வார். அதை மதம் என்றார் என்பதை நீவிர் இங்கு நினைவிற் கொள்க.

ஆத்திகன்: எழுத்தெல்லாம், அகரத்தை முதலாகக் - காரணமாகக் கொண்டவை. அதாவது. அகரத்தினின்றே மற்ற எழுத்துக்கள் உண்டாயின, இது பெரியோர் கொள்கையல்லவா?

உரை ஆசிரியர்: எழுத்துக்கள் அனைத்தும் ஓம் என்றதினின்று தோன்றியவை என்று விளக்கிய மாணிக்க நாயக்கர் சிறியோரா? அன்றியும், அ முதல் ஔ வரைக்குமுள்ள உயிர்கள் பனிரண்டு. அவற்றில் ஓர் எழுத்திலிருந்து: மற்றவை தோன்றின என்பது எப்படிப் பொருந்தும்? காலில் விலங்கும் கையில் விலங்கும் உடல் மறைய ஒரே வகைச் சட்டையுமாயச் சிறையில் இருக்கும் பனிரண்டு குற்றவாளிகளில் ஒருவன் மற்றவரை ஆக்கினாள் எனில் அதற்கு என்ன அடையாளம்? என்ன ஆதாரம்? சொல் லத்தான் வேண்டும் என்று மத, மக்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் ஊற்றுக்கு நிற்காது.

ஆத்திகன்: எழுத்துக்களில் நான் அகரமாய் இருக்கிறேன் என்று கண்ணபிரானே சொல்லவில்லையா?

உரை ஆசிரியர்: ஆமாம் கண்ணபிரான் மக்களை இருட்டில் வருக என்று அழைக்கிறான். நாம் ஏன் போகவேண்டும்? வள்ளுவரைப் பின்பற்றவேண்டுவது வையத்தின் கடனன்றோ?

ஆத்திகன்: இந்த அதிகாரத்திற்குக் கடவுள் வாழ்த்து என்று இருந்ததை நீவிர் உலகின் தோற்றம் என்றது என்ன?

உரை ஆசிரியர்: இதுதான் வள்ளுவர் உள்ளம். கடவுள் வாழ்த்து இடையில் ஏற்பட்ட வேலை...

நாத்திகன்: முதல் நான்கு அதிகாரங்கள் வள்ளுவர் அருளிச் செய்தனவா?

உரை ஆசிரியர்: இல்லை என்று வ.உ. சிதம்பரனார் எண் ணுகின்றார். நான் அவ்வாறு எண்ணவில்லை. உரை முழுவ தும் நீர் படித்த பின் நான் சொல் லுவது உண்மை என்று உமக்கே தோன்றலாம்.

(குயில் 1-12-1959)

- விடுதலை ஞாயிறு மலர், 17 .8 .19

புதன், 4 செப்டம்பர், 2019

சென்னை: திருக்குறள் மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை

எதை எதிர்த்து அழிக்க முடியாதோ, அதை அணைத்து அழிக்கலாம் என்பதற்கு ஆதாரமாகத்தான், இன்றைக்கும் திருக்குறளை பார்ப்பனியம், ஆரியம் பயன்படுத்துகின்றது

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சரியான நேரத்தில் "திருக்குறள் மாநாட்டினை'' நடத்துகிறது!


நாங்கள் உருவத்தால் பலராக இருந்தாலும், உள்ளத்தால் ஒருவரே!


சென்னை: திருக்குறள் மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை




சென்னை, ஆக.14  எதை எதிர்த்து அழிக்க முடியாதோ, அதை அணைத்து அழிக்கலாம் என்பதற்கு ஆதார மாகத்தான் இன்றைக்கும் திருக்குறளை பார்ப்பனியம், ஆரியம் பயன்படுத்துகின்றது; பெரியாரிய உணர்வா ளர்கள் கூட்டமைப்பு சரியான நேரத்தில் திருக்குறள் மாநாட்டினை'' நடத்துகிறது; நாங்கள் உருவத்தால் பலராக இருந்தாலும், உள்ளத்தால் ஒருவரே என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

12.8.2019 அன்று மாலை சென்னை காமராசர் அரங்கில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு


மிகுந்த எழுச்சியோடு, கொக்கக்க கூம்பும் பருவத்து என்ற நிலையில், சிறப்பான நேரத்தில், வினைத்திட்பம், காலமறிதல், எல்லாவற்றையுமே கணக்கிட்டு, அதற்கு சிறப்பான இன்றைய சூழலில், என்ன விடை - பல கேள்விகளுக்கு, பல சூழல்களுக்கு என்று சொன்னால், அதிலிருந்து விடுதலை பெற, விடியல் பெற ஒரே வாய்ப்பு திருக்குறள்தான், திருவள்ளுவர்தான் என்பதை உணர்ந்த வர்கள்தான் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப் பைச் சார்ந்தவர்கள் என்பதை உலகத்திற்கே பறைசாற்றிக் கொண்டிருக்கின்ற மாநாடு - இந்த மாநாடு.

இந்தத் திருக்குறள் மாநாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கக்கூடிய ஒருங்கிணைப்பாளர், பெரியாரிய உணர்வாளர்களுடைய கூட்டமைப்பின் ஒருங்கிணைப் பாளர் அன்புத் தோழர் பொழிலன் அவர்களே,

வரவேற்புரையாற்றிய வாலாசா வல்லவன் அவர்களே, முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய நாகை.திருவள்ளுவன் அவர்களே, டைசன் அவர்களே, தொடக்கவுரையாற்றிய குடந்தை அரசன் அவர்களே, ஆவண நூல் பெற்றுக் கொண்டிருக்கக்கூடிய தோழர் கோவை இராமகிருட்டி ணன் அவர்களே, தீர்மானங்களை முன்மொழிந்து  சிறப்பான இந்த மாநாட்டிற்குத் திட்டமிட்டு செயல்படுத்திக் கொண்டிருக்கக்கூடிய முன்னணி தோழர்களில் ஒரு வரான தோழர் திருமுருகன் காந்தி அவர்களே,

நிகழ்ச்சி நெறியாளர் எங்கள் தயாரிப்பு அன்பிற்குரிய சீனி.விடுதலையரசு அவர்களே,

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அடுத்து சிறப்பாக முழக்கமிடப் போகின்ற திராவிடர் இயக்கத்தின் போர் வாள் அன்புசகோதரர் வைகோ அவர்களே,

அதேபோல, இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரை யாற்ற இருக்கக்கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களே,

மனிதநேய மக்கள் கட்சியைச் சார்ந்த ஜவாஹிருல்லா அவர்களே, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் அன்புச்சகோதரர் சுப.வீரபாண்டியன் அவர்களே,

பகுத்தறிவாளரும், அன்பிற்குரியவருமான அருமைத் தோழர் இனமுரசு சத்தியராஜ் அவர்களே, இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்ற அரங்க.குணசேகரன் அவர்களே, குடந்தையார் அவர் களே, தெகலான் பாகவி அவர்களே, மலேசியாவில் இருந்து வந்து சிறப்பாக உரையாற்றிய எனது அருமை சகோதரர் அவர்களே  மற்றும் மேடையில் வீற்றிருக் கக்கூடிய அருமைத் தோழர்களே, நம்முடைய குடும்பத் தைச் சார்ந்த இயக்கத் தோழர்களே, பட்டியல் நீண்டி ருக்கின்ற காரணத்தால், விடுபட்டவர்களை விளித்ததாக எடுத்துக்கொள்ளவும். மற்றும் எதிரிலே அமர்ந்திருக் கக்கூடிய தோழர்களே, நண்பர்களே உங்கள் அனை வருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

சரியான நேரத்தில், சரியான தலைப்பு!


சரியான நேரத்தில், சரியான தலைப்பு. சரியான நோய்க்கு, சரியான மருந்து - அதுதான் மிகவும் முக்கியமானது.


இங்கே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வைகோ எழுந்து வேகமாக போனரே என்று யாரும் நினைக்கவேண்டிய அவசியமில்லை. பின்னால் வருகின்ற தீர்மானத்தை, முன்னாலேயே வலியுறுத்திச் சொல்வதற்காக எழுந்து சென்றிருக்கிறார். எனவே, அவர் எதைச் சொன்னாரே, அதுதான் தீர்மானமாக சிறப்பாக இருக்கிறது என்பதை யாரும் மறந்துவிட முடியாது. இதுதான் பொதுவாழ்க்கை.


திருக்குறளில் அதற்கும் இடமிருக்கிறது.


எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்


மெய்ப்பொருள் காண்ப தறிவு.


அவ்வளவுதானே தவிர, வேறொன்றுமில்லை.


நாம் யார்மீதும், எந்தக் கருத்தையும் திணிப்ப தில்லை. அதிக நேரம் பேச வாய்ப்பில்லை எனக்கு. எனவே, ஒரு சில கருத்துகளை மட்டும் சொல்கிறேன்.


 

"திருக்குறள் நெறி''


தந்தை பெரியார் அவர்களுடைய சிறப்பான கருத்தை -  உங்கள் மதம் குறள் மதம், உங்கள் நெறி குறள் நெறி என்று சொல்லுங்கள்'',  ஆரியப் பித்தலாட்டங்களுக்குச் சரியான மருந்து, சரியான மறுப்பு திருக்குறள்தான்'' என்பதை எடுத்து இந்த மாநாட்டு அழைப்பிதழில் போட்டிருக்கிறார்கள்.

உங்கள் மதம் என்ன? உங்கள் நெறி என்ன? உங்களுடைய தத்துவம் என்ன? என்று கேட்டால்,

ஒரே ஒரு வரியில் பதில் சொல்லுங்கள், திருக்குறள் நெறி'' என்று! தந்தை பெரியார் 70 ஆண்டுகளுக்கு முன் சொன்னார்.

தமிழ்கூறும் நல்லுலகத்தின் சார்பாக நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!


1949 ஆம் ஆண்டில், இதே சென்னை மாநகரில் தந்தை பெரியார் அவர்கள், புலவர்கள் வீட்டு அலமாரிக்குள் இருந்த திருக்குறளை பொதுமக்கள் மன்றத்திற்குக் கொண்டு வந்து நிறுத்தினார். அந்தப் பணியினுடைய வேகம் குறையக்கூடாது என்பதற்காக, 70 ஆண்டு களுக்குப் பிறகு, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்ட மைப்பு மிக அருமையான பணியை செய்திருக்கிறது. அவர்களுக்குத் தமிழ்கூறும் நல்லுலகத்தின் சார்பாக நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்; உலகத் தமிழர்கள் சார்பாக நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

ஆய்வாளர் பேராசிரியர் ஜோஷியின் "புத்தரை உற்றுப் பார்க்கிறேன்!''


ஏனென்றால், பெரியார்தான் அந்த உணர்வை ஊட்டி னார். பாதுகாக்கவேண்டும் - திருக்குறளை இனிமேல் பரப்பவேண்டியதில்லை; பாதுகாக்கவேண்டும், எதிரி களிடமிருந்து பாதுகாக்கவேண்டும், அதுதான் மிகவும் முக்கியம். ஏனென்றால், திரிபுவாதத்தினாலேயே அழித் தவர்கள். பவுத்தத்தைப்பற்றி இங்கே பேசினார்கள். அமெ ரிக்காவில் இருக்கின்ற ஜோஷி என்ற ஒரு பேராசிரியர், ஒரு ஆய்வை செய்திருக்கிறார். அந்த ஆய்வினுடைய தலைப்பு, புத்தரை உற்றுப்பார்க்கிறேன்'' என்பதாகும்.

அழிக்க முடியாததை அணைத்து அழிக்கும் ஆரியம்!


அதில், பவுத்த நெறி எதற்கு இந்த நாட்டில் வந்ததோ, அந்த புத்த நெறியை இந்த நாட்டைவிட்டே ஒழித்தது ஆரியம், பார்ப்பனியம் என்று அவர் சொல்கின்ற நேரத்தில், மூன்று சொற்களை சொல்லியிருக்கிறார்.

எதிர்த்து அழிக்க முடியாத எதையும், எப்படி பார்ப்பனியம், ஆரியம் அழிக்கும் என்பதை மிக அழகாக சொல்லியிருக்கிறார். அதைத்தான் பொழிலன் அவர்கள், தன்னுடைய தலைமை உரையில் மிக அழகாக எடுத்துச் சொன்னார்கள்.

Appreciate -  Accept -  Annihilate


மூன்று வரிகளை அவர் பயன்படுத்தினார்; பவுத்தம் அப்படித்தான் அழிந்தது.

1.  Appreciate  -   முதலில், அழிக்க வேண்டியதைப் பாராட்டுவதாகப் புகழ்ந்து சொல். நேரிடையாக அழிக்க முடியவில்லையானால், அதைப் பாராட்டி புகழ்ந்து சொல்.

2.  Accept - அதை ஏற்றுக்கொண்டதாகக் காட்டிக் கொள்.

3. Annihilate -  அதை அழித்துவிடு,  ஒழித்துவிடு.

எதை எதிர்த்து அழிக்க முடியாதோ, அதை அணைத்து அழிக்கலாம் என்பதற்கு ஆதாரமாகத்தான், இன்றைக்கும் திருக்குறளை பார்ப்பனியம், ஆரியம் பயன்படுத்துகின்ற நேரத்தில், பெரியாரிய உணர்வா ளர்கள் கூட்டமைப்பு இருக்கிறதே, சரியான ஒரு மாற்றத்தை எடுத்துக்காட்டியிருக்கிறது.

நாங்கள் உருவத்தால் பலராக இருந்தாலும், உள்ளத்தால் ஒருவரே!


என்னிடம்கூட சில நண்பர்கள் கேட்டார்கள், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு எப் பொழுது உருவாயிற்று? என்று. எப்பொழுது எதிரிகள் எல்லாம் ஒன்று சேர்ந்தார்களோ, அப்பொழுது உருவாயிற்று. அதற்கு தேதி, நேரம் என்று கிடையாது.


இது எப்பொழுதெல்லாம் தொடரும்?


நீங்கள் எப்பொழுதெல்லாம் விஷமம் செய்கிறீர்களோ, அப்பொழுதெல்லாம் தொடரும். அப்பொழுதெல்லாம் இதற்கு வேலை உண்டு.


ஆக, நாங்கள் உருவத்தால் பலராக இருந்தாலும், உள்ளத்தால் ஒருவரே. எங்களுக்குக் கள்ளம் தெரி யாது; எங்கள் உள்ளத்தில் பள்ளம் கிடையாது என்பதை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.


நாகசாமிகளின் புரட்டு!


எவ்வளவு கொச்சைப்படுத்தியிருக்கிறான் அணைத்து என்பதற்கு அடையாளம் - சங்கராச்சாரியாரிகள் மட்டு மல்ல, அண்மைக்கால நாகசாமிகள்வரை - சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற வேறொரு நிகழ்ச்சியில், வைகோ அவர்களும், நானும் பங்கேற்றோம். வைகோ வேகமாக பேசினார்.

திருவள்ளுவருடைய திருக்குறள் என்பது மனுதர் மத்தைப் பார்த்து எழுதப்பட்டது. மனுதர்மத்திலிருந்து திருக்குறள் காப்பியடிக்கப்பட்டது.

இதை ஒரு பெரிய ஆராய்ச்சி நூல் போன்று ஆங்கிலத்தில் எழுதி, அதை பெரிய அளவில் பரப்பவேண்டும் என்று அவர்கள் நினைத்தபொழுது, அதனை மிகப்பெரிய அளவிற்கு எதிர்த்தோம்.

இதோ என்னுடைய கைகளில் இருப்பது பெரியார் களஞ்சியம்'' தந்தை பெரியார் அவர்கள், திருக்குறள் பற்றிய பேச்சுகள் எல்லாம், ஆய்வுரைகள், அவர் நடத்திய மாநாடு உள்பட புத்தகமாக, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

அதில், தந்தை பெரியார் அவர்கள் சுட்டிக்காட்டுகிற ஒரு செய்தியை உங்களுக்கு சுருக்கமாக சொல்கிறேன். அந்தப் புத்தகத்தை நீங்கள் வாங்கிப் படித்தீர்களேயானால், அந்தக் கருத்துதான் இந்த மாநாட்டினுடைய மய்யம் - தீர்மானத்தினுடைய மய்யக் கருத்தாகும்.

திருக்குறள்பற்றி தந்தை பெரியார்!


திருக்குறள் ஆரியக் கருத்துகளை மறுக்க, அவை களை மடியச் செய்ய அக்கொள்கைகளிலிருந்து மக்க ளைத் திருப்ப எழுதப்பட்ட நூல் என்று நான் கருதுகிறேன்'' என்று மிகத் தெளிவாகவே சொன்னார்.

திருக்குறளைப்பற்றி மனோன்மணியம் சுந்தரனார் அழகாகச் சொல்லியிருக்கிறார், வள்ளுவர் செய் திருக்குறளை

மறவற நன்குணர்ந்தோர்கள்

உள்ளுவரோ மநுவாதி

ஒரு குலத்துக் கொருநீதி

எந்த அளவிற்கு அவர்கள் நம்மைக் கொச்சைப்படுத்தி இருக்கிறார்கள் என்பதற்கு அடையாளம் சொல்லவேண் டுமானால், இரண்டு செய்திகளை சொல்கிறேன். இது அறிவார்ந்த அரங்கம்,  நிறைய பேசுவதற்கும் ஏராளமான அறிஞர் பெருமக்கள் இருக்கிறார்கள். நான் விடை பெறலாம் என்று நினைக்கிறேன்.

ஒரு செய்தி,

வள்ளுவரைப்பற்றி சொல்லுகின்ற நேரத்தில்,  இன் றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ளவேண்டும்.

வள்ளுவரைப்பற்றி பார்ப்பனப் புரட்டு!


திருவள்ளுவர், பார்ப்பனர்களுக்குப் பிறந்ததால்தான், திருக்குறளை இயற்ற முடிந்தது என்று ஒரு பார்ப்பன வெறியர் பேசியதை, இன்றைக்கல்ல - உங்களில் பலருக்கு இந்தச் செய்தி தெரியாது. இது தெரியவேண்டிய செய்தி, பதிவாக வேண்டிய செய்தி இந்த அரங்கத்தில்.

ஒரு பார்ப்பன வெறியர் பேசியதை, திரு.க.அயோத் திதாச பண்டிதர் கேள்வி கேட்டு, மடக்கிய நிகழ்ச்சியை, அவர் எழுதிய நூதன ஜாதிகள் உற்பவ பீடிகை'' என்ற சிறு நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அறிஞர் க.அயோத்திதாச பண்டிதர் இராயப்பேட்டைச் சாக்கிய பவுத்த சங்கத் தலைவராக இருந்து தொண்டாற் றியவர். தமிழன்' என்ற வார இதழை 1907 இல் தொடக்கி, ஆரியப் பார்ப்பன புரட்டுகளை அம்பலப்படுத்தியவர்.

இவர் பார்ப்பன வேதாந்த விவரம்'', வேடப் பார்ப்பனர் வேதாந்த விவரம்'', நந்தன் சரித்திர விளக்கம்'', திருவள்ளுவ நாயனார் பறைச்சிக்கும், பார்ப்பானுக்கும் பிறந்தாரெனும் பொய்க்கதை விவரம்'' ஆகிய புத்தகங் களை எழுதியுள்ளார்.

அறிஞர் திரு.க.அயோத்திதாச பண்டிதர் தலைமை ஏற்று நடத்திய பவுத்த சங்கத்தைப்பற்றி திரு.வி.க. அவர்கள் சங்கம் எனது மதவெறியைத் தீர்க்கும் மருந்தாயிற்று'' என்று போற்றுகிறார்.

1892 இல் சென்னையில் மகாஜன சபைக் கூட்டம் சிவநாம சாஸ்திரி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசும்போது, வள்ளுவர் பார்ப்பன விந்துக்குப் பிறந்ததனால்தான் சிறந்த திருக்குறளைப் பாடினார்; சுக்கில-சுரோனிதம் கலப்பறியாது'' என்று குறிப்பிடும் போது கூட்டத்தில் கேட்டுக் கொண்டிருந்த அறிஞர் கஅயோத்திதாச பண்டிதர் எழுந்து, நீங்கள் சொல்லியதை நான் ஏற்றுக் கொள்வதென்றால், நான் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்றார்.

அதற்கு சிவநாம சாஸ்திரி, சரி, கேளும் என்றார்.

நமது நாட்டில் தீண்டாதவர்கள் என்று இழிவு படுத்தப்படும் பறையர்கள் என்பவர்கள் கிறித்துவ சங்கத்தார்களின் கருணையால் எம்.ஏ.', பி.ஏ.' படித்துப் பட்டங்களைப் பெற்று உயர் பதவிகளில் அமர்ந்திருக் கிறார்களே? அவர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப் பார்களென்று எண்ணுகிறீர்'' என்றார். அதற்கு சிவநாம சாஸ்திரி ஒன்றும் பதில் கூறாமல் நின்று கொண்டிருந்தார்.

பிறகு அறிஞர் க. அயோத்திதாச பண்டிதர், தொடர்ந்து பெருங்குற்றங்களைச் செய்து சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருக்கும் பார்ப்பனர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்களென்று நீர் நினைக்கிறீர்'' என்று கேட்டார்.

திரு.சிவநாம சாஸ்திரி ஒன்றும் பதில் கூறாமல், திருதிரு என்று விழித்துக் கொண்டு நின்றார். அறிஞர் திரு.க.அயோத்திதாச பண்டிதர், ஏன்? பதில் சொல்லாமல் நிற்கிறீர், சொல்லும், என்று சினந்து கேட்டுக் கொண்டிருக் கும்பொழுது, கூட்டத்திலிருந்த ஆனரபிள், பி.அரங்கைய நாயுடுவும், எம். வீரராகவாச்சாரியாரும் அறிஞர் க.அயோத்திதாச பண்டிதரை அமைதிப்படுத்தினார்கள்.

சிவநாம சாஸ்திரியை கூட்டத்திலிருந்தவர்கள் இகழ்ந்து பேசினார்கள். சிவநாம சாஸ்திரி உட்கார்ந்து கொண்டார். பின்னர் மெல்ல கூட்டத்திலிருந்து நழுவிவிட்டார்.

இன்றைக்கு சிவநாம சாஸ்திரிகள் வேறு உருவத்தில் வருகிறார்கள்; எச்சரிக்கை!


இது 1892 இல் நடந்தது என்று நினைக்காதீர்கள்; இப்பொழுது சிவநாம சாஸ்திரிகள் வேறு உருவத்தில் வருகிறார்கள்; எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

அணைத்து அழித்துக் கொண்டிருக்கிறார்கள்; எப்படி அணைத்து அழித்துக் கொண்டிருக்கிறார்கள்? அதையும் இந்த அரங்கத்தின் தலைவர் பொழிலன் அவர்கள் அழ காக அவருடைய தலைமையுரையில் எடுத்துச் சொன் னார்கள்.

திருவள்ளுவருடைய திருக்குறளை இந்து நூல் என்று சொல்லி, பல நாடுகளில் இதை வைத்தே, நாமெல்லாம் இந்துக்கள்; எனவே இந்து மதம் என்று சொன்னார்கள்.

நாங்கள் யாரையும் தரக்குறைவாகப் பேசிப் பழக்கப்பட்டவர்கள் அல்ல


முதலில் விந்துவைப்பற்றி பேசினோம்; இப்பொழுது இந்துவைப்பற்றி பேசவேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். இது நம்மால் உருவாக்கப்பட்டதல்ல; அவர்களுடைய ஆதாரத்தில் இருந்துதான் பேசுகிறேன். நாங்கள் யாரையும் தரக்குறைவாகப் பேசிப் பழக்கப்பட்டவர்கள் அல்ல.

இதோ என்னுடைய கைகளில் இருப்பது, இன்றைய அரசின், அரசியல் சட்டத்தைவிட மிக முக்கியமாகப் பின்பற்றக்கூடிய வேத புத்தகம் - அரசியல் சட்டத்தைவிட அவர்கள் மேலாக மதிக்கின்ற புத்தகம்.

'கோல்வால்கரின் ஞானகங்கை!'


குருஜி கோல்வால்கருடைய ஞானகங்கை' - இதில், திருவள்ளுவருடைய திருக்குறளைப்பற்றியும் பாராட்டி இருக்கிறார்.

ஞானகங்கை' என்ற நூலில், கங்கையே சுத்தப்படுத்த வேண்டிய ஒன்று. அதற்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை செலவழித்தும் பயனில்லை என்ற முடிவிற்கு வந்திருக்கிறார்கள். இந்த ஞானகங்கை' எப்படிப்பட்டது என்பதை உங்கள் முடிவிற்கே விடுகிறேன்; அதில் உள்ளவற்றைப் படித்த பிற்பாடு.

தற்காலத்தில் தமிழைப்பற்றி நாம் அதிகம் கேள்விப் படுகிறோம். தமிழன்பர்கள் சிலர், தமிழ் என்பது தனக்கென வேறான கலாச்சாரமுடைய தனிப்பட்ட மொழி என்று கூறுகின்றனர். அவர்கள் வேதத்தில் நம்பிக்கை கொள்ள மறுக்கின்றனர். திருக்குறளை அவர்களது மறையாகக் கருதுகின்றனர். திருக்குறள் இரண்டாயிரம் ஆண்டுகட்கும் மேற்பட்ட ஒரு பழைமையான அறநூல்தான். திருவள்ளுவ முனிவர் அதன் ஆசிரியர் ஆவார். அவரை நாம் நமது ப்ராதஸ்மரணத்தில் நினைவுகூர்கிறோம். மிகப் புகழ் பெற்ற புரட்சிவாதியான வ.வே.சு.அய்யர் திருக்குறளை (ஆங்கிலத்தில்) மொழி பெயர்த்துள்ளார். திருக்குறளில் நாம் காண்பது என்ன? நாடெங்கும் அறிமுகமான நான்குவித வாழ்க்கை முறை (சதுர்வித புருஷார்த்தம்) அதில் விஷயமாகக் கூறப்பட்டுள்ளது. மோட்சத்தைப் பற்றிய அத்தியாயம் மட்டும் முன்னால் வைக்கப்பட் டுள்ளது. அது எந்தக் கடவுளையும் அல்லது எந்த வழிபாட்டு முறையையும் பின்பற்றுமாறு கூறவில்லை. மோட்சம் என்ற உயர்ந்த விஷயத்தைப்பற்றியே கூறுகின்றது. எனவே, அது எந்த ஒரு சாரரின் நூலும் அல்ல. மகாபாரதம்கூட திருக்குறள் கூறுவது போன்ற வாழ்க்கை முறைகளையே புகழ்ந்து கூறுகின்றது. ஹிந்துக்களிடம் அல்லாது மற்ற எந்த மதத்தவரிடமும் இவ்வாறான சிறந்த வாழ்க்கை முறை நோக்கு காணப்படவில்லை. எனவே, திருக்குறள் சிறந்த ஹிந்துக் கருத்துக்களைத் தூய ஹிந்து மொழியில் எடுத்துக் கூறும் ஒரு ஹிந்து நூல் ஆகும்.'' (ஞானகங்கை', பக்கம் 168).

இதிலிருந்து நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள், இந்த மாநாட்டினுடைய தேவை என்ன? ஏன் இன்னமும் பெரியார் தேவைப்படுகிறார்?

நேற்றும் தேவைப்பட்டார் -

இன்றும் தேவைப்படுகிறார் -

நாளைக்கும் தேவைப்படுவார் -

நோய் எப்பொழுதெல்லாம் வருகிறதோ, அப் பொழு தெல்லாம் மருந்துகள் தேவைப்படுவதைப்போல.

எனவேதான், இதனை நன்றாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டால், எல்லோரும் தெளிவாக உணர்ந்துகொள்ள முடியும்.

தந்தை பெரியார் அவர்களுடைய கருத்து - மனுதர்மக் கருத்துக்கு நேர் எதிரானது.

எனவேதான், தெளிவாகச் சொன்னார், எல்லோருக்கும் கல்வி கூடாது என்பது மனுதர்மம்.

சிந்திக்காதே என்பது மனுதர்மம்

பெண்ணடிமை என்பது மனுதர்மம்

ஜாதி தர்மம் என்பதுதானே மனுதர்மம்.

"பாரதிதாசன் திருக்குறள் உரை''


திருவள்ளுவர் என்ற பெயர் இருக்கிறதே, அதில் வள்ளுவர் என்பது ஒரு ஜாதி என்பதைப்போலக் காட்டி, ஆதிபகவன் இவை அத்தனையும் சொல்லி, இழிவு படுத்துவது அல்லவா? வள்ளுவர் என்றால், அந்தக் காலத்தில் இலக்கியத்தில் ஆதாரத்தோடு,  புரட்சிக்கவிஞர் அருமையாகச் சொல்லியிருக்கிறார்; அவர்களுடைய பாரதிதாசன் திருக்குறள் உரை'' நூலைப் படியுங்கள்.

தமிழர்கள் ஆண்ட நாளில் அரசியல் ஆறு துறையாய் வகுத்து ஆட்சி நடத்தப்பட்டது , அவை, உழவு, தொழில், வாணிகம், கல்வி, தச்சு, வரைவு என்பன.

உழவும் தொழில் என்னும் துறையில் அடங்குமேனும், சிறப்புக் கருதி உழவுத் தொழிலைத் தனித்துறையாக வைத்துத் கருத்தூன்றிக் காத்து வந்தார்கள், உழவும் தச்சும் (சிற்பம்) நீங்கிய பிற வேலை அனைத்தும் தொழிற்றுறையில் அடங்கியவை.

எழுத்து, சொல், பொருள் என்பனவும், கோள் நிலை யறிதல், மருத்துவம் முதலியனவும், போர்ப் பயிற்சியும் கல்வி என்ற துறையில் அடங்கும்.

வரைவு என்னும் துறையாவது யாது? - எல்லைப் பிரிவை உறுதி செய்தல், கோட்டை கட்டுதல் முதல் குளம் வெட்டுதல் வரைக்குமுள்ள இடங்களை வரையறுத்தலும், அளவு செய்தலும் முதலியவை.

இந்த ஆறு துறைக்கும் அக்காலத்தில் ஆறு அமைச் சர்களை அமைத்துத் திறம்பட நாட்டைக் காத்து வந்தான் தமிழரசன்!

ஆறு துறையே அன்றிப் போர்த்துறை ஒன்று தனியே. இருந்து வந்ததோ எனில் அவ்வாறில்லை. கல்வி என்னும் துறையில் போர்ப்பயிற்சியும் அடங்கியது என்று முன்னமே சொன்னேன். ஒரு துறைக்கு ஓர் அமைச்சனே அன்றிப் பல அமைச்சரை அமைத்தலும் உண்டு.

இந்த ஆறு துறையின் ஆறு அமைச்சர்களுக்கும் அலுவலகம் ஒன்றே; அது இந்நாளைய செக்ரடேரியேட் போன்றது. அந்த அலுவலகத்தில் கருமத் தலைவன் ஒருவனிருப்பான். அவன் எல்லாத் துறையிலும் வல்லவன். அவனுடைய அலுவற் பெயர் வள்ளுவன் என்பது.

வள்ளுவன் சாக்கை எனும் பெயர் மன்னற்கு

உள்படு கருமத் தலைவற்கு ஒன்றும்

என்னும் பிங்கலந்தைச் செய்யுள் இங்குக் கருதத்தக்கது. உள்படு கருமத் தலைமை என்பது வள்ளுவன் என்ற அலுவற் பெயரையே குறித்து நின்றது காண்க.''

எனவேதான், நம்முடைய பழைமையையெல்லாம் எடுத்து தலைகீழாக்கி, இழிவைச் சுமந்து கொள்ள வைத்திருக்கக்கூடிய நிலையை,  பெரியார் என்ற மாபெரும் அந்தப் பகுத்தறிவுப் பகலவன் வெளியாக்கினார்கள்; இன்றைக்கு அந்த வழியைப் பின்பற்றி நாம் வள்ளுவர் குறளைத் தூக்கிப் பிடிக்கவேண்டும்.

தந்தை பெரியாருக்குப் பிடித்த குறள்!


இதில் நமக்குள்ளே கருத்து வேறுபாடு என்னவென்று பார்க்கக்கூடாது. பொது வாழ்க்கையில் பெரியாருக்குப் பிடித்த குறளை சொல்லி என்னுரையை முடிக்கின்றேன்.

குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து

மானங் கருதக் கெடும்

எனவே, மானம் போயிற்று என்று யாரும் இங்கே பேசக்கூடாது. நம்முடைய மானத்தைக்கூட இழக்கத் தயாராக இருக்கவேண்டும்; இனமானத்தைக் காப்பாற்றுவதற்காக. இதுதான் செய்தி!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

- விடுதலை நாளேடு, 14 .8. 19