பக்கங்கள்

செவ்வாய், 19 ஜனவரி, 2021

தொல்காப்பியத்தில் சாதி



- ஊரன் அடிகள்
தமிழில் தொல்காப்பியம் சிறப்பு, தொல்காப்பியத்தில் பொருளதிகாரம் சிறப்பு. எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று அதிகாரங்களையுடையது தொல்காப்பியம், எழுத்ததிகாரம் எழுத்திலக்கணத்தைக் கூறுவது. சொல்லதி காரம் சொல்லிலக்கணத்தைக் கூறுவது. பொருளதிகாரம் வாழ்விலக்கணத்தைக் கூறுவது. யாப்பிலக்கணமும் அணி இலக்கணமும் பொருளதிகாரத்தில் அடங்கும்.

பொருளதிகாரத்தில் சில இடங்களில் சாதியைப் பற்றிய செய்திகள் உள்ளன. குறிப்பாக மரபியலில் 71 முதல் 85 முடியப் 15 சூத்திரங்கள், புறத்திணை இயலில் 16ஆவது சூத்திரம். இவற்றுள் முக்கியமான சிலவற்றைக் காண்போம்.

"நூலே, கரகம், முக்கோல், மணையே ஆயும் காலை அந்தணர்க்கு உரிய"

- தொல், பொருள், மரபு - 71

"படையும், கொடியும், குடையும், முரசும் நடை நவில் புரவியும், களிறும், தேரும் தாரும் முடியும், நேர்வன பிறவும் தெரிவு கொள் செங்கோல் அரசர்க்கு உரிய". - 72

வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை - 78

வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது இல் என மொழிப - பிறவகை நிகழ்ச்சி - 81

என்னும் நான்கு சூத்திரங்களும் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நான்கு சாதிக்குரிய தொழில் களைக் கூறுகின்றன.

நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங்காலை அந்தணர்க்குரிய என்னும் சூத்திரம் அந்தணருக்குரிய அடையாளங்களைக் கூறுவதாகும்,

நூலே பூணூல்

அரகம் குண்டிகை (கமண்டலம்)

முக்கோல் திரி தண்டம் (தண்டு) இருக்கை (ஆசனப் பலகை)

மனை

பூணூலும் தண்டு கமண்டலங்களும் ஆசனப்பலகையும் அந்தணர்க்குரியனவாம். மணை என்பதற்கு "யாமை மணை" என்று உரை கூறுவார் பேராசிரியர். யாமை மணை - ஆமை வடிவ ஆசனம், கூர்மாசனம். நூல்களில் கோல் முக்கோலாகவே (திரி தண்டமாகவே) கூறப் பெறுகின்றதெனினும், வைணவ அந்தணத் துறவிகள் முக்கோல் ஏந்துவர் (முக்கோற்பகவர்), சைவ அந்தணத் துறவிகளும் மாத்வ அந்தணத் துறவிகளும் ஒரு கோலே (ஏக தண்டமே) ஏந்துவர் என்பதும் ஈண்டறியத்தக்கது. சங்கர மடத்தார் மத்வ மடத்தார் ஏகதண்டமும், ஜீயர்கள் திரி தண்டமும் தாங்கியிருப்பர்.

"உறித்தாழ்ந்த கரகமும் உரை சான்ற முக்கோலும்" என்னும் கலித்தொகையும் (9), "தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்துப் படிவ உண்டிப் பார்ப்பன மகனே" என்னும் குறுந்தொகையும் (156) பேராசிரியரால் உதாரணமாக எடுத்துக் காட்டப் பெற்றன.

படையும் கொடியும் குடையும் முரசும் குதிரையும் யானையும் தேரும் மாலையும் முடியும் இவை போன்று பொருந்தும் பிறவும் செங்கோல் அரசர்க்குரியன என்பது ஆம் சூத்திரப் பொருள்.

"வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை” (78) என்பது வணிக வாழ்வு வைசியர்க்கு உரியது என்பதாம்.

"வேளாளர்க்கு வேளாண்மை தவிர வேறொன்றும் இல்லை" என்று கூறுவது 81-ஆம் சூத்திரம்.

"அறுவகைப்பட்ட பார்ப்பணப் பக்கமும் அய்வகை மரபின் அரசர் பக்கமும் இரு மூன்று மரபின் ஏனோர் பக்கமும் மறு இல் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும் நால் இரு வழக்கின் தாபதப் பக்கமும் பால் அறி மரபின் பொருநர் கண்ணும் அனை நிலை வகையொடு ஆங்கு ஏழு வகையான் தொகைநிலை பெற்றது என்மனார் புலவர்"
என்பது தொல்காப்பியம் பொருளதிகாரம் புறத்திணையியல் ஆவது - சூத் திரம் இதன் முதல் மூன்றடிகளில் அந்தணர் (பார்ப்பணர்), அரசர், ஏனோர் (வணிகர் வேளாளராகிய மற்றை இருவர்) பக்கமும் குறிக்கப் பெறுகின்றன.

அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கம்

1. ஓதல், 2 ஓதுவித்தல், 3. வேட்டல், 4. வேட் பித்தல், 5. ஈதல், 6. ஏற்றல்.

அய்வகை மரபின் அரசர் பக்கம்;

1. ஓதல், 2. வேட்டல், 3. ஈதல், 4. காத்தல் 5.தண்டஞ்செய்தல்

இரு மூன்று (2x3) மரபின் ஏனோர் பக்கம்:

வணிகர்க்குரிய 6 பக்கம்:

1. ஓதல், 2. வேட்டல், 3. ஈதல், 4. உழவு. 5. நிரையோம்பல், (ஆநிரை ஓம்பல் - பசுக்காத்தல்) 6. வாணிகம்

வேளாளர்க்குரிய 6 பக்கம்

1.வேதம் ஒழிந்த ஓதல், 2. ஈதல், 3.உழவு, 4. நிரையோம்பல், 5. வாணிகம், 6, வழிபாடு - என்பார் நச்சினார்க்கினியர். இளம்பூரணர் நிரை யோம்பலைப்  பகடு புறந்தருதல் என்பார்.  வாணிகத்தைத்
தவிர்த்து   விருந்தோம்பலைக்   கூறுவார்.

திவாகரம் பிங்கலம் முதலிய நிகண்டுகளிலும் நான்கு சாதியாருக்கும் ஆறு ஆறு தொழில்களே கூறப்பெற்றன. எனினும் ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு தொழிலே முதன்மையான தாகும், சிறப்புத் தொழிலாகும்.

அந்தணர்க்குக் கல்வி 
அரசர்க்குக் காவல்
வணிகர்க்கு வணிகம் வேளாளர்க்கு வேளாண்மை.

"வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும். 
மன்னர்க்கு அழகு செங்கோல் முறைமை. 
வைசியர்க்கு அழகு வளர்பொருள் ஈட்டல்.
உழவர்க்கு அழகு இங்கு உழுதூண் விரும்பல்."

என்னும் அதிவீரராமபாண்டியர் வெற்றிவேற்கை ஈண்டு நினையத்தக்கது.

‌நூல் :- சாதியும் மதமும்
ஆசிரியர் :-ஊரன் அடிகள்
வெளியீடு :-சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம், கடலூர்,
முதல் பதிப்பு- 2003

திங்கள், 18 ஜனவரி, 2021

தமிழில் எழுத்துச் சீர்திருத்தம்


தமிழில் எழுத்துச் சீர்திருத்தம்  - பெரியாரின் பங்களிப்பு என்ன?

இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவின்படி தமிழ் மிகத் தொன்மையான மொழி. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செழுமை பெற்றிருந்த மொழி.

வட்டெழுத்தில் தொடங்கி இன்று பயன்படுத்தப்படும் வகையில் அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்பட்டே வந்திருக்கின்றன.

ஓலைச் சுவடிகளில் எழுதும்போது புள்ளி வைப்பது இயலாது. ஓலையில் ஓட்டை விழும். எனவே புள்ளி என்பதைக் கூட "புளளி" என்றே எழுதுவர்.

கல்வெட்டுக்களில் இந்தச் சிரமம் இல்லை.

பின்பு அச்சு எனும் Printing அறிவியல் அறிமுகமானபின்பு எழுத்துகளில் மாற்றம் தேவைப் பட்டது.

அதாவது எழுதும் பொருட்கள், அச்சு, இன்றைய கணினி ஆகியவற்றுக்கு ஏற்றார்போல மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கம்.

அச்சுக் கலை உருவானபோது, வீரமாமுனிவர் அதற்கேற்ப சில. மாற்றங்கள் செய்கிறார்.

அது எ, ஏ, தே. தோ என்று இன்று நாம் பயன்படுத்தி வரும் மாற்றம். முன்பு எ என்பதை ஏ என்று ஒலிக்கும் வகையில் எழுத மேலே புள்ளி வைக்கும் வழக்கம் இருந்தது. ஆனால், இதற்கென அரசாணை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை

வீரமாமுனிவருக்குப் பிறகு  7 எழுத்துகளுடன் ஐ, ஒள எனும் எழுத்துகளிலும் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. ஐ என்பதை அய் எனவும் ஒள என்பதை அவ் என்றும் மாற்றக் கோரினர்.

அவ்வாறு தமிழறிஞர்களால் எடுக்கப்பட்ட முயற்சிகள் ....

1930 - காரைக்குடியில் இருந்து வெளிவந்த குமரன் இதழில் அதன் ஆசிரியர் முருகப்பா ணா, றா, னா, ணை, ளை, னை என்ற வரிவடிவங்களைப் பயன்படுத்தி ஒரு கட்டுரையை வெளியிட்டு வாசகர் கருத்தை வரவேற்றார்.

1933 - திசம்பர் 23, 24 நாட்களில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடந்த தமிழன்பர் மாநாட்டில் 15 வது தீர்மானமாக எழுத்துச் சீர்திருத்தத் தீர்மானம் நிறைவேறியது.

1933 -ல் தமிழ் வரிவடிவ ஆராய்ச்சி என்ற தலைப்பில் சிங்கப்பூர்த் தமிழ் அறிஞர் சு. சி. சுப்பையா “சிங்கப்பூர் முன்னேற்றம்” இதழில் தொடர் கட்டுரை எழுதினார்.

1935 - குமரன் இதழ் ஆசிரியர் முருகப்பா 1930ல் பயன்படுத்திய மாற்றங்களையும் ஏற்கனவே புழக்கத்தில் இருந்த அய், அவ் ஒலி மாற்றங்களையும் சேர்த்து திருந்திய வரிவடிவத்தைப் புகுத்தித் தொடந்து குடியரசிலும், விடுதலையிலும் பயன்படுத்தினார் பெரியார். (அய், அவ், ணா, றா, னா, ணை, னை, லை, ளை, ணொ, ணோ, னொ, னோ, றொ, றோ).

1941 - சனவரி 18, 19 நாட்களில் மதுரையில் நடைபெற்ற “தமிழ் இலக்கிய மாநாட்டில்” எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1948 -  பிப்ரவரி 14, 15 நாட்களில் சென்னையில் நடைபெற்ற “அகிலத் தமிழர் மாநாட்டில்” எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் எழுத்துச் சீர்திருத்தக் குழுவும் அமைக்கப்பட்டது.

1950 -ல் தி. சு. அவிநாசிலிங்கம் செட்டியார் கல்வி அமைச்சராக இருந்த பொழுது எழுத்துச் சீர்திருத்தக் குழுவை அமைத்தார்

உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் சார்பில் நடந்த ஒவ்வொரு மாநாட்டிலும் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றன.

1975 பிப்ரவரித் திங்களில் தமிழகப் புலவர் குழு உயிர்மெய் உகர ஊகாரம் உட்பட எழுத்துச் சீர்திருத்த ஆய்வுத் தீர்மானம் நிறைவேற்றியது. (இப்பொழுது தமிழகப் புலவர் குழு சீர்திருத்தத்தை எதிர்க்கிறது. குழு உறுப்பினர்களில் எழுத்துச் சீரமைப்பை ஆதரிப்பவர்களும் உள்ளனர்)

1977 ஆம் ஆண்டு தி.மு.க தேர்தல் அறிக்கையில் அறிஞர் கருத்தறிந்து எல்லோரும் ஏற்கும் வகையில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் செய்வதாக உறுதியளித்தது.

1978-79 ல் பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி எம் ஜி ஆர் தலைமையிலான அன்றைய தமிழ்நாடு அரசு, முதற்கட்டமாகப் பெரியார் 1935 முதல் பயன்படுத்தி வந்த வரி வடிவத்தில் அய், அவ் தவிர மற்றவற்றைச் செயற்படுத்தியது.

1983 ல் சிங்கப்பூர் அரசு இச்சீர்திருத்தத்தை ஏற்றது. 1984 தைத் திங்கள் முதல் செயற்படுத்தியது.

இந்த வரிசையில்,

பெரியார் இதுகுறித்த கட்டுரை எழுதியதோடு நிற்காமல் குடியரசு மற்றும் விடுதலை இதழ்களில் அச்சிலேயே இந்த மாற்றத்தை அரசின் ஒப்புதலோ, அங்கீகாரமோ இல்லாமலேயே அமல்படுத்தி செயல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஆனால் முதல் விதையிட்டவர் 1930 - ல் காரைக்குடியில் இருந்து வெளிவந்த குமரன் இதழில் அதன் ஆசிரியர் முருகப்பா.

35 ல் தான் பெரியார் இதை முன்னெடுக்கிறார்.

காரணம், அச்சகத்தில் பழைய எழுத்துகளைக் கோர்ப்பதில் நடைமுறைச் சிக்கல், குறிப்பாக அச்சு வார்ப்பதில் இரட்டை வேலையாக இருந்தது.

ஆனால், இந்த மாற்றங்களில் ஐ. ஒள ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வர தமிழ் அறிஞர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை,  கடுமையாக எதிர்த்தனர். காரணம் இவை ஓரெழுத்து மொழியாக நின்று பொருள் தரக்கூடியவை பிரித்தால் அந்தப் பொருளைத் தராது என்று ண் எதிர்த்தனர்.

இதையடுத்து இந்த இரு எழுத்துகளை விட்டுவிட்டு மீதமுள்ள 7 உயிர் மெய் எழுத்துக்களைத் திருத்தி 19/10/1978 அன்று தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டது.

பெரியார் செய்ததாலும், பெரியாரை சிறப்பிக்கவுமே எம்.ஜி.ஆர் செய்தது இது


ஆனால் பெரியார், 

எழுத்து சீர்திருத்தத்தைக் குடிஅரசு 20.1.1935 தேதியிட்ட இதழிலிருந்து நடைமுறைப்படுத்திய போது, அந்த இதழின் தலையங்கத்தில் எழுதினார்: 

‘தமிழ் பாஷை எழுத்துக்கள் விஷயமாய் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பது அனேகருக்கு வெகுகாலத்துக்கு முன்பிருந்தே ஏற்பட்டிருந்த அபிப்பிராயமாகும். தோழர் குருசாமி அவர்கள் எழுதியிருந்ததுபோல பெருத்த பண்டிதர்களில்கூடப் பலர் எழுத்துச் சீர்திருத்த விஷயமாய் வெகு காலமாகவே பேசி வந்திருக்கிறார்கள்"

என்று குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக, பொதுவாகவே தம்மைப் பற்றிக் குறிப்பிடும்போது

"நாம் 10 ஆவது வயதுக்கு மேல் எந்தப் பள்ளிக்கூடத்திலும் படிக்கவில்லை. நமக்குப் புத்தக ஆராய்ச்சி இல்லை. நமக்குள்ள அறிவு என்பதைக் கொண்டு நடுநிலை என்பதிலிருந்து ஆராய்வதன் மூலம் அறிவதும், ஆராய்ச்சிக்காரர்கள் என்பவர்களைச் சந்திக்கும்போது கேட்டு அறிவதும்தானே ஒழிய வேறில்லை என்பதைக் கண்ணியமாய் ஒப்புக்கொள்கிறோம்’  என்று குடிஅரசு, 25.12.1927 தேதியிட்ட இதழில் குறிப்பிட்டிருந்தார்.

அரசாணை வெளியிட்டும் பதிப்பகங்கள், பத்திரிகைகள் பல மாறவில்லை. அரசு சலுகைகள் கிடைக்காது என எச்சரிகை விட்டவுடன் மாற்றம் பெற்றது.

( கட்டுரை முழுமை பெறவில்லை)

திங்கள், 11 ஜனவரி, 2021

ஜாதியோ, ஜாதி!(இலக்கிய பாக்களில்)

ஒற்றைப் பத்தி

ஜாதியோ, ஜாதி!

தமிழ் இலக்கியத்தில் பிற்காலத்தில் வருண வேறுபாடு கூறப்பட்டது. தமிழ் இலக்கணத்தில், எழுத்து, பாக்கள் ஆகியவற்றுக்கும்கூட வருண வேறுபாடு கூறப்பட்டது.

பார்ப்பனரை வெண்பாவாலும், சத்திரியரை (அரசரை) ஆசிரியப் பாவாலும், வைசியரை (வணிகரை) கலிப்பாவாலும், சூத்திரரை வஞ்சிப்பாவாலும் பாடவேண்டும்; பாக்களைக் கலந்து பாடும் கலம்பகத்திலும் வருண பேதம்! தேவருக்கு 100, பார்ப்பனருக்கு 95, சத்திரியருக்கு 90, அமைச்சருக்கு 70, வைசியருக்கு 50, மற்றவருக்கு 30 செய்யுளும் பாடவேண்டுமாம்.

பாடல் இலக்கணத்தில்கூட வருண வகுப்பாடு என்கிற அளவுக்கு ஆரியம் புகுந்து விளையாடிய கொடூரத்தை என்னவென்று சொல்ல!

பாம்புகளில், பிராமண, அரச, வைசிய ஜாதிகள் எவை என்று சிந்தாமணி கூறியுள்ளது. தமிழ்நாட்டில் பேச்சு வழக்கிலும், விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் வருண வேறுபாடு வழங்குவதைக் காணலாம். தலை வெளுத்து, உடல் சிவந்த கழுகைப் ‘‘பிராமணக் கழுகு'' என்று கூறினர்.

கருநிறமுடைய கழுகைப் ‘பறைக் கழுகு' என்று அழைத்தனர். வெண்மை கலந்த ஒரு வகை மைனாவை பார்ப்பார மைனா என்று அழைக்கின்றனர். தெலுங்கு மொழியில் ‘‘பார்ப்பாரச் சிலுவா'' (பார்ப்பனக் கிளுவை) என்று ஒரு வகைக் காட்டு வாத்து அழைக்கப்படுகின்றது. ஜாதி அடிப்படையில் வழங்கும் இவ்வழக்கு ஆங்கில மொழியிலும் வழங்கி வருகிறது. ‘பறை நாய்' என்ற பெயரை ஒருவகை நாயினத்துக்கு விலங்கு நூலார் வழங்குவதைக் காணலாம்.

‘‘பிரமா மாடு'' (பிராமண மாடு) என்ற பெயர் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்று பரவிய இந்திய மாட்டினத்துக்குப் பெயராக வழங்குகின்றது.

வால்மீகி ஒரு செய்யுளில் ‘பிராமணி' என்ற பெயரில் அரணையைக் குறிப்பிடுகின்றார்.

இன்றைக்கும் பார்ப்பனர்கள் பூணூல் தரிப்பது, ஆவணி அவிட்டத்தில் புதுப்பிப்பது அவர்கள் துவிஜாதியினர் (இரு பிறப்பாளர்) என்று கூறி, பார்ப்பனரல்லாதாரை சூத்திரர் - வேசி மக்கள் என்று இழிவுப்படுத்துவதுதானே!

ஜாதியின் ஆணிவேர் அறுக்கப்பட்டால்தான் ஆரியம் ஒழியும்!

 - மயிலாடன்

புதன், 6 ஜனவரி, 2021

200 ஆண்டுகளுக்கு முன் வந்த புள்ளி இல்லா திருக்குறள் குறிப்பேடு


உலக மக்களுக்கு சிறந்த வாழ்க்கை நெறியை நினைவூட்டி, அறிவுறுத்தும் அறநூல், திருவள்ளு வரின் திருக்குறள்.

‘பிறப்பொக்கும் எல்லார்க்கும்' என்ற பேதமிலா பெருநெறியே மனித குலத்தினை உயர்த்திடும் வாழ்வியல் என்பதையும், எதையும் உன் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து முடிவு செய் என்றும் இடித்துள்ளது. மனித குலத்திற்கு வாழ்வியலாகும் முக்கிய கூறு மூன்று. அறம், பொருள் - இன்பம் என்பதே என்பதை விளக்கிடும் நூல். தமிழ்ப் பண்பாடு திராவிட நாகரீகம் எப்படி சிறந்ததாக 2500 ஆண்டுகளுக்கு முன் தழைத்தோங்கியிருந்தால், இப்படிப்பட்ட ஒப்பற்ற உயர் அறிவுச் செம்மல் இப்படிப்பட்ட திருக்குறளை - ‘குறுகத்தறித்த குறளாக' ஆக்கி தந்திருக்க முடியும்.

இதுவரை திருக்குறள் எத்தனையோ மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு செம்மொழி தமிழின் அரும் அறிவுக் கருவூலங்களில் முதன்மையதாக உள்ளது!

அதன் பதிப்புகள் பலவும் வந்துள்ளது. ஆனால் இப்போது, சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தவரால் ‘மீள் பதிப்பாக' 2016 இல் வெளியாகி யுள்ள திருக்குறள் 1812ஆம் ஆண்டு வந்த பதிப்பின் மீள் பதிப்பு!

208 ஆண்டுக்கு முன் வந்த திருக்குறள் பதிப்பினை நமது தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு அறிவு விருந்தாக்கியுள்ளனர்.

மூலப் பதிப்பு புள்ளிகள் வைக்கப்படாத ஓலைச் சுவடி எழுத்துக்கள். ஏனெனில் புள்ளி வைத்தால் எழுத்தாணி ஓலைச் சுவடியைக் கிழித்துவிடக்கூடிய அவலம் உண்டு. அதனால் மக்கள் மனதால் அப்புள்ளியைப் போட்டு நிரப்பியே படித்துப் பயன் பெறப்பழகி விட்டிருக்கக் கூடும்.

அப்பதிப்பு அப்படியே தலைப்பு உட்பட - புள்ளி யில்லாமலே, (ஒரிஜினலில்) மூலத்தில் உள்ளபடி மீள் பதிப்பு அழகிய அச்சு, கட்டுகள் கூட ஒரு அருமை யான கையடக்க பரிசுப் பொருளாகப் பெறத் தகுதி யான நூலாக வெளி வந்துள்ளது.

“திருக்குறள்" (புள்ளியில்லாதது கூட) உள்ளே அதிகாரம் - குறட்பாக்கள் அனைத்தும் இம்முறை யிலே அப்படியே அச்சில் மீள் பதிப்பாக வெளி வந்துள்ளது!

200 ஆண்டுக்கு முன்னரே வந்துள்ள நம் இலக் கிய அறிவுக் கருவூலம் பற்றிய, ரோஜா முத்தைய்யா ஆராய்ச்சி நூலக இயக்குநர் திரு. க.சுந்தர் அவர்கள் எழுதியுள்ள பதிப்புரை பல அரிய தகவல்கள் தருகிறது. படியுங்கள்.

பதிப்புரை

செவ்வியல் இலக்கியங்களில் முதலில் அச்சேறி யது திருக்குறளே. 1812ல் வெளிவந்த இப்பதிப்பு, புள்ளியில்லா மெய்யெழுத்துக்களுடன் அச்சிடப் பட்டுள்ளது. இப்பதிப்பைத் தொடர்ந்து பல பதிப்பு கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. திருக்குறள் முதற்பதிப்பு நூல் உலகளவில் இன்று ஐந்திற்கும் குறைவான பிரதிகளே உள்ளன. அரிதான இந் நூலை மீள்பதிப்பு செய்வதன் மூலம் இந்நூல் அனைவரிடத்திலும் சென்றடையும் என்ற எண் ணம் எங்களுக்கு நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது.

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் உள்ள சிந்துவெளி ஆய்வு மையத்தின் மதிப்புறு ஆலோசகரான திரு. ஆர். பாலகிருஷ்ணன் அவர்கள் திருக்குறள் இன்பத்துப்பாலில் ஏழு குறட்பாக்களுக்கு நாட்டுப்புறப் பாணியில் பாடல்கள் இயற்றியுள்ளார். இத்தொகுப்பிற்கு திரு. டிராட்ஸ்கி மருது அவர்கள் வரைந்த ஓவியங் களுடன் புத்தக வடிவிலும், அதற்கு திரு. தாஜ் நூர் அவர்கள் இசையமைத்த பாடல்கள் ஒலிப்பேழை வடிவிலும் 27 நவம்பர் 2016 அன்று வெளியிடப் படுகிறது. அதே நாளில் இப்பாடல் இசை அரங் கேற்றமும் நடைபெறவுள்ளது. இந்நாட்டுக்குறள் விழா திருக்குறள் ஆர்வலர்களைக் கொண்ட வள்ளுவர் குடும்பம் என்னும் சமூக ஊடக குழுமத்தினால் நடத்தப்படுகிறது. இவ்விழாவன்றே இம்மீள்பதிப்பை வெளியிடுவது மிக பொருத்தமாக இருக்கும் என வள்ளுவர் குடும்பத்தினர் ஊக்க மளித்தனர். இதற்காக, திருக்குறள் நூலின் முதல் பதிப்பு பிரதியை எண்ணிமப்படுத்தி, எண்ணிமத் தொழில்நுட்பம் மூலமாக சுத்தம் செய்து முதல் பதிப்பு பிரதியில் எந்த ஒரு மாற்றமும் திருத்தமும் செய்யாமல் அப்படியே பதிப்பிக்கப்படுகிறது.

இம்மீள்பதிப்பை சேகரிப்பாளர் பிரதியாக (Collector's edition) அச்சடிக்க ஆகும் செலவு ரூபாய் நான்கு லட்சத்து ஐம்பதாயிரம் ஆகும். 1812ல் வெளிவந்த பதிப்பு அக்காலத்திலேயே பிரதி வேண்டுவோரிடம் பொருளுதவியை முன் கட்டணமாக பெற்றுக்கொண்டே அச்சிட்டப்பட்டது. அதேபோல் இம்மீள்பதிப்பையும் பொருளுதவி பெற்றே அச்சிட எண்ணினோம். ஸ்ரீராம் காபிடல் லிமிடெட் நிறுவனம் (Shriram Capital Limited) இதற்காக பெரும்பான்மை தொகையாக ரூபாய் மூன்று லட்சம் நல்கையாக வழங்கியுள்ளது. இந்நல் கையுடன், மீதமுள்ள பணத்தை ஆர்வலர்களிடம் பிரதிகளுக்கான முன்பணம் பெற்று இப்பிரதி அச்சிடப்படுகிறது. இப்பிரதியின் மூலம் வரும் வருவாய் நூலகப் பணிகளுக்குச் செலவிடப்படும்.

- க. சுந்தர் இயக்குநர், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், சென்னை

பாராட்டத்தக்கப் பணி. ஒவ்வொரு இல்லத்திலும் அணி செய்ய வேண்டியது.

இதனை எனக்கு 1.12.2020 அன்று நேரில் வந்து அளித்து மகிழ்ச்சியை வழங்கிய நண்பர்கள் திராவிட சிந்துவெளி நாகரிக ஆய்வாளர் திரு. ஆர்.பால கிருஷ்ணன் அய்.ஏ.எஸ். (ஓய்வு) அவர்களுக்கும், இயக்குநர் க.சுந்தர் அவர்களுக்கும், நண்பர் விசுவேஷ் அவர்களுக்கும் எமது உளப்பூர்வமான நன்றி!