பக்கங்கள்

திருவிக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருவிக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 17 ஆகஸ்ட், 2019

இறுதி மூச்சுள்ள மட்டும் எதிர்த்தே தீருவோம்!

24.07.1948  - குடிஅரசிலிருந்து... -

இவ்வுலகில் அடிபடுவதற்கென்றே பிறப் பிக்கப்பட்டவைகள் மூன்றாகும். அவை ஒன்று, பெண்கள். இரண்டு, சூத்திரர்கள்; மூன்று, பறை (முரசு) இவையாகும். இப்படிப்பட்ட மிக மிக இழித்தன்மையான வர்ணாசிரம தர்மத்தைக் கொண்ட ஒரு கதைக்காகவா இந்தியை இந்நாட்டில் நுழைக்க வேண்டும்?

பெண்கள் உரிமை வேட்கை கொண்ட லையும் இத்தமிழ் நாட்டில், சூத்திரன் என்கிற வார்த்தையை ஏட்டில்கூட இருக்கவிட மாட்டோம் என்று எண்ணிறந்த வாலிபர்கள் துடித்துக் கொண்டிருக்கும் இக்காலத்திலா, பெண்ணடிமையையும், சூத்திர இழிவையும் காக்கும் இந்தியை வீரத் தமிழ்நாட்டில் கட்டாயப் பாடமாக்க நினைப்பதா? இது புத்திசாலி தனமாகுமா? இதைவிட முட்டாள் தனம் வேறு உண்டா?

தமிழ் மொழிக்குள்ள பண்பில், லட்சணத்தில் ஒரு பங்கு பண்புகூட இந்தி மொழியில் இல்லை என்பதை அமைச்சரேக்கூட ஒப்புக் கொள்வார். தமிழ்மொழி மந்தியையும் மனிதனாக்கும் தன்மை பெற்றது. ஆனால், இந்தியோ மனிதனையும் மந்தியாக்கும் தன்மையுடையது.

ஆகவே, கலையற்ற, பண்பற்ற, கலைஞர்களை ஈன்றெடுக்கும் ஆற்றல் அற்ற, மனிதர்களின் மனிதத்தன்மையை அகற்றி அவர்களை மந்திகள் ஆக்கவல்ல இவ் இந்திமொழி இந் நாட்டு மக்களுக்குத் தேவையற்றது. இதை நாம் எதிர்த்தே தீர வேண்டும்.

ஒரு காலத்தில் நாவலந் தீவு பூராவும், இன்றையப் பரத கண்டம் பூராவும் பரவியிருந்த தமிழகம், முதலில் விந்தியம் வரை குறுகி இன்று வேங்கடம் வரை குறுகி நிற்கிறது. இந்த நிலையில் இத்தமிழகத்தில் இந்தி நுழைந்து விடுமானாலோ தமிழகமே மறைந்து போகும், மாண்டு போகும்.

ஆகவே இதை கடைசி மூச்சுள்ளவரை ஒவ்வொரு தமிழனும் எதிர்த்தே தீர வேண்டும்.

- தமிழ்ப் பெரியார் திரு.வி.க.

17.07.1948-ஆம் நாள் சென்னையில் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டுத் திறப்பாளர்

 - விடுதலை நாளேடு, 17.8.19


செவ்வாய், 20 நவம்பர், 2018

பெரியாரின் பேருள்ளம்! திருவிகவிற்கும் தமிழுக்கம் தந்த மரியாதை!

தமிழ்த் தென்றல் திரு.வி.க அவர்கள் தான் இறந்தால் பேராசிரியர் அ. ச. சம்பந்தன், மு. வரதராசன் இருவரையும் கொள்ளி வைக்கச் சொல்லியிருந்தார்.
   சொல்லி சிறிது காலத்திற்குள் திருவிக இறந்துவிட்டார். அவர் இறந்தபிறகு சிதையில் அவர் உடல் வைக்கப்பட்டிருந்து. சுடுகாட்டில் தந்தை பெரியார் தடியோடு நின்று கொண்டிருந்தார். அவரது தொண்டர் படை கடைசி நிகழ்வுகளை செய்வதற்காக சிறுசிறு பந்தங்களோடு நின்று கொண்டிருந்தனர்.
      சம்பந்தம் அவர்களுக்கும், வரதராசனார் அவர்களுக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை.
       தயங்கியபடியே பெரியாரிடம் வந்து திருவிக அவர்கள் எங்களை கொள்ளி வைக்கச் சொல்லியிருக்கிறார் என்று கூறியிருக்கிறார்கள்.
    இப்பொழுது பெரியாரின் பெருமை வெளிப்பட்டது.
       "அப்படியா சொன்னார்? அப்படீன்னா நீங்களே செய்யுங்க" என்று சொல்லிவிட்டு, தீப்பந்தங்களுடன் சிதையை சுற்றியிருந்த தோழர்களை தள்ளி வந்துவிடுமாறு பணித்தார்.
    ஆனால் அவர்களோ வருவதாக இல்லை. உடனே பெரியாருக்கு சினம் வந்தது. "சொல்றனே காதுல விழல, தீப்பந்தங்களை ஓரமா வச்சுட்டு வாங்கப்பா "என்று கர்ஜித்தார்.
     என்னைப் பார்த்து "தம்பி நீங்க எப்படி செய்வீங்க இதை " என்று கேட்டார்.
     சின்னய்யா அவர்களுக்கு மிகவும் பிடித்த திருவாசகம், சிவபுராணத்தை சொல்லி சிதைக்கு தீ மூட்டுவோம் என்றேன்.
   " அப்படியே செய்யுங்க தம்பி "என்று சொல்லிய பெரியார் அவ்விடத்தை விட்டு புறப்படாமல் அங்கேயே நின்றார்.
     நானும் வரதராசனும் தலைமாட்டில் அமர்ந்து சிவபுராணத்தை தொடங்கினோம். நாங்கள் பாடுகின்றவரை நின்று கொண்டு இருந்த பெரியார் ஆகிய அப்பெரியார், தம்முடைய நண்பருக்கு இறுதியாக ஒரு கும்பிடு போட்டுவிட்டு தொண்டர் படை சூழ புறப்பட்டார்.
     தேசத்தொண்டு, தமிழ்த் தொண்டு, சைவத் தொண்டு புரிந்து வாழ்ந்த அம்மகானின் இறுதி ஊர்வலத்தில் தேசபக்தி தொண்டர்கள், தமிழ்ப் புலவர்கள், சைவர்கள் யாரும் வரவில்லை. எதிர்க்கட்சியினர் என்று குறிக்கப் பெற்ற பெரியார் ஈ. வெ. ராவும் அவரது தொண்டர்கள் தான் இறுதிவரை நின்று இறுதி வணக்கம் செய்து போயினர்.
      தமிழகம் தனக்கும், மொழிக்கும் இறுதிவரை தொண்டாற்றிய திருவிக போன்ற பெருமக்களுக்கு எப்படி நன்றி பாராட்டுகிறது என்பதை அன்று காண முடிந்தது.
  (அ. ச. ஞான சம்பந்தன் எழுதிய "நான் கண்ட பெரியவர்கள்" தமிழ்த்தென்றல் திரு.வி.க., பக்கம் 131-133)