பக்கங்கள்

புதன், 21 ஜனவரி, 2026

தைப்பொங்கல் – திராவிடர் பண்பாட்டு மீட்டுருவாக்கத் திருவிழா!-கி.வீரமணி


 ‘‘இப்பொங்கல் விழாவின் தத்துவம் என்ன வென்றால் விவசாயத்தையும், வேளாண்மையையும் அடிப்படையாகக் கொண்டு அறுவடை விழாவென்று சொல்லப்படுவதாகும். ஆங்கிலத்தில் ‘‘ஹார்வெஸ்ட் ஃபெஸ்டிவல்’’ என்று சொல்லப்படுவதன் கருத்தும் இதுதான்.’’

‘‘தமிழ் மக்களுக்குப் பாராட்டத்தக்க ஓர் உண்மையான திருநாள் உண்டு என்றால், அது தமிழர் திருநாளாகிய பொங்கல் திருநாள்தான். மற்ற திருநாள் எல்லாம் வைதீகச் சம்பந்தமானது. இந்தத் திருநாள் ஒன்றுதான் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டது.’’

– பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்

தைப் பொங்கல் என்ற பொங்கல் விழா – திராவிடர் – தமிழர் திருவிழா – பண்பாட்டு அடிப்படையில் அமைந்தது; பகுத்தறிவு அடிப்படையிலும் பெருமை உடையது. ‘அறுவடைத் திருநாள்’ என்று உலகெங்கும் கொண்டாடும் உழவர் தம் உழைப்பின் வெற்றியை எண்ணி உவகை பொங்கக் கொண்டாடப்படும் உன்னதத் திருவிழா!

திராவிடப் பண்பாடு – மனுதர்ம ஆரியப் பண்பாட்டுக்கு நேர் எதிரானது. எப்படி? ஏன்?

ஆரியப் பண்பாட்டின் அகம் மனுதர்ம சாஸ்திரம்.

அதில், உலகத்தாரின் உயிருக்கே பாதுகாப்பான உணவைத் தரும் வேளாண்மையை எவ்வளவு கொச்சைப்படுத்திக் கூறப்பட்டிருக்கிறது என்பதைப் பாருங்கள்.

‘‘சிலர் பயிரிடுதலை நல்ல தொழில் என்று நினைக்கிறார்கள். அந்தப் பிழைப்பு பெரியோர்களால் நிந்திக்கப்பட்டது; ஏனெனில், இரும்பை முகத்திலே உடைய கலப்பையையும், மண்வெட்டியையும், பூமியையும், பூமியில் உண்டான பல ஜந்துக்களையும் வெட்டுகிறதல்லவா?’’

– (மனு அத்தியாயம் 10; சுலோகம் 84).

இதற்கு முந்தைய சுலோகம் கூறுவதென்ன?

‘‘பிராமணனும், க்ஷத்திரியனும் வைசியன் தொழிலினால் ஜீவித்த போதிலும், அதிக ஹிம்சையுள்ளதாயும், பராதீனமாயும் இருக்கிற பயிரிடுதலை அகத்தியம் நீக்கவேண்டியது.’’ (‘‘அதைச் செய்யாவிட்டால், ஜீவனம் நடக்காத காலத்தில் அதையும் அந்நியனைக் கொண்டு செய்விக்க வேண்டும்‘’ என்பது முன் சுலோகத்தின் கருத்து)

– (மனு அத்தியாயம் 10; சுலோகம் 83).

இதற்கு முன் சுலோகம் கூறுவதென்ன? பார்ப்போமா!

‘‘தன் ஜாதித் தொழில், க்ஷத்திரிய ஜாதித் தொழில் இரண்டினாலும் ஜீவிக்கக் கூடாவிடில் வைசியன் தொழிலான பயிரிடுதல், பசுவைக் காப்பாற்றல், வியாபாரஞ் செய்தல் இவைகளாலும் ஜீவிக்கலாம்.’’

– (மனு அத்தியாயம் 10; சுலோகம் 82).

இந்த சுலோகத்திற்குமுன் உள்ள சுலோகம் (அத்தியாயம் 10, சுலோகம் 81) கூறுவது என்ன?

‘‘பிராமணனுக்கு மேற்சொல்லிய பிரகாரமாக தன் தொழிலினால் ஜீவிக்கக் கூடாத சமயத்தில் கிராமாதிகாரந் தேசாதிகார முதலிய க்ஷத்திரியன் தொழிலினால் ஜீவிக்க வேண்டியது. ஏனென்றால், அது அவனுக்கு அடுத்த ஜாதியின் தொழில் அல்லவா?”

(ஆதாரம்: ‘‘அசல் மனுதர்மம்‘’, பதிப்பு 1919, திருவைந்திரபுரம் – கோமாண்டூர் – இராமாநுஜாசாரியார் – வடமொழி, சமஸ்கிருத பாஷையில் உள்ளது)

பக்கம் 295.

இதன் கருத்து:

  1. பயிரிடுதல் மிகவும் மோசமான தொழில் – நல்ல தொழில் அல்ல.
  2. அவனவன், அவனவன் தொழிலையே செய்யவேண்டும்.
  3. அது முடியாத காலங்களில், தவிர்க்க முடியாத பட்சத்தில் இந்தப் பயிர்த் தொழிலையும் மாற்றிச் செய்து, உயிர்களைக் காப்பாற்றலாம் (வெறுப்புடன் விதிவிலக்கு).

ஆனால், மனித குலத்தையே ஓர் குடும்பமாகப் பார்க்கும் மகத்தான திராவிடர் பண்பு பூத்துக் குலுங்கும் திருக்குறள் – உழவின் சிறப்புபற்றி ஒரு தனி அதிகாரத்தையே – 10 குறள்பாக்களில் படைத்துக் காட்டி – காரண காரிய விளக்கத்துடன் பெருமைப்படுத்துகிறது!

அதிகாரம் 104 – ‘உழவு’ என்ற தலைப்பில்,

‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை’ (குறள் 1031)

எனத் தொடங்கி, 10 குறள்பாக்களில் உழவின் சிறப்பை வானளாவிய வகையில் புகழுகிறார் வள்ளுவர்!

ஒரு குலத்துக்கொரு நீதி – தொழில் பேசுகிறது மனு!

மக்களை ஜாதிப் பார்வையால் பிரித்து அளக்கிறது, பிளக்கிறது! – அது ஆரியம்.

ஆனால், திருக்குறளோ இந்தப் பத்துக் குறள்களில் உலகத்தையே – மனித குலத்தையே ஒன்றுபடுத்தி ஒரே அணியாய்ப் பார்த்துப் பெருமைப்பட்டுக் கூறுகிறது என்பதற்கு சான்றுகள்தான் உலகம், உலகம் என்று பலமுறை கூறி, உறுதிப்படுத்தும் பரந்த பார்வை (Inclusiveness). இது திராவிடப் பண்பாடு!

மனுவோ, உழவை சூத்திரர்கள், வைசியர்கள் செய்யும் தொழில் என்று வெறுப்புடன் பார்த்து, உயிர்காப்பதைக்கூட, பின்னுக்குத் தள்ளி, பிளவுபடுத்திப் பிரித்து வைக்கிறது (Exclusiveness). இது ஆரியப் பண்பாடு.

எனவே, திராவிடப் பண்பாட்டுத் திருவிழா – பொங்கல் விழா – உழவர் திருநாள் – அறுவடைத் திருவிழா என்பது அய்யந்திரிபற விளங்குகிறது அல்லவா?

மேலும் எவ்வித தனிச்சிறப்புமற்ற ஆரியப் பண்டிகைகளுக்கு இல்லாத தனிச்சிறப்பு திராவிடப் பண்பாட்டுத் திருவிழாவிற்கு உண்டு. இவ்விழா ஒரு மதம்சார்ந்த விழா (தீபாவளி போல) அல்ல! அனைத்து உழவர்களும், மக்களும் பிறவிபேதமின்றி மகிழ்ந்து நன்றி செலுத்திக் (Thanks giving) கொண்டாடுவதாகும். இயற்கைக்கு – உழைப்போருக்கு – உழைப்பில் உதவிடும் மாடுகளுக்கும், மனிதர்களுக்கும் பேதமின்றி நன்றி பாராட்டும் பேதம் நீக்கிய பெருவிழா – திருவிழா!

தீபாவளி கதை கட்டுக்கதை. புராணக் கதையில்கூட உயிர்க்கொலைகள் – கொலைகளைக் கொண்டாடும் பண்டிகை!

இங்கோ புதுப்பொங்கல்! புத்துலகுக்குத் தெம்பூட்டும் புது வெள்ள மகிழ்ச்சி – புது நம்பிக்கை பூத்துக் குலுங்கும் புத்தெழுச்சித் திருவிழா! பண்பாட்டுப் படையெடுப்பை முறியடித்து, ஜாதி, மத, பேதம் ஒழித்த ‘உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ’ என உலகுக்குப் பறைசாற்றும் அனைவருக்குமான திராவிடத் திருவிழா!

ஆரியப் பண்டிகை மற்ற இந்து மதப் பண்டிகைகள் – அசுரர்களைக் கொன்றனர் தேவர்கள் என்று இனப் போராட்ட மறைவு வைத்த புனைவுகள்தானே!

அது செயற்கை (கற்பனை) – பொங்கல் விழா இயற்கையானது – உண்மையும்கூட!

திராவிடர் இயக்கம் இதனை மீட்டெடுத்து, திராவிடர்தம் திருவிழா என்று பகுத்தறிவுடன் விளக்கி செம்மாந்து நிற்கிறது!

ஆய்வு அறிஞர் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள், மற்றொரு புதிய கோணத்தில் பொங்கல் விழாவை விளக்குகிறார்!

‘‘தமிழர்களின் தனிப்பெரும் திருவிழாவாகத் திகழ்வது தைப் பொங்கல் திருநாள். தேசிய இனத்துக்குரிய அடையாளம் ஒன்றைத் தமிழர்க்கு வழங்கும் திருவிழா இது. சமய எல்லைகளைக் கடந்த திருவிழாவாகவும் இது அமைகிறது.

பிறப்பு, இறப்புத் தீட்டுக்களால் பாதிக்கப்படாத திருவிழா இது என்பது பலர் அறியாத செய்தி. தைப் பொங்கல் நாளன்று ஒரு வீட்டில் இறப்பு நிகழ்ந்தாலும், மிக விரைவாக வீட்டைச் சுத்தம் செய்து, இறந்தவர் உடலை எடுத்துச் சென்றவுடன், தைப் பொங்கல் இடும் வழக்கத்தை நெல்லை மாவட்டத்தில் காணலாம். பொங்கல் திருநாளன்று, திருவிளக்கின் முன் படைக்கும் பொருள்களில் காய்கறிகளும், கிழங்கு வகைகளும் சிறப்பிடம் பெறுகின்றன. இவற்றுள் கிழங்கு வகைகள் (சேனை, சேம்பு, கருணை, சிறுகிழங்கு, பனங்கிழங்கு) பார்ப்பனர்களாலும், பெருங்கோவில்களாலும் காலங்காலமாக விலக்கப்பட்ட உணவு வகைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்சொன்ன இரண்டு செய்திகளாலும் தைப்பொங்கல் தமிழர்களின் திருவிழா என்பதையும், அது பார்ப்பனியப் பண்பாட்டிலிருந்து விலகி நிற்பது என்பதனையும் உணர்ந்து கொள்ளலாம்.’’

– தொ.ப.சி. ‘‘பண்பாட்டு அசைவுகள்’’, நூல் பக்கம் 56)

திராவிடர் இயக்கம் – அறிவு ஆசான் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி, திராவிடர் கழகம், இனமான தமிழ் உணர்வாளர்கள் பொங்கல் விழாவைப் பொலிவுடன் கொண்டாடுவதை – எப்படியெல்லாம் ஒரு பண்பாட்டுப் படையெடுப்பை விரட்டிடும் வீரம் செழிக்கும் விழா என்பதை – பூரித்து வாழ்த்துகிறார் நம் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

‘‘பத்தன்று; நூறன்று; பன்னூ றன்று;

பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்

புத்தாண்டு, தைம்முதல்நாள், பொங்கல் நன்னாள்,

போற்றி விழாக் கொண்டாடி உன் நலத்தைச்

செத்தவரை மறந்தாலும், மறவா வண்ணம்

செந்தமிழால் வானிலெல்லாம் செதுக்கி வைத்தோம்!

பத்தரை மாற்றுத் தங்கம் ஒளி மாய்ந் தாலும்

பற்றுள்ளத்தில் உன் பழஞ்சீர் மங்கிற் றில்லை.’’

‘‘தமிழகமே, திராவிடமே, தைம்மு தல்நாள்

தன்னில் உன்னை வாயார வாழ்த்து கின்றேன்

அமிழ்தான பாற்பொங்கல் ஆர உண்டே

அதைஒக்கும் தமிழாலே வாழ்த்து கின்றேன்;

எமைஒப்பார் எவருள்ளார்? எம்மை வெல்வார்

இந்நிலத்தில் பிறந்ததில்லை; பிறப்ப தில்லை.

இமைப்போதும் பழிகொண்டு வாழ்ந்த தில்லை

எனும்உணர்வால் வாழ்த்துகின்றேன்; வாய்ப்பேச் சல்ல.”

- விடுதலை நாளேடு, 14.01.26

வெள்ளி, 16 ஜனவரி, 2026

பொள்ளாச்சி துப்பாக்கி சூடு பொய்யா?


பராசக்தி படத்தில் காட்டப்படும் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் பொள்ளாச்சி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடக்கவே இல்லை எனப் பலர் வாதிடுகின்றனர்.

ஏனென்றால் கூகுளிடம் சென்று பொள்ளாச்சி துப்பாக்கி ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் சூடு தொடர்பான ஆவணங்கள் உண்டா என்றேன். உடனே அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என அது சாதித்தது.

Anti Hindi Agitation Pollachi Police Gun firing.

இணையம் முழுக்க தேடியதில் இந்தியன் எக்ஸ்பிரஸில் 1965 ல் Feb 13 ஆம் தேதி சனிக்கிழமை அன்று  ஆங்கிலத்தில் வெளிவந்த செய்தி குறிப்பை கண்டறிந்து அதன் செய்தியை முதன் முறையாக இங்கு தொகுத்து இட்டிருக்கிறேன். படித்த அறிந்து பகிர்ந்து உதவவும். இல்லையென்றால் எல்லாமே பொய்யென்று நிரூபணமாகிவிடும்‌ 

"தலைப்பு: கலவரத்தை ஒடுக்க ராணுவம் நடவடிக்கை

(படக்குறிப்பு 2: வியாழக்கிழமையன்று ஆவடிக்கு அருகே வன்முறையாளர்களால் பயணிகள் இறக்கிவிடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்ட 8 பெட்டிகள் கொண்ட பயணிகள் ரயிலின் எஞ்சிய பாகங்கள் இவை.)

பொள்ளாச்சியில் வன்முறை கும்பலின் வெறியாட்டம்: மீண்டும் போலீஸ் துப்பாக்கிச் சூடு; பலி எண்ணிக்கை 46-ஆக உயர்வு

இயந்திரத் துப்பாக்கிகளுக்கும், போலீஸ் தோட்டாக்களுக்கும் இதுவரை 46 உயிர்கள் பலியாகியுள்ளன. கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று ராணுவம் களத்தில் இறங்கி நடவடிக்கை எடுத்தது. அங்கு நடத்தப்பட்ட இயந்திரத் துப்பாக்கி மற்றும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில், நான்கு வயதுக் குழந்தை உட்பட பத்து பேர் பலியாயினர்.

மாநிலத்தின் குறைந்தது 11 இடங்களில் இன்று நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் மேலும் 16 பேர் கொல்லப்பட்டனர். பாண்டிச்சேரியில் நேற்று இரவு 4 பேர் கொல்லப்பட்டனர். இதன் மூலம் தற்போதைய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 46-ஆக உயர்ந்துள்ளது.

திருச்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவரும், சென்னிமலை, ஜோலார்பேட்டை, திருவொற்றியூர் மற்றும் ஆற்காடு ஆகிய இடங்களில் தலா ஒருவரும் உயிரிழந்தனர்.

மாணவர் இந்தி எதிர்ப்புப் போராட்டக் குழு விடுத்த அழைப்பை ஏற்று மாநிலம் முழுவதும் முழு அடைப்பு (ஹர்த்தால்) கடைபிடிக்கப்பட்ட போதிலும், வட ஆற்காடு மாவட்டத்தில் ஆரணி மற்றும் பேர்ணாம்பட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தில் அகரமாங்குடி மற்றும் மன்னார்குடி, மதுரை மாவட்டத்தில் கூடலூர் ஆகிய இடங்களில் கலவரங்களும் துப்பாக்கிச் சூடும் அமைதியைக் குலைத்தன.

பொள்ளாச்சியில் ராணுவம்

மத்திய அமைச்சர் திரு. சி. சுப்பிரமணியம் அவர்களின் சொந்த ஊரான பொள்ளாச்சியில், புதன்கிழமையன்று கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்த போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூடு தோல்வியடைந்தது. நகர் முழுவதும் தீ வைப்புச் சம்பவங்கள் மற்றும் பயங்கரவாதச் செயல்கள் அதிகரித்ததால், கோயம்புத்தூரிலிருந்து 7 லாரிகளில் ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு உடனடியாகக் களத்தில் இறக்கப்பட்டனர். மாநிலத்தில் ராணுவம் வரவழைக்கப்படுவது இதுவே முதல் முறை. அங்கு நடத்தப்பட்ட இயந்திரத் துப்பாக்கி மற்றும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில், நான்கு வயதுக் குழந்தை உட்பட பத்து பேர் பலியாயினர்.

சென்னையில் (மெட்ராஸ்) ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ள தொலைபேசி பூத் ஒன்றிற்குத் தீ வைத்த கும்பலைக் கலைக்க, கடந்த இரண்டு நாட்களில் இரண்டாவது முறையாகப் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது.

திருச்சியில் பதற்றம்

திருச்சியில் பிற்பகலில் இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடந்ததையடுத்து, ராணுவம் நகரின் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டது. அஞ்சல் நிலையத்திற்குத் தீ வைத்த கும்பலைத் தனது வீட்டு வாசலில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த 17 வயதுச் சிறுவன் உட்பட இருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். மற்றுமொரு இடத்தில் காவல் நிலையம் மற்றும் அஞ்சல் நிலையத்தைத் தாக்கிய கும்பல் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது.

ரயில்வே மற்றும் பொதுச் சொத்துக்கள் நாசம்

பல புறநகர் ரயில் நிலையங்களில் ரயில்வே கேபின்கள் மற்றும் விலை உயர்ந்த சிக்னல் கருவிகள் அழிக்கப்பட்டுக் கிடந்தன. நேற்றுத் தாக்கப்பட்ட கோடம்பாக்கம் ரயில் நிலையம் இன்றும் தாக்குதலுக்கு உள்ளானது. புறநகர் ரயில் சேவையைச் சீரமைக்கக் குறைந்தது இரண்டு வாரங்களாவது ஆகும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, தியாகராய நகர் (T.Nagar) பகுதிகளில் தபால் பெட்டிகள் மற்றும் தொலைபேசிப் பெட்டிகள் பெயர்த்து எடுக்கப்பட்டு நடுரோட்டில் தீயிட்டு கொளுத்தப்பட்டன. பல இடங்களில் பேருந்து நிறுத்தக் கம்பங்கள் மற்றும் மின் கம்பங்கள் பிடுங்கப்பட்டுச் சாலைத் தடைகளாகப் பயன்படுத்தப்பட்டன.

கும்பல் ஒன்று என்ஜின் டிரைவர் மற்றும் ஃபயர்மேனைத் தாக்கிவிட்டு நீராவி என்ஜின் மீது கற்களை வீசியது. மற்றொரு கும்பல் பிரபல தமிழ் நாளிதழ் அலுவலகத்தின் மீதும், அதற்கு எதிரே இருந்த அஞ்சல் அலுவலகத்தின் மீதும் கற்களை வீசித் தாக்கியது.

போக்குவரத்து முடக்கம்

பல இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பேருந்துகளை மறித்து, பயணிகளை கீழே இறங்கச் செய்துவிட்டு, பேருந்துகளை பணிமனைக்குச் செல்லுமாறு பணித்தனர். வால் டாக்ஸ் சாலையில் அரசுப் பேருந்துகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன; பேருந்துகளுக்குத் தீ வைக்கவும் முயற்சி நடந்தது. கல்வீச்சு சம்பவங்களால் பல பேருந்துகள் சேதமடைந்தன, 6 பேருந்துகள் முழுமையாக அழிக்கப்பட்டன. இதனால் 10 முதல் 30 வரை இயக்கப்பட்ட மிகக் குறைந்த அளவிலான பேருந்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.

மாநகராட்சி தொடக்கப் பள்ளி ஒன்றுக்குத் தீ வைக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினரால் சாலைத் தடைகள் காரணமாக உரிய நேரத்திற்குச் செல்ல முடியவில்லை; அவர்கள் சென்றடைவதற்குள் 4 அல்லது 5 குடிசைகள் எரிந்து நாசமாகின. போலீஸாரைக் கண்டதும் வன்முறையாளர்கள் தப்பியோடினர்.

போராட்டத்தைக் கைவிட மாணவர் சங்கம் முடிவு

தமிழ்நாடு மாணவர் இந்தி எதிர்ப்புப் போராட்டக் குழுவின் செயற்குழு இன்று கூடி, தற்போதைய அனைத்துப் போராட்டங்களையும் நிறுத்தி வைக்கத் தீர்மானித்தது.

அமைதியான முறையில் தொடங்கப்பட்ட போராட்டம் திடீரென வன்முறை மற்றும் ரத்தக் களரியாக மாறியதாலும், இன்று கடைபிடிக்கப்பட்ட முழு அடைப்பு வெற்றி பெற்றதாலும், முன்பு அறிவிக்கப்பட்ட அனைத்துப் போராட்ட நிகழ்ச்சிகளும் முடிவுக்கு வருவதாகக் குழு அறிவித்தது. மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்களைப் போராட்டத்தைத் தொடர வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டது.

பத்திரிகைகள் மற்றும் முக்கியத் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்றும், மத்திய அமைச்சர்கள் திரு. சி. சுப்பிரமணியம் மற்றும் திரு. ஓ.வி. அழகேசன் ஆகியோரின் ராஜினாமா மற்றும் அவர்கள் அளித்த ஒத்துழைப்பு உறுதிமொழியால் ஏற்பட்ட திருப்திகரமான சூழலைக் கருத்தில் கொண்டும் மாணவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

செயற்குழுவின் இந்த முடிவைத் தொடர்ந்து, இன்னும் சில நாட்களில் பொதுக்குழு கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது."

இணையம் இல்லை என்று சொன்னாலும், இது வெறும் கதை அல்ல; நம் முன்னோர்கள் சிந்திய ரத்தம். தன் வீட்டு வாசலில் நின்ற 17 வயதுச் சிறுவன் முதல், விபரம் அறியாத 4 வயதுப் பச்சிளம் குழந்தை வரை, மொழிப் போரில் பலியான உயிர்களுக்கு, கறையான் அரித்த இந்த பழைய காகிதங்களே சாட்சி.

பொள்ளாச்சியில் ராணுவம் இறக்கப்பட்டு, இயந்திரத் துப்பாக்கிகள் சொந்த மக்கள் மீதே முழங்கிய இந்த கோர சம்பவத்தை, 'இப்படி ஒன்று நடக்கவே இல்லை' என்று வரலாறு மறைக்கப் பார்க்கிறது. ஆனால், உண்மையை யாராலும் நிரந்தரமாகப் புதைக்க முடியாது. 1965-ல் சிந்திய ரத்தம் காய்ந்திருக்கலாம், ஆனால் அதன் வடுவும், வலியும் தமிழினத்தின் நினைவில் இருந்து என்றுமே அழியாது.

வரலாறு என்பது வெற்றியாளர்களால் எழுதப்படுவது மட்டுமல்ல; அது இதுபோன்று தேடித் தொகுக்கப்பட வேண்டிய உண்மையும் கூட. ஆவணங்கள் இல்லையெனில், நம் தியாகங்கள் அனைத்தும் நாளடைவில் வெறும் கற்பனைக் கதைகளாகத் திரித்து எழுதப்பட்டுவிடும் போல. மறக்காமல் பகிருங்கள். நன்றி

கட்டுரை: இராஜசேகரன் பாண்டுரங்கன்

#பராசக்தி #Parasakthi #Pollachi #PollachiFiring #Congress #INC #DMK #TVK #tamilcinema #BJP  #indiannationalcongressparty
- பெ. பழனி முகநூல் பதிவு, 15.01.2026

சனி, 27 டிசம்பர், 2025

திருவள்ளுவர், தமிழர்களின் உலக அடையாளம்! திருக்குறள் தமிழர்களின் பண்பாட்டு அடையாளம்! ஆறு அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


 கன்னியாகுமரி, டிச.31 திருவள்ளுவர், தமிழர்களின் உலக அடையாளம்! திருக்குறள் தமிழர்களின் பண்பாட்டு அடை யாளம் என்று சொல்லி, ஆறு அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (31.12.2024) கன்னியாகுமரியில், முக்கடல் சூழும் குமரி முனையில் உள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில், திருக்குறள் ஓலைச்சுவடிகள், புத்தகங்கள், மின்நூல்கள் மற்றும் திருவள்ளுவர் சிலை பற்றிய புகைப்படக் கண்காட்சியைத் திறந்து வைத்து, திருவள்ளுவர் உருவச் சிலை வெள்ளி விழா சிறப்பு மலரை வெளியீட்டு, திருவள்ளுவர் உருவச்சிலை வெள்ளி விழா வளைவிற்கு

அடிக்கல் நாட்டி, திருக்குறள்
சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்குப் பரிசுத் தொகை வழங்கி சிறப்பித்து உரையாற்றினார்.
வள்ளுவம் போற்றுதும்! வள்ளுவம் போற்றுதும்! பேரறிவுச் சிலையாக வானுயர நிற்கும் வள்ளுவர் சிலையின்
வெள்ளி விழா நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்துக் கொண்டிருக்கக்கூடிய பெருமக்களே! தமிழறிஞர்களே! எழுத்தாளர்களே! குறளாசான் வழிநடக்கும் குறள் தொண்டர்களே! என் கண்ணின்மணிகளாம் மாணவச் செல்வங்களே! உங்கள் அனைவருக்கும் எனது தமிழ் வணக்கம்!

என் வாழ்நாளில் சிறந்த நாள் இந்நாள்!

தமிழ்நாடு
“முக்கடல் சூழும் குமரி முனையில், முப்பால் புலவர் வள்ளுவருக்கு முத்தமிழறிஞர் வைத்த சிலையினை போற்றக்கூடிய வெள்ளிவிழாவை திராவிட ஆட்சியில், நான் நடத்தி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! பெருமை அடைகிறேன்! பூரிப்பு அடைகிறேன்! இன்னும் சொல்ல வேண்டும் என்றால், வாழ்நாளில் என் சிறந்த நாளாக தமிழின் பெருமையை, குறளின் அருமையை இளைய தலைமுறைக்குக் கொண்டு செல்லும் கடமையை நிறைவேற்றியதாக நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தச் சிலையை திறந்து வைக்கின்ற பொத்தானை அழுத்தக்கூடிய நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் அழுத்தியபோது சொன்னார். தன்னுடைய உடல் நடுங்கியதாக தலைவர் கலைஞர் சொன்னார். ஏனென்றால், அந்தளவுக்கு உணர்ச்சிப் பெருக்கத்தில் அவர் இருந்தார். வான்புகழ் வள்ளு வருக்கு வானுயரச் சிலை அமைக்கவேண்டும் என்பது, அவருடைய நெடுங்கனவு!
அந்தக் கனவு நனவான மகிழ்ச்சி, அவருக்கு அந்த உணர்வைத் தந்தது! இன்றைக்கு இந்தச் சிலையின் வெள்ளி விழாவை நடத்தும்போது, எனக்குள் இருக்கின்ற பெருமை இன்றைக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது! எவ்வளவு பெரிய சாதனையை செய்துவிட்டு, நமக்கு இப்படி ஒரு வரலாற்று வாய்ப்பைத் தலைவர் கலைஞர் அவர்கள் உருவாக்கித் தந்துவிட்டுப் போயிருக்கிறார் என்ற எண்ணம்தான், இந்தப் பெருமைக்குக் காரணம்!

மக்களுக்கும் – தமிழுக்கும் உழைப்பதுதான் என்னுடைய வாழ்நாள் கடமை!
பொதுவாக, குடும்பங்களில் சாதாரணமாக கேட்பார்கள்…“உன் அப்பா என்ன வைத்துவிட்டு போனார்?” என்று கேட்பார்கள். என்னை கேட்டால், தமிழ்நாடு தொடங்குகின்ற இந்த குமரிமுனையில் வள்ளுவர் சிலையில் தொடங்கி, தலைவர் கலைஞர் செய்த சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம். இதையெல்லாம் தனிப்பட்ட ஸ்டாலினுக்காக செய்தாரா? இல்லை! அப்போது யாருக்காக செய்தார்? தமிழ்நாட்டுக்கும் – தமிழுக்கும் – தமிழினத்துக்கும் உருவாக்கிக் கொடுத்த சொத்துகள்தான் இதெல்லாம்! என்னைப் பொறுத்தவரையில், அவர் வழியில் இந்த நாட்டுக்கும் – நாட்டு மக்களுக்கும் – தமிழுக்கும் உழைப்பதுதான் என்னுடைய வாழ்நாள் கடமை!
திருவள்ளுவர் சிலை அமைத்து 25 ஆண்டுகள் ஆகி விட்டது என்று சொன்னவுடன், அதற்கு பெரிய விழா நடத்தவேண்டும் என்று நான் சொன்னேன்… உடனே சில அதிமேதாவிகள், ஒரு சிலை அமைப்பதற்கு எதற்கு விழா நடத்தவேண்டும் என்று கேட்க தொடங்கினார்கள். அவர்கள் கேள்வியில் அர்த்தம் கிடையாது; ஆனால் உள்ளர்த்தம் உண்டு! அவர்களுக்கு ‘பதிலுக்குப் பதில்’ சொல்ல தேவையில்லை! ஆனால், உங்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது, திருவள்ளுவர், தமிழர்களுக்கு இருக்கக்கூடிய உலக அடையாளம்! திருக்குறள் தமிழர்களின் பண்பாட்டு அடையாளம்! அதனால் கொண்டாடுகிறோம்! கொண்டாடுவோம்! கொண்டாடிக் கொண்டே இருப்போம்!

இன்று நடைபெறுவது, அய்ம்பெரும் விழா!
‘திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா,
திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் பாறையையும் இணைக்கின்ற கண்ணாடி இழைப் பாலம் திறப்பு விழா,
வெள்ளி விழா மலர் வெளியீடு,
திருக்குறள் கண்காட்சி தொடக்கம்,
திருவள்ளுவர் தோரணவாயில் அடிக்கல் நாட்டுதல்’ என்று இந்த விழா சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது!
என்னுடைய மனமார்ந்த நன்றி, பாராட்டுகள்!
நேற்று (30.12.2024) திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் பாறையையும் இணைக்கக்கூடிய 37 கோடி ரூபாய் மதிப்பிலான கண்ணாடி இழை பாலத்தைத் திறந்து வைத்தேன். இந்த விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த எதிலும் வல்லவர் மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களுக்கு, என்னுடைய மனமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல், நானூறு பக்கங்களில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா மலர இலக்கிய வரலாற்றுக் கருவூலமாக உருவாக்கித் தந்திருக்கும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களுக்கும் என்னுடைய பாராட்டுகள்! வாழ்த்துகள்!
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், 12 கோடி ரூபாய் செலவில் அய்யன் திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் உலகப் பொதுமறையான திருக்குறளை பறைசாற்றும் வகையில், 3டி சீரொளிக்காட்சி அமைத்திருக்கும் சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் அவர்களுக்கும் என்னுடைய பாராட்டுகள்! வாழ்த்துகள்!
கன்னியாகுமரி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் என்ற முறையில், இந்த விழாவை சிறப்பாக ஒருங்கிணைத்து, அதில் வெற்றி கண்டிருக்கக்கூடிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்! வாழ்த்துகள்!
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சி நடைபெற உழைத்த தலைமைச் செயலாளர், பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து, சிறப்பாக செய்து காட்டியிருக்கக்கூடிய முதன்மைச் செயலாளர் திரு. கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களுக்கும் எனது

பாராட்டுகள்! வாழ்த்துகள்! நன்றிகள்!
திருக்குறள் தலைவராகவே வாழ்ந்தார் கலைஞர்!
தமிழ்நெறியின் அடையாளமாக, சுனாமியையும் எதிர்த்து உயர்ந்து நிற்கின்ற இந்த வள்ளுவர் சிலைதான், நம்முடைய அடையாளத்தின் பண்பாட்டுக் குறியீடு! திருக்குறளையும், திருவள்ளுவரையும் சொல்லிலும், செயலிலும், நெஞ்சிலும் தூக்கிச் சுமந்த இயக்கம் திராவிட இயக்கம்! சமத்துவத்தைச் சொல்வதால் தான், தந்தை பெரியார் சொன்னார்… “நம் மதம், குறள் மதம்! நம் நெறி, குறள் நெறி!” என்று சொன்னார். குறள் மாநாடு நடத்தி திருக்குறள் புத்தகத்தைக் குறைந்த விலைக்கு அச்சிட்டு வழங்கினார்கள். பேரறிஞர் அண்ணா அவர்கள், “குறள் என்பது வகுப்பறையில் மட்டுமல்லாமல், உங்கள் இல்லங்களில், உள்ளங்களில் பரவ வேண்டும்” என்று சொன்னார். நம்முடைய தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள், திருக்குறள் தலைவராகவே வாழ்ந்தார்! வலம் வந்தார்!
தலைவர் கலைஞர் அவர்கள் பள்ளிச் சிறுவனாக இருந்தபோது, முதன்முறையாக பேச்சுப்போட்டியில் கலந்துகொண்டு, ‘நட்பு’ என்ற தலைப்பில் பேசியபோது, திருக்குறளைத்தான் மேற்கோள்காட்டி பேசியிருக்கிறார்!
அப்போதிருந்து குறளாசான் வள்ளுவருக்கும், தமிழ்க் குரலோன் தலைவர் கலைஞருக்கும் வாழ்நாள் முழுக்க நட்பு இருந்தது! வள்ளுவத்தைப் போற்றுகின்ற தொண்டு இருந்தது.

அனைத்து பேருந்துகளிலும் திருக்குறளை எழுதினார்!

தமிழ்நாடு
தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, சட்டமன்றத்தில் வாதாடி வள்ளுவர் படம் திறக்க வைத்தவர் நம்முடைய தலைவர் கலைஞர்! போக்குவரத்துத் துறை அமைச்சரானதும், அனைத்து பேருந்துகளிலும் திருக்குறளை எழுதினார்! பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தபோது, அனைத்து அரசு விடுதிகளிலும், திருவள்ளுவர் படமும், திருக்குறளும் இடம்பெற வைத்தார்! காவலர் பதக்கத்தில் வள்ளுவரைப் பொறித்தார். தமிழறிஞர்களால் உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் ஆண்டை அரசின் சார்பில் ஏற்றுக்கொண்டு அறிவித்தார்.
மயிலாப்பூரில், திருவள்ளுவர் நினைவாலயம் அமைத்தார். சென்னையில் வள்ளுவருக்குக் கோட்டம் அமைத்தார். குறளோவியம் தீட்டினார். திருக்குறளுக்கு உரை எழுதினார். இப்படி திருக்குறளுக்காகவே வாழ்ந்தார்!
இந்தச் சிலையும் சாதாரணமாக அமைக்கப்படவில்லை. இதற்கென்று ஒரு வரலாறு இருக்கிறது… வான்புகழ் வள்ளுவருக்கு வானுயரச் சிலை அமைக்கவேண்டும் என்று 31.12.1975 அன்று அமைச்சரவையில் முதன்முதலாகத் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
1990 ஆம் ஆண்டு சிலைக்கான பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து தடைகள் ஏற்பட்டன!
1997 ஆம் ஆண்டுதான் விரைவாகப்பணிகள் நடைபெறத் தொடங்கி இந்தச் சிலை அமைக்கப்பட்டது!

கலைஞருடைய கனவுக்கு உரு கொடுத்த மாமனிதர்தான், கணபதி ஸ்தபதி!
கலைஞருடைய கனவுக்கு உரு கொடுத்த மாமனிதர்தான், கணபதி ஸ்தபதி அவர்கள்! அவர்தான் வள்ளுவர் கோட்டத்தையும், பூம்புகார் கோட்டத்தையும், பாஞ்சாலங்குறிச்சி கோட்டையையும் அமைத்தார். அவருடைய அப்பாதான், சென்னையில் இருக்கின்ற காந்தி மண்டபத்தை அமைத்தவர்.
இந்த கம்பீர வள்ளுவர் சிலைக்கு கலைஞர் காரணகர்த்தா என்றால், சிற்பக் கலைஞர் கணபதி ஸ்தபதி அவர்கள்தான் கலைக்கர்த்தா! இந்தச் சிலையை பற்றி சொல்லவேண்டும் என்றால், திருக்குறளின் அதிகாரங்களை குறிக்கின்ற வகையில், 133 அடி உயரம்! அதில், அறத்துப்பால் அதிகாரங்களை குறிக்கின்ற வகையில், பீடம் 38 அடி. அறம் என்ற பீடத்தில் பொருளும்-இன்பமுமாக 95 அதிகாரங்கள் சிலையாக இருக்கிறது.
தலைமீது தூக்கி முடிந்திட்ட கொண்டையையே மகுடமாக கொண்டு – இடுப்பில் பட்டாடையையும் – மார்பில் மேல் துண்டும் – வலது கையானது அறம், பொருள், இன்பம் என்பதைக் காட்டும் மூன்று விரல்களாகவும் – இடது கையில் குறள் ஓலைச் சுவடிகளும் இருப்பது போல அமைத்திருக்கிறார் கணபதி ஸ்தபதி அவர்கள்.

அய்யன் திருவள்ளுவர் சிலையின் சிறப்பு!
7000 டன் எடை கொண்ட இந்தச் சிலையில், 3,681 கற்கள் இருக்கின்றன. இத்தனைக் கற்களைக் கொண்டு ஒரு சிலையை உருவாக்கலாம். ஆனால், அதை ஒரு பாறையில் தூக்கி நிறுத்தி வைத்திருப்பது தான் இந்தச் சிலையின் பெருமை!
133 அடிக்கு சிலை வைக்க, 180 அடிக்கு சாரம் கட்டி இதை அமைத்தார்கள். 500 சிற்பிகள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள். கணபதி ஸ்தபதி அவர்கள் சொன்னார்… தஞ்சைப் பேரரசன் ராஜராஜ சோழனிடம் அன்று கண்ட சிற்பக் கலை மரபை இன்று, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்களிடத்தில் காண்கிறேன் என்று சொன்னார்.
தஞ்சை பெரிய கோயிலை வடிவமைத்த குஞ்சரமல்லனின் வம்சத்தைச் சேர்ந்தவர்தான் கணபதி ஸ்தபதி அவர்கள். சொற்சிற்பியாம் கலைஞரும் – கற்சிற்பியாம் கணபதி ஸ்தபதியும் சேர்ந்து உலக வாழ்க்கைச் சிற்பியாம் வள்ளுவருக்காக உருவாக்கிய சிலைக்கு, நாம் வெள்ளிவிழா கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
இந்த திருக்குறள் விழாவை முன்னிட்டு, சில அறிவிப்புகளையும் நான் வெளியிட விரும்புகிறேன்.

முதல் அறிவிப்பு
முக்கடல் சூழும் குமரிமுனையில் இங்கிருந்து சுற்றுலாப் பயணிகள் அனைவரும் அய்யன் திருவள்ளுவர் சிலையைச் சென்றடைய பயனடைவதற்காக படகு சவாரி வசதியை மேம்படுத்துவதற்காக 3 புதிய பயணிகள் படகுகள் வாங்கப்படும்.
முதல் படகிற்குத் தியாகத்தின் உருவாகி, தொண்டின் கருவாகி, தமிழ்நாட்டில் கல்விக்கு அடித்தளமிட்ட பெருந்தலைவர் காமராசர் பெயரும், இரண்டாம் படகிற்கு தென்குமரியை தமிழ்நாட்டுடன் இணைக்க வலியுறுத்திப் போராடி சாதனைப் படைத்த சாதனையாளர் மார்சல் நேசமணி பெயரும், மூன்றாம் படகிற்கு கனடாவில் பிறந்தாலும், கன்னித்தமிழ் வளர்த்தவரும், திருக்குறளை மொழிப் பெயர்த்தும், தமிழ் இலக்கண நூலை எழுதியும், அழியாப் படைப்புகளை அளித்த ஜி.யு.போப் பெயரும் என மூன்று பெயர்களும் அந்தப் படகுகளுக்கு சூட்டப்படும்.

இரண்டாவது அறிவிப்பு
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் திருக்குறளில் ஆர்வமும், புலமையும் மிக்க ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்குப் பயிற்சி வழங்கி, மாவட்டம்தோறும் தொடர் பயிலரங்குகள், பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். ‘திருக்குறள் திருப்பணிகள்’ தொடர்ந்து நடைபெறத் திட்டம் வகுக்கப்படும். இதற்காக, ஆண்டிற்கு மாவட்டம் ஒன்றிற்கு மூன்று இலட்சம் ரூபாய் வழங்கப்படும்.

மூன்றாவது அறிவிப்பு
ஆண்டுக்கு 133 உயர்கல்வி நிறுவனங்களில், திருக்குறள் தொடர்பான கலை இலக்கிய அறிவுசார் போட்டிகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்த திட்டமிடப்படும்.

நான்காவது அறிவிப்பு
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் கடைசி வாரம் ‘குறள் வாரம்’ கொண்டாடப்படும்.

அய்ந்தாவது அறிவிப்பு

தமிழ்த் திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான திருக்குறள் மாணவர் மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படும்.

ஆறாவது அறிவிப்பு
திருக்குறளும், உரையும் அரசு அலுவலகங்களில் எழுதப்படுவது போல, தனியார் நிறுவனங்களிலும் எழுதுவதற்கு, ஊக்குவிக்க உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இத்துடன் சேர்த்து, குமரிக்கு வந்து இந்த பகுதிக்கான அறிவிப்பு செய்யாமல் இருக்க முடியாது. தமிழ்நாட்டின் தென்கோடியில் அமைந்திருப்பது மட்டுமில்லாமல் வள்ளுவர் சிலையால் சிறப்பு பெற்றிருக்கின்ற, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்ற வகையில், கன்னியாகுமரி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படும். பேரறிவுச் சிலையாக இருக்கக்கூடிய வள்ளுவர் சிலையின் இந்த வெள்ளி விழாவில் நான் மறுபடியும் சொல்கிறேன்.

திருவள்ளுவர் வெறும் சிலையல்ல; திருக்குறள் வெறும் நூல் அல்ல; நம்முடைய வாழ்க்கைக்கான வாளும், கேடயமும்! அது நம்மைக் காக்கும், நம்மை அழிக்க வரும் தீமைகளைத் தடுக்கும். நம்மை மட்டுமல்ல, காவி சாயம் பூச நினைக்கிற தீய எண்ணங்களையும் விரட்டியடிக்கும். தனி மனிதர் முதல் அரசு வரைக்கும் நீதிநெறி சொன்னவர் நம்முடைய வள்ளுவர் அவர்கள். நாம் செய்ய வேண்டியது, பள்ளிகளில், கல்லூரிகளில், அரசு அலுவலகங்களில் திருக்குறளை இன்னும் இன்னும் அதிகமாக இடம்பெறச் செய்யவேண்டும். இது அரசுக்கான உத்தரவு மட்டுமல்ல, தனியார் நிறுவனங்களும் இதைப் பின்பற்றவேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
வள்ளுவம் வாழ்வியல் நெறியாக மாறட்டும்! சமுதாயம் குறள் சமுதாயமாக மலரட்டும்! வாழ்க கலைஞரின் புகழ்! வாழ்க குறளின் புகழ்! அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் தமிழர் பொங்கல் திருநாள் வாழ்த்தைச் சொல்லி நான் விடைபெறுகிறேன்.
நன்றி! வணக்கம்!
– இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

- விடுதலை நாளேடு, 31.12.25


செவ்வாய், 4 நவம்பர், 2025

5,000 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கு இரும்பு உலக நாகரிகத்தின் துவக்கப் புள்ளி தமிழர்களே!

 


தமிழ்நாடு முதலமைச்சர் 23.01.2025 அன்று உலகிற்கே தமிழர்களின் அதிமுக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டார் அது என்னவென்றால் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் உருக்கு இரும்பு என்ற கார்பன் கலக்கப்பட்ட உறுதியான இரும்பை பயன்படுத்த துவங்கி விட்டனர் என்பதாகும்.

அறிவியலின் வேகம்

இதுநாள் வரை நாம் 15 ஆம் நூற்றாண்டில் தொழில் நுட்பம் அய்ரோப்பியர்களின் கைவசம் சென்ற பிறகு தான் உலகம் நவீனத்தை நோக்கிச் சென்றது என்று இதுவரை பேசிவந்தோம், அது கிட்டத்தட்ட உண்மையும் கூட, நீராவி எஞ்சின் கண்டுபிடிப்பு – அதிலிருந்து புறப்பட்ட அறிவியலின் வேகம் இன்று இந்த பேரண்டத்தின் எல்லை வரையும் ஆழ்கடலின் அடித்தளத்தையும் பார்க்கவைத்தது, மனித இனத்தில் 23 லட்சம் ஆண்டுகால பயணத்தில் மிக முக்கியமான அசுரப்பாய்ச்சலை தந்து 400 ஆண்டுகளில் நவீனங்கள் அனைத்தும் விரல் நுனியில் வந்துவிட்டது.

கட்டுரை, ஞாயிறு மலர்
ஆனால் இந்த அசுரப்பாய்ச்சலுக்கு இன்றிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழினம் விதை போட்டது. ஆனால் வடக்கே பரவிய வேதமரபு முதலாம் நூற்றாண்டிற்கு முன்பாக மெல்ல மெல்ல தென் இந்தியாவில் பரவ அறிவுசார் களங்கள் அனைத்திலும் வர்ணமுறையை திணித்ததால் தமிழர்களின் நாகரீக ஆற்றல்வளம் அப்படியே நின்றுவிட்டது.

இரும்பின் முக்கியத்துவம்

மனிதர்கள் இரும்புக்கு முன்பாகவே தாமிரத்தை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். ஆனால், இரும்பின் அளவுக்கு தாமிரம் உறுதியான உலோகம் இல்லை என்பதால், வனங்களை அழித்து விவசாய நிலமாக்குவதில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. தவிர, தாமிரத்தைவிட இரும்பின் உருகும் வெப்பநிலை அதிகம். அதற்கேற்ற உலைகளும் தாமிர காலத்தில் கிடையாது. ஆகவே, ஒரு சமூகம் இரும்பின் பயன்பாட்டை அறியத் துவங்கியது என்றால், இரும்பை உருக்குவதற்கான தொழில்நுட்பத்தை அறிந்திருப்பதோடு, நாகரிகத்தின் அடுத்த கட்டத்திற்கும் நகரத் துவங்கியது என்பதைக் குறிக்கிறது. இதற்குப் பிறகு வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட சமூகம் உருவாகி, உபரி உற்பத்தி, செல்வம், இனக் குழுக்களுக்குத் தலைமை, அரசு ஆகியவையும் உருவாகத் துவங்கியது.
ஆகவேதான் இரும்புக் காலத்தின் துவக்கம் எப்போது ஏற்பட்டது என்பதற்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படுகிறது.
உலக அளவில் மிகப் பழமையான இரும்பு 1911ஆம் ஆண்டில் வட எகிப்தில் அல் – கெர்சே (Al – Gerzeh) என்ற இடத்தில் இருந்த கல்லறைகளில் இருந்து எடுக்கப்பட்டது. இந்தக் கல்லறைகளில் இருந்து 9 மணிகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றின் காலம் கி.மு. 3,400 முதல் 3,100வரையாக இருக்கலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இவை இரும்புத் தாதை உருக்கி செய்யப்பட்டவையல்ல. மாறாக விண்கற்களில் இருந்து கிடைத்த இரும்பில் செய்யப்பட்டவை.

தொழில்நுட்பம்

இரும்புத் தாதை உருக்கி இரும்பு செய்யும் தொழில்நுட்பம் கி.மு. 1,300வாக்கில் அனடோலியா (தற்போதைய துருக்கி) பகுதியில் தொடங்கியதாக கருதப்பட்டுவந்தது. அங்கிருந்தே இரும்பை உருக்கும் தொழில்நுட்பம் உலகின் மற்ற பகுதிகளுக்குப் பரவியதாகவும் கருதப்பட்டது. ஆனால், இரும்பின் பயன்பாடு எப்படித் துவங்கி, எப்படிப் பரவியது என்பது தொடர்பான விவாதங்கள் இப்போதும் தொடர்ந்து நடந்துவருகின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை, கி.மு. 1,000ஆவது ஆண்டுவாக்கில்தான் இரும்பு உருக்கும் தொழில்நுட்பம் அறிமுகமானதாக ஆரம்பத்தில் கருதப்பட்டது. ஆனால், சமீபத்தில் இந்தியா முழுவதும் நடந்த தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்த முடிவுகள், இரும்பு உருக்கும் தொழில்நுட்பம் அதற்கு முன்பே இந்தியாவில் இருந்ததை உறுதிப்படுத்தின.

“உதாரணமாக உத்தரப் பிரதேசத்தின் அக்தாவில் கிடைத்த இரும்பின் காலம் கி.மு. 1,800 முதல் 1,450 வரை இருக்கலாம் எனத் தெரியவந்தது. தெலங்கானாவின் கச்சிபவுலியில் கிடைத்த இரும்பு கி.மு. 2,200அய் சேர்ந்ததாக இருக்கலாம் எனத் தெரியவந்தது.

இந்த நிலையில்தான், தற்போது ஆதிச்சநல்லூரிலும் சிவகளையிலும் கிடைத்த இரும்புப் பொருட்களின் காலம் கி.மு. 2,500 முதல் கி.மு. 3,345வரை இருப்பது தெரிய வந்திருக்கிறது. ஆகவே 5,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் இரும்பை உருக்கும் தொழில்நுட்பம் இருந்திருக்கிறது

வட இந்தியாவில் கிடைத்ததைப் போல தமிழ்நாட்டில் அதிக அளவு செம்பு கிடைக்காத காரணத்தால் இங்கு செம்புக் காலம் வழக்கத்திலிருக்கவில்லை. இருந்தபோதும் ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட ஈமத் தாழிகளில் கி.மு. 15ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தைச் சேர்ந்த உயர்தர தகர – வெண்கலப் பொருட்கள் கிடைத்திருக்கின்றன.
அதேபோல, சாஸ்தாபுரம், அடுக்கம், சூலப்புரம், திருமலாபுரம், ஆரோவில் போன்ற இடங்களிலும் இதுபோன்ற பொருட்கள் கிடைத்திருக்கின்றன.

அகழாய்வுகள்

ஆனால், தமிழ்நாட்டில் எவ்வளவோ அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் உயர்தர தகர – வெண்கலப் பொருட்களின் உற்பத்தி மய்யம் இருந்ததற்கான சான்றுகள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை என்கிறது இந்த அறிக்கை.

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரிலும் சிவகளையிலும் கிடைத்த இரும்பு தொல்பொருள்களை ஆய்வுசெய்தபோது அவற்றின் காலம் கி.மு. 3,345 வரை செல்வதாக, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

அதாவது, சுமார் 5,350 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு தமிழ்நாட்டில் இருந்தது கண்டறியப்பட்டிருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.

இதற்கு முன்பாக, கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் கிடைத்த இரு இரும்புப் பொருட்களுடன் இருந்த கரிமப் பொருட்கள் ஏ.எம்.எஸ் (Accelerator Mass Spectrometry – ஒரு மாதிரியில் உள்ள அய்சோடோப்புகளின் விகிதங்களை அளவிடும் நுட்பம்) என்ற முறையில் காலக் கணக்கீடு செய்யப்பட்டபோது, ஒரு கரிமப் பொருளின் சராசரி மய்ய அளவீட்டுக் காலம் கி.மு. 2172 என்று தெரியவந்தது.

ஆகவே, தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு 4,200 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததாக கருதப்பட்டது. தற்போதைய முடிவுகளின்படி, இரும்பின் பயன்பாடு மேலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் இருப்பது தெரியவந்திருக்கிறது.

இரும்பின் தொன்மை

‘இரும்பின் தொன்மை’ என்ற பெயரிலான இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுப் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தற்போது வெளிவந்துள்ள காலக்கணிப்பின்படி உலக அளவில் இரும்பை உருக்கிப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் தமிழ்நாட்டில்தான் முதலில் இருந்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டு தொல்லியல் ஆய்வில் இரும்பின் பயன்பாடு மீதான ஆர்வத்தைத் தூண்டியது, சேலம் மாவட்டம் மாங்காட்டில் கிடைத்த இரும்பு வாள்தான். சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டத்தில் உள்ள மாங்காடு என்ற இடத்தில் நடந்த தொல்லியல் ஆய்வில் இரும்பு வாள் ஒன்று கிடைத்தது. இந்த வாளை காலக் கணக்கீட்டுக்கு உட்படுத்தியபோது, அதன் காலம் கி.மு. 1,604 முதல் கி.மு. 1,416 வரை இருக்கலாம் எனத் தெரியவந்தது. அவ்வளவு தொன்மையான இரும்பு கிடைத்தது தமிழ்நாட்டில் அதுதான் முதல்முறை. இந்தக் கண்டுபிடிப்புதான் தமிழ்நாடு தொல்லியல் வட்டாரத்தில், இரும்பின் மீதான ஆர்வத்தைத் தூண்டியது.

அதற்கடுத்ததாக, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கீழ்நமண்டியில் 2023இல் நடந்த அகழாய்வில் சில ஈமப்பேழைகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த ஈமப் பேழைகளில் கிடைத்த இரும்பு மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது, அவற்றின் காலம் தோராயமாக கி.மு. 1769 முதல் 1615 வரை இருக்கலாம் எனத் தெரியவந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் கிடைத்த இரும்பின் காலமும் கி.மு. 2,172ஆக இருப்பது தெரியவந்தது. இந்தக் கண்டுபிடிப்புகளுக்குப் பிறகு, இரும்பின் மீதான கவனம் மேலும் அதிகரித்தது. இந்த நிலையில்தான் ஆதிச்சநல்லூரிலும் சிவகளையிலும் கிடைத்த இரும்பு தொல்பொருட்களின் காலம் கி.மு. 2,600 முதல் கி.மு. 3,345 வரை இருப்பது தெரியவந்திருக்கிறது.

ஆதிச்சநல்லூரைப் பொறுத்தவரை, அதன் வாழ்விடப் பகுதியில் 220 செ.மீ. ஆழத்தில் கிடைத்த இரும்புப் பொருளுடன் கிடைத்த கரிமப் பொருட்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், அவற்றின் காலம் சராசரியாக கி.மு. 2613ஆக இருக்கலாம் எனத் தெரியவந்திருக்கிறது. அதேபோல, தூத்துக்குடி மாவட்டம் சிறீ வைகுண்டத்திற்கு 10 கி.மீ. தூரத்தில் இருக்கும் சிவகளையில் நடத்தப்பட்ட அகழாய்வில் மூன்று முதுமக்கள் தாழிகள் கிடைத்தன.
இதில் இருந்த கரிமப் பொருட்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. அதில் கிடைத்த ஒரு கரிமப் பொருளின் காலம் கி.மு. 3,345 எனத் தெரியவந்திருப்பதாக தமிழ்நாடு அரசின் அறிக்கை கூறுகிறது. ஆகவே, அந்தக் கரிமப் பொருளுடன் இருந்த இரும்பின் காலமும் அதுவாகவே கணக்கிடப்பட்டிருக்கிறது.

“ஹரப்பா நாகரீகத்தை ஆரம்பகால ஹரப்பா நாகரீகம், முதிர்ந்த ஹரப்பா நாகரீகம், பிற்கால ஹரப்பா நாகரீகம் என பிரித்துப் பார்க்க முடியும். ஆரம்பகால ஹரப்பா நாகரீகம் என்பது கி.மு. 3,300வாக்கில் நிலவியது.”

உருக்கு இரும்பு

“தற்போது சிவகளையில் கிடைத்திருக்கும் இரும்பும் அதே காலகட்டத்தைச் சேர்ந்தது. ஹரப்பா நாகரீகத்தைப் பொறுத்தவரை அங்கே இரும்பு கிடையாது. செப்பு தான் பயன்படுத்தப்பட்டது. ஆனால், அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இரும்பு உருக்கி, பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வட இந்தியா செப்புக் காலத்தில் இருந்தபோது, விந்திய மலைக்கு தெற்கே இருந்த பகுதிகள் இரும்புக் காலத்தில் இருந்தன என்ற முடிவுக்கு வர முடியும்”
உறுதிமிக்க உருக்கு இரும்பை தமிழர்கள் கோலிகுண்டு விளையாடவோ, அல்லது சிலை செய்து பூஜிக்கவோ பயன்படுத்தி இருக்க மாட்டார்கள்

குறிப்பாக வட இந்தியாவின் மகாஜனபத் என்ற குடியிருப்புகள் உருவான பிறகு இரும்பின் பயன்பாடு அதிகரித்தது என்று கூறுவார்கள். ஆனால் மகாஜனபத் பட்டியலில் தென் இந்தியா வரவில்லை. மகாஜனபத் காலம் கிமு 1500 ஆண்டுகாலம் ஆகும். ஆதாவது கங்கைச் சமவெளி நாகரீகத்தின் மத்திய காலம் என்று கருத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மகாஜனபத் என்ற மனிதக் குடியிருப்புகளுக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் உறுதியான இரும்பை தயார் செய்து அதனை பயன்படுத்த துவங்கிவிட்டார்கள் என்றால் அவர்கள் இந்த உறுதியான இரும்பின் மூலம் பல கருவிகளைக் கண்டுபிடித்திருப்பார்கள்.

அந்த கண்டுபிடிப்புகள் என்ன என்ன என்ற ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்த ஆய்வுகளின் முழுமையான விவரம் வரும் போது தமிழர்கள் தான் நாகரீகத்தின் துவக்கப்புள்ளியாக இருந்தனர் என்பது தெரியவரும்.

- விடுதலை ஞாயிறு மலர்,25.1.25

செவ்வாய், 28 அக்டோபர், 2025

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு



 ஸ்டாக்ஹோம், அக்.10 இலக்கியத்திற்கான நோபல் பரிசு அங்கேரி நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய 6 துறைகளில் சிறந்த சாதனை படைப்பவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசு ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு அடங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பரிசு என்ற அடிப்படையில், ஆறு நாட்களுக்கு நோபல் பரிசுகள் அறிவிக்கப்படும். அதன்படி ஏற்ெகனவே மருத்துவம், இயற்பியல், வேதியியல் என நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலக்கியத்திற்கான நோபல் பரிசு நேற்று (9.10.2025) அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2025-ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அங்கேரி நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய்-க்கு அறிவிக்கப்பட்டது.

பயங்கரவாதத்திற்கு மத்தியில் கலைத்திறனை உறுதிப்படுத்திய தொலைநோக்கு பார்வைக்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடிஷ் அகாடமி குழு ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள பார்ஸ்ஸாலனில் இலக்கியத்திற்கு நோபல் பரிசை அறிவித்தது.

-விடுதலை நாளேடு,10.10.25

சனி, 25 அக்டோபர், 2025

அரபு மொழியில் இருந்து தமிழில் கலந்த சொற்கள்

அரபு மொழியில் இருந்து தமிழுக்கு கிடைத்த சொற்கள் 

அசல் أصل. மூலம்

மாஜி ماضي முந்தைய

அத்து حد வரம்பு

முகாம் مقام தங்குமிடம்

அத்தர் عطر மணப்பொருள்

முலாம் ملام மேற்பூச்சு

அமுல் عمل நடைமுறை

ரத்து رد விலக்கு/நீக்கம்

அனாமத் أنعمت. கேட்பாரற்ற

ரசீது رصيد ஒப்புப் படிவம்

அல்வா حلوه இனிப்பு

ராஜி راضي உடன்பாடு

ஆஜர் حاظر வருகை

ருஜு رجوع உறுதிப்பாடு

ஆபத்து آفت துன்பம்

ருமால் رمال கைக்குட்டை

இனாம் انعام நன்கொடை

லாயக் لائق தகுதி

இலாகா علاقة துறை

வக்கீல் وكيل வழக்குரைஞர்

கஜானா خزانة கருவூலம்

வக்காலத்து وكالة பரிந்துரை

காலி خالي வெற்றிடம்

வகையறா وغيره முதலான

காய்தா قاعدة தலைமை/வரம்பு

வசூல் وصول திரட்டு

காஜி قاضي நீதிபதி

வாய்தா وعده தவணை

கைதி قيد சிறையாளி

வாரிசு وارث உரியவர்

சவால் سوال அறைகூவல்/கேள்வி

சர்பத் شربة. குளிர்பானம்

ஜாமீன் ضمان பிணை

சரத்து شرط நிபந்தனை

ஜில்லா ضلعة மாவட்டம்

தகராறு تكرار. வம்பு

தாவா دعوة வழக்கு

திவான் ديوان அமைச்சர்

பதில் بدل மறுமொழி

பாக்கி باقي நிலுவை

மஹால் محل மாளிகை

மகசூல் محصول அறுவடை/ விளைச்சல்

மாமூல் معمول வழக்கம்.

இது பற்றிய செய்தியை தஞ்சாவூர் வல்லத்தில் 2007 ல் நடந்த TNTJ தவ்ஹீத் எழுச்சி மாநாட்டின் கண்காட்சி அரங்கில் நான் வைத்திருந்தேன்
- அப்துல் வகாப் முகநூல் பதிவு, 25.10.2025
- இவற்றில் பல உருது சொற்களாகவும் இருக்க வாய்ப்புண்டு. உருது இந்தியாவில் உருவான ஒரு கலவை மொழியாகும்.

திங்கள், 11 ஆகஸ்ட், 2025

சமஸ்கிருதம் என்பது தனித்தன்மையான ஒரு மொழியல்ல

சமஸ்கிருதம் என்பது தனித்தன்மையான ஒரு மொழியல்ல – அது ஒரு கலப்பட மொழியாகும்.

- மின்சாரம்

அடிநாளில் (நீண்டநாளுக்கு முன்) மேற்கு மத்திய ஆசியாவில் வாழ்ந்த நார்டிக் ஆரிய மக்கள் பேசிவந்த மொழியே பலமொழிகள் கலந்து சமஸ்கிருதம் என்பதாக ஆயிற்று. அதாவது, தங்கள் தாயகத்தின் சுற்று வட்டார எல்லை நாடுகளின் மொழிகளான துருக்கி (Turkee) மொழி. ஈரானிய மொழி – பாக்ட்ரினியாவில் குடியேறிய பின் பர்மீரியன் மொழி ஆகியவற்றிலிருந்து தொகுத்த கதம்பமே சமஸ்கிருத மொழி.

மேற்கு மத்திய ஆசியாவில் வசித்த இந்த ஆரியர்கள் பாக்ட்ரினியாவிலிருந்து இரு பிரிவாகப் பிரிந்து, கி.மு. 1350ஆம் ஆண்டு வாக்கில் வடமேற்கிந்தியாவில் குடியேறிய போது இந்தச் சமஸ்கிருத மொழியையும் வடமேற்கிந்தியாவில் புகுத்தினர்.

இவர்கள் வடமேற்கிந்தியாவில் இருமுறை நுழைந்தனர். முதலாவது கி.மு. 1400 வேதகாலம்: இரண்டாவது கி.மு. 58இல் பாக்ட்ரினியா, சாக்டியானா நாடுகளில் கிரேக்க – பாரசீக மொழிக் கலைத் தொடர்புகளின் பலனாக இந்த சமஸ்கிருத மொழி மேற்கண்ட பாரசீக – கிரேக்க மொழிக் கலை இலக்கிய இலக்கணங்களையும் தழுவி மேற்கொண்டு திருத்தப்பெற்றது.

மற்றும் சமஸ்கிருத மொழி இந்தியாவின் லத்தீன் மொழி என்றும் அழைக்கப்பட்டது. ஆல்பன்கெல்ட் மக்கள் மத்திய தரைக்கடல் வட்டாரங்கள் மீது படையெடுத்த போது, இத்தாலிய மக்களிடையே இந்த கெல்ட் மக்கள் திணித்த மொழியே லத்தீன்.

மொழிகளின் பிரிவு

மொழிகள், துரானிய மொழிகள் என்றும், ஆரிய மொழிகளென்றும் இருபெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளன சமஸ்கிருதம் ஆரிய மொழியினத்தைச் சேர்ந்தது.

‘சமஸ்கிருதம்” என்ற சொல்லின் பொருள். சுத்தப்படுத்தப்பட்டது அல்லது பலவற்றைச் சேர்த்து உருவகப்படுத்தப்பட்டது என்பதாகும்.

மேலும் விளக்க வேண்டுமானால், இது ஹிந்துஸ்தானியில் “சான்ஸ்கிரிட்” என்று உச்சரிக்கப் படுகிறது. இந்த சமஸ்கிருத மொழியாக்கத்தின் பெரும் பகுதியும் அடிப்படை அமைப்பும் மேற்கு மத்திய ஆசியாவில் வழங்கிய ஆரிய மொழியிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டதாகும். மற்றும் பல நூற்றாண்டுகளாக பல்வேறு நாடுகளில் பல்வேறு மொழிகளுடன் தொடர்பு கொண்டதன் பலனாகப் பிறமொழி அம்சங்கள் பலவற்றை இந்த சமஸ்கிருத மொழியுடன் அவ்வப்போது சேர்த்துக் கொண்டு வந்தனர்.

பொருளுக்கேற்ற பெயர்

வடமேற்கு இந்தியாவில் குடியேறும் வரையில் இந்த ஆரியர்கள். இடைக்காலத்தில் திரிந்த பல்வேறு நாடுகளின் பல்வேறு மொழிக் கலைப்பகுதிகளையும் இச்சமஸ்கிருதத்தில் சேர்த்துக் கொண்டனர்.

சமஸ்த = எல்லாம்;

கிருதி = தொகுக்கப்பட்டது

– என்பதே இதன் பொருள்.

“என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா” என்ற ஆங்கில மொழிப் பேரகராதியின் 13ஆவது தொகுதியில், சமஸ்கிருத மொழி பிறப்பு வரலாறு, டாக்டர் எச்.ஜூலியஸ் எக்லிங் என்பவரால் தரப்பட்டுள்ளது.

(இவர் எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருதப் பேராசிரியராகப் (1875 முதல் 1914 வரை) பணியாற்றியவராவார். ராயல் ஏசியாட்டிக் சொசைட்டியின் செயலாளராகவும் இருந்தவராவார்).

“சமஸ்கிருத மொழி ஆரிய மொழிகளுடன் கொண்டுள்ள தொடர் பையும், பல அம்சங்களில் கிரேக்க மொழியைப் போன்றிருப்பதையும்” இவர் விளக்கியுள்ளார்.

டாக்டர் பிரான்ஸ் பாப் என்பவர். கோதிக் மொழியிலிருந்து பைபிளை வாசித்தபோது கோதிக் மொழியும், சமஸ்கிருத மொழி போன்றே இருப்பதைக் கண்டர்.

(பிரான்ஸ் பாப் (1791-1867) இந்தோ அய்ரோப்பிய மொழிகளைக் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டவர் ஆவார்).

பல மொழிகளின் கலவை

பர்கீஸ் மொழி, ஈரானிய மொழி, பர்மீயன் மொழி, கிரேக்க மொழி ஆகியவற்றின் கூட்டு அவியலே சமஸ்கிருதம்.

கி.மு. 53இல் குசான் வம்சத்தைச் சேர்ந்த கனிஷ்கர் தான் சமஸ்கிருத மொழியை ஓர் உருவுக்குக் கொண்டு வந்தார். இந்த இலட்சணத்தில் தான் இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் உட்படப் பார்ப்பனர்கள் வாய்ப்பறை கொட்டுகின்றனர்.

பதிலடிப் பக்கம்

இவ்வளவுக்கும் இந்தியாவில் சமஸ்கிருதம் பேசுவோர் எண்ணிக்கை வெறும் 24821; விழுக்காட்டில் சொல்லப் போனால் இந்திய மக்கள் தொகையில் வெறும் 0.0001 தான்!

- விடுதலை நாளேடு, 9,10.8.25

(மோகன் பகவத்தின் கருத்துக்கு பதிலடியாக வெளியான கட்டுரையின் தொகுப்புகள்)