பக்கங்கள்

திங்கள், 27 ஜூலை, 2020

எழுத்தில் சீர்திருத்தம்..



தமிழ்பாஷை எழுத்துக்கள் வெகு காலமாகவே எவ்வித மாறுதலும் இல்லாமல் இருந்து வருகின்றன.

உலகில் உள்ள பாஷைகள் பெரிதும் சப்தம், குறி, வடிவம் எழுத்துக்கள் குறைப்பு, அவசியமான எழுத்துக்கள் சேர்ப்பு ஆகிய காரியங்களால் மாறுதல் அடைந்து கொண்டே வருகின்றன. கால வர்த்தமானங்களுக்கு ஏற்ப பாஷைகளும், சப்தங்களும், உச்சரிப்புகளும், வடிவங்களும் மாறுவது இயல்பேயாகும்.

வார்த்தைகள் கருத்தை வெளியிடுவதற்கு ஏற்பட்டவைகள் என்பது போலவே எழுத்துக்கள் சப்தத்தை உணர்த்த ஏற் பட்டவைகளேயாகும். ஆனால் நம் பண்டிதர்களுக்கு தாராளமாய் அறிவைச் செலுத்த இடமில்லாமல் மதம் பழக்க வழக்கம் ஆகியவைகள் குறுக்கிட்டு விட்டதால், எழுத்துகளுக்கும் அதன் கோடுகளுக்கும், வடிவங்களுக்கும் தத்துவார்த்தம் கற்பிக்க வேண்டிய அவசிய மேற்பட்டு எழுத்துக்களையே தெய்வமாகவும், தெய்வ வடிவமாகவும் கருத வேண்டிய நிலை நம் நாட்டில் ஏற்பட்டு விட்டது.

தற்காலம் எத்தனையோ புதிய பாஷைகள் வந்து நமது தமிழ் பாஷையில் புகுந்து கொண்டன. அவைகளை இனிவிலக்க முடியவே முடியாது. விலக்குவதும் புத்திசாலித் தனமாகாது. அப்பேர்ப்பட்ட வார்த்தைகளைச் சரியானபடி உச்சரிக்க நமக்குப் பழக்கத்தில் எழுத்துக்கள் இல்லாமல் பாஷையையும் உச்சரிப்பு அழகையும் கொலை செய்கின்றோம்.

விஷ்ணு என்பதை விட்டுணு என்றும், விண்டு என்றும் உச்சரிப்பதில் பெருமை அடைகின்றோம். பாஷாபிமானப் பட்டமும் பெறுகின்றோம். அதற்கு இலக்கணம் இருக்கிறது என்கின்றோம். அதோடு சப்தங்கள் மாறி விடுவதால் கருத்தும், அர்த்தமும் மாறுவதில்லை என்று கருதுகின்றோம். அது போலவே சில எழுத்துக்கள் பழைய பழக்கம் வழக்கம் என்பதற்காக மாற்றக்கூடாது என்று இல்லாமல், சவுகரியத் துக்காக மாற்ற வேண்டியது அவசியம் என்றால் அறிஞர்கள் அதற்கு இடம் கொடுத்துத் தான் ஆக வேண்டும்.

சுமார் 70, 80 வருஷ காலத்துக்கு முந்திய பதிப்புகளிலும், எழுத்துகளிலும் ஈ என்கின்ற எழுத்தானது இ எழுத்தையே மேலே சுழித்த வட்ட வடிவத்தில் இருந்து வந்திருக்கிறது. இன்னும் 400,500 வருஷங்களுக்கு முந்தின கல் எழுத்துக்கள் அனேகம் வேறு வடிவத்தில் இருந்திருக்கிறது.

இப்பொழுது அவைகள் மாற்றமடைந்ததற்குக் காரணங்கள் கேட்பாரும் இல்லை; சொல்லுவாரும் இல்லை. அதனால் சப்தமோ, அர்த்தமோ, பாஷையின் அழகோ கெட்டுப் போனதாகக் குறை கூறுவாரும் காணப்பட வில்லை. அதுபோலவே இப்போதும் சில எழுத்துக் களின் வடிவங்களை மாற்ற வேண்டியதும், சில எழுத்துக்களைக் குறைக்க வேண்டியதும்,

சில குறிகளை மாற்ற வேண்டியதும் அவசியம் என்றும், அனுகூலம் என்றும் பட்டால் அதைச் செய்யவேண்டியதுதான் அறிவுடைமையே ஒழிய அதன் தத்துவார்த்தத்துக்கு ஆபத்து வருகின்றதே என்பது அறிவுடை மையாகாது என்பது நமது கருத்து.

ஆகவே இப்போது ணா, றா, னா ஆகிய எழுத்துக்களும் ணை, லை, ளை, னை ஆகிய எழுத்துக்களும், மற்ற கா, நா, ரா முதலாகிய எழுத்துக்களைப் போலும் டை, நை, ழை, முதலிய எழுத்துக்களைப் போலும், ஆகாரத்துக்கு  குறியையும் அய்காரத்துக்கு  குறியையும் பெறாமல் தனி வடிவத்தைக் கொண்டு இருப்பதை மாற்றி ணா, றா, னா, ணை, லை, ளை, னை போல உபயோகித்து பிரசுரிக்கலாம் என்று கருதியிருக்கின்றோம்.

இதன் பயனாய் அச்சு கோர்ப்பதற்கு எழுத்து கேசுகளில் (அறைகளில்) 7 கேசுகள் (அறைகள்) குறைகின்றது என்பதோடு பிள்ளை களுக்கும் இந்த ஏழு எழுத்துகளுக்கு தனிவடிவம் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகும் சவுகரியம் ஏற்படுகின்றது. இன்னமும் தமிழ் பாஷை எழுத்துக்களில் அனேக மாறுதல்கள் செய்ய வேண்டி இருந்தாலும்,

இப்போதைக்கு இந்தச் சிறு மாறுதலை அனுபவத்திற்குக் கொண்டு வரலாம் என்று கருதி அந்தப்படியாகவே எழுத்துக்களை உபயோகித்து அடுத்தாற்போல் பிரசுரிக்கப் போகும் குடிஅரசு பத்திரிகையைப் பிரசுரிக்கலாம் என்று இருக்கிறோம். இதை வாசகர்களும் மற்றும் தமிழ் பாஷை பத்திரிகைக்காரர்களும், தமிழ் பண்டிதர்களும் ஆதரிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம்.

- பெரியார்.
 30.12.1934.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக