பக்கங்கள்

திங்கள், 22 ஏப்ரல், 2019

தமிழர்கள் மாட்டிறைச்சி உண்ணாதவர்களா?

தமிழர்கள் மாட்டிறைச்சியை சாப்பிடாத வர்களா? பாஜகவினரின் பொய்ப்பிரச்சாரத் திற்கு பதில் சங்ககாலம் முதலே மாட்டிறைச்சி தமிழர்களின் உணவாக இருந்தது.  தமிழக பாஜகவினர் மாட்டிறைச்சித் தொடர்பான விவகாரத்தில் தமிழர்கள் மாடுகளைத் தெய்வமாக மதிப்பவர்கள், தெய்வமாக மதிக்கும் ஒன்றை எப்படி அவர்கள் கொலை செய்து உண்ணுவார்கள்.


தமிழர்கள் வரலாற்றில் மாட்டிறைச்சி உண்டதாக சரித்திரம் இல்லை, இதெல்லாம் அரபு நாட்டிலிருந்து வந்த இஸ்லாமியர்களும், முகலாயர்களும் தமிழகத்தில் வந்த பிறகு மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் தாழ்த்தப் பட்டவர்களிடம் தொற்றிக்கொண்டது தமிழகத்தில் உயர் ஜாதியினர் இன்றும் மாட்டிறைச்சி உண்ணுவதில்லை, என்று எல்லா விவாதங்களிலும் பேசி வருகின்றனார். இதையே புதிய தமிழகம் கட்சி கிருஷ்ண சாமியும் கூறிவருகிறார். தமிழர்கள் மாட்டி றைச்சியை உண்ணுவதில்லை, சில அரசியல் கட்சித்தலைவர்களும் அமைப்பு களும் தமிழர் களின் வரலாற்றை திரிக்கும் வேலையில் ஈடுபடுகின்றனர் என்று கூறினார்.

ஆனால் தமிழர்கள் கிறிஸ்துபிறப்பிற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உணவிற்காக பசு மாட்டிறைச்சியை சாப்பிட்டனர் என்ற வரலாற்றுச் சான்றுகள் தமிழர்களின் அன்றாட வாழ்க்கை முறைகளைக் கூறும் சங்க காலப் பாடல்களில் பெருகிக் கிடைக்கிறது, அதில் சிலவற்றை இங்கே கொடுத்துள்ளோம்

அகநானூறு 129ஆம் பாடலில் பின் வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

கலங்குமுனைச் சீறூர் கைதலை வைப்பக்


கொழுப்புஆ தின்ற கூர்ம்படை மழவர்


விளக்கம்: சிறிய ஊரினர் கையைத் தலைமீது வைத்து வருந்தும்படி அவருடைய கொழுத்த ஆவைக் (பசுவை) கவர்ந்து சென்று தின்ற கூரிய படையையுடைய மழவர்.

இதேபோன்று அகநானூற்றின் 249ஆவது பாடல் மாட்டிறைச்சியைப் பண்டைத் தமிழர்கள் உண்பது பற்றிப் பின்வருமாறு கூறுகின்றது:

“தோகை தூவித் தொடைத்தார் மழவர்


நாகுஆ வீழ்த்துத் திற்றி தின்ற


புலவுகளம் துழைஇய துகள்வாய்க் கோடை


நீள்வரைச் சிலம்பின் இரைவேட்டு எழுந்த”


விளக்கம்:

மயிலின் தோகையிலுள்ள இறகுகளை மாலையாகத் தொடுத்து அணிபவர் மழவர்கள். பல்வகையான பூக்களை உடையதான காட்டின் சுருங்கிய நிழல்களிலே தங்கிக் கன்றினையுடைய பசுவைக் கொன்று அதன் ஊனைச் சுட்டுத் தின்பார்கள். புலால் வீசும் அந்த இடத்தைத் துழாவியவாறு ஊண் துணுக்குள் கலந்த புழுதியைத் தன்பால் கொண்டதாக மேல்காற்று எழுந்து வீசும்.

அகநானூற்றின் 309ஆவது பாடல் பசுவை தமிழ்க் கடவுளுக்கு பலிகொடுத்துப் பின்னர் அதன் இறைச்சியை மறவர்கள் உண வாக உட்கொண்டது பற்றிக் குறிப்பிடு கின்றது:

“வயவாய் எறிந்து வில்லின் நீக்கி


பயநிரை தழீஇய கடுங்கண் மறவர்


அம்புசேண் படுத்து வன்புலத்து உய்த்தெனத்


தெய்வஞ் சேர்ந்த பராரை வேம்பிற்


கொழுப்பா எறிந்து குருதி தூஉய்ப்


புலவுப் புழுக்குண்ட வான்கண் அகலறைக்”


விளக்கம்:

கொழுப்பா  கொழுத்த பசு

வெற்றி வாளினாலே வெட்டிக் கொன்றும், வில்வினைத் தொழிலினாலே அடித்து வெருட்டியும், பசுமந்தைகளைக் கைக்கொண்ட அஞ்சாமையாளரான மற வர்கள், அம்புகளைத் தொலைவுக்குச் செல்லுமாறு செலுத்தி நிரைகாவலரை ஓட்டியபின், வன்மையான காட்டு நிலத்தை அடைந்தனர். அடைந்தவராக தெய்வம் குடிகொண்டிருக்கும் பருத்த அடியினை யுடைய வேம்பிற்கு கொழுத்த ஒரு பசுவினைக் கொன்று பலியிட்டனர். அதன் குருதியைத் தூவித் தெய்வத்தைப் போற்றி வழிபட்டனர். பின் அப் பசுவின் புலாலினைப் பொசுக்கி உண்டு விட்டுச் சென்றனர்.

இச்சங்க இலக்கியங்களில் இருந்து பண்டைத் தமிழர்கள் ஏனைய இறைச்சி வகைகளை மட்டுமன்றி மாட்டிறைச்சியையும் உட்கொண்டனர் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். அத்தோடு தாம் வழிபட்ட தெய்வங்களுக்கு ஆடுகளையும், பசுக் களையும் பலிகொடுத்துப் பின்னர் அவற்றைப் பண்டைத் தமிழர்கள் உட்கொண்டனர் என்பதையும் நாம் உணர முடியும்.

-  விடுதலை ஞாயிறு மலர், 13.4.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக