பக்கங்கள்

வெள்ளி, 3 ஏப்ரல், 2020

வள்ளுவனைப்பற்றி பார்ப்பனப் புரட்டு

- சு.ஒளிச்செங்கோ

திருவள்ளுவர், பார்ப்பனருக்குப் பிறந்ததால்தான் திருக்குறளை இயற்ற முடிந்ததென்று ஒரு பார்ப்பன வெறியர் பேசியதை க.அயோத்திதாச பண்டிதர் கேள்வி கேட்டு மடக்கிய நிகழ்ச்சியை அவர் எழுதிய நூதன ஜாதிகள் உற்பவ பீடிகை என்ற சிறு நூலில் குறிப்பிட்டுள்ளதை கீழே தொகுத்துத் தந்துள்ளேன்.

அறிஞர் திரு.க. அயோத்திதாச பண்டிதர், இராயப்பேட்டை சாக்கிய பவுத்த சங்கத் தலைவராயிருந்து தொண்டாற்றியவர். தமிழ் என்ற வார இதழை 1907 இல் துவக்கி ஆரியப் பார்ப்பனப் புரட்டுகளை அம்பலப்படுத்தியவர்.

இவர் பார்ப்பன வேதாந்த விவரம் வேடப்பார்ப்பனர் வேதாந்த விபரம் நந்தன் சரித்திர விளக்கம் நூதன ஜாதிகள் உற்பவ பீடிகை திருவள்ளுவ நாயனார், பறைச்சிக்கும், பார்ப்பானுக்கும் பிறந்தாரென்னும் பொய்க்கதை விபரம் ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார்.

 

அறிஞர் க.அயோத்திதாச பண்டிதர் தலைமை ஏற்று நடத்திய பவுத்த சங்கத்தைப்பற்றி திரு. வி.க. அவர்கள் சங்கம் எனது மதவெறியைத் தீர்க்கும் மருந்தாயிற்று என்று போற்றுகிறார்.

1892இல் சென்னையில் மகாஜன சபைக் கூட்டம் சிவநாம சாஸ்திரி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசும்போது வள்ளுவர் பார்ப்பன விந்துக்குப் பிறந்ததனால்தான் சிறந்த திருக்குறளைப் பாடினார்; சுக்கில-சுரோனிதம் கலப்பரியாது என்று குறிப்பிடும்போது கூட்டத்தில் கேட்டுக் கொண்டிருந்த அறிஞர் திரு.க அயோத்திதாச பண்டிதர் எழுந்து நீங்கள் சொல்லியதை நான் ஏற்றுக் கொள்வதென்றால், நான் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்றார்.

அதற்கு சிவநாம சாஸ்திரி, சரி, கேளும் என்றார்.

நமது நாட்டில் தீண்டாதவர்கள் என்று இழிவுபடுத்தப்படும் பறையர்கள் என்பவர்கள் கிறித்துவ சங்கத்தார்களின் கருணையால் எம்.ஏ, பி.ஏ, படித்துப் பட்டங்களைப் பெற்று உயர் பதவிகளில் அமர்ந்திருக்கிறார்களே? அவர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்களென்று எண்ணுகிறீர் என்றார். அதற்கு சிவநாம சாஸ்திரி ஒன்றும் பதில் கூறாமல் நின்று கொண்டிருந்தார்.

பிறகு அறிஞர் திரு.க. அயோத்திதாச பண்டிதர் தொடர்ந்து பெருங்குற்றங்களைச் செய்து சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருக்கும் பார்ப்பனர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்களென்று நீர் நினைக்கிறீர் என்று கேட்டார்.

சிவநாம சாஸ்திரி ஒன்றும் பதில் கூறாமல் திருதிரு என்று விழித்துக் கொண்டு நின்றார். அறிஞர் க.அயோத்திதாச பண்டிதர், ஏன் பதில் சொல்லாமல் நிற்கிறீர், சொல்லும், என்று சினந்து கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது, கூட்டத்திலிருந்த ஆனரபில், பி.அரங்கைய நாயுடும், எம். வீரராகவாச்சாரியாரும் அறிஞர் க.அயோத்திதாச பண்டிதரை அமைதிப்படுத்தினார்கள்.

சிவநாம சாஸ்திரியை கூட்டத்திலிருந்தவர்கள் இகழ்ந்து பேசினார்கள். சிவநாம சாஸ்திரி உட்கார்ந்து கொண்டார். பின்னர் மெல்ல கூட்டத்திலிருந்து நழுவிவிட்டார்

வையம் போற்றும் நூலாம் திருக்குறளைத் தந்த பேரறிஞர் வள்ளுவரைப் பற்றி சிவநாம சாஸ்திரியார் இழிவுப்படுத்திப் பேசி, தம் ஆரிய நஞ்சைக் கக்கினார். இவ்வாறு நடப்பது இன்றல்ல, நேற்றல்ல, பல நூறு ஆண்டுகளாய் நடக்கின்றது. இன்றும் தமிழனை இழிவுபடுத்துவதை, தம் தொழிலாக தொண்டாகக் கொண்டுள்ளார்கள் பார்ப்பனர்கள்.

- உண்மை இதழ், 16-31.12.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக