பக்கங்கள்

ஞாயிறு, 22 ஜனவரி, 2023

தமிழ்நாடு என்கிற பெயர் எப்படி வந்தது?


1) மெட்ராஸ் ஸ்டேட் பிரசிடென்ஸி அதாவது சென்னை ராஜதானி என்கிற மாநிலத்தை இனி தமிழ்நாடு என்றே அழைக்க வேண்டும் என்று அழுத்தமாக ஓங்கி ஒலித்த முதல் குரல் பெரியாருடையது !

2) 1956 - 75 நாட்களுக்கும் மேலாக, தனித்து தீவிர உண்ணாநோன்பிருந்து இறந்து போனார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சங்கரலிங்கனார்.  ஊர் விருதுநகர்.  ஆட்சியிலிருந்தது காங்கிரஸ் அரசு.  முதலமைச்சர் காமராஜர்.  அவருடைய ஊர் ...

சங்கரலிங்கனாரின் பிரதானக் கோரிக்கை தமிழ்நாடு என்கிற பெயரை மெட்ராஸ் பிரசிடென்சிக்கு சூட்ட வேண்டும் என்பதுதான்.

ஆனால் இப்படி விரதம், கிரதம்ன்னு எங்கிட்ட பூச்சாண்டி காட்ட முடியாதுன்னேன் என்று காமராஜர் கறாராக, கல்லாக இருந்துவிட ;

துடி துடித்து செத்துப் போனார் தியாகி சங்கரலிங்கனார்.

காங்கிரஸ் கைவிட்டு விட, அன்று அவருடன் இருந்தது கம்யூனிஸ்ட் & திமுக.

காங்கிரஸ் தலைவர்களைத் தவிர ஏனையக் கட்சிகளின் அனைத்து தலைவர்களும், உண்ணாவிரதப் பந்தலுக்குப் போய் சங்கரலிங்கனாரை பார்த்துவிட்டு வந்தனர்.  அப்படி ஒருமுறை அண்ணா அவர்கள் போனபோது, அவருடையக் கைகளை அழுந்தப் பிடித்துக் கொண்டு சங்கரலிங்கனார், காங்கிரஸ்தான் என்னைக் கை விட்டுடுச்சி, நீயாவது என் ஆசையை நிறைவேத்து என்றிருக்கிறார்.  அண்ணா வெடித்து அழுதிருக்கிறார்.  அந்தளவு அந்த உடல் மோசமாகி இருந்தது !

சங்கரலிங்கனார் இறக்கும் சில நாட்களுக்கு முன்னர் கூட அவர் நாடகமாடுவதாக காங்கிரசார் மீட்டிங்கில் பேசினர்.  அதாவது கம்யூனிஸ்ட்கள் அவருக்கு ரகசியமாக உணவுகளை இரவு வேளையில் கொடுத்து வருவதாக !

நான் செத்துட்டா ஒரு காங்கிரஸ் பய எனக்கு அஞ்சலி செலுத்த வரக் கூடாது.  என் மேல காங்கிரஸ் கொடியைப் போர்த்தக் கூடாது.    என் உடலை கம்யூனிஸ்ட்கள்தான் எடுக்க வேண்டும்.  அவர்கள்தான் இறுதி காரியங்களைச் செய்ய வேண்டும்.

பொதுவுடமை கட்சியினர்தான் சங்கரலிங்கனாரின் இறுதி ஊர்வலம், சடங்கு, அஞ்சலியைச் சிறப்புற செய்தனர் !

3) 1957 - திமுகவின் 15 சட்டமன்ற உறுப்பினர்கள் முதன்முறையாக சட்டசபைக்குள் நுழைகின்றனர்.  சங்கரலிங்கனாரின் உயிர் தியாகத்தை மதிப்பதற்காகவாவது காமராஜர் செவிமடுப்பார் என நம்பி, தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டுமென்கிற தீர்மானத்தை சட்டசபையில் வைத்தனர்.

அதன்மீது தர்க்கங்கள் நடந்தன.  இது ஒருவகையான அட்டென்ஷன் சீக்கிங் என்கிற புது வியாதி.  தமிழ், தமிழன், தமிழ்நாடு என்று உணர்ச்சி கொந்தளிக்கப் பேசிவிட்டால் மக்கள் மயங்கிவிடுவார்கள் என ஒரு சிறுகூட்டம் நம்புகிறது அல்லது அப்படி பேசி மக்களை ஏமாற்றுகிறது.  எத்தனை உயிர் போனாலும் பிரிவினைவாதக் கொள்கைகளை ஏற்க முடியாது என்றது காமராஜர் அரசு !

நம்புங்கள்.  அன்றைய காங்கிரஸ் கிட்டத்தட்ட இன்றையச் சங்கிகள்.  சத்தியமூர்த்தி, இராஜகோபால், ஆர் வெங்கட்ராமன்ல்லாம் இருந்த காங்கிரஸ் பின்ன என்னவா இருக்கும் ?

07/05/1957 அன்று கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் 42 (கம்யூனிஸ்ட் & திமுக.  அன்று எதிர்கட்சி கம்யூனிஸ்ட்தான்)

தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தவர்கள் 127.  சங்கரலிங்கனார் இறந்த பின்னரும் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது !

ஆச்சா ?

4) 1961 - சங்கரலிங்கனார் செத்து அஞ்சு வருஷமாச்சு.  திமுக தீர்மானம் கொண்டு வந்து நாலு வருஷமாச்சு.  இம்முறை சோசலிஸ்ட் கட்சிக்காரர் மீண்டும் தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானத்தைக் கொண்டு வந்து, ஆளுங்கட்சியினர் தயைகூர்ந்து ஆதரித்து வாக்களிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

காமராஜர் உண்மையிலேயே தீர்க்கதரிசி என்றால், நிச்சயம் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு மிக எளிதாக, ஆமாம் அந்தளவு அவருக்கு நேருவிடம் செல்வாக்கு இருந்தது, தமிழ்நாடு எனப் பெயர் சூட்டி வரலாற்றில் இடம் பெற்றிருக்கலாம் !

நம்பமாட்டீர்கள்.  காந்தி & காமராஜர்.  இருவருமே பெரும் சர்வாதிகாரிகள்.  முரட்டுப் பிடிவாதம் கொண்டவர்கள்.  இதில் காந்தியார் ஒரு படி மேலே சென்று எதிர்ப்பைக் காட்ட உண்ணாவிரதம் என்கிற ஆயுதத்தை வேறு தூக்கிடுவார்.

பெரிய அக்கப்போரா போச்சே விடுங்க இனி கடிதப் போக்குவரத்தில் வேணா தமிழ்நாடுன்னு எழுதிக்கலாம் என சட்டசபையில் குறிப்பிட்டார்.  எதிர்கட்சிகள் சம்மதிக்கவில்லை.  பிறகென்ன, வழக்கம் போல இந்தத் தீர்மானமும் தோல்வி !

1962 - காங்கிரஸ் மாபெரும் வெற்றி.  மாறாக அண்ணாதுரை தோல்வி.  ஆனால் திமுகவின் பலம் முன்பை விட நான்கு மடங்கு அதிகமானது !

5) அண்ணாவை மாநிலங்களவைக்கு உறுப்பினராக்கி அனுப்பி வைத்தது திமுக.

அங்குதான் கம்யூனிஸ்ட் தனிநபர் மசோதாவாக தமிழ்நாடு கோரிக்கையை எழுப்புகிறது.

அண்ணா அதை ஆதரித்து அற்புதமான வாதங்களை எடுத்து பேசுகிறார்.

இலக்கியங்களில் தமிழ்நாடு என்று பெயர் வருமிடங்களைச் சுட்டிக் காட்டுகிறார்.

அதெல்லாம் சரிங்க, இப்ப தமிழ்நாடுன்னு மாத்திடறதால உங்களுக்கு என்ன லாபம் ? என்று ஒரு காங்கிரஸ் உறுப்பினர் கேட்கிறார்.

பார்லிமெண்ட் ஹவுஸ் என்றிருந்ததை லோக்சபா என்று நீங்கள் மாற்றினீர்களே உங்களுக்கு என்ன லாபம் வந்ததோ அதே லாபம் தமிழ்நாடுக்கும் வரும் என்றார் !

அண்ணா ஆங்கிலத்தில் பெரும்புலமை வாய்ந்தவர் என்பதால் அந்த அவையே வாய்பிளந்து அந்த உரையை ரசித்தது !

ஆனால் தீர்மானம் தோல்வி.

6) விடாது கருப்பு - சிவப்பு.

23/07/1963.

மீண்டும் திமுகவின் இராம.அரங்கண்ணல் தமிழ்நாடு தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வருகிறார்.  முதலமைச்சர் பக்தவச்சலம்.  தொழில் துறை அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன்.

7) தமிழ்நாடு என்றால் யாருக்குமே புரியாது.  குறிப்பாக வடக்கில் அனைவருக்குமே மெட்ராஸ்ன்னு நல்லா பழகிருச்சி.  ஃபாரின்காரன் வாய்ல தமிழ்நாடு நுழையவே நுழையாது, பெயரை திடுக்குன்னு மாத்தினா அவன் காண்ட்ராக்டை எல்லாம் கேன்சல் பண்ணிடுவான்.
எனவே மதராஸ் பிரசிடென்சி எனத் தொடர்வதே நமக்கு நல்லது என்று பேசினார் வெங்கட்ராமன்.

சங்கரலிங்கனார் இறந்து எட்டு வருடங்கள் ஆன பின்னரும் தீர்மானங்கள் தோற்றுக் கொண்டே இருந்தன !

8) 1967 - யோசிச்சு பாருங்க.  சொந்த மக்களிடத்திலேயே இவ்வளவு காழ்ப்புடன் ஓர் அரசு நடந்துக்கும்ன்னா, கூடவே அரிசிப்பஞ்சம், இந்தி எதிர்ப்பு போராட்டம், பதுக்கல் கொள்ளையர்கள் பெருக்கம், விளங்குமா ?  அப்ப போன காங்கிரஸ்தான்.  மக்களின் கோபம் காமராஜரையே பலி போட்டது.  ஆனால் இந்தச் சங்கி கூடையான்கள் காமராஜரையே தோற்கடிச்சிட்டானுகளேன்னு கதறுவாய்ங்க.  ஏன்னு இனிமேலாவது புரிஞ்சா சரி.

9) அண்ணா முதலமைச்சராகிறார்.  மூன்று அதிமுக்கியமான தீர்மானங்களை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்கிறார்.

i) இனி நம் நாடு தமிழ்நாடு என்றழைக்கப்படும் !

ii) தமிழ் & ஆங்கிலம் என்கிற இருமொழிக் கொள்கை மட்டுமே இங்கு இருக்கும்.  மும்மொழி என்கிற போர்வை போர்த்திக் கொண்டு கூட இந்தி நுழைய முடியாது !

iii) சடங்கு, சம்பிரதாயம், அக்னிசாட்சி, இடைத்தரகர் என்கிற எந்த இடையூறுகளுமின்றி நடத்தப்படும் சீர்திருத்த திருமணங்களும் செல்லும் !

10) 18/07/1967 - தமிழ்நாடு என்கிற பெயர் மாற்றத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.  சட்டமன்றத்தில் வென்ற தீர்மானம் என்பதால், ஒன்றிய அரசில் சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்து, அது ஏற்றுக் கொள்ளவும் பட்டது !

சங்கரலிங்கனாருக்கு கொடுத்த வாக்குறுதியை 11 ஆண்கள் கழித்தும் மறவாமல் நிறைவேற்றிச் சாதித்தார் முதலமைச்சர் அண்ணா 🖤❤ 

தொகுப்பு:

Raja Rajendran Tamilnadu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக