பக்கங்கள்

வெள்ளி, 4 நவம்பர், 2022

திருக்குறளில் உள்ள #கடவுள்_வாழ்த்து எனும் அதிகாரம் #திருவள்ளுவர்_எழுதியது_இல்லை !

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02smZkmpF9EXEKZ4B8Jizi2BF2EncLLinYsapZjNRM5XuFwMVqFNBYvTacnxj8BQ6ul&id=100000324268158
திருக்குறளில் உள்ள #கடவுள்_வாழ்த்து எனும் அதிகாரம் #திருவள்ளுவர்_எழுதியது_இல்லை !

இப்படி சொல்பவர் பெரியாரோ அல்லது கடவுள் நம்பிக்கை இல்லாத அறிஞர் ஒருவரோ அல்ல.

திருக்குறளை ஆய்வு செய்து திருக்குறளில் உள்ள இடைச்செருகல்களை ஆதாரங்களுடன் நிறுவியவர் #வ_உ_சி அவர்கள்.ஆம் இந்திய சுதந்திர போராட்ட தியாகி என புகழப்படும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களேதான். வ.உ.சி.கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவர் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

திருக்குறளில் #கடவுள்_வாழ்த்து எனும் அதிகாரம் மட்டுமல்ல,#வான்_சிறப்பு, #நீத்தார்_பெருமை ஆகிய அதிகாரங்களும் திருவள்ளுவர் எழுதியவை அல்ல.அவை #இடைச்செருகல்களே என்று ஆய்வு செய்து கூறுகிறார் வ.உ.சி.“அவை திருவள்ளுவர் காலத்திற்குப் பிற்காலமும் முந்திய உரையாசிரியர்கள் காலத்திற்கு முற்காலமுமாகிய இடைக் காலத்துப் புலவர் ஒருவரால் பாடிச் சேர்க்கப் பட்டவையென்றும் யான் கருதுகிறேன்” என்று கூறுகிறார்.

பரிமேலழகர் என்பவர் எழுதிய திருக்குறள் உரை ஆரிய சார்பானதாக இருப்பதை ஏற்க மறுத்து (அப்போது சுயமரியாதை இயக்கமோ,பகுத்தறிவு கருத்துக்களோ வீரியமாக பேசப்படாத காலம் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.) ஏற்கும்படி இருக்கும் மணிகுடவர் எழுதிய திருக்குறள் உரையிலிருந்து திருக்குறள் அறத்துப்பால் மணிக்குடவர் பதிப்பு எனும் தலைப்பில் 140 பக்கங்கள் கொண்ட நூலை 1917  ஆம் ஆண்டு பதிப்பித்தார் வ.உ.சி.

1930 - 1932 களில் வெளிவந்த ''தமிழ்ப் பொழில்'' (துணர் 5/மலர் 6) எனும் இதழில் பாயிர ஆராய்ச்சி எனும் தலைப்பில் (பக்கம்: 232-237)எழுதியுள்ள கட்டுரையில் வ.உ.சி.அவர்கள் இந்த ஆய்வுகளை தொடராக எழுதியுள்ளார்.

பாயிர ஆராய்ச்சி எனும் ஆய்வு கட்டுரையில் வ.உ.சி அவர்கள் திருக்குறளின் இடைச்செருகல்கள் குறித்து எழுதியுள்ள கருத்துக்களின் சாரம் :

திருக்குறளின் இம்மூன்று அதிகாரங்களும் தற்காலத்தில் மிகவும் புகழ் பெற்றவை. கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை ஆகிய இம் மூன்று அதிகாரங்களிலுள்ள முப்பது குறட்பாக்களையும் திருவள்ளுவர் எழுதியிருக்க முடியாது என்பதற்கு காரணங்களை முன் வைக்கிறார் வ.உ.சி.

1.            கடவுள் வாழ்த்து,வான் சிறப்பு, நீத்தார் பெருமை பாடல்களில் பிற பாடல்களைப்போலச் சொற்செறிவும் பொருட்செறிவும் இல்லை.

2.            கடவுள் வாழ்த்து,வான் சிறப்பு, நீத்தார் பெருமை ஆகிய பாடல்களின் பொருள்கள் பல தடைகளுக்கு இடம் கொடுக்கின்றன.

3.            மெய்யுணர்தல், துறவு என்ற தலைப்புகளில் நூலின் உள்ளே அதிகாரங்கள் இருப்பதால் இதற்கு முரணான தலைப்புகளான கடவுள் வாழ்த்து, நீத்தார் பெருமை ஆகியவற்றை நூலின் தொடக்கத்தில் அதாவது பாயிரத்தில் வைத்திருப்பது பொருத்தமானதல்ல.

4. மெய்யுணர்தல் எனும் தலைப்பிலுள்ள அதிகாரத்தில் கடவுளுக்குக் கூறியுள்ள இலக்கணங்களைக் கொண்டு பார்க்கும்போது அவற்றையும் இம்மூன்று அதிகாரங்களையும் ஒருவரே எழுதியிருக்க முடியாது. (வ.உ.சியின் இக்கருத்து விரிவான ஆய்வுக்குரியது).

5.            துறவு மற்றும் நீத்தார் பெருமை ஆகிய அதிகாரங்களில் உள்ள பாடல்களை ஒப்பிட்டுப் பார்த்தால், இரண்டையும் ஒருவரே இயற்றியிருக்க முடியாது.

6.            மழையைச் ‘சிறப்பிற்றணிப்பாருமில்லை, வறப்பிற்றரிவாருமில்லை.” எனவே, ‘வான் சிறப்’பைக் கூறுவதால் பயன் ஒன்றுமில்லை.

7.  திருக்குறள் 10 என எண்ணிக்கையில் இருக்கும் போது 10ன் மடங்குகளாக 130 அதிகாரமும் 1300 குறள்கள் மட்டுமே இருந்திருக்க வேண்டும்.

---------------------------------------------------------------------------------

திருவள்ளுவரே கடவுள் வாழ்த்தை எழுதி இருக்கிறார் கடவுள் இருப்பதை ஏற்றுக்கொண்டார் என ஏமாற்றி வந்தவர்கள் இப்போது திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூச முயலும் அயோக்கியத்தனமான முயற்சியில் இறங்கியிருக்கும் இவ்வேளையில் கடவுள் வாழ்த்து,வான் சிறப்பு, நீத்தார் பெருமை ஆகியவை திருக்குறளே அல்ல.அவை திருவள்ளுவர் எழுதியவையும் அல்ல.இந்த 3 அதிகாரங்களும் இடச்செருகல்களே என்கிற வ.உ.சி.அவர்களின் ஆய்வுக்கட்டுரையை நாம் மீள வாசிக்க வேண்டியதும் அதனை பரப்புவதும் அவசியமாகும்.
- பரிமள ராஜன் முகநூல் பக்கத்திலிருந்து.... ஆண்டு 2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக