பக்கங்கள்

திங்கள், 15 ஆகஸ்ட், 2016

கல்வியில் ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பு

கல்வியில் சிறந்தோங்கிய தமிழர்:
மொழி ஆய்வாளர்கள் கருத்துப்படி உலக மொழிகளுக்கு தமிழே மூலமொழி, மூல இலக்கியங்களைப் பெற்றது என்பதால் தமிழரே கல்வியிலும் சிறந்து விளங்கினர். கல்வியில் சிறந்து விளங்காமல் மொழி வளமும், இலக்கிய வளமும், இலக்கண செழுமையும் ஏற்பட்டிருக்க முடியாது. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியம் தமிழில் உருவாகியிருக்கிறது என்றால் அதற்குமுன் எத்தனை ஆயிரம் வருடங்களாகத் தமிழர் கல்வியில் சிறந்திருப்பர் என்பதை கணக்கிட்டுக் கொள்ளவேண்டும். தொல்காப்பியத்தின் வளம், நுட்பம், இலக்கண வரையறைகளைப் பார்க்கும்போது அதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் கல்வியில் சிறந்திருந்தமை விளங்குகிறது.
திருக்குறளின் நுட்பங்களை, வளமையை, செறிவைப் பார்க்கும்போதும், கல்வியின் கட்டாயம் அதில் பேசப்படுவதாலும்   தமிழரின் கல்வி எந்த அளவிற்கு சிறந்தோங்கியிருந்தது என்பதை மதிப்பிடலாம்.
பெண்களும் கல்வியில் சிறந்தோங்கினர்:
ஆரிய பார்ப்பனர்கள் ஊடுருவுதற்கு முன், அரசன் முதல் எளிய குடிமக்கள்வரை தமிழர்கள் கல்வியில் சிறந்தோங்கியமைக்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன. பெண்பாற் புலவர்கள் கல்வித் திறத்தோடு விளங்கியமையை அவர்களின் படைப்புகளைக் கொண்டு அறிய முடிகிறது. அவ்வை போன்றோர் அதற்குச் சிறந்த சான்றாக உள்ளனர். காரணம், பண்டைய நாளில் கற்பதற்கு எத்தடையும், யாருக்கும் இல்லை! இக்கருத்தை டாக்டர் அம்பேத்கர் அவர்களே உறுதி செய்கிறார்கள். ‘‘பண்டைய உலகம் தனது மக்களுக்கு கல்வி தரும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளாததற்காக அது குற்றம்சாட்டப்படுவதுண்டு. ஆனால், எந்தச் சமுதாயமும் மதக் கருத்துக்களைப் பொதுமக்கள் படிப்பதையும் அறிந்து கொள்வதையும் தடுத்ததில்லை. எந்தச் சமுதாயமும் பொதுமக்கள் அறிவு பெறுவதையும் தடுத்ததில்லை. எந்தச் சமுதாயமும் பொதுமக்கள் அறிவைத் தேடி அடைவதைக் குற்றமாகக் கருதித் தண்டனை ஏதும் அளித்ததில்லை. பொதுமக்களுக்கு அறிவைத் தர மறுத்த ஒரே தெய்வீகச் சட்ட வல்லுநராக மனு ஒருவரைத்தான் கூறலாம்.’’ (அம்பேத்கர், 1999:61)
வேதமே சற்றேறக்குறைய 500 தமிழ்ச் சொற்களைக் கடன் பெற்றுள்ளது. வேதம் தோன்றிய காலம் கி.மு.1200. அதன்பின் பல நூற்றாண்டுகள் கழித்தே சமஸ்கிருதம் உருவாக்கப்பட்டது. “வேதங்கள் சமஸ்கிருத நூல்கள் அல்ல. பாணினியால் திருத்தம் செய்யப்பட்ட மொழியில் தோன்றிய இலக்கியங்களே சமஸ்கிருதம்’’ என்கிறார் சமஸ்கிருத பேராசிரியர் டாக்டர் கே.கைலாசநாத குருக்கள். (ஆதாரம்: உலகமொழிகளில் தமிழ்ச் சொற்கள் _ ப.சண்முகசுந்தரம் (பக்கம் _16) உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு)
“இராமாயணம் மகாபாரதம் போன்றவை கி.பி.அய்ந்தாம் நூற்றாண்டில் குப்தர் காலத்தில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டவை’’    என்கிறார்கள் கே.சி.கன்னா, ஏ.பார்த் என்ற அறிஞர்கள். (மேற்படி நூல், பக்கம் 17). H.G.Wells என்ற அறிஞர், “ஆரியர்கள் நாகரிகமுடைய மக்களான தமிழர்களைத் தொடர்புகொள்ளும் வரை அவர்களுக்கென்று எழுத்துமுறை இருந்ததில்லை’’ என்கிறார்.  (ஆதாரம்: A Short History of the World)
“கி.மு. முதல் நூற்றாண்டு வரை கல்வெட்டுகளிலும், நாணயங்களிலும், பிற தொல்லியல் ஆதாரங்களிலும் காணப்படாத சமஸ்கிருதம் கி.பி.350க்குப்பின் பிராகிருத இலக்கியத்தை மொழிபெயர்த்து வளர்ந்தது. இக்காலத்தில்தான் புராணங்கள், இராமாயணம், மகாபாரதம் போன்றவை சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டன. (ஆதாரம்: இந்திய வரலாற்றுத் தொகுதி 163_3. பாரத வித்யாபவன் வெளியீடு)
கி.பி.4ஆம் நூற்றாண்டில்தான், கடலூர் திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்த சர்வந்தி என்பவரால் உலோக வியாபகம் என்ற பிராகிருத மொழிநூல், “கதசப்தசாயி’’ என்ற பெயரில் சமஸ்கிருதத்தில் பெயர்க்கப்பட்டது.
“சூரசேனி என்ற பிராகிருத மொழியைச் செம்மை செய்து, சமஸ்கிருதம் (செம்மை செய்யப்பட்டது என்று பொருள்) என்றாக்கினர்’’ என்கின்றனர் ஸ்டிவென்சன், ஹட்ஜன் என்ற ஆய்வாளர்கள். ஆக, தொன்மை மொழியென்று உலகை ஏமாற்றி ஆரியர்கள் பெருமை பேசும் சமஸ்கிருதம் தமிழ் மூலத்தைக் கொண்டே உருவாக்கப் பட்டது. காரணம், பிராகிருத மொழியே தமிழின் திரிபாகும்.(P.C.Sircar, Prakrit Grammar, Culcutta) ஆக, சமஸ்கிருதத்தின் மூலம் தமிழே யாகும். “தமிழ் இலக்கிய மரபுகளே பிராகிருத மொழிமூலம் சமஸ்கிருதமாக்கப் பட்டன’’ என்கிறார் George Hart (ஆதாரம்: Tamil Heroic Poems). ஆக, ஆரியரின் எழுத்து, கல்வி, நூல் எல்லாம் தமிழரிடமிருந்து பெற்று திரித்து, மாற்றி உருவாக்கிக் கொண்டவையே.
ஆரியர் ஊடுருவலும் தமிழர் கல்வி இழந்தமையும்:
தமிழரிடையே ஜாதிப் பிரிவுகளோ, மூடநம்பிக்கைகளோ இல்லாத காரணத்தாலும் பெண்களே சமுதாயத்தில் உயர்நிலையில் வைத்து மதிக்கப் பட்டமையாலும் அடித்தட்டு மக்களும், பெண்களும் கல்விகற்க சமவாய்ப்பு பெற்று கற்று வந்த நிலையில், ஆரியர் புகுந்து, ஆதிக்கம் செலுத்தி, ஆட்சியாளர் துணைகொண்டு சாஸ்திரம் புனைந்து, ஜாதிப் பிரிவுகளையும், பெண்ணிழிவையும் உருவாக்கியதன் பயனாய், பெரும்பான்மை மக்களும், பெண்களும் கல்வி பெறும் வாய்ப்பை இழந்தனர்.
சூத்திரர்கள், பஞ்சமர்கள் கல்வி கற்கக் கூடாது என்று சாஸ்திர சட்டங்களை வகுத்ததால், மக்களில் பெரும்பகுதியினரான அவர்கள் கல்வியை இழந்தனர். அயோத்திதாச பண்டிதர் காலத்தே அவர் மறைந்து, மறைந்து கல்வி கற்றார் என்றால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நிலை எப்படியிருந்திருக்கும் என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள். ஒட்டுமொத்த பெண்களும் படிக்கக் கூடாது. அவர்களுக்கென்று சுயஅறிவு இருக்கக் கூடாது. கணவனின் அறிவையே அவளின் அறிவாகக் கொண்டு வாழ வேண்டும் என்று இருபதாம் நூற்றாண்டில் கூட சங்கராச்சாரி சொன்னார் என்றால் (ஆதாரம்: தெய்வத்தின் குரல்), ஆரிய ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்த அக்காலத்தில் எப்படி யிருந்திருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்.
பல்துறை அறிவுகள் பாழாய்ப் போயின:
ஆரியர் ஆதிக்கம் செலுத்துவதற்குமுன் தமிழர்கள் இலக்கியம், வானியல், மருத்துவம், கடலியல், கட்டடம், அணைகள், போர், உடற்பயிற்சி, வணிகம், நீதி, ஒழுக்கம், தத்துவம், அறிவியல், இசை, நாட்டியம், ஓவியம், சிற்பம், உடற்கூறு என்று பல்துறைக் கல்வியறிவும் பெற்று உயர்நிலை வாழ்வு வாழ்ந்தனர். ஆனால், ஆரியர் ஊடுருவல், ஆதிக்கம் மேலோங்கிய நிலையில் கல்வி யென்பதை வேதம், சாஸ்திரம், புராணம், ஆன்மிகம் என்றாக்கி, அதுவும் தங்களுக்கே என்றாக்கி, அனைத்துத் துறை கல்வியையும் அழித்தனர்.
தமிழர் நூல்களைத் தமதாக்கினர்:
ஆரியர் மொழியே பின்னாளில் வந்தது என்றும், தமிழர் இலக்கியங்களை, அறநூல்களை மாற்றியும், திரித்தும் தமதாக்கினர் என்றும் முன்னர் விளக்கினோம். அதன்வழி தமிழரின் சிறந்த படைப்புகளை, சிந்தனைகளையெல்லாம், களவாடி, தமக்கேற்பத் திரித்து சமஸ்கிருத படைப்புகளாக்கினர்.
அரிய நூல்களை அழித்தனர்:
நீர்ச் சோதனை, நெருப்புச் சோதனையென்று பித்தலாட்டமாக, மோசடியாக யுக்திகளைக் கையாண்டு தமிழரின் அரிய படைப்புகளை அழித்தனர். தரமான நூல்கள் ஓடும் நீரில் எதிர்த்து வரும், நெருப்பில் சாம்பலாகாமலிருக்கும் என்று சொல்லி, நீரிலும், நெருப்பிலும் தமிழர் நூல்களை போடச் செய்து அழித்தனர்.
போகிப் பண்டிகை என்ற மடமையை உருவாக்கி, பழையனவற்றைப் போக்குதல் என்ற சடங்கை ஏற்படுத்தி, வீட்டிலுள்ள அரியச் சுவடிகளையெல்லாம் நெருப்பில் எரிக்கச் செய்தனர். இப்படி பல்லாற்றானும் தமிழன் கல்வி அறிவை, சிந்தனையை நூல்களை உலகிற்குக் கிடைக்காமல் செய்தனர்.
குலவழித்தொழில் மூலம் கல்வியைப் பறித்தல்:
பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற வர்ணப் பிரிவை சமுதாயத்தில் உருவாக்கி, பஞ்சமர் என்று ஒரு பெரும் பிரிவு மக்களை ஊருக்கு வெளியே ஒதுக்கி, அவரவர் தொழிலையே அவரவர்கள் செய்ய வேண்டும். கல்வியென்பது சூத்திரர்க்கும், பஞ்சமர்க்கும் உரியதல்ல என்றாக்கி, சூத்திரரும், பஞ்சமரும் உழைப்பாளிகளாகவே பரம்பரைப் பரம்பரையாக வாழ வேண்டும்; கற்று வேறு பணிகளைச் செய்யக் கூடாது என்று சட்டம் வகுத்து, இருபதாம் நூற்றாண்டு வரைச் செயற்படுத்தியதால், இராசகோபாலாச்சாரியர் ஆட்சிக்காலம் வரை சூத்திரர்களும், பஞ்சமர்களும் கல்வியிழந்து தற்குறிகளாய் பரம்பரை வேலையையே செய்து பிழைப்பு நடத்தினர்.
இந்நிலையில் ஆரிய பார்ப்பனர்கள் ஆட்சியாளர்களின் துணையுடன் சமஸ்கிருதக் கல்வியை நாடு முழுமையும் அரசின் செலவில் வளர்த்ததோடு, தமிழர்க்கு அறவே கல்வி கிடைக்காது செய்தனர்.
வேதங்களை கீழ்ஜாதி, சூத்திரர், பஞ்சமர் பெண்கள் எவரும் படிக்கவோ, படிப்பதைக் கேட்கவோ கூடாது. மீறினால், கேட்ட கீழ் ஜாதிக்காரனின் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்பது, மனு போன்ற ஸ்மிருதிகள் - நூல்களின் கட்டளை (Injunction),, படித்தவன் நாக்கை அறுக்க வேண்டும் என்று சட்டம் செய்தனர். வடமொழியே தென்னிந்தியா முழுவதிலும் உயர்பண்பாட்டு மொழியாய் ஆக்கப்பட்டது என்று எழுதுகிறார் கே.ஏ. நீலகண்ட சாத்திரி. கிறித்தவத்தை இந்தியப் பண்பாட்டுவழித் தென்தமிழ்நாட்டில் பரப்பிய கத்தோலிக்கக் கிறித்தவத் துறவி டிநோபிலி மதுரையில் நாயக்க அரசர் சமஸ்கிருத வேதக் கல்வி கற்பிக்கச் செய்திருந்த ஏற்பாடுகளைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார்.
புதுவைக்குப் பக்கத்திலுள்ள பாகூரில் சமஸ்கிருதக் கல்விக் கென்றே பல்லவன் நிருபதுங்கன் காலத்தில் ஒரு கல்விநிலையமே இயங்கியது. டி. நோபிலி 1610இ-ல் எழுதிய ஒரு கடிதத்தில் மதுரையில் பத்தாயிரம் மாணவர் அரசின் இலவச உதவியுடன் சமஸ்கிருதவழிக் கல்வி கற்றதைக் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் அனைவரும் பிராமணக் குழந்தைகள். பிராமணர்கள் பயிலுவதற் காகப் பிரம்மபுரி கடிகை என்னும் கல்லூரிகள் நடத்தப்பட்டன. நிருபதுங்க வருமன் காலத்தில் காவேரிப் பாக்கத்தில் வைணவ மடம் ஒன்று இருந்ததையும் அங்கே பிராமணர்கள் வேதாந்த சாத்திரங்கள் பயின்றதையும் அறியமுடிகிறது.
புதுவை அய்ரோப்பியர் கைவசம் ஆகும் வரை (1673) அங்குத் தமிழ்ப்பாடம் கற்பிக்க ஒரு பள்ளி கூட நடத்தப்படவில்லை. நாகப்பட்டினத்தில் கி.பி.1058-இல் சமஸ்கிருதக் கடிகை ஒன்று இருந்தது. அதில் 200 பிராமண மாணவர்கள் வேதம் படித்தனர். 50 பிராமண மாணவர்கள் சாத்திரம் படித்தனர். வேதங்களைக் கற்பிக்கத் தனியே மூன்று ஆசிரியர்கள் பட்டமீமாம்சை, பிரபாகர மீமாம்சை ஆகிய சாஸ்திரங்களைக் கற்பிக்கத் தனியே மூன்று ஆசிரியர்கள், நூலகர் ஒருவர் ஆக அங்கிருந்த 257 பேருக்கும் இலவசமாகத் தங்கவும், உண்ணவும் நல்ல வசதிகள் அரசர்களால் செய்து தரப்பட்டிருந்தன. தென்னார்க்காடு மாவட்டம் எண்ணாயிரத்தில்,  முதல் இராஜேந்திர சோழன் காலத்தில் ஒரு சமஸ்கிருதக் கடிகை இருந்தது. சோழமன்னன் அனைத்து மானியங்களையும் வழங்கினான். அதில் 270 பிராமண மாணவர்கள் கற்று வந்தனர்.
எண்ணாயிரத்திற்குப் பக்கத்தில் திருபுவனை (புதுவை) என்னும் இடத்தில் சமஸ்கிருதக் கடிகை ஒன்று இயங்கியது. அதில் 260 பிராமண மாணவர்களும், 12 ஆசிரியர்களும் இருந்தனர். செங்கற்பட்டு மாவட்டம் திருமுக்கூடலில் வீர இராஜேந்திர சோழர் காலத்தில் (1067) சமஸ்கிருதக் கடிகை ஒன்று இயங்கியது. அங்கு ஆசிரியரும், மாணவரும் சேர்ந்து உறையவும், உண்ணவும் அனைத்து ஏற்பாடுகளும் அரசரால் செய்யப்பட்டிருந்தன. திருவாவடுதுறையில் ஒரு மருத்துவப் பள்ளி இயங்கியது. சமஸ்கிருத நூல்களான அஷ்டாங்க கிருதயமும், சாரகசம்ஹிதையும் அங்கே கற்பிக்கப்பட்டன.
இதற்கு மறுதலையாகத் தமிழ்க் கல்வி கற்பித்த நிறுவனங்கள் பற்றியோ திருக்குறள், தொல்காப்பியம் முதலான இலக்கிய இலக்கணங்களைப் பயிற்றுவித்த கல்விக் கூடங்கள் பற்றியோ தமிழர் தம் பண்டைக்கால, இடைக்கால, பிற்கால வரலாற்றில் ஒரு சான்றும் கிடைக்கவில்லை. (ஆதாரம்: பேராசிரியர் க.ப.அறவாணன் அவர்கள் எழுதிய “தமிழர் அடிமையானது எவ்வாறு?’’ என்ற நூல்.)
கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டின் மய்யப் பகுதியில் விஜயாலயசோழன் தஞ்சையைக் கைப்பற்றிச் சோழப் பேரரசின் உருவாக்கத்திற்கு வித்திட்டான். சோழப் பேரரசர்களும் வைதீகம் செழித்து வளரப் பொன்னையும், பொருளையும், நிலத்தையும் தானமாக வழங்கச் செய்தனர். (கே.கே.பிள்ளை, 2002:317)
திராவிடர் இயக்கங்களால் கல்வி உரிமை பெற்றோம்
1920 முதல் 1928 வரை தொடர்ந்த ஜஸ்டீஸ் கட்சி (நீதிக்கட்சி - திராவிடர் இயக்கம் நூற்றாண்டு இவ்வாண்டு) ஆட்சி தான் முழு அதிகாரங்கள் இல்லாத நிலையிலும்கூட கல்வியைப் பரப்பினர். பனகல் அரசர் முதல்வராக இருந்தார். கட்டாய இலவசக் கல்வித் திட்டத்தை பரப்பினார். ஏ.பி.பாத்ரே அப்போது கல்வி அமைச்சர். ஆச்சாரியார் - 2500 பள்ளிகளை மூடினார், 1938_-39இல். பிறகு 6000 பள்ளிகளை மூடினார் 1952-_54இல். குலதர்மக் கல்வித் திட்டத்தைப் புகுத்தினார். தந்தை பெரியாரின் போராட்டத்தால் ஆச்சாரியார் பதவி விலகினார். காமராசர் வந்ததுதான் தனித்திருப்பம். அவர் நாடெல்லாம் கல்விக் கூடங்களைத் திறந்தார். கல்வி நீரோடை நாடெல்லாம் பாய்ந்தது! திராவிடர் இயக்க ஆட்சிகள் அவற்றைத் தொடர்ந்தன!
மருத்துவக் கல்வி பயில நீதிக்கட்சி ஆட்சிக்குமுன் சமஸ்கிருதம் படித்தவர்கள் மட்டும்தான் மனு போட முடியும். தந்தை பெரியார் முயற்சியால், பனகல் அரசர், ஜஸ்டீஸ் முதல்வராக மாறினார். சமூகநீதிப்படி, தேர்வுக் கமிட்டியை நியமித்தார். சமஸ்கிருதம் கட்டாயம் என்பதை மாற்றி பார்ப்பனர் அல்லாதாரும் மருத்துவம் பயில வழி செய்தார்.
ஆங்கிலேயர் ஆட்சியும் கிறித்துவ தொண்டு அமைப்புகளும்:
ஆங்கிலேயர் ஆட்சி வந்தபின் ஆரிய பார்ப்பனர்கள் தவிர்த்த மற்ற ஜாதியினரும் கல்வி கற்கும் வாய்ப்பு ஓரளவிற்கு வந்தது. கிறித்தவர்கள் கல்விக் கூடங்களை அமைத்து சூத்திரர்களும், பஞ்சமர்களும் கற்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தினர். இதன்மூலம் சூத்திரர்களும், தாழ்த்தப்பட்டோரும் ஒரு சிறு அளவிலாவது கல்வி கற்று விழிப்புப் பெற்றனர்.
தந்தை பெரியாரின் புரட்சி:
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்டு, மூடநம்பிக்கையில், ஆரியத்திற்குச் சேவகம் செய்து அடிமைகளாய் வாழ்ந்த தமிழர்களை, சுயமரியாதைச் சூடேற்றி, சொரணை கொள்ளச் செய்த பெரியார், கடும் பிரச்சாரங்கள் மூலம் விழிப்பு கொள்ளவும் செய்தார். கல்வி என்பது கடையருக்கும் உரியது என்று உரிமைக்குரல் எழுப்பி, காமராசர் போன்ற ஆட்சியாளர்கள் மூலம் கல்வி எல்லா மக்களுக்கும் கிடைக்கச் செய்து, குலக்கல்வி முறையைக் கொன்று குழிதோண்டிப் புதைத்தார். அரசியல் சாசனத்தை முதல்முறையாக திருத்தச் செய்து, இடஒதுக்கீட்டை உருவாக்கி, அதன் மூலம் கல்வி பயிலவும், பயின்றபின் வேலை பெறவும் சூத்திர, பஞ்சமர்களுக்கு வாய்ப்பு தந்தார்.
இதன்வழி கல்வி வெள்ளம், காய்ந்துகிடந்த தமிழர் மத்தியில் பாய்ந்தது. கல்விப் பயிர் செழித்தது. கற்று வேலை பெற்றதால், தங்கள் பிள்ளைகளைத் தமிழர்கள் படிக்கச் செய்தனர். இன்று தமிழர் ஆரிய பார்ப்பனர்களைப் பின்தள்ளி, கல்வியில் அறிவியலில் சாதித்து வருகின்றனர். ஆரியப் படையெடுப்பை வீழ்த்தி தமிழர்க்கு உயர்வான உரிமை வாழ்வைத் தந்த பெருமை பெரியாரையேச் சேரும்! தற்காலத்தில் ஆரியர்களின் ஆதிக்கத்தில் வரும் போதெல்லாம் கல்வியை காவி மயமாக்கவும், கல்வியை அடித்தட்டு மக்களிடமிருந்து பறிக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மனித எதிர் நூல்களான பகவத் கீதை, பாரதம் போன்றவற்றைப் பாடநூலாக்கி கல்வியைச் சீரழிக்கின்றனர். சோதிடம் போன்ற மூட நம்பிக்கைகளை கல்வியில் நுழைத்து மடமையை வளர்க்கின்றனர். நம்பிக்கை என்ற பெயரில் புராணங்களைத் தூக்கிப் பிடித்து, அவற்றிற்கு அறிவியல் விளக்கங்கள் கொடுத்து மக்களின் அறிவைப் பாழாக்குவதோடு, அறிவு சார்ந்து வளர்க்கப்பட்டக் கல்வியை ஆன்மிகம் சார்ந்து, மதம் சார்ந்து, ஆரியம் சார்ந்து உருவாக்க முயற்சிக்கின்றனர்.
ஒவ்வொரு முயற்சியின் போதும் பெரியார், அம்பேத்கர் தொண்டர்களும், முற்போக்குச் சிந்தனையாளர்களும் விழிப்புடனிருந்து அவர்களின் சூழ்ச்சியை வீழ்த்தி வருகின்றனர். ஆரிய பார்ப்பனர்கள் கல்வியில் தங்கள் பண்பாட்டைத் தொடர்ந்து திணிக்கவே செய்வர். எனவே, மக்கள் விழிப்புடனிருந்து அதை முறியடிக்க வேண்டும்.! ஸீ
-உண்மை,16-31.1.16

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

வடமொழி என்பது சமஸ்கிருதமா?

- புலவர் வெற்றியழகன்
“இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல்லென்று அனைத்தே செய்யுள் ஈட்டச்                     சொல்லே!’’
(தொல்.சொல்.391)
தொல்காப்பியத்தில் சொல்லப்படும் வடசொல் என்பது எதைக் குறிக்கிறது? சமஸ்கிருதத்தையா? என்பதே இங்கு ஆய்வுக்குரியது.
தொல்காப்பியத்தின் முதல் உரையாசிரியராகிய இளம்பூரணர் “வடசொல்’’ என்பதனை “ஆரியச் சொல்போலும் சொல்’’ என்று விளக்கங்கூறி நச்சு விதையினை விதைத்தார்.
“இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்
“இயல்பாகிய சொல்லும் அதுதான் திரிந்துவருஞ் சொல்லுந் திசைக்கண் வழங்குஞ் சொல்லும் ஆரியச் சொல்லும் என்று கூறிய அத்துணையே ஒருபொருண்மேல் நிகழுஞ் செய்யுளை ஈட்டுதற்கு உரிய சொல்லாவன’’ என்று நச்சினார்க்கினியர் அந்த நச்சு விதைக்கு நீர் ஊற்றினார்.
“இயற்சொல்லானும் செய்யுட் சொல்லாகிய திரி சொல்லானுமே யன்றித் திசைச் சொல்லும் வடசொல்லும் இடைவிராய்ச் சான்றோர் செய்யுள் செய்யுமாறு கண்டு ஏனைப்பாடைச்  (மொழிச் சொல்லுஞ் செய்யுளுக்கு உரியவோ என்று அய்யுற்றார்க்கு ‘இந்நான்கு சொல்லுமே செய்யுட்குரியன’ பிற பாடைச் சொல் உரியவல்ல என்று வரையறுத்தவாறு.’’ என்று சேனாவரையர் ஆரியச் சொல் என்று கூறாமல் “வடசொல்’’ என்று மட்டுமே கூறினார்.
இளம்பூரணர் ஆரியச் சொல்போலும் சொல் என்றார். நச்சினார்க்கினியர் ஆரியச் சொல் என்று கூறினார். ஆனால், சேனாவரையர் “வடசொல்’’ என்று தொல்காப்பியரின் சொல்லையே பயன்படுத்தினார்.
“வடசொல்’’ என்றதும் “ஆரியச் சொல்’’ என்றதும் சமற்கிருதம் என்னும் முடிவுக்கே வந்துவிட்டனர்.
தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய பலரும் சமற்கிருதம் என்று கொண்டே பொருள் கூறினர்.
நன்னூலை இயற்றிய பவணந்தி முனிவர், “சீயகங்கன் என்னும் மன்னன் ‘தொல்காப்பியம் கடுமையாக இருக்கிறது. அதனை எளிமைப்படுத்திக் கொடுங்கள்’ என்று கேட்டான்; அதனால்தான் இந்த நன்னூலைப் படைத்தேன்’’ என்று கூறிவிட்டுச் சமற்கிருத மொழியின் இலக்கணம் முழுவதனையும் நன்னூலிலே விரித்துரைத்துவிட்டார்.
பவணந்தியார் காலத்தில் தமிழகத்தில் ஆரியர் நிறைந்திருந்த காலம். அது மட்டும் அன்று. பள்ளிகளில் தமிழாசிரியராக, ஆங்கில ஆசிரியராக அவரே இருந்தனர். அதனால், எல்லாப் பள்ளிகளிலும் தனிப் பயிற்சியிலும் நன்னூலே கற்றுக் கொடுக்கப் பெற்றது; தொல்காப்பியம் புறக்கணிக்கப் பெற்றது. ஓலைச் சுவடிக் காலம் முடிந்து அச்சுக் காலம் தொடங்கியதும் 1812இல் திருக்குறள் தாளில் அச்சாகியது. இலக்கண நூலுள் முதன்முதலாக 1837இல் நன்னூல்தான் அச்சாகின்றது. 1847இல்தான் தொல்காப்பியம் அச்சாகின்றது.
புறநானூறு, அகநானூறு, நற்றினை, குறுந்தொகை, சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற சங்க இலக்கியங்களை எல்லாம் பதிப்பித்துத் தமிழ்த் தொண்டாற்றிய தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் என்று வாய்வலிக்கப் புகழ்கின்றனர் தமிழறிஞர். அவர் ஏன் தொல்காப்பியத்தினைப் பதிப்பிக்கவில்லை? அவர்க்குக் கிடைத்திருக்காது என்பர். அது எவ்வளவு பொய் என்பதனை யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரனார் போட்டு உடைக்கின்றார். “உ.வே.சாமிநாதர் நூலகத்தில் தொல்காப்பியச் சுவடிகள் பதின்மூன்று இருந்தன. அதனைக் கொண்டுவந்துதான் நான் தொல்காப்பியத்தைப் பதிப்பித்தேன்’’ என்று கூறுகின்றார். இனத்தினது பாதுகாப்புக்கு இடைச்செருகல், இலக்கண நூலில் செய்ய முடியாது என்பதனாலும், தமிழரின் இலக்கணச் சிறப்பும் வெளிப்பட்டு விட கூடாது என்பதனாலும் அவர் தொல்காப்பியத்தினைப் பதிப்பிக்கவில்லை.
தொல்கதாப்பியத்துக்கு உரை எழுதிய ஒருவரும் சிந்தித்துப் பார்க்காத வகையில் பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் தாம் மிகச் சரியாகச் சிந்தித்து உண்மையைக் கண்டு கூறினார். “வடமொழி என்பது சமற்கிருத-மில்லை; அது தமிழ்மொழியேதான்’’ என்று ஆணித்தரமாக எடுத்துரைத்தார் பல சான்றுகளுடன்.
கா.அப்பாதுரையார் விளக்கம்:
“ஒரு மொழியில் மக்கள் வழக்கு, இலக்கியக் கால வழக்கு, அறிஞர் இயல்நூல் வழக்கு, இயற்றுறை கடந்த மறைப் பேரறிஞர் துறை வழக்கு ஆகிய நால்வகை வழக்கிலும் ஒரே நிலையில் பரவியுள்ள சொற்களே அம்மொழியின் தாய்வளம் ஆகும். இவற்றுடன் மக்கள் வழக்கில் அருகி, இலக்கிய வழக்கில் பெருகிய சொற்களும், இலக்கிய வழக்கேறாமல் மக்கள் வழக்கில் வளர்ந்துள்ள சொற்களும், இரண்டிலும் அருகி, அறிஞர் மறைப் பேரறிஞர் வழக்கில் விளையாடும் சொற்களும், தாய்வளம், தந்தை வளம், மாமி வளம், மாமன் வளம் என்று கூறத் தக்கவையே.’’
“தொல்காப்பியர் இந்நால்வகைச் சொல் வளங்களையும் தாம் இயற்சொல், திரிசொல், திசைச் சொல், வடசொல் என்று வகுத்தனர். தமிழ் மொழிக்காகத்தான் தொல்காப்பியர் இந்தப் பாகுபாட்டை வகுத்தார். எந்த மொழிக்கும் இது பொருந்தும். உலகில் முதன்முதல் தோன்றிய மொழி நூலறிஞராகிய தொல்காப்பியர் தமிழ்மொழி ஒன்றே அறிந்தவராயினும், அத்தமிழ் மொழி ஒன்றின் இயல்பை முற்றிலும் ஊன்றி ஆராய்ந்தவர் ஆதலால், அவ்வொரு மொழி மூலமாகவே இன்றைய பன்மொழி ஒப்பீட்டறிஞர்கூட காணாத மனித இனப் பொதுமொழித் தத்துவங்களையும் இதுபோலப் பலவிடங்களில் கண்டு தமிழில் விளக்கியுள்ளார்.
“மொழி நூலின் நுண்மாண் நுழைபுல முகடு கண்ட தொல்காப்பியரின் இச் சீரிய பகுப்பு முறையின் நுட்ப நயம் காண முடியாமல் இடைக்கால, அண்மைக் கால உரையாசிரியரும் அறிஞரும் திசைச் சொல்லை இக்கால அயல்மொழிச் சொல்லென்றும் கருதி, வீணே தாமும் இடர்ப்பட்டு உலகையும் இடறி, மயங்க வைத்துள்ளனர். தொல்காப்பியர் ஒரு மொழியின் சொற்பாகுபாடு அல்லது பொதுவாக மொழியின் பாகுபாடு குறித்த ஆராய்ச்சி அறிஞர். நன்னூலார் போன்று இடைக்கால இலக்கணப் புலவர் மரபினர் அல்லர். அதனுடன் தொல்காப்பியர் காலத்தில் மனித உலகிலே இலக்கியமும், அறிவு நூலும் கலையும் மக்கள் பண்பாட்டு வழக்கும் ஒப்ப வளர்ந்து, வளம் பெற்ற மொழி தமிழ் ஒன்றுதான் வேறு   எதுவும் கிடையாது.’’
“ஆசிரியர் மறைமலை அடிகளின் தனித் தமிழுக்கு அடிப்படை தொல்காப்பியரின் இயற்சொல் என்பதில் அய்யமில்லை. ஆனால், இயற்சொல் ஒன்றே அடிகளின் தனிச் சொல்லுக்குச் சமமாகாது. இதனையறிந்தே தொல்காப்பியர் மற்ற மூன்று சொற்களையும் திரிசொல், திசைச்சொல், வடசொல் என்ற வரிசைமுறையில் வைத்தார்.
“தாய்ப்பால் குடித்தே பிள்ளை ஒன்றிரண்டாண்டு வளர்ந்தாலும், அஃது ஒன்றே பிள்ளை வாழ்வின் நலங்களுக்கு அடிப்படையானாலும், அதன்பின் தந்தை ஈட்டிய உணவும், மாமியார் அன்பு விருந்தும், மாமனார் ஆதரவும் (இம்மூவரிடைத் தவழ்ந்து வந்த அடுத்த தாய் மரபில் தொடர்பான தாரமும்) இல்லாவிட்டால், தாய் மரபின் தொடர்பு நீக்காது திரிசொல்லும் சார்ந்தே இயற்சொல்லின் தாய்வளம் புதுமரபு வளமாக வளரமுடியும். வடசொல் இயற்றுறை கடந்த மறைப் பேரறிஞர் துறை வழக்குச் சொல் பிறவற்றுக்கு வழிகாட்டுவது.’’ மேலும் விளக்குகிறார் கா.அப்பாதுரையார் “மொழிவளம்’’ என்னும் நூலில்.
பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையாரின் விளக்கத்தால் நாம் அறிந்துகொள்ள வேண்டியவை. இயற்சொல் என்பது மக்கள் வழக்குச் சொல்; எந்தவிதமான புணர்ச்சி விதியும் அமையாதது. திரிசொல் என்பது இலக்கியக் கலை வழக்குச் சொல். வலித்தல் விகாரம் உள்ளிட்ட பல விகாரங்களும்; மிகுதல், வகர _ யகர உடம்படு மெய்; திரிதல் விகாரம் உள்ளிட்ட விகாரச் சொல். திசைச் சொல் என்பது அறிஞர் இயல் நூல் கடந்த வழக்குச் சொல்; அதாவது வட்டார வழக்குச் சொல்  வடசொல் என்பது இயல்துறை கடந்த மறைப் பேரறிஞர் துறை வழக்குச் சொல். அதாவது, வடசொல் என்பது மேலான _ உயர்வு பொருந்திய பேரறிஞர் பயன்படுத்திய தமிழ்ச் சொல்லே. கொடுந்தமிழ்ச் சொல்லே என்பது தெளிவாகின்றது
இயற்சொல் - எந்தவித மாற்றமும் நிகழாத                     அல்வழிச் சொல்
திரிசொல் - புணர்ச்சி விதிகளைக்                         கொண்டமைந்த சொல்.
திசைச்சொல் - வட்டார வழக்குச் சொல்.
வடசொல் - சான்றோர் பயன்படுத்திய                     கொடுந்தமிழ்ச் சொல்.
வட எழுத்து ஒரீஇ என்பது செய்யுளில் கொடுந்தமிழ்ச் சொல்லினை மட்டுமல்லை; கொடுந்தமிழ்ச் சொல்லின் ஒலிகொண்ட சொல்லினையும் பயன்படுத்துதல் வேண்டா என்று விலக்குகின்றார் தொல்காப்பியர்.
எடுத்துக்காட்டு: செய்யுளில் கடா கடாவுதல், பெருவளி, அவாவுறுதல், வெகுளி கொள்ளுதல் உள்ளிட்ட கடிய சொல்லைப் பயன்படுத்தாமல், வினா வினாவுதல், பெரும் காற்று. பேராசைப்படுதல், சினம் கொள்ளுதல் என்று எளிமையாக எழுதுதல் வேண்டும் என்பதுவே வடசொற் கிளவி; வட எழுத்து என்பது கடிய _ உச்சரிக்க முடியாத ஒலி உடைய எழுத்தைச் செய்யுளில் பயன்படுத்துதல் கூடாது என்பதாகும்.
திரு.வி.க.
திரு.வி.கலியாணசுந்தரனார் “கடா கடாவின’’ என்று எழுதியுள்ளார். “வினா விடுத்தான்’’ என்பதுவே ‘செந்தமிழ்; “கடா கடாவினான்’’ _ கொடுந்தமிழ்.
இரா.பி.சேதுப்பிள்ளை
“தமிழகம் போந்த பாதிரிமார்; தேனை மாந்தித் திளைத்தனர்; செவ்வணம் ஓதி; தமிழின் நீர்மை அறிந்து; தென்னாட்டில் வதிந்த இவை கொடுந்தமிழ். இவற்றை இரா.பி.சேதுப்பிள்ளை பயன்படுத்தியுள்ளார்.
தொல்காப்பியம் எழுந்தபோது, சமற்கிருதம் தோன்றவே இல்லை என்பதும்; தொல்காப்பியர் தமிழ்மொழிக்கு மட்டுமே உரை எழுதினார் என்பதும் அப்பாதுரையாரின் அசைக்க முடியாத உறுதிப்பாடு.
அ.மு.பரமசிவானந்தம்
“வடமொழி என்பது தமிழ்ச் சொல். தமிழகத்துக்கு வடக்கே உள்ள ஒரு மொழியை இது குறிக்கும் எனலாம். தமிழ்நாட்டு வட எல்லை சங்க காலத்துக்கு முன்பிருந்தே வேங்கடமாக அமைந்துள்ளதை நாமறிவோம். தெலுங்குதான் வடமொழி என்பதாகும்’’ என்றும்
“ஆரியம், ஆரியர் என்னும் சொற்கள் _ தமிழில் உள்ள “அரிய’’, அரியர், அறிவர், தாபதர் போன்ற நல் உணர்வாளர் இருந்தார்கள் என அறிகிறோம்.
“தமிழ்நாட்டு அரியராகிய அறிவரே ஆரியர் _ எனப்பட்டார் என்பது பொருந்தும்.
வடநாட்டு ஆரியர் சிந்துவெளிக்கு வருவதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டிலும் தமிழ் வழங்கிய பரந்த இந்தியப் பெருநிலத்திலும் வாழ்ந்தவராதல் வேண்டும்.
“வடமொழி, ஆரியம் என்பன இன்றைய சமற்கிருதத்திலும் வேறுபட்டவை என்பதும்; வடமொழி தமிழ்நாட்டு எல்லையில் வடக்கே பக்கத்திலேயே வழங்கியதாக இருத்தல் வேண்டும் என்பதும்; ஆரியம் தமிழ் நாட்டிலேயே ஒழுக்க நெறியில் உயர்ந்த அரியர்  வழங்கிய குழுஉக்குறி மொழியாகவோ அன்றி வேறு வகையாகவோ இருக்க வேண்டும் என்பதும்; இம்மொழியையும் பின் வடக்கிலிருந்து வந்த சமற்கிருதத்தையும் ஆரிய மொழி என்ற பெயரால் ஒற்றுமைப்படுத்தி இருக்க வேண்டும் என்பதும் விளங்குகின்றன’’ என்று அறிஞர் அ.மு.பரமசிவானந்தம் தமது “கொய்த மலர்கள்’’ என்னும் நூலில் கூறியுள்ளார்.
முடிவுரை
தொல்காப்பியர் “வடசொல்’’ என்று கூறுவது செய்யுளில் சான்றோர் பயன்படுத்திய கொடுந்தமிழ்ச் சொல் என்பதனையும்; தொல்காப்பியர் “வட எழுத்து ஒரீஇ’’ என்று கூறுவது _ செய்யுளில் சான்றோர் பயன்படுத்திய கொடுந்தமிழ்ச் சொல்லினையும், கொடுந்தமிழ்ச் சொல்லினது ஓசையினைத் தருகின்ற வேறு சொல்லினையும் பயன்படுத்துதல் கூடாது என்றும் கூறுகின்றார் என்பது தெள்ளத் தெளிவாகப் புலனாகின்றது.
வடமொழி, வடசொல் என்பன சமற்கிருதத்தினைக் குறிக்கா என்பவற்றை நாம் அறிந்து கொள்ளுதல் வேண்டும்.
வடசொல் _ சான்றோர் பயன்படுத்திய கொடுந்தமிழ்ச் சொல்.
வடஎழுத்து _ சான்றோர் பயன்படுத்திய கொடுந்தமிழ்ச் சொல்லின் ஒலியினைக் கொண்ட வேறு சொல்.
மொழி _ என்பதற்குச் சொல் என்றும், மொழி பாடை (பாஷை) என்றும் பொருள்தரும்.
வடமொழி _ என்பது மேலான மொழி; அந்த மேலான மொழி (சொல்) சான்றோர் பயன்படுத்திய உயர்வு நிலை பொருந்திய கொடுந்தமிழ்ச் சொல்லே ஆகும்.
ஆகையினால் வடமொழி என்பது சமற்கிருதம் இல்லை; கொடுந்தமிழ்ச் சொல்லாகும்.
சமஸ்கிருதம் மிகப் பின்னாளில் செயற்கையாக உருவாக்கப்பட்டது. தொல்-காப்பியம் மிகத் தொன்மைவாய்ந்த நூல். எனவே, அதில் சமஸ்கிருதம் பற்றிச் சொல்ல கிஞ்சிற்றும் வாய்ப்பே இல்லை என்ற உண்மையே வடமொழி என்பது சமஸ்கிருதம் அல்ல என்பதை அய்யத்திற்கிடமின்றி உறுதி செய்கிறது.
-உண்மை,16-31.3.16

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?-4

பூ
பூ என்பது பூமி. உலகத்தைக் குறிக்கும் போது அது வடசொல் அல்லவா என்றார் மேற்படி அன்பர். அன்று, அது தூய தமிழ்ச் சொல்லே.
பூமேவு புல்லைப் பொருந்து குமரேசர் என்பதற்கு மலர் மேவிய சோலையுள்ள புல்வயல் என்ற ஊர் என்று ஒரு புலவர் பொருள் கூறியிருந்ததும் நம் நினைவிற்கு வருகின்றது. அது பிழை, பூமேவு-உலகில் அமைந்த என்று தான் பொருள் கூறவேண்டும்.
பூ எனினும் மலர் எனினும் உலகையே குறிக்கும் என்பது எதனாற் பெறப்படும் என்று கூறுவோம்.
இவ்வுலகுக்குத் தமிழர் கொடுத்த எண்ணூல் என்ற தத்துவ நூலில் (கபிலம், கபிலா, சாங்கியம்) ஆதி ஆகிய அதாவது முதன்மை (மூல பிரகிருதி)யை அரும்பு என்றும், தன் மலர்ச்சியை _ --மலரை இந்த உலகம் என்றும் சொல்லி வைத்தார் திருவாரூர்க் கபிலர். அன்று தொடங்கியே பூ உலகுக்கு வழங்கலாயிற்று. வடவரும் அதையே எடுத்தாண்டனர். எண்ணூலையும் வடமொழியில் பெயர்த்தார்கள் அன்றோ! திருக்குறளில் வரும் மலர்மிசை ஏகினான் என்பதில் வரும் மலருக்கும், உலகு என்றே பொருள் கொள்ள வேண்டும். இவ்வாறு பொருள் கொள்ளத் தவறியதால் அதற்கு பலவாறு பொருள் கூறியிருக்கிறார்கள் பலர்.
எனவே, பூ உலகைக் குறிக்கையிலும் அது தூய தமிழ்ச் சொல்லே என்க!
(குயில்: குரல்: 1, இசை: 21, 21--_10_-1958)
வினயம்
இது தூய தமிழ்ச் சொல். வினையம் என்பது இவ்வாறு திரிந்தது என்பர் வடவர்.
வினை என்பது அதன் பயனுக்கு வினையம் ஈறு திரிந்து ஆகுபெயர் ஆயிற்று. வினை இரண்டு: நல்வினை, தீவினை, வினையம் இரண்டு: நல்வினையம், தீவினையம். ஆயினும் வினையம் என்பது, நல்வினையம் தீவினையம் என்று ஏற்றவாறு பொருள் கொள்ள வேண்டும்.
நல்வினையம் என்ற இடத்தில் வரும் வினையம் வணக்கம், அடக்கம், அறிவு என்ற பொருள்களைத் தந்து நிற்கும். தீவினையம் என்ற இடத்தில் வரும் வினையம் அவற்றிற்கு மாறான பொருளைத் தந்து நிற்கும்!
ஆயினும் புராணக்காலப் புயலில் சிக்குண்ட புலவர்கள் நல்ல பொருளில் எடுத்தாளும்போது இச் சொல்லை வினையம் என்ற தீய பொருளில் குறிக்கலாயினர். அதனால் அண்மைக் காலத்து அகரவரிசை நூற்களில், வினையம் _ -வணக்கம், அடக்கம், அறிவு என்று பொருள் காட்டினர். வினையம்-தீய வினைப்பயன் என்று கொண்டனர் புலவர்.
கம்பராமாயணச் செய்யுள்:
இளையநற் காதை முற்றும் எழுதினோர் வியந்தோர்கள்
அனையது தன்னைச் சொல்வோர்க்கு அரும்பொருள்
கொடுத்துக் கேட்டோர்
கனைகடற் புடவிமீதே காவலர்க்கு அரசாய் வாழ்ந்து
வினையம் அது அறுத்து மேலாம் விண்ணவன் பதத்திற் சேர்வார்.
என்பதில் வினையம் காண்க.
எனவே வினயம் வினையமே தூய தமிழ்ச் சொல்லே.
(குயில்: குரல்: 1, இசை: 23, 4-11-1958)
புருவம்
புரை, புரைவு, புரைவம் அனைத்தும் உயர்வின் பெயர். இஃது புருவம் என மருவிற்று. உயர் இடம், மேடு என்பன கொள்க. முகத்தில் குறிப்பிடத்தக்கதாகிய கண்ணுறுப்பினும் உயர்ந்திருப்பது என்ற காரணம் பற்றி வந்த பெயர்.
புணர்ப் புள்ளுறுத்த புரைபதம்        (பெருங்கதை இலாவணகாண்டம்)
இதில் புரை உயர்வு குறித்ததைக் காண்க!
விரைவிரியார் புரைவுறப் புணர்த்த
(பெருங்கதை உஞ்சை)
இதில் புரைவு, உயர்வு குறித்தது காண்க.
இனி, புரைவு அம் சாரியை பெற்றுவரும் மன்று மன்றம் என வந்தது போல். எனவே புரை, புரைவு, புருவம் இவை உயர்ந்த இடத்துக்கும் ஆம். போது ஆகுபெயர் எனப்படும்.
எனவே புருவம் தூய தமிழ்ச் சொல்லே எனக் கடைபிடிக்க.
(குயில்: குரல்: 1, இசை: 24, 11-11-1958) ஸீ
-உண்மை,1-15.1.16
கவி
இது கபி என்பதின் சிதைவானால் குரங்கு என்று பொருள்படும். அப்போது அது வடசொல் என்றால் நாம் ஏற்றுக் கொள்ளத் தடையில்லை. பா என்னும் பொருளைத் தரும் போது அது (கவி) தூய தமிழ்ச் சொல்லே யாகும்.
கவிதல் என்பது தல் இறுதி நிலை பெற்ற தொழிற்பெயர். கவிகை என்னும் போது, அது கை இறுதிநிலை பெற்ற தொழிற்பெயர். கவிதை என்பதில் அது போல தை இறுதிநிலை என்க, நடத்தை என்பதிற் போலவே. எனவே கவிதல் கவிகை. கவிதை இது தொழிற்பெயர்கள். கவி என முதனிலைத் தொழிற் பெயராக வருவது உண்டு. இது பெருவழக்கும் ஆகும். இனிக் கவி என்றால் மனம் ஒரு பொருளில் கவிவது. பா என்க. கவி என்பது பாட்டுக்குப் பொருளாயிற்று. கவிதா என்கின்றார்களே வடவர் எனில், அது வடவர் இயல்பான செயல் என விடுக!
கவிஞர் உள்ளத்தில் உருவான நிலையில் வைத்து அதைக் கவி என்றான் தமிழன். அது வெளிப்பட்டுப் பரவி நடக்கும் (பரவி) நிலையில் அதைப் பா என்றான்!
கவிப்பா அமுதம் இசையின் கறியொடு கண்ணன் உண்ணக்
குவிப்பான் குருகைப் பிரான்சட கோபன் குமரி கொண்கள்
புவிப்பா வலர்தம் பிரான்திருவாய் மொழி பூசரர் தம்
செவிப்பாய் துழைத்து புக்கு உள்ளத்திலே தின்று தித்திக்குமே
சடகோபர் அந்தாதி 7.
என்றதில் நோக்குக.
இதில் கவி என்றது என்ன பொருளில் அமைந்தது. மனம் கவிதலால் உண்டான பா எனப் படவில்லையா. எனவே, கவி தனியே நின்று ஆகுபெயராய்ப் பாவை உணர்த்துவதில் வியப்பென்ன?
கவி என்ற தூய தமிழ்ச் சொல்லும், அது பாவை உணர்த்த வேண்டியதற்கான தமிழ்ச் சட்டமும் இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்னரே நம்மிடம் உண்டு! ஆட்சியில் உண்டு! அது போல இதை வடவர் 5000 ஆண்டுகளின் முன்னே ஏற்பட்டிருந்தால் அந்தக் காரணத்தைக் காட்டி இது வடசொல்லேதான் என்று மறுக்கட்டுமே! தமிழர் தம் தமிழ் உள்ளத்தை வடவரின் நச்சில் துவைத்துக் கொண்டு தமிழ் நாட்டில் தமிழில் உள்ள சொற்களிலெல்லாம் அய்யப்பாடுறுவானேன்? நாவலந்தீவு தமிழருடையது. அங்கு இயற்கை முறையில் முற்காலத்திலே இருந்தது தமிழ்.
ஆரியர் வந்தவர். வந்தபின்தான் அவர்களின் மொழியைத் தமிழாற் பெருக்கினர். ஆரியர் வரும்போது அவர்கட்குச் சில சொற்களே தெரியும்? அவர்கட்கு நூற்களும் ஏற்பட்டன என்றால் தமிழாலேயே! சமஸ்கிருதம் என்பது சேர்த்துப் பொறுக்கிச் செம்மைப்படுத்தப்பட்ட ஒரு கூட்டுக்கறி! தமிழ் அப்படியா? கருத வேண்டும். எனவே கவி தூய தமிழ்ச் சொல் என்பதைக் கடைபிடிக்க.
(குயில்: குரல்: 1, இசை: 23, 4-11-1958)
பனாதி
இது தமிழ்ச் சொல்லே. பன்+அத்து+இ=பன்னத்தி. அத்துச் சாரியை, ‘இ’ பெயர் இறுதி நிலை. பன்_-ஒருவகைப் புல். அது பச்சென்றிருக்கையிலும் கொளுத்தினால் காய்ந்தது போல் எரியும். பசையற்றது, பள்ளத்தி என்பதே பனாதி என மருவிற்று. பனாதி_--பசையற்றவன், வளமில்லாதவன்.
ஆதலின் தமிழ்ச் சொல்லாதல் பெறப்படும் என்க!
வேந்தன்
அயோத்தியா காண்டம் நகர் நீங்கு படலம் 185ஆம் செய்யுளின் விரிவுரையில் வை. மு. கோ. ‘வேந்தன் தே«ந்திரன் என்பதன் சிதைவு என்பர்’ என்று எழுதியுள்ளார்.
“வேந்தன் மேய தீப் புனல் உலகமும்” எனத் தொல்காப்பியத்தில் வருகின்ற தென்றால் தொல்காப்பியர் காலத்திலேயே தேவேந்திரன் என்பது வேந்தன் என்று சிதைந்து விட்டதா? வை. மு. கோ. என்னுமிவரைப் போன்ற தீநெறியில் அஞ்சாது கால் வைத்திருப்பாரா தொல்காப்பியர்!
(குயில், குரல்: 1, இசை: 25, 18-11-58)
-உண்மை,16-31.1.16
வாரி
கம்பராமாயணத்துக்கு உரை எழுதவந்த வை.மு.கோ. தமிழ்ச் சொற்களையெல்லாம் வேண்டுமென்றே வட சொற்கள் என்று காட்டி மகிழ்பவர். அதில் வாரி என்பதும் ஒன்று. பாலகாண்டம், ஆற்றுப்படலம் 8ஆம் செய்யுள் உரையிலும் மேலும் பல இடங்களிலும் வாரி, இலக்கனையாய்க் கடலை குறித்தது. ஆதலின் அது வடசொல் என்று கூறியுள்ளார்.
வார் என்றால் தமிழில் நீருக்குப் பெயர். நீண்டு ஓடுதல் என்ற காரணப் பொருளுடையது. அதுவே வார்தல் வார்ந்தது என்றெல்லாம் வினைப்பெயர் முதனிலையாய் வரும். எனவே வார் என்ற முதனிலை தொழில் பெயருக்குப் பெருகுதல், ஒழுகுதல் என்ற பொருள் உண்டு. அந்த வார் என்பது வினைமுதற்பொருள். இறுதி நிலையாகிய இகரம் பெற்று வாரி என்றாயிற்று. வாரி என்பதற்கு நீர்ப் பெருக்கு, நீர் மட்டம், வெள்ளம் என்றெல்லாம் பொருள் பட்டுத் தமிழிலக்கியங்களில் வரும். இதுவே ஆகுபெயராய்க் கடலையும் உணர்த்தும். ஊர்வாரி நன்செய் எனப் பேச்சு வழக்கில் வருவதும் அனைவரும் அறிந்ததொன்றாம். எனவே, வாரி என்பது தூய தமிழ்க் காரணப் பெயர் என்க. இனி,
வாரிதி
வார் என்பது முதனிலை. தி தொழிற் பெயர் இறுதி நிலை. இகரம் சாரியை. ஆகவே வார்தி ஆயிற்று. இது தொழிலாகு பெயராய்க் கடலை உணர்த்தும். வாரிதி என்பதை வடமொழி என்பவர், தமிழினின்று அது எடுக்கப்பட்டது என்று உணர வேண்டும்.
வாரி என்பதற்குக் கூறியது கொண்டு வாரிதியும் தூய தமிழ்க் காரணப் பெயரே என்று கடைப்பிடிக்க.
தாமரை
இதை தாமாசம் என்ற வடசொல்லின் சிதைவு என்று தமிழர்க்குக் குல்லாய் தைப்பர். மரு என்பது தமிழில் மணத்துக்குப் பெயர். அது ஐ என்ற பெயர் இறுதி பெற்று “முற்றும் அற்று ஒரோ வழி” என்ற சட்டத்தால் மரை என்றாயிற்று. இதுவும் முதலுக்கு ஆவதால் பண்பாகு பெயர் என்பர்.
இனி, மரை என்பது தாம்பு என்பதன் கடைக்குறையான தாம் என்பதை முன்னே பெற்றுத் தாமரை ஆனது
எனவே (தாம்+மரை) தாமரை என்பது நீண்டதும் மணமுடையதுமான ஓர் கொடியின் பெயரைக் குறித்த காரணப் பெயர்.
இது தாமரை மலரைக் குறிக்கும்போது முதலாகு பெயர் ஆம். இது செம்மை அடைபெற்றுச் செந்தாமரை என்றும், வெண்மை அடைபெற்று வெண்டாமரை என்று வரும்.
தாமரை தூய தமிழ்க் காரணப்பெயர் என அறிந்து உவக்க.
(குயில்: குரல்: 1, இசை: 24, 11-11-1958)
பஞ்சம்
பஞ்சின் தன்மை பஞ்சம் ஆயிற்று, ஈறுதிரிந்த ஓர் ஆகுபெயர் என்க.
பஞ்சின் தன்மையாவது எளிமை, நிறை இல்லாமை, அதனடியாய்ப் பிறந்த பஞ்சம் என்பதும் எளிமை, நுகர்ச்சி இல்லாமை, பொருளில்லாமை எனப் பொருள்படும்.
இன்னும் பஞ்சு என்பது ஐ இறுதி பெற்று ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால் ஆகிய மூன்று பாற்கும் வரும். அவன் பஞ்சை, அவள் பஞ்சை, அது பஞ்சை என. அதுவே உயர்திணை அஃறிணையாகிய பலர் பாலுக்கும், பலவின் பாலுக்கும் அர், கள் பெற்று வரும்.
அவர்_-பஞ்சையர், அவர்கள்_-பஞ்சையர்கள், அவை_-பஞ்சைகள், அவைகள்_-பஞ்சைகள் என.
அவை_-பஞ்சை எனினும் இழுக்காகாது.
பஞ்சம் என்பதைத் தமிழர் சிலர் வடசொல் என்று ஏமாற்றுகிறார்கள் என்பதறிந்து, ஐயம் நீக்குதற் பொருட்டே இவ்வாறு விளக்கப்பட்டது. பஞ்சம், பஞ்சை தூய தமிழ்ச் சொற்கள்!
(குயில், குரல்: 1, இசை: 25, 18-11-58)
-உண்மை,1-15.2.16
பனாதி
இது தமிழ்ச் சொல்லே. பன் + அத்து + இ = பன்னத்தி. அத்துச் சாரியை, ‘இ’ பெயர் இறுதி நிலை. பன்-ஒருவகைப் புல். அது பச்சென்றிருக்கையிலும் கொளுத்தினால் காய்ந்தது போல் எரியும். பசையற்றது, பள்ளத்தி என்பதே பனாதி என மருவிற்று. பனாதி--பசையற்றவன், வளமில்லாதவன். ஆதலின் தமிழ்ச் சொல்லாதல் பெறப்படும் என்க!
(குயில், குரல்: 1, இசை: 25, 18-11-1958)
ஆய்தம்
தமிழரின் ஆய்தத்தை வடவர் பறித்துக் கொள்ள பெரிதும் முயன்றுள்ளனர். மு. இராகவையங்கார் இதை வட சொல்லாக்கத் தலைகீழ் நின்றார் என்பதை, அவர் எழுதி வெளியிட்ட ஆராய்ச்சித் தொகுதி கண்டார் அறிந்தாராவார்.
ஆய்தல் அகம், ஆயுதல் அகம், ஆயல் அகம், ஆய்தகம் என்பன அனைத்தும் பயிலிடத்துக்கு ஆன பெயர்கள். சிறப்பாக அது படைப்பயிற்சி செய்யுமிடத்துக்கு ஆம். இந்த ஆய்தகம் என்பது  ஆய்தம் என ஈறு திரிந்த ஆகு பெயராய் படைக்கு ஆயிற்று.
இனி ஆய்தம் என்பது (ஃ) ஆய்தவெழுத்துக்கும் ஆம். அப்படி ஆம் போது அது உவமை ஆகு பெயர் என்க.
ஆய்தம் என்பது (படை) தானேயன்றித் தான் மற்றொன்றை-தன்னை எடுத்தாள்-வோனைச் சார்ந்து பயன்படுவது.
ஆய்த வெழுத்தும் வல்லெழுத்தைச் சார்ந்து பயன்படுவது, ஆய்த எழுத்து-சார்பெழுத்துக்-களில் ஒன்று.
“சார்ந்துவரின் அல்லது தமக்கியல் பிலஎனத்
தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும்
தத்தம் சார்பிற் பிறப்பொடு சிவணி
ஒத்த காட்சியின் தம்மியல் பியலும்.”
என்னும் தொல்காப்பிய நூற்பாவை நோக்குக. எனவே ஆய்தம் வடமொழியன்று. தூய தமிழ்ச் சொல்.
(குயில், குரல்: 1, இசை: 26, 25-11-1958)
சிங்கம்
இது ஹிம்ஸ என்ற வடசொல்லின் சிதைவாம். ஹிம்ஸ என்பது சிம்ஹ என்றாகப் பின் சிங்கம் என்று ஆயிற்றாம். இவ்வாறு வடவர் கூறுவதோடு தமிழ்ப் புலவர் சிலரும் கூறுகின்றார்கள்.
சிலப்பதிகாரப் பதிகம் 47-ஆம் அடியில்
“சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்து”
என்றதை உற்று நோக்குவாருக்கு உண்மைப் புலப்படாமல் போகாது. இது மட்டுமல்ல, கம்பராமாயணம் நாடுவிட்ட படலம் 40இல் செய்யுளாகிய
“சிங்கல் இல் கூதாலி”
என்பதையும் நோக்குக. தமிழ்ச் செய்யுள்களில் பல இடங்களில் இவ்வாறு வந்துள்ளதென்பது தமிழறிந்தார் அறியாததன்று.
சிங்கம்-கெடுதல் என்பது பொருள். எனவே பிற உயிர்கட்குக் கேடு சூழ்வது அதனால் தானும் கெடுவது சிங்கம் என்றாயிற்று. உயிர்நூற் புலவரும், சிங்கம் இந்நாட்டிலும் பிற நாட்டிலும் இல்லாது குறைந்து வருவதற்குக் காரணம் பிற உயிரை அரிப்பதுதான் என்று கூறுவார்கள். சிங்கத்துக்கு அரிமா எனப் பெயருண்டு. சிங்கல் சிங்கத்துக்கு ஆன ஆகுபெயர்.
எனவே சிங்கம் தூய தமிழ்ச்சொல் என்க!
வரம்
வரல் என்பது ஈறுதிரிந்த தொழிற் பெயராய் வருதலுற்ற பொருளைக் குறிக்கும். இந்த வரல் என்பது வரத்து என்றும் வழங்கும். அதனாலன்றோ கம்பராமாயணம் ஆரணிய காண்டம், விராதன் வதைப்படலம் 22ஆம் செய்யுளில்

வரத்தின்-வருதலினால் என்று பொருள் கொண்டதும் என்க. எனவே வரம் என்பது தூய தமிழ்ச் சொல்லே என்று கடைப்பிடிக்க.
(குயில், குரல்: 1, இசை: 27, 2-12-1958)
-உண்மை,16-.28.2.16
குடம்
இது தூய தமிழ்ச்சொல். இதையும் வடசொல் என்று ஆக்கிவிட எண்ணினர் வடவர். குடாகாயம் என்ற ஒரு தொடரைக் கட்டித் தத்துவ நூற்களில் விட்டிருந்தார்கள். சிவஞான போதத்திற்கு உரை எழுதவந்த சிவஞான யோகிகள் அங்கு இந்த குடாகாயத்தைக் கண்டாராதலின் அது பற்றிய புனைசுருட்டை விளக்க எண்ணினார். குடம் என்ற தமிழ்ச் சொல்லும், ஆகாயம் என்னும் வடசொல்லும் புணரவேண்டுமானால், குடவாகாயம் என்று புணர வேண்டும். ஆதலால் யோகிகள் குடாகாயம் என்று புணர்ந்துள்ள இது மரூஉ என்று கூறி, குளம் ஆம்பல் என்பன குளாம்பல் என்று புணர்ந்துள்ளதையும் எடுத்துக் காட்டினார். இதனால் வடவர், குடம் என்பதற்கு வடமொழிச் சட்டை போட்டதும், அது தமழ்ச் சொல்தான் என்று சிவஞான யோகிகள் அந்தச் சட்டையைக் கிழித்-தெறிந்ததும் உலக வெளிச்சமாகி விடவே வடவருக்கு வந்தது எரிச்சல். சிவஞான யோகிகள் மேல் படை எடுக்க வேண்டும், நேரடி நடவடிக்கையில் நுழைவாரா வடவர்? அதுதானே இல்லை! கோடரிக் காம்பொன்று தேடினார்கள், சிவஞான யோகிகளைத் தொலைக்க.
இதற்குமுன் வைத்தியநாத தேசிகர் என்ற ஒருவர் இலக்கண விளக்கம் என்பதொரு நூல் எழுதியிருந்தார். அந்நூல் வடமொழியினின்றே தமிழ் வந்தது என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. அதைச் சிவஞான யோகிகள் இலக்கண விளக்கச் சூறாவளி என்ற நூலின் வாயிலாக மறுத்துத் சிதறடித்தார். உள்ளதைச் சொன்னால் நொள்ளையனுக்கு நோக்காடு தானே? வைத்தியநாத தேசிகர்க்குச் சிவஞான யோகிகள் மேல் பகை உணர்ச்சி இருந்து கொண்டிருந்தது. குடம் தமிழ்ச் சொல்லே என்று எடுத்துக்காட்டியதற்காக அச்சிவஞான யோகிகள் மேல் ஏவினார்கள் வடவர், கோடாரிக் காம்பாகிய வைத்தியநாத தேசிகரை.
எடுத்தார் தேசிகர் இறகை! குடம் என்பது வடசொல்லே! என்று எழுதினார். இப்போது வண்ணாஸ்த்ரிதான் வண்ணாத்தி ஆயிற்று என்று தெ.பொ.மீ. சொன்னது போல, சிவஞான யோகிகளின் உண்மைக் கருத்தைத் தேசிகரின் இந்த மறுப்பு அசைத்து விடவில்லை. ஆயினும், தமிழர்களுக்கு அது தமிழ்ச் சொல்லே என்பதை நன்றாக விளக்க வேண்டுமே என்ற அருள் உள்ளத்தால், சிவஞானயோகிகளின் மாணவராகிய சபாபதி நாவலர் தாம் எழுதிய திராவிடப் பிரகாசிகை வாயிலாக ஒரு விளக்கம் தரலானார். அது வருமாறு:
குடம் தமிழ்ச் சொல் ஆதல் குடந்தம்பட்டு, குடக்கூத்து, குடமுழா என்றற்றொடக்கத்தாற் பயின்று வரும் தமிழ் வழக்குரைகளால் அறிக. இன்னும் குடம் தமிழ் இயற்சொல் என்பது குடந்தம்பட்டு எனவரும் திருமுருகாற்றுப் படைத் தொடர்க்கு வழிபட்டு என்றும், வணக்கம் பட்டு என்றும் உரைப்பர் என்றும், ‘குட’ என்பது ‘தட’ என்பது போல வளைவு உணர்த்துவதோர் உரிச்சொல் ஆதலின் அதனடியிற் பிறந்த பெயருமாம் என்றும் நச்சினார்க்கினியார் உரை கூறுதலால் அறிக.
இதுவரைக்கும் கூறியவற்றால், சிவஞான யோகிகளும், நச்சினார்க்கினியரும், குடம் தமிழ்ச்சொல் என்பதையும், மேலும் காரணப் பெயர் என்பதையும் விளக்கியது அறிவிக்கப்பட்டது. அதுபற்றி இன்னும் சில கூற விரும்புகின்றோம். தட என்பது வளைவுக்குப் பெயர்.
அவற்றுள், ‘தட என்கிளவி கோட்டமும் செய்யும்’ என்றது காண்க. அதுபோலவே ‘குட’ என்பதும் வளைவுக்குப் பெயர் என்க. வளைவு பெற்றுள்ள காரணத்தால் குடம் காரணப் பெயர். குடம் போல் அதாவது உடல் வளைந்து வணங்குதற்கும் குடந்தம் என்பர் தமிழ் சான்றோர் என்பது காட்டப்பட்டது.
இனி, இவ்வாறு வளைவின் பெயரால் வணங்குதலைக் குறிப்பதென்பது தமிழ் நூற்களில் பெருவரவினதாகும். தோட்டி என்பது யானை செலுத்துவோன் வைத்திருக்கும் கருவி, அது வளைந்திருக்கும் என்பது யாவரும் அறிந்ததே. அதனால் வணங்குதலைத் தோட்டி என்ற பெயராலும் குறித்துள்ளார்கள் பழந்தமிழ்ச் சான்றோர்.
(குயில், குரல்: 1, இசை: 22, 28-10-58)
-உண்மை,1-15.3.16
புரட்சிகவிஞர் பாரதிதாசன்
பகுதி
இஃது பகுரிதி என்ற வடசொல்லின் சிதைவென்று வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரி முதலிய பார்ப்பனர் எழுதியுள்ளார்கள். இது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் செயலுக்கு ஒப்பாகும். பகு என்ற முதனிலை அல் இறுதிநிலை பெற்றுப் பகல் என்று வரும். அப்பகல் என்பது வேறுபாட்டால் பால் எனவும் வரும். “பால்வரு பனுவலின்” (கம்ப.யுத்த.விபீ.78) என்பதிற்போல, அப் பகு என்பதே அகரச் சாரியையும், வு இறுதிநிலையும் பெற்றுப் பகவு என வரும். அதுவே பு இறுதிநிலை பெற்றும், தல் இறுதி நிலை பெற்றும், தி இறுதி நிலை பெற்றும் பகுப்பு, பகுதல், பகுதி எனவும் வரும். பகுதி முதலியவாக இங்குக் காட்டப்பட்ட அனைத்துக்கும் பிரிவு என்பதே பொருள்.
எனவே, பகுதி என்பது தூய தமிழ்ச் சொல்லாதல் வெளிப்படை. இவ்வாறுள்ள தமிழ்ச் சொற்களையும் வடசொல் என்று கூறும் வடவர் எண்ணம் நாம் அறிந்ததேயாகும். தமிழையே வடமொழிச் சேற்றில் புதைத்து அதன் வாயிலாகத் தமிழரை ஒழித்துக் கட்டுவதே அவர் எண்ணம் என்பது தெளிவு.
அவர்களின் இந்தத் தீய-கொடிய முயற்சியானது அவர்கட்குப் பயனளித்தே வந்துள்ளது. வண்ணாஸ்த்ரீ என்பது தான் வண்ணாத்தி என்றாயிற்று எனக் கூறுகின்ற மடையர்களையும் அவர்கள் உண்டாக்கி விடவில்லையா?
கடிகை
கடிகா என்ற வடசொல்லினின்று கடிகை வந்தது என்று கூறி இழுக்குவார்கள் வடவர்.
கடி என்பது கடிகை எனத் திரிந்தது.
கடி என் கிளவி விரைவை உணர்த்தும். அது நாட்காலத்தினும் விரைந்து தீர்வது என்ற பொருளில் அமைந்துள்ளது. இதனையும்,
“கடிகைக் கிளவி நாழிகை கபாலத்திருநாள்
கண்டமும் துண்டமும் இசைக்கும்’’
என்ற பிங்கலந்தை நூற்பாவையும் நோக்குக. கடிகை என்பது நாட்காலத்தின் நண் பகுதிக்கும் ஆகும் என்பதை இதனின்று அறியலாம்.
இனி, கடி என்பது கடிகை எனத் திரிதலுண்டா என்பார்க்கு தொல் 383ஆம் நூற்பாவின் உரையே பதில் கூறும்.
எனவே கடிகை என்பது தூய தமிழ்ச் சொல்லே எனக் கடைபிடிக்க.
- (குயில்: குரல்: 1, இசை: 28, 9-12-58)
பிச்சை
இது பிக்ஷா என்ற வடசொற் சிதைவு என்று பார்ப்பனர் எழுதியும் பேசியும் வருகின்றனர்.
பித்தை_-ஊண் நிலையில் ஏற்பட்ட தவறுதலையும், மன நிலையில் ஏற்பட்ட தவறுதலையும் குறிப்பது.
பித்தை என்பது பிச்சை ஆனது போலி. ஆதலின் பிச்சை என்பது வந்தவர் மொழியன்று.
- (குயில்: குரல்: 1, இசை: 29, 16-12-58)
தச்சன்
இது தக்ஷன் என்ற வடசொல்லின் சிதைவென்று கம்பர் மாரீசன் வதைப்படலம் 2ஆம் பாட்டின் விரிவுரையில் விரிக்கின்றார் வை. மு. கோ.
தைத்து முதனிலைத் தொழிற்பெயர். அது தச்சு என்று ஆனபோது, அன் ஆண்பால் இறுதிநிலை பெற்றுத் தச்சன் ஆனது.
இனித் தச்சு = தைத்து - என்பது ஒன்று சேர்த்தல். பொருத்தல் என்னும் பொருளு-டையது. ஓர் உருவின் பல்லுருப்புகளையும் சேர்ப்பது- பொருத்துவது-என்ற காரணத்தால் அப்பெயர் வந்தது. இதை வடசொல்லார் சிற்பம் என்பார்.
எனவே தச்சு, தச்சன் செந்தமிழ்ச் செல்வங்களே எனக் கடைபிடிக்க.
- (குயில்: குரல்: 1, இசை: 29, 16-12-58)
-உண்மை,16-.31.3.16

ஞாயிறு, 3 ஜூலை, 2016

தை முதல் நாளே தமிழாண்டு

தை முதல் நாளே தமிழாண்டுத் தொடக்கம் எனும் கருத்துக்கு ஒப்புரவளிக்கும் வள்ளலார்


தை முதல் நாளே தமிழாண்டுத் தொடக்கம் எனும் கருத்துக்கு ஒப்புரவளிக்கும் வள்ளலார்
ஓர் ஆண்டினை வடபுலம், தென்புலம் என இரண்டு மண்டலங் களாகப் பிரித்துள்ளனர்.
வடபுலம் (உத்தாரயணம்) - தை முதல் ஆறு மாதங்கள் பகற் பொழுது அதிகம்.
தென்புலம் (தட்சிணாயணம் -  ஆடி முதல் ஆறு மாதங்கள் இராப் பொழுது அதிகம்.
இதனை ஒளிப்பக்கம், இருட்பக்கம் என்பர். ஒளி -_ அறிவுடைமை, ஞானம்; இருள் _ அறியாமை, அஞ்ஞானம் -ஒளி _ சுவர்க்கம்; இருள் _ நரகம்.
இருளினின்றும் நாம் ஒளிக்குச் செல்ல வேண்டும். அஞ்ஞானத் தினின்றும் ஞானத்திற்குச் செல்ல வேண்டும். அஞ்ஞானம் நீங்கி ஞானம் உதிக்க வேண்டும். அறியாமை அகன்று அறிவுடைமை வரவேண்டும். எனவே, அறிவுடைமைக்குச் சான்றாக விளங்கும் ஒளிப்பக்கத் தொடக்க நாள், தை மாதத் தொடக்க நாளே!
இதனை வலியுறுத்தியவர் வள்ளலார். புரட்சித் துறவி வள்ளலார் எனும் நூலில் இக்கருத்து விளக்கப்பட்டுள்ளது.

தை முதல் நாளே தமிழாண்டுத் தொடக்கம் உலகப் பரிந்துரை மாநாடு, கோலாலம்பூர்




இலக்கியத்தில் - தை மாதத்தின் சிறப்பு


பொங்கல் விழா நாளையே தமிழர்கள் புத்தாண்டுத் தொடக்கமாகப் பல்லாண்டுக் காலமாகக் கொண்டாடி வந்துள்ளனர் என்பதற்கு ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கழக இலக்கியங்களில் சான்றுகள் உள.
தைஇத் திங்கள் தண்கயம் படியும் -_ நற்றிணை
தைஇத் திங்கள் தண்ணிய தரினும் _- குறுந்தொகை
தைஇத் திங்கள் தண்கயம் போல் _ புறநானூறு
தைஇத் திங்கள் தண்கயம் போல _ ஐங்குறுநூறு
தையல் நீராடி தவம் தலைப்படுவாயோ _ கலித்தொகை
தமிழ்ப் புத்தாண்டைப் பற்றிய குறிப்புகள் _ மு. மணிவெள்ளையன்
தீய்ந்த தீபாவளி வந்தாலென்ன? காய்ந்த கார்த்திகை வந்தாலென்ன? மகராசன் பொங்கல்  வரவேண்டும் என்பது நாட்டுப் புற நடைமுறை மொழி வழக்கு.
பண்டைத் தமிழர் பொங்கல் விழா கொண்டாடும் வெற்றியைப் பற்றிப் புறநானூற்றிலே ஒரு பாடல் உண்டு. தொன்மையுடைய பொங்கலைப் பற்றிக் கருவூர் கந்தப்பிள்ளை சாத்தனார் என்ற புலவர் பாடியுள்ளார். பாடல் 168.
தைப் பிறந்தால் வழி பிறக்கும் தை மழை; நெய் மழை -_ என்பன போன்ற பழமொழிகள் தமிழர் புத்தாண்டு வரவேற்பை உறுதிப் படுத்துவனவாகும்.

- கலைஞர் கடிதம்
சித்திரையல்ல தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் - தை முதல் நாளே தமிழ்ப் புத் தாண்டின் தொடக்கம் என்று தந்தை பெரியார் மற்றும் தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் உள்ளிட்ட புலவர் பெரும் மக்களின் உணர்வை ஆரியம் மதிக்குமா? மிதிக்குமா என்று கலைஞர் அவர்கள் முரசொலியில் இன்று (9.4.2012) எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அக்கடிதம் வருமாறு:
உடன்பிறப்பே,
நான் நேற்றையதினம் எழுதிய  கடிதத்தில்,  மறைமலை அடிகளார் தலைமையில்  தமிழ்ப் புலவர்கள் 500 பேர் கூடி முடிவெடுத்த தைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு  என்பதை ஏற்க மறுத்து ஆரியமாயைக்கு கைலாகு கொடுத்து விட்டார் ஜெயலலிதா!  - விரைவில் வருகின்ற சித்திரை முதல் நாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டுமென்று அரசிடமிருந்து வாய்மொழி ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறதாம் என்று எழுதியிருந்தேன். ஆனால் நேற்று மாலையிலேயே  ஏடு களில் வந்த செய்தி,  வாய்மொழி ஆணையாக அல்ல, அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ள செய்தி,  சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு தினமாகும்  என்றும் அந்த நாளை மிகமிகக் கோலாகலமாக விமரிசையாகக் கொண்டாட வேண்டுமென்றும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்றும்;  தமிழ் வளர்ச்சித் துறை சார்பில்  ஏப்ரல் 13ஆம் தேதியன்று இதற்காக நடத்தப்போகும் விழாவில் முதல் அமைச்சரே பங்கேற்று விருதுகளை வழங்கப் போகிறார் என்றும் சொல்லப்பட்டுள்ளன.
தி.மு.க.வின் முக்கிய திட்டங்களுக்கு முற்றுப் புள்ளியா?
நான் நேற்றையதினம் எழுதியிருந்ததைப் போல கடந்த மே திங்களில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுப் பொறுப்புக்கு வந்தது முதல், அதுவே நிரந்தர மான  வெற்றி - இனி தோல்வி என்பதே இல்லை என்ற இறுமாப்பில்;  தி.மு.கழக ஆட்சியில் நடைபெற்ற முக்கியத் திட்டங்களுக் கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை தமிழ் நாட்டு மக்கள் நன்கறிவார்கள்.    23-1-2008 அன்று தமிழகச் சட்டப் பேரவையில்  மேதகு ஆளுநர் அவர்கள் தனது உரையிலே செய்த அறிவிப்பில், பெரும்புலவரும், தனித்தமிழ் இயக்கத் தைத் தோற்றுவித்தவருமான மறைமலை அடிகளார் தலைமையில்  அய்நூறுக்கும் மேற்பட்ட  புலவர் பெரு மக்கள்,  1921ஆம் ஆண்டு  சென்னை, பச்சை யப்பன் கல்லுரியில் ஒன்றுகூடி,  தமிழர்களுக்கென்று ஒரு தனி ஆண்டு  தேவை என்று கருதி, அய்யன் திருவள்ளுவர் பெயரில்  தொடர் ஆண்டு ஒன்றி னைப் பின்பற்றுவதென்றும்,  அதையே தமிழ் ஆண்டு  எனக் கொள்வதென்றும்,  திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு.31 என்றும் முடிவெடுத்தார்கள்.  அந்தக் கருத்தினை, 37 ஆண்டுகளுக்கு முன்பே,  மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஏற்றுக் கொண்டு,  1971ஆம் ஆண்டு முதல்  தமிழ் நாடு அரசு நாட்குறிப்பிலும்,  1972ஆம் ஆண்டு முதல்  தமிழ்நாடு அரசிதழிலும்  நடைமுறைப்படுத்திட ஆணை பிறப்பித்தார்.   திருவள்ளுவர் ஆண்டு  பிறக்கும் தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பது, ஒட்டுமொத்த மாக  எல்லாத் தமிழ் அறிஞர்களும்  ஒப்புக் கொண் டுள்ள உண்மை என்பதால்;  தைத் திங்கள்  முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம்  என அறிவித்து நடைமுறைப்படுத்திட  இந்த அரசு முடிவு செய்துள்ளது. எனவே, பொங்கல் திருநாளைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடி வரும் தமிழ் நாட்டு மக்கள்;  இனி -  தமிழ்ப் புத்தாண்டு பிறந்த நாளாகவும் இணைத்து இந்நாளை இரட்டிப்பு  மகிழ்ச்சியுடன்  கொண்டாடும் வகையில்,  வாழை, மா, பலா என முக்கனித் தருக்களை நாட்டி; வண்ண வண்ணக் கோலங்களிட்டு; வரிசை விளக்குகளால் ஒளியுமிழ் இல்லங்கள் புது எழில் காட்டிட;  புத் தாடை புனைந்து  தமிழ்மானம், தன்மானம் போற் றிப் பாடியும், ஆடியும்;  சமத்துவ உணர்வு பரப் பியும்;  தமிழ்ப் புத்தாண்டு இதுவெனத் துள்ளும் மகிழ்ச்சியால் அன்பை அள்ளிப் பொழிவர் என பலத்த கைதட்டலுக்கிடையில் அறிவித்தார்.   தி.மு. கழக ஆட்சியில் செந்தமிழரெல்லாம் பெருமகிழ்ச் சியும், பெருமிதமும்  கொள்ளத்தக்க வகையில் செய்யப்பட்ட அறிவிப்பு இது என்ற ஒன்று போதாதா ஜெயலலிதாவுக்கு!   உடனே அதற்கு எதிர் நடவடிக்கையைத் தொடங்கி விட்டார்.
தமிழர்களின் முடிவு
மறைமலை அடிகள் தலைமையில்  தமிழ்த் தென்றல் திரு.வி. கல்யாணசுந்தரனார்,  தமிழ்க் காவலர்  கா. சுப்பிரமணியப்பிள்ளை,  சைவப் பெரி யார்  சச்சி தானந்தப் பிள்ளை,  நாவலர் ந.மு.  வெங் கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்  உள் ளிட்ட அறிஞர்  பெருமக்கள் எல்லாம் கலந்து கொண்ட  அந்தக் கூட்டத்தில் அவர்கள் எடுத்த முடிவுகள் மூன்று :-
1.    திருவள்ளுவர் பெயரில்  தொடர் ஆண்டா கப் பின்பற்றுவது;
2.    அதனையே  தமிழாண்டு  எனக் கொண்டாடுவது;
3.    வழக்கத்தில்  திருவள்ளுவர் காலம் கி.மு. 31ஐக் கூட்டினால் திருவள்ளுவராண்டு வரும் என்பதனை மேற்கொள்வது  என்பனவாகும்.
தந்தை பெரியார் பங்கேற்ற மாநாட்டில்....
அதன் பிறகு 1939ஆம் ஆண்டு  திருச்சியில் அகில இந்தியத் தமிழர் மாநாடு  நாவலர் சோமசுந்தர பாரதியார்  தலைமையில் கூடியது.  அதில்,  தந்தை பெரியார், கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் உமா மகேசுவரனார்,  பேராசிரியர் கா.சுப்பிரமணியம், தெ.பொ. மீனாட்சிசுந்தரனார்,  திரு.வி.க., மறைமலை அடிகளார்,  பி.டி. இராஜன், ஆற்காடு ராமசாமி முதலியார்,  புரட்சிக் கவிஞர்  பாரதிதாசன்,  பட்டுக் கோட்டை அழகிரி உட்பட பலரும் பங்கேற்றனர். அந்த மாநாடும்  தை முதல் நாளே  தமிழ்ப் புத்தாண்டு என்றும்,  பொங்கல் திருநாளே  தமிழர் திருநாள் என்றும் கூறியது. திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், இளவல் வீரமணி அவர்களோ  தைத் திங்கள் முதல் நாளே  தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்ற நமது நீண்ட நாள் கோரிக்கைக்கு  வெற்றி கிடைத்துள்ளது.
தமிழர் பண்பாட்டு வரலாற்றுத் திசையில்  புதியதோர் மறுமலர்ச்சி அத்தியாயம் இது.  பாராட்டுகிறோம், மகிழ்ச்சி அடைகிறோம்  என்று  குறிப்பிட்டிருந்தார்.
ஆளுநரின் அறிவிப்பு வெளிவந்த மறுநாளே  தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் விடுத்த அறிக்கையில்  தொன்மைக் காலம் தொட்டே சமயம் சார்ந்தும், இயற்கை வாழ்வு சார்ந்தும், மண்ணும் மனிதர்களும் சார்ந்தும்,  விவசாய வாழ்வு சார்ந்தும்  தைத் திங்கள் முதல் திருநாளே  தமிழர் வாழ்வு சார்ந்த எழுச்சியும் மகிழ்ச் சியும் ஊட்டுகின்ற திருநாளாகும்.  மறைமலை அடிகளார்  போன்ற மூத்த தனிப்பெரும் தமிழ் அறி ஞர்கள்  தைத் திங்கள் முதல் நாளைத் தொடக் கமாய்க் கொண்டு அய்யன் திருவள்ளுவர் பெயரில்  தமிழ்ப் புத்தாண்டாய் அறிவித்ததை நடை முறைப் படுத்த உள்ள முத்தமிழறிஞர் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு நன்றி, பாராட்டுக்கள் என்று தெரிவித்திருந்தார்.
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் விடுத்த அறிக்கையில், தைத்திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டின்  தொடக்க நாள் என்று ஆளுநர் உரையில் கலைஞர் அரசு அறிவித் திருப்பது கண்டு உணர்வுமிக்க  தமிழர்கள் கொண்டாடிக் கூத்தாடு கிறார்கள். எல்லா தேசிய இனங் களுக்கும் அழிக்க முடியாத சில அடை யாளங்கள் உண்டு.   தமிழர் களுக்கு  நில அடையாளம் இருக்கிறது;  இன அடை யாளம் இருக்கிறது;  ஆனால் கால அடையாளம் மட்டும்  குழப்பத்தில் இருந்தது.   அந்தக் குழப்ப இருள் உடைந்து விடிந்து இன்று வெளிச்சம் வந்திருக் கிறது.
அய்யன் திருவள்ளுவரை கருத்துல கத்தின் அளவுகோலாய்க் காட்டியது  திராவிட இயக்கம்.   இன்று காலத்தின்  அளவுகோலா கவும் திருவள்ளுவரைக் கருதச் செய்திருக் கிறது கலைஞர்  அரசு.  இது சரித்திரத்தைச் சரி செய்யும் சரித்திரமாகும்  என்று எழுதி யிருந்தார்.
மலேசியா நாட்டில்  தமிழர்கள் தற்போது தை முதல் நாளையே புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறார்கள். டாக்டர் மு.வரதராசனார் அவர்கள், முன் காலத்தில்  வருடப் பிறப்பு  சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை.  தை முதல் நாளைத்தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள்  கொண்டாடி னார்கள்.   அந்த நாளில் புதிய ஆடைகளை வாங்கி உடுப்பார்கள்.  தெருவில் புது மண் போட்டு, செம்மண் இட்டு, ஒழுங்கு செய் வார்கள்.  ஊரெல் லாம் திருவிழா நடத்துவார்கள்.   இப்படி நகரங் களில் புத்தாண்டு பிறப்பாகப் பொங்கல் கொண் டாடுகிறார்கள்  என்று விளக்கியுள்ளார்.
ஆதாரம் இல்லையா?
ஆனால் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 23-8-2011 அன்று பேரவையில் கூறும்போது, தமிழ்ப் புத்தாண்டை தை மாதம் தொடங்க எந்த ஆதார மும் இல்லை. ஆனால் சித்திரையில் தொடங்குவ தற்கு பல ஆதாரங்கள் உள்ளன.  கருணாநிதி தன் சுய விளம்பரத்துக்காக, மக்கள் மனஉணர்வை புண் படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்றார். கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட இந்த நல்ல முயற்சியில் நஞ்சைக் கலந்து நசுக்குவதைப்போல்,  தற்போது ஒரு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.   தமிழ்நாட்டுச் சரித்திரத்திலே  தமிழையே பகைத்துக் கொள்கிற  -  செம்மொழி என்றாலே வெறுக்கிற  -  ஒதுக்குகிற  - புறக்கணிக்கிற  பெரும் பிற்போக் குத் தனமான ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.   அந்தக் காலத்திலும் இப்படி  தமிழையே வெறுக் கின்ற புலவர்கள் ஓரிருவர் இருந்திருக் கிறார்கள்.  அதைப் பற்றி நான் அப்போதே ஒரு கதையின் மூலம் விளக்கியிருக்கிறேன்.
தமிழக அரசின் அறிவிப்பு வந்த அந்த நேரத்திலேயே  மிகச் சிறந்த  தமிழ்க் கல்வெட்டு  ஆய்வாளரும் அறிஞருமான   ஐராவதம் மகாதேவன் அவர்கள்,  இன்றைய  பஞ்சாங்கங்களை  வான நூல், பருவங்களின் சுழற்சி ஆகிய வற்றின்  தற்கால நிலையை அறிவியல்  கண்ணோட்டத்துடன் -  ஆராய்ந்து திருத்திக்கொள்ள நமக்குத் துணிவு இல்லையெனில்,  அறுவடை நாளாகிய  பொங்கல்  திருவிழாவைப் புத்தாண்டு  என்று  கொண்டாடு வதில் என்ன தவறு? என்றார்.
தந்தை பெரியார், கி.வீரமணியின் கண்டனம்
தி.மு.கழக ஆட்சியில் ஆளுநர் உரையிலே செய்யப்பட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து அதே ஆண்டில் 29-1-2008 அன்று  2008ஆம் ஆண்டு தமிழ்நாடு  தமிழ்ப்புத்தாண்டு  சட்டமுன் வடிவை பேரவை முன் நான் அறிமுகம் செய்தேன்.
1-2-2008 அன்று  இச்சட்ட மசோதா  மீதான விவாதம் நடை பெற்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈ.எஸ்.எஸ். ராமனும், பா.ம.க. சார்பில்  கி.ஆறுமுகமும்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் என். நன்மாறனும்,  இந்தியக் கம்யூனிஸ்ட் சார்பில்  வை.சிவபுண்ணிய மும், ம.தி.மு.க. சார்பில் அப்போது அங்கேயிருந்த  மு.கண்ணப்பனும்,  விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கு.செல்வமும்  அந்த மசோதாவினை வரவேற்றுப் பேசி  அது நிறைவேறியது. இப்படி யெல்லாம் போற்றப்பட்ட, பாராட்டப் பட்ட ஒரு முடிவு நடைமுறைப்படுத்தப்பட  தி.மு. கழக  ஆட்சியிலே  சட்டமாகக்கொண்டு வரப்பட்டு  2008 ஆம் ஆண்டு முதல் செயல் பட்டுவந்தது.   தி.மு.கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது என்றால் அது அப்படியே உயிரோடு  இருக்கலாமா  என்று  எப்போதும் எண்ணுகின்ற அம்மையார் ஜெய லலிதா ஆட்சியிலே அது மாற்றப்பட்டுவிட்டது.   அவரது அந்த அறிவிப்பினை   பா.ஜ.க. அப்போதே  அவசர அவசரமாக  வரவேற்றது.   அதிலிருந்தே   இந்தத் தீர்மானத்தின் உள்நோக்கத்தைப் புரிந்து கொள்ளலாம்.  அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா வினால் கொண்டுவரப்பட்ட அந்த   மசோதாவை அவையிலே இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும்  எதிர்த்தன  என்ற தகவலை செய்தியாளர்கள் என்னிடம் தெரிவித்து அதுபற்றி கருத்துக் கேட்ட போது அவர்களின் தமிழ் உணர்வுக்குத் தலைவணங் குகிறேன் என்று அப்போதே பதில் கூறினேன்.   அதன் பின்னர்,  பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்; அ.தி.மு.க. அரசின் அந்த முடிவு  தமிழ் உணர்வாளர்களை வேத னைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்றும்  திடீரென்று  தமிழ்ப் புத்தாண்டை  மீண்டும் சித் திரை மாதத்துக்கு மாற்றுவது முறையல்ல என்றும்  அது  மிகப் பெரிய வரலாற்றுப் பிழையாக அமைந்து விடும் என்றும் தெரிவித்தார்.
தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களும் இந்த முடிவினை வன்மை யாகக் கண்டித்து செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்திருக்கிறார். அவர்களுடைய  இந்தத் தமிழ் உணர்வுக்கு நான் அப்போதே நன்றி தெரிவித்திருக் கிறேன்.
நித்திரையில் இருக்கும் தமிழா!
இன்னும் சொல்ல வேண்டுமேயானால்  புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களே, நித்திரையில் இருக்கும் தமிழா!  சித்திரையல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே  அறிவுக் கொவ்வாத அறுபது  ஆண்டுகள் தரணியாண்ட தமிழருக்கு  தைம்முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!
என்று பாடியதையும் நினைவு கூர விரும்புகிறேன்.   ஆனால்  தமிழ்நாட்டு மக்கள் சற்று ஒரு கணம் எண்ணிப் பார்க்காமல்   செய்த தவறின் காரணமாக எப்படியெல்லாம் கேடுகள் தமிழுக்கும், தமிழகத் திற்கும் நேர்ந்து வருகின்றன
என்பதைக் காணும் போது  நெஞ்சம் விம்முகிறது! மறைமலை அடிகளா வது மண்ணாங் கட்டியாவது! பாரதிதாசனாவது பலநூறு புலவர்களாவது! இவர்களையெல்லாம் மதிக்க வேண்டுமென்று என்ன இருக்கிறது! ஆரியம், இவர்களையும் இவர்களது கொள்கை களையும் தமிழ் உணர்வுகளையும் காலில் போட்டு மிதிக்குமே தவிர மதிக்கவே மதிக்காது என்பதற்கு தமிழக அரசு இப்போது எடுத்துள்ள இந்த நிலைதான் உதாரணம்! புத்தியுள்ள தமிழா; இதை நீ புரிந்துகொண்டால் சரி!
அன்புள்ள,
மு.க.
-விடுதலை,9.4.12