பக்கங்கள்

செவ்வாய், 9 பிப்ரவரி, 2021

*மொழி ஆராய்ச்சி - தந்தை பெரியார்*




தமிழரசு, தமிழ்நாடு, தமிழ்மொழி என்று கூப்பாடு போடுகின்றார்களே! நாமென்ன தமிழுக்கு விரோதிகளா! தமிழ் வேண்டாமென்கிறோமா? தமிழ் மிலேச்ச மொழி என்று கூறுகிறோமா? அன்று தமிழ்மொழியைக் கொல்ல, கொடிபிடித்து, இந்தியை ஆதரித்து நமக்கெதிராகக் கொடி தாங்கித் திரிந்த தோழர்கள்தானே இன்று தமிழ், தமிழ் என்று கூப்பாடு போடுகின்றனர். இவர்கள் ஆரியத்திற்குச் சோரம் போயிருந்த அந்தக் காலத்திலும் கூட நாங்கள் தானே தமிழ் வளர்க்கப் பாடுபட்டோம். இதை யாராவது மறுத்துக் கூற முடியுமா?

*பொறுப்புள்ள புலவர் போட்டியிடட்டுமே*

நானும் ஒரு தமிழன்தானே. நான் பேசுவது கன்னடம் என்று சிலர் கூறலாம். நான் பேசும் மொழியை ஒருவன் கன்னடம் என்று கூறினால் அவன் தமிழ் அறியாதவன் என்றுதான் நான் கூறுவேன்.
தகுந்த, பொறுப்புள்ள, தன்மானமுள்ள எந்தப் பண்டிதர் வேண்டுமானாலும் முன் வரட்டும். என் சக்திக்கு ஏற்ற அளவுக்கு நான் பந்தயம் கட்டுகிறேன். அவர் மறுத்துக் கூறட்டுமே நான் பேசுவது தமிழல்ல, கன்னடம் என்று, நான் பேசும்மொழி தமிழ்தான். தமிழறியாததால் நீதான் அதைக் கன்னடம் என்று கூறுகிறாய். இதேபோல் தெலுங்கன் பேசுவதும் தமிழ்தான். அதைத்தான் தமிழ் தெரியாததால் நீ தெலுங்கென்று கூறுகிறாய், மலையாளி பேசுவதும் தமிழ்தான் நீதான் அதைத் தமிழ் தெரியாததால் மலையாளம் என்று கருதுகிறாய் என்று நான் கூறுகிறேன்.
தமிழ், தெலுங்குகளை வேறு என்போன் தமிழனே அல்ல

தமிழன், தெலுங்கன், கன்னடியன், மலையாளி இவர்கள் பேசுவதெல்லாம் தமிழ்தான். இவர்கள் பேசுவது வெவ்வேறு மொழியென்று கூறுபவன், தமிழ் மகனல்லன். ஆரியத்திற்குச் சோரம் போனவன்; நம்மைக் காட்டிக் கொடுத்து ஆரிய ஆதிக்கத்துக்கு ஆக்கம் தேட முயற்சிப் பவன். தமிழர் என்று தம்மை இவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், கருதிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறலாமே தவிர, இவர்களைத் தமிழ் அறிந்தவர்கள் என்று நாம் ஒப்புக்கொள்ள முடியாது. திராவிட மொழி எது என்று கேட்கப்படுகிறது. திராவிட மொழி தமிழ் தவிர வேறு இருக்க முடியாது. ஆரியருக்கும் வடமொழி தவிர, வேறு மொழி பிடிக்கவும் செய்யாது. தமிழை நாம் பராமரிக்க மறந்துவிட்டோம். அதை நாம் லட்சியப் படுத்தாமல் கூடுமளவுக்கு அலட்சியப்படுத்தி விட்டோம். நமது பண்டிதர்கள் எல்லாம் தமிழ் வல்லவர் என்று தம்மைக் கூறிக்கொண்டு, தம்மால் முடியுமளவுக்குத் தமிழை ஒழிக்க எதிரிக்குக் கையாளாயிருந்தார்களே ஒழிய, தமிழை வளர்த்தார்களில்லை. தமிழுக்கு எமனாக அன்று தொட்டு இருந்து வருபவர்கள் இந்தப் பண்டிதர் கள்தான். நாட்டுப்பற்று, மொழிப்பற்று என்று கூறி பயனற்ற சில கூட்டத்தார், எதைச் சொன்னால் பாமரர்கள் ஏமாறு வார்களோ, அதைக் கூறி நம் முயற்சியைக் கெடுக்கிறார் களே ஒழிய, உண்மையாகத் தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் பாடுபடுபவர் திராவிடர் கழகத்தார்தான். நாங்கள் திராவிட நாடு, திராவிட மொழி என்று கூறும்போது மொழி போச்சு, மொழி போச்சு என்று கூப்பாடு போடும் தோழனே! எங்கள் முயற்சியால் எது போகும்? உன் அறியாமை வேண்டுமானால் போகுமே ஒழிய, உண்மையில் தமி ழுக்கோ, தமிழ்நாட்டிற்கோ கடுகளவேனும் கேடு வருமா? நமது அரசாங்கத்தாருக்கு இன்று ஏற்பட்டுவிட்ட மொழிப் பற்று, நம் மொழியைக் கெடுக்க, கொலை செய்ய ஆரம் பித்து விட்டது கண்டு குலை நடுக்கமெடுக்கிறது.

*தமிழைக் கெடுக்க புது முயற்சி*

மொழிவாரி மாகாணம் பிரிக்கப்படப் போகிறது. அதுதான் பிரிந்து போகட்டும் என்றால், மொழிவாரி வித்வான்கள் நியமிக்கப்பட்டு, மொழிவாரி இலக்கணங் களும் செய்யப்பட்டு திராவிட மொழியைப் பாழாக்கத் திட்டம், தீட்டியாகி விட்டதே! இந்நான்கு மொழிகளும் ஒரே மொழிதான் என்ற கருத்து மக்களிடையே செல் வாக்குப் பெற ஆரம்பித்ததும், ஆரிய ஆதிக்கம் அதைக் கெடுக்க, அவை ஒன்றல்ல தனித்தனி என்று பிரித்துக்காட்ட முற்பட்டு விட்டதே. நம்மைக் காட்டிக் கொடுக்கும் பண்பு வாய்ந்த தமிழ் மந்திரியும் தம் போன்ற விபீஷணர்களையே ஆஸ்தான வித்வான்களாக்க முயன்று வருகிறார். அவர் கள் இனி தம்மால் ஆனமட்டும் கேடு செய்வார்கள்.

*ஒன்றே நான்காகி உள்ளது*

பண்டிதர்களில் சிலர் இவை நான்கும் ஒன்றிலிருந்து வந்தவை, ஒரே தாய் வயிற்றில் பிறந்து வளர்ந்த நான்கு அக்கா, தங்கைகள் என்று கருதுகிறார்கள். இது பித்தலாட் டம் என்பதுதான் என் கருத்து. இத்திராவிடத் தாய்க்குப் பிறந்தது ஒரே மகள் தான், அது தமிழ்தான். அந்த ஒன்றைத்தான் நாம் நாலு பேரிட்டு அழைக்கிறோம். நாலு இடத்தில் பேசப்படுவதால் நான்கு பெயரில் வழங்குகிறதே ஒழிய நாலிடத்திலும் பேசப்படுவது தமிழ் ஒன்று தான். நாலும் ஒன்றிலிருந்து உண்டானவை என்று எண்ணுவது தான் தவறு. ஒன்றுதான் நாலாக நமது அறியாமையால் கருதப்பட்டு வருகிறது. இதை நிரூபித்துக் காட்ட என்னால் முடியும்.

*ஒரே மக்கள் பலஜாதி,*

*ஒரே மொழி பலமொழி*

நாலு தனியிடங்களில் வசித்து வந்த மக்கள் போக்கு வரத்துத் தொடர்பு இல்லாததால் அந்தந்த சீதோஷ்ண நிலைக்கேற்ப இயற்கையாகவே அவர்கள் பேசிய வார்த்தைகளில் சில சப்த மாறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. இதைச் சாதகமாக வைத்துக்கொண்டு நம்மை நாலு ஜாதியாகப் பிரித்து வைத்த ஆரியம், நம் மொழியையும் நான்காகப் பிரித்து, வேண்டுமளவும் வடமொழியை அவற்றிற்குள் புகுத்தி, திராவிட மொழியையே கெடுத்து விட்டது. அன்றைய பண்டிதர்கள் ஆரியத்திற்கு அடிமைப் பட்டிருந்ததால் அதைத் தடுத்தார்களில்லை. இன்னும் நமது பண்டிதர்களுக்கு அந்த ஆரிய மோகம் தீர்ந்த பாடில்லை.

*நான்கு புலவர்களும் கூடட்டும்*

ஆரிய மோகமற்ற ஒரு தெலுங்குப் பண்டிதர், ஒரு கன்னடியப் பண்டிதர், ஒரு மலையாளப் பண்டிதர், ஒரு தமிழ்ப் பண்டிதர் ஆகிய நால்வர் ஒன்றாக உட்கார்ந்து, நாலு அகராதிகளை வைத்துக்கொண்டு அவற்றிலுள்ள வடமொழி அத்தனையையும் நீக்கி விடுவார்களானால், எஞ்சியிருப்பவை அத்தனையையும் தமிழ் வார்த்தை களாகவே இருப்பதைக் காண்பார்கள். 100க்கு 5 வார்த்தை கூட தமிழ் அல்லாத வார்த்தையாக இருக்காது. அதற் குள்ள சற்று நீட்டலையோ, குறுக்கலையோ எடுத்துவிட்டுப் பார்த்தால் அவையும் தமிழாகவே முடியும்.

*ஏன் நீங்களே பாருங்கள்*

இன்று வேண்டுமானால் நீங்கள் உங்கள் வீட்டுக் குப்போய் 50-வருடத்திற்கு முந்திப் பதிப்பிக்கப்பட்ட ஒரு மொழிவாரி சொற்கள் புத்தகத்தை எடுத்துப் பாருங்கள். இந்நான்கு மொழிவாரிச் சொற்கள் யாவும், பெரும்பாலும் தமிழாகவே இருப்பதைக் காணலாம். இதைச் சுருக்கமாக சில உதாரணங்களால் விளக்குகிறேன்.

நாம் வசிக்கும் இடத்திற்கு தமிழில் வீடு என்கிறோம். நமது தாகத்தைத் தணித்துக் கொள்ள உபயோகிக்கும் பானத்தைத் தண்ணீர் என்று கூறுகிறோம். அவற்றை ஒரு தெலுங்கன் இல் என்றும், நீளு என்றும் சொல்கிறான். அதையே கன்னடியனொருவன் மனை என்றும், நீரு என்றும் சொல்கிறான். ஒரு மலையாளி அவற்றை பொறை என்றும், வெள்ளம் என்றும் சொல்கிறான். வீடு, இல், மனை, பொறை இவை நான்கும் தமிழ்ச் சொற்கள்தானே. நீர், நீளு, வெள்ளம் இவை தமிழ்தானே. நாம் எனக்கு என்று தமிழில் கூறுவதைத் தெலுங்கன் நாக்கு என்றும், கன்னடியன் நெனக்கி என்றும் கூறுவான். பார்ப்பான் நேக்கு என்று கூறுவான். அகத்திற்கு என்பதை ஆத்துக்கு என்று திரித்துக் கூறுவான். அவர்கள், இவர்கள் என்று கூற வேண்டியதை அவா, இவா என்கின்றான். இந்த நேக்கையும், ஆத்தையும், அவாள், இவாளையும் தமிழ் என்று கூறும்போது, இல், மனை, பொறை என்றும், நீளு, வெள்ளம் என்றும், நாக்கு, நெனக்கி, எனக்கி என்றும் கூறும் மக்களைத்தானா வேறுமொழி பேசுபவர்கள் என்று ஒதுக்கவேண்டும்? இந்தப் பார்ப்பனரை எல்லாம் ஒரு தனியிடத்தில் வைத்துவிட்டால், இவர்கள் பேசுவதும் வேறொரு மொழியாகத்தானே போய்விடும்?

*உண்மைப் பற்று வேண்டும்!*

ஆகவேதான் நான் கூறுகிறேன். இவை நான்கும் நாலு இடத்தில் நாலு பெயருடன் வழங்கப்பட்டு வரும் ஒரே மொழியே தவிர நான்கல்ல. ஆரியம் தான் இவற்றை நான்காகப் பிரித்து வைத்துள்ளது. இவ்வாரியத்திற்குக் கையாளாக இருப்பவர்கள் தான் தம் அறியாமையால் இப்பிரிவினைக்கு ஆக்கம் விளைவிக்கிறார்களே ஒழிய, உண்மையில் இவை நான்கும் ஒன்றுதான். சுயநலம் மறந்து உண்மை மொழிப் பற்றுக்கொண்டு ஆரிய வடசொற்களை நீக்கிப் பார்த்தால் இவை நான்கும் ஒரே மொழிதான் என்பது தீர்க்கமாய் விளங்கும். இதை நமது தோழர்களுக்கு உணர்த்தி, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மக்கள் என்ற ஒன்றுபட்ட நிலையை உண்டாக்கத்தான் நாம் உழைக்க வேண்டும்.

*பிளவு செய்த ஆரியமே,*

*இன்றும் பிளவு செய்கிறது*

நாமத்தை இரண்டு தினுசாகப் போட்டு, வடகலை, தென்கலை என்று கூறி வைணவர்களைப் பிரித்து வைத்தது போல், நம் மக்களிடையே புழக்கத்திலிருந்து வரும் சில சப்த வேறுபாடுகளை ஆதாரமாகக் கொண்டு நம்மைப் பிரித்து வைத்த ஆரியம், நம்முடைய அப்பிரிவினை ஒழிப்பு முயற்சியைக் கண்டு பயந்து பிரிவினைக்கு ஆக்கம் தேட மொழிவாரி இலக்கணங்கள் செய்யத் திட்டம் தீட்டியுள்ளது. பிரிவினை என்று கூறிக்கொண்டே போனால் எதுவும் பிரிந்துதான் போகும், நாம் அங்கே என்பதை ஒருவன் அக்கடே என்றும் ஒரு வன் அவடே என்றும் கூறுகிறான். இச்சிறு வேறுபாட்டின் காரணமாக இவை வெவ்வேறு மொழியாக்கப்படலாமா? நமது பண்டிதர்கள் தமிழைப் பற்றிச் சிந்திக்கவே இல்லை. பார்ப்பனனிடம் சபாஷ் பட்டம் வாங்க வேண்டித் தம்மால் கூடுமான அளவுக்கு வடமொழியைத் தமது நூல்களில் புகுத்தித் தமிழைக் கெடுத்தனர், ஆரிய மத ஆதிக்கத்திற்கு அடிமைப்பட்ட அப்பண்டிதர்கள் தாராளமாக ஆரியச் சொற்களைக் கடன் வாங்கி மத நூல்களில் புகுத்தினர். உண்மையில் தமிழன் முன்னேற்றத்துக்குத் தடை இப் பண்டிதர்களும் இவர்களின் மதப்பற்றும்தான்.

*என்னருந் தமிழே!*

*நீயே தெலுங்கு, நீயே கன்னடம்*

நாம் பசு என்பதைத்தான் தெலுங்கன் ஆவு என்றும், கன்னடியன் அசு என்றும் மலையாளி ஆவ் என்றும் கூறுகிறான். ஆ என்றால் தமிழில் பசுவைத் தானே குறிக்கும்? இச்சிறு வித்தியாசத்தாலா இவை நான்காக் கப்பட வேண்டும்? இவை நான்கும் ஒரு உதிரத்திலிருந்து உதித்தெழுந்ததல்ல. அந்த உதிரமே தான் இவை நான்கும், என்னருந் தமிழே? நீயே தான் தெலுங்கு, நீயே தான் மலையாளம், நீயேதான் கன்னடம் என்றுதான் நான் கூறுவேன். இவை வெவ்வேறு மொழிகளாயிருந்தால் இவைகளுக்கு முதல் நூல்கள் எங்கே? தமிழுக்குத்தான் முதல் நூல்கள் எத்தனையுள்ளன? அத்தனையும் ஆடிப் பெருக்கத்தில் ஒழித்த ஆரியக் கூட்டமும் அவர்களின் அடி வருடிகளும்தானே இன்று தமிழ், தமிழ் என்று கூப்பாடு போடுகிறார்கள்? இந்த அன்னக்காவடி சர்க்காரே, இந்தப் பாடம் கூடாது சீர்திருத்தம் பேசக்கூடாது ஆரியர், திராவிடர் என்று எழுதக் கூடாது என்றெல்லாம் உத்தரவிடுகிறதே! இந்த 1947 இல் இதே இவ்வளவு செய்யு மானால் அன்றைய அரசாங்கத்தில் என்னதான் கேடு நடந்திருக்க முடியாது? அதைப் பற்றியெல்லாம் ரொம்ப சல்லீசாக மறந்துவிட்டுப், பார்ப்பானுக்கு அடிமையாகி அந்த அடிமை மோகத்தில் மூழ்கி, என்னை ஏனப்பா மொழிப் பற்றற்றவன் என்று ஏசுகிறாய்?

- 'குடிஅரசு', கட்டுரை - 10.01.1948

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக