பக்கங்கள்

சனி, 26 டிசம்பர், 2015

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? -புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்-3

திராவிடம்
இது தமிழம் என்பதன் திரிபு, ஆதலின் தமிழ்ச் சொல்லே. ஆரியம் அன்று. இதுபற்றிப் பல தடவைகளில் என்னால் எழுதப்பட்ட வெண்பாக்கள் இங்கே தரப்படுகின்றன.
பாலி மொழியிற் பகர்ந்த மகாவமிச
நூலில் ஒருசெய்தி நோக்குகின்றோம்! மேலாம்
தமிழ் என்ற சொல்லைத் தமிழோஎன் றார்! ஏன்?
தமிழரல்லார் நாக்குத் தவறு.
தமிழ் நாட்டை ஆசிரியர் தாலமி முன்னாள்
தமிரிசி என்றுரைத்தார். தாம்ஓர் - தமிழரல்லர்!
ஆதலினால் தோழா அயலார் ஒருசொல்லை
ஓதலினால் மாறுபடல் உண்டு.
தமிழென்று சாற்றுதற்கு மச்ச புராணம்
த்ரமிளென்று சாற்றியதும் காண்க - தமிழா
படியைப் ப்ரதிஎன்னும் பச்சைவட வோரிப்
படியுரைத்தால் யார்வியப்பார் பார்.
தமிழோவும் மற்றும் தமிரிசியும் வேறு
த்ரமிள த்ரமில் எல்லாம் சாற்றின் - தமிழன்
திரியே அவைகள்! செந்தமிழ்ச் சொல் வேந்தன்
பிரிந்ததுண் டோ இங்கவற்றில் பேசு.
திரிந்ததமிழ்ச் சொல்லும் தமிழ்ச்சொல்லே ஆற்றில்
பிரிந்தவாய்க் காலும் பிரிதோ? - தெரிந்த
பழத்தைப் பயம் பளம் என்பார் அவைகள்
தழைந்த தமிழ்ச்சொற்கள் தாம்.
உரைத்த இவை கொண்டே உணர்க தமிழம்
திராவிடம்என் றேதிரிந்த தென்று! - திராவிடம்
ஆரியர்வாய் பட்டுத் திரிந்தாலும் அந்தச்சொல்
ஆரியச்சொல் ஆமோ அறி.
தென் குமரிப் பஃறுளியும் சேர்வடக்கு மாமலையும்
நன்கெல்லை கொண்ட நடுவிடத்தில் - மன்னும்
பொருள்கள் பலவாம்! பொலிந்தனவே அந்தப்
பொருள்கள் தமிழ்ப்பெயரே பூண்டு.
திராவிடம் தன்னந் தனியா ரியமா?
திராவிடம் இன்பத் தமிழின் - திரிபன்றோ!
இன்பத் தமிழகத்துக் கிட்டார் திராவிடப்பேர்
என்பார்சொல் ஏற்புடைய தன்று.
திராவிடம் என்னல் தமிழின் திரிபே
திராவிடம் ஆரியச்சொல் அன்று - திராவிடம்
வெல்கஎன்று சொன்னால்நம் மேன்மைத் தமிழர்கள்
வெல்கஎன்று விண்டதுவே யாம்.
வந்தார் மொழியா திராவிடம்? மாநிலத்தில்
செந்தமிழ்ச் செல்வமா அந்தச்சொல்! - முந்தியே
இங்குள்ள நற்பொருள்கள் எல்லாவற் றிற்குமே
எங்கிருந்து கொண்டுவந்தார் பேர்
-(குயில், 15---07-1958)

உண்மை,1-15.7.15
ஆசாரம்
ஆசு+ஆர்வு+அம். குற்றத்தை ஆய்ந்து ஒழுகுவதோர் ஒழுக்கத்திற்குக் காரணப் பெயர். ஆர்வு என்பதில் வு தொக்கது.
பெருவாயின் முள்ளியார் அருளிச் செய்த ஒழுக்கப் பகுதியின் தொகுப்புக்கும் ஆசாரக் கோவை என்று பெயர். இத்தொடர் தமிழானதால் அப் பெயர் வைத்தார்.
அதி
இஃது அதைத்தலில் முதனிலை வேறுபட்ட தமிழ்ச்சொல், அதைத்தல், அதை, அதி, என்பனவற்றிற்கு மிகுதி என்பது பொருள்.
(குயில், குரல்: 1, இசை: 7, 15---07-1958)
8
அதி
இது தூய தமிழ்ச்சொல் என்றும் அதைத்தலின் முதனிலையாகிய அதை என்பதுதான் அதி என்றாயிற்று என்றும் கூறியிருந்தோம். அது பற்றி நண்பர் ஒருவர் (பெயரைக் குறிப்பிட வேண்டாமாம்) அதை என்பது அதி வர இலக்கணச் சட்டம் இடந்தருகின்றதா என்று கேட்டுள்ளார். ஒரு சொல் வேறுபாடு உறுவதையும் மருவி வருவதையும் தமிழிலக்கணம் ஒத்துக் கொள்கிறதல்ல. அதன்படியே அதை என்பது என அறிதல் வேண்டும்.
இதற்கு மற்றொரு மேற்கோள் அவைத்தல், அவித்தல் என்றும், அவை என்பது அவி என்றும், வந்தது காண்க.
ஆசிரியர்
இது வடசொல் என்று ஏமாற்றுவார் -தூய தமிழ்ச் சொற்றொடர் ஆகும். ஆசு --குற்றம். இரியர் -- நீங்கியவர். மடமை என்னும் குற்றத்தினீங்கியவர் ஆசிரியர். காரணப்பெயராதல் அறிக.
மடம்
அறியாமை உணர்த்தும் போது மடம் தூய தமிழ்ச் சொல்லே. அது நிலையத்துக்கு ஆகும்போது வடமொழி என்க!
அரங்கு
அரக்குதல் என்னும் தொழிற் பெயர் உடலில் புடை பெயர்ச்சி செய்தல் என்று பொருள்படும். அதன் முதனிலையாகிய அரக்கு என்பதற்கும் அதுவே பொருள்.
அரக்குதல், அரக்கு என்பவற்றின் தன்வினைகள் அரங்குதல், அரங்கு என்பது. பொருள் என்னவெனில் (உடல்) புடைபெயர்தல், அஃதாவது உடலசைதல், ஆடல் ஆகும். இனி அரங்கு என்பது அம் இறுதி பெற்றும் பெறாமலும் ஆடுமிடத்திற்கு ஆனது ஓர் ஆகுபெயர் என்க!
இச்சொல் நம் செந்தமிழ்ச் செல்வமாகும். இதை வடசொற் சிதைவென்று கூறுவார். கூற்று நூற்றுக்கு நூறு பொய்யென மறுக்க.
முரலை
அண்மையில் வடசொற் பற்றுடையவர் ஒருவர், இது முரலா என்ற வடசொற் சிதைவு என்று கூறினார். எரிச்சல் வந்துவிட்டது. இதனால் சிரிக்க வாய்ப்பிழந்தேன்.
ஆரியர் நாற்றமே இந்த நாவலந்தீவில் ஏற்படாத காலத்திலேயே, வட நாட்டிலிருந்து நருமதை ஆற்றுக்குத் தமிழர் முரலை என்று பேரிட்டு அழைத்தனர். முரலை என்ற தொழிற் பெயருக்கு, முரலுவது - ஒலிப்பது, அதிலும் புறத்தால் ஒலிப்பது என்பது பொருள். அஃது தொழிலாகு பெயர். முரலை ஆற்றைக் குறித்தது. எனவே தூய தமிழ்ச்சொல்.
முரலி
இது முரலுதலை - ஒலித்தலையுடையது என்ற பொருள் கொண்டது. மேலும் உள்ளால் ஒலிப்பது என்று கொண்டனர் பண்டைத் தமிழர். இதை வடவர் முரளி என்று கூறுவார்கள். முரலி என்பது குழலுக்கு - புல்லாங் குழலுக்குப் பெயர். தூய தமிழ்ச் சொல் என்பதை அறிந்து மகிழ்க!
மா
இஃது மஹா என்ற வடசொற் சிதைவாம். என்னே மடமை!
மா! எனின் பெரியது, சிறந்தது, விலங்கு, மாமரம், முதலிய பலபொருள் குறிக்கும் உரிச்சொல் என்று, வடமொழி என்பது இந்நாட்டிற்கு புகுவதற்கு முன்னமே தமிழ் நூல் கூறிற்று. பெரிது என்ற பொருளில், மாப்பெரிய என்று எழுதவேண்டும். (இடையில், ப் விரிக்காவிடில் மா பெரிது) மா என்பது மகா என்ற வடசொற் சிதைவு என்று கொண்டதாகிவிடும். மா இருக்க மஹா எதற்கு?
கண்ணியம்
இது கண்யம் என்பதன் சிதைவு என்பர் பார்ப்பனரும் அடியாரும். கண்ணல், எண்ணல் சிறத்தல், என்பன ஒன்றே. கண்ண, கண்ணிய எனச் செய, செப்பிய எனும் வாய்ப்பாட்டு வினையெச்சங்களாயும் வரும்.
கண்ணியம் இகரச் சாரியையும் அம் இறுதி நிலையும் பெற்ற பெயர். வடவர் சொல்லும் கண்யம் வேறு, தமிழர் கொண்ட கண்ணியம் வேறு என அறிதல் வேண்டும்.
- (குயில், குரல்: 1, இசை : 8, 22-07-58)
காமம்
இது வடசொல் என்றே கூறிப் பொய்ப்பர். ஏனெனில் வடமொழி நூற்களில் பெரிதும் வருவதான ஒரு சொல் இது. தமிழினின்று திருடியது.காமக்கணிப் பசலியார் என்பது ஒரு பெண்பால் புலவர் பெயர். இதுல் காமம்,கண் என்பன முதலிரு சொற்களாகும். இது காமாட்சி என்பதனின் தமிழ் மொழி பெயர்ப்பு. இவ்வாறு மொழி பெயர்த்தவர் சங்கப் புலவர் என்க. சாம்பூநதம் என்னும் ஒருவகைப் பொன்னை, நக்கீரனார் நாவலொடு பெயரிய பொலம் என்று தமிழிற் பெயர்த்ததும் காண்க. காமாட்சி என்பதில் காமம், ஆட்சி என்ற இரு சொற்கள் உண்டு. ஆட்சி மட்டும் வடசொல் ஆதலால் காமாட்சி - காமக்கண் என்றார். எனவே காமம் தமிழச் சொல்லே. ஆதலும் அதை வடவர் எடுத்தாண்டார் ஆதலும் காண்க. காமம் - தோற்றத்துக்கு முன்னது. அது காம்பு என்பதன் வேர்ச்சொல் ஆகிய காம் என்பதனின்னு தோன்றியது.இது போல் ஓம்பு என்பதன் வேர்ச்சொல்லாகிய ஓம் என்று வழங்கி வருவதும் ஊன்றி அறியற்பாலது.
ஓம்
இது வடசொல் அன்று. தூய தமிழ்ச் சொல். காக்க என்பது இதன் பொருள்.
சங்கம்
சங்கமே, கணைக்கால், ஓரம், சவை, சங்கு, புலவர், நெற்றி என்பது நிகண்டு. சங்கம் இத்தனைப் பொருளைத் தருகிறது. சவை புலவர் என்று குறிக்குமிடத்தில் அது தமிழ்ச் சொல்லா, வடசொல்லா என்றுதான் ஆராய்ச்சி இங்கே.தொல்காப்பிய காலத்துக்கு முன்பே தென்பால் தென் கழகம் என்பதொன்றும் வடசொல், வடகழகம் என்பதொன்றும் இருந்ததாக பழைய இலக்கியங்கள் நமக்கு நவிலுகின்றன.
வடகழகமிருந்து கருத்து வேறுபட்டு, அகத்தியர் தென் கழகம் போந்தார் என்றும் கூறுவார். தென் கழகம் என்பது தென்னகம் என்றும், தெங்கம் என்றும் செங்கம் என்றும் ச என்ற எழுத்துத் தமிழில் சொல்லுக்கு முதற்கண் வரத்துவங்கிய பின் சங்கம் என்றும் வழங்கலாயிற்று என அறிதல் வேண்டும். வடபுலம், தென்புலம் என்பன கூட முதற்கண் வடகழகம், தென்கழகம் என்ற பொருளிலேயே வழங்கினவாதல் வேண்டும். 
புலம் - அறிவு.தென்கழகம் என்பதே சங்கம் என மருவியது எனின், வடபால் சங்கம் என்ற சொல் என்ன பொருளில் வழங்குகின்றது என்றால், வழங்கவில்லை என்றுதான் பதில் இறுப்போம். சங்கம் என்ற சொல் பிற்பட்ட தமிழிக்கியத்துள் மட்டும் காணப்படுகின்றதும் காண்க.
சங்கம் வடமொழியன்று என்று அறுதியிட்டுக் கூறுவோம். அது தமிழ்ச் சொல்லே என்று உறுதியிட்டுக் கூறுவோம்.
பதி
அரசன், இடம், கொழுநன், தலைவன், பதிவு, வீடு இத்தனை பொருள் பயக்கும். பதி என்பது வடசொல்லன்று. வழங்கிடுவோர், வடவரும் அவர் அடியார்களும்.
எஞ்சிய எல்லாம் எஞ்சிய இலவே.
(தொல்காப்பியம் மொழிமரபு - சச)
என்ற நூற்பாவின் உரையில் பதி என்பது குறிக்கப்பட்டது காண்க. அது வடசொல்லாயின் குறியார் என்க. எனவே பதி தூய தமிழ்ச் சொல்லே.
கலை
இதுவும் தூய தமிழ்ச்சொல்லே. மேற்படி நூற்பாவுரையும் இதை வலியுறுத்திற்று. கல்வி, ஆண்மான் என்பன இதன் பொருள்.
பிலம்
பில்கல் என்பதன் முதநிலையாகிய பில் என்பது நீர் பொசியும் இடம். அதாவது கீழ் அறையைக் குறிக்கும் - பில் அம் பெற்று பிலம் ஆயிற்று. இது தூய தமிழ்ச் சொல்.
குலம்
இது குலை என்பதன் திரிபு. இதை வடவர் எடுத்தாண்டதில் நமக்கு வருத்தமில்லை. அது வடசொல்லே என்று புளுகும்போது தான் எரிச்சல் உண்டாகிறது. இது தூய தமிழ்ச்சொல் என்பதற்கு முன் காட்டிய தொல்காப்பிய நூற்பாவின் உரையே சான்றாகும்.
(குயில், குரல்: 1, இசை: 9, 29.7.1958)
உண்மை,1-15.8.15
அந்தணர்
இதை அந்தம்+அணர் என்று பிரித்து முதலில் உள்ள அந்தம் என்பது வடசொல் என்று கூறி, அழி வழக்காடுவர் இழிவுறு பார்ப்பாரும் இனம் கண்டு வேர்ப்பாரும்.
வேதாந்தத்தை அணவுவோர் என்பது அதன் பொருள் என்று பொய்ப்பர் அவரே!
அம்+தண்=என்பன அந்தண் என்றாயிற்று.
இதன் பொருள்: அழகிய தட்பம், அஃதாவது நாட்டார் கண்கட்கு. அழகு செய்வாரின் தொண்டின் அருட்தன்மை.
இந்த, அந்தண் என்பது தமிழ்ப் பெருநூற்களில் பெரும்படியாய் வந்து பயில்வது அந்தண் சோலை, அந்தண் காவிரி என வந்துள்ளவை காண்க.
அந்தணர் என்பவர் யார்? - கூறுவோம்.
அறந்தான் இயற்றும் அவனிலுங்
கோடி அதிகம் இல்லம்
துறந்தான்.........
என்பது பட்டணத்தடிகள் பகர்ந்தது.
இல்லறத்தானைவிட மக்கள் நலம் கருதி இல்லம் துறந்தான் சிறந்தவன் என்று குறித்தார். மேலும் அதைத் தொடர்ந்தே அவர், அவனிற் சத கோடி உள்ளத் துறவுடையான் என்றும் கூறினார். அவ்வாறு இல்லந் துறந்தவனைவிடச் சிறந்தவன் உள்ளத் துறவுடையான்.
எனவே துறவு இல்லத்துறவு, உள்ளத்துறவு என இரு வகைப்படும். இவ்விரண்டில் இல்லத்துறவே மேலானது மக்கட்குப் பயன்படுவதால்.
இக்கூறிய இல்லத் துறவிகளையே நம் தமிழ் முன்னோர் அந்தணர் என்றார் என்று கடைபிடிக்க. அந்தணர் என்ற சொல் அயலவர் மாசு படாத செந்தமிழ்ச் செல்வம்.
மனம்
மனசு என்ற வடசொல்லின் சிதைவு என்பார் வந்தவரும், சில கந்தல்களும்.
மன்னுவது மனம் என்பதைத் தமிழ் மக்கள் அறிந்து ஏமாறாதிருக்க வேண்டும்.
உலகுக்கு முதன்முதலில் தத்துவ நூல் (கபிலர் எண்ணூல்) தந்தவர்கள் தமிழர்கள். அதில் மனம் என்பதின் இலக்கணத்தைத் தெளிவுறுத்தியதை மன்னுவது என்ற காரணத்தினால் மனம் என்று அதற்குப் பெயர் என்று அமைத்தமையே காட்டும். மனமானது புலன் வழிச் செல்லாமல் தன்னிலையில் மன்னுவதே உணர்வு நிலை என்றும் அந்த உணர்வு நிலையிலே விடுதலை வீடு என்றும் கூறும் கபிலர் எண்ணூல்.
தூய தமிழ்ச் சொல்லாகிய, மனம் என்பதை வந்தவர் எடுத்துக் கொண்டனர். வேறு வழியில்லாததால் என்று அறிந்து வைக்க.
பிணம்
பிண் என்ற வேர்ச் சொல் நீக்கம் என்ற பொருளுடையது. உயிர் நீக்கிய உடலைக் குறிப்பது எனக் கொள்க. அதில் அம் இறுதி நிலை. எனவே பிணம் தமிழ்ச் சொல்லே.
(குயில், 05-08-1958)
-உண்மை,16-31.8.15
கன்னி
இதை வடசொல் என்று பார்ப்பனரும் அவர் அடிவருடிகளும் சொல்லுவார்கள். இது தூய தமிழ்ச் சொல்லென்றே அறியவேண்டும். கன்னி-இளமை. கன்னித்தமிழ் என்றால், இன்றும் இளமையோடு திகழும் தமிழ் என்பது பொருள்.
இது தூய தமிழ்ச்சொல் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு வருமாறு:
தொல்காப்பியம் நூன் மரபு 30-ஆம் பாட்டு.
மெய்ந்நிலை சுட்டின் எல்லா எழுத்தும்
தம்முற் றாம்வருஉம் ரழஅலங் கடையே
என்பது. இஃது என்ன சொல்லிற்றெனின் ர், ழ் என்னும் இரண்டு எழுத்துகள் தம்முன் தாம் வரும் என்றது.
இதில் ன் என்பதன் முன் ன வருவதற்கு எடுத்துக்காட்டாகக் கன்னி என்ற தூயதமிழ்ச் சொல் காட்டப்பட்டிருக்கின்றது.
காலம்
கால், காலை, காலம் ஒரு பொருட்சொற்கள். இது தூய தமிழ்ச்சொல்லே, எனினும் பார்ப்பனரும் பழிப்பனரும் இதையும் வட்சொல் என்று ஏமாற்றுவர். இதனாலன்றோ தொல்காப்பியச் சொல்லதிகார உரைகாரர் காலம் உலகம் என்ற 58 ஆம் நூற் பாவுரையில், காலம் உலகம் வடசொல்லன்று. ஆசிரியர் வடசொற்களை எடுத்தோதி இலக்கணங்கூறார் என்று விழிப்பூட்டினார்.
உலகம்
இது லோகம் என்ற வடசொல்லின் சிதைவு என்று புகலும் பொய்யரும் உள்ளார் அன்றோ! மேலே காலம் என்பதன்கண் உரைத்த தொல்காப்பியச் செய்யுள் உரையாய் இதுவும் தமிழ்ச் சொல் என்றே வற்புறுத்தியுள்ளார். உலகம்- உலகு என்றும் வரும். உலகத்தில்- - துன்பம், --துன்பம் நிறைந்ததாதலின் உலகம் காரணப்பெயர். இவ்வாறு மறைமலையடிகளாரும் வரைந்தனர்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
என்ற குறளின் முதற்பாட்டில் திருவள்ளுவர் தம் பெற்றோர் நினைவாக அவர் பேர்களாகிய ஆதி பகவன் என்பனவற்றை வைத்தாராம்.
ஆதி பகவன் என்பது வடசொற்றொடர் என்று பரிமேலழகர் கதைத்ததற்குக் காரணம் கண்டு கொள்க. இன்னொரு முறையும் இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் கூறுகிறேன், பகவன் தூய தமிழ்ச் சொல்.
ஆகுலம்
இது வடமொழியன்று தூய தமிழ்ச் சொற்றொடர், ஆகு+உலம் எனப்பிரியும்? ஆகு-ஆகின்ற (ஒருவன் முயற்சியாலாகின்ற) உலம்- - -ஒலி. வினைத்தொகை நிலைத்தொடர். கடல் முதலியவற்றில் உண்டாகும் இயற்கை ஒலியைப் பிரிப்பதற்கு ஆகு என்ற அடை வேண்டியதாயிற்று.
உலம் என்பது உலம்பு என்றதன் கடைக்குறை என்பர். ஆகவே ஆகுலம் என்றது தூய தமிழ்ச் சொற்றொடர் என்க. வியாகூலம் என்பது போன்ற சொற்கள் வடமொழியிற் கேட்ப்படுகின்றன. ஆயினும் அவற்றிற்கும் ஆகுலம் என்பதற்கும் தொடர்பில்லை என அறிதல் வேண்டும். ஆகுலம் என்ற சொற்றொடரை வள்ளுவர் தக்க இடத்தில் வைத்து செய்யுள் செய்து காட்டியருளினார்.
மனத்துக்கண் மாசு இலன்ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற.
என்பது குறள்.
மனத்துக்கண் மாசற்ற நிலையில் உண்டாகும் நினைப்பும் செயலும் அறமாகும். அல்லாதவை அனைத்தும் அறமாகா. வேறு என்ன எனின் நான் அறம் செய்தேன், நான் அறம் செய்தேன் என்று ஒலிபரப்புதலும் ஒலிபரப்பும்படி செய்தலும் ஆகிய தன்மையுடையவைகளே என்பது இதன் கருத்து. ஈண்டு ஆகுலம் என்பது இன்றியமையாத சொற்றொடர் ஆதல் கண்டு இன்புறவேண்டும்.

(குயில்: குரல்: 1, இசை: 11, 12-08-1958)
-உண்மை,1-15.9.15

காமம்
இது வடசொல் என்றே கூறிப் பொய்ப்பர். ஏனெனில் வடமொழி நூற்களில் பெரிதும் வருவதான ஒரு சொல் இது. தமிழினின்று திருடியது.காமக்கணிப் பசலியார் என்பது ஒரு பெண்பால் புலவர் பெயர். இதுல் காமம்,கண் என்பன முதலிரு சொற்களாகும். இது காமாட்சி என்பதனின் தமிழ் மொழி பெயர்ப்பு. இவ்வாறு மொழி பெயர்த்தவர் சங்கப் புலவர் என்க. சாம்பூநதம் என்னும் ஒருவகைப் பொன்னை, நக்கீரனார் நாவலொடு பெயரிய பொலம் என்று தமிழிற் பெயர்த்ததும் காண்க. காமாட்சி என்பதில் காமம், ஆட்சி என்ற இரு சொற்கள் உண்டு. ஆட்சி மட்டும் வடசொல் ஆதலால் காமாட்சி - காமக்கண் என்றார். எனவே காமம் தமிழச் சொல்லே. ஆதலும் அதை வடவர் எடுத்தாண்டார் ஆதலும் காண்க. காமம் - தோற்றத்துக்கு முன்னது. அது காம்பு என்பதன் வேர்ச்சொல் ஆகிய காம் என்பதனின்னு தோன்றியது.இது போல் ஓம்பு என்பதன் வேர்ச்சொல்லாகிய ஓம் என்று வழங்கி வருவதும் ஊன்றி அறியற்பாலது.
ஓம்இது வடசொல் அன்று. தூய தமிழ்ச் சொல். காக்க என்பது இதன் பொருள்.

சங்கம்
சங்கமே, கணைக்கால், ஓரம், சவை, சங்கு, புலவர், நெற்றி என்பது நிகண்டு. சங்கம் இத்தனைப் பொருளைத் தருகிறது. சவை புலவர் என்று குறிக்குமிடத்தில் அது தமிழ்ச் சொல்லா, வடசொல்லா என்றுதான் ஆராய்ச்சி இங்கே.தொல்காப்பிய காலத்துக்கு முன்பே தென்பால் தென் கழகம் என்பதொன்றும் வடசொல், வடகழகம் என்பதொன்றும் இருந்ததாக பழைய இலக்கியங்கள் நமக்கு நவிலுகின்றன.வடகழகமிருந்து கருத்து வேறுபட்டு, அகத்தியர் தென் கழகம் போந்தார் என்றும் கூறுவார். தென் கழகம் என்பது தென்னகம் என்றும், தெங்கம் என்றும் செங்கம் என்றும் ச என்ற எழுத்துத் தமிழில் சொல்லுக்கு முதற்கண் வரத்துவங்கிய பின் சங்கம் என்றும் வழங்கலாயிற்று என அறிதல் வேண்டும். வடபுலம், தென்புலம் என்பன கூட முதற்கண் வடகழகம், தென்கழகம் என்ற பொருளிலேயே வழங்கினவாதல் வேண்டும். புலம் - அறிவு.தென்கழகம் என்பதே சங்கம் என மருவியது எனின், வடபால் சங்கம் என்ற சொல் என்ன பொருளில் வழங்குகின்றது என்றால், வழங்கவில்லை என்றுதான் பதில் இறுப்போம். சங்கம் என்ற சொல் பிற்பட்ட தமிழிக்கியத்துள் மட்டும் காணப்படுகின்றதும் காண்க.சங்கம் வடமொழியன்று என்று அறுதியிட்டுக் கூறுவோம். அது தமிழ்ச் சொல்லே என்று உறுதியிட்டுக் கூறுவோம்.
பதி
அரசன், இடம், கொழுநன், தலைவன், பதிவு, வீடு இத்தனை பொருள் பயக்கும். பதி என்பது வடசொல்லன்று. வழங்கிடுவோர், வடவரும் அவர் அடியார்களும்.
எஞ்சிய எல்லாம் எஞ்சிய இலவே.
(தொல்காப்பியம் மொழிமரபு - சச)
என்ற நூற்பாவின் உரையில் பதி என்பது குறிக்கப்பட்டது காண்க. அது வடசொல்லாயின் குறியார் என்க. எனவே பதி தூய தமிழ்ச் சொல்லே.
கலை
இதுவும் தூய தமிழ்ச்சொல்லே. மேற்படி நூற்பாவுரையும் இதை வலியுறுத்திற்று. கல்வி, ஆண்மான் என்பன இதன் பொருள்.
பிலம்
பில்கல் என்பதன் முதநிலையாகிய பில் என்பது நீர் பொசியும் இடம். அதாவது கீழ் அறையைக் குறிக்கும் - பில் அம் பெற்று பிலம் ஆயிற்று. இது தூய தமிழ்ச் சொல்.
குலம்
இது குலை என்பதன் திரிபு. இதை வடவர் எடுத்தாண்டதில் நமக்கு வருத்தமில்லை. அது வடசொல்லே என்று புளுகும்போது தான் எரிச்சல் உண்டாகிறது. இது தூய தமிழ்ச்சொல் என்பதற்கு முன் காட்டிய தொல்காப்பிய நூற்பாவின் உரையே சான்றாகும்.
(குயில், குரல்: 1, இசை: 9, 29.7.1958)
-உண்மை,1-15.10.15
காரணம்
இது தமிழ்ச் சொற்றொடர்.
கருமை+அணம் = காரணம் ஆயிற்று. மையீறு போதலும் ருகரத்தின் மேலுள்ள உகரம் போதலும், முதல் நீளலும் தமிழிலக்கணச் சட்டம்.
எனவே, கார்+அணம் = காரணம் ஆயிற்று. கருமையின் வேற்றுமையான் உற்ற கார் என்பதற்குப் பொருள் முதன்மை. அணம் அணுகுவது ----அஃதாவது நெருங்குவது, முதன்மையை நெருங்குவது என்ற பொருளில் அமைந்ததாகும்.
காரியம்
கார்+இயம் = காரியம். கார் முதன்மை. இயன்றது என்பது இயம் என வேறுபடுத்தும் காரணத்தால் இயன்றது காரியம் என்க. காரணமே காரியம் என்னும் கபிலர் எண்ணூலையும் எண்ணுக.

காரியம் தூயதமிழ்ச் சொற்றொடர். காரணம் காரியம் இரண்டையும் வட மொழியாளர்கள் எடுத்தாண்டார்கள் வேற்றுமையின்மையால்.
கடிகை
இது கடிகா என்ற வடசொல்லின் சிதைவாம். இவ்வாறு கூறுவார் பார்ப்பனரும் ஏய்ப்பனரும். கடி, என்பதற்கு எத்தனை பொருள்கள் உண்டு?
கடி---வியப்பு, அளர், அச்சம், அழகு, இடுப்பு, இரப்போர்கலம், இன்பம், சினம், ஐயம், ஒளிக்கை ஒளி, ஓசை கடிதமும், கரிப்பு, திருமணம், களிப்பு. கால நுட்பம், காலம், காவல், கூர்மை, கைப்பற்றல், சீறல், சிறுகொடி, விரைவு, ஓசை, பூங்கா, நீக்கம், பேய், பிணம், புணர்ப்பு, புதுமை, பொழுது, மிகுதி, மணம், விளக்கம்.
இங்குக் கடி என்பது கால நுட்பத்துக்கானது. கடி வினைத்தன்மை யடைந்து தொழிற்பெயர் இறுதி நிலை பெற்றது. நாழிகை என்பது பொருள். எனவே கடிகை வடசொல் என்பது கரடி. அது தூய தமிழ்ச் சொல்லே.
கடிகாரம்
இது கடிகார யந்திரம் என்பதின் திரிபென்று கதைப்பர். கடிகை ஆர்வது _- காட்டுவது - ஈற்று திரிவுற்றது. எனவே கடிகாரம் தூய தமிழ்ச் சொல்லே.
கற்பனை
இது கல்பனா என்ற வடசொல்லின் சிதைவு என்பார் வடவர். ஆம் என்பார் தமிழறியாத தமிழர் சிலர்.
கற்பனை கல்பனாவின் சிதைவு என்பவர், கற்பனையை வில்பனா என்பதன் சிதைவு என்பார் போலும். நகைப்புக் கிடமாகிறது.
கல்+பு = கற்பு. அனைத்துமோர் முதல்சிலை என்க. இது கற்பனையின் முதனிலையாயிற்று.
கற்பு+அன்+ஐ = கற்பனை என்க. அன் சாரியை, தொழிற்பெயர் இறுதி நிலை.
முதனிலையாகிய கற்பு என்பதன் பொருள் தோண்டுதல் என்பது. ஆகுபெயராய் தோண்டுதலின் பயன், எண்ணத்தின் ஊற்று, புதுப்புது கருத்துக்கள் என்க. எனவே கற்பனை தூய தமிழ்ச்சொல் என்பது வெட்ட வெளிச்சம்.
கல்பனா என்பதொரு சொல் வடமொழியில் இருக்கலாம். அது தமிழில் கற்பனை என்றுதான் திரிக்கப்படும். திரிக்கப்படவே, நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? வடவர் சொல்லும் கற்பனைக்கும், தமிழர் சொல்லும் கற்பனைக்கும் தொடர்பில்லை என்பதாகும்.
அன்றித் தமிழின் கற்பனையையே வடவர் எடுத்தாண்டார்கள். எனினும் பொருந்துவதே. இந்த உலகில் சமஸ்கிருதம். தமிழுக்குப் பிந்தியது என்பதும், சமஸ்கிருதக்காரர் தமிழுக்குப் பிந்திய நாகரிகம் உடையவர்கள் என்பதும் மறத்தற்குரியன அல்ல.
வடிவு
இது அம் சாரியை பெற்று வடிவம் என்றும் வரும். இச்சொல் வடசொல் என்று ஏமாற்றுவர், ஏமாறற்க.
வார்ப்படக்காரர் தொழிலிடத்தினின்று தோன்றிய பெயர்களில் ஒன்று. வடி+வு = வடிவு. தொழிற்பெயர். தொழிலாகுபெயராக வடிவு செய்தலால் வரும் வடிவத்துக் காயிற்று. செம்பு முதலியவைகளைக் காய்ச்சி அச்சில் கசடு நீங்க வடித்தூற்றலின் ஆகும் வடிவம் எனக் காரணப் பெயராதல் காண்க. வார்ப்படம் என்பதும் இதே பொருளில் அமைந்த காரணப் பெயரே என ஒப்பு நோக்கித் தெளிக!
(குயில்: குரல்:  1, இசை 14, 02.09.58,  இசை 15, 09-09-58)
-உண்மை,16-31.10.15
படிவு
இதுவும் அம் சாரியை பெற்றுப் படிவம் எனவரும். இதையும் வடசொல் எனக் கதைப்பாரும் உளர்.
படிவு, படிதல் என்ற பொருளுடைய தொழிற்பெயரே இதுவும், அச்சுக்குப் பெயர். அச்சிற் படிவு செய்யப் பெற்ற வடிவப் பொருளுக்கு ஆகுபெயர்.
படிமம்--வடிவம், படிவம் ஆயினவெனக் கூறுவர் ஏமாற்றுக்காரர்கள். அதற்கு ஒத்து ஊதுவார்கள் மீனாக்கி அழகு, சேது ஆகிய பிள்ளைகள். படிவு தூய தமிழ்க் காரணப் பெயர் என முடிக்க.
(குயில்: குரல்: 1, இசை: 15, 9-9-58)
தாரம்
தாரம் அரும்பண்டம், வெள்ளி, அதன் ஒளி சேரும் ஏழ் நரம்பில் ஓர் நரம்பும் செப்பும் என்பது திவாகரம். இதில் தாரம் என்பதற்கு நான்கு பொருள் காணப்படுவதைக் காண்க.
வல்லிசைப் பெயரும், வாழ்க்கைத் துணைவியும், யாழின் நரம்பும், அரும்பண்டமும், தாராவும், நாவும், தாரம் என்பன. (வெண்தாதும்) என்பது பிங்கலந்தை.
இதில் தாரம் என்பதற்கு, ஏழு பொருள் காணப்படுவதைக் காண்க.
தாரம், வல்லிசை, நா, வெள்ளி,
தலைவி, ஓரிசை, கண், என்பன.
என்பது சூடாமணி நிகண்டு. இதில் கண் என்பதும் குறிக்கப்படுவதைக் காண்க.!
தாரம் என்ற சொல் வடமொழியே என்று சொல்லுகின்றவர்கள் அதற்கு எடுத்துக் காட்டாக என்ன சொல்லுகின்றார்கள் எனில், தாரம் ஏழிசையின் ஒன்று என்ற பொருள் வட மொழியில்தான் உண்டு என்கிறார்கள். அரும்பண்டம் முதலிய பொருள் தரும் போது அது தமிழ்ச் சொல்லே என்பதை அவர்களே ஒத்துக் கொள்கின்றார்கள்.
நாம் கேட்கின்றோம், ஏழிசையில் ஒன்றைக் குறிக்கின்ற போது அது வடசொல் என்றால், ஏழிசை வடவர்க்கு எப்போது எங்கிருந்து கிடைத்தது? -- ஏழிசை தமிழரிடமிருந்து வடவர் எடுத்தனர் என்பதை மறுக்கக் கூடியதா? இல்லவே இல்லை. ஆதலின் ஏழிசையின் ஒன்றுக்கு அமைந்த தாரம் என்பதையும் வடவர் தமிழினின்றே எடுத்தனர் அல்லவோ?
இனி, அரும்பண்டம், ஏழிசையின் ஒன்று ஆகிய இரு பொருளிலும் வரும் தாரம் செந்தமிழ்ச் செல்வமே. ஆனால் நிகண்ட, பிங்கலம் முதலியவற்றில் பிற பொருளில் வரும் தாரம் என்ன மொழி? எனில், கூறுவோம்.
தாரம் என்பதை வடவர், வல்லோசையானும் மெல்லோசை யானும் சொல்லிக் கொண்டனர். ஆயினும் முதல் தாரம் என்பது தான் அது ஆகுபெயர் முதலிய சார்புப் பொருள் பெற்று வந்திருக்கலாம். அவையும் தமிழரால் வந்தனவே என்று உணர்தல் வேண்டும்.
எனவே, தாரம் என்பது தூய தமிழ்ச் சொல் என முடிக்க. இனியும் இசை இலக்கணம் தமிழினின்றே  வடவர் எடுத்தார்கள் என்பதற்குச் சில எடுத்துக் காட்டுகள் வருமாறு:
க. இன்றைக்கு ஆயிரத்து நானூறு யாண்டின் முன் வடமொழியில் இசை நூல் இயற்றிய பரதரும், அறுநூற்றெண்பது யாண்டின் முன் இசைநூல் இயற்றிய சாரங்க தேவரும், தமிழிசையிலிருந்து எடுத்தே வடமொழிக் கண் இசை வகுக்கப்பட்டது எனக் கூறினார் என்பர், இவ்வாராய்ச்சி வல்ல விருதைச் சிவஞான யோகிகள்.
உ. இசைத் தமிழிலிருந்தே எல்லா இசைவகைகளும் வடமொழிக்கண் சென்ற உண்மை ஆபிரகாம் பண்டிதர் மிக விரிவாக இயற்றி வெளியிட்ட கருணாமிர்த சாகரம் என்னும் இசைத் தமிழ் நூலில் நன்கு விளக்கிக் காட்டப்பட்டிருக்கின்றது.
(குயில்: குரல்: 1, இசை: 16, 16-9-58)
-உண்மை,1-15.11.15

பரதர், பாரதர், பாரதம், பரதன்
இந் நான்கு சொற்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இவை தூய தமிழ்ச் சொற்களே யாதலால் இங்கு விரித்துரைக்கப்படும். தொல்காப்பியம் அகத்திணை இயல் 20ஆம் நூற்பாவின் உரையின் பகுதி வருமாறு;-- நால்வகை நிலத்துக்கும் மருவிய குலப் பெயர் ஆவன. முல்லைக்குக் கோவலர், இடையர், ஆயர், பொதுவர், இடைத்தியர், கோவித்தியர், ஆயத்தியர், பொதுவியர்.
நெய்தற்கு நுளையர், திமிலர், பரதவர், நுளைத்தியர், பரத்தியர்.
இதனால் நாம் அறிய ண்டுவது என்னவெனில் பரதவர் அஃதாவது பரதர் என்ற பெயர் தொல்காப்பிய காலத்திலேயே, தமிழில் வழங்கியது என்பதாகும்.
மீனெறி பரதவர் மடமகள்
மானேர் நோக்கம் காணா ஊங்கே
என்ற நற்றிணையிலும் காண்க.
இதில் வரும் பரதவர்தானா பரதவர் எனின் ஆம் என்க. பரதவர் என்பதன் பெண்பால் பரத்தியர் என வருதலை நோக்குக.
இனி, பரதர் என்று தமிழ் நூலில் வரும் பெயர்தான் பரதர்---பரதன், பாரதர், பாரதம் என வந்ததா எனின் ஆம் ஆம் என்று கூறி, மறைமலையடிகளார் சொல்லியருளிய விளக்கத்தையும் இங்கு சுருக்கி எழுதுவோம்.
தமிழ் மண்டலம் ஐந்தும் தாவிய ஞானம் என்ற திருமந்திரச் செய்யுள்--பஞ்ச திராவிடராகிய தமிழரின் மேம்பாட்டைக் குறிக்கின்றது. இத் தமிழர் தாம், முதன்முதலில் கடவுளைத் தீ வடிவில் வைத்து வழிபடலாயினர்.
இவ் வைவகைத் தமிழ் மரபினர்க்கு தலைவராயிருந்து அந்நாளில், அரசு புரிந்த பரதன் என்னும் தமிழ் வேந்தன் வழியில் வந்தவர் பரதர்கள் என்று சொல்லப்பட்டனர்.
பாரத மரபினரான தேவசிரவர், தேவபரதர் என்னும் இருவரும் பயன்மிகுந்த தீயை மிக்க வலிமையோடும் தேய்த்து உயிர்ப்பித்தனர். (இருக்கு 3--23--2)
ஓ நெருப்பே, வலிய படைவீரர்களுடைய பழைய பரதர்கள் தமக்குப் பேரின்பம் வேண்டி நின்னையே இரந்தனர். (இருக்கு 16-6-4)
இவ்வாறு இருக்கு மறையில் பல இடத்தில் காணப்படுகின்றன. இதனால் தமிழ் மக்கட்குத் தலைவரான பரதர்களே முதன் முதலில் தீ யெழுப்பினர், தீயின் பயன் கண்டனர். தீயே கடவுள் என்று வழிபட்டனர் என்று அறிய வேண்டும். தீயைப் பரதன் என்று சொல்லுகிறது இருக்கு மறை இரண்டாம் மண்டிலத்து ஏழாம் பதிகம்!
அன்றியும் செந்நிறக் கடவுள் எனக் காரணப் பெயரான உருத்திரன் என்ற தமிழ் பெயருடைய கடவுளுக்கும், பரதன் என்று பெயரிட்டழைக்கிறது, மேற்படி இரண்டாம் மண்டிலத்து முப்பத்தாறாம் பதிகம். தென்னாட்டவர் கண்டறிந்தது தீக்கடவுள் என்பதுனாலன்றோ வடநூல்களில் நெருப்புக்குத் தென்றிசையங்கி தக்ஷிணாக்கிளி என்று சொல்லப்படுகிறது. இங்ஙனமாக இறைவனை நெருப்பொளியில் வைத்து வழிபடும் முறையை உணர்ந்த பரதர், பண்டை நாளில், இந்த நாவலந்தீவு முழுதும் ஒருங்கு செங்கோல் ஓச்சினராதலின், அவர் பெயரால் அது (இந்தியா) பரத கண்டம் எனப் பெயர் பெறுவதாயிற்று. இப் பரதர்கள் முதன் முதல் கடல் சார்ந்த நெய்தல் நிலத்தின் கண் இருந்து, அதன் கண் பட்டினங்கள் அமைத்து நாகரிகத்திற் சிறந்து வாழ்ந்தாராதலின் அந் நெய்தல் நிலத்து மக்கள் பரதர், பரத்தியர் எனப் பெயர் பெறலாயினர்.
வடக்கிருந்து வந்து இந்திய நாட்டின் வடமேற்கு எல்லையில் குடியேறிய ஆரியர், நாகரிகம் இல்லாதவராய் உயிர்க்கொலை புரிந்த வரைதுறையின்றி ஊனுண்டும் கட்குடித்தும் மகளிர்ப் புணர்ந்தும் தமிழர் அருவருக்குமாறு ஒழுகினமையால் அவர்களை இந்நாட்டில் நுழையாதபடி அக்காலத்தில், எதிர்த்து நிறுத்தினர் என்று இருக்கு மூன்றாம் மண்டிலத்து 33ம் பதிகம்    கூறுகிறது.
இன்னும் இதை விவரிக்க வேண்டாம். இங்கு கூறியவற்றால் அறியலானவை எவை?
ஆரியர் வருமுன்னரே தமிழர் நல்ல நாகரிகத்துடன் இந் நாவலந் தீவில் எங்கணும் பரவி இருந்தனர். அக்கால், தமிழே இருந்தது. அக்கால தமிழ்ப் பெயர்களே எப்பொருட்கும் அமைந்திருந்தன. இன்றும் பண்டைய நூல்களில் காணப்படும் பரதர், என்பதே அக்காலத்தில் பரதன், பாரதன், பாரதம், பரதகண்டம் என விரிந்தது. பரதன், பரதவர் முதலிய அனைத்தும் தூய தமிழ்ச் சொற்களே என்பனவாம்.
பாரதகண்டம் என்பதில் கண்டம் தமிழா என ஐயுற வேண்டாம். கண்டம் தூய தமிழ்ச் சொல்லே. அஃதேயுமன்றி காண்டம் என்பதும் தூய தமிழ்ச் சொல்லே. கண்டம், காண்டம் என்பன பிரிவு என்பது. கண்டம் நிலப்பிரிவு, காண்டம் நூற்பிரிவு என்க.
(குயில்: குரல்: 1, இசை: 18, 30----09-19--58)
-உண்மை,16-30.11.15
ஓரை
இது தூய தமிழ்ச் சொல். இராசிகளின் பொதுப் பெயர். ஆனால், வடமொழி நூலுள்ளும், கிரேக்க மொழியுள்ளும் காணப்படுதலின், வடமொழியே என்று புகலுவர். அதற்குக் காரணம் இரண்டு. தமிழரை ஏமாற்றி விடலாம் என்று அவர்கள் நினைப்பதொன்று. ஆராய்ச்சியில்லாமை மற்றொன்று.
தொல்காப்பியத்துக் களவியல் 44_ஆம் நூற்பாவாகிய
மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும்
என்பதன் கண் காணப்படும் ஓரை என்னும் சொல்லைக் கிரேக்க மொழி எனக் கொண்டு, அவ்வாற்றால் தொல்காப்பிய காலத்தையே கி.மு. மூன்றாம் நூற்றாண்டென்று கூறி மகிழ்ந்து கொள்ளும் பகைவரும் உண்டு. இதையே சிலர் வடசொல் என்று கூறிக் கொக்கரிப்பர். ஓரை என்னும் இது மட்டுமன்று. ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்களையும் வடசொல் என்றே ஏமாற்றித் திரிவார்கள், அவர்கள் யார்? தமிழ்மொழி கொண்டு தம் மொழி பெருக்கிய மொழிவெறியர். தொல்காப்பயித்துக்கு முற்பட்ட காலத்திலேயே ஓரை என்னும் சொல் வடமொழியிலேனும் கிரேக்க மொழியிலேனும் வழங்கப்பட்டிருக்குமாயின் அது அப் பிறமொழிச் சொல் எனலாம். காட்டட்டுமே!
மறைமலையடிளார் கூறுகின்றார்: ஆராய்ந்த மட்டில் கி.பி. மூன்றாம் நூற்றாண்டாதலால் அதற்கு முற்பட்ட காலத்திலாதல் இயற்றப்பட்ட கிரேக்க ஆரிய நூற்களில் ஓரை என்னும் சொல் வழங்குவதைக் காணோம். கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இருந்தவராகமிகிரரால், கிரேக்கரின் வானநூல் ஆராய்ச்சியைத் தழுவி ஹோரா சாத்திரம் என்னும் ஒரு நூல் வடமொழியில் எழுதப்பட்டிருக்கிறது.
அதைக்கொண்டு ஹோரா என்னும் சொல் கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்குச் சிறிது முற்பட்ட காலத்திய கிரேக்க மொழியில் வழங்கப்படாமை மட்டும் அறியப்படும்.
கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கிரேக்க ஆசிரியரான ஹிப்பார்க்கஸ் காலத்திலேதான், கிரேக்கரின், வான் நூலாராய்ச்சி ஓர் ஒழுங்குபெறத் தொடங்கியது. அதன் பின் அது தாலமி என்பவரால் முற்றுப் பெற்றாயிற்று.
(குயில்: குரல்: 1, இசை: 17, 23.09.1958)
வித்தகம்
இது தூய தமிழ்ச் சொற்றொடர். இரு சொற்களால் அமைந்தது. வித்து+அகம்.
வித்தகம் என்பது பழந்தமிழ் நூற்களில் பல்லிடத்து எடுத்தாளப்பட்டிருக்கிறது.
நத்தம் போற் கேடும், உளதாகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது.    (குறள்)
வித்தகப் பெண்பிள்ளை நங்காய்.                        (ஔவையார்)
வித்து எனில் முதன்மை: காரணம், அகம் எனில் மனம். எனவே வித்தகம் (வெற்றிக்குக்) காரணமாகிய மனம் ஆற்றல்! அவ்வாற்றலும் தோல்வியடையாத ஆற்றல் ஆகும். மேற்படி குறளில் வரும் வித்தகர் என்பதற்கு பரிமேலழகரும் சதுரப்பாடு உடையவர் என்று பொருள் கூறினார்.
சதுரப்பாடு _ -ஆற்றல்.
வித்தகம் என்னும் இது நாளடைவில் வித்துக்கும் வழங்கலாயிற்று. அதன் அருமை காட்ட உழவர்கள் வித்து என்ற சொல்லை வித்தகம் என்றே சொல்லுவதுண்டு. மணிமேகலையில் பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை 227ஆம் அடி நெல்வித் தகத்துள் நெல்முனை தோற்றம் என்பது.
வித்தகம் தமிழ்ச் சொற்றெடர் என்பதில் ஐயப்பாடு அடையக் காரணமே இல்லையாகவும், தமிழ் மாணவர் நலம் கருதி நாம் இதற்கு விளக்கம் தர முன் வந்தோம், இது வடசொல் என்று ஒரு நண்பர் சொன்னதால்.
(குயில்: குரல்: 1, இசை: 20, 14.10.1958)
- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
-உண்மை,1-16.12.15
தாசர்
தாஸ என்று வடமொழியில் சொல்லப்-படினும் இது வடமொழியன்று. தாஹி என்று பார்சி மொழியில் வழங்குவதால் இது பார்சி மொழியாகிவிட்டது.
தாதர் என்ற தூய தமிழ்ச் சொல்லையே ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முன்-அதாவது ஆரியர் நாவலந் தீவில் நுழைவதற்கு முன் -வடவராலும், பார்சிக்காரராலும் தாஸ, தாஹி என எடுத்தாளப்பட்டது என அறிதல் வேண்டும்.
தாத்தல்_-கொடுத்தல், இது தாத்து என்று இன்றும் வழங்குகிறது. அன்றியும் தாதம் என்றும் கொடுத்தல் என்ற பொருளில் வழங்குகிறது. இதன் முதனிலை தா என்பதைக் காண்க தா-_கொடு, தாத்தல், தாத்து, தாதம், கொடுத்தல் கொடை என்க.
எனில், தாசர் என்ற சொல்லுக்கு, கொடையாளிகள், வள்ளல்கள் என்று பொருளா என்று கேட்போரை நாம் வேறென்ன தான் என்று கேட்கின்றோம்.
தாசர் என்றால் அடிமைகள் என்பதல்லவா பொருள் எனில், அது பின்னாளில் என்றும் எடுத்துக்காட்ட நம்மால் முடியும். ஏமாந்த காலத்தில் ஏற்றங் கொண்டவர்கள் தமிழ்ச் சொல் ஒவ்வொன்றையுமே தலைகீழாக்கி வைத்தார்கள். அவர்களின் ஏமாற்று_--விழிப்புற்ற _ --ஆராய்ச்சிமிக்க இக்காலத்திலும் செல்லுமோ!
ஆரியர்_-மிலேச்சர் என்பது பிங்கலந்தை. அதை அநாரியர்_-மிலேச்சர் என்று இதே நூற்றாண்டில் உ.வே. சாமிநாத அய்யர் முயற்சியால் அகரவரிசை நூல் ஒன்றும் வந்திருப்பதை நாம் கண்டோம் அல்லவா? இருபது ஆண்டுகளின் நிலையே இப்படி-யானால், ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் நிலைமை எவ்வாறு தலைகீழாக்கப் பட்டிருக்கும்?
பாலிமொழி ஆராய்ச்சியில் உலகப் புகழ் வாய்ந்த தருமானந்த கோசம்பி தம் “பகவான் புத்தர்” என்ற நூலில் அடியில் வருமாறு கூறுகின்றார்:
ஆரியர் வருமுன்பு சிந்து பஞ்சாப் பெருமாவட்டங்களில் தாசர்களின் ஆட்சி நிலவியிருந்தது. இப்போதுதான் தாசன் என்ற சொல்லுக்கு அடிமை என்பது பொருள் ஆக்கி வைத்திருக்கின்றார்கள். ஆனால், ஆரிய மறையில் தாச, தாஸ் என்ற இரண்டு வினைப் பகுதிகளுக்கு கொடுத்தல் என்ற பொருளே அமைந்திருக்கிறது. அண்மையில் வெளிவந்த அகரவரிசை நூற்களிலும் கொடுத்தல் என்ற பொருளிலேயே தாஸ, தாச் என்ற சொற்கள் அமைந்துள்ளன. எனவே, தாசன் என்ற சொல்லுக்கு முதலில் உண்டான பொருள் கொடைவள்ளல், நாவலந்தீவின் உயர்குடித் தோன்றல்! என்று யாகும். ஆவெஸ்தாவில் பர்வதின்யஸ்து என்ற வட்டாரத்தில் தாச நாட்டு பிதிரர்கள் வழிபாடு பற்றி செய்தி வருகிறது. அதில் அவர்களை “தாஹி” என்று  குறித்துள்ளார்கள்.
தாஸ, தாச் என்ற தமிழ்ச் சொற்களை ஆரிய மறை எடுத்தாண்டதும் இங்கு நோக்கத்தக்கது. தாசன் -தமிழ்ச் சொல்லே என அறுதியிட்டுக் கூறுக!
(குயில்: குரல்: 1, இசை: 19, 07-10-1958)
மளிகை
இது தமிழ்ச் சொல்லா? விளக்கித் தருக என ஒரு அன்பர் கேட்கின்றார். மலிகை என்ற தூய தமிழ்ச் சொல் மளிகை என்று மருவிற்று. ஆதலின் தமிழ்ச் சொல்லே, அன்றியும் ஒரு தமிழ்ச்சொல் சிறிது வேறுபாடு ஆயினும் அதன் தூய்மை கெடாது என்ற உண்மையை மனதிற் கொள்க! ஆகவே மளிகை என்பது தமிழ்ச்சொல் என்று மட்டும் சொல்லி அமையாமல், தூய தமிழ்ச் சொல் என்றே சொல்லுக!
மலிகை_நிறைதல். பெருகல் இத்தொழிற் பெயர் மலிதல் எனத் தல் இறுதிநிலை பெற்று வரும்.
இனி மளிகை எனில் பல்பொருள் நிறைதல் என்க. மளிகைக் கடை எனின் பல்பொருள் நிறைந்த விற்பனை இல்லம்.
(குயில்: குரல்: 1, இசை: 21, 21-10-1958)
-உண்மை,16-31.12.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக