பக்கங்கள்

ஞாயிறு, 6 டிசம்பர், 2015

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? - 1

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?
-புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
தமிழ் அழிப்பாரின் எண்ணத்துக்கு வலிமை சேர்த்துவிடக் கூடும் என்று கருதினார் புரட்சிக்கவிஞர். தம் கருத்தை வலியுறுத்தி ஆராய்ச்சித் தொடர் ஒன்றினை எழுதினார்;  வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? எனும் கட்டுரைத் தொடர், தமிழ்ப் பகைவர்களுக்குச் சாட்டையடி கொடுத்தது: தமிழ் ஆர்வலர்களுக்கெல்லாம் புது வழி காட்டியது; தெளிவூட்டியது.
- சு.மன்னர்மன்னன்
காட்சி
தமிழ்ச் சொற்களையெல்லாம் வடசொற்கள் என்று ஆக்குவதில் பார்ப்பனர்க்குத் தனி ஆசை. அவ்வாறு செய்வதால் இந்நாட்டுக்கும் அவர்கட்கும் இல்லாத தொடர்பை உண்டு-பண்ணிக் கொள்கிறார்கள். ஆனால் இந்தத் தீய முயற்சியை அறிவுடைய தமிழர்களும், நடுநிலை-யுடைய உலகமும் அறிந்து நகையாடக்கூடுமே யென்பதை அவர்கள் கருதுவதேயில்லை.
தூங்கிக் கொண்டிருந்தார்கள் தமிழர்கள். அது அந்த நாள். பார்ப்பனர் அல்லல் புரிந்தார்கள் அளவில்லாமல்.
விழித்துக் கொண்டார்கள் தமிழர்கள். இது இந்த நாள். அல்லல் புரியாது அடங்கினார்களா எனில் இல்லை.
காட்சி _- தொழிற்பெயர். அதில் காண், முதனிலை, சி_-தொழிற்பெயர், இறுதிநிலை. காண் என்பதின் இறுதியில் உள்ள _ -ண், என்ற மெய்யானது _- சி, என்ற வல்லினம் வந்தால் _- ட் -_ ஆகும் என்பது சட்டம். அதனால்தான் காட்சி என்றாயிற்று. காணல், காண்டல், காட்சி அனைத்தும் ஒரே பொருள் உடையவை. எனவே காட்சி தூய தமிழ்ச் சொல். இதைப் பார்ப்பனர் தம் ஏடுகளில் காக்ஷி என்று போடுவார்கள்.
காட்சியைக் காக்ஷி ஆக்குவதில், தமிழ்ச்-சொல்லை வடசொல் ஆக்குவதில் அவர்-கட்குள்ள ஆசை புரிகிறது அல்லவா? இவ்வாறு காக்ஷி என்று பார்ப்பனர்கள் தம் ஏடுகளில் கொட்டை எழுத்துகளில் வெளியிடுவதால் நம்மவர்களும் அதையே பின்பற்றத் தொடங்கி விடுகிறார்கள்.
பார்ப்பான் சொன்னது பரமசிவன் சொன்னதல்லவா? அதனால்தான் நாம் பொதுவாக நம்மவர்கட்குச் சொல்லுகிறோம்.
தமிழ் தமிழர்க்குத் தாய்! தமிழிற் பிழை செய்வது தாயைக் குறைவுபடுத்துவதாகும். படக் காட்சிக்குரிய அறிவிப்போ, திருமண அழைப்பிதழோ, வாணிக அறிவிப்புப் பலகையோ எழுதும் போது தமிழறிஞர்களைக் கலந்து எழுதுங்கள் என்கிறோம்.
இனி இவ்வாறு தமிழ்ச் சொற்களையெல்லாம் பார்ப்பனர் வடசொற்கள் என்று சொல்லிக்-கொண்டு போகட்டுமே, அதனால் தீமை என்று தமிழரிற் சிலர் எண்ணலாம்.
அவ்வாறு அவர்கள் இந்நாள் வரைக்கும் விட்டு வைத்ததால் என்ன ஆயிற்று தெரியுமா? வடமொழியினின்றுதான் தமிழ் வந்தது, வடவர் நாகரிகத்திலிருந்துதான் தமிழர் நாகரிகம் தோன்றியது என்றெல்லாம் அவர்கள் சொல்வ-தோடு அல்லாமல், உலகையும் அவ்வாறு நம்பவைக்கவும் முயல்கிறார்கள்.
அது மட்டுமா? மேற்சொன்ன காரணங்-களைக் காட்டி, அவர்கள் பிறப்பிலேயே உயர்ந்தவர்கள் என்னும் முடிச்சுமாறித்-தனத்தையும் மெய் என்று நிலைநாட்டி வருகிறார்கள்.
இது வட சொல்லன்று; இன்ன காரணத்தால் இது தமிழ்ச் சொல் என்று விளக்கிவர முடிவு செய்துள்ளோம். தமிழர்கள் ஊன்றிப்படிக்க.
பிப்ரவரி-2015-2

ஊன்றிப் படிக்க: உண்மையை உணருக!
வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
இலக்கணம்
இலக்கம்_-குறி. அஃதாவது, ஒருவன் எந்த இடத்தில் அம்புவிட வேண்டுமோ அந்த இடம் இலக்கம்; எந்த இடத்தை அடைய வேண்டுமோ அந்த இடம் இலக்கம்.
இலக்கம் தூய தமிழ்ச் சொல். எல்லே இலக்கம் என்பது தொல்காப்பிய நூற்பா. இனி அந்த இலக்கம் என்பது, அம் என்ற சாரியை குறைந்து இலக்கு என நிற்பதும், அணம் என்பதைச் சேர்த்துக் கொண்டு இலக்கணம் என நிற்பதுண்டு.
(இலக்கு+அணம்) இலக்கணம் என்றால் அதன் பொருள் எனில், இலக்கை நெருங்குவது என்பதாம். அணம்_அணுகுவது. ஈறு திரிந்த ஆகு பெயர் என்பார்கள் இதை. அண என்று மட்டும் இருந்தால் என்ன பொருள் எனில், நெருங்க என்பது.
இது செய எச்சம். (இலக்கு+அண) இலக்கண என்றால் இலக்கை நெருங்க என்று பொருள். இவ்வாறு சொற்றொடர் ஆட்சியில் வந்துள்ளதா எனில் மணிமேகலையில் 30_-வது பவத்திறம் அறுகெனப்படுவ நோற்றகாதை 18_-வது அடியில், இலக்கணத் தொடரில் (இலக்கு+அண) என வந்துள்ளது காண்க.
இதைத் தொடர்ந்தும், சொற்றகப்பட்டும் இலக்கணத் தொடர்பால் என வந்துள்ளது. இவற்றால் இலக்கணம் என்பது தூய தமிழ்ச் சொற்றொடர் என்பது பெற்றாம். இலக்கணம் என்பது லக்ஷணம் என்ற வடசொல்லினின்று வந்ததாம்.
இவ்வாறு தமிழாராய்ச்சி வல்லவர் என்று பிழையாக நம்மவரால் கருதப்படும் தெ.பொ.மீனாக்ஷி, அழகு, சேது முதலியவர்கள் கூட எழுதியும் பேசியும் வந்துள்ளார்கள்.
இவர்கள் பார்ப்பனரின் கூலிக்காக, வடமொழியினின்று வந்தது என்று பிதற்றும் ஆட்கள் என்பதையும், ஆங்கிலம் படித்து பிழைக்கத் தெரியாதென்று, தமிழ் தெரியும் என்றும் தமிழர்களை ஏமாற்றித் திரிகின்றனர் என்பதையும் தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டும். (குயில், 8.-6.-1958)
நேயம்
இது நேசம் என்னும் வடசொல் சிதைவாம். சீவக சிந்தாமணியில் 3049_-ம் செய்யுள், நெய் போதி நெஞ்சு என வந்துள்ளதும், அது நேயம் என்பதையே குறிப்பதும் அறியாதார் பார்ப்பன, பார்ப்பன அடிவருடிகளும் கூறுவதைக் கொண்டு, நேயம் வடசொற் சிதைவு என்று கூறித் திரிகின்றார்கள்.
நெய் என்ற சொல்லினடியாகப் பண்புப் பெயர். ஆதலின் தூய தமிழ் என அறிக.
மீன்
இது கூட மீனம்  என்று வடசொற் சிதைவாம். மின்னல் என்பது அல் இறுதி நிலைபெற்ற தொழிற் பெயர். அது அவ்விகுதி நிலை கெட்டு மின் என நிற்பதுண்டு. அந்நிலையில் அதை முதனிலை தொழிற்பெயர் என்பார்கள்.
அம் முதனிலையாகிய மின் என்பதும் முதல் நீண்டு மீன் என்று ஆகும். அந்நிலையில் அதை முதனிலை திரிந்த தொழிற்பெயர் என்பார்கள்.
எனவே, மீன் என்பதும் முதனிலை தொழிற்பெயர். அது தொழிலாகு பெயர் என்னும் கோளைக் குறிக்கும். எனவே, மீன் தூய தமிழ்ச் சொல் பெயர்.
கோள் மின்னும் மீன் சூழ் குளிர்மாமதித் தோற்றம் என்ற சான்றோர் செய்யுளையும் நோக்குக. மின்னுவது மீன் எனக் காரணப் பெயர் என்று உணர்க.
குயில் 28. 6. 1958
மார்ச்-2015

ஊன்றிப் படிக்க : உண்மையை உணருக! 

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?
- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
ஆசை
இது ஆசா என்ற வடசொல்லின் திரிபு என்று கதைப்பர் பார்ப்பனரும், அவர் வால்பிடிக்கும் தமிழர் சிலரும்.
மனம் தன்னிலை நிற்றல் பொருள் அடையத் தக்க நிலை என்பர் அறிந்தோர். அஃதன்றி அம் மனம் வெளிப் பொருள் நோக்கி அசைதல் என்பது துன்பம் பயப்பது அன்றோ? எனவே அசைதல், அல்லது அசைவு என்பது மனத்தின் அசைவாயிற்று. அசைதல் தொழிற் பெயர். அசை முதனிலைத் தொழிற் பெயர். ஆசை முதனிலை திரிந்த தொழிற் பெயர். ஆசை தூய தமிழ்ச் சொல் என்க. மனம் பிறவற்றில் செல்லுதல் என்பது அதன் பொருள். உதவி என்பதற்கு ஒத்தாசை என்றது இழிவழக்காக வழங்கி வருகிறது. இந்த ஒத்தாசை என்பதில் அசை என்பதுதான் ஆசை என நீண்டது என அறிதல் வேண்டும். அசைதல் என்பதற்கு ஆசை என ஆனதற்குப் பேச்சு வழக்கில் வந்துள்ள இதையும் கண்டு நினைவுறுத்தினோம்.
பூசை
இது பூசா என்ற வடசொல்லின் சிதைவு என்று ஏமாற்றுவார் ஏமாற்றுவர்.
பூசு+ஐ என்பன தொழிற் பெயர் முதனிலையும் இறுதி நிலையுமாகும். பூசுதல் என்பதுதானே இது?
பூசுதல் என்றால் தூய்மை செய்தல், கழுவுதல் என்பது பொருள். இவ்வழக்கு இன்றும் திருநெல்வேலிப் பாங்கில் இருக்கக் காணலாம். இனிப் பூசு என்ற முதனிலை அன் சாரியை பெற்றுப் பூசனை என்றும் வரும். எனவே, பூசை, பூசனை தூய தமிழ்ச் சொற்கள் என முடிக்க.
நாடகம்
இது தூய தமிழ்ச் சொற்றொடர், வடமொழியன்று. நாடுகின்ற அகம் என விரியும் நிகழ்தி வினைத்தொகை நிலைத்தொடர் என்பர் தொல்காப்பியர்.
இனி அகம் என்ற சொல்லுக்கு
அகம், மனம், மனையே, பாவம்
அகவிடம் உள்ளும் ஆமே
என்ற நூற்பாவினால் பொருள் காண்க. நாடு அகம் என்பதில் வரும் அகத்துக்கு புகலிடம் என்று பொருள் கொண்டு (மன) உள்ளம் நாடுகின்ற அகன்ற இடம் எனக் கொள்க. இது நாடகமாகிய இடத்தைக் குறித்தது. இனி, நாடுகின்ற பாவம். அதாவது மெய் எனக் கொண்டு நாடுகின்ற ஆடல்நிலை எனப் பொருள் கொள்க.
எவ்வாறாயினும் நாடகம் என்றது தமிழ்ச் சொற்றொடர் என்பதில் தமிழர்க்கு ஓர் ஐயம் வேண்டா.
- (குயில், 28.6.58)\
ஏப்ரல்-2015-1

ஊன்றிப் படிக்க உண்மையை உணருக!
- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
காவியம், காப்பியம்
இவை இரண்டு சொற்களும் ஒரே பொருள் உடையவை. இவை வடசொற்கள் என்று கூறிப் பிழைப்பர் பார்ப்பனரும் அவர் அடி நத்துவாரும். காத்தல், காப்பு இவை இரண்டும் தொழிற்பெயர்கள். முன்னதில் தல் தொழிற்பெயர் இறுதிநிலை. பின்னதில் பு தொழிற்பெயர் இறுதி நிலை. இந்த இரண்டு தொழிற்பெயர் இறுதிநிலைகட்குப் பதிலாக அம் என்ற இறுதி நிலை பெற்றுக் காவம், காப்பம் என வரின் அது பிழையாகாது. எனவே, காவம், காப்பம் என்ற இரு தொழிற் பெயர்களும் இடையில் இகரச்சாரியை பெற்று காவியம், காப்பியம் என வந்தன என அறிதல் வேண்டும். இது எதுபோல எனில், ஓவம் என்பது இகரச்சாரியை பெற்று ஓவியம் என வந்தது போல என்க.
நெஞ்சைப் பயனற்ற வழியிற் செல்லாது நன்னிலைப்படுத்திக் காப்பது காப்பியம் காவியம் எனப் பொருள்பட்டுக் காரணப் பெயர்களாகியவாறு காண்க. காவியம் காப்பியம் வடமொழி இலக்கியத்திலும் வருவதால் அவை வடமொழியே எனக் கூறுவாரை நோக்கி உங்கள் வடமொழி இலக்கியத்தின் ஆண்டு என்ன? சொற்கள் உங்கட்கு ஏது? நீங்கள் இந்த நாட்டுக்கு வரும்போதே எல்லாச் சொற்களையும் கொண்டு வந்தீர்களா? என்று கேட்க வேண்டும். எல்லாச் சொற்களையும் நாங்கள் கொண்டு வந்தோம் என்று அவர்கள் கூறினால் இமையம் என்ற சொல்லை வரும்போதே கொண்டு வந்தீர்கள் எனில் நீங்கள் இருந்த இடத்தில் இமையம் என்ற மலை இருந்திருக்க வேண்டுமே- _ இருந்ததா? என்று கேட்க வேண்டும்.
இமையம் இமைத்தல் _ --ஒளித்தல். இமையமலை பனிமூட்டத்தால் ஒளி செய்தலால் அப்பெயரிட்டு அழைத்தார்கள் பண்டைத் தமிழர்கள்.
எனவே, காவியம், காப்பியம், இமையம் என்பன செந்தமிழ்ச் செல்வங்கள். அனைவரும் வந்தவர் மொழியல்ல என நெஞ்சில் நிறுத்துக.
வேதம்
வேதம் வந்தவர் மொழியன்று, வேய்தல்- _ மறைத்தல், வேதல் என மருவியது. வேய்ந்தான் என்பது வேய்ந்தன் என மருவியது போல, பின் வேதல் என்பது வேதம் என ஆனது. ஈறுதிரிந்த தோர் ஆ.குபெயர். கபிலம் என்பதிற் போல.
வேய்ந்தன் என்பதின் வேய்தல் எனின் கொற்றக் குடையால் மறைத்து காத்தல் என்று கொள்ளுதல் வேண்டும். இவ்வாறு மறைமலையடிகளும் உரைத்தார். எனவே, வேதம் செந்தமிழ்ச் சொல்லே எனக் கொள்க.
மானம்
மன்னல் தொழிற் பெயர். மன் ஈறுகெட்ட தொழிற்பெயர். அதாவது முதனிலைத் தொழிற் பெயர். மான் முதனிலை திரிந்த தொழிற்பெயர். அது முதனிலைப் பொருள் இறுதிநிலையாகிய அம் பெற்று மானம் என ஆயிற்று. மேற்சொன்ன மன்னல் அதாவது மன்னுதல் என்றால் தன்னிலையில் மாறாது நிற்றல் என்பது பொருள். அதனால்தான் மானம் என்பதற்குப் பொருள் கூறிய தமிழ்ச் சான்றோர் தன்னிலையில் மாறாது நிற்றலும், மாற்றம் நிகழ்ந்துழி வாழாது சாதலும் என்று பொருள் கூறிச் சென்றார்கள்.
தீப் பார்ப்பனர்களும் தேப்போ மீக்களும் இதை வட சொல் என்று தமக்குத் தோன்றியவாறே கூறி மகிழ்வர். மானம், உலகம் தோன்றியது முதல் மானத்துக்காக வாழ்ந்து வரும் தமிழரின் சொல் என்க.
ஆதி
ஆதி என்பது வடசொல்லாம். அச்சொல்லும் திருவள்ளுவருக்கு தாயின் பெயராம். அந்தத் தாய்கூட ஒரு புலைச்சியாம். ஆதி வட சொல்லன்று. தூய தமிழ்ச் சொல்லே. அஃது ஆதல் எனப் பொருள்படும் தொழிற்பெயர். ஆ_முதனிலை, தி_-இறுதிநிலை செய்தி, உய்தி என்பவற்றிற் போல, ஆதி_-முதன்மை, இதை வடவர் மூலப் பிரகிருதி என்பர்.
(குயில், 24.6.58)

மே2015-1

கங்கை
நவ்வல், நாவல் என்பன ஒரு பொருள் உடைய தமிழ்ச் சொற்கள். இது இந்தியாவின் நடுப்பகுதியில் மிகுதி. நாவல் மிகுதியாக நடுப்பகுதியில் இருந்த காரணத்தால் பண்டைத் தமிழர்கள் இத்தீவை நாவலந் தீவு என்றார்கள்.
தென் என்பது அழகு. அது கண்ணுக்குப் பொருளாகும் போது அழகு எனப்படும். மனத்துக்குப் பொருளாகும் போது இனிமை எனப்படும். எனவே தென்_-அழகு, இனிமை என்க. தென் என்பதிலிருந்து தென்னை தென்கு என்பன தோன்றின.
இவற்றின் பொருள் அழகியது, இனியது என்பன. எனவே தென்னையும் தென்கு அல்லது தெங்கும் அவ்வகையான மரத்துக்குக் காரணப் பெயர். தென்னை மரம் அதாவது தெங்கு அழகியதாக இருத்தலையும் நோக்குக!
இத் தென்னை நாவலந்தீவின் தென்புறம் மிகுதி. தென்னை இருந்த காரணத்தினாலேயே இப்புறத்திற்கு தெற்கு என்று கூறினார்கள் பண்டைத் தமிழ் மக்கள்.
வடம் என்பது ஆலமரம். அது வட்டமாக மேலோங்கித் தழைப்பதால் அவ்வாறு காரணப் பெயர் பெற்றது.
வடமரம் அதாவது ஆலமரம் நாவலந் தீவுக்கு வடபுறத்தில் மிகுதி. அந்தப் பக்கத்தை வடக்கு என்ற சொல் வடமரம் இருந்ததால் வந்த காரணப் பெயர் என அறிக. எனவே நாவல் மரங்கள் மிகுதியாக நடுவிடத்தை அழகு செய்ததால் இத்தீவுக்கு நாவலந்தீவு என்கிறார்கள் பண்டைத் தமிழர்கள்.
தென்னை மரங்கள் அழகு செய்து சிறக்க இருந்ததால் இப்பக்கத்தை தெற்கு என்கிறார்கள். வடமரம் மிகுந்திருந்த காரணத்தால் அப்பக்கத்தை வடக்கு என்றார்கள். யார்? பண்டைத் தமிழ் மக்கள். இன்னும் மேற்கு என்பதற்கு மேல் (உயரம்) என்பதுதான் பொருள். உயர்ந்திருக்கும் பக்கம் ஆதலால் அது மேற்கு என்கிறார்கள்.
கிழக்கு என்றால் கீழ் (தாழ்ந்த) என்பதுதான் பொருள். அப்பக்கம் தாழ்ந்திருத்தல் கருதியே கிழக்கு என்கிறார்கள். இதுவரைக்கும் சொல்லியவற்றால் தெரிந்து கொள்ள வேண்டியவை என்னவெனில்:
1.    நாவலந்தீவு முழுவதும் இருந்தவர்கள் தமிழர்கள் மட்டும்தான்.
2.    நாவலந்தீவு முழுவதும் வழங்கியது தமிழ் மட்டும்தான்.
3.    நாவலந்தீவு முழுவதும் இருந்த _ -இருக்கின்ற பொருள்கள் அனைத்துக்கும் உள்ள பெயர்கள் அனைத்தும் தமிழர் இட்ட தமிழ்ப் பெயர்களே!
ஆரியர்கள் பிறகு வந்தவர்கள். பிறகு வந்தார்கள் என்றால் அவர்கள் பிறகு இந்நாட்டுப் பொருள்களுக்குப் பெயர் வைத்திருக்கலாம் என்றால் அது எப்படி முடியும்? எந்த இடத்திலிருந்து வந்தார்களோ அந்த இடத்தில் இல்லா இமையத்துக்குப் பெயர் எப்படி அவர்கள் கொண்டு வந்திருக்க முடியும்?
கங்கு என்பது கரைக்குப் பெயர். தமிழில் கங்கு _- கங்கை என்று வருவதற்கு இலக்கணச் சட்டம் இருக்கிறது. அதை அய்யீற்றுடைக் குற்றுகரச் சொல் என்பார்கள். கங்கையாறு கரையாற் சிறப்புற்றது பற்றி அதைக் கங்கு அல்லது கங்கை என்கிறார்கள் அங்கிருந்த பண்டைத் தமிழர்கள்.
கங்கா என்ற வடமொழிச் சிதைவுதான் கங்கை என்று பார்ப்பனர் பகர்வர். அவர் கால்நத்திகள் கழறுவர்.
நாவலந்தீவுக்கே உரிய பொருள்களுக்-கெல்லாம் நாவலந்தீவின் மொழியாகிய தமிழ்ப் பெயர்தான் உண்டு என்று காட்டப்பட்டது இதுவரைக்கும்.
பொதுவான பொருள்களுக்கு அமைந்த சொற்களிற் பெரும்பாலனவும் தமிழ்ச் சொற்களாகும் என்பது மறுக்க முடியாததாகும்.
(குயில், 1.7.58)

மே2015-2

ஊன்றிப் படித்து உண்மையை உணருக!
- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
பகவன்
பகவான் என்று வடவர் சொல்லுகிறார்களே அதுதானாம் இது. இது கலப்பில்லாத முட்டாள்தனமான பேச்சு. பகல் என்பதும் பகவு என்பதும் ஒரே பொருளைய சொற்கள். பகல் என்பதில் பகு முதனிலை. பகவன் என்பதில் பகவு முதனிலை. பகல் என்பதற்கும் பகவு என்பதற்கும் நடுவுநிலை. அறிவு என்பன பொருள்கள்.
பகவு என்பதற்கு பாவேந்தர்கள் அன் இறுதிநிலை சேர்த்துப் பகவன் என்று சிறப்புறுத்துவார்கள். எனவே பகவு, பகவன் இவைகட்கு அறிவு, அறிவன் என்பன பொருள். பகவன் தூய தமிழ்ச்சொல். பகவன் வடசொல்லாம், அது திருவள்ளுவரின் தந்தையின் பெயராம். அந்த பகவனும் பார்ப்பனனாம். ஆதியும் பகவனும், புலைச்சியும் பார்ப்பனனுமாம். திருவள்ளுவர் பேரறிஞராகத் திகழக் காரணம் அவர் பகவன் என்னும் பார்ப்பனனுக்குப் பிறந்ததாகும். இப்படி அந்தப் பாவிகள் ஒரு கதை கட்டி விட்டிருக்கிறார்கள்.
(குயில், 24.6.58)
சலம்
ஜலம் என்ற வடசொல்லின் சிதைவு என்று கூறுவார்கள் கலகக்காரர்கள்.
சலம் என்பது காரணம் பற்றிவந்த தூய தமிழ்ச் சொல். சல, சல என்று இயங்குவது காரணமாக தண்ணீர் சலம் என்று பெயர் பெற்றது. இவ்வாறு மறைமலையடிகளும் கூறியருளினார். இதைப் பார்ப்பனர் ஜலம் என்கிறார்கள் அல்லவா? நாத்திருந்தாமை அவர் கொண்ட குற்றம். அதனால் சலம் அவர் மொழியாகிவிட்டது.
(குயில், 1.7.58)
உவமை
உவமை என்பது உபமானம் என்பதன் சிதைவாம். இவ்வாறு மொட்டைத் தலைக்கும் முழந்தாளுக்கும் முடிபோடுவர் பார்ப்பனரும், அவர் அடியாரும். பொருள் நிலை உணர்வித்து உவப்புறச் செய்வது உவமை. உவத்தல், உவமை ஒரு பொருட் சொற்கள். தாமரை மலர் முகம் என்பதில் தாமரை மலர் உவமை முகம் உவமை ஏற்கும் பொருள். இவ்வாறு கூறாமல் முகம் என்று மட்டும் சொன்னால் முகம் என்ற பொருளின் நிலையை நன்கு உணரச் செய்ததாகாது என்பதை நோக்குக. உவப்புறச் செய்வது உவமை எனின் இச்சொல் காரணப் பெயராதலும் அறிக. எனவே, உவமை செந்தமிழ்ச் செல்வமே என்க.
அமிழ்து
இது குன்று, குன்றம் என அம் சாரியை பெற்றது போல், அமிழ்தம் என்றும் வரும். அன்றியும் அமுதம் அமுது என்றும் மருவி வழங்கும். இதை பார்ப்பனரும் அவர்களின் அடியார்க்கடியாரும் அம்ருதம் என்னும் வடசொற் சிதைவு என்று கதைப்பர். அது கான்றுமிழத் தக்கதோர் கதை என்க. அமிழ்து என்பது அமிழ்+து எனப்பிரியும். இதன் பொருள் மேலிருந்து அமிழ்கின்ற உணவு என்பது மழைக்குப் பெயர். அமிழ்+து வினைத்தொகை நிலைத் தொடர். அமிழ்து மழைக்குப் பெயர் என்பதென்ன? மழையானது வாழ்வார்க்குப் பயன்படும் வகையில், வளவயல் வறளாது உயிர் மருந்தாய்ப் பெய்யும் நிலையில் அமுது எனப்படும். மேலிருந்து அமிழும் உணவும் என்றும் இத்தொடரின் பொருள் கண்டு இன்புறுக. து_-உணவு. இதனாற்றான் வள்ளுவரும்,
வானின்று உலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று
என்று குறித்தார். எனவே அமிழ்து, அமிழ்தம், அமுதம், அமுது என்பன அனைத்தும் தூய தமிழ்ச் சொற்களே என்க.
மழை என்று தோன்றிற்று. அன்று தோன்றிற்று அதன் பெயராகிய அமிழ்து என்பது. அதன்பின் அதாவது கிரேதாயுகத்தில் பாற்கடல் கடைந்ததில் வந்ததாக உள்ள பொய்க்கதையில் வந்துள்ளது அம்ருதம் என்ற சொல். இதனால் அமிழ்தை அம்ருதம் என்று எடுத்தாண்டனர் வடவர் என்று தெளிதல் வேண்டும்.
(குயில், 08.07.1958)
ஜூன்2015-1

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?


- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
ஆலயம் இதையும் வடசொல் என்று கூறுகின்றார்கள் பார்ப்பனரும் அவர் அடியார்க்கடியாரும். ஏன் கூறமாட்டார்கள். ஏமாந்தாரும் காட்டிக் கொடுத்தாரும் நிறைந்த தமிழகத்தில்? ஆல் என்பதனடியாகப் பிறந்தது இச்சொல். ஆல்+அ+அம் எனின் அவ்வும், அம்மும் சாரியைகள். அம் என்பது அகம் என்பதன் திரிபு எனினும் அமையும். ஆலயம் என்பன் நேர்பொருள் ஆலாகிய இடம் என்பதாம். முன்நாளில் ஆலின் அடியில் அமைந்த நிழல் மிக்க பேரிடத்தை வழக்குத் தீர்ப்பிடமாகவும், கல்வி பயிலிடமாகவும், விழா நடைபெறுமிடமாகவும் கொண்டு பெருமைப்படுத்தினார்கள். அதுவே பிற்காலத்தில் உருவ வணக்கத்திற்குரிய இடமாயிற்று என்றும் ஆராய்ந்துரைத்தார்கள் அறிஞர்கள் பலர். ஆலயம் இடம் என்ற பொருளில் இலக்கியங்களிலும் வந்துள்ளது.
.................. மழை இடிப்புண்டு ஓர் நாகம் ஆலயத்தழுங்கி யாங்கு மஞ்சரி அவல முற்றாள். (சீவக சிந்தாமணியின் 897 ஆவது பாடல்) என்று வரும் அடிகளில் ஆலயம் என்பது நாகம் தங்கும் இடம் என வந்துள்ளது. தான் விளையாடி மேனாள் இருந்ததோர் தகைநல் ஆலைத் தேன் விளையாடும் மாலை யணிந்தபொற் பீடம் சேர்த்தி யான் விளையாடும் அய்ந்தூர் அதன்புறம் ஆக்கி னானே! என்ற சிந்தாமணிச் செய்யுளையும் நோக்குக.
எனவே, ஆலயம் காரணப் பெயராகிய தூய தமிழ்ச் சொல்லே. நாகரிகம் நகர சம்பந்தம் நாகரிகம் என்று கரடி விடுவார் தமிழின் பகைவர். அன்று! நாகரிகம் தூய தமிழ்ச் சொற்றொடர் என்க, என்னை? நாகம் என்ற சொல்லுக்கு, நாகன் விண் குரங்கு புன்னை நற்றூசு மலை பாம்பு யானை என்ற நூற்பாவினால், இத்தனை பொருள்கள் இருப்பது அறியப்படும். எனவே, நாகம் மலைக்கும் பெயர். நாகர் என்பது மலையாளிகள் என்பதாயிற்று. இனி இகத்தல் என்பது பகைத்தல் வெறுத்தல் என்பதாம். நாகரிகம் என்பது நாகர்களை _ மலையாளிகளை வெறுப்பதோர் பண்பாடு என்க. நாகரிகம் ஈறு திரிந்ததோர் ஆகுபெயர். பண்டு தீயொழுக்கத்தவரான ஆரியர் தமிழரால் புறந்தள்ளப்பட்டனர். அவ்வாரியர் மலைப்பாங்கில் ஒதுங்கி வாழ்ந்தனர். அவர் தீயொழுக்கம் தமிழர்க்குத் தீரா வெறுப்பை உண்டாக்கிற்று. தமிழரிடத்து _ ஓர் புதிய பண்பாடு தோன்றியது. நாகரை _ நாகரின் தீயொழுக்கத்தை வெறுப்பதென்று அன்று தோன்றியதே நாகரிகம் என்பது. ஆதலின் நாகரிகம் காரணம் பற்றி வந்த செந்தமிழ்ச் செல்வமே என்க. (குயில், 08.07.1958) வேட்டி! இது வேஷ்டி என்ற வடசொல்லின் சிதைவாம். இவ்வாறு பார்ப்பனரும், பார்ப்பனர் அடியாரும் பகர்வர்.
வெட்டப்படுதலின் வேட்டி எனத் தூய தமிழ்க் காரணப்பெயர். வெட்டல் என்ற தொழிற் பெயரின் அல், இறுதிநிலை கெட, வெட்டு என நின்று முதல் நீண்டது வேட்டு என. அது இ என்னும் பெயர் இறுதி பெற்று வேட்டி ஆனது. அறுக்கப் படுதலின் அறுவை என்றும், துணிக்கப் படுதலின் துணி என்றும், துண்டிக்கப் படுதலின் துண்டு என்றும் வருவதும் ஒப்பு நோக்கத் தக்கதாகும். முட்டி இது முஷ்டி என்ற வடசொற் சிதைவாம். முட்டுதல், முட்டு, முட்டி என வந்தது காண்க.
(குயில், 15-07-1958)
ஜூன்2015-2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக