பக்கங்கள்

வெள்ளி, 15 ஜூன், 2018

புரட்சிக் கவிஞரும் திருவள்ளுவர் படமும்

பட்டுக்கோட்டை பி.எல்.இராசேந்திரன்



“தை” முதல் நாள் பொங்கல் நாள் - தமிழ்ப் புத்தாண்டு தொடக்க நாள்! தமிழ கத்தில் திருவள்ளுவர், திருநாள் 2015 தை 1 இல் மலர்கிறது.

இந்நேரத்தில், அவர், வாழ்வோடும் திரு வள்ளுவரோடும் தொடர்புடைய முக்கிய நிகழ்ச்சி ஒன்றை நாம் நினைவு கூரலாமா?

திருவள்ளுவப் பெருந்தகையின் திரு வுருவப் படமொன்று, தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டுத் தமிழகம் எங்கும் முக்கிய இடங்களிலெல்லாம் காட்சியளிப் பதை நாம் பார்க்கிறோம். ஓவிய விற்பன்னர் வேணுகோபால சர்மா கைவண்ணத்தில் உயிர்பெற்ற அந்தத் திருவள்ளுவர் உருப் பெற மூல காரணமானவரே புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார்தான்!

1950களில், புரட்சிக் கவிஞரின் மாண வனாகப் புதுவையில் நான் குருகுலவாசம் நடத்திக் கொண்டிருந்தநேரம் அது. அப் போதெல்லாம் அவர் வெளியூர்ப் பயணங் களில் உதவியாளனாக நான்தான் உடன் செல்வேன். அப்படி ஒருமுறை நாங்கள் சென்னைக்குப் பயணமானோம். புரட்சிக் கவிஞரின் மாப்பிள்ளை மா.தண்டபாணி அவர்களும் எங்களோடு வந்தார்.

சென்னையில் பாவேந்தர் புரட்சிக் கவி ஞரின் நெருங்கிய நண்பரான திரு. வேணு கோபால் சர்மா, சிறந்த புகைப்பட நிபுணரும் ஆவார்; சிவப்புச் சால்வையும் புன்னகையு மாக இன்றும் நாம் காணும் பாவேந்தர் படம் அவர் எடுத்தது தான். அவர் அப்போது சென்னை வால்டாக்ஸ் ரோட்டில் உள்ள வசந்தவிகாரில்தான் தங்கியிருந்தார். பாவேந் தர் பெரும்பாலும் சென்னைக்கு வந்தால், அங்குபோய் அவரோடு தங்குவதுதான் வழக்கம். அதேபோல் அன்றும் நாங்கள் அங்கேதான் போய்ச் சேர்ந்தோம்.

தலைசிறந்த ஓவியரான வேணுகோபால் சர்மா, கையில் ஓர் ஒற்றை ரோஜாவோடு உட் கார்ந்திருக்கும் முகலாய மன்னர் ஷாஜ ஹான் ஓவியம் வரைய பென்சில் “ஸ்கெட்ச்” பண்ணி வைத்திருந்தார்.
“என்ன சர்மா, இது யாரோட படம்?” என்றார் புரட்சிக் கவிஞர். சர்மா பதில் சொன்னார்.

“அட ஏம்பா நீ வேற!... நான் ஒண்ணு சொல்றேன் செய்றியா?” என்றபடியே, ஒரு மேஜை அளவுக்கு நிறுத்தி வைக்கப்பட் டிருந்த அந்தப் படத்தின் முன் நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தார், புரட்சிக் கவிஞர். வேணுகோபாலசர்மா, மிகக் கவனத்தோடு அவரைப் பார்த்தார்.

“இதபார் சர்மா, வலது கையில் இருக்கிற ரோஜாவை எடுத்துடு; அதுக்குப் பதிலா ஒரு எழுத்தாணியைக் கொடு. இடது கையில் ஓலைச் சுவடி போடு. மேல உடுப்பெல்லாம் வேணாம். வெறும் உடம்பு, இடது தோள்ல அங்க வஸ்திரம், அதாவது பாதி உடம்பை, மறைச்சாப்ல இருக்கணும்; தலைல பெரிசா ஒரு முண்டாசு எழுதிருக்கியே? அதை அப் படியே சுருட்டி முடிஞ்சி ஜடாமுடி ஆக்கீடு.. அப்புறம்...” ஒரு நிமிஷம் அந்தப் படத்தைப் பரவலாகப் பார்த்தார் புரட்சிக் கவிஞர்.

“ஊம்.. முக்கியமான விஷயம். கால்ல விரலெல்லாம் சேர்ந்தாப்ல இருக்கக் கூடா துப்பா; கட்டை விரலை மட்டும் கொஞ்சம் விலக்கி நிமிர்த்திவிடு. அறிவாளிங்களுக்கு அப்படித் தான் இருக்கும்!” என்று கூறி விட்டு எழுந்தார்.

சர்மாவின் வியப்பு

“சரி, அதுமாதிரியெல்லாம் செய்தா என்ன ஆகும்?” என்றார் வேணுகோபால் சர்மா. “புரியலே? நீ தான் ஓவியனாச்சே! நான் சொன்னதையெல்லாம் வெச்சி கற் பனை பண்ணிப்பாரேன்?... இதுவே திரு வள்ளுவர் படம் ஆயிடும்!” என்றார் புரட் சிக்கவிஞர். வியப்போடு பார்த்தார் சர்மா.

நாங்கள் அடுத்த தடவை சென்னைக் குச் சென்றபோது, அந்த முகலாய மன்னர் சாட்சாத் திருவள்ளுவரே ஆகிவிட்டிருந் தார்! “வேற என்ன செய்யணும் சொல் லுங்க?” என்றார் வேணுகோபால் சர்மா.
“நீ விட்டுடு. காமராஜர்கிட்டே சொல்லி, அரசாங்கம் மூலமா எதுனா இதுக்கு உதவி செய்ய முடியுமான்னு நானே பார்க்கி றேன்!” என்று சொன்னார் புரட்சிக் கவிஞர்.

புதுவைத் தமிழ்ப் பேராசிரியர் சு.குமார சாமி என்பாருக்குப் பாராட்டு விழா நடந்த ஏற்பாடாகியது அப்போதைய தமிழக முதல்வரான திரு. கு. காமராசரையே அவ்விழாவிற்கு வரச் செய்யலாம் என்று கூறி, அவரைப் புதுவைக்கே அழைக்கின்ற பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டார் புரட்சிக் கவிஞர்.

5.2.1959 வியாழக்கிழமையன்று மாலை யில், புதுவை வேதபுரீசுவரர் கோயிலில் அந்தப் பாராட்டு விழா நடப்பதாக ஏற்பாடு. அதற்கு முதல் நாளில் அந்தத் திருவள்ளு வர் படத்தோடு வேணுகோபால் சர்மா வுக்கு புதுவைக்கு வந்து சேரும்படி வகை செய்யப்பட்டது.

வள்ளுவர் படத்திறப்பு

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தலை மையில் பேராசிரியர் சு. குமாரசாமிக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. அவ்விழா வில் பங்கேற்ற தமிழக முதல்வர் காமராசர், அப்பேராசிரியருக்குப் பொன்னாடை போர்த்தினார். விழா முடிந்ததும், புரட்சிக் கவிஞர் வீட்டில் திருவள்ளுவர் படத் திறப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பெருமாள் கோவில் தெரு, 95 ஆம் எண்ணுள்ள தனது இல்லத்தில் நடை பெற்ற அவ்விழாவிற்கும் புரட்சிக் கவி ஞரே தலைமை தாங்கினார். அப்போது அவர், ஓவியர் வேணுகோபால் சர்மா வையும் அவரால் உருவாக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் திருவுருவப் படத்தையும் பற்றி மனம் திறந்து பாராட்டிப் பேசினார். “திருவள்ளுவர் இப்படித்தான் இருந் திருக்க முடியும்; இதை எவனாலும் மறுக்க முடியாது” என்று அழுத்தமாகக் குறிப் பிட்டு, அதைத் திறந்து வைக்குமாறு தமிழக முதல்வர் காமராசரைக் கேட்டுக் கொண்டு அவருக்குப் பொன்னாடை அணிவித்தார்.

காமராசர், திருவள்ளுவர் படத்தைத் திறந்து வைத்து ஓவியர் வேணுகோபால் சர்மாவுக்குச் சால்வை அணிவித்தார். அன்றைய அவர் சொற்பொழிவு ரத்தினச் சுருக்கமாக அமைந்தது.

“நான் ஒண்ணும் பெரிய தமிழ்வித்வான் கிடையாது; தமிழ்ல என்னென்னமோ ஏராளமான இலக்கியமெல்லாம் இருக்குங் கிறாங்களே அதையெல்லாம் படிச்சதும் கிடையாது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் என்னாட்டம் இல்லே; நிறைய படிச்சவர் - புலவர். அப்படியாப்பட்டவரே திருவள்ளு வர் இப்படித் தான் இருந்திருப்பார்னு அடிச்சி சொல்றார். அதனால திருவள்ளுவர் இதாட்டம்தான் இருந்திருக்கணும்கிறேன். இந்தப் படத்தைத் திறந்து வைப்பதில் நான் உள்ளபடியே ரொம்பவும் சந்தோஷப்பட றேன்!” - இதுதான் திரு. காமராசரின் அன் றையப் பேச்சு.

விழாவில், புரட்சிக்கவிஞரின் மாப்பிள் ளையும் “குயில்” வார ஏட்டின் அமைச் சருமான (மேனேஜர்) மா.தண்டபாணி நன்றி கூறிப் பேசினார்.

அன்றைக்குத் தமிழக முதலமைச்சருக்கு மட்டுமல்ல; விழாவிற்கு வந்திருந்த அனை வருக்குமே புரட்சிக்கவிஞர் வீட்டில்தான் சாப்பாடு. என்ன சாப்பாடு தெரியுமோ? வான்கோழி பிரியாணி!

அதுதான் காமராசருக்குப் பிடிக்குமாம். பாவேந்தரே சொன்னது இது!

எனக்கொரு சோதனை 

அன்றைக்குப் பந்தி பரிமாறியவர்களில் நானும் ஒருவன். அப்படிப் பரிமாறும்போது, தோளில் போட்டுக் கொண்டிருந்த என் கைக்குட்டை தமிழக முதலமைச்சர் இலை யருகே விழுந்துவிட-அதுகண்டு பாவேந்தர் என் மீது வீசிய நெருப்புப் பார்வை இன் னும் எனக்கு நினைவிருக்கிறது.

அதிலிருந்து, காலர் அழுக்குப் படா திருக்கக் கைகுட்டையை மடித்து வைக்கும் தஞ்சை மாவட்ட வழக்கத்தையே நான் விட்டு விட்டேன்.

அதன்பிறகு அந்தத் திருவள்ளுவர் படம் சென்னையில் உள்ள தேனாம்பேட்டை பொருட் காட்சித் திடலில் காட்சிக்கு வைக் கப்பட்டது. பேரறிஞர் அண்ணா , நாவலர், கலைஞர் முதலான அரசியல் தலைவர் களெல்லாம் பார்த்துப் பாராட்டினார்கள்.

இதற்கெல்லாம் பிறகுதான் 15.2:1960 இல் காமராசர் ஆட்சிக்காலத்திலேயே திருவள் ளுவர் திருவுருவம் 15 காசு அஞ்சல் தலை யாக வெளிவந்தது.

பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழக முதல்வராக இருந்தபோது (9.6.1967) தலை மைச் செயலகத்தில் திருவள்ளுவர் திரு வுருவப் படம் சட்டப் பேரவையில் திறந்து வைக்கப்பட்டது.

1975இல் சென்னை -அரசினர் தோட்டத் தில் உள்ள ராஜாஜி மண்டபத்தில், அரசு ஏடான “தமிழரசு” பத்திரிகையின் 5ஆவது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. அப் போது தமிழக முதல்வராக இருந்த கலை ஞர் மு.கருணாநிதி ஒரு சிறப்பான காரியம் செய்தார்.

அதுவரை ராஜாஜி மண்டபத்தில் வைக் கப்பட்டிருந்த வெள்ளையாட்சிக் காலக் கவர்னர்கள் படத்தையெல்லாம் எடுத்து விட்டுத் தமிழறிஞர்கள் பன்னிருவரின் திருவுருவப் படங்களை அம்மண்டபத்தில் வைக்க ஏற்பாடு செய்தார்,

அவர் ஆலோசனைப்படியே, வேணு கோபால் சர்மா வரைந்த திருவள்ளுவர் ஓவியம் - எழுந்து நிற்பது போல வேறொரு ஓவியரால் சித்திரிக்கப்பட்டு ராஜாஜி மண் டபத்தில் வைக்கப்பட்டது. எளிமையான அந்த விழாவில் சர்மா உட்பட அந்த ஓவி யங்களை வரைந்த அத்தனை ஓவியர்க ளுக்கும் முதலமைச்சரான கலைஞரா லேயே சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அதே கலைஞர் அவர்கள் மீண்டும் முத லமைச்சரான பிறகு - முதுமை காரணமாக உடல் நலிவுற்றிருந்தார், திருவள்ளுவர் திரு வுருவத்தை நமக்களித்த அந்த மாபெரும் ஓவியர் திரு.வேணுகோபால் சர்மா.
மருத்துவச் சிகிச்சைகென மாண்புமிகு முதல்வர் அவர்கள், அரசு மூலம் பத்தா யிரம் ரூபாய் நிதி வழங்கினார் ஆயினும் அவர் நலம்பெற்று எழுந்தாரில்லை.

“நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்திவ் உலகு”

என்ற குறளுக்கு இலக்கணமாகிவிட்டார்!

நன்றி: ‘குயில்’ - 2015,

ஜன.-பிப்., பக்கம் 8-10

-  விடுதலை ஞாயிறு மலர், 28.4.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக