பக்கங்கள்

சனி, 3 நவம்பர், 2018

சீரழிவுக்காரர்கள் யார் - துக்ளக்கே?

**கலி. பூங்குன்றன்***


பிரித்தாளும் சூழ்ச்சி என்பது பார்ப்பனர்களின் குருதியிலே கலந்த ஒன்று. இதில் முன் வரிசையில் இருப்பது திருவாளர் குருமூர்த்தி அய்யரின் 'துக்ளக்'.

சீரழிவை ஓரளவு எம்.ஜி.ஆர். தடுத்தார் என்ற தலைப்பில் அவர் துக்ளக்கில் (31.10.2018) ஒரு கட்டுரையைத் தீட்டித் தள்ளியுள்ளார்.

இதோ அந்தப் பகுதி:

"தமிழகத்தின் இன்றைய தரம் தாழ்ந்த அரசியல் நிலைக்கு காரணமாக இருந்தவை எவை? என்று உடுமலைப் பேட்டை யிலிருந்து பி.கே.பிரியா என்ற வாசகர் கேள்வி எழுப்பியுள்ளார். பெரியாரின் கருத்துக்கள், அதை நடை முறைப்படுத்திய திமுக, குறிப்பாக 1960-70களில் கருணாநிதியின் ஆட்சி இவைதான் காரணம். எவை எவையெல்லாம் காலம் காலமாக தமிழ் சமுதாயத்துக்கு பண்பையும், நன்னெறிகளையும் கொடுத் தனவோ, அவற்றையெல்லாம் இரண்டு தலைமுறைகளைச் சேர்ந்த இளைஞர்களின் மனதில் கேவலப்படுத்தி, கைவிட வைத்தது பெரியாரின் சிந்தனைகள். தமிழ் நூல்களால்தான் தரமான அரசியலைக் கொடுக்கும் பண்பும் அறநெறியும் நாம் பெற முடியும். ஆனால் தமிழ் நூல்கள் கேவலமானவை, தமிழ் புலவர்கள் தரமற்றவர்கள், தமிழே காட்டுமிராண்டி மொழி, கற்பு என்பது பெண்ணடிமை என்றெல்லாம் கூறிய பெரியார், திருவள்ளுவரைக் கூட கேவலப்படுத்தினார்.

திருக்குறள், இந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலிய தெய்வங்களையும், மறுபிறப்பு, சுவர்க்கம், நரகம், மேல் உலகம், பிதுர், தேவர்கள் முதலிய ஆரிய மதசம்பிரதாயங்களையும், மூடநம்பிக்கைகளை பரப்புகிறது என்று கூறினார் அவர். அதனால் தமிழ் பாரம்பரியத்தை கைவிட்டு, தமிழல்லாத பாரம்பரியங்கள் மேல் கணிசமான தமிழர்களுக்கு மதிப்பும், மோகமும் ஏற்பட பெரியாரின் சிந்தனைகள் முக்கிய காரணம். அதனால்தான் தனி வாழ்விலும், பொதுவாழ்விலும் அறநெறி, பண்பு, தரம் குறைய ஆரம்பித்தது. அவருடைய சிந்தனைகளை நடைமுறைப்படுத்திய பெருமை திமுகவைச் சேரும். ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், நன்னூல் எல்லாவற்றையும் கருணாநிதி குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு இளம் மனதில் நல்லதே படியாமல் செய்தார். அதிமுகவை எம்.ஜி.ஆர். துவக்கி தி.க., தி.மு.க. துவக்கிய இந்தச் சீரழிவை ஓரளவு தடுத்தார். இல்லையென்றால் தமிழகம் முழுவதும் நாசமாய் போயிருக்கும்."

இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.

எவை எவை எல்லாம் காலம் காலமாக தமிழ் சமுதாயத் துக்குப் பண்பையும், நன்னெறிகளையும் கொடுத்தனவோ, அவற்றையெல்லாம்  இரண்டு தலைமுறைகளைச் சேர்ந்த இளைஞர்களின் மனதில் கேவலப்படுத்தி, கைவிட வைத்தது பெரியாரின் சிந்தனைகள் என்கிறார் திருவாளர் கு. அய்யர்.

இவை உண்மைதானா? பிறப்பின் அடிப்படையில் ஜாதி - தீண்டாமை - இன்னார்தான் படிக்க வேண்டும், மற்றவர்கள் படிக்கக் கூடாது, படித்தால் நாக்கை அறுக்க வேண்டும், கேட்டால் ஈயத்தை காய்ச்சி காதில் ஊற்ற வேண்டும், படித்து வைத்திருந்தால் அவன் நெஞ்சைப் பிளக்க வேண்டும் என்கிற பார்ப்பன வைதிகத்தை - இவற்றை கட்டிக் காக்கும் மதத்தை வேதங்களை, ஸ்மிருதிகளை, உபநிஷத்துகளை இதிகாசங்களை, சாஸ்திரங்களை, புராணங்களை எதிர்த்தால் சமுதாயத்தைச் சீரழிப்பதாம்!

மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி என்னும் இந்த மவுடீகத்தின் மிக மோசமான அமைப்பு முறையை ஒழிக்கப் புறப்பட்டார் ஒருவர் என்றால் அவர்தான் சமுதாயத்தின் மகத்தான தலைவரும், வழிகாட்டியும், ஏன் தந்தையுமாவார். தந்தை பெரியார் மறைந்து 45 ஆண்டுகளாகியும் தந்தை பெரியார் மதிக்கப்படுகிறார் - பாராட்டப்படுகிறார் - அவர்தம் 140ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா வெளிநாடுகளில் எல்லாம் கொண்டாடப்படுகிறது - இந்தியாவிலும் அலகாபாத் உயர்நீதிமன்றத்திலும் பனாரஸ் பல்கலைக் கழகத்திலும்கூட கொண்டாடப்படுகிறது என்றால் அதன் பொருள் என்ன?

காந்தியார் இந்தியாவின் தந்தை என்றால் பெரியார் தமிழ்நாட்டின் தந்தை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி சொல்லுகிறார் என்றால், இதனை உள் வாங்கிக் கொள்ளும் நல்ல சிந்தனை இல்லாதவர்கள்தான், தந்தை பெரியாரின் சிந்தனைகள் தலைமுறையைக் கெடுத்தன என்று கெட்ட புத்தியோடு சொல்லுவார்கள். தந்தை பெரியாரின் சிந்தனை, தொண்டு இவற்றின் ஆளுமை அய்.நா.வின் யுனெஸ்கோவுக்கு தெரிகிறது - ஆனால் இந்த மயிலாப்பூர்களுக்கும், திருவல்லிக் கேணிகளுக்கும் தெரியவில்லை என்று சொல்ல முடியாது  - தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளக் கூடாது; இன்னும் ஒருபடி மேலே சென்று தவறான வியாக்கியானங்களையும், தகவல் களையும் சொல்லிக் கொச்சைபடுத்துபவர்கள்தான் தீய சிந்தனைகளை விதைக்கக் கூடியவர்கள்.

பார்ப்பனர்கள் லோகக் குரு ஜெகத்குரு என்று தூக்கி வைத்துக் கொஞ்சுகிறார்களே அவர்கள் யார்?

தீண்டாமையை க்ஷேமகரமானது என்று சொன்னவர் தானே இவர்களின் ஜெகத் குரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி (ஸ்ரீஜெகத்குருவின் உபதேசங்கள்).

தீண்டாமை ஒழிப்புக்கு அந்த சங்கராச்சாரியாரின் ஆதர வைக் கேட்டு காந்தியார், பாலக்கோட்டில் முகாமிட்டிருந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்களைச் சந்திக்க சென்றதுண்டே! (16.10.1927).

காந்தியாரிடம் 'அந்த ஜெகத் குரு' என்ன சொன்னார்? ஹரிஜன ஆலயப் பிரவேச விஷயத்தில் சாஸ்திரங்களையும், பழைய பழக்கங்களையும் நம்பி இருப்பவர்கள் நாட்டில் பெரும்பாலோர்  இருக்கிறார்கள் என்றும், அவர்கள் மனம் நோகும்படிச் செய்யும் எந்த மாறுதலும் இம்சைக்கு ஒப்பாகு மென்றே தாம் முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது என்றும் ஸ்வாமிகள் காந்தியடிகளிடம் தெரிவித்தார் ("தமிழ்நாட்டில் காந்தி" பக்கம் 575, 576).

தீண்டாமைக் கொடுமையால் மனித உரிமைகளற்று ஒதுக்கப்பட்ட மக்களின் மனம் நோவது பற்றி குருமூர்த்திகள் கூட்டம் கொண்டாடும் சங்கராச்சாரியாரின் மனம் கவலைப் படாது - அக்கறை கொள்ளாது. சக மனிதர்களைத் தீண்டாதவர் என்று கூறும் ஆதிக்க வெறியர்களின் மனம் பற்றியும், சாஸ்திரங்களின் நிலைப்பாடும் குறித்துதான் அவர்கள்தம் பெரியவாளின் மனம் கவலைப்படும்.

இந்தக் கூட்டத்தின் மனம் என்பது சகமனிதனைத் தீண்டாதவன் என்று கூறும் - மனிதநேயமற்ற மரக்கட்டைகள் என்றுதானே சொல்ல வேண்டும்.  பாதிக்கப்பட்டவன் பதறக் கூடாது; கேட்டால் அவாள் அவாள் தலை எழுத்து என்ற தாரக மந்திரம்!

'காகத்தையும் படைத்து கல் நெஞ்ச பார்ப்பானையும் ஏன் படைத்தாய்?' என்ற பாடல் வரிதான் நினைவிற்கு வந்து தொலைகிறது.

சக மனிதனைத் தீண்டாதவன் என்று கூறும் ஜெகத் குருக்கள் சீரழிவுச் சிந்தனைக்காரர்களா? தீண்டாமையை ஒழிக்க இன்னொரு மாநிலத்துக்கும் கூடச் சென்று போராடி குடும்பத்துடன் சிறை சென்ற வைக்கம் வீரர் தந்தை பெரியார் சீரழிவுக்காரரா?

கடித்த உடனேயே சாகடிக்கிற பாம்புக்கு "நல்ல" பாம்பு என்று பெயர் வைத்திருப்பதுபோல, மனிதனை மனிதன் வெறுக்கச் சொல்லும் மனிதனுக்குப் பெயர் மகா பெரியவாள் ஜெகத் குருவாம் - வெட்கக் கேடு!

பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன் பிராமணன் என்றும், காலில் பிறந்தவன் சூத்திரன் என்றும், சூத்திரன் என்றால் வேசி மகன் உள்ளிட்ட ஏழு வகைத் தன்மை உடைய கீழ் மகன் என்றும் எழுதப்பட்ட மனுதர்மத்தை இன்றுவரை தூக்கிப் பிடிக்கும் 'துக்ளக்'குக்கு எவ்வளவு அசட்டுத் துணிவிருந்தால், ஆணவமிருந்தால் இந்தச் சூத்திரர் மீதான கொடுமையை எதிர்த்துப் போர்க் கொடி பிடித்த - 95 வயதிலும் மூத்திர சட்டியைத் தூக்கிக் கொண்டு ஊர் ஊராகச் சுற்றிச் சுற்றி பிரச்சாரம் செய்து மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்திய தொண்டு செய்த பழுத்தபழமாம் தந்தை பெரியாரைப் பார்த்து சமுதாயத்தைச் சீரழித்தவர் என்று எழுதும்? தனி வாழ்விலும், பொது வாழ்விலும், ஒழுக்கத்தைக் கடைபிடித்த கண்ணியத்தின் மாக்கடல் தந்தை பெரியார்.

"பக்தி தனிச் சொத்து, ஒழுக்கம் பொதுச் சொத்து" என்று சொன்னவர் தந்தை பெரியார் (சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் 24-11-1964) ஆனால் இவர் ஜெகத்குரு என்ன சொல்லுகிறது தெரியுமா?

"நல்ல ஒழுக்கம் இருந்தால் போதுமென்றும், கடவுள் அவசியமில்லை என்றும் சிலர் கூறுகின்றனர். இது தவறான கருத்து. கடவுள் அருள் இல்லையானால் ஒரு தனி நபருக்கோ, நாட்டுக்கோ விமோசனம் ஏற்பட முடியாது" (கல்கி 8.4.1958) இதுதான் ஸ்ரீலஸ்ரீ சங்கராச்சாரியாரின் அ(ம)ருள் வாக்கு!

இவர்கள் கூறும் கடவுளிடத்திலேயே ஒழுக்கம் கிடை யாது. தாருகாவனத்து ரிஷிப் பத்தினிகளின் மனைவி மார்களைக் கற்பழித்தவன் சிவன் என்று வெட்கமில்லாமல் எழுதி வைத்திருப்பவர்கள் இவர்கள். இத்தகைய கடவுளின் அருள் எந்தத்  தகுதியில் இருக்கும்?

மானமிகு கலைஞர் அவர்கள் ஒரு முறை கேட்டாரே 'இந்து மதத்தில் கற்பழிக்காத கடவுள் உண்டா?' என்று கேட்டாரே,  அந்தக் கேள்விக்கு இதுவரை பதில் உண்டா? கேள்வியின் நியாயத்தைப் பற்றிக் கவலைப்படாமல் கூறிய கலைஞரை இன்று வரைத் தூஷிப்பது எந்த வகையில் அறிவு நாணயம்?

ஒரு ஒழுக்கமான கடவுளைக்கூடப் படைக்கக் யோக்கியதை இல்லாதவர்கள் அந்த ஒழுக்கக் கேடான கடவுளைப்பற்றிப் பேசினால், அது சமூகச் சீரழிவாம்! என்னே இரட்டை அளவுகோல்?

இந்திரன், பிரம்மா, விஷ்ணு தெய்வங்களையும், மறு பிறப்பு, சுவர்க்கம் நரகம், மேல் உலகம் பிதுர், தேவர்கள் முதலிய ஆரிய மத சம்பிரதாயங்களையும் மூடநம்பிக்கை பரப்புகிறது என்று பெரியார் கூறி விட்டாராம் - அடேயப்பா எப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள்!

இவர்கள் கூறும் அந்தப் பிர்மா யார்? பெற்ற மகள் சரஸ்வதியையே பெண்டாட்டியாக்கியவன் தானே. விஷ்ணு யார்? சலந்திரன் மனைவி விருந்தை மீது மோகங் கொண்டு கணவன் சலந்திரனைக் கொன்று, சலந்திரன் போல் உருவங் கொண்டு விருந்தையைக் கற்பழித்தவன் தான் எங்கள் காத்தல் கடவுளான மகாவிஷ்ணு என்று சொல்லுவதற்கு வெட்கப்படாதவர்கள் இந்தக் கேவலம் உடைய ஒருவன்  கடவுளா? என்று கேட்ட பெரியாரை சீரழிவுக்காரர் என்கிறார் என்றால், இவர்களின் யோக்கியதை என்ன? இந்த மகாவிஷ்ணுவின் கிருஷ்ண அவதாரம் எந்தளவு கயவாளித்தனமானது! சின்ன வயதில் வெண்ணெய்யைத் திருடுவதும், வாலிப வயதில் பெண்ணைத் திருடுவதும்தான் ஒரு கடவுளின் இலட்சணமா?

குளத்தில் பெண்கள் குளித்துக் கொண்டிருந்த போது அவர்களின் ஆடைகளைத் திருடி மரத்தில் ஏறிக் கொண்டு பெண்களின் நிர்வாணத்தை ரசித்த காமக் கிறுக்கன் தான், அய்ந்தாவது வேதம் எனும் கீதையை, பாகவதத்தை எழுதியவன் என்று சொல்ல கிஞ்சிற்றும் வெட்கம் இல்லையா?

இந்து மதக் கடவுள்களின் யோக்கியதையை பெரியார் புட்டு வைத்தால் பொத்துக் கொண்டு வருகிறது பொல்லாக் கோபம்! அது சரி, அவர்களின் மூதறிஞர் ராஜாஜி என்ன சொல்கிறார்?

"வியாசர்விருந்து" என்ற தலைப்பிலும், "சக்ரவர்த்தித் திருமகன்" என்ற தலைப்பிலும், மகாபாரதத்தையும், ராமாயணத்தையும் 'கல்கி'யில் ராஜாஜி தொடராக எழுதி வந்தது அன்பர்களுக்குத் தெரியும் - அதன் பின்னர் பாகவதத்தை எளிய தமிழில் எழுதலாமே என்று சதாசிவம்  தமது யோசனையை ராஜாஜியிடம் வெளியிட்டார். அதற்கு ராஜாஜி கூறிய பதில் சிந்திக்க வைப்பதாகும்.

"சதாசிவம்! எனக்கு பாகவதத்தை எழுதுவதில் நாட்ட மில்லை,  அதில் பகவானின் லீலைகளும், அற்புதங்களும் மிகுதியாக உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்" ('கல்கி' 4.10.2009 பக்கம் 72).

இதற்கு என்ன சொல்லப் போகிறது குருமூர்த்திக் கூட்டம்?

இந்திரன் மீதும் குறை கூறிவிட்டாராம் பெரியார்? அபாண்டம்! அபாண்டம்!! இந்திரனுக்கு வக்காலத்து  வாங்குவ திலிருந்தே. இவர்களின் யோக்கியதை உடலில் துண்டுத் துணியில்லாமலேயே நிர்வாணமாகி விடுகிறது.

இந்த இந்திரனை ஆயிரம் கண் உடையவன் என் கிறார்களே - அந்த 'விஷயம்' என்னவென்று தெரியுமா?

கவுதம முனிவரின்  மனைவி அகலிகையை கவுதம முனிவன் போல் வேடம் பூண்டு புணர்ச்சி செய்தவன்தானே தேவர்களுக்கெல்லாம் தலைவனாகிய இந்திரன். இந்திரனின் அயோக்கியத்தனத்தைக் கண்டு  வெகுண்டு கவுதம முனிவர் இந்திரனுக்குக் கொடுத்த சாபம் என்ன தெரியுமா? (தேவநாதன் என்று இந்திரனுக்குப் பெயர் இந்தப் பெயர் கொண்ட காஞ்சிபுரம் மச்சேசுவரர் கோயில் அர்ச்சகன், அந்தத் தேவநாத னாகிய இந்திரனைப் பின்பற்றி கோயில் கருவறையில் காம விளையாட்டு மேற்கொண்டதும் பொருத்தம்தான்!)

"தேவர்களுக்கெல்லாம் தலைவன் என்று சொல்லுவதற்கு உனக்கு வெட்கமாக இல்லையா? குரு பத்தினியாச்சே என்றுகூடக் கருதாமல் மாறு வேடம் பூண்டு புணர்ந்த காமாந்தக்காரனே! எதற்கு ஆசைப்பட்டு இந்தக் காரியத்தை  சூதாக செய்தாயோ, அதுவாகவே உன் உடம்பு முழுவதும் (பெண் குறியாகவே) போகக் கடவது" என்று சாபமிட்டதாக "அர்த்தமுள்ள' இந்துப் புராணம் கூறுகிறதே!

இந்தக் கேவலங்களை எல்லாம் ஆதாரத்துடன் எடுத்துக் கூறினால், அடேயப்பா இந்த அய்யன்மார்களுக்கு ஆகாயத்துக்கும் பூமிக்குமாகக் கோபம் குமுறி எழுவதைப் பார்த்தால் நல்லாதான் வாயில் வருகிறது....

"மானமுள்ள ஆயிரம் பேர்களுடன் போராடலாம், மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமமான காரியம்"  (குடிஅரசு 10.5.1936) என்று தந்தை பெரியார் கூறிய அந்த அனுபவ அறிவுமொழியை எண்ணிதான் வியக்க வேண்டியுள்ளது. கடவுள் நம்பிக்கையற்றவரான தந்தை பெரியார் கல்விக் கூடங்கள் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளச் செல்லும் பொழுது கடவுள் வாழ்த்து அங்கே பாடப் பெற்றால் எப்படி நடந்து கொள்வார்? தானாகவே எழுந்து நிற்க முடியாத நிலையில், இரு பக்கங்களிலும் இரு தோழர்களின் தோள்களின் கைகளைப் போட்டுக் கொண்டு அந்தப் பாடல் முடியும் வரை தள்ளாத வயதிலும் எழுந்து நின்ற அந்தப் போற்றத் தரும் பண்பாட்டின் சிகரம் தந்தை பெரியார் எங்கே - தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடும்போது குத்துக் கல்லாக உட்கார்ந்து கொண்டு இருக்கும் இந்த ஜெகத்குரு ஜென்மங்கள் எங்கே? தன்னுடைய கழகத் தோழர்களுக்கு அறிவுரை கூறும் போதுகூட என்ன சொல்லுகிறார் அந்தச் சுயமரியாதைச் சூரியன்?  "நமது கழகக் கொள்கை மிக மிகத் தீவிரமானது. கடவுளை, மதத்தை, சாஸ்திரத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றாலும் நேரடியாகக் கண்டிக்க எவருக்கும் துணிவே இல்லையே!

நமது கழகத்தினர்கள் இடையேயும் ஒருவருக்கு ஒருவர் குறை கூறித் திரிவதும் இல்லை.

நமது கழகக் கூட்டங்களிலும் காலித் தனம், கலாட்டாக்கள் எதுவும் நடப்பதும் கிடையாது.

நமது கழகம் கடந்த 40 ஆண்டுகளாக இப்படியாக நடத்தி வருகின்றோம்.

1940 முதல் எடுத்துக்கொண்டால் எனது பிறந்தநாள் விழாவானது ஆண்டுக்கு ஆண்டு நம்மைப் பார்த்து பிறர் காப்பியடிக் குமாறு வளர்ந்துகொண்டுதான் வருகின்றது.

பணம், காசு விஷயமாய் எடுத்துக் கொண்டாலும் ஸ்தாபனத்துக்கு வளர்ந்து கொண்டுதான் வருகின்றது.

நாம் எதிர்பார்த்த லட்சியத்தில் எதிலும் தோற்றுவிடவும் இல்லை. பெரிதும் வெற்றி பெற்றுக்கொண்டு மற்றவர்களும் ஏற்கும் படிதான் வளர்த்து வருகின்றோம்.

அரசாங்கமும்கூட நமது தோழர்களை மற்ற கட்சிக் காரர்களைவிட நல்லவண்ணமே மதிக்கின்றது.

இந்த நிலை, பெருமை மாறாமல் இருக்கவேண்டும். இப்படியே இருந்து வரும் நிலையிலேயே நாம் சாகவேண்டும் என்றுதான் ஆசைப்படுகின்றேன்.


நமது தோழர்களும் நாணயமாகவும் கட்டுப்பாடாகவும் இருக்கின்றார்கள்.


நமது கொள்கையில் ஓட்டை விழுந்தால்கூட பரவாயில்லை. ஆனால், நாண யத்தில் - ஒழுக்கத்தில் தவறு இருக்கக் கூடாது. அதுதான் ஒரு கழகத்துக்கு முக்கியமான பலம்.


(- தந்தை பெரியார்,  'விடுதலை' 11.10.1964)

இப்படி எல்லாம் ஒழுக்கத்தைப் பற்றிக் கூறும் தகுதி சங்கராச்சாரியார்களுக்கு உண்டா?

எழுத்தாளர் அனுராதா ரமணனைக் கேட்டால் இவர்களின் லோகக் குருவின் கதை நாறிப் போய் விடாதா? (ஒன்றைக் கொடுத்து ஒன்பதை வாங்க ஆசைப்பட வேண்டாம் - எச்சரிக்கை) அதே நேரத்தில் இவர்களின் 'லோகக் குருக்'களே தந்தை பெரியாரை மனதிற் கொண்டு கணித்துக் கூறியதும் உண்டு.

படித்தால் ஆச்சரியமாக, நம்புவதற்குக் கடினமானதாகக் கூட இருக்கக் கூடும்.  ஆனாலும் இதோ அது:

"ரீஃபார்ம்களை ஆரம்பித்து விடுகிற எல்லா லீடர் களையும் ஒழுங்கு தப்பினவர்கள் என்று சொல்லுவதற் கில்லைதான். சாஸ்த்ர, ஸம்பரதாய விதிகளாகிற ஒழுங்குகளை இவர்களும் விட்டவர்கள்தான் என்பதால் இவர்களை ஸனாதன தர்ம பீடங்களான மடஸ்தாபனங்களிலிருக்கிற நாங்கள் ஒப்புக் கொள்ளத்தான் இல்லை என்றாலும், இவர்கள் றிமீக்ஷீஷீஸீணீறீ லிவீயீமீ இல் (தனி வாழ்க்கையில்) ஸத்யம், ஒழுக்கம், தியாகம், அன்பு போன்ற பலவற்றைக் கடைப்பிடித்தவர்கள் என்பதை ஆக்ஷேபிப்பதற்கில்லை. ஓரளவிற்குப் படிப்பு, விஷய ஞானம் எல்லாம் உள்ளவர்களாகவும், ஜனங்களை நல்லதில் கொண்டு போக வேண்டும் என்பதில் நிஜமான அக்கறை கொண்டவர்களாகவுமே இந்தச் சீர்திருத்தத் தலைவர்களில் பலர் இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்" என்று குறிப்பிட்டுள்ளார் ('தெய்வத்தின் குரல்' மூன்றாம் பகுதி, பக்கம் எண் 336).

சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த தந்தை பெரியாரை மனதிற் கொண்டு தானே இதனைக் கூறியிருக்க வேண்டும்.

(வளரும்)

- விடுதலை நாளேடு, 2.11.18

வெள்ளி, 19 அக்டோபர், 2018

தமிழைப்பழைய நிலையிலேயே வைத்திருக்கலாமா?


தமிழைப்பழைய நிலையிலேயே வைத்திருக்கலாமா?


 


 

பெரியார் நடத்திய ஏடுகளில் தமிழ்ப் பெயர்கள்

பெரியாரின் கருத்துகள் கடுமையாக இருந்தனவே தவிர, பெரியார் தமிழ் மொழிக்கு உரிய இடத்தை வழங்கத் தவறவில்லை. அவர் இயற்கை எய்தும் வரையும் தமிழ் மொழி, தமிழினம், தமிழ்நாடு என்கிற உரத்த சிந்தனையிலேயே வாழ்ந்தவர் பெரியார். 1925ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் தேதி பெரியார் ‘குடிஅரசு’ எனும் வார ஏட்டைத் தொடங்கிய விவரம் பெரியாரை அறிந்த அனைவருக்கும் தெரியும்.

‘குடிஅரசு’ எனும் பெயர் பற்றி பெரியார், ஜனநாயகம் என்பது வடமொழிச் சொல். அதை வேண்டாமென்று ஒதுக்கி ‘குடிஅரசு’ என்ற பெயரை வைத்தேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இப்படி பெரியார் ஏட்டிற்குத் தமிழ் பெயராகச் சூட்டியது ‘தமிழ் எதிர்ப்பு’ ஆகுமா? பெரியாரின் இச்செயலினை நமது எதிரிகள் யாராவது அறிந்திருப்பார்களா? என்றால் இருக்காது.

பெரியார் உலக மனிதர் என்று மேலே குறிப்பிட்டோம் அல்லவா? தாய் மொழி என்பது எது? என்பதற்கு அவர் தந்துள்ள விளக்கம் இதுவரை எவரும் கூறாததாகும். தந்தை ஒரு மொழி பேசுபவராகவும், தாய் ஒரு மொழி பேசுபவராகவும் இருக்கிறபோது தந்தை மொழியா? தாய்மொழியா? இருமொழி ஒருவருக்கு எப்படித்தாய் மொழியாக இருக்கமுடியும்? இந்த இடத்தில் தாய்மொழி எனும் பற்றுக் கோடு காணாமல் போய்விடுகிறது. பெரியார், ஒருவனுக்குத் தாய்மொழி என்பது பிறந்த பழகிய வாய்ப்பினால் புகுத்தப்பட்டது (‘விடுதலை’ 15.10.1962) என்கிறார். இங்கே தந்தை மொழியும் தாய் மொழியும் வீட்டு மொழியாகி - பழகிய வாய்ப்பினால் கிடைத்த நாட்டின் மொழி தாய்மொழி ஆகிவிடும் என்கிறார் பெரியார்.

பழகிய வாய்ப்பினால் தாய்மொழி

வங்காளி ஒருவர் கேரளப் பெண்ணை மணக்கிறார். தமிழ்நாட்டில் வாழுகிறார். குழந்தை பிறக்கிறது. வளர்கிறது. அக்குடும்பம் தமிழைக் கற்று வாழ்கிறது. தமிழ் குடும்பம் ஆகிவிட்டது. தாய், தந்தையர்க்குப் பிறகு அக்குழந்தையும் அதனைச் சார்ந்தவர்களும் தமிழராகிவிட்டனர். தாய் தந்தையரின் தாய்மொழிகள் இங்கே காணாமல் போய்விட்டன. ஆகவே பெரியார் சொல்வது-போல பழகிய வாய்ப்பினால் தாய் மொழி புதிதாகவும் தோன்றிவிடுகிறது.

எனவே, தமிழ்மொழி பேசுவதை வைத்து ஒருவரை தமிழர் என்று கூறிவிட முடியாது. தமிழ் பேசத் தெரியாததால் தமிழர் இல்லை என்றும் சொல்ல முடியாது-. அதேபோல் இங்கிலாந்து சென்ற தமிழ்க் குடும்பப் பிள்ளைகளுக்குத் தமிழே தெரியாமல் போய்விடுகிறது-.

தமிழ் மொழி பற்றி பெரியார்

“தாய்மொழியைப் பாதுகாத்தல் ஒவ்வொருவருடைய கடமையாகும். நம் தமிழ்மொழி தாய்மொழி என்ற மட்டிலும் அல்லாமல் எல்லா வளப்பங்களும் கொண்ட சிறந்த மொழி. இந்தியாவிலேயே பழமை வாய்ந்த பண்பட்ட மொழியாகும்’’ (‘விடுதலை’ 20.06.1959) என்றார் பெரியார். இதுமட்டுமில்லை. இதைவிடவும் தமிழர்களுக்கு அவர் புகட்டும் கருத்தைப் பாருங்கள்.

“மொழி உணர்ச்சி இல்லாதவர்களுக்கு நாட்டு உணர்ச்சியோ, நாட்டு நினைவோ எப்படி வரும். நம் பிற்காலச் சந்ததிக்காவது சிறிது நாட்டு உணர்ச்சி ஏற்படும்படி செய்ய வேண்டுமானாலும் மொழி உணர்ச்சி சிறிதாவது இருந்தால்தான் முடியும். அன்றியும், சமுதாய இன உணர்ச்சி சிறிதாவது இருக்க வேண்டுமானாலும் மொழி உணர்ச்சி இருந்தால்தான் முடியும்’’ (‘விடுதலை’, 25.07.1972)

பெரியாரின் மேற்கண்ட இரு கருத்துகளும் அவர் தமிழ்மொழி மீது வைத்திருந்த பற்றையும் மதிப்பையுமே எடுத்துக்காட்டுகிறது. பெரியார் மொழிப்பற்று இல்லாதவராக இருந்தும் தாம் பிறந்ததும், பேசுவதும், எழுதுவதும், தமது கருத்தை வெளிப்படுத்தி பகிர்வதற்கானதுமான தமிழ்மொழி மீது அவருக்கு உள்ள ஆழமான ஈடுபாடு. இன உணர்ச்சி சிறிதாவது இருக்க வேண்டுமானால் மொழி உணர்ச்சி இருந்தால் தான் முடியும் என்கிறார் பெரியார். இவ்வளவு ஆழமாகத் தமிழ் மொழியைப் பார்க்கிறவர் தமிழுக்கு எதிரானவராக எப்படி இருக்க முடியும்?

தமிழைப் பழைய நிலையிலேயே வைத்திருக்கலாமா?

தமிழை எவ்வெவ்வகையில் உயர்த்த வேண்டும்? அதற்குள்ள பழம் பெருமை மட்டும் போதுமா? அதன் இலக்கிய, இலக்கண பெருமிதங்கள் இக்காலச் சூழலில் தமிழ் மக்களின் வாழ்வுக்கு உதவுமா? வாழ்க்கை முறைக்கு ஏற்றதாய் இருக்க, உலகத்தோடு தொடர்பு கொள்ள, விரைந்து செயல்பட, பணியாற்ற நாம் மொழியை ‘பழைய’ நிலையி-லேயே வைத்திருக்கக் கூடாது என்பதே பெரியாரின் சிந்தனையாக இருந்தது.

பெரியார் தமிழ் மொழியைப் பற்றி கருத்துச் சொல்கிறபோது தமக்குத் தோன்றுகிற கருத்தை எடுத்து வைக்கிறவர் இல்லை. படித்துவிட்டு மட்டும் கருத்தைக் கூறாமல் வாழ்நிலையில் தமிழர்கள் படும் துன்பங்கள், இடையூறுகள், தடைகள் எல்லாவற்றையும் நேரில் பார்த்து அறிந்து தமது கருத்தை முன் வைப்பவர் அவர்! ஆகவேதான் மொழியையும் பழமையிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்று அவர் எழுதினார்; பேசினார்.

தமிழை விரும்புவது ஏன்?

“நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்ற மொழி, தமிழைவிட மேலான ஒரு மொழி இந்நாட்டில் இல்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர, அது அற்புத அதிசயங்களை விளைவிக்கக் கூடியது என்பதற்காக அல்ல. அற்புதச் சக்திகள் நிறைந்த மொழி என்று பிடிவாதம் செய்வது அறியாமைதான்! அது தமிழ் மாண்புகூட அல்ல. தமிழில் அதிசயம், மந்திரம், சக்தி முதலிய சொற்களே இல்லை.’’

ஆகவே தான் பெரியார், 20.01.1935ஆம் நாளிட்ட ‘குடிஅரசு’ தலையங்கத்தில் எழுத்துச் சீர்திருத்தங்களைப் பற்றி எழுதினார். தமிழ்மொழியை முன்னேற்றம் அடையச் செய்ய வேண்டும். அதன்வழி தமிழர்களை உயர்த்த வேண்டும் என்கிற ஆதங்கத்தில் பெரியார் சொல்வதைக் கேளுங்கள்.

“தமிழ் மொழியில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் பல என்பதைப் பற்றி பலருக்கு அபிப்ராயம் இருந்தாலும் எவரும் தைரியமாய் முன்வராமலேயே இருக்கிறார்கள். இவ்வளவு பெரிய காரியத்திற்கு பாஷாஞானம், இலக்கண ஞானம், பொதுக்கல்வி ஆகியவை இல்லாத ஒரு சாதாரண மனிதன் முயற்சிக்கலாமா? என்பது ஒரு பெரிய கேள்வியாக இருக்கலாம். ஆனால், தகுந்த புலமையும் பாஷாஞானமும் இலக்கண அறிவும் உள்ளவர்கள் எவரும் முயற்சிக்கா விட்டால் என்ன செய்வது? தவம் செய்வதா? அல்லது ஜபம் செய்வதா?"

இது பெரியாரின் குரல். ஆகவே அவர் முதன் நிலையில் தமிழில் சில எழுத்துச் சீர்திருத்தங்களை மேற்கொண்டார். அவர் செய்தவைகளில் இன்று சிலவற்றை நாம் ஏற்றுக் கொண்டு நடைமுறைப்-படுத்தி வருகின்றோம். இப்படிப்பட்ட பெரியாரைத் தமிழ்மொழிக்கு எதிரானவர் என்று கூறுகிறார்களே?

பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம்

1947இல் பெரியார் ‘ஐ’, ‘ஔ’ பற்றிய எழுத்துகளை ‘அய்’, ‘அவ்’ என்று எழுத வேண்டும் என்று முடிவு எடுத்தார். இது குறித்தும் அவர் விளக்கமாக எழுதினார். பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து அறிஞர் சோமலே எழுதியதை அப்படியே கீழே தருகின்றோம்.

“பத்திரிகையின் தேவைக்கு ஏற்ப எழுத்துச் சீர்திருத்தம் செய்ய வந்தவர் பெரியாரே. பெரியாரின் சிந்தனைப் போக்கினைத் தொடர்ந்து இந்தியா, இலங்கை, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து வந்த பேராளர்கள் யாழ்ப்பாணத்தில் 1972 இறுதியில் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாட்டில் கட்டுரைகள் வாசித்துள்ளனர். பெரியாருடைய எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்பதே தமிழக அரசு அவருக்கு நாட்டக் கூடிய நினைவுச் சின்னமாகும்.’’ (‘தமிழ் இதழ்கள்’: சென்னைப் பல்கலைக் கழக வெளியீடு)

அறிஞர் சோமலே பெரியார் பற்றி எடுத்துக் கூறுகிற கருத்துத் தமிழுக்கு எதிரானது ஆக முடியுமா? பெரியாரது எழுத்துச் சீர்திருத்தம் தமிழின் மேன்மையை நோக்கியது ஆகுமே தவிர, அதனைச் சிறுமைப்படுத்தியதாகவோ தமிழ்--மொழிக்கு எதிரானதாகவோ கொள்ள முடியுமா? பெரியாரின் கருத்துகளைப் பார்ப்பனர்கள் திரிக்கிறார்கள். நம்மில் இருக்கிற விபீஷணாழ்வார்களும் அவர்களது கருத்து-களுக்குத் துணை போகிறார்கள். பெரியாரால் தமிழ் மொழி குறித்து எடுத்து வைக்கப்பட்ட கருத்துகள் எத்தகைய நோக்கம் கொண்டவை என்பதைத் தமிழர்களாய் இருப்பவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எனவே, பெரியார் தமிழுக்கு எதிரானவர் அல்ல. அவர் தமிழை உலகத் தரத்துக்கு உயர்த்த பாடுபட்டவர்!

(தொடரும்...)

- நேயன்

- உண்மை இதழ்- 16-31.10.18

ஞாயிறு, 14 அக்டோபர், 2018

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (19) ஆரியரின் பொய்களை மறுத்து எழுதப்பட்டதே குறள்!

- தந்தை பெரியார்

நேயன்

 


2000 ஆண்டுகளுக்கு முன்பு இப்படிப்பட்ட கருத்துக்கள் தோன்றியிருந்தது என்றால் நம்முடைய நாடு எவ்வளவு மேலான நாடாக அன்று இருந்திருக்க வேண்டும்? வள்ளுவர் குறளை எழுதிய காலம் தமிழ்நாடு ஆரிய ஆதிக்கத்தில் அமிழ்ந்து கிடந்த காலம், குறள் தோன்ற வேண்டிய அவசியம் கூட ஆரிய ஆதிக்கம் தோன்றிய மக்களை அழித்து நமது கலாசாரத்தை ஒழித்துக் கொண்டிருந்த நிலையைத் தடுப்பதற்குத்தான் வள்ளுவர் குறளை எழுதினார். குறளில் காணப்படும் தத்துவங்கள் அத்தனையும் இதைத்தான் எடுத்துக்காட்டுகின்றன.

நம் நாட்டில் குறளாசிரியருக்கு முன்பு அதே மாதிரிக் கருத்துகளை சித்தார்த்தர் என்ற பெயரை கொண்ட புத்தர் பரப்பியிருக்கிறார். அதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே இக்கருத்துகளை எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

சாதாரணமாகப் பழங்காலம் என்றால், காட்டுமிராண்டிக் காலம் என்றே சொல்லலாம். அதுவும் ஆரியக் கருத்துகள் முழுக்க முழுக்க காட்டுமிராண்டித்தன்மை கொண்டவைகளேயாகும்! அந்தக் காலத்திலேயே இப்படிப்பட்ட கருத்துகள் தோன்றி காட்டுமிராண்டித்தன்மையை ஒழிக்க முயற்சித்திருக்கின்றன; என்றாலும்,  அக்காட்டுமிரண்டித்தன்மையின் வேகம்தான் இன்னும் நம்மைக் காட்டுமிராண்டிகளாக்கி அதே நிலையில் வைத்திருக்கிறது.

ஆரியர்கள் நம்மை வெற்றி கொண்டார்கள் என்று சொல்லுவது எல்லாம் பல அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் சொல்லுவது எல்லாம், படையெடுப்பினால் போரிட்டு வெற்றி கொண்டார்கள் என்பதல்ல. கலாச்சாரங்களை தங்கள் கருத்துகளை இப்படிப்பட்ட கருத்துக்களை நம்மக்களுக்குள் புகுத்தித்தான் வெற்றி கொண்டார்கள்.  எவ்வளவு மோசமாக இருந்து அவர்கள் புகுத்தியிருந்தால் அப்படிப்பட்ட கருத்துகளைக் கண்டிக்க என்றே இப்படிப்பட்ட அறிவாளிகள் தோன்றியிருக்கக் கூடும். ஆரியர்கள் வேகமாகப் புகுத்திய அந்தக் கருத்துகளை புத்தர், வள்ளுவர் எதிர்த்திருக்கிறார்கள்.

புத்தர், வள்ளுவர் போன்றவர்கள் ஆரிய ஆதிக்கத்தை அதன்வழி முறைகளைப்பற்றிச் சிந்தித்ததில் இருந்து, இக்காட்டுமிராண்டிக் கருத்துக்கள் அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் பொருந்தாத ஆபாசமான தன்மைகள் உலகில் மற்றும் பல பாகங்களில் முன்பே இருந்திருக்கின்றன என்று தெரிய வருகிறது.

நான் வள்ளுவரை நாத்திகராகக் கொண்டுதான் காண்கின்றேன். அவர் என் கண்ணுக்கு பெரிதும் நாத்திகராகவே காணப்படுகின்றார். மனிதன் ஓர் விஷயத்தைச் சொன்னான் என்றால், அதை மட்டம் என்கின்றோம். மனிதன் ஓர் நல்ல விஷயம் கூறி இருக்கின்றான் என்றால் அவனை மனிதத்தன்மைக்கு மேம்பட்டவன்; தெய்வீகத்தன்மை உடையவன் என்பதை எல்லாம் ஒட்ட வைத்து விடுவது என்பதுதான் நம் நாட்டில் நடந்து வந்திருக்கின்றது. தெய்வீகத்தன்மை உடையவர் கூறியது என்றால், ஆராயவே மனிதன் பயப்படுகின்றான். ஆராயவே முன்வருவதில்லை.

மனிதன் தான் அடைய முடியாது என்று எண்ணுவதை, தனக்குத் தெரியாததை, தனக்கு அதாவது, மனிதத்தன்மைக்கு மேம்பட்டது என்று எண்ணுகின்றான். அதுபற்றி ஆராய்வதே பாவம் என்று அல்லவா கூறுகின்றான்! அது எப்படி ஒப்புக்கொள்வது?

வள்ளுவர் எந்த இடத்திலும் தன்னை மனிதத் தன்மைக்கு மேம்பட்டவர் என்று எங்கும் காட்டிக் கொள்ளவே இல்லை.

இப்படிப்பட்ட வள்ளுவரை மனிதத்தன்மைக்கு மேம்பட்டவர் என்று காட்ட பித்தலாட்டமான கதையும் கட்டிவைத்திருக்கின்றார்கள்.

அவர் ஒரு பறைச்சிக்கும், பார்ப்பானுக்கும் பிறந்தவர் என்றும், அதுவும் கலவி முடிந்து உடன் பிறந்தவர் என்றும், அதற்கும் அந்தப் பார்ப்பானின் நிபந்தனைபேரில் அதை பறைச்சியும் மற்றக் குழந்தைகளையும் பிறந்து உடனேயே, பிறந்த இடத்திலேயே போட்டுவிட்டுச் சென்றதுபோல வள்ளுவரையும் போட்டுவிட்டு சென்று விட்டார்கள் என்றும், வேறு யாராலோ எடுத்து வளர்க்கப்பட்டு பல அதிசய அற்புதம் செய்தார் என்றெல்லாம் எழுதி வைத்துள்ளார்கள்.

திருவள்ளுவர் எந்த இடத்திலும் சாதாரணத்தன்மையைவிட தன்னை மனிதத்தன்மைக்கு மேம்பட்டவர் என்று காட்டிக் கொள்ளவே இல்லை.

அவர் தன்னை ஓர் அறிவியல்வாதி என்றுதான் காட்டிக் கொள்கிறார். தன் கருத்துக்குச் சரி என்றுபட்டதை எடுத்துச் சொல்வதல்லாமல், தன்னை ஓர் கடவுள் நம்பிக்கைவாதியாக எங்கும் காட்டிக் கொள்ளவே இல்லை.

அவர் எங்கும் கடவுளைப் பற்றி கூறியவரும் அல்ல. எந்த சமயத்தைச் சார்ந்தவரும், நம்பியவரும் அல்ல.

குறள் ஓர் சமய நூல் அல்ல; அது ஓர் அறிவு நூல். அவர் கடவுளைப் பற்றிக் கூறி இருப்பதாக முதல் அத்தியாயத்தையே கடவுள் வாழ்த்து என்று பேர் வைத்து விட்டார்கள். நான் மேலே கூறிய அப்படிப்பட்ட அறிவியல்வாதியா தமது நூலில் கடவுளுக்கு முதல் இடம் கொடுத்திருப்பார்?

புத்தரும் வள்ளுவரும்

2500  ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் என்பவர் தோன்றி,  பார்ப்பான் கற்பித்த கடவுள் மோட்சம், நரகம் முதலிய பித்தலாட்டங்களை எல்லாம் கண்டித்து மக்களுக்கு பகுத்தறிவு உணர்ச்சி உண்டாக்கப் பாடுபட்டார். இப்படிப் பாடுபட்ட அவரும், அவரது மார்க்கமும் பார்ப்பனர்களால் தந்திரமாக ஒழிக்கப்பட்டுவிட்டது.

அடுத்து வள்ளுவர் தோன்றினார். அறிவு சம்பந்தமான கருத்துகளை எல்லாம் குறளாகப் பாடினார். இவரது குறளும் மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாமல் குப்பையில் தள்ளப்பட்டுக் கிடக்கும் வண்ணம் செய்துவிட்டார்கள். இந்த நாட்டில் இராமாயணத்திற்கும், கதைக்கும் இருக்கின்ற பெருமை இப்படிப்பட்ட அறிவு சம்பந்தமான குறளுக்கு நாட்டில் மதிப்பு இல்லை. இந்த புராணக் கதைகளை மக்கள் தெரிந்து இருக்கும் அளவு குறளை தெரிந்து இருக்கமாட்டார்கள்.

இவர்களுக்குப் பிறகு எவருமே தோன்றவே இல்லை; தோன்றிய ஆழ்வார்கள், நாயன்மார்கள், அவதாரப் புருஷர்கள் என்பவர்கள் எல்லாம் நம்மை என்றென்றைக்கும் மடையர்களாகவும், பார்ப்பானுடைய கடவுளுக்கு அடிமையாகவும் ஆக்கவே பாடுபட்டார்கள். அதன் காரணமாகவே, பார்ப்பானால் ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்று சுத்த அடிமுட்டாள்கள், காலிகள் எல்லாம் விளம்பரப்படுத்தப்பட்டு உள்ளனர்.

அடுத்து, ஏதோ சித்தர்கள் என்று பல பேர்கள் இருந்து இருக்கின்றார்கள். இவர்களும் சந்திலே பொந்திலே இருந்து கொண்டு ஏதோ இரண்டொரு வார்த்தைகள் கூறி இருப்பார்கள். மற்றபடி எவனும் வெளிவந்து பாடுபட முன்வரவே இல்லை. நாங்கள்தான் பாடுபடுகின்றோம்.

(தொடரும்...)

- உண்மை இதழ், 16-31.8.18

வெள்ளி, 12 அக்டோபர், 2018

தாய்மொழியிடத்து அன்பில்லாதவர்க்கு தாய்நாட்டின் மீதும் பற்று இருக்காது!

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ( 21 )

தாய்மொழியிடத்து அன்பில்லாதவர்க்கு தாய்நாட்டின் மீதும் பற்று இருக்காது!




தாய்மொழியிடத்து அன்பில்லாத வர்களுக்குத் தாய்நாட்டின் மீதும் அன்பிராது. எனவே, ஒவ்வொரு தமிழ் மாணவனும் தமிழ் கற்க வேண்டும்.

ஜாதிபேதம் தமிழரிடம் இல்லை. எகிப்து, கிரேக்கம், ரோம் முதலிய நாடுகளோடு அன்றைக்கே வணிகத் தொடர்பு கொண்டவர்கள் தமிழர்கள்.

தமிழ்ப் பெண்களும் கல்வியில் புலமை பெற்று விளங்கினர்.

தமிழர்கள் அஞ்சாது வீரப்போர் புரியும் ஆற்றல் உள்ளவர்கள்.

நம் தாய்நாட்டுத் தமிழர்கள் ஒவ்வொருவரும் தாய்மொழியாம் தமிழைக் கட்டாயம் கற்று சிறப்புப் புலமை அடைய வேண்டும். இதனால் தமிழ் வளர்ச்சி அடையும், தாய் நாடான தமிழ்நாடு சிறப்புற்றோங்கும்.

(‘குடிஅரசு’ - 18.12.1943)


என்று தமிழ் தமிழர் மேன்மையை எடுத்தியம்பும் கட்டுரையைக் ‘குடிஅரசு’ இதழில் வெளியிட்ட பெரியாரா தமிழுக்கும், தமிழர்க்கும் எதிரானவர்? தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.

இவை மட்டுமல்ல, தமிழுணர்ச்சியைத் தமிழைப் பரப்ப வழிகளையெல்லாம் ‘குடிஅரசில்’ வெளியிட்டார்.

1.            தமிழர் தமிழ்ப் பெயர் இட வேண்டும்.

2.            தமிழ்நாட்டுப் பிரிவு, ஊர், தெரு, வீடு பெயர்கள் தமிழில் இருக்க வேண்டும்.

3.            வீட்டிலும் கடைத்தெருவிலும், அலுவலகங்களிலும், வழிப் போக்கிலும் ஆங்கிலச் சொல்லும், சமஸ்கிருதமும் தமிழில் கலப்பதைத் தவிர்க்க வேண்டும்.

4.            தமிழில் இல்லாதவற்றிற்கு ஆங்கிலச் சொல்லைக் கலக்கலாம்.

5.            தமிழில் இல்லாதவற்றிற்குப் புதிய சொல் உருவாக்க வேண்டும். அறிஞர்கள் உருவாக்கும் புதுச் சொல்லைப் பொது மக்கள் பயன்படுத்த வேண்டும்.

6.            கோயில்களிலும், விழாக்களிலும் தமிழே ஒலிக்க வேண்டும்.

7.            தமிழைப் பிழைபட வழங்குபவரைத் திருத்த வேண்டும்.

என்று சென்னை தமிழறிஞர் கழகத்தின் கோரிக்கைகளை 04.12.1943 ‘குடிஅரசு’ ஏட்டில் பெரியார் வெளியிட்டு தமிழைத் தூக்கி நிறுத்த முயன்றார்.

சென்னை சாந்தோம் சாலையில் அமைந்த முத்தமிழ் நிலையம் அழைப்பை ஏற்றுச் சென்று பெரியார் ஆற்றிய உரையில்,

“நீங்கள் ஆரம்பித்திருக்கும் இந்த அமைப்பிற்கு தமிழனிடத்தில் உண்மைப் பற்றும், தமிழும் தமிழரும் மேன்மை அடைய வேண்டும் என்ற உண்மை கவலையும் உள்ள ஒவ்வொரு சுத்தமான தமிழ் மகனும் ஆதரிக்கக் கடமைப்பட்டவர் ஆவார்கள்.

உங்கள் கழகம் வெற்றியடைய தளராத முயற்சி, ஒற்றுமை, கட்டுப்பாடு என்பவைகளோடு, ஒழுக்கம், நாணயம் என்பவைகளும் தக்கபடி கவனித்துப் பின்பற்ற வேண்டியதாகும். இம்மாதிரி பணிகளுக்கு என்னாலான உதவியைச் செய்ய எப்போதும் காத்திருக்கிறேன்.

தமிழ்நாட்டு இளைஞர்களும், நாட்டுப்பற்று, மொழிப்பற்று, தன்மானப் பற்று உண்மையாய்க் கொண்ட செல்வவான்களும் உங்களுக்கு உதவ வேண்டியது அவர்களது கடமையாகும்’’ என்று பேசினார் பெரியார்.

                                    (‘குடிஅரசு’ - 08.01.1944)


மேலும், தமிழன் தலைநிமிர்ந்து தன்மானத்தோடும், கல்வியும், அறிவும், உயர்வும் பெற்று வாழ வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் தட்டியெழுப்பிக் கொண்டேயிருந்தார்.

“ஏ தமிழா! உன்னுடைய நாட்டில் நீ தாசி மகனா? உனது செல்வத்தாலும், உழைப்பாலும் கட்டப்பட்ட பொது இடங்களில் உனக்கு உரிமை இல்லையா? உனது நாட்டில் உன்னை நம்பி வைத்திருக்கும் உணவுச் சாலையில் நீ தீண்டப்படாதவன் என்று உனக்கொரு தனியிடம் ஒதுக்கி வைப்பதா?’’ என்று அடிக்கடி உணர்வூட்டினார்.

                                    (‘குடிஅரசு’ - 04.12.1943)

“தமிழ்நாட்டில் தமிழ்ப் பாட்டுக்கள் பாடப்பட வேண்டும்; தமிழில் இசை இருக்க வேண்டும் என்று கூறுபவர்களை முட்டாள்கள் எனக் கூறுவோருக்குத் தமிழ்நாடு இடங் கொடுத்துக் கொண்டிருக்கிறது. தமிழர்களிடையில் தமிழ்நாட்டில் தமிழ் இசைக்கு எதிராக இருப்பவர்கள், எதிராக வேலை செய்பவர்கள், தமிழில் பாட மறுப்பவர்கள், தமிழர்களின் இக்கோரிக்கையை ஏளனம் செய்பவர்கள் யார்? ஆரியர்கள்தானே. இவர்களைத் தவிர, இத்துணிவுடன் தமிழர்களின் உப்பைத் தின்றுவிட்டு, தமிழ்நாட்டில் வாழ இடம் பெற்று, தமிழர்களின் உழைப்பால் உடலை வளர்த்துக் கொண்டு, தமிழர்களையும் அடிமைப்படுத்தி, தாழ்ந்தவர்களாக்கி, தமிழ் கலைகளுக்கு ஆரிய மேற்பூச்சிட்டு, தமிழோடு வடமொழியைக் கலந்து கெடுத்து, தமிழர்களின் வாழ்வைச் சீர்குலைத்து, தமிழ்நாட்டைத் தங்களுடைய அடிமை நாடாக ஆக்கி வைத்துக் கொள்வதற்கு (பன்னூற்றாண்டு காலமாக) பெரும் துணிவு ஆரியர்களைத் தவிர்த்து வேறு யாருக்கு இருக்க முடியும்?

இந்த ஆரிய வர்க்கத்தார் தமிழரிடையே தங்கள் சதிச் செயல்களை நிறைவேற்றி, தமிழர்களையும் தமிழ்நாட்டையும் அடிமைப் படுகுழியில் ஆழ்த்திக் கொண்டு வருவதற்கு, இவ்வளவு துணிவாக அவர்கள் செயல்படுவதற்குத் தமிழர்களின் தைரியம் இன்மையே காரணம். ஓரிரு எதிர்ப்புகள் இருப்பினும் அது போதிய அளவு இல்லை. படித்த தமிழர்கள்கூட ஆரியத்திற்கு அடிவருடிகளாகவே இருந்து வருகின்றனர்; தமிழர்க்குத் துரோகமும் செய்கின்றனர். ஒரு சிலர் விலாங்குமீன்போல் இரு பக்கமும் நடிக்கின்றனர். தங்கள் தாய்நாட்டிற்கும், தாய்மொழிக்கும் எதிராக உள்ளவர்கள் எவராயினும் அவர்களை வீழ்த்த, விரட்டியடிக்க முன்வர வேண்டும். எவர் பாராட்டுக்கும், புகழ் மொழிக்கும் இச்சை வைக்காமல் உழைத்தால்தான் இதைச் சாதிக்க முடியும்.

1.            தமிழ்ப் பாட்டுக்கள் முழுக்க முழுக்க தமிழ் மொழியில் இருக்க வேண்டும். 100க்கு 99 வடமொழி வார்த்தைகள் கலந்ததாக இருக்கக் கூடாது.

2.            புராண மூடநம்பிக்கைகளைக் கொண்ட பாடல்களாக இருக்கக் கூடாது.

3.            நல்ல தமிழில், இயற்கை எழில்களையும், தமிழரின் வீரத்தையும், அன்பையும், சமத்துவத்தையும், மானத்தையும், நேர்மை, நீதி நெறிகளையும், தமிழ்நாட்டுப் பற்றையும், மொழிப் பற்றையும், ஒற்றுமையையும், வரலாற்று அறிவையும் உள்ளடக்கி இருக்க வேண்டும்.

4.            வாழ்வியல் கேடுகளை அகற்றி, அறிவூட்டக் கூடியதாக இருக்க வேண்டும்.

இவற்றைச் செய்ய தமிழர்கள் துணிவு கொள்ளாதவரை, தமிழ்நாட்டுச் செல்வர்கள் இதற்குத் தொண்டாற்ற முன்வராத வரையில் நம் முயற்சி வெற்றி பெறாது.

தமிழர்கள் இனியேனும் உணர்வு பெற்று, உற்சாகமடைந்து, துணிவு கொண்டு, தங்கள் மொழியையும், நாட்டையும் நயவஞ்சகர்களிடமிருந்து காக்க வேண்டும். தமிழ் இசையின் பெயராலும், பிற வகையிலும், தமிழர்களையும் தமிழ் மொழியையும் குலைப்பதற்குச் செய்யப்படும் முயற்சிகளை வேருடன் களைந்து, தமிழ் உயர்வு பெறும் வகையில் வழிகாண வேண்டும். முன் வாருங்கள் தமிழர்களே! அதற்குத் தருணம் இதுதான்.’’

(25.12.1943 - ‘குடிஅரசு’ - தலையங்கம்)

(தொடரும்...)

- உண்மை இதழ், 1-15.10.18