பக்கங்கள்

திங்கள், 4 அக்டோபர், 2021

உ.வே.சா அய்யர் எனும் உடைபட்ட பர்னிச்சர்..

ஒரு கும்பலின்  கதை

உ.வே.சா  அய்யர் எனும் உடைபட்ட பர்னிச்சர்..

அன்புள்ள கார்த்திக் உ.வெ.சாமிநாத அய்யரை ஏன் தமிழ்தாத்தா என்று அழைக்கிறோம்? இது பற்றின விபரங்களை இணையத்தில் தேடினேன். கிடைக்கவில்லை அதனால் உங்களைக் கேட்கிறேன்.?

மா.கோதண்டம், மங்களாபுரம். 

அன்புள்ள மா.கோ., 

உ.வே.சா; விரித்துச் சொன்னால், உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாத அய்யர். பள்ளி கல்லூரிகளில் தமிழ் படித்தவர்கள் கொஞ்சமாவது இவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். 1855ல் பிறந்து தன் 87 வயது வரை வாழ்ந்தவர் என்பதால் தாத்தா என்று அழைக்கப்பட எல்லா தகுதியும் கொண்டவர். ஆனால், எப்படி சாமிநாத அய்யர்  ”தமிழ் தாத்தா” ஆனார் என்ற கேள்வி எனக்கும் எழுந்ததுண்டு!  

”உ.வே.சா.  தமிழுக்கு நிறைய தொண்டாற்றி இருக்கார். அழிஞ்சு போற நிலையில் இருந்த பழைய தமிழ் நூல்களை எல்லாம் தேடித் திரிஞ்சு சேகரிச்சார், அதுக்கெல்லாம் உரை எழுதினார். அதனால அவரை தமிழ் தாத்தான்னு சொல்றோம்...” என்று பல இடங்களில் இருந்து பதில் வரும்.  

சரி, தான் சேகரித்த நூல், சுவடிகளை எல்லாம் என்ன பண்ணினார்.? என்று பார்த்தால், ஆரம்ப காலங்களில் புத்தகங்களாகப் ப்ரிண்ட் போட்டு வியாபாரம் பார்த்திருக்கிறார்.. இப்போது அவை பெசண்ட் நகரில் அவர் பேரிலே உண்டாக்கப்பட்ட லைப்ரரியில் வைத்துப்  புரவலர்களால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சமீபத்திய புரவலர் டி.வி.ராமசுப்பையரின் தினமலர் நாளிதழ் . 

சரி, இவரளவுக்கு இவர் காலத்திலே இதே வேலைகளைச் செய்தவர்களை எல்லாம் விட்டுவிட்டு இவர் மட்டும் எப்படி தமிழ் தாத்தானு ஆனார்? என்ற கேள்வி மறுபடியும் ஆக்கிரமித்தது. அதற்கு மிக முக்கியமானதாகச் சொல்லப்படும் காரணம், ”யாருக்குமே கிடைக்காம போயிருக்க வேண்டிய, அய்ம்பெருங் காப்பியங்களிள் ஒன்றான ’சீவக சிந்தாமணி’யை இவரே கண்டுபிடித்துத் தமிழுக்குத் தந்தார்... அதனால்தான் மகாமகோ உபாத்யாயருக்குத் தமிழ் தாத்தா எனப் பட்டம் சூட்டப்பட்டது” என்று பதில் வந்தது. 

அதன் பிறகுதான், ரொம்ப நாள் கழித்து ஆய்வாளர்  பொ.வேல்சாமி உ.வே.சா-வின் தமிழ் தாத்தா பர்னிச்சரை போட்டு தொம்சம் பண்ணிவிட்டார் என்பதை அவரது ஓர் கட்டுரையின் மூலம் தெரிந்துகொண்டேன். அதாவது, வெள்ளையர் ஆட்சிகாலத்திலே அப்போதிருந்த பள்ளிக்கூடங்களின் தமிழ் பாடத் திட்டத்தில், நாலடியார், திருக்குறள், பெரிய புராணம், கந்தபுராணம், வில்லி பாரதம், நைடதம், நீதிநெறி விளக்கம் எல்லாம் இடம்பெற்றிருக்கின்றன. ரொம்ப முக்கியமான விசயம் சீவக சிந்தாமணியின் பகுதிகள் அந்த பாடத்திட்டத்திலே இடம்பெற்றிருந்தது.. 

அவர் குறிப்பிடும் 1857 காலகட்டத்தில் உ.வே.சாமிநாத அய்யருக்கு வயசு ரெண்டு.  மேலும், 1868-1870ல் அன்றைக்கு  இருந்த தமிழ் பி.ஏ பாடத்திட்டத்தில, சீவக சிந்தாமணி , நாமகள் கலம்பகம் நச்சினார்கினியர் உரையோடு இடம்பெற்றிருக்கிறது. அப்போது தாத்தாவுக்கு வயசு பதிமூன்று. 

பலர் சொல்கிறதுபோல சீவக சிந்தாமணி மட்டுமில்ல, இளங்கோ எழுதிய சிலப்பதிகாரத்துக்காகவும் அவர் கொஞ்சம் பேர் வாங்கி வைத்திருந்தார். அந்தச் சிலப்பதிகாரம் 1872ல் பி.ஏ பாடத்தில் இடம்பெற்றிருந்தது. அப்போது தாத்தாவுக்கு வயசு பதினேழு.”

உ.வே.சா கிட்டத்தட்ட அந்தக்கால சோ.ராமசாமி போன்றவர், ”யாருக்குமே ஒண்ணுமே தெரியாது; தான் ஒரு புத்திசீவி” என்று தன் தலையைத் தடவிக் கொள்ளும் துடுக்கு கொண்டவர். காரிய புத்தி. அவரது, என் சரித்திரம், பயணக் கட்டுரைகளைப் படித்தால் இந்த குணாம்சத்தைப் பொருத்திப் புரிந்துகொள்ள முடியும்.  
 
ஆனால், கேக்க ஆள் இல்லாத காலத்தில், படிக்க வாய்ப்பு பெறாத மக்களுக்கு இந்த இலக்கியம், பாடப் புஸ்தகம் பத்தின விபரமெல்லாம் தெரிந்திருக்க நியாயமில்லை. அந்த இடைவெளியை நேக்காகப் பயன்படுத்திக் கொண்டு, கேப்பையில நெய் வடிகிற கதையாக, ”இதுவரைக்கும் யாருமே காணாத பொஸ்தகம்”னு நா கூசாமப் பொய்களைச் சொல்லி, அதை நானே கண்டுபிடித்தேன் எனப் பறைசாற்றி, அதற்காகத் தனக்கு தமிழ் தாத்தானு பட்டம் கொடுத்துக் கொண்டவரை இப்போ வரைக்கும் அழுக்கு படாமல் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். 

இங்கே தமிழ் தாத்தாவோ, மகாகவியோ, தேசியக் கவியோ, அவர்கள் அனைவரையும் ஒரேயொரு நூலே அடையாளங்களாக்கி விடுகிறது.

 - திராவிட ஆய்வு -

வியாழன், 2 செப்டம்பர், 2021

பாராட்டத்தக்க அறிவிப்பு சிலம்பொலி செல்லப்பன், தொ.பரமசிவன் உள்ளிட்ட 6 தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை


அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

சென்னை,செப்.1- சிலம்பொலி செல்லப்பன், பரமசிவன் உள்ளிட்ட 6 தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

சட்டப்பேரவையில் தமிழ்வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துப் பேசிய பின்னர் வெளியிட்ட அறிவிப்புகள்: இன்றைய தலைமுறையினரை திருக்குறள் சென்றடையும் வகையில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் ‘தீராக் காதல் திருக்குறள்’ என்ற பெயரில் கலை வடிவங்களுடன் ஊடகங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். வெளிநாடு, வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க ரூ.1 கோடியில் தமிழ் பரப்புரைக் கழகம் உருவாக்கப்படும்.

பள்ளிகளில் திறனறி தேர்வு நடத்தி ஆண்டுதோறும் 1,500 மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1,500 ஊக்கத்தொகை 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

தமிழ் அறிஞர்கள் சிலம்பொலி செல்லப்பன், தொ.பரமசிவன், இளங்குமரனார், முருகேச பாகவதர், சங்கரவள்ளி நாயகம், செ.ராசுஆகியோரின் நூல்கள் நாட்டுடைமை யாக்கப்பட்டு பரிவுத்தொகை வழங்கப்படும்.

சங்க இலக்கிய வாழ்வியல், ஓவியங்களாகவும், எளிய விளக்கத்துடனும் ‘காபி டேபிள்’ புத்தகமாக வெளியிடப் படும். கோயில்களில் தேவாரம், திருவாசகம், திவ்யப்பிரபந்தம் ஆகியவற்றுடன் திருக்குறள் வகுப்புகளும் நடத்தப்படும்.

தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்களின் பிறந்த நாளன்று இலக்கியக் கூட்டங்கள் நடத்த ரூ.15 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும். தமிழில் பெயர் எழுதும்போது முன் எழுத் தையும் (இனிஷியல்) தமிழிலேயே எழுதும் நடைமுறை ஊக்குவிக்கப்படும்.

முனைவர் ஆய்வு (பிஎச்.டி)சுருக்கம் மற்றும் ஆய்வுத் தொகுப்புகள் தமிழில் தொகுக்கப்பட்டு தமிழ் இணையக்கல்வி கழகத்தின் வாயிலாக இணையதளத்தில் வெளியிடப்படும்..

திங்கள், 23 ஆகஸ்ட், 2021

பழந்தமிழர்_அளவைகளில் சில

🔥🔥🔥



*பழந்தமிழர்_அளவைகளில் சில*..!!

◆ முகத்தல்அளவைகள் :

ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லிட்டர்.
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லிட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லிட்டர்.
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லிட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லிட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லிட்டர்.
ஒரு குப்பி = எழுநூற்றுமில்லி லிட்டர்.
ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.

முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.
ஐந்து சோடு = ஒரு ஆழாக்கு.
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு = ஒரு உரி.
இரண்டு உரி = ஒரு நாழி.
எட்டு நாழி = ஒரு குறுணி.
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு = ஒரு தூணி.
மூன்று தூணி = ஒரு கலம்.

◆ நிறுத்தல் அளவைகள்

மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பனவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை = ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
மூன்று தோலா = ஒரு பலம்.
எட்டு பலம் = ஒரு சேர்.
நாற்பது பலம் = ஒரு வீசை.
ஐம்பது பலம் = ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு = ஒரு துலாம்.

ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பனவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.
ஒரு விராகன் = நான்கு கிராம்.

◆ கால அளவுகள்

இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாழிகை.
இரண்டரை நாழிகை = ஒரு மணி.
மூன்றே முக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம்.
அறுபது நாழிகை = ஒரு நாள்.
ஏழரை நாழிகை = ஒரு சாமம்.
ஒரு சாமம் = மூன்று மணி.
எட்டு சாமம் = ஒரு நாள்.

நான்கு சாமம் = ஒரு பொழுது.
இரண்டு பொழுது = ஒரு நாள்.
பதினைந்து நாள் = ஒரு பக்கம்.
இரண்டு பக்கம் = ஒரு மாதம்.
ஆறு மாதம் = ஒரு அயனம்.
இரண்டு அயனம் = ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.

வயலும்வரப்போடு பயணியுங்கள் பழந்தமிழர்களின் விடயங்களை அறிந்துகொள்ள..!!!!!


🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

✶✶⊶⊷⊷❍ 𝑴K ❍⊶⊶⊷✶✶

🟨🟥🟨🟥🟨🟥🟥🟥

வியாழன், 22 ஜூலை, 2021

நீச பாஷைகள் ஆக்கப்பட்ட மொழிகளுக்கு இருக்கும் ஒரே சுடரொளி திராவிடமே!

 

2017 - முதல் 2020 வரையிலான மூன்று ஆண்டுகளில் ஒன்றிய அரசு சமஸ்கிருதத்தின் வளர்ச்சிக்காக மட்டும் ரூ.683.84 கோடி செலவிட்டுள்ளதுதமிழ்தெலுங்குமலையா ளம்கன்னடம் மற்றும் ஒடியா ஆகிய மற்ற செம்மொழிகளின் வளர்ச்சிக்கு மொத்தமாக ரூ.29 கோடி செலவிட்டுள்ளதுஇந்தப் புள்ளி விவரம் அரசாலேயே வெளியிடப்பட்டிருக்கிறது.

இது நம் கண் முன் தெரிகிற கணக்குஆனால் கண்ணுக்குத் தெரியாத கணக்கிற்கு அளவே இல்லைஇது புதிய வழக்கமும் அல்லவரலாற்றுக் காலந்தொட்டு யார் ஆட்சியில் இருந்தாலும் சமஸ்கிருத வளர்ச்சியும்அதன்மூலம் பார்ப்பனர்கள் வளர்ச்சியுமே வழக்கமான ஒன்றாக இருக்கிறது.

அரசர்கள் காலத்தில் இவர்கள் வேத பாடசாலைகளுக்குப் பெற்ற தானங்களும்நிலங்களும் செல்வமும் கல்வெட்டுகளில் காணக் கிடைக்கின்றன.

கிடைத்திருக்கும் கல்வெட்டுகளில் சொல்லப்படும் கணக்கே மலைப்பைத் தருகிறதென்றால்கிடைக்கப்பெறாத கல்வெட்டுகளும் செப்பேடுகளும் கணக்கின்றி கொடுக்கப் பட்ட தானங்களும் எவ்வளவு இருக்கும் என்று எண்ணிப் பார்க்கவே கடினமாக இருக்கிறது.

முகலாயர் ஆட்சி ஆகட்டும்ஆங்கிலேயேர் ஆட்சி ஆகட்டும் பார்ப்பனர்கள் காட்டில் மழைதான்அன்றாவது அரசர்களிடமிருந்தோசெல்வந்தர்களிடமிருந்தோ தானமோதர்மமோ பெற வேண்டிய நிலை இருந்ததுஅது அவர்களுக்குக் கை வந்த கலை என்றாலும்இன்னொருவர் கையைத்தான் எதிர்பார்க்க வேண்டியிருந்தது.

ஆனால்இன்று அவர்களே ஆட்சி அதிகாரங்களை நேரடியாகத் தங்கள் கைகளில் வைத்திருக்கிறார்கள்இனி அவர்களுக்கு ஏன் மற்றவர்கள் தானமும் தர்மமும் கொடுக்க வேண்டும்?

இது கடவுளின் பெயரால்தேவ பாஷை என்னும் மாய பிம்பம் உருவாக்கப்பட்டுத் தொடரும் கொள்ளையாகும்இதில் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்படுவது மட்டுமன்றுசுரண்டப்பட்ட மக்கள் இழிவுக்கும் உள்ளாகின்றனர்மக்கள் மொழி நீச பாஷையாக இருக்கிறதுதங்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டே தங்கள் மொழியையே இழிவுபடுத்தும் அவலநிலை உலகில் எந்த சமூகத்திலும் காணப்பெறாதது.

தமிழுக்காக மட்டுமல்லஇந்திய ஒன்றியத்தின் அனைத்து மொழிகளின் உரிமைகளுக்காகவும் திராவிட இயக்கம்தான் தொடர்ந்து மொழிப்போர்களை நடத்தி வருகிறதுதிராவிடமேநீச பாஷைகள் ஆக்கப்பட்ட மொழிகளுக்கு இருக்கும் ஒரே சுடரொளி!

-  மா.உதயகுமார்

நன்றிகருஞ்சட்டை தமிழர்

தொல்காப்பிய பூங்கா என மீண்டும் பெயர் மாற்றம்

 

சென்னைஜூலை 19- முத்தமிழறிஞர் கலைஞர்கடந்த 2007ஆம் ஆண்டு அடையாறு உப்பங்கழி யில் 58 ஏக்கர் பரப்பளவில் ரூ.100 கோடியில் தொல் காப்பிய பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டினார்பின்னர் 2011ஆம் ஆண் டில் அதைத் திறந்துவைத் தார்.

பின்னர் வந்த அதிமுக அரசுஅப்பூங்காவை அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா என அழைத்து வந்ததுஅங்கு தொல்காப் பிய பூங்கா என வைக்கப் பட்டிருந்த பெயர் பலகை யும் அகற்றப்பட்டிருந்ததுதற்போது புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலை யில்நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்நேரு அண்மையில் இப் பூங்காவை பார்வையிட் டார்.

கடந்த 10 ஆண்டுகளில் இப்பூங்கா முறையாக பராமரிக்கப்படவில்லை எனவும் குற்றம்சாட்டிய அவர்அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் தெரிவித்து இருந்தார்இப்பூங்கா வுக்கு முத்தமிழறிஞர் கலை ஞர் பெயரிட்டிருந்தவாறு மீண்டும் பெயரிடுமாறு சென்னை ஆறுகள் சீர மைப்பு அறக்கட்டளைக்கு உத்தரவிட்டிருந்தார்அதனைத் தொடர்ந்து அந்த பூங்காவுக்கு மீண் டும் தொல்காப்பிய பூங்கா என பெயரிடப்பட்டுள்ளதுஅந்த பெயரில் பெயர் பலகையும் பூங்காவின் நுழைவு வாயிலில் வைக் கப்பட்டுள்ளது.


ஞாயிறு, 18 ஜூலை, 2021

தந்தை பெரியாரும் தமிழும்


மாறுதலுக்கு ஒத்துவராதவன் மானமுடன் வாழ முடியாது

குடிஅரசு இதழ்

தமிழ் பாஷைக்கு வாழ்த்துக் கூறும் வேலை இலேசானதல்ல. அதிலும் என்போன்ற அதாவது தமிழ் பாஷைக்கு வல்லின இடையின எழுத்துபேதமும், பிரயோகமும் பாஷையின் இலக்கண இலக்கியமும் அறியாதவனும், தமிழ் பாஷையையே கெடுத்து கொலை செய்து வருபவன் என்கின்ற பழியைப் பெற்றுவனுமான நான் தமிழ் வாழ்த்துக்குத் தகுதி உடையவனாவேனா என்று பாருங்கள்.

அன்றியும் தமிழைப் பற்றி அபிப்பிராயங்களிலும் பண்டிதர்களுக்கும் எனக்கும் எவ்வளவோ துறையில் நேர்மாறான கருத்துக்கள் இருந்து வருவதும் எவரும் அறியாததல்ல.

இவைகள் எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் வாழ்த்துதல் என்பதையும் நான் இவ்வளவு சாதாரணமாய்க் கருதுபவனுமல்ல. வாழ்த்துதல் என்றால் பார்ப்பனர்கள் ஏதோ மஞ்சளையும் அரிசியையும் கலந்து பொறுப்பும் பொருளும் இல்லாத ஒன்றின் பெயரைச் சொல்லி வாழ்த்தி (ஆசீர்வாதம் செய்து) விட்டு ஏதோ பெற்று வயிறு வளர்ப்பதுமாதிரி வாழ்த்தை அவ்வளவு ஏமாற்றமாக நினைப்பவன் அல்ல. ஆனால் வாழ்த்துதலின் அவசியத்தையும், அதன் பெருமையையும் நான் உணர்ந்தவனே யாவேன், தகுதியும் பொறுப்பும் உடையவர்களே வாழ்த்த வேண்டும். வாழ்த்துபவர்கள் தங்களுக்கு பொறுப்பு இருப்பதை உணர்ந்தவர்களாகயிருக்க வேண்டும். தமிழுக்கு இடுக்கண் ஏற்படும்போது கவலை அற்றவரும் எவ்வித உதவியும், ஆதரவும் அளிக்கத் தகுதி அற்றவர்களும் (தமிழை) வாழ்த்திப் பயன் என்ன?

தமிழில் எந்த அளவும் பள்ளியில் பயின்றனவல்ல. தமிழைப் பற்றி தமிழ் மக்கள் நலம், தமிழ் மக்கள் தன்மதிப்பு என்பதல்லாமல் வெறும் பாஷையைப் பற்றியே நான் எவ்வித பிடிவாதம் கொண்டவனுமல்ல.

முதலாவதாக தமிழ் முன்னேற்றமடைந்து உலக பாஷை வரிசையில் அதுவும் ஒரு பாஷையாக இருக்க வேண்டுமானால் தமிழையும், மதத்தையும் பிரித்துவிட வேண்டும். தமிழுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்மந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும்.

மதசம்மந்தமற்ற ஒருவனுக்கு தமிழில் இலக்கியம் காண்பது மிகமிக அரிதாகவே இருக்கிறது. தமிழ் இலக்கணம் கூட மதத்தோடு பொருத்தப்பட்டே இருக்கிறது.

உதாரணமாக “மக்கள் தேவர் நரகர் உயர்திணை”, என்றால் என்ன? நரகர்கள் யார்? தேவர்கள் யார்? இலக்கணத்திலேயே மதத்தைப் போதிக்கும் சூழ்ச்சிதானே இது?

இனி பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளுக்குத் தமிழ் இலக்கியத்துக்குப் புத்தகங்கள் எவை? கம்பராமாயணம், பாரதம், பாகவதம், பெரியபுராணம், தேவாரம், திருவாய்மொழி போன்ற மத தத்துவங்களையும், ஆரியமத தத்துவம் என்னும் ஒரு தனிப்பட்ட வகுப்பின் உயர்வைப் போதித்து மக்களை மானமற்றவர்களாக்கும் ஆபாசக் களஞ்சியங்களும் அல்லாமல் வேறு இலக்கியங்கள் மிதந்து காணப்படுகின்றனவா? இன்றையப் பண்டிதர்களுக்கு உலக ஞானத்தைவிடப் புராண ஞானங்கள் தானே அதிகமாயிருக்கின்றன?

மேல் நாட்டுப் புலவர்கள், மேல்நாட்டு இலக்கியங்கள் ஆகியவைகளுக்கு இருக்கும் பெருமையும், அறிவும் நம தமிழ்ப் புலவர்களுக்கு இருக்கின்றது என்று சொல்ல முடியுமா? ஷேக்ஸ்பியர் வேண்டுமா? இங்கிலாந்து வேண்டுமா? என்றால் இங்கிலீஷ் மகன் ஷேக்ஸ்பியர் வேண்டும் என்பானாம். நாம் எதைக் கேட்பது?

இந்தியா வேண்டுமா? கம்பராமாயணம் வேண்டுமா? என்றால் உண்மைத் தமிழ்மகன் என்ன சொல்லுவான்? இரண்டு சனியனும் வேண்டாம் என்றுதானே சொல்லுவான்?

மேல்நாட்டில் தான் அறிவாளிகள் உண்டு என்றும், கீழ்நாட்டில் அறிவாளிகள் இல்லை என்றும் நான் சொல்ல வரவில்லை.

மேல்நாட்டு அறிவாளிகள் தாங்கள் செய்த இலக்கியங்களை மத சம்மந்தமன்னியில் பெரிதும் செய்து வைத்தார்கள். அதனால் நூற்றுக்கணக்காக மேல்நாட்டு இலக்கியங்களும் பண்டிதர்களும் போற்றப்படுகிறார்கள்.

கீழ்நாட்டில் குறிப்பாக இந்தியாவில் எத்தனை இலக்கியம் எத்தனை பண்டிதர்கள் உலகத்தால் போற்றப்படுகிறார்கள்? தாகூர் அவர்கள் கவிக்கு ஆக போற்றப்படலாம். ஆகவே, மதம் கடவுள் சம்மந்தமற்ற இலக்கியம், யாவருக்கும் பொதுவான இயற்கை ஞானத்தைப்பற்றிய இலக்கியம், யாவரும் மறுக்கமுடியாத விஞ்ஞானத்தைப் பற்றிய இலக்கியம் ஆகியவைகள் மூலம் தான் ஒரு பாஷையும் அதன் இலக்கியங்களும் மேன்மையடைய முடியும் என்பது மாத்திரமல்லாமல் அதைக் கையாளும் மக்களும் ஞானமுடையவர்களாவார்கள்.

கம்பராமாயணம் அரிய இலக்கியமாய் இருக்கிறதாகச் சொல்லுகிறார்கள். இருந்து என்ன பயன்? ஒருவன் எவ்வளவுதான் பட்டினி கிடந்தாலும் மலத்தில் இருந்து அரிசி பொறுக்குவானா? அது போல்தானே கம்பராமாயண இலக்கியம் இருக்கிறது. அது தமிழ் மக்களை எவ்வளவு இழிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழரின் சரித்திர கால எதிரிகளை எவ்வளவு மேன்மையாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. சுயமரியாதையை விரும்புகிறவன் எப்படி கம்பராமாயண இலக்கியத்தை படிப்பான். இன்று கம்பராமாயணத்தால் தமிழ் மக்களுக்கு இலக்கியம் பரவிற்றா இழிவு பரவிற்ற என்று நடுநிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள்.

தமிழ் பாஷையின் பெருமை பரமசிவனுடைய டமாரத்திலிருந்து வந்ததென்றோ, பரமசிவன் பார்வதியிடம் பேசிய பாஷை என்றோ, சொல்லி விடுவதாலும் தொண்டா நாதனை தூதிடை விடுத்ததாலும், முதலை உண்ட பாலனை அழைத்தாலும், எலும்பை பெண்ணாக்கினதாலும், மறைக்கதவைத் திறந்ததாலும் தமிழ் மேன்மை யுற்றதாகிவிடாது. இந்த ஆபாசக் கதைகள் தமிழ் வளர்ச்சியையும் மேன்மையையும் குறைக்கத்தான் பயன்படும்.

பரமசிவனுக்கு உகந்த பாஷை தமிழ் என்றால் வைணவனும் துருக்கனும் தமிழைப் படிப்பதே பாவமல்லவா? அன்றியும் அந்தப் படியிருந்தால் பார்ப்பான் தமிழ் மொழியை சூத்திர பாஷை என்றும், அதைக் காதில் கேட்பதே பாவம் என்றும் சொல்லுவானா? என்று யோசித்துப் பாருங்கள்.

இன்று தமிழ்நாட்டில் வந்து தமிழ் கற்று வயிறு வளர்ப்பவர்களாகிய பார்ப்பனர்களே இந்தி பாஷை இந்திய பாஷை ஆக வேண்டுமென்று முயற்சித்து வருகிறார்கள். கோர்ட் பாஷை, அரசாங்க பாஷை ஆகியவை எல்லாம் இந்திமயமாக வேண்டும் என்கிறார்கள், காரணம் கேட்டால் இந்தி பாஷையில் துளிசிதாஸ், ராமாயணம் நன்றாய் விளங்குமென்றார்கள்.

தமிழ்ப் பண்டிதர்களுக்கு இதைப்பற்றிச் சிறிதும் கவலை இருந்தது என்று சொல்ல முடியவில்லை தமிழ்ப் பண்டிதர்கள் இந்த அரசியல்வாதிகளின் கூச்சலுக்கும் பார்ப்பனர்கள் ஆதிக்கத்துக்கும் பயந்துகொண்டு வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள்.

பார்ப்பனர்கள் செத்த பாம்பான சமஸ்கிருதத்தை எடுத்து வைத்துக்கொண்டு எவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். பொதுப்பணம் சமஸ்கிருதத்தின்பேரால் எவ்வளவு செலவாகின்றது? பொது ஜனங்களின் வரிப்பணம் சமஸ்கிருதத்துக்கு ஆக ஏன் ஒரு பைசாவாவது செலவாக வேண்டும். தமிழ மக்கள் யாரும் இதைப்பற்றி கவனிப்பதில்லை. தமிழ் தமிழ் என்று எங்கோ ஒரு மூலையில் இரண்டு பண்டிதர்கள்தான் சத்தம் போடுகிறார்கள். ஆனால் சமஸ்கிருதத்துக்கும் இந்திக்கும் கேபினெட் மெம்பர்கள், அய்கோர்ட் ஜட்ஜூகள் முதல் எல்லா பார்ப்பன அதிகாரிகளும் பாடுபடுகிறார்கள். நம்ம பெரிய அதிகாரிகளுக்கோ, பெரிய செல்வாக்கும் உள்ளவர்களுக்கோ தமிழைப் பற்றி கவலையும் இல்லை; தமிழைப் பற்றி அதிகம் பேருக்கு ஒன்றும் தெரியவும் தெரியாது.

தமிழினடத்தில் ஒருவன் அபிமானியாக இருந்தாலே அவன் தேசத்துரோகி, வகுப்புவாதி, பிராமணத் துவேஷி என்றெல்லாம் ஆய்விடுகிறான். தமிழின் பரிதாப நிலைக்கு இதை விட வேறு என்ன வேண்டும். தமிழ் பாஷையில், எழுத்தில் ஒரு சிறு மாற்றமோ முற்போக்கோ செய்யக் கூட ஒரு தமிழ் அபிமானியும் முயற்சிப்பதில்லை. யாராவது முயற்சித்தாலும் ஆதரவளிப்பதுமில்லை. தற்கால நிலைக்கு தமிழ் போதியதாகவும் சவுகரியமுள்ளதாகவும் ஆக்க யார் முயற்சித்தார்கள்.

மேல்நாட்டு பாஷைகள் எவ்வளவு மாற்றமடைந்து வருகின்றன. எழுத்துக்களில் எவ்வளவு மாறுதல் செய்து வருகிறார்கள். ரஷ்யாவில் சில பழைய எழுத்துக்களை எடுத்துவிட்டார்கள். புதிய எழுத்துக்கள் சேர்த்தார்கள். அமெரிக்காவில் எழுத்துக் கூட்டுவாகிய இஸ்பெல்லிங் (Spelling) முறையை மாற்றி விட்டார்கள். துருக்கியில் துருக்கி பாஷைக்கு உண்டான எழுத்துக்களையே அடியோடு எடுத்துவிட்டு ஆங்கில எழுத்துக்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். தமிழர்கள் தமிழுக்காக நமக்கு விவரம் தெரிந்த காலமாக என்ன காரியம் செய்தார்கள்? காலத்துக்கு ஏற்ற மாறுதலுக்கு ஒத்துவராதவன் மானமுடன் வாழ முடியாது மாறுதலுக்கு மனிதன் ஆயத்தமாக இருக்க வேண்டும். முன்னேற்றம் என்பதே மாறுதல் என்பதை உணர்ந்த மனிதனே உலகப் போட்டிக்கு தகுதியுடையவனாவான்.

தமிழ் எழுத்துக்களில் ஒருசில மாற்றம் செய்தேன். அநேக பண்டிதர்கள் எனக்கு நன்றி செலுத்தி என்னைப் பாராட்டினார்களேயல்லாமல் ஒருவராவது அம் முயற்சிக்கு ஆதரவளித்தவர்கள் அல்ல.

இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்ய நான் ஒப்புக் கொள்ளுகிறேன்.

ஆனால், தகுதி உள்ளவர்கள் எவரும் வெளி வராவிட்டால் நான் என் செய்வது? என்னைக் குறை கூறவோ திருத்தவோ, முயற்சிப்பதன் மூலமாகவாவது இதற்கு ஒரு வழி பிறக்காதா என்றுதான் துணிந்தேன். இதுவரை யாரும் அதை லட்சியம் செய்யவில்லை.

எப்படி ஆனாலும் தமிழ் பாஷைக்கு உணாச்சி தமிழ் மக்களுக்கு இன்றியடையாதது, அதன்மூலம் தமிழ் மக்கள் ஒன்று சேர வசதி உண்டு. இத்திருநாளை ஒழிந்த நேரத் திருநாளாக இல்லாமல் தமிழ் மக்களுக்கு ஒரு புது எழுச்சியையும் ஊக்கத்தையும் உண்டாக்கும் திருநாளாகச் செய்ய வேண்டும். வருஷம் ஒவ்வொரு ஊரில் தலைமைத் திருநாள் நடைபெறச் செய்ய வேண்டும். தீபாவளி போன்ற மூடநம்பிக்கையும், சுயமரியாதை அற்றதும், ஆபாசமானதுமான பண்டிகைகள் கொண்டாடுவதை விட இப்படி தமிழ்த் திருநாள் என்று தமிழ் மக்கள் கூட்டுறவுக்கும், மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்துக்கும் அனுகூலமாகத் திருநாள்களை பரப்ப வேண்டும். நமது பெண்களுக்குப் பகுத்தறிவும், சுயமரியாதையும் இருந்தாலும் ஒரு திருநாள் வேண்டி இருக்கிறதால் தீபாவளியையும், மாரி பண்டிகையையும் கொண்டாட ஆசைப்படு கிறார்கள். ஆதலால் தக்கது செய்ய வேண்டுகிறேன்.

(13.01.1946 இல் சென்னை பச்சையப்பன் கல்லூரி பெரியமண்டபத்தில் நடந்த தமிழ் திருநாளில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு)

குடிஅரசு – சொற்பொழிவு - 26.01.1946

புதன், 23 ஜூன், 2021

தமிழ்த்தாய் வாழ்த்து 50 ஆண்டு நிறைவு (1970-2020)


அரசு விழாக்களிலும், பொதுவிழாக்களிலும், இறை வணக்கப் பாடலாக  "கஜவதனா கருணாகரனா" "வாதாபி கணபதே" போன்ற விநாயகர் பாடல்களே பாடப்பட்டது. சிலர் தெலுங்கு கீர்த்தனைகளைப் பாடினார்கள்.
1970 மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்தன்று, சென்னையில் நடைபெற்ற திரைப்படக் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழாவில் "நீராருங் கடலுடுத்த" பாடலே இனிமேல் அரசு விழாக்களில் பாடவேண்டும் என முதல்வர் கலைஞர் அறிவித்தார்.

கலைஞர் இதை அறிவித்தவுடன் 'கலைமகள்' மாத இதழின் ஆசிரியர் கி.வா.ஜெகநாதன் எதிர்ப்புத் தெரிவித்தார். கடவுளும், தமிழ்த்தாயும் ஒன்றல்ல என்றும், அதற்குப் பதிலாக தாயுமானவர் எழுதிய 'அங்கிங்கெனாதபடி' என்ற பாடலையே பாட வேண்டும் என்றார். பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரை, ம.பொ.சி, டாக்டர்.மு.வரதராஜனார் உள்ளிட்டோர் கலைஞரின் முடிவை வரவேற்றனர். எதிர்ப்புகள் அடங்கிப் போனது.

தேசிய கீதம் இருக்கும் போது, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவது சரியல்ல என்றும், இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று சமர்குஹா என்பவர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். ஆனால் இது இறையாண்மைக்கு எதிரானது அல்ல என்று அன்றைய துணை உள்துறை அமைச்சர் கே.ஆர்.இராமசாமி பதிலளித்தார். 1970 ஜூன் 17 அரசு உத்தரவாக வெளியிடப்பட்டது, 1970 நவம்பர் 23 முதல் அமுல்படுத்தப்பட்டது. 

'நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே 
தமிழணங்கே
உன் சீரிளமைத் திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!வாழ்த்துதுமே!

திருநெல்வேலி இந்துக்கல்லூரி முதல்வராக இருந்த சுந்தரம் பிள்ளையின் மணோன்மனீயம் நாடகத்தில் இடம் பெற்றப் பாடலே "நீராருங் கடலுடுத்த" எனத் தொடங்கும் இந்தப் பாடல். எம்.எஸ்.விஸ்வநாதனால் இசையமைக்கப்பட்டு, டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலாவால் பாடப்பட்டு, இசைத்தட்டுகள் வெளியிடப்பட்டது.

இந்தப்பாடல் 50 ஆண்டுகளாக தமிழகமெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. பாடலை எழுதிய மணோன்மணீயம் சுந்தரனாரையும், அதை தமிழகமெங்கும் பாட வைத்த  கலைஞரையும்  இந்நாளில் நன்றியுடன் நினைவு கூற வேண்டும்.