பக்கங்கள்

வியாழன், 27 ஜூன், 2024

தமிழை வளர்த்தனரா பார்ப்பனர்கள்?

 

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்…


 ஜனவரி 1-15, 2024

தமிழை வளர்த்தனரா பார்ப்பனர்கள்?

நூல் குறிப்பு :
நூல் பெயர் : ‘வெறுக்கத்தக்கதே பிராமணீயம்!’
ஆசிரியர் : கி. வீரமணி
வெளியீடு : திராவிடர் கழக (இயக்க) வெளியீடு
பக்கங்கள் : 160
நன்கொடை
(குறைந்த அளவு) : ரூ.150/-

தமிழுக்காகத் தொண்டு செய்யும் பார்ப்பனர்களைப் பட்டியலிட்டுக் காட்டி  – இவர்களையா எதிர்ப்பது என்று தோள் தட்டுகிறார் திருவாளர் ‘சோ’ ராமசாமி.
பார்ப்பனர்கள் தமிழுக்குத் தொண்டு செய்ததைவிட துரோகம் செய்ததும், இழிவுபடுத்-தியதும் இடைச் செருகல் செய்ததும்தான் அதிகம்!

இவர்கள் பெரிதாக உயர்த்திப் பிடிக்கும் உ.வே.சாமிநாதய்யரே கூட பார்ப்பனர்கள் தமிழுக்குச் செய்து வரும் இழி செயலை வெளிப்படுத்தியிருக்கிறார் என்றால் பலருக்கும் ஆச்சரியமாகக்கூட இருக்கும். ஆனாலும் அவர் கூறியிருக்கிறார் என்பது மட்டுமே உண்மை.
பண்டித மணி மு.கதிரேசன் செட்டியார் அவர்களிடம் உ.வே.சாமிநாதய்யர்வாள் கூறிய இந்தச் செய்தி ‘செந்தமிழ்ச் செல்வி’ இதழில் (ஏப்ரல் 1974) வெளிவந்துள்ளது.
(சிலம்பு 47 – பரல் 9)

“தென் இந்தியாவிலுள்ள பிராமணர் ஒரு வகுப்பாராகவே இருந்து கொண்டு தமிழைத் தாழ்த்தி அடக்கியும், சமஸ்
கிருதத்தை ஆதரித்து உயர்த்தியும் வருகின்றனர் எனவும், சென்னை, அண்ணாமலை என்னும்
இரு பல்கலைக் கழகங்களிலும் பிராமணர் வலுத்த கட்சியாயிருந்து அத்துணை பலமாகத் தமிழுக்குத் தடை செய்து வருவதால், தமிழர்கள் தங்கள் தாய்
மொழியின் நிலையை உயர்த்துவதற்கு ஒன்றுமே செய்ய முடியாதவராயிருக்கின்றனர். பார்ப்பனர்களில் ஒரு சிலர் தமிழருக்கு நீங்காத கடும் வைரிகளாக இருக்கின்றனர்.”

_ இவ்வாறு சொன்னவர் தமிழ்த் தாத்தா என்று கூறப்படும் உ.வே.சா.தான். சாட்சியோ பண்டித மணி மு.கதிரேசன் செட்டியார்.
‘சோ’ கூட்டம் போற்றும் ஒரு பார்ப்பனரே பார்ப்பனர்கள் தமிழுக்குத் தீங்கு விளைவிப்பதுபற்றி விண்டுரைத்தபின் ‘சோ’க்களிடம் பதில் கூறிட என்ன இருக்கிறது?
மற்ற பார்ப்பனர்கள் தமிழுக்குத் துரோகம் செய்கின்றனர் என்று இவ்வாறு கூறும் அதே உ.வே.சாமிநாதய்யர்கூட சங்க இலக்கியங்களில் பார்ப்பனீயத்தை இடைச் செருகல் செய்யத் தயங்கவில்லை என்பதுதான் உண்மை.

புறநானூறு உட்பட்ட சங்க இலக்கியங்களில் இவர் புகுந்து விளையாடிய விவரங்களை பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் “ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்” என்னும் நூலில் விரிவாகவே ஆய்ந்து விவரித்துள்ளார். அதன் ஒரு பகுதி இதோ!

புறநானூற்றில் “ஆன்
முலையறுத்த” – என்று தொடங்கும் 34ஆம் பாட்டில் உள்ள அடிகளில் உள்ள ஒரு சொல்,
யாழ்ப்பாணத்துப் பழைய வெளியீடு ஒன்றில் ‘அறவோர்’ என்று வந்துள்ளது என்று உரையாசிரியர் சிலர் குறித்துள்ளனர். உ.வே.சா. பதிப்பில் அச்சொல் ‘பார்ப்
பார்’ என்று குறிக்கப் பெற்றுள்ளது. பாட வேறுபாடாகக்கூட அச்சொல் இவர் வெளியீட்டில் எழுதப் பெறவில்லை. ‘அறவோர்க்குக் கொடுமை செய்தல் கூடா’தெனும் அறங் கூறும் அவ்வடி, ‘பார்ப் பார்க்குக் கொடுமை செய்தல் கூடா’தென்பதாக இவர் பதிப்பில் காட்டப்பெற்றதும், அதற்குக் ‘கொலைகளில் கொடுமை சான்ற பார்ப்பனக் கொலை’ எனும் காஞ்சிப் புராண அடியை மேற்கோள் காட்டியிருப்பதும், இவ்வாறு பிற ஆரிய உரையாசிரியர்களால் காட்டப்பெற்ற கருத்து மேலும் மேலும் வலியுற வேண்டும் என்னும் உள்நோக்கம் இவருக்கு இருப்பதை நன்கு புலப்படுத்தும். மேலும் அதில் உள்ள 305ஆம் பாட்டில் உள்ள ‘தன்மை’ என்னும் ஒரு

சொல்லுக்கு ‘அவரவர் சாதி இயல்பு’ – _என்று விளக்கம் எழுதியுள்ளார்.
இனி, இவர் உரையுடன் வெளியிட்ட குறுந்தொகை ‘முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்’ எனும் 67ஆம் பாட்டின் உரை விளக்கத்தில் நச்சினார்க்கினியரின் (அவரும் ஒரு பார்ப்பனர்) தொல்காப்பிய உரையைச் சுட்டிக்காட்டி, ‘இப்பாட்டிற் கூறப்படும் உணவு வகையினால் நச்சினார்க்கினியர், பார்ப்பானையும், பார்ப்பனியையும் தலைவராகக் கூறியது எனக் கொண்டனர் போலும். பெரும்பாணாற்றுப் படையில் அந்தணர்மனையில் பாணர் பெறும் உணவைப் பற்றிக் கூறியிருக்கும் பகுதி இங்கே ஆராய்தற்குரியது’ என்றும்,

‘அறிவுடையீரே’ என்று தொடங்கும் குறுந்தொகை 206ஆம் பாட்டின் அடியில், ‘பார்ப்பனப் பாங்கனைப் பன்மையாற் கூறுவது மரபென்று தெரிகின்றது” என்றும்,
“ஆசில் தெருவில்” என்று தொடங்கும் 277ஆம் பாட்டின் சிறப்புரையில், ‘ஆசில்’ (குற்றமற்ற) தெருவென்றும் நாயில் (நாய் இல்லாத) வியன்கடை யென்றும் சிறப்பித்தமையால், இங்கே கூறியது அந்தணர் தெருவென்று ‘தோன்றுகின்றது’ என்றும் எழுதி, ‘பார்ப்பாரிற் கோழியும் நாயும் புகலின்னா’ எனும் (இன்னா 3) அடியையும், ‘அந்தணர் அமுதவுண்டி’ (கம்பர்) எனும் பாட்டடியையும் மேற்கோளாகக் காட்டியுள்ளார். இவர் இவ்வாறு காட்டுவதன் நோக்கம், கழகத் தமிழ் இலக்கியங்களில் ஆங்காங்கே ஆரியக் கருத்துகளை வலியுறுத்திக் காட்ட வேண்டுமென்னும் உட்கோளேயாகும்.

தமிழ் மொழிக்கு மிக உழைத்தவரெனச் சொல்லப் பெறும் உ.வே.சாமிநாதய்யர் தமிழ்மொழியின் தனிச் சிறப்பைப் பலவிடங்களில் தாழ்த்தியுள்ளது கவனிக்கத்தக்கது. கழக நூற்பதிப்புகளுக்காக அவர் ஊர் ஊராய் அலைந்ததும், அவற்றைத் திரட்டி ஆராய்ந்து அச்சிட்டதும் அவர் பெருமையை நன்றியுடனும் நினைக்கப் போதுமான அரிய வினைப்பாடுகள் எனின், அந்நூல்களிலெல்லாம் ஆரிய நச்சுக்கருத்துகளைத் தக்கவிடத்தில் மறவாது வைத்துப் போனதும் இவரின் இயல்பான இனவுணர்வை மறவாதிருக்கச் செய்யும் நினைவாகும். தமிழ்மொழி மேல் இவருக்கு ஒருவகைப் பற்று உளதென்றால், அஃது ஆரியத்தைக் கலப்பதற்கு ஏற்ற ஒரு கருவியாக உள்ளதெனும் மாற்றாந் தாய்ப் பாசமே என்க.

பரிமேலழகர், திருக்குறளை எவ்வாறு தம் இனக் கருத்துகளை ஊன்றுவதற்கு ஏற்ற ஒரு விளைநிலமாக எடுத்துக் கொண்டாரோ, அவ்வாறே உ.வே.சா. கழகப் பதிப்புகளைக் கைக்கொண்டார். இன்றியமையாத சொற்களையெல்லாம் வடமொழியாகவே இவர் பயின்றார். பண்புகள் அல்லது குணங்கள் என்று குறிப்பதால் நிறைவுறாத இவர், குணவிசேடங்கள் என்று குறிப்பதால் மன நிறைவுறுவார். மைசூர் நாடு என்று குறிக்காமல் மைஸுர் ஸமஸ்தானம் என்றே குறிப்பார். மேலும் அரசுக்கட்டில் என்பதைச் சிங்காதனம் என்றும், அமைச்சு என்பதை மந்திரி வேலை என்றும், விண்மீன் என்பதை நட்சத்திரம் என்றும், மருத்துவம் என்பதை வைத்தியம் என்றும், வள்ளல் என்பதை உபகாரி என்றும், இளம் பருவம் என்பதை இளம்பிராயம் என்றும், படிகள் என்பதை பிரதிகள் என்றும், முற்றூட்டு என்பதை ஸர்வமானியம் என்றும், கல்வெட்டு என்பதை சிலாசாசனம் என்றும், சான்று என்பதை ஆதாரம் என்றும், நகைகள் என்பதை ஆபரணங்கள் என்றும் கொடி என்பதை துவசம் என்றும், போர் என்பதை யுத்தம் என்றும், பயன்படுத்துதல் என்பதைப் பிரயோகங்கள் என்றும் பலவாறு வடசொற்களைப் பெய்து எழுதுவதில் இவர் பெருமகிழ்வுற்றதாகத் தெரிகிறது.

அவ்வாறு தமிழ்மொழியோடு வடசொற்களை பெய்து எழுதுவதால் வடமொழியாகிய சமஸ்கிருதத்தின் துணையின்றித் தமிழ் இயங்காது என்பது வலியுறுத்தம் பெறல் வேண்டும் என்பது இவர் கொள்கையாக இருக்கலாம். இவர் இதனை, ஒரு கொள்கையாக வலிந்தே கையாண்டுள்ளார் என்பதற்குப் புறநானூற்றுப் பதிப்பின் உரையின் இயல்பு என்னும் பகுதியில் ‘வடசொல்லாட்சி’ என்னும் தலைப்பிட்டு, அப்புறநானூற்று உரையாசிரியரின் உட்கோளை இவர் கண்டுகொண்டதாக எழுதும் பகுதியே அழுத்தமான சான்றாகும். அப்பகுதியில்,

“இவரது உரைநடை பெரும்பாலும் செந்தமிழ்ச் சொல் நிறைந்ததாக இருப்பினும் ஓரோரிடங்களில் சில தமிழ்ச் சொற்களுக்கு வட சொற்களைக் கொண்டு இவர் பொருள்
எழுதியுள்ளார். கடனென்பதற்குப் பிண்டோதக்-கிரியை யென்றும் மருந்தென்பதற்குப் பரிகாரம் என்றும், ஒளிருமென்பதற்குப் பாடஞ்செய்யும் என்றும் அறம் என்பதற்கு தர்மம் என்றும் பூண்டென்பதற்குப் பரித்தென்றும், ஓம்புதல் என்பதற்குப் பரிகரித்தல் என்றும் கூறும் இடங்களையும் இவற்றைப் போன்ற பிறவற்றையும் காண்க.” – _என்று எழுதியுள்ளார்.

புறநானூற்று உரையாசிரியர் கொண்டதாக இவர் குறிப்பிடும் அதே கொள்கையை இவரும் பின்பற்றியதற்குக் கரணியம் புறநானூற்று உரையாசிரியரையும் ஓர் ஆரியப் பார்ப்பனராகக் காட்டுதல் வேண்டும் என்பதோ, அவ்வாறு எழுதுவதுதான் சிறப்பு என்பதை உணர்த்தல் வேண்டும் என்பதோவாகத்தான் இருக்க வேண்டும். மேலும் பண்டைப் புலவர்களிலோ, முற்றூட்டுப் பெற்ற சிற்றரசர்களிலோ ஆரியர்கள் இருப்பாராயின் அவர்களை மிகவும் சிறந்தவர்களாகக் குறிப்பது இவரின் இனப்பற்றையும், ஓரம் போகிய தன்மையையும் நன்கு காட்டுகின்றது.

சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கவுணியன் விண்ணந்தாயன் என்னும் சிற்றரசனை இவன் “அந்தணத்திலகன்” என்றும் ‘கவுண்டின்னிய கோத்திரத்திற் பிறந்தான்’ என்றும் தேவையற்ற குறிப்புகளை எழுதி வைத்துள்ளார். பாடிய புலவர்கள் குறித்த ஏதேனும் ஒரு சிறு குறிப்பைக் கொண்டே சிலரை இவர் இனத்தவராகக் கொண்டு மகிழும் சிற்றின்ப உணர்ச்சியும் இவருக்கு இருந்திருக்கின்றது. கழகப் புலவர் எருக்காட்டூர்த் தாயங் கண்ணனாரை’ இவர் அந்தணரின் வேள்வித் தீயைப் பாராட்டிக் கூறியிருத்தலால் இவர் அந்தணராகக் கருதப்படுகிறார்’ என்றும் சுள்ளில் ஆத்திரையனார் என்னும் புலவரை ‘ஆத்திரையன்_ அத்திரி குலத்தில் பிறந்தவர்; இவரது பெயர் குடிப்பெயர்; இதனால் இவர் அந்தணராகக் கருதப்படுகிறார்’ என்றும் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனாரை ‘இவர் குலம் ஒருவகை வேதியர் குலமென்பது சிலர் கொள்கை’ என்றும் வேம்பாற்றூர்க்குமரனார் என்னும் புலவரைக் குறிப்பிடுங்கால், ‘வேம்பாற்றூர் என்பது மதுரைக்கு கிழக்கே உள்ள ஓர் ஊர்; வேம்பத்தூரென இக்காலத்து வழங்கும்; குலசேகரச் சதுர்வேதி மங்கலமென்றும் இதனுக்கு ஒரு பெயருண்டென்று சிலாசானத்தால் தெரிகிறது”என்னும் குறிப்பெழுதி, ‘கடைச் சங்க புலவர் காலந்தொடங்கி இன்றுவரை அந்தணர்களே தமிழ்ப் புலவர்களாக இவ்வூரில் விளங்கியிருத்தல் கண்கூடாதலாலும், பெயராலும் இவர் அந்தணராகக் கருதப்படுகிறார்’ என்றும் இன்னும் பலவாறும் இவர் குறிப்புகளைத் தம் இனம்சார்பாக எழுதிக் கொள்வது வழக்கம்.

மேலும், மதுரை வேளாசான் என்னும் புலவர் ஒருவர் எழுதிய புறப்பாடற் குறிப்பைக் கொண்டு “ஒரு வேந்தனிடமிருந்து மற்றொரு வேந்தன்பால் அந்தணன் தூது செல்லுதற்குரியவன் என்பது இவர் பாடலால் தெரிய வருகின்றது” என்று தம் இனத்திற்கு அரசர்கள் கொடுத்ததும் கொடுக்க வேண்டியதுமான ஏற்றத்தையும் மன வேட்கையையும் இவர் வெளிப்படுத்தியிருப்பதைப் பார்த்தால், கழக நூற்பதிப்பு என்னும் கல் தரையில் இவர் தம் இனப் பதிவை எத்துணை ஆழமாகச் செதுக்கி வைத்துள்ளார் என்பது தெற்றெனப் புலப்படும்.

– பாவலரேறு அவர்களின் இத்தகைய ஆதாரப்பூர்வமான ஆய்வுக்கு ‘சோ’விடமிருந்து தக்க மறுப்பு உண்டா?
உ.வே.சா.வைப் பற்றி பார்ப்பனர்கள் விளம்பரப்படுத்துவது குறித்து தந்தை பெரியார் அவர்கள் ‘குடிஅரசு’ (10.3.1935 பக்கம் 3, 4) தலையங்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்.

“பார்ப்பனர்கள், டாக்டர் சாமிநாதய்யர் விஷயத்தில் இவ்வளவு பிரயாசை எடுத்துக் கொண்டதன் அந்தரங்க நோக்கம் என்ன என்பதை பார்ப்பனரல்லாதார் நன்றாகத் தெரிந்து கொள்ளும்படி வெளிப்படுத்த விரும்பியே இவ்விஷயங்களை எழுத முன் வந்தோம்.
உண்மையில் இந்தப் பார்ப்பனர்கள் தமிழ் பாஷையின் மேலும், தமிழ் அபிவிருத்தியிலும் ஆசையுடையவர்களானால் இந்த டாக்டர் அய்யர் அவர்களை இன்று பார்ப்பனர்கள் கவுரவம் பண்ணுவதற்குக் காரணமாக இருந்த, அவருடைய ஆசிரியரான காலஞ்சென்ற மகா வித்துவான். மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களைப் பற்றியோ, கும்பகோணம் காலேஜில் தமிழாசிரியராக இருந்த காலஞ்சென்ற தியாகராஜச் செட்டியார் அவர்களைப் பற்றியோ குறிப்பிடாமல் இருந்திருக்க முடியாது.

ஆனால் இவர்களைப் பற்றிப் பொது ஜனங்கள் தெரிந்து கொள்ளும்படி செய்யவோ இவர்கள் அய்யர் அவர்களுக்கு செய்த நன்றியை எடுத்துக்காட்டவோ எந்தப் பார்ப்பனரும், எந்தப் பார்ப்பனப் பத்திரிகையும் முன்வரவில்லை.

அன்றியும் தமிழைப் படிப்பாரும், ஆதரிப்பாரும், படிப்போர்க்கு உதவியளிப்பாரும் இல்லாதிருந்த காலத்தில் மதுரையில் தமிழ்ச் சங்கத்தை ஏற்படுத்தி, அதன் பயனையும் பெரும்பாலும் பார்ப்பனர்களே அடையும்படி செய்து அச்சங்கத்தின் வளர்ச்சிக்காகவே சாகும் வரையிலும் உழைத்துக் காலஞ்சென்ற பாண்டித்துரைத் தேவர் அவர்களைப் பற்றி மனதினாலாவது இந்தப் பார்ப்பனர்கள் நினைத்ததுண்டா?

தொல்காப்பியம் போன்ற தமிழ் இலக்கணங்களையும், மற்றும் பல இலக்கியங்களையும் மிகுந்த பிரயாசையுடன் தேடி வெளியிட்ட காலஞ்சென்ற சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களைப் பற்றி இந்தப் பார்ப்பனர்கள் ஒரு வார்த்தையேனும் பேசுவதுண்டா?

தற்பொழுது கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை வைத்து நிர்வகித்து பெரும்பாலும் தனது வாழ்நாளை அதற்காகவே அர்ப்பணம் பண்ணிவரும் தோழர் உமாகேசுவரன் பிள்ளை அவர்களின் முயற்சிகளுக்கு இந்தப் பார்ப்பனர்கள் துணை செய்யாவிட்டாலும்கூட பாதகஞ்செய்யாமல் இருக்க வேண்டும் என்றாவது நினைக்கிறது உண்டா?

உண்மையில் பார்ப்பனர்களுக்குக் கொஞ்சமாவது தமிழ் மொழிக்கும், தமிழ் அபிவிருத்திக்குப் பாடுபட்டவர்களுக்கும், பாடுபடுகின்றவர்களுக்கும் பெருமை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா என்பதை இதுவரையிலும் சொல்லி வந்ததைக்கொண்டும், மேலே நாம் எடுத்துக்காட்டியவர்களின் ஊழியத்தைச் சிறிதாவது பாராட்டுவதற்கு முயற்சியெடுக்காததைக் கொண்டும் அறிந்திருக்கலாம்!’’ என்று தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ளார்கள்.
1901இல் மதுரை தமிழ்ச்சங்கம் அமைத்த ஞானியாரடிகள் பிராமணன் என்று சாதிக்கும் அளவுக்கு ‘சோ’வின் ஆத்திரம் அறிவை மழுக்கி இருக்கிறது! ஆதாரங்களைத் தெரிந்து கொள்வதிலும், வெளியிடுவதிலும் அவருக்குள்ள பொறுப்பற்ற தன்மையைத்தான் இது வெளிப்படுத்தும்.

அந்த ஞானியாரடிகள் வேறு யாருமல்லர். தந்தை பெரியாரால் துவக்கப்பட்ட ‘குடிஅரசு’ இதழை (2.5.1925) முதன் முதலில் துவக்கி வைத்தவர் அவர்தான்.
அவர் பார்ப்பனரல்ல_ – வீர சைவ மரபினர் என்று ஆதாரத்துடன் ‘துக்ளக்’குக்கு ஞானியாரடிகள் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் திரு.அ.நா.பாலகிருஷ்ணன் அவர்களால் எழுதப்பட்ட கடிதத்தை ‘துக்ளக்’ வெளியிடவில்லை (ஆதாரம்: ‘சங்கொலி’, 16.2.2001 பக்கம் 8).
‘சோ’வின் அறிவு நாணயத்திற்கு இது ஒன்று போதாதா?

“திரு” என்ற அழகிய தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்துவதில் கூட உ.வே.சா., இரா.இராகவய்யங்கார்கள் போட்ட முட்டுக்கட்டை கொஞ்ச நஞ்சமல்ல! இதுபற்றி பேராசிரியர் முனைவர் சாரதா நம்பி ஆரூரான் அவர்கள் “தனித் தமிழ் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்” என்ற நூலிலிருந்து “குறளீயம்” இதழில் (1.11.2000) வெளிப்படுத்தியுள்ளார். அதன் விவரம் இதோ!

‘திரு’வை எதிர்த்து தமிழறிஞர் இரா.இராகவய்யங்கார், உ.வே.சாமிநாதய்யர் முதலானோர் எழுதினர். இரா.இராகவய்யங்கார் ‘சுதேசமித்திரன்’ இதழில் ‘திரு’ என்ற சொல் ‘ஸ்ரீ’ என்பதுபோலச் செவிக்கு இன்பம் பயவாது என்றும் ‘திரு’ என்னும் அடையாளமும் உதவாது என்றும் மறுத்தெழுதினார்.
‘திரு” என்பதே தொன்று தொட்ட வழக்கு என நாவலர் ச.சோமசுந்தர பாரதியாரும் ‘மங்கல மொழி ‘திரு’ என பண்டிதமணி கதிரேசஞ்செட்டியாரும் ‘திருவின் பெருமை என’ நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டாரும் எழுதினர். இத்‘திரு’ போராட்டத்தில் தேவநேயப் பாவாணரும் ஈடுபட்டுத் ‘திரு’வின் பழைமையையும் ‘ஸ்ரீ’யின் பிற்பட்ட வரலாற்றையும் ‘திரு’வின் வேர் மூலத்தையும் விளக்கித் ‘திரு’ என்னும் சொல் தென் சொல்லே என்ற கட்டுரை வரைந்தார் என்று “தனித் தமிழ் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்” என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.

தமிழில் உள்ள ஒரு சொல்லைப் பயன்படுத்துவதற்குக்கூட தொல்லை கொடுத்தவர்கள்தான் தமிழுக்குத் தொண்டு செய்தவர்களா?
உலகம் போற்றும் உயர் கருத்துகளை வாரி வழங்கிய திருவள்ளுவரைக் கூட இவாள் கொச்சைப்படுத்தாமல் விட்டது கிடையாதே!
உ.வே.சா. அய்யர் The Kural or the Maxims of Thiruvalluvar (1916) என்று ஆங்கிலத்தில் திருக்குறளை மொழிபெயர்த்து இருக்கிறார். அதன் முன்னுரையில்,

…Tradition declares that he was the child of a Brahman father named Bhaghavan and a Pariah mother Adi who had been brought up by another Brahman and given in marriage to Bhaghavan. Six other children are named as the issue of this union, all of whom have debbled in poetry.

“திருவள்ளுவரின் தந்தையார் பகவன் என்ற பார்ப்பனராவார். இவரது தாயார் ஆதி என்கிற பறைச்சி. ஆதியை இன்னொரு பார்ப்பனர் அழைத்து வந்து பகவனுக்கு மணம் முடித்து வைத்தார். ஆதி-_ – பகவன் கூட்டுறவால் திருவள்ளுவரன்றி ஆறு குழந்தைகள் பிறந்தனர். அக்குழந்தைகளுக்குப் பெயர்களும் சூட்டப்பட்டன என்று மரபுவழிச் செய்தியாக சொல்லப்படுவதோடன்றி இதனைக் கவிதையாகவும் எழுதி வைத்துள்ளனர்” என்று எழுதியுள்ளார். ஒரு பாடலில் இக்கருத்தை கபிலனே சொல்லுவதாக அமைந்து இருக்கிறது. அதில்கூட ‘அந்தணர் வளர்க்க யானும் வளர்ந்தேன்’ என்று கடைசி வரி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் அதே முன்னுரையில்,

“Thiruvalluvar does not treat of the fourth objective separately and Hindus say that he has submitted himself to the orthodox rule that none but a Brahman should be a teacher of spritual truth to mankind”.
அதாவது, “திருவள்ளுவர் நான்காவதான வீட்டுப் பேற்றைப் பற்றி தனியாக ஏதும் கூறவில்லை. மனித குலத்திற்கு ஆன்மிக உண்மைகளைப் பார்ப்பனரைத் தவிர வேறு எவரும் போதிக்கக் கூடாது என்ற பழங்கால வைதிக (வேத) விதிகளுக்கு திருவள்ளுவர் தம்மை உட்படுத்திக் கொண்டார் என்று இந்துக்கள் கூறுகிறார்கள்” என்று எழுதினார்.

(க.திருநாவுக்கரசு அவர்களின் திருக்குறளும்
– திராவிடர் இயக்கமும் – ‘சங்கொலி’, 14.6.1996)

தமிழினத்தின் ஒரு தலைசிறந்த சிந்தனை-வாதியைப் பார்ப்பானுக்குப் பிறந்தவன் என்பதும், ஆன்மிகம் பற்றிப் பேசும் தகுதி ஒரு சூத்திரத் தமிழனுக்குக் கிடையாது; அது பார்ப்பனர்கள் சம்பந்தப்பட்டது என்பதும் பார்ப்பனத் திமிர் அல்லாமல் வேறு என்ன?

பெரிய படிப்பாளி, பன்மொழி அறிஞர் என்று பீற்றிக் கொள்ளும் ஒரு பார்ப்பனரின் தகுதியே இவ்வளவு தரைமட்டமாக இருக்கிறதே – இதற்குச் ‘சோ’வின் பதில் என்ன?

அறிவாளி என்றாலே அவன் பார்ப்பானா-கத்தான் இருக்க முடியும் – அல்லது பார்ப்பானுக்குப் பிறந்தவனாக இருக்க முடியும் என்பதைச் சகித்துக் கொள்ள முடியுமா? இத்தகைய கூட்டத்தை வெறுக்காமல் தான் இருக்க முடியுமா?

தமிழுக்காகப் பாடுபட்டதாகப் பாவனை செய்யும் இந்தப் பார்ப்பனர்களை ஒரு இடத்தில் தட்டினால், அவர்களின் உள்ளுணர்வு என்ன என்பது சட்டென்று புரிந்துவிடும். அதுதான் சமஸ்கிருதம் பற்றியது. எந்தப் பைத்தியக்காரப் பார்ப்பானைக் கேட்டாலும் தமிழை விட சமஸ்கிருதம் தான் உயர்ந்தது என்று கூறுவான்.
பார்ப்பான் வீட்டுப் பெயர்களில் தப்பித் தவறிக்கூட ஒரு தமிழ்ப் பெயரை மருந்துக்கும் காண முடியுமா?

இவ்வளவு பேசும் பார்ப்பனர்கள் தமிழ்நாட்டில் தமிழன் கட்டிய கோயில்களில் தமிழ்மொழி வழிபாட்டு மொழியாக இருக்க வேண்டும் என்று சொல்லிப் பாருங்கள்_ முகம் எண்கோணமாக மாறும்_ – மிளகாயைக் கடித்ததுபோல எரிந்து விழுவார்கள். அதனை எதிர்த்து நீதிமன்றம் போவார்கள்.
ஏன்? இதே ‘சோ’ தமிழ் வழிபாட்டு மொழிபற்றி என்ன எழுதினார்?

“மொழி ஆர்வமா? மத துவேஷமா?” என்று தலைப்பிட்டு தலையங்கமே தீட்டினாரே ‘துக்ளக்’கில் (18.11.1998).
“நம்மைவிட மிக மிகப் பெரியோர்கள்_ நம்மால் கனவிலும் எட்டிப் பிடிக்க முடியாத உன்னதமான நிலையில் உள்ளவர்கள் _ புருஷோத்தமர்கள் இறைவனைத் துதித்து இயற்றிய பாடல்களும், கோத்திரங்களும் பெரும் சக்தி வாய்ந்தவை என்ற நம்பிக்கை ஹிந்துக்களுக்கு உண்டு. ரிஷிகள், துறவிகள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் போன்ற புண்ணிய சீலர்கள் இயற்றிய துதிகளில் அடங்கியிருக்கும் வார்த்தைகளின் பொருளுக்கு மட்டுமல்ல அந்த சொற்களின் சப்தத்திற்கும்கூட சக்தி உண்டு என்பது நம்பிக்கை. ஆகையால் அப்பெரியோர்களினால் செய்யப்பட்ட துதிகளின் மொழி பெயர்ப்பு, அவற்றின் பொருளைப் புரிந்து கொள்ள உதவுமே தவிர, அவற்றின் புனித சக்தியைப் பாதுகாக்க உதவாது. இதற்குக் காரணம் மொழிகளின் மேன்மையல்ல, ஒலியின் சக்தி**
என்று எழுதியவர்தான் இந்த சோ. இதில் உள்ள ‘சாமர்த்தியம்’ என்ன தெரியுமா?

தாய்மொழி, தமிழ் மொழி என்றெல்லாம் சும்மா பேத்தாதீர்கள் _ – சமஸ்கிருத மொழியில் உள்ள ஒலிக்குத்தான் சக்தி உண்டு _ அதனால்தான் அதனை வழிபாட்டு மொழியாக வைத்துக் கொண்டுள்ளோம்_ – தமிழ் மொழியின் ஒலிக்கு அந்தச் சக்தியெல்லாம் கிடையாது என்பதைச் சுற்றி வளைத்து சாமர்த்தியமாக எழுதுகிறார்.
இன்னும் ஒருபடி மேலே சென்று அது இந்துக்களின் நம்பிக்கையாம்.

விவாதம் கிவாதம் என்று அண்டத்தையே புரட்டுவது போலப் பேசும், எழுதும் இவர் அறிவு ரீதியாக நேர்மையாக விவாதம் புரிய முடியாத ஓர் இடத்தில் நம்பிக்கை என்னும் ஆமை ஓட்டுக்குள் ஓடிப் பதுங்கி விட்டார்.

ஒலிக்குத்தான் சக்தி என்றால், கோயிலுக்குள் குந்த வைக்கப்பட்டுள்ள அந்தக் கடவுளுக்குச் சக்தி இல்லையா என்று கேட்கத் தோன்றலாம்; ஒலியின் மூலம்தான் ஒரு கடவுள் திருப்தி அடைவாரா? அவர் என்ன வெறுப்பு _விருப்பு அற்றவரா? இந்தக் கேள்விகளைக் கேட்கக் கூடாது!
அவர்தான் ஒரே வார்த்தையில் விவாதத்தை முடித்து விட்டாரே_ – “நம்பிக்கை.”

இனிமேல் சோவிடம் உரையாடல் நடத்துபவர்களும், விவாதம் செய்பவர்களும் ‘அது என் நம்பிக்கை!’ என்று கூறி அவர் வாயை அடைத்துவிடலாம். நம்பிக்கை என்று சொல்லிவிட்டால், அதற்கு மேல் தான் விவாதத்துக்கும் அறிவுக்கும் இடம் இருக்க முடியாதே! சோ எப்படிப்பட்ட விவாதப்புலி_ அறிவாளி என்பதற்கு இதுதான் அளவுகோல்!

சோவாக இருந்தாலும் சரி, வேறு எந்தப் பார்ப்பனராக இருந்தாலும் சரி அவர்கள் பற்றெல்லாம் சமஸ்கிருதத்தின் மீதுதான்_ – தமிழ் மீது அல்ல! அதே நேரத்தில் பிழைப்புக்காக மட்டும் அவர்களுக்குத் தமிழ் வேண்டும்.

சிதம்பரம் நடராசர் கோயிலில் ஆறுமுகசாமி என்ற அறுபது வயது முதியவர் திருவாசகம் பாடியதற்காக, கோயில் தீட்சதர் பார்ப்பனர்கள், முதியவர் என்று கூடப் பாராமல் அடித்து உதைத்தார்களே_ – (‘கல்கி’, 4.6.2000).

அது பற்றி ஒரு வரி கண்டித்து எழுதியதுண்டா இந்த சோ?
சோவின் எழுத்துகளில் சாமர்த்தியம் இருக்கலாம்_ – ஆனால் உண்மை எதுவும் இல்லை என்பது மட்டும் உண்மை! அதன் உள்ளீடு எல்லாம் எப்படியும்

பார்ப்பனீயத்தை உயர்த்திப் பிடித்துக் காட்ட வேண்டும் என்பதே! ♦

திங்கள், 24 ஜூன், 2024

தமிழர்கள் அரேபிய தீபகற்பத்திற்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பே சென்ற சான்றுகள்


 டிசம்பர் 16-31, 2023 உண்மை Unmai

– சரவணா இராஜேந்திரன் 

தமிழி எழுத்துப் பொறித்த பானை ஓடு ஒன்று தென் அரேபியாவில் உள்ள ஓமனில் கோர்ரோரி (Khor Rori) பகுதியில் சும்குரம் (Sumhuram) என்ற ஊரில் 2006ஆம் ஆண்டுக் கிடைத்தது. அதில் ‘ணந்தை கீரன்’ என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. கி.மு. முதல் நூற்றாண்டுக்கு முந்தையதாகக் கருதப்படும் இது, வரலாற்றில் புதிய பாதையைத் திறந்துள்ளது. தமிழகத்தின் பண்டைக் கடல் வணிகம் எகிப்து -செங்கடல் பகுதிகளுக்கிடையே மட்டுமின்றி அரேபியப் பகுதிகளிலும் நடந்து வந்ததை இது நிறுவுகிறது.

ஓமன் பகுதியில் அகழாய்வு செய்த இத்தாலியக் குழு இந்தப் பானை ஓட்டைக் கண்டெடுத்தது. அகழாய்வில் ஈடுபட்ட அலெக்சியா பாவன் (Alexia Pavan) என்னும் இத்தாலியத் தொல்லியலாளர், “கேரளப் பட்டண இந்தியக் கடல் வணிகமும், தொல்லியல் தொழில்நுட்பமும்” என்ற தலைப்பில் கொச்சியில் நடந்த பன்னாட்டுப் பீங்கான் தொல்பொருள் ஆய்வரங்கில் அதைக் காட்சிப்படுத்தியுள்ளார்.

தொல்லியல் சார்ந்த பன்னாட்டு ஆய்வரங்கில் அந்தப் பானை காட்சிக்கும் வைக்கப்பட்டிருந்தது. கேரள வரலாற்று ஆய்வு மன்ற இயக்குநர் பி.ஜே. செரியனும், இலண்டன் பிரிட்டிஷ் அருங்காட்சியக ரோபர்ட்டா டோம்பரும் இணைந்து ஆய்வரங்கை நடத்தியுள்ளனர்.

புதுவைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கா. இராசன், இந்தியத் தொல்லியல் துறை மண்டல இயக்குநர் டி. தயாளன், தமிழ்ப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறைத்தலைவர் வி. செல்வக்குமார் ஆகியோர் மேற்குறிப்பிட்ட பானை ஓட்டைப் பற்றிக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பானை ஓடு சும்குரம் நகரத்தின் மிக முக்கியமான குடியிருப்புப் பகுதியில் கிடைத்தது. இது சமையல் பாத்திரத்தின் கைப்பிடியாக இருக்கலாம் என்றும், இதன் காலம் கி.மு முதல் நூற்றாண்டுக்குச் சற்று முன்னதாக இருக்கலாம் என்றும் அவ்வாய்வரங்கில் கலந்துகொண்ட முனைவர் பாவன் குறிப்பிட்டுள்ளார்.
அவ்விடத்தில் பேரளவில் தமிழகப் பொருள்களான மணிகள், காசுகள், பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவிற்கும் தென் அரேபியக் கடற்கரைக்கும் இருந்த நெருங்கிய உறவை இவை வெளிப்படுத்துகின்றன என்று பாவன் கருதுகிறார்.

பேராசிரியர் கா. இராசன் “ணந்தை கீரன்” என்கிற ஆள் பெயர் இரண்டு கூறுகளைக் கொண்டது என்கிறார். அந்தை எனும் சொல் மூத்தோரைக் குறிக்கும் மரியாதை ஒட்டு. இதைக் குழந்தை சம்பன், அந்தைஅசுதன், கொற்றந்தை எனத் தமிழ்க் கல்வெட்டுகளில் காணலாம்.

கீரன் ஓர் ஆளின் பெயர்.

தமிழ்ச் சங்க காலப் புலவர்களில் 20 பேருக்கு மேல் கீரன் என்ற பெயரில் உள்ளனர். எனவே, உடைந்த பானை ஓட்டில் உள்ள பெயர் புகழ்பெற்ற ஒரு பெருவணிகரின் பெயராக இருக்க வேண்டும் என்று இராசன் கருதுகிறார்.

பொதுவாக இந்தியர்களின் வணிகத் தொடர்பு எகிப்தியப் பகுதிகளுடன் தான் இருந்தது. செங்கடல் துறைமுகங்களான குவெசிர் அல் காதிம் (Quasir al-Qadim), “பெரெனிகே” (Berenike) ஆகியவைதான் இதுவரை ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

காதிம் நகரில் நடந்த அகழாய்வில் கணன் (கண்ணன்), சாதன் (சாத்தன்), ஓரி என்ற பெயர்களைத் தமிழி எழுத்தில் பொறித்த பானை ஓடுகளும், பெரெனிகே நகரில் கொற்றபுமன் (கோற்பூமான்) என்று தமிழி எழுத்தில் பொறித்த பானை ஓடும் கிடைத்துள்ள செய்தி 1990க்கு முன்னரே வெளிவந்தது.

கோரோரி கண்டுபிடிப்பு தென்னிந்தியாவின் மேற்குக் கரையிலிருந்து நடந்த வணிகம், அரேபியா முதலிய நாடுகளுடனும் நிகழ்ந்துள்ளதை நிறுவுகிறது என்கிறார். மணப்பொருள்களான மிளகு, இலவங்கம் முதலியவற்றோடு குதிரை வணிகமும் இந்தப் பகுதியில் அப்போது நடந்திருக்கலாம் என்று இராசன் கருதுகிறார்.
பைசா பல்கலைக்கழகம் மேற்கொண்ட இந்த அகழாய்வுகள் அரேபியப் பகுதிகளுடன் தமிழகம் பண்டைய மணப்பொருள் வணிக உறவுகளோடு, பண்பாட்டு உறவுகளையும் கொண்டிருந்ததை உறுதிப்படுத்துகின்றன என்கிறார்.

தமிழி எழுத்துப் பற்றி நடந்துள்ள ஆய்வுகளை வைத்துப் பார்க்கும்போது கோர்ரோரி எழுத்துப் பொறிப்பு குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது என்கிறார் கேரள வரலாற்று ஆய்வு மன்ற இயக்குநர் முனைவர் செரியன். இந்தக் கல்வெட்டுச் சான்றானது வரலாற்றுக்கு முந்தைய கால (எழுத்து வரலாறு தொடங்கிய கால) ஊழியில் இடம்பிடித்துள்ளதை அவர் சுட்டுகிறார்.

எகிப்துக்கும், அரேபியாவுக்கும் நடுவில் உள்ள செங்கடலின் கரைகளில் உள்ள கோர்மோஸ், பெரெனிகே மற்றும் இலங்கையில் சில இடங்களில் மட்டுமே இந்தியாவுக்கு வெளியே தமிழி பொறிப்புகள் கிடைத்துள்ளன.

இசுலாமுக்கு முந்தைய காலம்…

இந்த வகையில் இசுலாமுக்கு (கிபி 600க்கு) முந்தைய காலத் துறைமுக நகரமாக இருந்த கோர்ரோரி சிறப்பிடம் பெறுகிறது. இது தென் அரேபியாவுக்கும், தமிழகத்திற்கும் இடையேயுள்ள வணிகத் தொடர்பை நிறுவுகிறது என்கிறார் செரியன்.

சும்குரம் துறைமுகம் கி.மு 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 4-ஆம் நூற்றாண்டு வரை செயல்பட்டது. தமிழகத்திற்கும், நன்னிலக் கரைப்பகுதி நாடுகளுக்கும் இடையில் நடந்த நெடுந்தூரக் கடல் வணிகத்தில், கிமு முதலாம் நூற்றாண்டு முதல் கி.பி 4ஆம் நூற்றாண்டுகளில் செங்கடல் கரைப் பகுதிகள் மட்டுமின்றித் தென் அரேபியக் கடலோரப் பகுதியும் மெசபதாமியா (சுமேரியா, எலாம்) பகுதியும், அந்தந்தப் பகுதிகளின் பின்புல நாடுகளும் பங்கேற்றன என்பதன் முக்கியமான ஆதாரம் கோர்ரோரி கண்டுபிடிப்பு ஆகும் என்கிறார் செரியன்.

அண்மையில் செரியன் ஓமன் நாட்டில் சும்குரம் (கோர்ரோரி) நகரிலும், அல் பலீத் (Al Baleed) என்னும் இடத்திலும் கள ஆய்வு செய்துள்ளார். இதுவரை பல காரணங்களால் தென் அரேபியப் பகுதியின் நிலவியல்_ பண்பாட்டியல் முக்கியத்துவம் பற்றியும், அப்பகுதிக்கும் தென்னிந்தியாவுக்கும் இடையில் உள்ள உறவுகள் பற்றி ஆய்வு செய்யப்படாதது வருந்துதற்குரியதாகும்.

அப்பழங்கால வணிகம் பற்றிய விரிவான சான்றுகள் தென்னிந்திய இலக்கியங்களில் இல்லாத நிலையில் அகழாய்வுச் சான்றுகளும் ஓரளவிற்கு மாந்தவியல் சான்றுகளும் (எ.கா: தொன்மங்கள்) உதவுகின்றன.

சுட்டபின் பொறித்த எழுத்து…

கோர்ரோரி பானை சுடப்பட்ட பின்னர் தமிழி எழுத்து அதில் பொறிக்கப்பட்டுள்ளது. எனவே அகழாய்வுச் சின்னம் என்ற நோக்கிலும் பொறித்துள்ள செய்தியின் அடிப்படையிலும் இது முக்கியமானதாகும்.

எனவே பிற பகுதிகளில், குறிப்பாகத் தென்னிந்தியாவில் இதையொத்த பிற சான்றுகளைத் தொல்லியல் ஆய்வுகளில் கண்டுபிடிப்பதை நாம் அறைகூவலாக மேற்கொள்ள வேண்டும் என்கிறார் முனைவர் செரியன்.

கேரள வரலாற்று ஆய்வு மன்றம் பிற அமைப்புகளோடு சேர்ந்து எர்ணாகுளம் அருகே பட்டணம் என்னும் இடத்தில் அகழாய்வு செய்து வந்தது. தமிழ்ச் சங்க காலத்தில் வளமிக்க துறைமுகமாக இருந்த முசிறி தான் இந்தப் பட்டணம்.

இந்த அகழாய்வில்தான் இந்தியாவில் வேறெங்கும் இதுவரை கிடைத்திராத அளவுக்குப் பெரும் எண்ணிக்கையில் 3384 மதுச்சாடித் (Torpido Jar) துண்டுகளும், 1720 நீலநிறச் (Turquiose) சில்லுகளும் கிடைத்துள்ளன. தமிழகத்துக்கும் தென் அரேபியப் பகுதிகளுக்கும் இடையில் நடந்த பெரும் வணிக நடவடிக்கைகளை இது சுட்டுகிறது என்கிறார் செரியன்.

தென் அரேபியா, – கோர்ரோரி, – அல்பலீத் பகுதிகள் உள்ளிட்டவை “நறுமண நாடு”கள் என்று அழைக்கப்பட்டன. பட்டணத்தில் அகழ்ந்த பெரும்பாலான பள்ளங்களில் அகில் (Frankincense) துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளமை தென் அரேபியாவுக்கும், பட்டணம் பகுதிக்கும் இருந்த நெருங்கிய உறவை நிறுவுகிறது என்று முடிக்கிறார் செரியன். ♦


ஞாயிறு, 23 ஜூன், 2024

சங்க இலக்கியங்கள் முதல் பாரதியார் கவிதை வரை ‘சனாதனம்’ என்ற சொல் இல்லை!


கட்டுரை – 

2023 அக்டோபர் 1 - 15, 2023 உண்மை Unmai

R. பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். (சிந்துவெளி ஆய்வாளர்)

“எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்பது தொல்காப்பிய இலக்கணம்.
(தொல்.சொல். 157)

எல்லாச் சொல்லும் என்று கூறியதில் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்னும் நால்வகைச் சொற்களும் அடங்கும்.

“இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே.’ (தொல்.எச்ச.1,) என்று பிறமொழிச் சொற்கள் தமிழில் பயின்று வரும் முறை பற்றியும் தொல்காப்பியர் எச்சவியலில் பேசுகிறார்.

வடசொற்களைத் தமிழில் பயன்படுத்தும் முறை பற்றியும் அவர் தெளிவுபடுத்துகிறார்.

“வடசொல் கிளவி வட எழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே.”
(தொல். எச்ச.‌5)

அண்மையில் “சனாதனம்” என்ற “சொல்”; அதன் பொருள் மற்றும் அச்சொற்பொருள் சார்ந்த கருத்தியல் மற்றும் கோட்பாடுகள் பற்றி பொதுவெளியில் பரவலாக, பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.‌

“சகரக் கிளவியும் அதனோரற்றே

‘அஐஔ எனும் மூன்றலங் கடையே” என்று இலக்கணம் வகுத்த தொல்காப்பியத்தில் “சனாதனம்” என்ற சொல் இருக்கிறதா என்று தேடுவதே நியாயம் இல்லை தான்.‌
பரிபாடல், திருமுருகாற்றுப்படையிலும் சனாதனம் என்ற‌ சொல் இல்லவே இல்லை.

அடுத்து பதினெண்கீழ்க்கணக்கு நூல்களான திருக்குறள், நாலடியார், திரிகடுகம், ஏலாதி போன்ற நூல்களிலும் சனாதனம் என்ற சொல்லாடல் இடம்பெறவில்லை. திருக்குறள் என்ற உலகப் பொதுமறை “இதன் சாரம்; அதன் சாரம்” என்று வதந்திகளைப் பரப்புவோர் தான் இதற்கு பதில் சொல்லவேண்டும்.

“இரட்டைக் காப்பியங்கள்” என்று
போற்றப்படும் சிலப்பதிகாரம், மணிமேகலை யிலும் சனாதனம் என்ற‌ சொல் இடம் பெறவே இல்லை.

அய்ம்பெரும் காப்பியங்களில் அடங்கிய ஏனைய காப்பியங்களான‌ சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய நூல்களிலும் சனாதனம் என்ற சொல் இடம்பெறவில்லை.
கம்பராமாயணம், தேவாரம் திருவாசகம் நாலாயிர திவ்யப்பிரபந்தம் உள்ளிட்ட பக்தி இலக்கியங்களிலும் சனாதனம் என்ற சொல் இல்லவே இல்லை.
கம்பராமாயணத்தில் சலம், சனம், சழக்கு, சவரி, சழக்கியர் எல்லாம் இருக்கிறது. ஆனால் சனாதனமோ சனாதனியோ இல்லவே இல்லை. மூவர் தேவாரத்திலும் சைவக் குரவர்களாகிய நாயன்மார்கள் பற்றிய சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்திலும் சனாதனம் இல்லை.

நாலாயிர திவ்யப் பிரபந்தத்திலும் சமணம், சமயம், சரணம், சன்மம் ஆகிய சொற்கள் இருந்தாலும் சனாதனம் இல்லை.

அய்ஞ்சிறுங்காப்பியங்களிலும் சனாதனம் இல்லை. வில்லிபாரதத்தில் சன்பதம் இருக்கிறது; ஆனால் சனாதனம் இல்லை.

சன்மார்க்கம், சற்குரு, சமரசம் போன்ற‌ சொல்லாட்சிகள் இடம்பெறும் திருவருட்பாவிலும் சனாதனம் இல்லை. தாயுமானவர் பாடல்களிலும் இல்லை. கலிங்கத்துப் பரணியிலும் சனாதனம் இல்லை.

நளவெண்பா, திருக்குற்றாலக் குறவஞ்சி, முக்கூடற்பள்ளு, அபிராமி அந்தாதி, மதுரைக்கலம்பகம், கச்சிக்கலம்பகம் உள்ளிட்ட சிற்றிலக்கியங்கள் எவற்றிலும் சனாதனம் இல்லை.
மகாகவி பாரதியாரும் தனது கவிதைகளில் சனாதனம் என்ற பதத்தைப் பயன்படுத்தவே இல்லை.

மேலும் கல்வெட்டுக் கலைச்சொல் அகர முதலியிலும் சநாதன/ஸனாதன போன்ற சொற் பயன்பாடு இல்லவே இல்லை.
இவ்வாறு சங்க இலக்கியம் தொடங்கி பாரதியார் கவிதைகள் வரை தமிழ் இலக்கியப் பரப்பு நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ சந்தித்திராத ஒரு சொல்லே சனாதனம்
என்பதைப் புரிந்து கொள்வோமாக. ♦


செவ்வாய், 28 மே, 2024

இந்துமதம் தமிழர் மதமா?


ஆய்வுக்கட்டுரை இந்துமதம் தமிழர் மதமா?

2022 செப்டம்பர் 1-15-2022 உண்மை இதழ்

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

இந்து மதம் என்று இக்கால் கூறப்பெற்று வருவது உண்மையாக ஒரு தனி மதமே இல்லை. ஆரியரின் வேதமதமே; அஃதாவது, வைதீக மதமே. அண்டை அயல் கடவுள் கொள்கைகளை உட்கவர்தல் செய்து கொண்டு, இந்து மதம் என்னும் பெயரில், நம் மொழி, இனம், பண்பாடு, கலை, மெய்ப்பொருள் கொள்கை – முதலிய அனைத்துக் கூறுகளையும் அழித்துக் கொண்டுள்ளது.
நம் மறைமலையடிகளாரும், பாவாணரும் தமிழின மெய் வரலாறு கூறிய பேராசிரியர் பிறரும் தமிழர் மதங்களாகக் கூறுகின்ற சிவனியமும் சைவமும்), மாலியமும் (வைணவமும் கூடத் தூய தமிழர் மதங்கள் என்று சொல்லிவிடுகின்றபடி இன்றில்லை. இன்றுள்ள தமிழ் மொழி எவ்வாறு கலப்புற்றும், சமசுக்கிருதம் எவ்வாறு தமிழ் மொழியைத் தன்னுள் பெரும்பகுதி கரைத்துக் கொண்டும் உள்ளனவோ, அவ்வாறே தமிழரின் மதங்கள் என்று கூறுகின்ற சிவனியமும், மாலியமும், ஆரியக் கலப்புற்றும், ஆரியரின் மதமான வேத வைதீக மதம் அவற்றைத் தன்னுள் கரைத்துக்கொண்டும் திக்கு திசை தெரியாமல் மயங்கிக் கிடக்கின்றன.

தூயதமிழ் முயற்சி போல், தூயமத முயற்சியும் தமிழர் இனிமேல் தான் செய்ய வேண்டும். அதற்கு முன் நமக்கு ஒரு மதம் தேவையா என்பதை முடிவு செய்து கொள்வது நல்லது. இந்துமதம் தமிழினத்தைச் சிதைக்கின்றதா? ஆமாம் என்றால், எப்படி?
இந்து மதம் தமிழினத்தை ஏற்கனவே பெரும்பகுதி சிதைத்து அழித்து விட்டது. எஞ்சியுள்ள சில கூறுகளைத் தாம் நாம் இன்று தமிழ் மொழி, தமிழினம், தமிழ்க் கலைகள், தமிழ்ப் பண்பாடுகள், தமிழ் இலக்கியங்கள், தமிழ்நாடு என்றெல்லாம் கூறிவருகிறோம்.

இந்து மதம்
1. தமிழர்களை முதலில் பிறவி அடிப்படை-யிலும், பிறகு வருண அடிப்படையிலும், அதன் பிறகு ஜாதி அடிப்படையிலும் வேறு வேறாகப் பிரித்து, உயர்வு தாழ்வு கற்பித்துச் சிறப்பு இழிவு கூறி, இந்த இனம் என்றென்றுமே முன்னேறாமல் செய்து-வருகிறது.
2. தமிழ முன்னோர்களிடம் முன் இருந்திராத மூட நம்பிக்கைகள், அறியாமைகள், வேற்றுமைகள், இழிவுகள் போன்றவற்றை இந்துமதம் தன்னிடம் கொண்டுள்ள வேதங்கள், தர்ம சாத்திரங்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஆயின கருவிகளின் வழியாக என்றென்றும் நிலைபெற்று இருக்குமாறு செய்து வருகிறது. பற்றாக்குறைக்கு மேற்சொன்ன கருத்துக் கருவிகளுடன் இன்றுள்ள அறிவியல் கருவிகளான வானொலி, தொலைக்காட்சி, செய்தித் தாள்கள், கல்வி, கலை, ஆட்சி, அதிகாரம் முதலியனவும் இந்துமதத் தலைவர்கள், ஆட்சியாளர்கள் கைகளில் கிடைத்துள்ளன.
இவற்றினின்று அறியாத தமிழர்கள் விடுபடுவதும், அறிந்த தமிழர்கள் அவர்களை விடுவிப்பதும் மிகமிகமிகக் கடினமான செயல்களாக இருக்கின்றன.
3. இந்து மதம் தனிமாந்தன் ஒருவனின் தன்னம்பிக்கையைத் தகர்த்து, அவன் தன்னறிவைக் கெடுத்து, அவன் தன் முயற்சியைத் தவிர்க்கச் செய்கிறது. இதனால் அவன் என்றென்றைக்குமே தன்னை சார்ந்தவரைப் பற்றிக்கொண்டோ, அல்லது தன் மதத்தைப் பற்றிக் கொண்டோ, அதுவும் இல்லையானால் தன் ஜாதியைப் பற்றிக் கொண்டோதான் வாழ வேண்டியுள்ளது. இது தனிமாந்தன் ஒருவன் அனைத்து நிலைகளிலும் முன்னேறுவதற்கு இட்டுக்-கொண்ட பெரிய தடையாகும். எனவேதான் இங்குள்ள மக்களின் அனைத்து வாழ்வியல், அறிவியல், ஆட்சியியல் கூறுகளும் அனைத்து நிலைகளிலும் தாழ்ந்திருக்கின்றன.
4. இந்து மதம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை அளிப்பதில்லை. பெண்களை ஆண்களுக்கு அடிமைகளாகவே கருதுகிறது. பெண்களாகப் பிறந்து விட்ட நிலையை அஃது இழிவுபடுத்துகிறது.
5. பொருளியல் நிலையில் பொதுவுடைமை, சமவுடைமைக் கோட்பாடுகளை இந்து மதம் ஆதரிப்பதில்லை. இன்னுஞ் சொன்னால் பொருளியல் சமன்பாட்டை அது தவிர்க்கிறது. ஏழைமைக்கும் செல்வ நிலைக்கும் அது முற்பிறவிக் கோட்-பாட்டைக் காரணம் காட்டிச் சமச்சீர் நிலைக்கு அது தடையிடுகிறது.
6. அதுபோலவே உழைப்பவனும் உழைக்காமல் இருப்பவனும் இருக்க வேண்டுமென்பதையே அது வலியுறுத்தி, முதலாளியக் கோட்-பாட்டுக்கு என்றென்றும் அரண் செய்கிறது. ஆட்சியதிகார நிலைகளைக் கூட அது முற்பிறவிக் கோட்பாட்டுடன் இணைத்துக் குடியரசுக் கோட்பாட்டை அஃது இகழ்கிறது.
7. மக்களின் வாழ்க்கைக் காலத்தில் பெரும்பங்கை அது மத நடவடிக்கை களுக்கெனப் பயன்படுத்திப் பொது உழைப்பிற்கும், இயற்கை வள உருவாக்கத்-திற்கும் எதிரான கோணத்தில் மாந்த முயற்சிகளை அது திசை திருப்புகிறது.
8. காலத்தையும் முயற்சிகளையும் கட்டுப்-படுத்தும் அறிவியல் அல்லாத கோட்-பாடுகளை அது வலியுறுத்துகிறது.
9. மாந்தப் பொதுநலமே அறம் என்று கருதாமல், அவனவன் பிறவி நிலைக்கு உகந்தபடி அவனவன் வாழ்வதே தர்மம் என்னும் மாந்த முன்னேற்றத்திற்குப் பொருந்தாத கோட்பாட்டை அது மக்கள் முன்வைக்கிறது. ஒருவன் தன் பிறவிக்கு மேலான நினைவு கொள்வதற்கு முயற்சி செய்வதற்கும் அது தடையாக இருக்கிறது.
10. மதத் தலைவர்களுக்கே, குமுகாய நிலையில் உள்ள எவருக்கும் மேலான இடத்தைத் தருகிறது. மதத்தலைவர்களைக் கடவுள் நிலைக்கு அஃது உயர்த்தி வைக்கிறது.
11. இந்து மதம் மக்களை அச்சுறுத்துகிறது; மக்களின் உரிமை உணர்வுகளை நசுக்குகிறது; அவர்களின் தங்கு தடையற்ற அறிவு வளர்ச்சிக்குத் தடையிட்டு, மூடநம்பிக்கைகளை வளர்த்து நிலைப்-படுத்துகிறது.
மற்றும் இன்னோரன்ன காரணங்களால் தமிழினத்திற்கு மட்டுமின்றி, மக்கள் இனத்திற்கே இந்துமதம் பொருந்தாத ஒரு கோட்பாடாக இருப்பதை அனைவரும் நன்கு சிந்தித்துப் பார்த்தால் நன்கு விளங்கும்.
– தென்மொழி, சுவடி : 22, ஓலை : 2, 1986

புதன், 15 மே, 2024

தமிழ்மொழியின் பற்றில் திளைத்திருந்த ராபர்ட் கால்டுவெல், டாக்டர் ஜி.யு.போப்

விடுதலை ஞாயிறு மலர்
Published April 27, 2024

மு.வி.சோமசுந்தரம்

எட்டுப் பக்கங்களே கொண்ட ‘விடுதலை’ இதழ் ஒரு கட்டிக் கரும்பு. அதன் கனிச்சாற்றை நாளும் சுவைத்து, வாழ்நாளை நீட்டிப்பது, சுகமென்றிருந்தாலும், ஒரு சில நாளில் வரும் செய்தி படித்து, தொகுக்க வேண்டும் என்ற எண்ணம், துணிவு துள்ளி எழும். அந்த வகையில் இந்தக் கட்டுரை.
“நிறைகுடம் தளும்பாது” என்று கூறுவது வழக்கில் உள்ள ஒன்று. சென்னை கிண்டி மாளிகையில் உள்ள குடமோ பாதி குடம். அது விட்டுவிட்டு கொதித்து பொய்யாக பொங்கி வழிகிறது. கடமை மறந்து, தன் எல்லைக்கோட்டை உணராமல், உள்ளத்தில் மறைபொருள் வைத்து செயல்படுவதின் விளைவு இது. இதைத்தான் திருவள்ளுவர்,
“செயத்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்” (466)
என்று கூறுகிறார்.

செய்யும் கெடுதலான செயல்கள் எவை என்று பார்த்தால்,
1. திருவள்ளுவர் படத்துக்கு காவியையும் பட்டையையும் தீட்டி களிப்படைவது.
2. அரசின் சொல்லான ‘தமிழ்நாடு’ என்பதை ‘தமிழகம்’ என்ற அச்சிட்டு மகிழ்வது.
3. வள்ளலாரை ‘ஸநாதனத்தின் காவலர்’ என்று வாய் கூசாமல் கூறுவது.
4. அய்யா வைகுண்டரை, விஷ்ணுவின் அவதாரமென்றும், ஸநாதனத்தை சந்தைப்படுத்தியவர் என்று விமர்சிப்பதும் ‘6.3.2024 ‘விடுதலை’ தலையங்கம்)
5. கால்டுவெல், ஜி.யு.போப் போன்றோர்கள் நூல்கள் போலியானவை. பள்ளி அளவு கல்வி கற்காதவர்கள். தமிழ் மக்களின் கலாச்சாரத்தை அழிக்க முற்பட்டனர். (தினகரன், 12.3.2024, ‘விடுதலை’ – 6.3.2024). இவை ஒரு சில (ஆளுநரின் பேச்சில்).
கால்டுவெல், ஜி.யு.போப் பற்றி, மேலே கூறப்பட்டவை, அடித்தளம் அற்றவை, அவதூறானவை, வெறுப்பில் விளைந்தவை என்பதை வெளிப்படுத்தும் முகத்தான் அடுத்து வரும் செய்திகள் தரப்படுகின்றது.

ராபர்ட் கால்டுவெல், பிறந்த தேதி 7.5.1814 மறைந்த தேதி 28.8.1891. அவரின் உடல் இடையாங்குடி தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவர் அயர்லாந்து நாட்டில் பிறந்து, ஸ்காட்லாந்தில் கல்வி கற்றார். ஆங்கில மொழிப் புலமை பெற்றவர். சமய நூல்களையும், வேறு மொழி நூல்களையும் ஆர்வத்துடன் கற்றார். 1938ஆம் ஆண்டு சமயப் பணி மேற்கொள்ள இந்தியா வந்தார். சென்னையில் ஜனவரி, 8இல் 1938ஆம் ஆண்டிலிருந்து மூன்றாண்டுகள் இருந்தார். சமயப் பணிக்கு ஆங்கிலக் கல்வி பயனுள்ளதாக இருந்தாலும், மக்களின் தாய் மொழி மூலம் செயல்படுவது சிறந்தது என்று எண்ணினார்.
தமிழ்மொழியுடன், தெலுங்கு, மலையாளம், துளு போன்ற மொழிகளுடன் லத்தீன், கிரேக்கம், ஹீப்ரு, ஜெர்மன் போன்ற மொழிகளையும் அறிந்திருந்தார்.

கால்டுவெல் 1300 கி.மீ. நடைப் பயணமாக உதகமண்டலத்திலிருந்து, திருநெல்வேலி வழி 1841ஆம் ஆண்டு இடையாங்குடி கிராமத்திற்கு வந்தார். அவரின் வாழ்க்கை அப்பகுதி மக்களுடன் ஒன்றிப் போயிற்று. அப்பகுதியில் சமய, கல்வி, சமுதாயப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். குறிப்பாக ‘சாணார்’ என்று தாழ்ச்சியாக அழைக்கப்பட்ட நாடார் சமூகம், பொருளாதாரம், சமூக மதிப்பு பெற்று உயர்நிலை எய்த ஆவன செய்வதில் கவனம் செலுத்தினார். அதனால், பார்ப்பனருக்கு என்று இருந்த சமூக நிலைக்கு உயர்ந்தனர்.
அடுத்து, கால்டுவெல் தென்னிந்திய மொழிகளை ஒப்பிட்டு ஆய்வு செய்வதில் ஈடுபாடு கொண்டார் (Scholarly Research). அதன்மூலம் தமிழ் மொழிக்கு நிலைத்த பெருமையான நன்கொடையை வழங்கியுள்ளார். அது ஆங்கிலத்தில் “Comparative Grammar on the Dravidian or South Indian Family of Languages”. இவரின் ஆய்வு மூலம், தென்னிந்திய மொழிகள், சமஸ்கிருதத்தை விடத் தனித்தியங்கும் தகுதி பெற்றவை என்பதை ஞாலம் அறிய முடிந்தது.

தாம்பரம், சென்னை கிறித்துவக் கல்லூரி மேனாள் வரலாற்றுத் துறை பேராசிரியர் திரு.குமாரதாஸ், கால்டுவெல்லின் கடிதங்களையும், எழுத்துகளையும் நூலாகத் தொகுத்துள்ளார். அதன் மூலம் அன்றைய கால சமூக நிலையை அறிய முடிகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் பார்ப்பனர் உள்பட பலர் மதம் மாறினர். ஆழ்வார் திருநகரியில், அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை ஏற்று கோயில் மண்டபத்தில் அய்ந்து நாள்கள் உரையாற்றினார். உயர்ஜாதியினர் 21 பேர் மதம் மாறினர். இவரின் போற்றப்படும் மொழி ஒப்பியல் இலக்கண நூல் பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றுவதற்கு அடித்தளம் அமைத்தது என்று திரு.குமாரதாஸ் நூல் கூறுகிறது. “கால்டுவெல் என்றாலே, ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் பார்ப்பன சக்திகளுக்குக் குமட்டிக் கொண்டு வரும். காரணம் புரிகிறதா?” என்று இதைத்தான் 7.5.2023 ‘விடுதலை’ ஒற்றைப் பத்தி குறிப்பிடுள்ளது.

அடுத்து, ஜி.யு.போப்பின், தமிழ் மொழிக்கான அவரின் பங்களிப்பை எடுத்துக் கூறும் வகையில், துறைபோகிய (நீரியல் துறை) பொறியாளரும், சிறந்த தமிழ் ஆர்வளருமான, மறைந்த வா.செ.குழந்தைசாமி கூறுவது: “பணிவுடமை, அருளுடைமை, பொறையுடைமை போன்ற பண்புகள், கிறித்துவம் அல்லாத நாடுகள் போதிக்கவில்லை என்ற எண்ணம் அய்ரோப்பிய கிறித்துவ பிரச்சாரகர்களிடையே நிலவி வந்தது. குறளை 1886ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தவத்திரு ஜி.யு.போப் இந்த தப்பெண்ணத்தைத் தகர்த்தெறிந்தார்” என்பதாகும்.
சென்னை மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகங்களில், ஆங்கில மொழியின் புலமைப் பட்டங்கள் பெற்றவரும் சிறந்த மொழிபெயர்ப்பாளருமாகிய திரு.பி.எஸ்.சுந்தரம் அவர்கள், “மிகவும் ஈடுபாடும் புலமையும் கொண்ட மொழிபெயர்ப்பாளர்களுள், டாக்டர் போப், குறளை, ஒரு மலைப்பாம்பு நீளம் பக்க அளவு வரிகளில் வழங்கும் முறையைத் தேர்ந்தார்.” (The most devoted and learned of the translators, Dr.Pope, chose to render the Kural in lines that extend right across the page like pythons.)

இத்தகையப் பாராட்டுகளுடன், தமிழ் மொழியின் காதலனாக இருந்த டாக்டர் ஜி.யு.போப் 1908இல் காலமானார். அவரின் கல்லறை இங்கிலாந்து நாட்டில் ஆக்ஸ்போர்ட் நகரில் உள்ளது. திராவிடர் கழகத் தலைவர் தகைசால் கி.வீரமணி அவர்கள் இங்கிலாந்து நாட்டில், ஆக்ஸ்போர்ட் தமிழ் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த பொங்கல் விழாவில் உரையாற்ற 2004ஆம் ஆண்டு சென்றிருந்தார். ஜி.யு.போப், தமிழ்மொழியின்பால் கொண்டிருந்த பற்றை மதிக்கும் வகையில் 17.1.2004இல் போப்பின் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினார் என்பது தமிழ் தொண்டரைப் போற்றிய ஒரு செயல்.
கால்டுவெல், ஜி.யு.போப், இருவரும் அயல்நாட்டவரே, சமயப் பிரச்சாரப் பணிக்காக இந்தியா வந்தனர். புத்தரின் சீடர்கள் இலங்கை சென்றதும், விவேகானந்தர் சிகாகோ சென்றதும் சமயப் பிரச்சாரமே. அபுதாபி நாராயணக் கோயில் சமயப் பணி சார்ந்ததே.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற தமிழறிஞர் திரு.வி.அரசு அவர்கள், ராபர்ட் கால்டுவெல், ஜி.யு.போப் பற்றி பதிவு செய்துள்ள கருத்து:
“ஜி.யு.போப், கால்டுவெல் போன்ற சமயப் பிரச்சாரகர்களின் அர்ப்பணிப்பு ஈடு இணையற்றது. அவர்கள் மக்களைத் தன்னலமற்ற நோக்கில் அணுகி, மக்களின் கலாச்சாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டனர் என்ற பார்வை இருக்கக் கூடாது.”

தமிழ்நாட்டு ஆளுநரின் புரட்டுப் பேச்சு, திசை திருப்பும் பேச்சு போன்றவை அவருக்கு அளிக்கப்பட்ட மதிக்கத்தக்க பதவிக்கும், ஏற்றுக்கொண்ட பொறுப்புகளுக்கும், சிறப்பு சேர்ப்பதாக அமையவில்லை என்ற கருத்து மக்களிடையே எழுகிறது. இதைத்தான் 6.3.2024 தேதியிட்ட ‘விடுதலை’ இதழ் தலையங்கம் சரியாகவே குறிப்பிட்டுள்ளது.
இதனை விளக்குமுகத்தான் திருவள்ளுவர் கூறுவது:
“தலையி னிழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையி னிழிந்த கடை” – 964

(கட்டுரைக்கு ஆதாரம்:
‘தி இந்து’ 9.6.2022, ‘விடுதலை’ 7.5.2023, ‘தமிழின பண்பாட்டுக் கையேடு’)

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

பார்ப்பனர்கள் தமிழர்களா?

 


விடுதலை ஞாயிறு மலர்

பார்ப்பனர்கள் தமிழர்களா என்று சர் ஏ.டி.பன்னீர் செல்வம் கேட்பதற்காக மட்டும் நாங்களும் தமிழர்களே என்று சொன்னால் போதாது!
பார்ப்பனர்கள் தமிழர்கள் என்றால், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற தமிழர் கொள்கையை ஆதரிக்கின்றார்களா?
பார்ப்பனர்கள் மெய்யாலுமே தமிழர்கள் என்றால் தென்னிந்திய சிவாலாயங்களில் முதலில் வேதபாராயணம் செய்ய வேண்டுமென்றும் அப்புறந்தான் தேவாரம் ஓத வேண்டும் என்று சொல்லுவதேன்?
பார்ப்பனர்கள் தமிழர்களானால் சைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளாதது ஏன்?
பார்ப்பனர்கள் தமிழர்களானால் அறுபத்து மூன்று நாயன்மாரையும், பட்டினத்தார்,தாயுமானவர், இராமலிங்க சுவாமிகள் முதலிய பெரியோர்களை ஏன் வணங்கவில்லை?
சைவ சமயாச்சாரிகளை ஏன் கும்பிடவில்லை?
பார்ப்பனர்கள் தமிழரானால் – திராவிடர்களானால் ஓட்டல்களில் தமிழர்கள் எல்லோரும் வேற்றுமை இன்றி ஒன்றாக அமர்ந்து சிற்றுண்டியருந்தும்போது பார்ப்பனர்கள் மட்டும் தனியிடத்திலிருந்து உண்பதேன்?
பார்ப்பனர்கள் தமிழரானால் தமிழ் நூல்களென்றோ அவர்களுக்கு முதல் நூல்களாக இருக்க வேண்டும். வேதத்தை அவர்கள் முதல் நூலாகவும் ஆதாரமாகவும் கொள்வதேன்?

பார்ப்பனர்கள் தமிழரானால் சமஸ்கிருதத்திற்கு அவர்கள் உயர்வு கற்பிப்பதேன்?
தமிழ் நூல்களையெல்லாம் வட மொழியிலிருந்து மொழிபெயர்க்க பட்டவைகளே! என்று புனைந்து கூறுவது ஏன்?
பார்ப்பனர்கள் தமிழர்களானால் அவர்களுக்கு மட்டும் சமஸ்கிருதப் பள்ளிகளை ஸ்தாபித்திருப்பதேன்?
அப்பள்ளிகளில் தமிழர்கட்கு அனுமதி அளியாததேன்?
வேதமோதத் தமிழர்களுக்கு உரிமையில்லை எனக் கூறுவதேன்?

பார்ப்பனர்கள் தமிழர்களானால் சமஸ்கிருத மந்திரஞ் சொல்லி கலியாண, இழவுச் சடங்குகள் நடத்துவதேன்?
பார்ப்பனர்கள் தமிழரானால் தமிழர்கள் அநுஷ்டிக்காத பல வகை நோன்புகளையும், சடங்குகளையும் பார்ப்பனர்கள் மட்டும் அநுஷ்டிப்பதேன்?
இப்பொழுதும் தமிழர்களுடன் கலக்காமல் தனித்து வாழ்ந்து வருவதேன்?
தமிழர் பார்த்தால் திருஷ்டி, தோஷம் எனக் கூறி பார்ப்பனர்கள் மறைவிடங்களில் உண்பதேன்?
இவ்வண்ணம் கிரியாம்சையில் தாம் அந்நியர் என்று காட்டிக் கொள்ளும் கூட்டத்தார் வாய்ப்பேச்சில் மட்டும் நாமும் தமிழெரென கூறினால் யாராவது லட்சியம் செய்வார்களா?

பார்ப்பனர்கள் மெய்யாலுமே தமிழரானால் நடை உடை பாவனைகளில் அவர்கள் தமிழராக வேண்டும். முதலில் பூணூலை அறுத்தெறிய வேண்டும். தமிழ் நூல்களையே தமது முதல் நூல்களாக கொள்ள வேண்டும்.
தமிழ் மொழியே தன்னுடைய குலமொழி – கோத்திர மொழியென ஒப்புக் கொள்ள வேண்டும். சமஸ்கிருதம் தமிழை விட உயர்ந்தது என்ற தப்பெண்ணெத்தை விட வேண்டும்.
நடை உடை பாவனைகளால், பழக்கவழக்கங்களால் – மதாசராங்களால், அந்நியர் என்று காட்டிக் கொள்ளும் பார்ப்பனர்கள் விவாதத்துக்காக தமிழர் எனக் கூறிக் கொள்வது சுத்த அசட்டுத்தனமாகும்.
– தந்தை பெரியார், (22-01-1939)
நன்றி : (பன்னீர்செல்வம் – சமூக வலைதளப் பதிவு)

தமிழ் உரைநடை வளர்ச்சியில் கிறித்தவம் (முதல் தமிழ் அச்சு நூல்)

 

விடுதலை ஞாயிறு மலர்

தமிழ் மொழி உலகின் மிகப் பழைமையான மொழிகளுள் ஒன்று.உலகில் ‘செம்மொழி’ என்னும் சிறப்பினைப் பெற்ற தேர்ந்த மொழிகளுள் ஒன்றாக தமிழும் போற்றப்படுகிறது.
உலகின் செம்மொழிகள் என்ற நிலையில் கிரேக்கம், சமஸ்கிருதம், இலத்தீன், பாரசீகம், அரபு, எபிரேயம், சீனம், தமிழ் ஆகிய எட்டு மொழிகள் மட்டுமே இதுவரை உள்ளன.
ஒரு மொழியின் இலக்கியங்களின் வளமையை அடிப்படையாகக் கொண்டே செம்மொழி என்னும் சிறப்பினை ஒரு மொழி அடைவதாகக் கூறுகின்றனர்.
தமிழ் மொழியின் தோற்ற காலகட்டத்தை மிகச் சரியாக கணித்துக் கூற இயலாத போதும் சில குறிப்புகளினடிப்படையில் சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மொழியாக ஏற்கப்படுகிறது.

christian tamil பல்வேறு இலக்கியங்கள், இலக்கணங்கள், நிகண்டுகள், உரைகள், மருத்துவம், கணிதம், வானவியல், வரலாறுகள், பூகோளம் போன்ற கருத்துக்களையுடைய நூல்கள் மிகுந்த மொழி, தமிழ்.
கி.பி.16ஆம் நூற்றாண்டு வரை இவையனைத்தும் செய்யுள் நடையில் இலக்கண மரபுகளோடு மட்டுமே இருந்துவந்த நிலையில் மொழியறிவில் முழுத் தேர்ச்சிப் பெறாதோரால் எளிதாக அறிந்து கொள்ள இயலாத நிலையிலேயே செய்யுள் வடிவிலான படைப்புகள் குவிந்து கிடந்தன. அச்சகங்கள் வரும்முன்னமே அவற்றுள் பெரும்பாலானவை பனையோலைகளில் எழுதப்பட்டு ஏடுகளாக இருந்தன.
இவ்வாறு வெகு காலமாக இலக்கணத்தின் தளைகளுக்குள் கட்டுண்டு கிடந்த நம் தமிழ் மொழி பதினாறாம் நூற்றாண்டிலிருந்து மெல்ல உரைநடை என்னும் தேரினில் வலம்வர தொடங்கியது.
ஆம்… மக்கள் பேசும் மொழிநடைக்கும் செய்யுள் நடைக்கும் இடையே மிகுந்திருந்த வேறுபாடுகளை உரைநடை வடிவம் தகர்த்தது.
உரைநடை வடிவம் என்பது பேச்சு மொழி­யிலேயே எழுதுவதென்ற நிலையில் இருந்தது. இதனால் உரைநடை வடிவத்தை வெறும் எண்ணும் எழுத்தும் கற்ற பாமரர்களாலும் புரிந்து கொள்ள முடிந்தது.

ஆனால் ஒரு குறிப்பிட்ட மொழி பேசும் மக்களிடையேயும் எண்ணற்ற வட்டார வழக்குகள் மொழிச் சார்ந்து இருந்ததை கருத்தில் கொள்ள வேண்டியதிருந்ததால் எழுத்து நடைக்கென்றே உரைநடை வடிவத்தில் பொது நடையொன்று இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
இந்நிலையை தமிழ் மொழி அடைய ஆரம்பகால உரைநடை வளர்ச்சியில் பலதரப்பட்ட குழப்பங்கள் எழுந்தன.
இதற்கிடையே உரைநடை வடிவத்தை ஏற்க விரும்பாத செய்யுள்நடை விரும்பிகளால் எழுத்துலகில் எதிர்ப்புகளாக கண்டனங்களும் அதுசார்ந்த ஏளனப் படைப்புகளும்கூட எழுந்தன.இருப்பினும் அதிகபட்ச மக்களின் உரைநடைவடிவ விருப்பம் மற்றும் அதன் எளிமையால் குறுகியகாலத்தில் உரைநடை வடிவமே வெற்றி பெற்றது. இம்முறையை முதலில் தமிழில் அறிமுகம் செய்யத் துணிந்தவர்கள் அய்ரோப்பிய கிறித்தவ சமயப் பரப்புனர்கள் (மிஷனெரிகள்). அதற்கு முன்பே சில நூல்களுக்கான உரைகள் நமது ஆன்றோர்களால் எழுதப்பட்டிருப்பினும் அந்த உரைகளும் மீண்டும் மீண்டும் பலரால் அவ்வப்போது எளிமையாக்கப்படுமளவில் தான் இருந்து வந்திருக்கின்றன.
இந்நிலையில் சமயக் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு இந்தியாவிற்கு வந்திருந்த இவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். அவர்களுக்கு அதற்குப் பெருந்தடையாக இருந்தது மொழி. பேச்சு மொழியை கற்கவே கடினமாக உணர்ந்த அவர்களால் செய்யுள் நடையைக் கற்பது சாத்தியமற்றதாக உணர்ந்தனர்.

அதேநேரம் அய்ரோப்பிய நாடுகளில் எழுத்து வடிவத்திற்கும் பேச்சுவடிவத்திற்கும் வேறுபாடற்ற உரைநடைவடிவமே நடைமுறையில் இருந்து வந்தது. உரைநடை வடிவில் தான் அவர்களது கல்விமுறையும் இருந்தது. இதனாலேயே தங்களது நாட்டினர் எளிதில் கற்கவும் உலகச் செய்திகளை எளிதில் அறிந்து அறிவைப் பெருக்கிக் கொள்ளவும் முடிந்ததையும் நன்கு அறிந்திருந்தனர்.
இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே கல்வி கற்று அவர்களது அறிவை மேம்படுத்திக் கொண்டு மற்றவர்களை அறியாமைகளுக்குள்ளேயே வைத்திருப்பதை கண்டு வியந்தனர். எனவே அந்நிலையைக் களைய, எழுத்துமொழியை அனைவருக்கும் பொதுவாக்கும் தீவிர முயற்சியில் இறங்கினர்.
இந்நிலையில் தான் இயேசுசபை பாதிரிமார்கள் சமயப்பணிகளுக்கென்று 16 ஆம் நூற்றாண்டில் (1550 – அம்பலக்காடு) அச்சு இயந்திரத்தை கொண்டு வந்தனர் . அங்கு 1578ஆம் ஆண்டு முதன்முதலாக ‘தம்பிரான் வணக்கம்’ என்னும் தமிழ் உரைநடை நூல் அச்சிடப்பட்டது. இதுவே இந்திய மொழிகளில் வெளிவந்த முதல் தமிழ் அச்சு நூல் (மா.சு . சம்பந்தன், அச்சும் பதிப்பும் – 53).
இதனைத் தொடர்ந்து 1579இல் ‘கிறிசித்தியாணி வணக்கம்’ என்ற நூலும் 1586இல் ‘அடியார் வரலாறு’ என்ற நூலும் வெளியாகின. இந்நூல்களை அண்ட்ரிக் அடிகளார் என்ற பாதிரியார் வெளியிட்டார்.

அதன்பிறகு ராபர்ட் டி நோபிளி, வீரமாமுனிவர் போன்றோர் உரைநடையில் பல நூல்களை எழுதினர். அவற்றுள் வீரமாமுனிவர் எழுதிய சதுரகராதி (தமிழ் – தமிழ்) தமிழில் வெளிவந்த முதல் தமிழ் அகராதியாகும். இது செய்யுள் நடையிலிருந்த சொற்களைப் பேச்சு வழக்கிலுள்ள சொல்லாகப் புரிந்து கொள்ள ஏதுவாக இருந்தது.
ஆனாலும் இந்நூல்கள் அனைத்து மக்களிடமும் சென்று சேர்ந்ததாகக் கூற முடியாது. இவை சமயப்பணியாளர்களுக்கான நூல்களாகவே இருந்தன.
அக்காலச் சூழலில் பெரும்பாலான பொதுமக்கள் கல்வியறிவும் வாசிக்கும் பழக்கமும் அற்றவர்களாக இருந்ததும் அதற்கு ஒரு காரணம்.

18ஆம் நூற்றாண்டில் சீர்திருத்தக் (Protestant) கிறித்தவ மிஷனெரிகளின் வரவால்தான் உரைநடை வடிவம் தமிழில் வளரத் தொடங்கியது. சீகன்பால்க் என்ற ஜெர்மன் நாட்டு மிஷனெரி (1706) தஞ்சைக்கு அருகிலுள்ள தரங்கம்பாடியில் அச்சுக் கூடம் அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கான புத்தகங்களை அச்சிட்டு வாசிப்பை அனைவரும் விரும்பச் செய்தார். அதன் பிறகே தமிழ் மெல்ல மெல்ல பனையோலைகளிலிருந்து வெளியேறி அச்சேறி அமர்ந்தது.
ஆனால், 19ஆம் நூற்றாண்டில் தான் தமிழ் உரைநடை வடிவம் மிக வேகமான வளர்ச்சியடைந்து. ஆண்டி முதல் அரசன் வரை தமிழ் எழுத்துக்களை விழிகளால் தீண்டி மனத்தால் முத்தமிட்டனர். கருத்துப் பரிமாற்றங்களும் தொலைதூரச் செய்திகளும் அறிவியல் கண்ணோட்டங்களும், சமய நெறிமுறைகளும் மக்களின் மனக்கதவுகளை உடைத்துக் கொண்டு அறி­விற்குள் புகுந்தன.!

இதற்கு முதன்மையான காரணம் அனைத்துத்தரப்பு மக்களாலும், கல்வியின் பயன்பாடு உணரப்பட்டு கல்வியைப் பெற விளைந்ததுதான். அதற்கு கிறித்தவ சமயப்பரப்புனர்கள் அதிக அளவில் உந்துதலாக இருந்திருக்கின்றனர். அவர்கள் கல்விக் கூடங்களை ஏற்படுத்தி ஜாதி மத பேதமின்றி அனைவருக்குள்ளும் கல்வியை புகுத்தினர். எனவே அதற்கான அச்சு நூல்கள் அதிகளவில் அச்சிடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மிஷனெரிமார்கள் சமயப் பணிகளோடு கல்விப்பணியில் தீவிரமாக இறங்கினர். அதுவும் ஏனோ தானோவென்று வெறுமனே எண்ணையும் எழுத்தையும் மட்டுமே கற்பிக்க விரும்பாமல்,தங்களது அய்ரோப்பிய முறை கல்வியை அப்படியே வழங்கிட முயன்றனர். இந்தியர்கள் முழுமையான கல்வியறிவைப் பெற்று அறிவில் சிறக்க வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டனர்.

எனவே மொழிப்பாடத்தோடு, கணிதம், மற்றும் பூகோள நூல், நாட்டு வரலாறு, உலக வரலாறு, உடலியல் நூல், விலங்குகள், தாவரங்கள் குறித்த நூல்கள் போன்ற அறிவியல் நூல்களையும் கற்பித்தனர். இதற்கான உரைநடை நூல்களையும் அவர்களே எழுதி அச்சிட்டனர். ஏற்கெனவே தமிழில் இருந்த உண்மைக்குப் புறம்பான கற்பனைக் கதைகளை உடையதாக இருந்தனவற்றை சுட்டிக்காட்டி மெய்யறிவைப் புகுத்த விளைந்தனர்.
உண்மையான அறிவியல் நூல்களைக் கற்றுத் தேர்ந்த அய்ரோப்பிய மிஷனெரிகளுக்கு இது வியப்பை ஏற்படுத்தினாலும் உண்மையை நம்மவர்களுக்குள் புகுத்த அவர்கள் தயங்கியதில்லை. இந்த அறியாமையகற்றும் பணிகளுக்கு உரைநடையின் துணை அவர்களுக்கு பேருதவியாக இருந்தது.
1818இல் மிஷனெரி ரேனியஸ் ஏற்படுத்திய ‘துண்டுப் பிரசுரம் மற்றும் சமய நூல்கள் சங்கம்’ (Madras Tract and Religious Book Society) என்ற நிறுவனத்தின் மூலம் துண்டுத் தாள்களில் சமயக் கருத்துக்கள் மட்டுமல்லாமல் விழிப்புணர்வு தகவல்களும் அச்சிடப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கச் செய்ததால் அச்செழுத்துக்களை அறிமுகம் செய்ததோடு வாசிக்கும் ஆர்வத்தையும் கல்வியின் மீது நாட்டத்தையும் பரவலாக ஏற்படுத்தியது.

கல்வி அய்ரோப்பியர்களால் பொதுவுடமையாகி­யிருந்த அதே காலகட்டத்தில் இந்த உரைநடை வடிவிலான துண்டுப் பிரதிகள் மக்கள் மனதில் அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். இச்சங்கத்தின் மூலம் தான் 1831ஆம் ஆண்டு ‘தமிழ்த் தாள்’ (Tamil Magazine) என்னும் உரை நடைவடிவிலான முதல் மாத இதழ் சென்னையில் வெளியிடப்பட்டதாக மயிலை வேங்கடசாமி குறிப்பிட்டுள்ளார் (கிறிஸ்தவமும் தமிழும்-44).
ரேனியஸ் மிஷனெரி கல்வியறிவு இல்லாத மக்களுக்கு இந்தத் துண்டுப் பிரதிகளை வாசித்துக் காட்டவும் தான் பயிற்றுவித்த மாணவர்களைக் கிராமங்களுக்குள் அனுப்பி சிறந்த கருத்துக்களை உற்று கவனிக்கும் மனப்பான்மையை ஏற்படுத்தினார். இதன் மூலம் மக்கள் தாங்களாகவே வாசிக்க வேண்டும் என்ற உந்துதலையடைந்திருக்க வேண்டும் என்பதில் அய்யமில்லை.

தமிழ் உரைநடை வடிவை செம்மைப் படுத்தியதிலும் கிறித்தவ மிஷனெரிகளின் பங்கே முதன்மையானது. ரேனியஸ் தான் உரைநடை வடிவத் தமிழில் முதன் முதலாக வார்த்தைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு எழுதும் பழக்கத்தை கொண்டுவந்தவர். (சிட்னி சுதந்திரன், பரிசுத்த வேதாகமம் ஒரு வரலாற்று கண்ணோட்டம்- 39) . மேலும் இவரே முதன் முதலாகத் தமிழில் நிறுத்தற் குறியீடுகளைப் பயன்படுத்தியவர் (த.எஸ்தர் நான்சி பியூலா. தமிழில் விவிலிய மொழிப் பெயர்ப்புகள் ஓர் ஒப்பாய்வு-164)

இவருக்குப் பிறகு வந்த மிஷனெரிகளும் தமிழை பொதுமைப் படுத்தும் பணிகளை அதிக அளவில் மேற்கொண்டதனால் தான் இன்று உரைநடை வடிவில் உள்ளத்தில் தோன்றுவதையெல்லாம் முறைப்படுத்தி எழுத்துக்களாக்கி படைப்புக்களை தமிழ்க்கடலில் துளிகளாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
பிற மொழிகளின் உயர்ந்த படைப்புகளையும் எளிதில் உரைநடையாக்கம் செய்து கருத்துக்களை உடனுக்குடன் பெற முடிகிறது.
கிறித்தவ புனிதநூலான விவிலியம் இந்திய மொழிகளிலேயே தமிழில் தான் முதன்முதலில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கதாகும். இம்மொழிபெயர்ப்பு பணியினால் தமிழ் உரைநடை வடிவம் அதிக அளவில் மெருகேறியது. தமிழில் கலந்து எழுதப்பட்ட வடமொழிச் சொற்களை நீக்கி அதற்கு இணையான தமிழ் சொற்களை பயன்படுத்தியும் புதிய சமயச் சொற்களை உருவாக்கியும் சந்திப் பிழைகளின்றியும் எழுதக் கற்பித்து தமிழின் செழுமையை மேலும் மேலும் வளமையாக்கினர்.

அதிலும் 1838இல் இந்தியாவிற்கு சமயப் பணிக்கென்று வந்திறங்கிய ‘கால்டுவெல்’ என்னும் பேராளுமை தமிழ் மொழிக்குக் கிடைத்த மாபெரும் கொடை. இவர் தமிழ் என்பது திராவிடம் என்ற ஒரு மொழிக் குடும்பத்தின் தாய் என்றும், சம்ஸ்கிருதத்தின் வேரிலிருந்து அது முற்றிலும் வேறுபட்டதென்றும், சம்ஸ்கிருதத்தின் உறவின்றியே அது தனித்தியங்கும் திறனைப் பெற்றுள்ளதென்றும் ஒப்பீட்டாய்ந்து கூறியதை அறிவுலகம் அறிந்து மதித்தது. கால்டுவெல்லின் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற நூல் 1856இல் இங்கிலாந்தில் வெளிடப்பட்ட பின்னர்தான் தமிழ் மொழி, செம்மொழி என்னும் மாபெரும் தகுதிக்கான தொடக்கப்பாதையைப் பெற்றது.
தமிழ் உரைநடை வடிவத்தைத் தொடங்கியும் வளர்த்தும் மங்காப் புகழடையச் செய்த கிறித்தவச் சமயப்பணியாளர்களின் மொழிப்பற்றை இன்றைய தலைமுறையினரும் தொடர்ந்து செழுமையாக்க வேண்டியது அவசியம்.
நன்றி : “உங்கள் நூலகம்” – டிசம்பர் 2023