பக்கங்கள்

செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

ஜெயமோகனின் பித்தலாட்டம்!

 

 - கி.தளபதிராஜ்

அருஞ்சொல் எனும் இணைய தளத்தில்  பத்திரிகையாளர் சமஸ் அவர்களுக்கு  ஜெயமோகன் என்கிற ஒரு எழுத்தாளர் அளித்த பேட்டியில்,  ‘அறைகலன்’ என்ற வார்த்தையை தானே உருவாக்கி அதை தனது வெண்முரசில் பயன்படுத்தியதாக புளுகியதைக் கண்டு பலரும் முகம் சுளிக்கின்றனர். 

கடந்த சில நாட்களாக அவர்மீது கண்டனக்குரல்கள் முகநூல், வாட்ஸ்அப் போன்ற இணையதளப் பதிவுகளில் குவிந்த வண்ணம் இருக்கிறது. ஓரிருவர் இப்பதிவு கண்டு, ஜெயமோகன் மீது ஏன் இவ்வளவு வன்மம் என்றும் கேட்கிறார்கள். ஜெயமோகனின் தொடர் சங்கிப்போக்கை அறிந்தவர்களுக்கே இக் கண்டனக்குரல்களின் உணர்வை புரிந்துகொள்ள முடியும். 

இந்து தமிழ்திசை நாளிதழில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களைப்பற்றிய கட்டுரை வந்த போது மாலன் வகையறாக்கள் எப்படி எதிர்வினையாற்றினார்கள் என்பது தெரிந்ததுதான். அப்போது இந்த ஆசாமி  இந்து நாளிதழை ‘பிஸ்கட்டிற்கு வாலாட்டும் நாய்கள்’ என்று எழுதினார். பத்திரிகையாளர்கள் ஆசைத் தம்பியையும்,செல்வபுவியரசனையும் ‘மொண்ணைகள்’ என்று கேலிசெய்தார். இப்படிப்பட்ட ஒருவருக்கு எதிராக கருத்துகள் எழும்போது, ‘அவரது எழுத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்‘ என சில அப்பாவிகள் சொல்வது அபத்தமாக இருக்கிறது. வைரமுத்து எழுதாததா? அந்த தார்மீகம் அப்போது எங்கே போயிற்று?

தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வே கிடையாது என்றவர்  ஜெயமோகன்!

“எம்.ஜி.ஆர், சிவாஜியை கிண்டல் செய்து எழுதினேன். அதை யாரும் ரசிக்கவில்லை. ஒருமுறை கேரளாவில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது இஸ்லாமியர் உருவர் தன் தராசை ஆற்றில் கழுவிகொண்டிருந்ததைப்பார்த்து உங்க ஆட்கள் நதியையும் விற்க ஆரம்பித்து விட்டார்களா? என்று கமென்ட அடிக்க எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தர்கள். அந்த உணர்வு இங்கே இல்லை.” என்றார்.

(தினமலர்)

எம்ஜி.ஆரையோ, சிவாஜியையோ  ஒரு இஸ்லாமியரையோ கிண்டலடிக்கும் இப்பேர்வழி சங்கராச்சாரிகளை - சங்கிப்பேர்வழிகளை எப்போதேனும் கிண்டலடித்ததுண்டா? இது சரியான துக்ளக்தனம் தானே? இவரை ‘சோ’மாரி என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது?

வைக்கம் போராட்டத்தில் - “பெரியாரை அழைக்கும் அளவிற்கு, கேரளத்தில் தலைவர்கள் பஞ்சம் ஏற்படவில்லை!” 

என்று எழுதியவர்தான் இந்த மே(ல்)தாவி! 

வைக்கம் போராட்டத்திற்கு தலைமையேற்க பெரியாருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட சூழலை அறிவாரா இவர்!

1924 மார்ச் 30 வைக்கத்தில் போராட்டம் தொடங்குகிறது. போராட்டத்தில் கலந்துகொண்ட கேரளத் தலைவர்கள் கைதுசெய்யப்படுகிறார்கள். தலைமையேற்க தலைவர்களை அனுப்பும்படி காந்தியாரிடம் வேண்டுகோள் வைக்கப்படுகிறது.

வைக்கம் போராட்டத்தை அகில இந்தியப் போராட்டமாக பெரிதுபடுத்த விரும்பாத காந்தியார் தலைவர்கள் யாரையும் அனுப்பவில்லை.

ஏப்ரல் 4ஆம் தேதி கேரளத்திலிருந்து கே.நீலகண்ட நம்பூதிரிபாத், உடனே புறப்பட்டு வரும்படி பெரியாருக்கு தந்தி கொடுத்தார்!

திருச்சி குளித்தலை மாநாட்டில் கலந்துகொள்ள இருந்ததால் அவரால் உடனே புறப்பட இயலவில்லை.

ஏப்ரல் 6 ஆம் தேதி ஜார்ஜ் ஜோசப்பிடமிருந்து அழைப்பு வந்தது.

ஏப்ரல் 12 ஆம் தேதி நம்பூதிரிபாத், “சத்தியாகிரகத்தின் நிலைமையைப் பற்றி யோசிக்க கூட்டம் கூடுவதால் நீங்கள் அவசியம் வரவேண்டும்!” என மீண்டும் பெரியாருக்கு தந்தி அடித்தார்.

அதே சமயம் கொச்சியிலிருந்தும் டி.ஆர்.கிருஷ்ணசாமி அய்யர், “நீங்கள் இங்கு இருக்க வேண்டியது மிகவும் அவசியம். உடனே புறப்பட்டு வாருங்கள்!” என பெரியாருக்குத் தந்தி அனுப்பினார்.

இரவு 7 மணிக்கு பெரியாருக்கு வந்த மற்றொரு தந்தியில், “வைக்கத்தில் நிலைமை பயங்கரமாக இருக்கிறது. தலைவர்கள் எல்லோரும் கைது செய்யப்பட்டு விட்டனர். நானும் வைக்கத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். அங்கு நான் கைது செய்யப்படுவதும் நிச்சயம். இயக்கத்திற்கு தலைமை வகித்து நடத்த வாருங்கள். தந்தி மூலம் யோசனை கூறுங்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த சூழலில்தான் பெரியார் வைக்கம் புறப்பட்டார்!

வைக்கம் போராட்டத்தில் பெரியாரும் - காந்தியாரும்!

வைக்கம் போராட்டம் தொடங்கிய காலத்தில் அங்குள்ள வைதீகர்களின் பேச்சைக்கேட்டு சத்தியாகிரகத்தை நிறுத்த ஆலோசனை வழங்கியவர் காந்தியார்!

போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டிருந்த ஜார்ஜ் ஜோசப்பை கிறிஸ்த்தவர் என்பதற்காக ஒதுங்கியிருக்கச் சொன்னவர் காந்தியார்.

சத்தியாகிரகிகள் உண்ணாவிரதம் இருந்தபோது அதை கைவிடக்கோரி போராட்டத்தின் வீரியம் குறைய காரணமாயிருந்தவர் காந்தியார்.

“கைது செய்யப்படப்போகிறேன். தலைவர்கள் தேவை!” என ஜார்ஜ் ஜோசப்பும், “எல்லா தலைவர்களும் கைதாகிவிட்டனர். தயவு செய்து யாரையாவது அனுப்புங்கள்!” என கிருஷ்ணசாமியும் காந்தியாருக்கு தந்தி அடித்த நேரத்தில் அதை அகில இந்திய இயக்கமாக மாற்ற மனமில்லாமல் சென்னை மாகாணத்தினர் பார்த்துக்கொள்வார்கள் என முட்டுக்கட்டை போட்டவர் காந்தியார்.

ஒரு கட்டத்தில் மதம் மாற உத்தேசித்தவர்களை கடுமையாக சாடியுள்ளார் காந்தியார்!.

போராட்டக்களத்தில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டபோது அகில இந்திய கமிட்டி உதவி செய்ய இயலாது என கை விரித்தவர் காந்தியார்! ஆனால் இந்தக் கோரிக்கை எழும் முன்பே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியோ பெரியார் மூலமாக 1000 ரூபாய் நிதி திரட்டி அனுப்பி வைத்தது.

காந்தியாருடைய ஒவ்வொரு ஆலோசனையும் அறிவுரையும் சத்தியாகிரகிகளின் கைகளை கட்டிப்போடுவதாகவே அமைந்தது.

இந்தச் சூழலில்தான் கேரளத் தலைவர்களால் பெரியார் அழைக்கப்படுகிறார்.

1924 மார்ச் 30ஆம் தேதி தொடங்கிய போராட்டத்தில் சரியாக 12 நாள் இடைவெளியில் ஏப்ரல் 13இல் வைக்கம் செல்கிறார் பெரியார்.

1924 மார்ச் இறுதியில் தொடங்கிய போராட்டம் 1925 நவம்பர் வரை கிட்டத்திட்ட இரண்டு ஆண்டுகள் நடைபெறுகிறது. தொடர்ந்து போராட்டக் களத்தில் இருந்த பெரியார் இடையில் இரண்டு முறை கைது செய்யப்பட்டு மாதக்கணக்கில் சிறைத்தண்டனை அனுபவிக்கிறார். கடைசி வரைப் போராடி அதன் வெற்றிக்கூட்டத்திலும் பங்கேற்றவர் பெரியார்.

அரசாங்கம் சமாதானம் பேச பெரியாரை ஏற்பாடு செய்யும்படி இராஜாஜிக்கு தூதுவிட இராஜாஜி சாதுர்யமாக அதில் காந்தியாரை நுழைத்துவிட்ட செய்தியும் உண்டு. பெரியாரை பஞ்சாயத்திற்கு விட்டால் அது கோயில் நுழைவில் கொண்டுபோய் விடும் என இராஜாஜி நினைத்திருக்கக் கூடும்!

போராட்ட செய்திகளில் பெரியாரை அப்போதே (1925) ‘வைக்கம் வீரர்’ என்றே எழுதுகிறது நவசக்தி!

வரலாறு இப்படி இருக்க பெரியார்  வைக்கம் வீரரா? என்று நக்கலடித்து பேனாவை நகர்த்தியவர்தான் இந்த பித்தலாட்டப் பேர்வழி!

இவரைப்பற்றி அறிந்தவர்களுக்கு, ‘அறைகலன்’ என்ற சொல் தன்னால் உருவாக்கப்பட்டது என்று இவர் சொல்வதைக்கண்டு ஆச்சரியப்பட வாய்ப்பில்லை.

அறைகலன் என்ற சொல் வழக்கில் வந்தது எப்போது?

ஆட்சிமொழிக் காவலர் என்று பாராட்டப் பெற்ற கீ.இராமலிங்கனார் எழுதிய “தமிழில் எழுதுவோம்“ என்ற நூலிலேயே அறைகலன் என்ற சொல்  உள்ளது. 1978ஆம் ஆண்டு சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரால் இந்த நூல் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தவர் அன்றைய அமைச்சர்களில் ஒருவரான ஆர்.எம்.வீரப்பன்!  

அதன்பின் 90 களில் தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்ட “ஆட்சிச் சொல்லகராதி” - மணவை முஸ்தபா வெளியிட்ட மருத்துவ அறிவியல் தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி - என பல நூல்களிலும் furniture என்ற ஆங்கில சொல்லுக்கு மாற்றாக ‘அறைகலன்’ என்ற  வார்த்தை அறிமுகப்படுத்தப்பட்டு வணிக நிறுவனங்களிலும் இச்சொல் பல ஆண்டுகளாக புழக்கத்தில் இருப்பதை அறிவோம்.

இப்படி புழக்கத்தில் உள்ள ஒரு சொல்லையே தான் உருவாக்கியதாக ஜம்பமடிக்க முயலும் ஜெயமோகன் போன்றவர்களின் அறிவுநாணயத்தை என்னவென்று சொல்வது?

(கீ.இராமலிங்கனார் எழுதிய தமிழில் எழுதுவோம் நூல் பக்கம் 94)

                      

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2023

திருப்புகழ் பதிப்பு வரலாறு

இன்று நாம் போற்றிப்புகழும் திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த   24  வருட உழைப்பை நாம் அறிவோமா ? அதற்க்கு யார் காரணம் என்பதை  வரலாறு அறியுமா ?

அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர்அவர் அவர் முருகக் கடவுள் மீது இயற்றிய ஒரு பக்தி நூல்
திருப்புகழ் ஆகும்  திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன., அதாவது கிடைத்துள்ளன   இன்னமும் கிடைக்காதது பல நூறு ஆகும்  இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்திருக்கிறார்கள்.திருப்புகழிலுள்ள இசைத்தாளங்கள் இசைநூல்களிலடங்காத தனித்தன்மை பெற்றவை 

கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் ...... அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பகம் எனவினை .....என்றுதான் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் தனது அனைத்து சொற்ப்பொழிவுகளைத் தொடங்குவார் .அவர் மூலமே அடியேனுக்கும் திருப்புகழ் அறிமுகம் ஆனது .

அத்தகைய திருப்புகழ் நமக்கு கிடைக்க தனிப்பட்ட ஒரு அரசு அலுவலரின் தன்னலமற்றது தொண்டினாலும்  , ஆர்வத்தாலுமே காரணமாக அமைந்தது 
அந்த  போற்றுதலுக்குரிய  அறிஞர் வ.த.சுப்பிரமணிய பிள்ளை ஆவார் .

திருப்புகழ் நமக்குக்கிடைக்கவும் சுவையான ஒரு காரணமும் உள்ளது .
.அவர் குறித்து  ஒரு கட்டுரையை தமிழ் இந்து 9/8/14 அன்று வெளியிட்டிருந்தது .
அதை இப்போதுப் பார்ப்போம்

வ.த.சுப்பிரமணிய பிள்ளை 1871-ம் ஆண்டு மஞ்சக்குப்பம் வழக்காடு மன்றத்தில் மாவட்ட முன்சீப்பாகப் பணிபுரிந்த காலம் அது. சிதம்பரம் நடராஜர் கோயில் சம்பந்தமான வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்த வழக்கில் சாட்சிக் கூண்டில் நின்ற தீட்சிதர்கள் தங்களுடைய வாதத்தில் கோவில் உரிமை தீட்சிதர் களாகிய எங்களுக்கே என்று பொருள் தரக் கூடிய திருப்புகழ் பாடலை மேற்கோள் காட்டி வாதாடினர். அப்பாடலின் வரி;

“தாது மலர் முடியிலே வேத நன்முறை

வாளுவமே தினம் வேல்வி யாலிலில்

புனை மூவயீர வேட்டியர் மிகவே புகனை புரிகோவே

(கடவுளே வேத முறைகளில் கண்டிப்பாக இருந்தபடி பல்வேறு தியாகங்கள் செய்த மூவாயிரவர் என்ற பெருமை பெற்ற அந்தணர்களால் தினமும் துதிக்கப்படுபவரே நீங்கள்)

தீட்சிதர்கள் கூறிய வாசகத்தைக் கேட்டவுடன் வ.த. சுப்பிரமணிய பிள்ளை அவர்களுக்கு அக்கணமே பொறி தட்டியது. அருணகிரி நாதர் பாடிய பதினாறாயிரம் பாடல்களில் ஒரு ஆயிரம் பாடல்களையாவது சேகரித்து அச்சிட்டு வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டார்.

தலங்கள் தோறும் சென்று செல்லேறிப் போன பல வழுக்கள் பொதிந்திருந்த திருப்புகழ் ஓலைச்சுவடிகள் பலவற்றைச் சேகரித்து ஒத்துப்பார்த்து, பாட பேதங்களைக் கண்ணுற்று வெவ்வேறு சுவடிகளில் காணும் வித்தியாசங்களைப் பண்டிதர்களைக் கொண்டு திருத்தி அச்சிட்டுப் புத்தக வடிவில் யாவரும் எளிதில் பெறுமாறு செய்த ஏந்தல் வ.த.சுப்பிரமணிய பிள்ளை.

அரசாங்கப் பணிகளுக் கிடையில் தமக்குத் தெரிந்த பல நண்பர்களிடம் தொடர்பு கொண்டுத் திருப்புகழ் ஏட்டுச் சுவடிகளைத் தேடத் தொடங்கினார். ஆங்காங்கு அவை கிடைக்கத் தொடங்கின. 1876-ம் ஆண்டு ஆறுமுக நாவலர் எழுதிய சைவ வினா-விடையில் திருப்புகழின் ஆறு பாடல்கள் இருந்தன. 1878-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி அன்று காஞ்சிபுரம் புத்தேரி தெரு அண்ணாமலை பிள்ளை என்பவரிடமிருந்து 750 பாடல்கள் கொண்ட ஏட்டுச்சுவடிகள் கிடைத்தன. அதே வருடம் பின்னத்தூர் சீனிவாச பிள்ளையிடம் 450 பாடல்களும், பின்னர் அவரிடமே 150 பாடல்களும் கிடைத்தன. 20.03.1881-ல் கருங்குழி ஆறுமுக ஐயர் என்ற வீர சைவரிடமிருந்து 900 பாடல்கள் திருப்புகழ்ச் சுவடிகள் கிடைத்தன. 1903-ம் ஆண்டு திருமாகறல் என்ற ஊரில் 780 பாடல்கள் கிடைத்தன.

உ.வே.சாமிநாதையர் தமிழகமெங்கும் தமிழ் இலக்கிய ஏட்டுச் சுவடிகளைத் தேடிக்கொண்டிருந்த காலம் அது. வ.த.சுப்பிரமணிய பிள்ளையவர்கள், உ.வே.சாவிடம் தொடர்பு கொண்டு திருப்புகழ் சுவடிகளைக் கண்டால் தெரிவிக்குமாறு வேண்டிக் கொண்டார். இதை உ.வே.சா, தனது ‘என் சரித்திரம்’ நூலில் பதிவுசெய்துள்ளார்.

ஓலைச்சுவடிகளின் குறை களைக் களைந்து சீர் செய்வ தற்கு மஞ்சக்குப்பம் பள்ளி ஆசிரியர் சிவசிதம்பர முதலி யார், சேலம் சரவணப்பிள்ளை, ஆனந்த ராம ஐயர் போன்றவர் கள் ஆற்றிய பங்கு பெரிது.

திருப்புகழ் முதல் பதிப்பை 05.06.1891 அன்று சிவசிதம்பர முதலியார் செப்பம் செய்து சீர்திருத்தி வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்களிடம் ஒப்படைத்து விட்டார். 9.04.1895-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட திருப்புகழ் பாடல்களை அச்சிற்குப் பதிப்பிக்கக் கொடுத் தார். திருப்புகழ் கட்டம் செய்யப்பட்டு அழகிய வடிவில் அச்சில் பதிப்பித்து முதன்முதலாக புத்தக வடிவில் பிள்ளையவர்கள் அப்போது பணிசெய்து கொண்டிருந்த திருத்துறைப்பூண்டிக்கு அனுப்பப்பட்டது. புத்தக வடிவில் திருப்புகழைக் கண்ட பிள்ளையவர்கள் பேரானந்தம் அடைந்தார். அதே சமயம் ஓலைச்சுவடியிலிருந்து பெயர்த்து எழுதிச் செப்பம் செய்து தந்த சிவ சிதம்பர முதலியார் அச்சு வடிவத் திருப்புகழ் புத்தகத்தைக் காணாமலேயே இறந்துபோய் விட்டார்.

வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் திருப்புகழைப் புத்தக வடிவில் கண்ட அன்று தனது டைரிக்குறிப்பில் 09.04.1895-ம் ஆண்டு இவ்வாறாகக் குறிப்பிடுகிறார். கடந்த 24 வருடங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட திருப்புகழ் பதிப்பு வேலை முடிய இவ்வளவு காலம் சென்றுள்ளது. இப்போதும் பாதி அளவே முடிந்துள்ளது என்று கவலையுடன் குறிப்பிட்டுள்ளார்.

1909-ம் ஆண்டு சில திருத்தங்களுடன் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது. அதே ஆண்டு ஏப்ரல்-16-ம் தேதி இரவில் படுக்கைக்குச் சென்றவர் நள்ளிரவில் உயிர்துறந்துவிட்டார். வ.த.சுப்பிரமணிய பிள்ளையின் புதல்வர்கள் வ.சு.செங்கல்வராய பிள்ளை மற்றும் வ.சு.சண்முகம் பிள்ளையும்புதிய பாடல்களை இணைத்து திருப்புகழினைத் தொடர்ந்து வெளியிடலாயினர்.

வ.த.சுப்பிரமணிய பிள்ளையின் விருப்பப்படி அவருடைய சமாதி, திருத்தணி கோவிலை நோக்கியபடி அமைக்கப்பட்டுள்ளது.

நன்றி   தி இந்து 
படம்   அறிஞர் வ.த.சுப்பிரமணிய பிள்ளை 
மற்றும் திருப்புகழ்
-சித்தர் அறிவியல் முகநூல் பதிவு

ஞாயிறு, 22 ஜனவரி, 2023

தமிழ்நாடு என்கிற பெயர் எப்படி வந்தது?


1) மெட்ராஸ் ஸ்டேட் பிரசிடென்ஸி அதாவது சென்னை ராஜதானி என்கிற மாநிலத்தை இனி தமிழ்நாடு என்றே அழைக்க வேண்டும் என்று அழுத்தமாக ஓங்கி ஒலித்த முதல் குரல் பெரியாருடையது !

2) 1956 - 75 நாட்களுக்கும் மேலாக, தனித்து தீவிர உண்ணாநோன்பிருந்து இறந்து போனார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சங்கரலிங்கனார்.  ஊர் விருதுநகர்.  ஆட்சியிலிருந்தது காங்கிரஸ் அரசு.  முதலமைச்சர் காமராஜர்.  அவருடைய ஊர் ...

சங்கரலிங்கனாரின் பிரதானக் கோரிக்கை தமிழ்நாடு என்கிற பெயரை மெட்ராஸ் பிரசிடென்சிக்கு சூட்ட வேண்டும் என்பதுதான்.

ஆனால் இப்படி விரதம், கிரதம்ன்னு எங்கிட்ட பூச்சாண்டி காட்ட முடியாதுன்னேன் என்று காமராஜர் கறாராக, கல்லாக இருந்துவிட ;

துடி துடித்து செத்துப் போனார் தியாகி சங்கரலிங்கனார்.

காங்கிரஸ் கைவிட்டு விட, அன்று அவருடன் இருந்தது கம்யூனிஸ்ட் & திமுக.

காங்கிரஸ் தலைவர்களைத் தவிர ஏனையக் கட்சிகளின் அனைத்து தலைவர்களும், உண்ணாவிரதப் பந்தலுக்குப் போய் சங்கரலிங்கனாரை பார்த்துவிட்டு வந்தனர்.  அப்படி ஒருமுறை அண்ணா அவர்கள் போனபோது, அவருடையக் கைகளை அழுந்தப் பிடித்துக் கொண்டு சங்கரலிங்கனார், காங்கிரஸ்தான் என்னைக் கை விட்டுடுச்சி, நீயாவது என் ஆசையை நிறைவேத்து என்றிருக்கிறார்.  அண்ணா வெடித்து அழுதிருக்கிறார்.  அந்தளவு அந்த உடல் மோசமாகி இருந்தது !

சங்கரலிங்கனார் இறக்கும் சில நாட்களுக்கு முன்னர் கூட அவர் நாடகமாடுவதாக காங்கிரசார் மீட்டிங்கில் பேசினர்.  அதாவது கம்யூனிஸ்ட்கள் அவருக்கு ரகசியமாக உணவுகளை இரவு வேளையில் கொடுத்து வருவதாக !

நான் செத்துட்டா ஒரு காங்கிரஸ் பய எனக்கு அஞ்சலி செலுத்த வரக் கூடாது.  என் மேல காங்கிரஸ் கொடியைப் போர்த்தக் கூடாது.    என் உடலை கம்யூனிஸ்ட்கள்தான் எடுக்க வேண்டும்.  அவர்கள்தான் இறுதி காரியங்களைச் செய்ய வேண்டும்.

பொதுவுடமை கட்சியினர்தான் சங்கரலிங்கனாரின் இறுதி ஊர்வலம், சடங்கு, அஞ்சலியைச் சிறப்புற செய்தனர் !

3) 1957 - திமுகவின் 15 சட்டமன்ற உறுப்பினர்கள் முதன்முறையாக சட்டசபைக்குள் நுழைகின்றனர்.  சங்கரலிங்கனாரின் உயிர் தியாகத்தை மதிப்பதற்காகவாவது காமராஜர் செவிமடுப்பார் என நம்பி, தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டுமென்கிற தீர்மானத்தை சட்டசபையில் வைத்தனர்.

அதன்மீது தர்க்கங்கள் நடந்தன.  இது ஒருவகையான அட்டென்ஷன் சீக்கிங் என்கிற புது வியாதி.  தமிழ், தமிழன், தமிழ்நாடு என்று உணர்ச்சி கொந்தளிக்கப் பேசிவிட்டால் மக்கள் மயங்கிவிடுவார்கள் என ஒரு சிறுகூட்டம் நம்புகிறது அல்லது அப்படி பேசி மக்களை ஏமாற்றுகிறது.  எத்தனை உயிர் போனாலும் பிரிவினைவாதக் கொள்கைகளை ஏற்க முடியாது என்றது காமராஜர் அரசு !

நம்புங்கள்.  அன்றைய காங்கிரஸ் கிட்டத்தட்ட இன்றையச் சங்கிகள்.  சத்தியமூர்த்தி, இராஜகோபால், ஆர் வெங்கட்ராமன்ல்லாம் இருந்த காங்கிரஸ் பின்ன என்னவா இருக்கும் ?

07/05/1957 அன்று கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் 42 (கம்யூனிஸ்ட் & திமுக.  அன்று எதிர்கட்சி கம்யூனிஸ்ட்தான்)

தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தவர்கள் 127.  சங்கரலிங்கனார் இறந்த பின்னரும் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது !

ஆச்சா ?

4) 1961 - சங்கரலிங்கனார் செத்து அஞ்சு வருஷமாச்சு.  திமுக தீர்மானம் கொண்டு வந்து நாலு வருஷமாச்சு.  இம்முறை சோசலிஸ்ட் கட்சிக்காரர் மீண்டும் தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானத்தைக் கொண்டு வந்து, ஆளுங்கட்சியினர் தயைகூர்ந்து ஆதரித்து வாக்களிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

காமராஜர் உண்மையிலேயே தீர்க்கதரிசி என்றால், நிச்சயம் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு மிக எளிதாக, ஆமாம் அந்தளவு அவருக்கு நேருவிடம் செல்வாக்கு இருந்தது, தமிழ்நாடு எனப் பெயர் சூட்டி வரலாற்றில் இடம் பெற்றிருக்கலாம் !

நம்பமாட்டீர்கள்.  காந்தி & காமராஜர்.  இருவருமே பெரும் சர்வாதிகாரிகள்.  முரட்டுப் பிடிவாதம் கொண்டவர்கள்.  இதில் காந்தியார் ஒரு படி மேலே சென்று எதிர்ப்பைக் காட்ட உண்ணாவிரதம் என்கிற ஆயுதத்தை வேறு தூக்கிடுவார்.

பெரிய அக்கப்போரா போச்சே விடுங்க இனி கடிதப் போக்குவரத்தில் வேணா தமிழ்நாடுன்னு எழுதிக்கலாம் என சட்டசபையில் குறிப்பிட்டார்.  எதிர்கட்சிகள் சம்மதிக்கவில்லை.  பிறகென்ன, வழக்கம் போல இந்தத் தீர்மானமும் தோல்வி !

1962 - காங்கிரஸ் மாபெரும் வெற்றி.  மாறாக அண்ணாதுரை தோல்வி.  ஆனால் திமுகவின் பலம் முன்பை விட நான்கு மடங்கு அதிகமானது !

5) அண்ணாவை மாநிலங்களவைக்கு உறுப்பினராக்கி அனுப்பி வைத்தது திமுக.

அங்குதான் கம்யூனிஸ்ட் தனிநபர் மசோதாவாக தமிழ்நாடு கோரிக்கையை எழுப்புகிறது.

அண்ணா அதை ஆதரித்து அற்புதமான வாதங்களை எடுத்து பேசுகிறார்.

இலக்கியங்களில் தமிழ்நாடு என்று பெயர் வருமிடங்களைச் சுட்டிக் காட்டுகிறார்.

அதெல்லாம் சரிங்க, இப்ப தமிழ்நாடுன்னு மாத்திடறதால உங்களுக்கு என்ன லாபம் ? என்று ஒரு காங்கிரஸ் உறுப்பினர் கேட்கிறார்.

பார்லிமெண்ட் ஹவுஸ் என்றிருந்ததை லோக்சபா என்று நீங்கள் மாற்றினீர்களே உங்களுக்கு என்ன லாபம் வந்ததோ அதே லாபம் தமிழ்நாடுக்கும் வரும் என்றார் !

அண்ணா ஆங்கிலத்தில் பெரும்புலமை வாய்ந்தவர் என்பதால் அந்த அவையே வாய்பிளந்து அந்த உரையை ரசித்தது !

ஆனால் தீர்மானம் தோல்வி.

6) விடாது கருப்பு - சிவப்பு.

23/07/1963.

மீண்டும் திமுகவின் இராம.அரங்கண்ணல் தமிழ்நாடு தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வருகிறார்.  முதலமைச்சர் பக்தவச்சலம்.  தொழில் துறை அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன்.

7) தமிழ்நாடு என்றால் யாருக்குமே புரியாது.  குறிப்பாக வடக்கில் அனைவருக்குமே மெட்ராஸ்ன்னு நல்லா பழகிருச்சி.  ஃபாரின்காரன் வாய்ல தமிழ்நாடு நுழையவே நுழையாது, பெயரை திடுக்குன்னு மாத்தினா அவன் காண்ட்ராக்டை எல்லாம் கேன்சல் பண்ணிடுவான்.
எனவே மதராஸ் பிரசிடென்சி எனத் தொடர்வதே நமக்கு நல்லது என்று பேசினார் வெங்கட்ராமன்.

சங்கரலிங்கனார் இறந்து எட்டு வருடங்கள் ஆன பின்னரும் தீர்மானங்கள் தோற்றுக் கொண்டே இருந்தன !

8) 1967 - யோசிச்சு பாருங்க.  சொந்த மக்களிடத்திலேயே இவ்வளவு காழ்ப்புடன் ஓர் அரசு நடந்துக்கும்ன்னா, கூடவே அரிசிப்பஞ்சம், இந்தி எதிர்ப்பு போராட்டம், பதுக்கல் கொள்ளையர்கள் பெருக்கம், விளங்குமா ?  அப்ப போன காங்கிரஸ்தான்.  மக்களின் கோபம் காமராஜரையே பலி போட்டது.  ஆனால் இந்தச் சங்கி கூடையான்கள் காமராஜரையே தோற்கடிச்சிட்டானுகளேன்னு கதறுவாய்ங்க.  ஏன்னு இனிமேலாவது புரிஞ்சா சரி.

9) அண்ணா முதலமைச்சராகிறார்.  மூன்று அதிமுக்கியமான தீர்மானங்களை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்கிறார்.

i) இனி நம் நாடு தமிழ்நாடு என்றழைக்கப்படும் !

ii) தமிழ் & ஆங்கிலம் என்கிற இருமொழிக் கொள்கை மட்டுமே இங்கு இருக்கும்.  மும்மொழி என்கிற போர்வை போர்த்திக் கொண்டு கூட இந்தி நுழைய முடியாது !

iii) சடங்கு, சம்பிரதாயம், அக்னிசாட்சி, இடைத்தரகர் என்கிற எந்த இடையூறுகளுமின்றி நடத்தப்படும் சீர்திருத்த திருமணங்களும் செல்லும் !

10) 18/07/1967 - தமிழ்நாடு என்கிற பெயர் மாற்றத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.  சட்டமன்றத்தில் வென்ற தீர்மானம் என்பதால், ஒன்றிய அரசில் சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்து, அது ஏற்றுக் கொள்ளவும் பட்டது !

சங்கரலிங்கனாருக்கு கொடுத்த வாக்குறுதியை 11 ஆண்கள் கழித்தும் மறவாமல் நிறைவேற்றிச் சாதித்தார் முதலமைச்சர் அண்ணா 🖤❤ 

தொகுப்பு:

Raja Rajendran Tamilnadu

வெள்ளி, 4 நவம்பர், 2022

திருக்குறளில் உள்ள #கடவுள்_வாழ்த்து எனும் அதிகாரம் #திருவள்ளுவர்_எழுதியது_இல்லை !

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02smZkmpF9EXEKZ4B8Jizi2BF2EncLLinYsapZjNRM5XuFwMVqFNBYvTacnxj8BQ6ul&id=100000324268158
திருக்குறளில் உள்ள #கடவுள்_வாழ்த்து எனும் அதிகாரம் #திருவள்ளுவர்_எழுதியது_இல்லை !

இப்படி சொல்பவர் பெரியாரோ அல்லது கடவுள் நம்பிக்கை இல்லாத அறிஞர் ஒருவரோ அல்ல.

திருக்குறளை ஆய்வு செய்து திருக்குறளில் உள்ள இடைச்செருகல்களை ஆதாரங்களுடன் நிறுவியவர் #வ_உ_சி அவர்கள்.ஆம் இந்திய சுதந்திர போராட்ட தியாகி என புகழப்படும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களேதான். வ.உ.சி.கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவர் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

திருக்குறளில் #கடவுள்_வாழ்த்து எனும் அதிகாரம் மட்டுமல்ல,#வான்_சிறப்பு, #நீத்தார்_பெருமை ஆகிய அதிகாரங்களும் திருவள்ளுவர் எழுதியவை அல்ல.அவை #இடைச்செருகல்களே என்று ஆய்வு செய்து கூறுகிறார் வ.உ.சி.“அவை திருவள்ளுவர் காலத்திற்குப் பிற்காலமும் முந்திய உரையாசிரியர்கள் காலத்திற்கு முற்காலமுமாகிய இடைக் காலத்துப் புலவர் ஒருவரால் பாடிச் சேர்க்கப் பட்டவையென்றும் யான் கருதுகிறேன்” என்று கூறுகிறார்.

பரிமேலழகர் என்பவர் எழுதிய திருக்குறள் உரை ஆரிய சார்பானதாக இருப்பதை ஏற்க மறுத்து (அப்போது சுயமரியாதை இயக்கமோ,பகுத்தறிவு கருத்துக்களோ வீரியமாக பேசப்படாத காலம் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.) ஏற்கும்படி இருக்கும் மணிகுடவர் எழுதிய திருக்குறள் உரையிலிருந்து திருக்குறள் அறத்துப்பால் மணிக்குடவர் பதிப்பு எனும் தலைப்பில் 140 பக்கங்கள் கொண்ட நூலை 1917  ஆம் ஆண்டு பதிப்பித்தார் வ.உ.சி.

1930 - 1932 களில் வெளிவந்த ''தமிழ்ப் பொழில்'' (துணர் 5/மலர் 6) எனும் இதழில் பாயிர ஆராய்ச்சி எனும் தலைப்பில் (பக்கம்: 232-237)எழுதியுள்ள கட்டுரையில் வ.உ.சி.அவர்கள் இந்த ஆய்வுகளை தொடராக எழுதியுள்ளார்.

பாயிர ஆராய்ச்சி எனும் ஆய்வு கட்டுரையில் வ.உ.சி அவர்கள் திருக்குறளின் இடைச்செருகல்கள் குறித்து எழுதியுள்ள கருத்துக்களின் சாரம் :

திருக்குறளின் இம்மூன்று அதிகாரங்களும் தற்காலத்தில் மிகவும் புகழ் பெற்றவை. கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை ஆகிய இம் மூன்று அதிகாரங்களிலுள்ள முப்பது குறட்பாக்களையும் திருவள்ளுவர் எழுதியிருக்க முடியாது என்பதற்கு காரணங்களை முன் வைக்கிறார் வ.உ.சி.

1.            கடவுள் வாழ்த்து,வான் சிறப்பு, நீத்தார் பெருமை பாடல்களில் பிற பாடல்களைப்போலச் சொற்செறிவும் பொருட்செறிவும் இல்லை.

2.            கடவுள் வாழ்த்து,வான் சிறப்பு, நீத்தார் பெருமை ஆகிய பாடல்களின் பொருள்கள் பல தடைகளுக்கு இடம் கொடுக்கின்றன.

3.            மெய்யுணர்தல், துறவு என்ற தலைப்புகளில் நூலின் உள்ளே அதிகாரங்கள் இருப்பதால் இதற்கு முரணான தலைப்புகளான கடவுள் வாழ்த்து, நீத்தார் பெருமை ஆகியவற்றை நூலின் தொடக்கத்தில் அதாவது பாயிரத்தில் வைத்திருப்பது பொருத்தமானதல்ல.

4. மெய்யுணர்தல் எனும் தலைப்பிலுள்ள அதிகாரத்தில் கடவுளுக்குக் கூறியுள்ள இலக்கணங்களைக் கொண்டு பார்க்கும்போது அவற்றையும் இம்மூன்று அதிகாரங்களையும் ஒருவரே எழுதியிருக்க முடியாது. (வ.உ.சியின் இக்கருத்து விரிவான ஆய்வுக்குரியது).

5.            துறவு மற்றும் நீத்தார் பெருமை ஆகிய அதிகாரங்களில் உள்ள பாடல்களை ஒப்பிட்டுப் பார்த்தால், இரண்டையும் ஒருவரே இயற்றியிருக்க முடியாது.

6.            மழையைச் ‘சிறப்பிற்றணிப்பாருமில்லை, வறப்பிற்றரிவாருமில்லை.” எனவே, ‘வான் சிறப்’பைக் கூறுவதால் பயன் ஒன்றுமில்லை.

7.  திருக்குறள் 10 என எண்ணிக்கையில் இருக்கும் போது 10ன் மடங்குகளாக 130 அதிகாரமும் 1300 குறள்கள் மட்டுமே இருந்திருக்க வேண்டும்.

---------------------------------------------------------------------------------

திருவள்ளுவரே கடவுள் வாழ்த்தை எழுதி இருக்கிறார் கடவுள் இருப்பதை ஏற்றுக்கொண்டார் என ஏமாற்றி வந்தவர்கள் இப்போது திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூச முயலும் அயோக்கியத்தனமான முயற்சியில் இறங்கியிருக்கும் இவ்வேளையில் கடவுள் வாழ்த்து,வான் சிறப்பு, நீத்தார் பெருமை ஆகியவை திருக்குறளே அல்ல.அவை திருவள்ளுவர் எழுதியவையும் அல்ல.இந்த 3 அதிகாரங்களும் இடச்செருகல்களே என்கிற வ.உ.சி.அவர்களின் ஆய்வுக்கட்டுரையை நாம் மீள வாசிக்க வேண்டியதும் அதனை பரப்புவதும் அவசியமாகும்.
- பரிமள ராஜன் முகநூல் பக்கத்திலிருந்து.... ஆண்டு 2019

2 ஆயிரம் ஆண்டு பழைமையான தமிழ் எழுத்துகள் பொறித்த பானை ஓடுகள் கண்டுபிடிப்பு

புதன், 12 அக்டோபர், 2022

சிலப்பதிகாரம் என்பது #கற்பனைக்கதையல்ல..என்பதனை அறிவீரா???

#சிலப்பதிகாரம் என்பது #கற்பனைக்கதையல்ல..என்பதனை அறிவீரா???

சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்கு உணர்த்தியவர், தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச் சங்கத்தின்,கரந்தை புலவர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய, மறைந்த மரியாதைக்குரிய ஆய்வறிஞர் பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள்.

சிலப்பதிகாரத்தைத்  திறம்பட கற்றவர், சிலப்பதிகாரத்தில் ஊறித் திளைத்தவர். அவரி்ன் மனதில் நீண்ட நாட்களாகவே ஒர் ஆசை,ஏக்கம்,கனவு.சிலப்பதிகாரத்தில் கண்ணகி பயணம் செய்த பாதை வழியாகவே ஒரு பயணம் செய்தால் என்ன என்ற தணியாத தாகம்.எண்ணி துணிந்து இறங்கினார்.

1945 ஆம் ஆண்டு கண்ணகி பயணித்த பாதை வழியாகவே இவரும் நடந்தே சென்றார்.தன் ஊதியத்தைச் செலவிட்டு நடந்தார்.பின் தன் உடமைகள் ஒவ்வொன்றையும் வி்ற்று விற்று காசாக்கிக் கொண்டே 17 ஆண்டுகள் நடந்து முடிவில் சிலப்பதிகாரம் கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு என்பதை உலகிற்கு உணர்த்தினார்.

1945 ம் ஆண்டு மயிலாடுதுறை அருகில் கடற்கரையில் மீனவர்களின் ஒரு சில குடிசைகளுடன் மணற் பரப்பும்,மணல் மேடுகளும்,கள்ளியுடன் காரைச் செடிகளும் செறிந்த புதர்களும்,சவுக்கு தோப்புகளும்,புனங்காடுகளும் சூழ்ந்திருந்த பட்டணம் என்று,அன்று அழைக்கப்பட்ட பகுதியே,பண்டைய புகார் நகரம் இருந்த இடம் என்பதைக் கண்டு பிடித்தார்.கடலடி ஆய்வு செய்து கடற்கோளினால் அளிந்து கடலடியில் மறைந்து நிற்கும் நிலப்பரப்பே,காவேரிப் பூம்பட்டிணம் கண்ணகி பிறந்த இடம் என்பதை உறுதி செய்தார்.

1945 ஆம் ஆண்டு பூம்புகாரில் ஆய்வினைத் தொடங்கிய இவருக்கு,கால் நடையாக ஆராய்ந்து,ஆராய்ந்து, நடந்து,நடந்து,மதுரை வரை செல்வதற்கே பன்னிரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டன.

மதுரையில் கோவலனை இழந்த கண்ணகி,சேரநாடு நோக்கிச்  சென்ற வழியில்,இளங்கோ அடிகள் தந்த குறிப்புகளின் உதவியுடன் நகரத் தொடங்கினார்.

1945 ஆம் ஆண்டு தொடங்கிய பயணம் 1963 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் நாள் மலையினுள் மறைந்து கிடந்த கோயிலைக் காணும் அந்த இனிய நிகழ்வில் நெகிழ்ந்துள்ளார்.

கடந்த 2012 டிசம்பரில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தொல்காப்பியர் விருது வழங்கி சிறப்பித்தார்.

கண்ணகி கோட்டத்தைக் கண்டுபிடித்தது எவ்வாறு? என்பது குறித்து தினமணி நாளிதழுக்கு சில வருடங்களுக்கு முன் திரு.கோவிந்தராசனார் அளித்த பேட்டி..

’’சிலப்பதிகாரத்தை முழுமையாகப் படித்தேன். அதில் எல்லாம் தெளிவாக கூறப்பட்டுள்ளது. சோழ நாட்டின் தலைநகரமான பூம்புகாரில் இருந்து கோவலனும் கண்ணகியும் நடந்து சென்ற பாதையாக அதில் கூறப்பட்டுள்ள இடங்களுக்கெல்லாம் நடந்தே சென்றேன். மதுரையில் கண்ணகி பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டு அது கிடைக்காததால் நகரை எரித்துவிட்டு தலைவிரி கோலமாய் மேற்கு நோக்கிச் செல்கிறாள். சேர நாட்டின் மலைப் பகுதியான முருகவேல் குன்றத்துக்கு (இன்றைய மங்களதேவி மலை) சென்று அங்கு வானுலகில் இருந்து ரதத்தில் வந்திறங்கிய கோவலனுடன் இணைந்து கண்ணகி விண்ணுலகம் சென்றதாக சிலப்பதிகாரம் கூறுகிறது.

கண்ணகி நடந்து சென்றதாக கூறப்பட்ட பாதை வழியாக நானும் இரவு, பகல் பாராமல் நடந்தேன். மதுரையில் இருந்து 90 மைல் தொலைவில் உள்ள மங்களதேவி மலையை அடைந்தேன். 40 மைல் சுற்றளவில் கண்ணகி கோட்டத்தை தேடி அலைந்தேன். இறுதியில் அந்த கோட்டத்தைக் கண்டுபிடித்தேன்.’’

கண்ணகி கோட்டத்திற்கு அப்படி என்ன சிறப்பு?

’’வானுலகில் இருந்து ரதத்தில் இறங்கி வந்த கோவலனுடன் கண்ணகியும் விண்ணுலகம் சென்றதை நேரில் கண்ட மலைவாழ் மக்கள் அந்த செய்தியை மன்னன் சேரன் செங்குட்டுவனிடம் கூறுகிறார்கள். மன்னனின் மனைவி அந்த இடத்தில் பத்தினித் தெய்வமான கண்ணகிக்கு ஒரு கோயில் கட்ட வேண்டும் என எண்ணுகிறாள். அதன் பின்பு வடபுலத்து அரசர்களை வெற்றி கண்டு இமயமலையில் கல்லெடுத்து அதை கங்கையில் நீராட்டி தலைச்சுமையாக இங்கு கொண்டு வந்து அந்தக் கல்லில் கண்ணகிக்கு சிலை வடித்து முருகவேல் குன்றத்தில் நிறுவி நாள்தோறும் வழிபாடும், விழாக்களும் நடத்தி வந்தான் மன்னன். அத்தகைய சிறப்பு மிக்க கண்ணகி கோட்டம் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக குறிப்புகள் உள்ளன.’’

அது கண்ணகி கோட்டம்தான் என்பதை எப்படி உறுதி செய்தீர்கள்?

’’மண்டிக்கிடந்த புதருக்குள் சிறிய கோட்டைச் சுவர் போன்ற கல் கட்டடத்திற்குள் கண்ணகி சிலை இருந்தது. அந்த கற்களில் தமிழ் வட்டெழுத்தும், முற்கால பாண்டியர் காலத்து தமிழ் எழுத்துகளும் காணப்பட்டன. அங்கு சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பழங்கால மலைவாழ் மக்கள் மட்டும் இல்லையே தவிர, எஞ்சிய வன விலங்குகள், இயற்கை காட்சிகள், வேங்கை மரங்கள் என அத்தனை அடையாளங்களும் ஒருங்கே காணப்பட்டன.
மேலும், அங்கிருந்த கண்ணகி சிலை, இமயமலை கல்லில் செதுக்கப்பட்டது என்பதால், அந்த கல்லை ஆய்வுக்கு உட்படுத்தினேன். அது மாதிரியான கல் அருகில் உள்ள மலைகளிலோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள மலைகளிலோ இல்லை. இறுதியில் இமயமலை கல்லுடன் ஒப்பிட்டுப் பார்த்து உறுதி செய்தேன். தலையில் சுமந்து வரும் எடையளவில் இருந்த கல்லில் செதுக்கப்பட்டுள்ளது கண்ணகி சிலை. அந்தச் சிலையைப் பாதுகாக்கும் வகையில் எனது வீட்டில் வைத்திருந்தேன். தகவலை அறிந்த அப்போதைய தமிழக முதல்வர் மு. கருணாநிதி என்னை அழைத்து கண்ணகி சிலையைக் கேட்டார். அவர் கேட்டபடி அரசிடம் ஒப்படைத்து விட்டேன்.

தமிழர்களின் வரலாற்றை செப்பம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் கண்ணகி கோட்டம் கண்டேன். அதற்காக உழைத்தேன். பேர், புகழ், பதவி, பட்டம், விருது வரும் என நினைத்ததில்லை; ஆனால் அதெல்லாம்தான் இப்போது நடக்கிறது.’’

குறிப்பு;அய்யா அவர்கள் விண்ணுலகு அடைந்து விட்டார்கள்...

- சித்தர்கள் சித்தர் அறிவியல் முகநூல் பக்கம்

வெள்ளி, 2 செப்டம்பர், 2022

பல்கலைக் கழகங்களில் தமிழ் கட்டாயப் பாடம்