பக்கங்கள்

திங்கள், 15 ஆகஸ்ட், 2016

சமுதாயத்தில் ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பு!

- நேயன்
தமிழர் சமுதாயம் உலக அளவில் தொன்மையும், நுண்மையும், திண்மையும் உடைய சமுதாயமாய் அய்யாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திகழ்ந்தது. கலை, பண்பாடு, நாகரிகம், அறிவியல், மருத்துவம், அரசியல், உடற்திறன், காதல், வீரம், மனிதம், மாண்பு என்று அனைத்திலும் உலக அளவில் உயர்ந்து நின்றதோடு, பிறருக்கு வழிகாட்டியும் நின்றது.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்!’’
தமிழர் வாழ்வின் அடிப்படையே மனிதநேயம்தான். மனித நேயத்திற்கு மாறான எந்தவொரு செயல்பாடும் சிந்தனையும் தமிழ்ச் சமுதாயத்தில் இல்லை. அதன்படி, சமத்துவம், சமஉரிமை, சமநீதி, சமவாய்ப்பு உலக நோக்கு, உறவு போக்கு அவர்களிடம் மேலோங்கி நின்றது.
சமுதாயத்தில் குறுகிய மதிற்சுவர்களை அவர்கள் எழுப்ப விரும்பவில்லை. உலக மக்கள் அனைவரையும் உறவாக எண்ணினர். உலகையே ஒரு ஊராகக் கருதினர். அதன் வெளிப்பாடுதான் “யாதும் ஊரே யாவரும் கேளிர்!’’ என்ற ஒப்பற்ற கொள்கை முழக்கம்.
உலகில் எல்லா இடமும் நம் ஊர்தான். உலகில் வாழும் அனைவரும் நம் மக்கள்தான் என்ற தமிழர் வாழ்வியல் தத்துவம் தமிழரைத் தவிர வேறு யாரிடமும் அப்போது இல்லை. இத்தத்துவத்தின் அடிப்படையில்தான் தமிழர் தங்கள் சமுதாய அமைப்பை நிறுவினர்.
ஜாதியற்ற சமுதாயம்:
தமிழர் வாழ்வில் ஜாதியென்பதே இல்லை. மக்கள் தாங்கள் செய்த தொழில் அடிப்படை-யில் பிரிந்து செயல்பட்டனரே ஒழிய, ஜாதி என்ற பகுப்போ, உணர்வோ அவர்களிடம் இல்லை.
1. அந்தணர்
அரசர், வணிகர், வேளாளர் ஆகிய முத்தரப்பு தமிழ் மக்களில், இல்வாழ்வு நடத்தி, அறிவும் வாழ்க்கை அனுபவமும் பெற்ற சிலர், குடும்பத்தைப் பிள்ளைகளிடம் ஒப்படைத்து விட்டு, மக்களுக்குத் தொண்டாற்றும் பொருட்டு வீட்டைவிட்டு வெளியேறி சமுதாயத் தொண்டாற்றியவர்களே அந்தணர்கள் ஆவர்.
இவர்களில் அரச குடும்பங்களில் இருந்து வந்தவர்களும் உண்டு. வணிகப் பிரிவிலிருந்து வந்தவர்களும் உண்டு. வேளாளர் பிரிவிலிருந்து வந்தவர்களும் உண்டு.
“காமஞ் சான்ற கடைக்கோட் காலை
ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே’’
_ தொல்காப்பியம் -_ கற்பியல்_51
சுருங்கக் கூறின், அனுபவ அறிவும், பொதுநல நாட்டமும் உடைய, இல்வாழ்க்கையை விட்டு பொதுத் தொண்டாற்ற முன்வந்த தமிழ்ப் பெரியவர்களே அந்தணர்கள். இவர்கள் தனிப் பிரிவினர் அல்ல.
“அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்’’
என்ற வள்ளுவர் குறளும் இதற்குச் சான்று பகரும்.
அந்தணர்கள் ஓரிடத்தில் நிலைத்துத் தங்காமல், ஊர் தோறுஞ் சென்று மக்களுக்கு நல்ல வழிகளை எடுத்துக் கூறி வந்தனர். இவ்வாறு ஊர்தோறும் அலைந்து திரிய வேண்டியிருந்ததால், வெய்யிலுக்குக் குடையும், செருப்பும், நீர் கொண்டு செல்ல செம்பும், ஊன்றுகோலும், படுத்துறங்க பாயும், நல்வழி கூறும் அறநூல்களையும் (புத்தகங்களையும்) தங்களுடைய உடமையாகக் கொண்டிருந்தனர். இதைக் கீழ்க்கண்ட தொல்காப்பிய வரிகள் நன்கு விளக்குகின்றன.
“நூலே காகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க் குரிய’’
_ தொல்காப்பியம் -_ மரபி_70
அரசர் போர் செய்வதற்காக நகரை விட்டு செல்லும் வேளைகளில் அந்தணப் பெரியவர்கள் அரசுப் பணிகளையும் கவனித்து வந்தனர்.
“அந்த ணாளர்க் கரசுவரை வின்றே’’
_ தொல்காப்பியம் -_ மரபி_82
2. அரசர்:
தமிழ் மக்களுக்குத் தலைமையேற்று அவர்களை ஆண்டவர்களே அரசர்கள் ஆவர். தமிழ்நாட்டில் ஆட்சி முறை ஏற்பட்ட காலத்திலிருந்தே சேர, சோழ, பாண்டியர் என்ற அரச மரபினரால் தமிழகம் ஆளப்பட்டு வந்தது. இப்பேரரசுகளுக்கு உட்பட்ட சிற்றரசர்களும் இருந்தனர். பேரரசர்களால் அமர்த்தப்படும் வணிகரும், வேளாளரும் சிற்றரசர்கள் ஆவர். இதில் வேளாளர்களே அதிகம்.
அரசு என்பதற்கு “காவல்’’ என்று பொருள். அரசர் என்றால் ‘காவலர்’ என்பதாகும். அதாவது, நாட்டையும் மக்களையும் காக்கின்றவர் என்று பொருள். எனவே, அரசர் என்பது ஒரு சாதியல்ல.
3. வணிகர்:
நெல், கம்பு, சோளம், கேழ்வரகு, தினை, சாமை, வரகு போன்ற தானியங்களையும், அவரை, கடலை, துவரை, கொள்ளு போன்ற பயிறு வகைகளையும் மற்றைய பயனுடைய பொருட்களையும் வணிகம் செய்த தமிழ் மக்களே வணிகர் எனப்பட்டனர்.
4. வேளாளர்:
பயிர்த்தொழில் செய்து அனைத்து மக்களுக்கும் உணவு கிடைக்க வகை செய்த தமிழ்மக்களே வேளாளர் என்றழைக்கப்-பட்டனர். இவர்கள் அரசர்களுக்கும் பெண் கொடுத்து உறவு கொண்டு வாழ்ந்திருக்கின்றனர்.
இளஞ்சேட் சென்னியின் மனைவி அழுந்தூர் வேளின் மகள் ஆவாள். அவனுடைய மகன் கரிகாலனின் மனைவி நாங்கூர் வேளின் மகள். சேரன் செங்குட்டுவனின் மனைவி கொங்குவேள் ஒருவனின் மகள்.
எனவே, அந்தணர் என்பதும், அரசர் என்பதும், வணிகர் என்பதும், வேளாளர் என்பதும் தொழில் பிரிவுகளே! சாதிப் பிரிவுகள் அல்ல என்பதற்கு மேற்கண்ட திருமண உறவுகளே நல்ல சான்றுகளாகும். சாதிப் பிரிவுகளாக இருந்திருந்தால் திருமண உறவு ஏற்பட்டிருக்காது அல்லவா?
மூடநம்பிக்கையற்ற சமுதாயம்:-
தமிழரிடையே கடவுள், சடங்கு, யாகம், பூசை போன்ற எந்த மூடநம்பிக்கையும் இல்லை.
நிலத்தலைவர் வணக்கம்: தங்களை ஆண்டு, பாதுகாக்கும் நிலத்தலைவர்களை தமிழர்கள் மதித்து, அவர்களை வணங்கினர்.
குலப்பெரியோர் வணக்கம்: தங்கள் குடும்பத்தில், சிறப்புடன் வாழ்ந்து புகழ்பெற்ற பெரியோரை நடுகல் நட்டும், வீட்டுக்குள் அவர்களது பொருட்களை வைத்தும் வணங்கினர்.
வீரர் வணக்கம்: நாட்டைப் பாதுகாத்து, சாதனை புரிந்து, நாட்டுக்காக, மக்களுக்காக உயிர்விட்ட வீரர்களுக்கு நடுகல் நட்டு மரியாதை செலுத்தினர். குதிரை வீரராயின் அந்த நடுகல்லின் இருபுறமும் குதிரைச் சிலைகளை வைத்தனர்.
பத்தினிப் பெண்டிர் வணக்கம்: காதல், வீரம், கற்பு என்பது தமிழரின் உயிர்க் கொள்கைகள். அவ்வகையில் இம்மூன்றிலும் சிறந்து விளங்கிய ஆண், பெண் இருவரையும் தமிழர் மதித்தனர்.
தமிழர் சமுதாயம் தாய்வழிச் சமுதாயம். பெண்தான் சொத்துக்கு உரியவள். பெண்தான் குடும்பத்தின் ஆட்சியாளர். பெண் நிலையாக குடும்பத்தில் இருப்பாள். ஆண்தான் பெண்ணிருக்கும் இடத்தைத் தேடிச் சென்று வாழவேண்டும்.
இந்தச் சமுதாய அமைப்பின்படி பெண்ணிற் சிறந்தவர்களின் அடையாளமாகக் கல்நட்டு வணங்கினர்.
இப்படி அறிவிற்குகந்த தமிழரின் சமுதாய வாழ்க்கை ஆரியப் பண்பாட்டுப் படை-யெடுப்பால் தலைகீழாய் மாறியது.
ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பும் மாறிய தமிழ்ச் சமுதாய வாழ்வும்
அயல்நாட்டிலிருந்து பிழைக்க வந்து, மெல்லமெல்ல பரவிய ஆரிய பார்ப்பனர்கள் தமிழர்களின் ஆட்சியாளர்களை வசப்படுத்தி, அவர்களின் அதிகார வழி தங்கள் பண்-பாட்டையும், ஆதிக்கத்தையும் நுழைத்தனர்.
கடவுள்களை உருவாக்கல்:
தமிழரிடையே இருந்த நிலத்தலைவர் வழிபாட்டை கடவுள் வழிபாடாக்கினர். மலைநிலத் தலைவனை முருகனாக்கினர்; காட்டுநிலத் தலைவனை கண்ணன், திருமால் என்று ஆக்கினர்; மருதநிலத் தலைவனை இந்திரனாக்கினர்; நெய்தல் நிலத் தலைவனை வருணனாக்கினர்.
தமிழரிடையே இருந்த நன்றியின்பாற்பட்ட உறுப்பு வழிபாட்டை சிவலிங்க வழிபாடாக்கினர்.
பத்தினிப் பெண்டிர் வழிபாட்டை அமம்மன் (காளி, மாரி) வழிபாடாக்கினர்.
வீரர் வழிபாட்டை, குலப்பெரியோர் வழிபாட்டை சிறுதெய்வ வழிபாடாக்கினர். ஒவ்வொன்றுக்கும் ஒரு புராணக் கதையை எழுதி மக்களை மடையராக்கி ஏற்கும்படிச் செய்தனர்.
ஜாதிகளை உருவாக்கல்:
அரசர்களை அண்டி செல்வாக்கு பெற்ற ஆரிய பார்ப்பனர்கள், கடவுள்களை உருவாக்கி மக்களிடமும் செல்வாக்கு பெற்று ஆதிக்கம் செலுத்தினர். உயர் தகுதி பெற்றனர்.
தமிழரிடையே மதிப்பும், உயர்வும் பெற்ற ஆரியர்கள் அந்த மதிப்பையும் உயர்வையும் நிலையாக உறுதிப்படுத்திக் கொள்ளவும், தங்களுக்குப் பாதுகாப்பு தேடிக் கொள்ளவும் ஒற்றுமையாய் உள்ள தமிழர்களைப் பிரித்து வைக்கவும் திட்டமிட்டனர்.
இந்த முடிவின்படி, தமிழரைப் பிரிக்க அவர்களிடையே சாதிப் பாகுபாட்டை உருவாக்குவதே சரியான வழியென்று முடிவு செய்தனர்.
தமிழர்களிடையே இருந்த இயற்கை வணக்கத்தையும், பெரியவர்கள் வழிபாட்டையும் கடவுள் வழிபாடாக மாற்றிய ஆரியர்கள், அதே வகையில் தமிழர்களிடையே இருந்த தொழில் அடிப்படையிலான பாகுபாட்டையும் சாதி-களாக ஆக்க முடிவு செய்தனர்.
ஆரம்பத்தில் தமிழர்கள் செய்து வந்த பார்ப்புத் தொழிலை ஆரியர்கள் தங்களுடை-யதாக ஆக்கிக் கொண்டு பார்ப்பனர்கள் ஆனதுபோல, நாளடைவில் அந்தணப் பணியையும் மேற்கொண்டு செய்ய ஆரம்பித்தவர்கள் அந்தணர்கள் என்றாலே ஆரியர்கள்தான் என்றாகிவிட்டனர்.
தமிழர்கள் அந்தணர் பணி செய்யும்போது அவர்கள் சமுதாயப் பணியினைச் செய்தனர். ஆனால், ஆரியர்கள் அந்தணர் பணி செய்ய ஆரம்பித்தபின், அந்தணர் பணியை சமயப் பணியாக்கிவிட்டனர். கடவுள் பணி, கடவுள் கொள்கையைப் பரப்புதல், சடங்குகள் செய்தல், யாகங்கள் நடத்துதல் போன்றவை அந்தணர்-களுக்கு உரியது என்று ஆக்கிவிட்டனர்.
ஆரியர்கள் அந்தணர்கள் ஆனபிறகு தமிழரிடையே இருந்தத் தொழில் பிரிவு மூன்றாக ஆனது.
அதாவது, அரசர், வணிகர், வேளாளர் என்ற பிரிவுகளே தமிழரிடம் இருந்தன.
இந்நிலையில், கடவுள் பணி செய்கின்றவர்கள், அரசு புரிகின்றவர்கள், வணிகம் செய்கின்றவர்-கள், வேளாண்மை செய்கின்றவர்கள் என்கிற தொழில் பிரிவுகள் தமிழ்நாட்டில் நிலவின.
அதாவது, ஆரியர்கள் செல்வாக்கடைந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் 1. தமிழர், 2.ஆரியர் என்ற இரு இனப்பிரிவும், தமிழர்களிடையே 1.அரசர், 2.வணிகர், 3. வேளாளர் என்ற தொழில் பிரிவும் காணப்பட்டன.
சாதியை உருவாக்கி தமிழர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தத் திட்டமிட்ட ஆரியர்கள். இந்த நான்கு பிரிவையும் (1.ஆரியர், 2.அரசர், 3.வணிகர், 4.வேளாளர்) நான்கு வருணங்களாக ஆக்கத் திட்டமிட்டனர்.
தமிழர்களிடையே முன்கூட்டியே புராண நம்பிக்கையையும், கடவுள் நம்பிக்கையையும் உருவாக்கியிருந்த ஆரியர்கள். அந்த நம்பிக்கை-களின் அடிப்படையில் சாதியைப் பிரிக்கவும் முடிவு செய்தனர்.
பிரம்மாவின் முகத்தில் பிறந்தவர்கள் ஆரியர்கள் என்றும், தோளில் பிறந்தவர்கள் அரசர்கள் என்றும், தொடையில் பிறந்தவர்கள் வணிகர்கள் என்றும், காலில் பிறந்தவர்கள் வேளாளர்கள் என்றும் கதையைச் சொல்லி வந்தனர்.
மேற்கண்ட பிரிவுகளுக்கு முறையே 1.பிராமணன், 2.ஷத்திரியன், 3.வைசியன், 4.சூத்திரன் என்று வருணப் பெயரைச் சூட்டினர்.
பிரம்மனுக்குத்தான் நான்கு முகம் என்-கின்றாயே ஏனடா நான்கு சாதியினரும் நான்கு முகத்தில் பிறக்கக் கூடாது என்று ஆரியனைப் பார்த்து கேட்கின்ற அளவிற்கு அன்றைய தமிழனுக்கு விழிப்புணர்ச்சி இல்லாமல் போய்விட்டது. பக்தியினால் பகுத்தறிவுப் பார்வையின்றி போய்விட்டான்.
இன்றைக்குக்கூட எல்லாத் தமிழர்களுக்கும் அந்தக் கேள்வியைக் கேட்கக்கூடிய அளவிற்கு விழிப்புணர்ச்சி வரவில்லையே!
பிரம்மனால் மேற்கண்ட நான்கு குலங்களும் உருவாக்கப்பட்டன என்று கூறியது மட்டுமல்ல. ஒவ்வொரு குலத்தவரும் தத்தம் தொழிலையே செய்ய வேண்டும்; ஒருவன் தன் குலத்தை இப்பிறவியில் மாற்ற முடியாது; எல்லா குலத்தினும் உயர்ந்தது பிராமண குலமே. காரணம் பிராமணன் முகத்தில் பிறந்தவன்; கடவுளுக்குத் தொண்டு செய்யத் தகுதி படைத்தவன் என்று சாஸ்திரங்களில் சட்டங்-களையும் உருவாக்கினர்.
கடைச்சங்க காலத்தில் ஆரியர்களால் உருவாக்கப்பட்ட இந்த வருணப் பிரிவு (குலப்பிரிவு) 16ஆம் நூற்றாண்டில் நல்ல வலுப்பெற்றது.
ஆரியர்கள், மற்ற மூன்று பிரிவினர்களிடமும் முறையே, தீண்டாமை (Untouchability), அண்டாமை (Unapproachability), காணாமை (Unseeabilty) என்ற மூன்றுவித நடை-முறைகளைக் கடைப்பிடித்தனர்.
தொழில் அடிப்படையில் மட்டுமே வேறு-பட்டிருந்த தமிழர்களை, ஆரியர்கள் தங்கள் சுயநலத்திற்காக பல சாதியினராகப் பிரித்து அவர்கள் ஒற்றுமையைக் குலைத்தனர். இவ்வாறு ஆரியர்களால் உருவாக்கப்பட்ட சாதிப் பிரிவுகள் நாளடைவில் மேலும் மேலும் சிதைந்து பல்வேறு சாதிகள் உருவாயின. ஒருவருக்கு ஒருவர் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற எண்ணமும், ஒருவருக்கொருவர் திருமண உறவு வைத்துக் கொள்வதில்லை என்ற வழக்கமும் வலுவடைய ஆரம்பித்தன.
-உண்மை,16-31.1.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக