பக்கங்கள்

செவ்வாய், 17 ஏப்ரல், 2018

வேர்களின் பெருமையை விழுதுகள் மீட்டெடுப்போம்!

(இது ஓர் ஆய்வுத் தொகுப்பு கட்டுரை)



கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

அரசியல் அடிமைத்தளை,

பொருளாதார அடிமைத்தளை,

சமூக பண்பாட்டு அடிமைத்தளை

- ஆகிய முப்பெரும் விலங்குகள் பூட்டப்பட்டுள்ள நமது திராவிடர் சமு தாயத்திற்கு, மானமும் அறிவும் ஊட்டியவர் நம் அறிவு ஆசான் தந்தை பெரியார்!

அரசியல் விலங்குகள்

பொருளாதார விலங்குகள்

- என்பவை கண்ணுக்குத் தெரிந்த கொடுமைகள்!

சமூகப் பண்பாட்டு விலங்குகள் என் பவை மூளையில் மாட்டப்பெற்ற, கண்ணுக் குத் தெரியாத கயமைகள்!!

மாபெரும் நாகரிகம், கலை, மொழி, பண்பாடு, இலக்கியம், பெரு வணிகம், திரை கடல் ஓடியும் திரவியம் தேடி, நானிலம் தாண்டி, கடலில் நாவாய் ஓட்டி வெளி நாட்டு வாணிபத்தில் விளைந்த அறுவடை வருவாய்களை துய்த்து மகிழ்ந்த ஓர் இனம்.
இடைக்காலத்தில் புகுந்த ஓர் ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பால் திட்டமிட்டு வீழ்த்தப்பட்டது. மூன்றடி மண் கேட்ட பிச்சைக்காரர்கள், தலையில் கை வைத்து முடி பறித்த சூழ்ச்சிக்காரர்கள் ஆனார்கள்

அவைதான் இன்று வேத இதிகாசங் களாக, புராணங்களாக இன்னும் திராவிட மக்களின் மண்டைக்குள் குடைந்து கொண் டிருக்கும் மூளைச் சாயப்பதிவுகள் ஆகக் காட்சியளிக்கின்றன!

விழா என்றால் ஓர் இனம் வீழாது எழுந்து நின்று மகிழ்ச்சி கொண்டு அதில் வீறு கொண்டு வரலாறு படைப்பது என்பது தலைகீழாக மாற்றப்பட்டுவிட்டது நம் நாட்டில்.

 

வாழ்ந்த இனம் வீ



ழ்ந்தது!
இல்லை இல்லை வீழ்த்தப்பட்டது!
வீரத்தால் - விவேகத்தால் அல்ல
சூழ்ச்சியால், தந்திரத்தால்...!

எனவேதான் இதனை வெகு சுருக்கமாக - அழகாக ஆரியம் பற்றி அறிஞர் அண்ணா எழுதுகையில்,

‘ஆரியம் விதைக்காது விளையும் கழனி!” என்று குறிப்பிட்டார்! எப்படி என்பது மேலோட்டமாக சிந்தித்தால் விளங்காது!

யாரோ விதைக்கிறான் - உழுகின்றான் - அதன் விளைச்சலை - தலைவாழை இலை, பச்சரிசி, பருப்பு - நெய் போட்டு சந்தியாவந் தனம், ஜபதபம் முடித்து இன்றும் சாப்பிட்டு வருகிறது ஓர் இனம்; அந்தப் பயிரை, பருப்பை, நெய்யை உற்பத்தி செய்யக் கண்காணித்து உழைத்த இனத்திற்கு நெய் என்பதோ, விருந்து என்பதோ அரிதினும் அரிது! கிடைத்தாலும் உண்ணக் கூடாது என்கிறது மனுதர்மம்! (இன்றுகூட மோடி யின் சொந்த மாநிலத்தில் திருமண விருந் தில் நெய் போட்டுச் சாப்பிட்ட தலித்துகள் தாக்கப்பட்டுள்ளனர். (2017ஆம் ஆண்டு இது நடக்கிறது என்பதை மறவாதீர்).

“பிராமணன் மேல் (உயர்) வருணத்தார்தான் ஆனதாலும், பிர்மாவின் முகமாகிய உயர்ந்த இடத்தில் பிறந்ததினாலும், இந்த உலகத்தில் உண்டாகியிருக்கின்ற சகல வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்க அவனே பிரபுவாகிறான் என்பதுதான், மனுதர்மம்” (மனுதர்மம் அத்தியாயம் ஒன்று, சுலோகம் 100).

இந்த மனுதர்மம் தான் இந்திய அரச மைப்புச் சட்டத்திற்குப் பதிலாக கொண்டு வரப்பட வேண்டும் என்பதுதான் ஹிந்துத்து வாவாதிகளின் நிலைப்பாடு!

இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பு அர சியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதற்குரிய தளம், அடிமைகளின் மீளாப் போதை! எனவே சரியான பாதை எது வென்று அறியாத வாதை!

பண்டிகைகள் என்பவைகளில் குறிப் பிடப்படும் அசுரர்கள் என்பவர்களை கோர மாக, குரங்குகளாக சித்தரிக்கப்பட்டவர்கள் பற்றி நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களது ஆய்வு நூலான “வால்மீகி இராமாயண சம்பாஷணை” (1931) என்ற நூலின் ஆராய்சசி முன்னுரையில் எழுதியுள்ள ஒரு முக்கிய பகுதி இதோ:

“நம் நாட்டில் தங்களை பிறவியிலேயே மேன்மக்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு சிறு கூட்டத்தினராகிய ஆரியர், தங்களை அப்படி மேன்மக்கள் என்று சொல்லிக்கொள்ளவும், மற்றவர்களும் அவர்களை அப்படி நினைக்கவும் ஆதாரங் களாக இக்கதைகளையே பெரிதும் பயன்படுத்திக் கொள்ளுவதால் இப்படிப் பட்ட இவ்வாரியர்களின் பூர்வீக யோக்கி யதை என்ன? அவர்களில் மேன்மக்கள் என்பவர்களாகிய அரச குடும்பத்தினர் என்பவர்களது ஒழுக்கம், நாணயம், நடத்தை, எண்ணம் எப்படிப்பட்டவை? இவ்வாரியர்களில் தெய்வீகத்தன்மை பொருந்தியவர்கள் தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள், தேவேந்திரர்கள் என்பவர் களின் தன்மை யாவை? என்பனவற்றை நம் மக்களுக்கு எடுத்துக்காட்டுவதற்கும்,

மற்றும் இவ்வாரியர்கள் திராவிட நாட்டில் புகுந்த காலையில் இந்நாட்டுப் பழங்குடி மக்களாகிய திராவிடர்களோடு போர்புரிந்து திராவிட மக்களைக் கொடு மைப்படுத்தி இழிவு படுத்திய சில சரித்திர உண்மைகளைத் தங்கள் ஆத்திரம் தீரும் படியான அளவுக்குக் கற்பனை செய்து காட்டி சித்தரித்திருப்பதே இராமாயணமாக மிளிருகிறது என்று ஆராய்ச்சி வல்லோர் கண்டுபிடித்துக் கூறியிருப்பதையும், இரா மனாதியோர் ஆரியர் என்றும் இராவண னாதியோரான இராக்ஷதர், அரக்கர், அசுரர் என்பவர்களும் அனுமான், வாலி, சுக்ரீ வனாதியோரான குரங்குகள் என்பவர் களும் திராவிடர்கள் என்றும் ஆராய்ச்சி வல்லோர்கள் கூறியிருப்பதையும், இன் றைய ஆராய்ச்சி நூல்களும் இதை வலி யுறுத்துவதையும் மக்கள் உணரவேண்டு மென்பதுமாகும்.



அன்றியும், இவ்விராமாயணக்கதையில் ஆரியர்களை எவ்வளவுதூரம் உயர்த்தி யும், ஆரியர் அல்லாத மற்றவர்களை எவ் வளவு தூரம் தாழ்த்தியும், இழித்தும் அக் கதையில் காணப்படும் உண்மைக்கு விரோ தமாகக் கூட மக்களுக்குள் பரப்பப்பட்டிருக் கிறது என்பதையும், அதற்கேற்ப தமிழ் மக்கள் எவ்வளவு முட்டாள்தனத்தோடும் தன்மானமற்ற தன்மையோடும் இவ்விரா மாயணக் கதையில் வரும் ஆரியப் பாத் திரங்களையும், திராவிட இனத்துரோகப் பாத்திரங்களையும் கடவுள்களாகவும், ஆழ்வார்களாகவும் வைத்துப் பூஜை, உற்சவம் முதலியவை செய்துவழிபட்டு வருகிறார்கள் என்பதையும் தமிழ் மக் களுக்கு எடுத்துக் காட்டவுமாகும்.

மேலேகாட்டிய இக்காரணங்கள் எல்லாவற்றையும் விட வேறு ஒரு தலை யாய காரணம் என்னவெனில், தமிழர்களில் பெரும்பாலோரும் அதிலும் படித்த கூட் டத்தினர் என்பவர்களில் பலரும் இராமா யணம் என்றால் கம்ப இராமாயணத்தையே கருதுவதும், அதையே படிப்பிப்பதும், அதி லுள்ளவற்றையே நம்புவதும், தமிழ்ப் புலவர்களில் பலர் தங்களைப் பண்டிதர் என்று காட்டிக்கொள்வதற்கும், தங்கள் வாழ்க்கை நடப்புக்கும், பெருமைக்கும் கம்ப இராமாயணப் பிரசங்கத்தையே கையாளு வதுமாய் இருப்பதால் வால்மீகி இராமாய ணத்தின் உண்மையும் தன்மையும் இன்னது என்றும், கம்ப இராமாயணத்தின் புரட்டும், கயமையும் இன்னது என்றும் மக்கள் தெள் ளத்தெளியக் கண்டு கம்ப இராமாயணப் புலவர்களின் தன்மானமற்ற தன்மையை மக்கள் உணரும்படி செய்யவேண்டும் என்பதுமாகும்.

கடைசியாய் குறிப்பிட்ட காரணத்துக்கு ஆக என்று தனியே கம்ப இராமாயணத் தையும், வால்மீகி இராமாயணத்தையும் ஆராய்ச்சி செய்து "குடி அரசு”ப் பதிப்ப கத்தாரால் “வால்மீகியின் வாய்மையும் கம்பரின் கயமையும்” என்று ஒரு தனி ஆராய்ச்சி நூல் பதிப்பிக்கப்படுகிறபடியால் அதைப்பற்றி இதில் விவரிக்காமல் குறிப்பு மாத்திரம் காட்டப்படுகிறது. எனவே இன் னோரன்ன பல காரணங்களுக்கு ஆக இந்த “வால்மீகி இராமாயண சம் பாஷணை” என்னும் புத்தகம் வெளியிடப் படுவதாகும்.

இப்படி வெளியிடப்படும் மேலே குறிப் பிட்ட ஆராய்ச்சி நூல்களாகிய இராமாயண ஆராய்ச்சி, இராமாயண சம்பாஷணை, இச் சம்பாஷணையின் முகவுரை, வால்மீகியின் வாய்மையும், கம்பரின் கயமையும் என்று சொல்லப்படுபவையான புத்தகங்களில் காணப்படும் விஷயங்களில் அவைகளை விருப்புவெறுப்பின்றி வாசிக்கும் நடுநிலை நண்பர்களுக்கு ஏதாவது விஷயம் அவர் கள் இதுவரை கேட்டிராத புதுமையாகவோ, நம்பமுடியாததாகவோ, கற்பனையாகவோ காணப்படுமானால், அவர்கள் தயவு செய்து 1877-ஆம் வருஷத்தில் வடமொழி இராமாயணத்தை தமிழில் மொழி பெயர்த்த திரு.அனந்தாச்சாரியாருடையவும் மற்றும் நேற்றுவரை மொழி பெயர்த்த மொழி பெயர்ப்பாளர்களாகிய திருவாளர்கள் பண்டித நடேச சாஸ்திரியார், சி.ஆர். சீனிவாசய்யங்கார், நரசிம்மாச்சாரியார், கோவிந்தராஜர் அண்ணங்காச்சாரியார் முதலிய பார்ப்பனர்களுடைய தமிழ் மொழிபெயர்ப்புகளையும், வங்காள ஆராய்ச்சி நிபுணரும் வடமொழிப் பண்டிதருமாகிய பண்டிதர் மன்மதநாத் தத்தரும், ஆங்கில ஆராய்ச்சி நிபுணர் வில்சன் துரைமகனாரும் மொழி பெயர்த்த ஆங்கில மொழி பெயர்ப்புகளையும் மற்றும் பல உண்மை மொழி பெயர்ப்புகளையும் கூர்ந்து பார்த்து உண்மை கண்டு தெளிவார்களாக!”

இவர்கள் மட்டுமா?

தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் அவர்கள் 1936இல் எழுதி பதிப்பித்த ஆராய்ச்சி நூலான,

‘முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவர்’ என்ற நூலில், வெளிநாட்டு ஆய்வறிஞர் கள் கால்டுவெல், மாக்ஸ் முல்லர், ராப்சன், கில்பர்ட் சிலேட்டர் ஆகியோர் கூறிய ஆய்வுக் கருத்துகளை தனது நூலின் பீடிகையாகக் கொண்டு எழுதியுள்ளதை இங்கு சுட்டிக்காட்டப்படுதல் பொருத்த மாகும்.

‘தமிழ் மக்களின் 
பண்டை நாகரிகம்’

இங்ஙனமாக நந்தமிழ் மக்களின் முன் னோர்கள் ஏனைப் பண்டை நாகரிக மக்கள் எல்லாரையும்விட அறிவு முயற்சிலுந், தொழின் முயற்சியிலுந் தலைசிறந்து விளங்கினபான்மை, அவர் தம்மில் நல்லிசைப் புலவராய்த் திகழ்ந்த மேன் மக்கள் இயற்றிய பழைய நூல்களாலுஞ் செய்யுட்களாலும் நன்கு தெளியப்படு தலுடன், அவர்தம் வரலாறுகளை நடுநின் றாராய்ந்து நூல்கள் எழுதிய ஆங்கில ஆசிரியரின் உரைகளாலும், நடுவின்றி யாராய்ந்து நூல்கள் வரைந்த நம் இந்திய ஆசிரியர்கள் உரைகளாலுங்கூடத் தெற் றெனப் புலனாகின்றன. கால்ட்வெல் (Caldwell) ஆசிரியர் இற்றைக்கு அரை நூற்றாண்டிற்கு முன்னரே செய்த அரிய பெரிய சொல்லாராய்ச்சி சொற்பொருளா ராய்ச்சியின் முடிவாகப், “பண்டைத் திரா விடர்கள் எந்த வகையிலும் நாகரிக மில்லாக் கீழ்மக்களாகக் காணப்படவில்லை. கானக வாழ்க்கையிலிருந்த மக்களின் நிலை எத்தகையதாயிருப்பினுந், திராவிடர்கள் என்னும் பெயர்க்கு உண்மையில் உரியோர், தம்மிடையே பார்ப்பனர்கள் வந்து சேர் தற்கு முன்னமே, எவ்வளவு குறைந்தபடி யாய்ப் பார்த்தாலும் நாகரிகத்திற்கு மூல மானவையெல்லாம் பெற்றிருந்தனரென்ப தில் அய்யுறுதல் ஏலாது என்று வலியுறுத்திக் கூறினார். இவ்வாசிரியர் பழையு ஈபுரு மொழி விவிலியநூலிற் புகுந்த “தோகை”, “அகில்” முதலான தமிழ்ச் சொற்களை எடுத்துக்காட்ட, அவற்றைக் கண்டு தமிழின் பழைமையுணர்ந்து வியந்த வடமொழிப் பேராசிரியரான மாக்ஸ்முல்லர் (Max Muller) “இச்சொல்லாராய்ச்சி உண்மை யாகுமானால், ஆரியக் குடியினர் இவ்விந் திய நாட்டுட் புகுமுன்னரே, தமிழ்மொழிகள் வழங்கிய பழைமையினோன உறுதிப்படுத் துதற்கு அது சிறந்ததொரு கருவியாகும்” என்று உண்மையுரை புகன்றார். இன்னும், இப்போது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத் தில் வடமொழிப்புலமை நடாத்தும் ராப்சன் (Rapson) 
என்னும் ஆசிரியர், பண்டை ஆரியமக்கள் இவ்விந்தியநாட்டிற் குடி புகுந்து பரவிய வரலாற்றினை ஆராய்ந்து ரைக்கின்றுழி,  “இப்பரவுதலானது, சமஸ் கிருதமும் அதிற்றோன்றிய மொழிகளும் எவ்விடத்தும் பரவிய அடையாளத்தைக் காட்டுகின்றது. ஆனாலும், தென்னிந்தியா விலேதான் அவர் அங்ஙனம் பரவுதல் தடுப்புண்டது; ஏனென்றால், தென்னாட் டிலே ஆரிய நாகரிகத்தினும் பழையவாகிய திராவிட நாகரிகமுந் திராவிட மொழிகளும் இன்றுகாறும் நிலைபெற்றுத் தலைசிறந்து தோன்றுகின்றன” என்றும், “எவ்வாற்றானுந் திராவிட நாகரிகமானது, ஆரியர் வருதற்கு முன்னரே இந்திய நாட்டில் முதன்மை யுற்றிருந்தது. திராவிட மக்களிற் பலர் தமக்கு உரியவல்லா ஆரியமொழிகளையும் பிறமொழிகளையும் இப்போது பேசுகின் றனர்” என்றும், “திராவிடர்கள் ஆரிய நாகரிகத்தினையும் ஆரிய மதத்தினையும் பெரிதும் தம்வழிப்படுத்தி உருவாக்கினர்” என்றும் மெய்யுரை பகர்ந்தார். இன்னும், சில்லாண்டுகளுக்குமுன் சென்னைப் பல்கலைக்கழகத்திற் பொருணூல் ஆசிரிய ராய் அமர்ந்து, நம் இந்து மக்களின் வர லாறுகளையெல்லாம் நேரே பலமுகத்தான் ஆராய்ந்து உண்மை கண்டு ஓர் அரிய நூல் ஆங்கிலத்தில் எழுதிய ஸ்லேட்டர் (Slater) என்பார் ஆரிய திராவிட நாகரி கத்தைப் பற்றிக் கூற வந்துழி, “ஆரியர்கள், உழவுத் தொழிலை முற்றுமே அறியாத வர்கள் அல்லராயினும், அவர்கள் இடம் விட்டுப் பெயர்ந்து செல்லும் இடையர் வாழ்க்கையிலேயே முதன்மையாய் இருந்த வர்களென்பது அய்யமின்றி எல்லாரும் ஒப்புக்கொண்டதாகும்; ஆனால், திராவிடர் களோ நாம் அறிந்தமட்டில் ஆரியர் களினும் மிக்குயர்ந்த நாகரிக நிலையில் இருந்தவர் ஆவர்” என்று முடிபு சொல்லி, அதற்கு அகச்சான்றாக ஆரிய மொழியி லுள்ள இருக்குவேதத்திற் பண்டை ஆரியர், தமிழ்மக்களைக் குறிப்பிட்டுச் சொல்லும், உரைகளாகிய,



“இந்திரன் திவோதாசன் பொருட்டாகச் சம்பரனுடைய 
நூறு கோட்டைகளையுங் தகர்த்தெறிந் தான்’’

“இடியேற்றினைச் சுழற்றுவோனான இந்திரனே! நீ புரு குத்ஸன் பக்கத்தினின்று போரியற்றுங்கால் ஏழு நகரங்களை அழித் தொழித்தனை! சுதாசனுக்காக அங்கனு டைய செல்வத்தைக் தொலைத்தனை”

“ஆரியமகனுக்கு உதவியாய் நீ பிப்ருவின் நகரங்களை உடைத்தெறிந் தனை! தஸ்யுக்களுடன் செய்த சண்டையில் ரிஜிஸ்வானைப் பாதுகாத்தனை!”

“நீ சுஷ்ணனது செல்வத்தை ஆண்மை யுடன் துடைத்து விட்டனை; அவனுடைய கோட்டைகளையுந் தகர்த்து விட்டனை” என்பவைகளையும் எடுத்துக்காட்டிக்,

“கோட்டைகளும் நகரங்களுஞ் செல்வச் செழுமையும் நாகரிக மேம்பாட் டினைக் குறித்தற்குப் போதுமானவை களாகும். மேலுந், திராவிட அசுரர்கள் செல் வவளமும், மந்திர ஆற்றலும், விழுமிய கட் டிடங்கள் அமைக்குந்திறமும், இறந்தவரை எழுப்பும் வன்மையும் பெற்றிருந்தனரென ஸமஸ்கிருத நூல்கள் நுவலுதலை ஒல்ட்ஹாம் என்பவரும் எடுத்துரைத்தனர்” என்றும் மொழிந்தனர்.

மேற்காட்டிய மேனாட்டாசிரியர் நால்வரும் ஆரியர் திராவிடர்களின் வர லாறுகளை அகச்சான்று புறச்சான்றுகளால் ஆழ்ந்தாராய்ந்து, திராவிட நாகரிகமே ஆரிய நாகரிகத்தினுஞ் சிறந்ததும் முற் பட்டதும் ஆகும் என நடுநின்று முடித்துக் கூறினமை நினைவிற் பதிக்கற்பாற்று.

இனி, நம் இந்திய ஆசிரியரில் தமிழர் ஆரியர் நாகரிகவாலாற்றினை ஆராய்ந் தார் சிலர், தமிழரது நாகரிகம் பழமையா னதுஞ் சிறந்ததும் மேனாட்டவர் நாகரிகத் திற்குத் தாயகமாவதுமாமெனக் கிளந்தன ரேனும், முடித்துக்கூறுங்கால் அது தானும் ஆரியநாகரிகத்தினின்றே பிறந்ததென நடுவின்றியுங் கூறினார். அச்சிலருள், இருக்குவேதத்தை ஆராய்ந்து இரண்டு விரிந்த நூல்கள் ஆக்கிய வங்காள அறிஞரான “அபிநாஸ் சந்திரதாஸ்” என்பார் பின்வருமாறு கூறுகின்றார்!

“சாலடி நாட்டில் தெல்லோகம் என்னும் ஊரிற் கண்டெடுக்கப்பட்ட கற்பாவைகளி னின்றும் பிரித்தெடுக்கப்பட்ட தலைகளின் அமைப்பும், தென்னாட்டிலுள்ள தமிழர் களின் முக அமைப்பும் வியக்கத்தக்கபடி யாய்ப் பெரிதும் ஒத்திருத்தலாலுஞ், சுமே ரியர் வழங்கியமொழி திராவிட மொழி களைப் போலவே பகுபதவுறுப்புகள் வாய்ந் திருத்தலாலுஞ் சோழர்களைப் போலவே சாலடியர்களும் உழவுதொழிலிற் சிறந்த வர்களாயுங், கால்வாய்கள் அமைப்ப வராயும் இருந்தமையாலுஞ், சோழர்களைப் போலவே அவர்கள் கடல்மேற் செல்ப வர்கள் வணிகர்களாயும் விளங்கினம் பாலுஞ் சோழர்கள் தாமும் மரக்கலக் கலையையும், வாணிக முறையையும் கற்றே கடன்மேற்செலவிலும் ஏனைய எல்லாத் துறைகளிலும் அவர்களையொப்ப நடந் தமையாலும், ஆசியாப்பெருந்தேயத்தின் மேற்கிலும் தெற்கிலும் உள்ள எல்லா நாடுகளிலும் தென்னிந்திய கடற்கரை மருங்குள்ள நாடுகளுக்கும் பாரசிகக்குடிக் கடலோரமாயுள்ள நாடுகளுக்கும் இடையே தான் பண்டை நாள் வாணிகம் நடைபெற்று வந்தமையாலும், ஆசியாவின் தென்பகுதி யிலாதல் ஆப்பிரிக்காவின் கீழ்பகுதியிலா தல் இந்தியர்களைப்போற் சென்ற பாரசிகக் குடாக்கடற்கரை மருகிற் குடியேறிய அத்துணை உயர்ந்த நாகரிகமுடையவர் கள் பிறர் இல்லாமையாலுஞ் சுமேரியர் என்பார் ஆரிய திராவிடக் கலவையிற் தோன்றியவர்களே யென்பது மறுக்க முடியாத உண்மையாம். இன்னும், பாபிலோனியர் அசிரியர் என்பாரின் உலகியல் நாகரிகமேயன்றிச் சமயக்கோட் பாடும், ஆரிய நாகரிக சமயக்கோட்பாட் டையுந் திராவிடநாகரிக சமய கோட் பாட்டையும் பின்பற்றியவைகள்யாகும்” என்பது.

இம்மேற்கோளுரையில், திராவிட நாகரிகமே, மிகப் பழைய காலத்தில் நாகரி கத்தாற் சிறந்து விளங்கிய மேனாட்டவர் நாகரிகத்திற்கெல்லாம் அடிப்படையாய் நிற்கும் உண்மையை - மறைத்தல் ஏலாமையின் அதன் விண்டுசொல்லிய நம் ‘அபிநாஸ் சந்திரதாஸர்’ அவ்வளவில மையாது, தாம் ஏற்ற சொல்ல விழைந்த ஆரிய நாகரிகத்தினேயுந் திராவிட நாகரி கத்துடன் கொணர்ந்து ஒட்டவைக்கும் விரகினையுங் காண்மின்கள்!

அதுமட்டுமோ! சுமேரியர்முதலான மேட்டு நாகரிக மக்கள் அனைவர்க்கும் நாகரிகவாழ்க்கையினைக் கற்பித்தவர்கள் ஆரியர்க்குப் பன்னெடுங்காலம் முன்னே நாகரிகத்திற் சிறந்தோங்கிய தமிழர்களே யெனப் பல வலியசான்றுகளான் நிலை நாட்டிய ஹால் என்னும் ஆங்கில ஆசிரி யரையும், இராகொசின் ஏன்னும் அய் ரோப்பிய ஆசிரியரையும் மறுப்பான் புகுந்து, அதற்குத்தக்க வலிய சான்றுகள் காட்டமாட்டாது ஆரியரது நாகரிகமே திராவிடரது கலைப் பயிற்சிமேல் அழியாத தனது இலச்சினையைப் பொறித்தது. அதுவே திராவிட மக்களை, முதன்மை யாய்ச் சோழபாண்டியர்களை மேலு யர்த்தியது. பின்னர்ச் சோழபாண்டியர்கள் சீர்திருத்தப்பட்ட தமது நாகரிக வாழ்க் கையினைப் பாபிலோனிய நாட்டுக்கும் எகிப்து நாட்டுக்கும் கொண்டு போயினார்” என்று தாம் பிடித்த பிடியை விடாமற் கிளந்தார்.

எனவே “அசுரர்” என்றால் சோமபானம் சுராபானம் என்னும் மது அருந்தாதவர் களைக் குறிக்கும் ‘சுரருக்கு’ எதிர்மறை! அழிக்கப்பட்டவர்கள் என்று ஸ்தல புராணங்களில், திருவிழா, பண்டிகை கதைகளில் கூறப்படுபவர்கள் அத்தனைப் பேரும் அசுரர்களே! நம்மை சூழ்ச்சியால் வென்ற, வன்முறையால் வென்ற கதைகளும் பண்டிகைகளும்தான்!

இவற்றை நாம் மீட்டெடுக்க வேண்டாமா? கேரளத்தில் மாபலியை மீடெடுத்து விட்டார்கள். நாம் நரகாசுரன் பரம்பரை என்று கூறி மீட்டெடுப்போம்!!

வேர்களை அறிந்து விழுதுகள் எழுச்சி கொள்ளட்டும்!



இராமாயணம் - அசுரர்கள், அரக்கர்கள் போன்று வர்ணிக்கப்பட்டது ஆரிய திராவிடர் மோசடியின் ஒரு வகை வடிவம் தான் என்பதை முந்தைய மேல்நாட்டு அறிஞர்கள் - ஆய்வாளர்கள் கூறிய கருத்துக்களை - எனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.
தந்தை பெரியாரின் தொலைநோக்குடன் கூறிய இராமாயண - மகாபாரத, கீதை, மற்றும் புராண எதிர்ப்பு, சமஸ்கிருத வடமொழிப் பண்பாட்டுப் படையெடுப்பு பற்றிய கருத்து களை, சமஸ்கிருதம் படித்து முழுதாய்ந்த பேராசிரியர்கள் - அமெரிக்க பல்கலைக்கழ கங்களான ஹார்வட், கொலம்பியா பல்கலைக் கழகக்கழகங்களில் உள்ளவர்கள், யாருக் காகவும் தங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளாது அறிவு நாணயத்தோடு கருத்துகளை - ஆய்வுகளை எடுத்து வைக்கிறார்கள்.

அவர்கள் வின்டி டோனேகர் (Wendy Doniger) என்ற பேராசிரியை கருத்துகள் 2001இல் சமஸ்கிருதப் பேராசிரியரான ஆய் வாளர் ஷெல்டன் போலக் (Shelon Pollock) Death of Sanskrit மற்றும் Ramayana போன்றவற்றை சமஸ்கிருத ஆராய்ச்சி செய்து கண்டறிந்து கூறிடும் கருத்துகள் கண்டு, அவாளது வைதீகபுரியில் அணுகுண்டுகள் விழுந்தது போன்ற உணர்வு! இவர்களுக்கு எதிராக ஒரு இயக்கத்தையே - அய்.அய்.டி. ஆரியக் குஞ்சுகள் மூலம் தொடர் யுத்தமாக நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவில் சு.சுவாமி போன்ற மல்ஹோத்ரா என்ற ஆர்.எஸ்.எஸ்.காரர் தான் இப்போது இந்தப் பணியில் சில ஆண்டு களாகவே மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

அவரது ‘உடையும் இந்தியா’ என்ற நூலை நாம் நார்நாராய் சில ஆண்டுகளுக்கு முன்பே கிழித்தது போன்ற விமர்சனங்களை எழுதி நூலாகவே வெளியிட்டோம். சென்ற வாரம் 6.10.2017 ஆர்.எஸ்.எஸ். வார ஏடான ‘விஜயபாரதத்தில்’ “மொழிப்போர் - ஆனால் இது வேறு மாதிரி”. பண்பாட்டை குறி வைக்கும் பன்னாட்டு சூழ்ச்சி என்ற தலைப்பில் வெளிவந்துள்ள ஒரு கட்டுரையை அப்படியே வெளியிடுகி றோம்.

மொழிப்போர்  ஆனால் இது வேறு மாதிரி 
பண்பாட்டை குறிவைக்கும் பன்னாட்டு சூழ்ச்சி

“சமஸ்கிருதத்தை ஆழமாக கற்று ஆராய்தல் என்ற பெயரில் அதை பாரத பண் பாட்டிலிருந்து பிரித்து, செத்த மொழியாக்கி எகிப்திய மம்மிகளைப் போல அழகான பிணமாக அருங்காட்சியகத்தில் வைக்கும் முயற்சி அறிவுலகில் நடந்து வருகிறது.”

இந்த வேலையில் முன்னணியில் நிற்ப வர்கள் அமெரிக்க அறிஞர்களும் சோவியத் ரஷ்யாவின் சரிவுக்கு பின்பு ஆதரவற்று அனாதைகளான அமெரிக்க ஆதரவில் அவர்களது அடிவருடிகளாக உள்ள இந்திய கம்யூனிஸ்டுகளும் ஆவர்.

விளைவு, சமஸ்கிருதம் இந்திய பாரம் பரியத்தின், ஆன்மீக வழக்கங்களில், உலக வாழ்வியல் கண்ணோட்டத்தின் மையச் சரடாக இருந்த நிலைமாறி, அது அழகிய மொழி, ஆனால் அது பாரத பண்பாட்டின் மய்யச்சரடாக இருக்கும் நிலை தேவை யற்றது என்ற கருத்து ஏற்படுத்தப்படுகிறது. அது சடங்களின் மொழி. இதில் ஆன்மீகம் ஏதுமில்லை. மாறாக, பெண்கள், தலித்துகள், முஸ்லிம்களுக்கு இம்மொழி விலக்கப் பட்டுள்ளது. அதனால் இது ஆதிக்க மொழி என்ற கருத்து ஏற்படுத்தப்படுகிறது.

தலித்துகள் உட்பட அனைவரும் சமஸ் கிருதம் கற்க வேண்டும் என்ற அண்ணல் அம்பேத்கரின் கருத்தையும் அதை நடை முறைப்படுத்த முனையும் சமஸ்கிருத பாரதி யின் செயல்களையும் வெறுத்தொதுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவர்களின் முக்கிய தலைவராக இன்று இருப்பவர் டாக்டர் ஷெல்டன் போலாக் என்ற அமெரிக்கர். இவர் கிரேக்க இலக் கியத்தில் பட்டமும் சமஸ்கிருத மொழியில் முனைவர் பட்டமும் ஹார்வார்டு பல்கலைக் கழகத்திலும் பெற்றவர்.

இவர் 1984ல் ராமாயணத்தை உள்நோக் கத்துடன் அர்த்தம் கற்பித்து விளக்கி நூல் எழுதினார். அதில், “அரசர்கள் சாதாரணமான வர்கள் இல்லை. அவர்கள் தெய்வத்திற்கு இணையானவர்கள். தெய்வீக சக்தி கொண்டவர்கள். “அரசர் கள், பிராமணர்களைக் கொண்டு யாக, யக்ஞங்களை நடத்தி அந்த தெய்வீக சக்திகளைப் பெற்றனர். மக்களை ஆள்வதற்காக பிராமணர்களை கொண்டு சட்டதிட்டங்களை எழுதி அதன்படி அரசாண்டனர்.

அரசர்களின் முக்கியமான கடமை பிராமணர்களை காப்பது. அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுத்து அவர்கள் மூலம் தனக்கு தெய்வீக சக்திகள் பெறுவது. தெய்வீக சக்தி பெற்றதால், தான் செய்யும் கொடுமையாக இருந்தாலும் அதை நியாயப்படுத்துவது. தன்னை எதிர்ப்போரை அரக்கர்களாக, ராட்சதர்களாக சித்தரிப்பது. அவர்களை கொன்று அழிப்பது. அந்த அழிப்பை தீமையின் அழிவாக அதர்மதத் தின் அழிவாக சித்தரித்து நூல்களை எழுது வது. அந்த கருத்தை மக்களிடம் பரப்பு வது அரசர்களின் செயலாக இருந்தது.

அப்படி எழுதப்பட்டதுதான் வால்மீகி ராமாயணம். அதில் சமூக அடக்குமுறை யும் ஜாதி ஒடுக்குமுறையும் தெளிவாக உள்ளது. அரசர்களான தசரதனும் ராமனும் சுய சிந்தனையற்று, பிராமணர்களின் கூற்றை அப்படியே, இது நம்விதி என்று கருதி, ஏற்றுச் செயல்பட்டனர். சுயச்சிந் தனை கொண்ட இராவணனை அழித்தார்” என்று அந்த நூலில் விளக்கியுள்ளார்.

“வி.எச்.பி. பி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். போன்ற தீய சக்திகள் ராமாயணத்தை கையில் எடுத்துக் கொண்டு ரதயாத்திரை நடத்தி பாபர்மசூதியை தகர்த்தனர். அன்று ராவணன் இன்று முஸ்லிம்கள். எனவே இந்தியாவில் மதசார்பின்மை இல்லை. சமுக அமைதி யில்லை. உலகில் இன்று அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ள, மேற்கத்திய நாடுகளில் நிலவும் சமத்துவம் இந்தியாவில் இல்லை. இதற்கெல் லாம் காரணம் ராமாயணம்” என்று அவர் எழுதியும் பேசியும் வந்தார். (வருகிறார்). இது போதாது முதல்வராக இருந்த மோடியை அமெரிக்காவுக்குள் அனும திக்க கூடாது என்று புகார் மனுவில் கையெழுத்திட்டு, தன் நாட்டு (அமெரிக்க) அரசை நிர்பந்தம் செய்தார். சோனியா காங்கிரஸ் அரசு மகிழ்ச்சி அடைந்து அவருக்கு பத்மசிறீ விருது கொடுத்தது. அவருக்கு உதவியாகவும் முன்னோடி யாகவும் இருந்த லாயிட், குஸன் ரூடால்ப் ஆகியோருக்கு பத்ம்பூஷன் விருது இவற்றை வழங்கியதன் மூலம் பாரத பாரம்பரியத்தை இழிவுபடுத்தி மகிழ்ந்தது சோனியா காங்கிரஸ் அரசு.

இனி அரசு ஆதரவு கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டது. அல்லது ஏற்படும் என்று தெரிந்தது முன்னாள் கம்யூனிஸ்டும், இந்நாள் இந்திய பெருமுதலாளிகளில் ஒருவருமான இன்போஸிஸ் நாராயண மூர்த்தியின் (மூர்த்தி கிளாசிகல் லைப்ரரி ஆப் இந்தியா  என்ற அமைப்பு) ஆதர வுடன் தங்கள் பணியை தொடங்குகின்றனர். இந்நிலையில் இவர்களின் கபடச் சிந்த னையில் உதித்தது ஒரு சூழ்ச்சி. அதாவது பாரம்பரிய மடங்களை குறிப்பாக சமஸ் கிருத ஆதரவு மடங்களான சங்கர மடங் களின் நிதி உதவி, அங்கீகாரம் இவற்றை தங்கள் செயல்களுக்குப் பெறுவது என்பதே அந்த சூழ்ச்சி திட்டம்.

சிருங்கேரி மடத்தின் சார்பில் அமெரிக் காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழ கத்தில் (டாக்டர் ஷெல்டன் போலாக் பணி புரியும் இடம்) ஒரு இருக்கையை ஏற்படுத்தியது. அதன்மூலம் சமஸ்கிருத மொழி ஆய்வு, ஹிந்து மதநூல்களை ஆராய்ந்து வெளியிடுவது என்பது அந்த திட்டம். சிருங்கேரி மடத்தின் அதிகார பூர்வமான அமைப்பாக, கிளையாக இதை அறிவிக்க செய்வது நோக்கம்.

அதாவது, இந்தியர்களின் நிதியுதவியுடன் பாரம்பரிய ஹிந்து மடங்களின் அங்கீகா ரத்துடன் இந்திய பண்பாட்டை பாரம்பரி யத்தை அழிப்பது என்பதே அவர்களின் சூழ்ச்சி. அதற்கு அமெரிக்கா வாழ் சிருங்கேரி மடத்தின் ஆதரவாளர்களும் “நம்நாட்டு மொழியான சமஸ்கிருதம் நமக்கு தெரிய வில்லை. மாறாக அமெரிக்கர்கள் நன்கு கற்றுள்ளனரே” என்று தாழ்வுணர்ச்சியும் குற்றவுணர்ச்சியும் கொண்ட இந்தியர்களும் இந்த சூழ்ச்சிக்கு இரையாயினர்.

நல்லவேளையாக ராஜீவ் மல்கோத்ரா, ரமா சங்கர், டாக்டர் சுப்ரமணிய சாமி போன்ற விஷயம் தெரிந்தவர்களின் முயற்சியால் மேற்கண்ட சூழ்ச்சி தடைபட்டுள்ளது.

இந்திய தேசியம் என்ற கருத்திற்கும், பாரத பண்பாட்டிற்கும் எதிரான சக்திகள் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் தீவிரமாக செயல்படுகின்றன. சிலபல உள்நாட்டிலும் தீவிரமாக செயல்படுகின்றன. சிலபல இந்தியர்கள் அறியாமையால் எதிரிகளுக்கு ஆதரவாக இங்கு வாள் வீசிக் கொண் டிருக்கிறார்கள். பெரும்பான்மையானோர் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்போதா வது இந்தியர்கள் விழித்துக் கொள்வார்களா?

(‘விஜயபாரதம்’, 6.10.2017)

இதிலிருந்து பார்ப்பனர் - ஆர்.எஸ்.எஸ். கொதிநிலை எத்தகையது, பண்பாட்டுப் புரட்டுகளை வெளியாக்கும் விருப்பு வெறுப்பற்ற வெளி நாட்டு ஆய்வறிஞர்கள் மீது பாய்ந்து பிராண்டிப் பல்லுடைகிறார்கள் என்பது புரியும்.

எனவே இதை அப்படியே தந்துள் ளோம். படித்தாலே அவர்கள் நெருப்பில் நிற்பவர் ஆடுவது போல ஏன் ஆடுகின் றார்கள் என்பது புரியும்.

ஒரு ஆய்வுத் துறையினர் சுதந்தரமாக அவர்களது ஆய்வினை அதுவும் பல் கலைக் கழகத் தனி இருக்கையில் செய்வது கூடாதாம்!

தந்தை பெரியார் 1920 முதலே (காங் கிரசிலிருந்த காலம் முதலே) இராமாய ணத்தை ஏன் எதிர்த்தார் என்ற தொலை நோக்கினையும் - அவரது மண்டை சுரப்பை உலகு “தொழுகிறது” - பின்பற்று கிறது என்பதும் புரிகிறதல்லவா?

இந்த ஆய்வுக் கட்டுரைக்கு ஆதாரங்கள்

1. தந்தை பெரியார் - “வால்மீகி ராமாயண சம்பாஷணை”

2. மறைமலை அடிகளார் - “முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவர்கள்”

3. Death of Sanskrit - Shelldon Pollock

- விடுதலை ஞாயிறு மலர், 14.10.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக