பக்கங்கள்

வெள்ளி, 11 ஜனவரி, 2019

கருப்பா? கறுப்பா?



தமிழண்ணல்


கருப்பு: கரிய நிறத்தை நேர் பொருளாய்க் குறிக்கும் சொல் கருப்பு.

கறுப்பு: சினம், வெறுப்பு, அவன் எந்த நேரமும் கறுவுகிறான். கறுத்தோர் - பகைவர், கறுப்பு என்பதற்கு நேர் பொருள் ‘நிறம்' அன்று, சீற்றத்தால் கறு கறு என்று முகம் கறுத்தலும் சிவத்தலும் உண்டு. அவை நிழற்பொருளாக அரிதிற் பயன் பட்டன.

‘கறுப்பின்கண் மிக்குள்ளது அழகு' - என்ற இலக்கண உதாரணத்திற்கு, அட்டக் கறுப்பிலும் ஓர் அழகுண்டு என்பதாம். உரிச்சொல் இலக்கணத்தில்,

பயிலாதவற்றைப் பயின்றவை சார்த்தி

தத்தம் மரபிற் சென்று நிலை மருங்கின்

எச்சொல்லாயினும் பொருள் வேறு கிளத்தல் (782)

பயிலாதவை - அடிக்கடி பயன்படுத் தாத அருஞ்சொற்கள், அவற்றை அடிக்கடி பயன்படுத்தும் சொற்களுடன் சார்த்தி, எச்சொல்லாயினும் வேறு நிழற்பொருளை யும் தருதல் பாவலர்க்கு இயல்பு.

கருப்பு என்பது - கரிய நிறம், 'வெளிப் படு சொல்லே கிடைத்தல் வேண்ட' என்பார் தொல்காப்பியர் (783)

கருப்பு நிறம் என்பது உலகறிந்த பொருள். 'துங்கக் கரிமுகத்துத் தூமணியே, கரு நெடுங்கண்ணி , கருவிழி, கரிகாலன், கருங்கனி நாவல், கருங்கார் குறிஞ்சி, கருங்குழலி, கார் வண்ணன், கரிது, கரி, காரி இவற்றில் தொடர்புடைய சொற்கள் எல் லாம் கருப்பு என்பதிலிருந்து கிடைக் கின்றன.

கறுப்பு


‘கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள்' தொல்.855), வெகுளி - கடுங்கோபம், இது சினத்தல், பகைத்தல். நிற்கறுத்தோர் அரணம் போல - பகைத்தவரின் கோட்டை போல 'நீ சிவந்து இருத்தி' (பதிற்-13) நீ சினந்து முற்றுகையிட்ட. நிறத்துஉரு - நிறம் வேறு படல் கோபத்தால்). சீற்றத்தால் நிறமாற்ற மேற்படல் இயல்பு, கறுத்தோர் - பகைவர், மேகம் வானில் திரண்டு கறுப்பதுண்டு', நிறம் மாறி, கறுத்துக் கொண்டு வரும். ‘வானம் மாமலை வாழ்சூழ்பு கறுப்ப' குறிஞ்சி -22). இது கருநிறம் மட்டுமன்று; மிகமுற்றிய கருநிறம், ‘கவ்வை கறுப்பு' (அகம்.366) எள்ளின் இளங்காய் முற்றிய நிலை. அது கருநிறமாய் மாறி வருவது காட்டும். கவ்வை - எள்.

சினம் முற்றிய நிலையில் முகம் கறுத்துப் போகும். அல்லது கண்ணும் கன்னமும் எல்லாம் சிவந்து போகும், பயிர் முற்றிய நிலையில் நிறம் மாறிக் காட்டும். இது கருப்பு அன்று என்பதற்கே ஆசான் ‘நிறத்து உரு' என்று குறிப்பிட்டுள்ளார். எச்சொல்லா யினும் வேறு பொருள் கிளத்தல் என்றபடி வந்தது இது. இது இடமும் சூழலும் நோக்கிக் கொள்ளப்பட வேண்டியது.

கருநிறத்தைக் குறிக்கும் கருப்பு நிலையானது. கறுப்பு, சிவப்பு இடம், சுழல் போன்றவற்றால் 'நிறத்துரு' - தோற்றம் பெறும், பிறகு மாறிவிடும், கறுப்பண்ணசாமி என்றது கடுங்கோபக்காரசாமி என இடம் நோக்கிப் பொருள் கொள்ளவே ஆகும்.

‘நின் புதல்வர் நால்வரினும் கரிய செம்மல் ஒருவனை என்னுடன் அனுப்பு' என்றுதான் விசுவாமித்திரர், தயரதனிடம் கேட்கிறார்.

இன்றைய நிலையில் கருப்புப் பணம் என்பதற்கு இடையின ‘ரு' போடுவதுதான் பொருத்தமாக அமையும்.‘கறுப்புப் பணம்' என்று எழுதினால் உண்மையான பொருள் பொருந்தி வராது.

- விடுதலை ஞாயிறு மலர், 15.12.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக