பக்கங்கள்

செவ்வாய், 15 ஜனவரி, 2019

தமிழர் திருநாள்

- தந்தை பெரியார் -
திராவிடத்தின் ஆதிமக்களான தமிழர்க ளுக்கு தமிழர்களுக்குரிய பண்டிகை என்ப தாக ஒன்றைக் காண்பது என்பது மிக அரிதாக உள்ளது.
இதன் காரணம் என்னவென்றால் கலாச்சாரத் துறையில் தமிழனை ஆதிக்கம் கொண்டவர்கள் தங்களது கலாச்சாரங்களை தமிழனிடம் புகுத்துகிற வகையில் முதல் பணியாக - தமிழ்நாட்டின் தமிழனின் கலாச் சாரங்களை, பழக்க வழக்கங்களை அடியோடு அழித்து, மறைத்து விட்டார்கள். இதனால் தமிழனுக்குரிய கலாச்சாரம் எது என்று அறிவதுகூட மிகக் கடினமான காரியமாக ஆகிவிட்டது. தமிழனின் கலாச்சாரப் பண்பு கள் அழித்து ஒழித்து மறைக்கப்பட்டுவிட்டன என்பது மாத்திரமல்லாமல், தமிழனுக்கு வரலாறு (சரித்திரம்) என்பதுகூட இல்லாமல் அழிக்கப்பட்டுவிட்டன.
எனவே, இன்று தமிழன் கலாச்சாரம், பண்பு, வரலாறு அற்ற ஒருஅடிமை ஜீவனாக விளங்குகிறான். இப்படி விளங்குவது மாத் திரமல்லாமல் இன்று தமிழன் கொண்டாடும் - நடக்கும் கலாச்சாரப் பண்பு, வரலாறு என்பவைகள் எல்லாம் தமிழனுக்கு இழிவும் அடிமைத் தன்மையும் தந்து அவற்றை நிலைநிறுத்துபவைகளாகவே இருந்து வருகின்றன.
தமிழனுக்குள்ள கலைகள் என்பனவெல் லாம் தமிழனை அடிமையாக்குவதாகவே இருந்து வருகின்றன. தமிழனுக்கு அடியோடு சமயம் என்பதே இல்லாமல் போய்விட்டது எனலாம். மக்களுக்கு விழா முக்கியமான தேவையாகும். விழாவை முன்னிட்டு மக்க ளுக்கு மகிழ்ச்சி, ஓய்வு, மக்களுடன் அளவ ளாவுதல், கவலையற்ற கொண்டாட்டம் கொள்ளுதல், அன்பு, ஆசைப் பரிமாற்றம், சுயேச்சையான களியாட்டம் முதலியவை களை அனுபவிக்க முடிகின்றது. இவைகள் ஏற்படுவதால்தான் இவற்றை விழா என்று கூறுகிறோம்.
அரசாங்க விடுமுறைக்கு உரிய பண்டிகை கள் போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், மகா சிவராத்திரி, தமிழ் வருடப்பிறப்பு, ஆவணி அவிட்டம், கோகுலாஷ்டமி, சரஸ்வதி பூசை, தீபாவளி முதலியனவும் விடுமுறை இல்லாத பண்டிகைகள் - பிள்ளையார் சதுர்த்தி, கார்த்திகை தீபம், பங்குனி உத்தரம், தைப்பூசம் இந்தப்படி யான இன்னும் பல உள.
இவைகளில் தமிழனுக்கு தமிழ் சமுதாயத்திற்கு தமிழன் பண்பிற்கு தமிழன் வரலாற்று நடப்புக்கு, தமிழனின் அறிவு ஆராய்ச்சிப் பொருத்தத்திற்கு ஏற்ற விழா அல்லது பண்டிகை என்பதாக எதையா வது சொல்ல முடிகிறதா?
தமிழனின் இழிவுக்கு மறக்க முடியாத, முக்காலத்திற்கும் ஏற்ற நிலையில் ஓர் எடுத்துக்காட்டைக் கூறவேண்டுமானால் தமிழனுக்கு காலத்தைக் காட்டக் கூடிய சொல், சாதனம், அமைப்பு என்பது இல்லை என்றே கூறலாம்.
கிருஸ்துவர்கள், காலத்தைக் காட்ட இருப்பது கிருஸ்துவ ஆண்டு (கி.பி.) இருக்கிறது. முஸ்லிம்களுக்கும் காலத் தைக் காட்ட இஸ்லாம் ஆண்டு (ஹிஜ்ரி) இருக்கிறது. இதுபோல் தமிழனுக்கு என்ன இருக்கிறது? இதற்குத் தமிழனின் ஆதாரம் என்ன இருக்கிறது?
மற்றும் இப்படித்தான் தமிழனுக்கு  கடவுள், சமயம், சமய நூல், வரலாற்றுச் சுவடி, இலக்கியம் முதலியவை என்று சொல்ல, எதுவும் காண மிக மிகக் கஷ்ட மாக இருக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில், தமிழர் விழா (பண்டிகை) என்பதாக நான் எதைச் சொல்ல முடியும்? ஏதாவது ஒன்று வேண்டுமே, அதை நாம் கற்பிப்பது என்பதும், எளிதில் ஆகக் கூடியது அல்லவே என்று கருதி பொங்கல் பண்டிகை என்பதை தமிழன் விழாவாகக் கொண்டாடலாம் என்று முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் கூறினேன் - மற்றும் யாராவது கூறியும் இருக்கலாம்.
இந்தப் பண்டிகையும் (Harvest Festival) அறுவடைத் திருவிழா என்ற கருத்தில்தானேயொழிய, சங்கராந்திப் பண்டிகை, போகிப் பண்டிகை, இந்திர விழா என்று சொல்லப்படும் கருத்தில் அல்ல.
இந்தப் பொங்கல் பண்டிகையை தமிழர் எல்லோரும் கொண்டாட வேண்டும்.
- விடுதலை, 30.1.1959
- விடுதலை ஞாயிறு மலர்,12.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக