பக்கங்கள்

புதன், 4 செப்டம்பர், 2019

தமிழ்நாட்டின் தேசிய நூலாகத் திருக்குறளை அறிவித்திடுக! திருக்குறள் மாநாட்டு தீர்மானங்கள்

 திருவள்ளுவரை உள்ளடக்கி தமிழ்நாட்டின் இலச்சினையை மாற்றவேண்டும்

* உலகத் திருக்குறள் மாநாட்டை தமிழ்நாடு அரசே நடத்தவேண்டும்

திருக்குறளை பார்ப்பன சனாதன நூலாக அடையாளப்படுத்துவதற்குக் கண்டனம்


திருக்குறள் மாநாட்டின் அரிய தீர்மானங்கள்




திருக்குறள் மாநாட்டில் பொழிலனுக்கு பயனாடை அணிவித்து, திருக்குறள் 2050' நூல் மற்றும் நினைவைப் பரிசை


வழங்கி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்பு செய்தார்.


சென்னை, ஆக.13 திருக்குறளைப் பார்ப்பனீய இந்து சனாதனத் தன்மை கொண்டதாய் அடையாளப்படுத்தும் போக்குகளைக் கண்டித்தும், திருக்குறளை தமிழ்நாட்டின் தேசிய நூலாக தமிழ்நாடு அரசு அறிவிக்கவேண்டும் என்றும் சென்னை காமராசர் அரங்கில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

திருவள்ளுவராண்டு 2050 கடகம் 27 (கி.பி. 2019 ஆகத்து.12) அன்று சென்னை காமராசர் அரங்கத்தில், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

திருக்குறளை இயக்கப்படுத்திச் செயல்படுத்திடுவோம்!


தமிழினக் காப்பு நோக்கத்தில் எழுதப்பட்ட திருக் குறள் நூலை அடையாளம் கண்டு மீட்டெடுக்கவும், மக்களிடையே பரப்பல் செய்யவும் முயற்சிகள் மேற் கொண்ட எண்ணற்ற அறிஞர்கள், குமுகச் செயற் பாட்டாளர்கள் அனைவரையும் இம் மாநாடு நன்றியோடு நினைவு கூர்கிறது. மேலும், திருக்குறளை இயக்கப் படுத்திச் செயல்படுத்திட அறைகூவல் விடுத்த தந்தை பெரியார் உள்ளிட்ட அறிஞர் பெருமக்களின் நோக்கங் களைப் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் ஒருங்கிணைந்து முன்னெடுத்துச் செல்வோம் என இம் மாநாட்டின் வழி சூளுரைக்கிறோம். தமிழ்நாட்டின் தேசிய நூலாகத் தமிழ்நாட்டு அரசு அறிவிக்க வேண்டும்! தமிழையும், தமிழினத்தையும் உள்ளடக்கமாகச் சொல்லி, அவற்றை மீட்பதற்கான அழுத்தங்களைப் பதித்திருக்கிற திருக்குறளைத் தமிழ்நாட்டின் தேசிய நூலாகத் தமிழ்நாட்டு அரசு அறிவிக்க வேண்டுமென இம் மாநாடு வலியுறுத்துகிறது.

திருவள்ளுவரை உள்ளடக்கித் தமிழ்நாட்டின் இலச்சினையை மாற்றியமைக்க வேண்டும்!




ஜாதியற்ற, சமயங்களற்ற குமுகாயத்தை அறவழிப் பட்ட நிலையில் உருவாக்க வேண்டும் எனும் உள் ளடக்கத்தை மொழிந்த திருவள்ளுவரை உள்ளடக்கிக் காட்டக்கூடிய நிலையில் தமிழ்நாட்டின் இலச்சினை மாற்றியமைக்கப்பட வேண்டுமென இம்மாநாடு வலி யுறுத்துகிறது.

குறள் விழா ஒன்றைப் பண்பாட்டு விழாவாகத் தமிழர்கள் முன்னெடுத்துக் கொண்டாட வேண்டும்!


திருக்குறளைச் ஜாதியற்ற, மத வேறுபாடுகளற்ற ஒரு புதிய சமுதாயத்தின் பண்பாட்டு அடையாளமாகக் காட்டும் நோக்கத்தில் ஆண்டுதோறும் வேனில் ( மேழம் - சித்திரை - ஏப்பிரல்) முழு நிலவு நாளின்போது, தந்தை பெரியார் முன்னெடுத்து அறிவித்து நடைமுறைப்படுத்த விரும்பிய குறள் விழா ஒன்றைப் பெரிய அளவில் பண்பாட்டு விழாவாகத் தமிழர்கள் முன்னெடுத்துக் கொண்டாட வேண்டுமென்றும், தமிழ்நாட்டு அரசு அதை  ஊக்கப்படுத்தி வளர்த்தெடுக்க வேண்டுமென்றும் இம் மாநாடு வலியுறுத்துகிறது.

தமிழர்களின் குடும்ப நடைமுறைகளைத் திருக்குறளை அடிப்படையாகக் கொண்டு  அமைத்துக் கொள்ள வேண்டும்!


தமிழர்களின் குடும்ப வாழ்வியல் நடைமுறைகளாகப் பிறப்பு முதல் இறப்பு வரையிலான பல்வேறு நிகழ்வுகளில், விழாக்களில் மேற்கொள்ளப்படுகின்ற நடைமுறைகள் யாவும் ஆரியச் சார்பானவையாகவும், ஜாதி, மத வேறு பாடுகளைத் தூண்டி வளர்ப்பனவாகவும், பெரும் பான்மை மக்களை இழிவுபடுத்துவனவாகவும் அமைந் திருக்கின்றன. இந் நிலையில் குழந்தைகள் பிறப்பு, தொட்டிலில் இடுவது, பெயர் வைப்பது, திருமணம், இறுதிச்சடங்கு நிகழ்வுகள் இப்படியான தமிழர்களின் விழாக்களெல்லாம் திருக்குறளை அடிப்படையாகக் கொண்டே, பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில் நடை முறைகளை அமைத்துக் கொள்ள வேண்டுமென இம் மாநாடு வலியுறுத்துகிறது. தமிழார்வலர்கள், சமுக ஆர் வலர்கள் இவற்றிலெல்லாம் கவனம் செலுத்தி மக்களை நெறிப்படுத்துகிற வகையில் விழாக்களின் அமைப்பு முறைகளைப் பயிற்றுவிக்க வேண்டுமென இம் மாநாடு கோருகிறது.

வழிபாட்டிடங்கள் அனைத்திலும் திருக்குறள் அறிவகம் என்கிற பெயரில் நூலகம் அமைத்திட வேண்டுகை!


ஏற்கெனவே, குன்றக்குடி அடிகளார் தொடங்கி, பலரும் வலியுறுத்தியும், நடைமுறைப்படுத்தியும் வந்த வகையில் தமிழ்நாட்டிலுள்ள கோயில்கள், கிறித்தவ, இசுலாமிய வழிபாட்டிடங்கள், புத்த, சமணம் உள்ளிட்ட பிற சமய மடங்களின் இடங்களிலெல்லாம் திருக்குறள் அறிவகம் என்கிற பெயரில் நூலகம், பயிற்றகம் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அம் முயற்சிகளுக்கு, அவர்களுக்குத் தமிழ்நாட்டு அரசு துணைநிற்க வேண்டும் என்றும் இம் மாநாடு வலி யுறுத்துகிறது.

வள்ளுவர் கோட்டம், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை, நம்பியூர் - குறள் மலை முதலானவற்றைப் பாதுகாக்கவும் சீரமைக்கவும் வேண்டும்!


தமிழ்நாட்டு அரசால் உருவாக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை, நம்பியூர் - குறள் மலை உள்ளிட்ட திருக்குறளுக்கான எல்லா அமைப்புகளையும் தமிழ்நாட்டு அரசு தன் பொறுப்பில் ஏற்றுக் கொண்டு அவற்றையெல்லாம் பாதுகாப்பதும் சீரமைப்பதுமான கடமைகளைச் செவ் வனே மேற்கொள்ள வேண்டுமென இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.

உலகத் திருக்குறள் மாநாட்டைத் தமிழ்நாட்டு அரசே நடத்த வேண்டும்!


உலகத் தமிழ் மாநாடு நடத்துவதுபோல், ஆண்டு தோறும் உலகின் வெவ்வேறு இடங்களில் உலகத் திருக்குறள் மாநாடு நடத்த வேண்டுமென்றும், அதன் வழி திருக்குறளை உலகமெங்கும் பரப்பிட வேண்டு மென்றும் தமிழ்நாட்டு அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

வன்மையாகக் கண்டிக்கிறது!


திருக்குறளைப் பார்ப்பனிய இந்து சனாதனத் தன்மை கொண்டதாய் அடையாளப்படுத்திடும் சிலரின் போக்கு களை இம் மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

மேற்கண்ட  தீர்மானங்கள் திருக்குறள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

- விடுதலை நாளேடு, 13. 8 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக