பக்கங்கள்

வியாழன், 18 ஜூலை, 2019

தந்தைபெரியாரின் மொழி குறித்த சிந்தனைகள்

#மணியரசம்_டோஸ்_நெ_10

"தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழ்ப் படிக்காதீர்கள்; ஆங்கிலத்தைப் படியுங்கள், வீட்டில் மனைவியிடம் வேலைக்காரியிடம் கூட ஆங்கிலத்திலேயே பேசிப் பழகுங்கள்” என்று 1968 – 1969 இல் கூட திரும்பத் திரும்ப எழுதியவர், பேசியவர் பெரியார்.
                                                -மணியரசன்

தந்தைபெரியார் பேசியதை, எழுதியதை அங்கொன்றும் இங்கொன்றுமாக வெட்டியும் ஒட்டியும் அவர் மீது அவதூறு பரப்புவதற்கு கொஞ்சம் கூட கூச்சப்படுவதில்லை இவர்கள்.

தந்தைபெரியாரின் மொழி குறித்த சிந்தனைகளை மறுப்பதும், மாற்றுக் கருத்தை முன்வைப்பதும் கருத்துரிமை என்பதை மறுக்க இயலாது. ஆனால் பெரியாரின் முழுநேரத் தொண்டே மொழியை எதிர்ப்பதுதான் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த நினைத்தால் அது நடக்காது.

தந்தைபெரியார் மொழியை பற்றி பலமுறை பேசியிருக்கிறார், எழுதியிருக்கிறார். ஒவ்வொரு முறையும் அவரது கருத்து அந்தந்த காலத்தின் அரசியல், அப்போது பார்ப்பனர்கள் கையாண்ட வழிமுறைகள், தமிழக ஆட்சியாளர்களின் போக்கு, தில்லி அரசின் செயல்பாடுகள்,மற்ற கட்சிகளின் நிலை என அனைத்து சூழல்களையும் கருத்தில் கொண்டு அதற்கான எதிர்வினைகளாக வெளிப்பட்ட சிந்தனைகளாகும்.

கடவுள் மத பக்தர்களுக்கு பெரியாரின் பகுத்தறிவு கருத்துகள் கசக்கும். பெண்களை அடக்கியாள்வதே ஆண்மை என்று கருதுவோர் பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகளை ஏற்க இயலாது. ஜாதிப் பெருமை பேசுவோருக்கு பெரியாரின் ஜாதி ஒழிப்புக் குரல் இனிமையாக இருக்காது. அவ்வளவு ஏன்? தீவிரமாக காதலிப்பவர்களுக்கு காதல் குறித்த பெரியாரின் கருத்துகள் உவப்பாக இருக்காது. அதைப் போலவே மொழிப் பற்றாளர்கள் பெரியாரின் மொழி குறித்த கருத்துகளை ஏற்கத் தயங்குவது இயல்பு.

மொழிவழி தேசியம் பேசுவோர் இந்த இடத்தில் சறுக்கிடத்தான் செய்வார்கள். ஏனெனில் அவர்களின் அரசியல் அடித்தளமே மொழியில்தான் அமைந்துள்ளது.அளவற்ற மொழிப்பற்றே அவர்களின் இயங்கு விசையாக உள்ளது.எனவே அவர்கள் பற்றுதலற்ற நிலையிலும், பக்க சார்பற்ற முறையிலும் மொழியை அணுகுதல் இயலாது. இது தமிழ் மொழிக்கு மட்டுமல்ல அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும். எந்த மொழியானாலும் அதன் மீது அளவு கடந்த பற்றுள்ளவர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் ஆய்வியல் நோக்கில் செல்லமுடியாது. அதிலும் தமிழை பொறுத்தவரை மொழிப் பற்று என்ற நிலையையும் தாண்டி பலருக்கு மொழி பக்திதான் மேலோங்கி இருக்கிறது.

இந்த நிலையில், மொழிகுறித்தும், அதன் பயன்பாடு குறித்தும், வளர்ச்சி- மாறுதல் பற்றியும் பெரியார் உட்பட எவரும் சிந்திக்கவோ,பேசவோ,எழுதவோ கூடாதென்பதும், அப்படி சிந்திப்பவர்களை மொழிப் பகைவர்களாக சித்தரிப்பதும் வலதுசாரித் தன்மைக்கு உரம் சேர்க்குமேத் தவிர வருங்காலத் தலைமுறைக்கு ஒருபோதும் வளம் சேர்க்காது!

மனிதப் பற்று, வளர்ச்சிப் பற்று தவிர வேறெந்த பற்றுமற்ற தந்தைபெரியாரின் மொழிச் சிந்தனைகள் இன்று அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் அடுத்ததடுத்த தலைமுறைகள் மொழியையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகும்போது இதெல்லாம் சாதரண சங்கதியாகி விடும்.

காட்டுமிராண்டி காலத்திலேயே இருக்காதே! காலத்திற்கேற்ப மொழியை திருத்து என்கிறார் பெரியார்.
இதில் என்ன தவறு? இதை தவறு என்று சொல்பவர்கள் அய்ந்தாம் தலைமுறை 5G     அலைபேசியைத்தானே பயன்படுத்துகிறார்கள்? மொழி மட்டும் முதல் தலைமுறையாகவே இருக்க வேண்டுமா? அப்படி இருக்கத்தான் முடியுமா?

இன்று ஆங்கிலப் பேச்சு பயிற்சி மய்யங்களில் (Spoken English) இங்கிலீஷ் பேசுவதற்கு எளிமையான வழியாக சொல்லித் தரப்படுவது முதலில் வீட்டில் எல்லோரிடமும் இங்கிலீசில் பேசுங்கள். தவறாக பேசினாலும் பரவாயில்லை. வீட்டில் பேசிப் பழகப் பழக பொதுவெளியில் பிழையின்றி உங்களால் இங்கிலீஷ் பேசமுடியும் என்பதுதான்.

பயிற்சிக்கு பணம்கட்டி இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டு நடைமுறை படுத்துகிற நமக்கு வேலைக்காரியிடம் கூட ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று பெரியார் தனக்கே உரிய நடையில் எளிமையாகச் சொல்வது கசக்கிறது!

தகவல் தொழில்நுட்பத் துறை, கணிணித் துறை, அயல்நாட்டு வேலைவாய்ப்புகள் என உயரம் தொடும் நம் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் கை வசமானது எப்படி என்பதை சிந்தித்து பாருங்கள். அதைவிடுத்து பெரியாரை தமிழ்மொழியின் எதிரியாக சித்திரம் தீட்டுவது நீண்டகாலத்திற்கு நிலைக்காது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

தமிழைப் புகழ்ந்து கொண்டே தமிழர்க்கு இரண்டகம் செய்வோரை நண்பர்களாகவும், தமிழ் மீது  விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டே தமிழ் காக்கவும், தமிழர் நலன் காக்கவும் தொடர்ந்து களத்தில் நிற்போரை எதிரிகளாகவும் கருதுகிற  நம் மக்களின் மொழி உணர்ச்சியை மிக இலாவகமாக மொழிப் பற்றாகவும், மொழி பக்தியாகவும் மாற்றி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டவர்கள் பார்ப்பனர்களே!
எப்போது தங்களுக்கு தமிழ்மொழி தேவை என்று கருதினார்களோ அப்போது தமிழுக்கு ஒப்பனை செய்து உலவ விட்டவர்களும் பார்ப்பனர்களே!
வரலாற்றை புரட்டிப் பாருங்கள். தமிழுக்கு இந்த தெய்வீகப் பெருமை வந்தது எப்போது? என்று தெரியும்.

ஆயிரக்கணக்கான சங்க இலக்கிய பாடல்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தேடிப் பொறுக்கியெடுக்கும் வகையில்தான் தமிழ் மொழி குறித்த சொற்றொடர்கள் வருகின்றன. திருக்குறளில், அறநெறி இலக்கியங்களில் தமிழ் குறித்து புளகாங்கித பெருமைகள் ஏதுமில்லை. மொழியென்பது தன் உணர்வுகளையும், தான் அறிந்தவைகளையும் பிறருக்கு வெளிப்படுத்தும் நுட்பமான ஒரு அழகியல் கருவி என்ற வகையில்தான் பழந்தமிழர்கள் மொழியை கையாண்டனர்.

அந்த தெளிவு அன்றைக்கு இருந்ததால்தான் அறிவுத் தேடலுக்கு வழிவகுத்த புத்தரின் சிந்தனைகள்
மொழி கடந்து இங்கு வேரூன்றி வளர்ந்தது. இன்றைய வரை தமிழகத்தில் ஊருக்கு ஊர் தோண்டத் தோண்ட புத்தர் சிலைகள் கிடைக்கிறது.

பவுத்தம்,சமணம் போன்ற வேத எதிர்ப்பு கொள்கைகள் நிலைபெற்று செழித்த போது அதை அறிவு வழியிலும், அறவழியிலும் எதிர் கொள்ள இயலாத பார்ப்பனர்கள் மொழியை கருவியாக கொண்டு வீழ்த்தினார்கள்.
ஆழ்வார்கள்- நாயன்மார்களின் பக்தி இலக்கிய காலத்தில்தான் தமிழுக்கு தெய்வீகப் பெருமை ஏற்றப்பட்டது.
"சங்கத்தமிழ்" "தெய்வத்தமிழ்" "தேமதுரத் தமிழ்" செத்தவரை பிழைக்க வைத்திடும் "சாகாவரம் பெற்றத் தமிழ்" சிவனிடமிருந்து பிறந்த "செந்தமிழ்"  என்ற புகழாரங்கள் அப்போதுதான்  மொழி மீது சூட்டப்( சுமத்தப்)பட்டது.

மக்களிடம் செல்வாக்கு பெற்ற
பவுத்த,சமண நெறிகளை வீழ்த்துவதற்கு தமிழ் மொழியையும், தமிழ் அரசர்களான சோழர்களையும்-பாண்டியர்களையும்
பார்ப்பனர்கள் பயன்படுத்திக் கொண்டனர். பவத்தர்கள் சமணர்கள் தமிழறியாதவர்கள் என்பதுதான் அவர்கள் மீது தொடுக்கப்பட்ட முதன்மையான தாக்குதல்.

ஊன்றி கவனித்தால் ஒன்று புரியும்.
சோழர், பாண்டியர் ஆட்சி முடிவடைந்த பின்னர்., பவுத்தம்- சமணம் வீழ்ந்த பிறகு ஆழ்வார்கள் எவரும் அவதாரம் எடுக்கவில்லை.நாயன்மார்கள் ஊர்தோறும் நெஞ்சுருக பதிகம் பாடவில்லை.
கம்பராமாயணம், பிரபந்தங்கள், தேவாரம், திருவாசகம் போன்ற பெரும் இலக்கியங்கள் தோன்றவில்லை.

தமிழ் மண்ணில் விஜயநகர தெலுங்கர்கள் புதிய மன்னர்களாக எழுந்தார்கள்...
பார்ப்பனர்களின் வேத மதத்திற்கு இசுலாமியர்கள் புதிய எதிரிகளாக முளைத்தார்கள்.
நியாயமாக பார்த்தால் பிறமொழி ஆட்சி தமிழ்நாட்டில் நிலைபெறும்போதுதான் தமிழ் உணர்ச்சி பீறிட்டிருக்க வேண்டும்!
பக்தி இலக்கிய வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியிருக்க வேண்டும்!
அழகுதமிழ் பாமாலை கொண்டு அடியார்கள் ஆண்டவனை தொழுதிருக்க வேண்டும்! ஆனால் நடந்தது என்ன?

விஜயநகர பேரரசை அண்டிப் பிழைக்கவும், சுல்தான்களை எதிர்க்கவும் இப்போது பார்ப்பனர்களுக்கு தமிழ்மொழியும், அதன் பெருமைகளும் தேவைப்படவில்லை. எனவே
இந்த காலகட்டத்தில் எந்த மணிக்கதவும் தமிழ் பாடி திறக்கவில்லை!
தமிழ் பாடல் கேட்டு முதலைகள் வாய்பிளந்து நிற்கவில்லை!
சிவன் நேரடியாக வந்து எவருக்கும்
தமிழ் பாட முதல்அடி எடுத்துக் கொடுக்கவில்லை!
பைந்தமிழ் கேட்டு விஷ்ணு பைநாகப் பாயை சுருட்டிக்கொண்டு கிளம்பவில்லை!

இந்த காலகட்டத்தில் பார்ப்பனரல்லாத உழைக்கும் மக்களான ஏழை எளியவர்கள்தான் தமிழின் உயிரை இழுத்து பிடித்து காப்பாற்றி வந்தனர்.

அடுத்து வந்தது வெள்ளையர் ஆட்சி!
மிலேச்ச பாஷையை கற்று, கடல் கடந்து கல்வி பெற்று அரசு துறைகளை ஆக்ரமித்தனர் பார்ப்பனர்கள்.
தமிழைப் பற்றிக் கொண்டு ஆங்கிலம் அறியாமல் தடுமாறி வீழ்ந்து கிடந்தனர் தமிழர்கள்.

பார்ப்பனர்களுக்கு சிறுபருவம் முதல் இரண்டுவகையான வாழ்க்கை முறைகள் கற்பிக்கப் படுகிறது. ஒன்று வைதீகம், மற்றொன்று லவுகீகம்.

வேத பெருமை பேசு, உபநயனம் செய், பிராமண தர்மத்தை விடாதே, வர்ணாஸ்ரமமே உயர்ந்தது, கோவில்,கடவுள்,பூஜைகள், மதம்  எதையும் கேள்வி கேட்காதே. இது வைதீகம்.

இது எதுவும் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்து வரவில்லையெனில் அனைத்தையும் ஓரமாக வை. அது நமக்கு சொந்தமான முழு உரிமையுடையது.எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
ஆங்கிலம் படி, கடல்கடந்து
அயல்நாடு செல், அண்டிப் பிழைத்தாலும் உயர் பதவிகளை கைப்பற்றத் தவறாதே.
ஜெர்மன், பிரஞ்சு, என எந்த மொழி உயர்விற்கு வழியோ முடிந்தால் அதையும் கற்றுக் கொள்,
பாம்புக்கறி தின்கிற ஊருக்கு சென்றால் நடுத் துண்டை எடுத்துக் கொள்! இது லவுகீகம்.

நம் மக்கள் வீழ்ந்த இடம் இதுதான்.
நமக்கு எதை பிடித்தாலும் உடும்பு பிடி!அது கடவுள்,மதம், மொழி எதுவானாலும் அதிலிருந்து அடுத்த கட்டத்திற்கு செல்வது மலையை புரட்டுவது போன்ற மலைப்பு.
இந்த மலைப்பை உடைத்து
உலகியலுக்கு ( லவுகீகத்திற்கு) ஏற்றபடி
உயர்வை நோக்கி நம்மை உந்தி தள்ளியவைதான் தந்தை பெரியாரின் சிந்தனைகள்.

அப்படியானால் பெரியாருக்கும் அவரது தொண்டர்களுக்கும் மொழிப்பற்று இல்லையா? என்று கேட்டால் இருக்கிறது.
எப்போதெல்லாம் தமிழ்மொழிக்கு இன்னல் நேருகிறதோ அப்போதெல்லாம் போராட்டக் களத்தில் முன் வரிசையில் நிற்கிற அளவிற்கும், அரசியல் பண்பாட்டுத் தளத்தில் எந்த அளவிற்கு மொழியை பயன்படுத்திட வேண்டுமென்று அறிந்து கொள்கிற அளவிற்கும் மொழிப் பற்று இருக்கிறது.

ஏற்போரின் எண்ணிக்கையை கொண்டு தீர்மானிக்கப்படுபவை அல்ல பெரியாரின் கருத்துகள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக