பக்கங்கள்

வியாழன், 11 அக்டோபர், 2018

நெறி எனக் கேட்டால் குறள் நெறி என்பீர்!

நேயன்

 


“விஞ்ஞானம்,  அறிவு,  தன்மான உணர்ச்சி இவையின்றேல் பட்டம் பல பெற்றாலும், பணம் பல கோடி சேர்த்தாலும் பயன் இல்லை.’’

ஆகவே,  நீங்கள் அறிவுள்ளவர்களாக வாழ இஷ்டப்பட்டால் மூட நம்பிக்கைகள் நிறைந்த புராண காரியங்களைக் கை விடுங்கள். வகுப்புள்ள மதத்தை விட்டு வெளியேறுங்கள். புராணக் கதைகளைக் கேட்பதை விட்டு ஒதுங்கி நில்லுங்கள். புராணக் காட்சிகளைக் காண்பதில் வெறுப்புக் கொள்ளுங்கள்.

இராமாயணப் பிரசங்கம் என்றால், பெரிய புராணப் பிரச்சாரம் என்றால், புரிந்தாலும், புரியா விட்டாலும் தலைவணங்கி கேட்டுக் கொண்டிருப்பது என்கிற தலைமுறை தத்துவத்தனமான, மானமற்ற முட்டாள் தனத்தை விட்டொழியுங்கள்.

அறிவோடு வாழ வேண்டுமென்றால் பொருட்காட்சி சாலைக்குக் செல்லுங்கள். வெளியூர் சென்று ஆங்காங்குள்ள தொழிற் சாலைகளைக் காணுங்கள். மற்ற மதக்காரர்கள் நடப்பதை பாருங்கள். ஆங்காங்குள்ள மக்களோடு பழகி ஒற்றுமை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவ்வப்போது கண்டு பிடிக்கப்பட்டு வரும் விஞ்ஞான உண்மைகளை அறிந்து கொள்வதில் ஆசை கொள்ளுங்கள். அரைத்த மாவையே, அரைத்துக் கொண்டிருப்பது எப்படி வீண் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கிறதோ, அதுபோல் கும்பிட்ட குழவிக்கல்லையே கும்பிட்டுக் கொண்டிருப்பதும் வீண் என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள். உங்கள் சூத்திரப்பட்டம் நீங்கவேண்டும் என்பதை முக்கியமாகக் கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவுதான் உயர்ந்த பதவியிலிருந்தாலும், எவ்வளவுதான் பணம் படைத்திருந்தாலும் உங்கள் சூத்திரப்பட்டம்  நீங்காதவரை, நீங்களும், உங்கள் மனைவி, மக்களும் சமுதாயத்தில் உயர்வான யோக்கியதை அற்றவர்களாகவே, பார்ப்பனர்களுக்குத் தாழ்ந்தவர்களாகவே கருதப்படுவீர்கள் என்பதை உணர்ந்து இவ்விழிப்பட்டம் ஒழிய எங்களோடு சேர்ந்து உழையுங்கள். பத்திரிகை வாயிலாகவும், சித்திரங்களின் வாயிலாகவும், சட்ட வாயிலாகவும், படக் காட்சிகளின் வாயிலாகவும், நாடகங்கள் வாயிலாகவும், மேடை பிரசங்கள் வாயிலாகவும் கதாகாலட்சேபங்கள் வாயிலாகவும் உங்களை என்றென்றும் பார்ப்பனரின் அடிமை மக்களாக வைத்திருக்க இன்று பலமான சூழ்ச்சி செய்யப்பட்டு வருகிறது என்பதை உணர்ந்து, உறுதியோடு பணியாற்ற முன்வாருங்கள். முதலமைச்சர் ஓ.பி.இராமசாமி ரெட்டியார் போன்ற பிறவி அடிமைகள், மற்றும் வயதாகிவிட்டவர்கள் தெரிந்தே பார்ப்பனருக்கு அடிமையாகி பிழைக்கத் துணிந்த மானமற்ற ஈனர்கள், எக்கேடுகெடினும் இளைஞர்களாவது இம்முன் னேற்றத்துக்கு பாடுபட முன் வாருங்கள். உங்களுக்காகவே இல்லா விட்டாலும், உங்களின் பிற்கால சந்ததிகளின் முன்னேற்றத்திற்காகவேனும் நீங்கள் மூட நம்பிக்கையை ஒழிக்க முன்வாருங்கள். இழிஜாதிப் பட்டம் ஒழிக்க முன்வாருங்கள். கல்சாமிக்கு கைதூக்கி தண்டனிடாதீர்கள். நெற்றியில் மதக்குறி தீட்டிக் கொள்ளாதீர்கள்.

என்ன மதத்தினர் என்று கேட்டல், “வள்ளுவர் மதம்”

என்று சொல்லுங்கள் உங்கள் நெறியென்னவென்றால், “குறள் நெறி” என்று சொல்லுங்கள். குறள் நெறி என்று சொல்வீராயின், உங்கள் முன் எந்த பிற்போக்குவாதியும், எப்ப டிப்பட்ட சூழ்ச்சிக்காரனும் முன் நிற்கக் கூசி ஓடிவிடுவான். குறளை எவனாலும் மறுத்துக்கூற முடியாது.

அவ்வளவு இயற்கைக்கும், அறிவுக்கும் இயைந்ததாக இருக்கிறது அது. எனவே, குறளைப்படியுங்கள். அதன் வழிப்படி நடவுங்கள். அதையே எங்கும் பிரச்சாரம் செய்யுங்கள். உங்களுக்கு மனத்தூய்மை ஏற்படும். முன்னேற்ற அறிவில் ஆசையும், நம்பிக்கையும் ஏற்படும்.

ஆரியப் பித்தலாட்டத்திற்குச் சரியான மருந்து, சரியான மறுப்பு திருக்குறள்தான். இதை நான் மட்டுமே கூறவில்லை. திருவள்ளுவர் மாலையிலேயே பல புலவர்கள் கூறியுள்ளார்கள், ஆரியப்புரட்டை வெளியாக்கி, மடமையைப் போக்கும் நூலே திருக்குறள் என்று எனவே, குறள் வழிபட்டு நீங்கள் புத்தறிவு பெற்ற புது மனிதராகுங்கள். _- ‘விடுதலை’, 31.12.1948.

ஆனால், திருவள்ளுவர் குறளோ இவற்றை ஆரியத்தை, ஆரிய தர்மத்தை அப்படியே மறுக்க எழுதப்பட்ட நூலாகக் காணப்படுகிறது. கடவுள் வாழ்த்தில்கூட வள்ளுவர் ஒழுக்கத்தையும், அறிவையும், பற்றற்ற தன்மையையும்தான் கடவுளாகக் காட்டியுள்ளார். கடவுளை அறிஞன் என்கிறார். பிறப்பு - இறப்பு அறுத்தோன் என்கிறார். ஆசை அறுத்தோன் என்கிறார். அவர் ஒரு இடத்திலாவது கடவுளை அயோக்கியனாகவோ, ஒழுக்க ஈனம் உடையவனாகவோ, வஞ்சகனாகவோ, விபசாரியாகவோ சிருஷ்டித்திருக்கவில்லை.

திருவள்ளுவர் கூறியுள்ள கருத்துக்களில் ஒன்றேனும் ஒழுக்கக் குறைபாடுள்ளதாகக் காணப்படாது. அறிவுள்ளவர் யாரும் மறுக்க முடியாத,  வெறுக்க முடியாத கருத்துக்களை அமைத்துத்தான் அவர் குறளை இயற்றியுள்ளார்.

குறளை ஊன்றிப் படிப்பவர்கள் எல்லோரும் நிச்சயம் சுயமரியாதை உணர்ச்சி பெறுவார்கள். அரசியல் ஞானம், சமூக ஞானம், பொருளாதார ஞானம் ஆகிய சகலமும் அதில் அடங்கியிருக்கிறது.

குறளை முஸ்லிம்கள், கிறித்தவர்கள் உட்பட யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். மாமிசம் சாப்பிடுவது மறுக்கப்பட்டிருக்கிறது என்னலாம். காய்கனி, தானியம் இவை அபரிமிதமாகக் கிடைக்குமானால்,  மாமிசம் தின்ன வேண்டிய அவசியம்தான் என்ன இருக்கிறது? மகம்மது நபி அவர்களால் கூறப்பட்டுள்ள பல கருத்துகளைக் குறளில் அப்படியே காணலாம். முஸ்லிம்களுக்கு எதிராக அதில் ஒன்றுமே காண முடியாது. அது மனு தர்மத்துக்கு உண்மையான விரோதி நூல் என்று திடமாகவே சொல்லலாம். மனுதர்ம சூத்திரங்களுக்கு நேர்மாறான கருத்துக்களைக் கொண்ட குறள் அடிகளை ஏராளமாகத் திருக்குறளிலிருந்து எடுத்துக் காட்டலாம்.

மனித சமுதாயத்திற்கே நல்வழி காட்டி நன்னெறியூட்டி நற்பண்புகளையும், ஒழுக்கங்களையும் கற்பிக்கும் வகையில் எழுதப்பட்ட நூல்தான் திருக்குறள்.

எனவேதான், எல்லா மக்களும்,  எல்லா மதத்தவரும்  எங்கள் குறள், எங்கள் மதக்கருத்தை ஒப்புக் கொள்ளும் குறள் என்றெல்லாம் அதைப் போற்றி வருகிறார்கள். எனவேதான், அதன் ஆசிரியரைக்கூட சில மதத்தினர் தம்மவர்கள் என்று உரிமை பாராட்டிக் கொள்கிறார்கள். ஜைனர் தம்மவர் என்று கூறி அவரை மொட்டைத் தலையராகக் காட்டுகிறார்கள். சைவர்கள் அவரைத் தம்மவர் என்று கூறி ஜடா முடியுடன் விபூதிப் பட்டையுடன் காட்டுகிறார்கள். அவரோ எம்மதமும் இல்லாதவராகவே தோன்றுகிறார். ஒரு இடத்தில் `மயிரும் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை. மொட்டையும் அடித்துக் கொள்ள வேண்டியதில்லை. யோக்கியனாய் இருக்கவேண்டுமானால் என்று கூறியிருக்கிறார். அப்படியான பெரியாரை வைணவர்கள் தம்மவர்தான் என்று கூறிக் கொண்டு வடகலை நாமம் போட்டுக் காட்டுகிறார்கள். அவரை ஆழ்வாரில் ஒருவராகவும் ஆக்கி விடுகிறார்கள். அவருக்கு வடகலை நாமம் போட்டது மகாமகாக் கொலைபாதகத்தனமாகும்.

திருவள்ளுவர் தவிர்த்த வேறு யாரையும் மற்ற மதத்தவர்கள் இம்மாதிரி மதிப்பதில்லையே. இதிலிருந்தே தெரியவில்லையா, குறளில் காணப்படும் திராவிடப் பண்பு எத்தகையது என்று. இப்படிப்பட்ட திருக்குறளை விரும்புவதைவிட்டு நம் நாட்டவர்கள் இராமாயணத்தை வைத்துக்கொண்டு கூத்தடிக்கிறார்களே அது நியாயமா?

(தொடரும்)

- உண்மை இதழ், 16-30.6.18

புதன், 3 அக்டோபர், 2018

இந்திக் கொள்ளை

03. 04. 1932 - குடிஅரசிலிருந்து...


ஒரு தேசத்தில் உள்ள மக்களைச் சுலபமாகவும், சீக்கிரமாகவும், அறிவுடையவர்களாகச் செய்வதற்கு, முதலில் அவர்களுடைய தாய் மொழியின் மூலம் எல்லா விஷயங்களையும் போதிக்கப்படவேண்டும் என்று சொல்லப்பட்டுவருகிறது. இதுதான் பொதுஜனங்களின் மனத்தில் தேசாபிமான உணர்ச்சியை உண்டாக்குவதற்கு அடிப்படையான வேலையென்றும் சொல்லப்படுகிறது. இதுபோலவே தான் சுதந்திரப் போர் புரிந்த நாட்டினர் செய்து தங்கள் காரியங்களில் வெற்றி பெற்றிருக்கின்றார்கள் என்றும் அறிகின்றோம். ஆனால் நமது தமிழ் நாட்டின் தேசாபிமானமோ இதற்கு முற்றிலும் வேறுபட்டதாகவே இருந்து வருகிறது.

சுயராஜ்யம் வேண்டுமென்று கூச்சலிடுகின்ற தேசத்தலைவர்கள் என்பவர்களில் யாரும் இதுவரையிலும் தாய்மொழியின் வளர்ச்சியில் மனஞ் செலுத்தவும் முயற்சி செய்யவும் முன்வரவே இல்லை.

ஆனால் வட நாட்டினர் அரசியல் விஷயத்துடன் இந்தியையும் சேர்த்துக் கொண்டு, அதையே இந்தியா முழுவதுக்கும் பொதுப்பாஷை ஆக்க வேண்டுமென முயற்சி செய்யத் தொடங்கியவுடன் நமது  நாட்டுத் தேசாபிமானிகளும் அவர்கள் கொள்கையை ஆதரித்துப் பிரசாரம் பண்ணத் தொடங்கிவிட்டனர். தேசாபிமானியாக வெளி வருகின்ற ஒருவன் காந்திக்கு ஜே காங்கிரசுக்கு ஜே கதர் கட்டுங்கள் என்று சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பது போலவே இந்தியைப் படியுங்கள் என்றும் சொல்ல வேண்டிய அவசியமும் இப்பொழுது ஏற்பட்டுவிட்டது.

தெலுங்கர்கள், வங்காளிகள் முதலானவர்கள் தங்கள் தாய் பாஷையை மிக உன்னத பதவிக்குக் கொண்டு வந்து வைத்திருக் கின்றனர் அவர்கள் தங்கள் மொழிகளில் மக்களின் அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற புதிய நூல்களை யெல்லாம் ஆக்கி வைத்திருக்கின்றனர். அவைகளைப் படிக்குமாறு மக்களுக்கு ஊக்க மூட்டுகின்றனர். நமது தமிழ் மொழியோவென்றால் ஒன்றுக்கும் பயன்படாத நிலையிலேயே இன்னும் இருந்து வருகிறது. மக்களுடைய அறியாமையைப் போக்கி நவீன அறிவையும் உலகப் பொருள்களின் தன்மைகளை அறிந்து அவைகளைத்  தமது வாழ்க்கைக்கு உபயோகப்படுத்திக் கொள்ள அறிவையும் ஊட்டக் கூடிய நூல்களைச் செய்ய முயற்சி எடுத்துக் கொள்ளவே இல்லை.

தமிழ் மொழிக்காக உழைக்கின்றோம் என்று சொல்லிக் கொண்டிருக் கின்ற பண்டிதர்களும் சங்கங்களும் தமிழ் மொழியினால் பொதுஜனங்கள் நன்மையடையத் தகுந்த உறுப்படியான வேலைகள் ஒன்றுமே செய்வதில்லை ராமாயணக் கதையையும், பாரதக் கதையையும் சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய கதைகளையும் வசனமாகவும், பாட்டாகவும், சுருக்காகவும், விரிவாகவும் திருப்பித் திருப்பி எழுதிக் கொண்டிருக்கின்றனர், அல்லது அந்தப் புலவர் எந்தக் காலத்திலிருந்தார். இந்தப் புலவர் எந்தக் காலத்திலிருந்தார் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருக்கின்றனர். இது தான் ஆராய்ச்சியென்று சொல்லப்படுகின்றது. இவ்வளவுதான் இவர்கள் தமிழ் பாஷைக்குச் செய்யும் தொண்டு. இதனால் மக்களை இன்னும் மூடநம்பிக்கை உடையவர்களாக்குவதற்கு வழி தேடுகின்றார்களே யொழிய வேறு தேசத்திற்கு என்ன நன்மை செய்கின்றார்கள் என்றுதான் கேட்கின்றோம்.

ஆனால் தேசாபிமானிகளாக வருகின்றவர்களுக்கோ இதில் கூடக் கொஞ்சமும் கவலை இருப்பதில்லை. பொதுவாக நமது நாட்டு தேசாபிமானிகளுக்கு எந்த வகையிலும் சொந்த அறிவு என்பதே இருப்பதில்லை வடநாட்டுத் தேசாபிமானிகள் எந்தக் காரியங்களை ஆரம்பிக்கின்றாரோ அதையே பின்பற்றுவதுதான் நமது நாட்டு அரசியல்வாதிகளில் போக்காக இருந்து வருகின்றது. சமுகவிய லாகட்டும், மதவியலாகட்டும் அரசியலாகட்டும், பாஷவியலாகட்டும் மற்ற எந்த இயலாகட்டும் எல்லாவற்றிலும் நமது நாட்டினர் வடநாட்டினர்க்கு அடிமைப்பட்டே வந்து கொண்டிருந்தனர். இதற்கு உதாரணமாக இதுவரையிலும் நடந்து வந்திருக்கும் கதர் இயக்கம், காங்கிரஸ் இயக்கம். இந்தியியக்கம் முதலியவைகளை எடுத்துக் கொண்டாலே போதுமானதாகும். சமீபத்தில், சென்னையிலுள்ள இந்திப் பிரசார சபைக்கு ஒரு கட்டடம் கட்டும் பொருட்டு நிதி சேகரிப்பதற்காகப் பத்திரிகைகளில் ஒரு வேண்டுகோள் வெளிவந்தது. அதில் இந்தியின் அவசியத்தையும், அதற்குக் கட்டடம் கட்ட வேண்டியதன் அவசியத்தையும் வற்புறுத்திப் பொது ஜனங்களைப் பொருளுதவி செய்யுமாறு வேண்டிக்கொண்டு, பலகையான அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும, சட்டசபை மெம்பர்களும், தாலுகா போர்டு, முனிசிபாலிட்டி ஜில்லா போர்டு, முதலிய ஸ்தாபனங்களில் பதவி வகிப்பவர்ளுமாகச் சுமார் 50 பேர்களுக்கு மேல் கையொப்ப மிட்டிருக்கின்றனர்.

உண்மையிலேயே இவர்கள் இந்தி மொழி தேசிய பாஷையாக வேண்டும். அதன் மூலம் மக்கள் நன்மையடைய வேண்டும் என்ற கருத்துடன் இந்தி மொழிக்கு ஆதரவளிக்க முன்வந்தார்களா என்பதுதான் நமக்குச் சந்தேகம். இவர்கள் தங்கள் சொந்த பாஷையின் வளர்ச்சிக்குக் கடுகளவாவது நன்மை செய்திருப்பார்களானால் இந்தி மொழிக்கு ஆதரவளிக்க முன் வந்ததில் ஏதாவது அர்த்தம் இருக்க முடியும். அப்படியிலலாமல், தமிழ் மக்கள் முன்பின் அறியாததும் சமஸ்கிருதம் தெரிந்த பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்களுக்குப் படிக்கக் கஷ்டமாயிருப்பதும், துளசிதாஸ் ராமாயணத்தைத் தவிர வேறு இலக்கியங்களோ அல்லது நவீன கலைகளோ இல்லாததும் ஆகிய ஒரு பிரயோசனமற்ற பாஷையைத் தமிழ் மக்களிடம் பரப்ப முன் வருவார்களா? மக்கள் சொந்த மொழியையே கற்க முடியாமல் வாழுகின்ற பொது ஜனங்கள் இந்தி மொழியை எவ்வளவு தூரம் கற்றுக் கொள்ளப் போகிறார்கள்?

இவையெல்லாம் அந்தப் பிரமுகர்களுக்குத் தெரியாத விஷயம் அல்ல. ஆயினும் ஏன் கையெழுத்திடமுன் வந்தார்களென்றால், தங்களைத் தேசாபிமானி என்று காட்டிக் கொள்வதன்மூலம் அடுத்த தேர்தலுக்கு ஆதரவு பெறவே என்பதில் சிறிதும் சந்தேகமே இல்லை. ஆதலால் இதைக் கண்டு யாரும் ஏமாந்து விட வேண்டாமென்று எச்சரிக்கை செய்கின்றோம்.

- விடுதலை நாளேடு, 29.9.18

சனி, 29 செப்டம்பர், 2018

தமிழ் மீது வன்மம்

கேள்வி: தமிழ் மொழியை செம்மொழியாக்க சட்டம் கொண்டு வந்தால் என்னென்ன பயன்?

பதில்: காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். ஏழை நெசவாளர் வீட்டுக் கட்டுத்தறி நிற்காமல் இயங்கும். ஒரு வேளை கஞ்சிக்கே வழி இல்லாதவருக்கு மூன்று வேளையும் மட்டன் பிரியாணி கிடைக்கும் ('தினமலர்' வார மலர் 13.6.2004).

இந்தளவு  தமிழ் மீது வன்மம் கொண்டவர்கள்தான்  பார்ப்பனர்கள்!

வெள்ளி, 28 செப்டம்பர், 2018

அமெரிக்காவில் தமிழ் பேசுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு



மும்பை, செப்.22  அமெரிக்காவில் அதிகமானவர்களால் பேசப்படும் இந்திய மொழிகளில் தொடர்ந்து இந்தி முதலிடத்தில் இருந்து வருகிறது. தொடர்ந்து குஜராத்தி, தெலுங்கு, தமிழ் மொழிகள் உள்ளன.

2010ஆம் ஆண்டு புள்ளிவிபரத்துடன் ஒப்பிடுகையில், 2017ஆம் ஆண்டில் தெலுங்கு பேசுவோரின் எண்ணிக்கை 86 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்கா வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தின்படி, 2017ஆம் ஆண்டில் அமெரிக்காவில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. 5 ஆண்டுகளுக்கும் மேல் வசிப்பவர்களின் எண்ணிக்கை 21.8 சதவீதமாக உள்ளது. ஆங்கிலம் தவிர பிற மொழிகள் பேசுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் வசிக்கும் 30.5 கோடி பேரில் 6.7 கோடி பேர் வெளிநாட்டு மொழிகள் பேசுபவர்களாக உள்ளனர். இந்தி பேசுவோரின் எண்ணிக்கை 8.63 லட்சமாகவும், குஜராத்தி பேசுவோரின் எண்ணிக்கை 4.34 லட்சமாகவும், தெலுங்கு பேசுவோரின் எண்ணிக்கை 4.15 லட்சமாகவும் உள்ளது. தெலுங்கு பேசுவோரின் எண்ணிக்கை 86 சதவீதமும், இந்தி பேசுவோரின் எண்ணிக்கை 42 சதவீதமும், குஜராத்தி பேசுவோரின் எண்ணிக்கை 22 சதவீதமும் அதிகரித்துள்ளது.

பெங்காலி பேசுவோரின் எண்ணிக்கை 57 சதவீதமும், தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை 55 சதவீதமும் அதிகரித்துள்ளது. இந்தியர்கள் மட்டுமின்றி வங்கதேசத்தினரும் பெங்காலி பேசுகிறார்கள். அதே சமயம் தமிழ் மொழி அதிக வெளிநாட்டினரால் பேசப்படும் மொழியாக உள்ளது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா நாட்டினரும் தமிழ் பேசுகிறார்கள்

ஒலிமாசை கட்டுப்படுத்த அதிக ஒலி எழுப்பும் கருவிகளுக்கு தடை நீடிக்கும்

மும்பை, செப்.22 விநாயகர் சதுர்த்தி மற்றும் சில முக்கிய நிகழ்ச்சியின் போது விதிமுறைகளை மீறி அதிக ஒலிமாசு ஏற்படுத்தப்படுவதாக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த உயர்நீதிமன்றம் விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி நிகழ்ச்சிகளின் போது அதிக ஒலி எழுப்பும் டி.ஜெ. உள்ளிட்ட கருவிகளுக்கு தடை விதித்தனர். இதை எதிர்த்து ஒலி மற்றும் ஒளி கூட்டமைப்பு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனு நீதிபதிகள் சாந்தனு கேம்கர் மற்றும் சாரங் கோட்வால் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் வாதிட்ட வழக்குரைஞர் “டி.ஜெ. உள்ளிட்ட கருவிகள் 100 டெசிபலுக்கு மேல் ஒலி எழுப்பும் திறன் கொண்டவை. ஆனால் பெரும்பாலான பகுதிகளில் 50 முதல் 75 டெசிபல் ஒலியும், இரவு நேரங்களில் 40 முதல் 70 டெசிபல் ஒலியும் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே ஒலி மாசு சட்டங்களை மீறும் இந்த கருவிகளை பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது” என கூறினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அமர்வு, விநாயகர் சதுர்த்தி மற்றும் நவராத்திரி நிகழ்ச்சிகளில் அதிக ஒலி எழுப்பும் கருவிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்துவிட்டனர்.

ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக சட்டம், விதிகள் உருவாக்கப்படும்போது, அதை கண்டிப்பாக பின்பற்றவேண்டும் என்று மனுதாரர்களுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும் மனு மீது விரிவான பதில் அளிக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டனர்.

ரூ 100 அய் தொடப்போகும் பெட்ரோல் விலை

புதுடில்லி, செப்.22 பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை தினம் மாற்றி அமைக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு உரிமை அளித்ததில் இருந்து தினமும் விலை உயர்வு ஏற்படுவதால் மக்கள் கடும் துயரம் அடைந்துள்ளனர்.   இன்று பெட்ரோல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று டில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.82.32 ஆகவும், சென்னையில் ரூ.85.48 ஆகவும் கொல்கத்தாவில் ரூ.84.07 ஆகவும் உயர்ந்தது. இந்த விலை உயர்வு டில்லி, மும்பை கொல்கத்தா நகரங்களை விட சென்னையில் அதிகம் இருந்தது. இந்த ஆண்டுத் தொடக்கத்தில் பெட்ரோல் விலை டில்லியில் லிட்டருக்கு ரூ.64.97 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் முடிந்து அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல்வாரம் வரை நாடு முழுவதும் தொடர்ந்து விழாக்கள் நடைபெறுவதால் வரும் 5 மாதங்களுக்கு விலை உயருமே தவிர குறைவதற்கான எந்த ஒரு வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது. இதனால் இன்னும் சில வாரங்களில் மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 100-அய் தொட்டுவிடும்.  சென்னையில் அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் முதல்வாரத்தில் ரூ 100 அய்த் தொட்டு விடும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தொடர்ந்து பொய் பேசிவரும் நிர்மலா சீதாராமன்

ப. சிதம்பரம் குற்றச்சாட்டு

புதுடில்லி, செப். 22  நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது, மும்பையில் விரைவில் பெட்ரோல் விலை ரூ100-அய் தொட்டுவிடும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் தொடர்ந்து பொய்யான தகவலைக் கூறிவருகிறார். இதற்கு மத்திய  முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் நிர்மலா சீதாராமனின் பொய்யை அம்பலப்படுத்தியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில்  இவ்விலை உயர்வு குறித்து பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், எண்ணெய் பொருட்கள் மீது மாநிலங்கள் தான் அதிக வரி விதிக்கின்றன. இவற்றில் பாதி வரியைத் தான் மத்திய அரசு விதிக்கிறது. எனவே முதலில் விலை குறைப்பில் ஈடுபட வேண்டியவர்கள் மாநில அரசுகள் தான் என்று கூறினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது உண்மையா?  வாருங்கள் உண்மையைத் தெரிந்துகொள்ளலாம் என்று கூறியிருந்தார்.

மேலும், கடந்த 2017-&2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு ரூ.2,84,442 கோடி வரி வசூல் செய்துள்ளது. அதேசமயம் மாநில அரசு ரூ.2,08,893 கோடி வரி வசூல் செய்துள்ளது. இதில் மத்திய அரசு தான் அதிக லாபம் பார்த்துள்ளது. இதில் மாநிலங்களுக்கு வரி இழப்புத்தான் ஏற்பட்டுள்ளது. புள்ளி விவரங்களைப் பார்த்தாலே தெரியும். அப்படியிருக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இப்படி பேசுவது ஏன் என்று கூறியுள்ளார். மேலும் இந்த இரண்டில் எது அதிகம் என்று நீங்களே கூறுங்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.

- விடுதலை நாளேடு, 22.9.18

சனி, 22 செப்டம்பர், 2018

தமிழி எழுத்து வடிவம் :

தமிழ் மொழியின் தொன்மையான எழுத்து வடிவங்களை அறிந்து கொள்ளக் குகைக் கல்வெட்டுகள் பெரிதும் உதவுகின்றன. இக்கல்வெட்டுகளில் எழுதப் பெற்றுள்ள எழுத்து வடிவங்களுக்குப் பெயரிடுவதில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. ஒரு சிலர் தமிழி என்று குறிப்பிடுகின்றனர். வேறு சிலர் தமிழ்-பிராமி என்று குறிப்பிடுகின்றனர்.

• தமிழின் தனித்தன்மை

தமிழகக் குகைக் கல்வெட்டு எழுத்துகள் வடஇந்திய பிராமி எழுத்துகளில் இருந்து சிற்சில நிலைகளில் வேறுபடுகின்றன. அவ்வேறுபாடுகள் தமிழின் தனித்தன்மைக்கு உரியவை ஆகும். இந்த வேறுபாட்டைக் கருத்தில் கொண்டு "தமிழி" என்று தனிப்பெயர் இடுதலே சிறப்புடைத்து என்பார் கல்வெட்டு "அறிஞர் நாகசாமி". இவர் தம் கருத்துக்கு அரணாக இரு சான்றுகளை எடுத்துக் காட்டி விளக்குகின்றார்.

கி.மு. முதல் நூற்றாண்டைச் சார்ந்த "சமவயங்க சுத்த" என்னும் நூலில் 18 வகையான எழுத்துகளின் பெயர்கள் பட்டியல் இடப்பெற்று உள்ளன. அவற்றுள் "தமிழி" என்பதும் ஒன்று.

பிராகிருத மொழியினர் தமிழ் எழுத்துகளைத் தமிழி, திராவிடி என்று குறிப்பிடுகின்றனர். திராவிடி என்பது பிற்காலப் பெயர். இப்பெயர் கி.பி.5,6 ஆம் நூற்றாண்டுகளுக்குரிய நூலாகக் கருதப் பெறுகின்ற லலித விஸ்தாரம் என்னும் நூலிலேயே இடம் பெற்றுள்ளது.

எனவே குகைக் கல்வெட்டு எழுத்துகளைத் தமிழி என்றே குறிப்பிடுவோம். தமிழி எழுத்து வடிவங்களைக் கீழே இடம் பெற்றுள்ள படத்தில் காணலாம்.
காண்க : (தமிழ் இணைய பல்கலைக்கழகம்) http://www.tamilvu.org/courses/degree/a051/a0514/html/a051414.htm