பக்கங்கள்

திங்கள், 23 மே, 2016

தமிழும் வடமொழியும்



இனி, ஆரியருந் தமிழரும் ஒரே நாட்டின் கண்ணேயிருந்து ஒருங்கு வாழவேண்டியது அவசியமாயிற்று.  ஆரியர் தமிழும், தமிழர் சமஸ்கிருதமும் பயிலப் புகுந்தனர். 

சமஸ்கிருதம் வடக்கினின்றும் போந்த காரணத்தால் அதனை வடமொழி யென்று உரைப் பாராயினர்.  அது வடமொழி யென்னப் பட்டவுடனே தமிழ்மொழி தென் மொழி யெனப் படுவதாயிற்று.  தமிழரும் ஆரியரும் வேறுபாடின்றி ஒத்து நடந்தமைபற்றி அவ்விருவர் பாஷைகளும் சில நாள் தமக்குள்ளே கலப்பனவாயின. 

வடமொழி தமிழொடு மருவு முன்னே, அம்மொழியினின்றும் பாகத பாஷைகள் பல கிளைத்துத் தனித்தனி பிரிந்தன.  இதற்கிடையிலே தான் தமிழ் மொழியினின்று தெலுங்கு, மலையாளம், கன்னடந் துளுவமென்னும் வழி மொழிகள் கிளைத்தன.

இவ்வழி மொழிகளிலே தெலுங்கு தான் வடமொழியொடு மிகவுங் கலந்து விசேடமான திருத்தப்படாடைந்தது;  தனது நெடுங்கணக்கையே திருத்தி விரித்துக்கொண்டது; பல்லாயிரஞ் சொற்களையும் மேற்கொண்டது; வடசொல் இலக்கணத்தையும் மிகத் தழுவிக்கொண்டது. 

தெலுங் கிலக்கணமெல்லாம் தமிழ்ப்போக்கில் இயங்க வேண்டியிருக்க, அதை விடுத்து வடமொழிப் போக்கை யனுசரிக்கப் புகுந்தன.  புகுதலும் வட மொழியிலே தெலுங்கிலக்கணம் அமைவதாயிற்று.  இஃது இடைக்காலத்திலிருந்த நன்னயப் பட்ட ராதிய பிராமண வையாகணர்கள் செய்த தவறு.  இத்தவறு காரணமாகத் தெலுங்கு தமிழின் வழிமொழி யன்றென்பது அசங்கதமாம்.

இவ்வாறே கன்னடமுந் தெலுங்கை யொட்டிப் பெரிதும் இயங்கினமையான் அதுபோலவே பல்லாற்றானுந் தன்னைச் சீர்ப்படுத்திக்கொண்டது.  இதனாலன்றோ பழங்கன்னடம் என்றும் புதுக்கன்னடம் என்றும் அஃது இருவேறு பிரிவினதாகி யியங்குகின்றது.  பழங்கன்னடத்தைத் தமிழினின்றும் பிறந்ததெனக் கூறுங் கன்னடப்புலவர் பலர் இன்றுமுளர்.

இனி மலையாளமோ வெகுநாள் காறுந் திருந்தாதிருந்தது.  இறுதியில் ஏறக்குறைய முந்நூற்றியாண்டுகட்கு முன்னர்.

வடமொழிக் கலப்பு

வடமொழி தமிழ் நாட்டில் வெகுநாள் காறும் இயங்கியும் அதற்குத் தமிழ்மொழியைத் தன் வழியிலே திருப்பிக் கொள்ளுதற்குற்ற ஆற்றலில் லாது போயிற்று.  வடமொழியாளர் தமிழர்களது ஒழுக்கவழக்கங்களை யுணர்ந்து அவற்றிற்கேற்ப வடமொழியில் நூல்கள் வகுப்பான் புகுந்தனர். 

அவர்களெல்லாம் ஆன்ம நூற்பயிற்சி மிக்குடையாராயும், கலையுணர்ச்சி சான்றவ ராயுமிருந்தமை பற்றித் தமிழரது திவ்விய ஸ்தலங் களுக்குப் புராணங்கள் வகுத்தனர்; தமிழர்களிடத்தில்ல திருந்த அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நால் வகைச்சாதி முறையை மெல்லமெல்ல நாட்டிவிட்டனர்.

முற்சடைப் பலனில்வே றாகிய முறைமைசொல்
நால்வகைச் சாதியிந் நாட்டினீர் நாட்டினீர்

என்று ஆரியரை நோக்கி முழங்குங் கபிலரகவ லையுங்காண்க. இன்னும் அவர் தம் புந்திநலங் காட்டித் தமிழரசர்களிடம் அமைச்சர்களெனவும் மேலதிகாரப் பிரபுக்களெனவும் அமைந்து கொண்டனர்; தமிழரிடத் திருந்த பல அரிய விஷயங்களையும் மொழிபெயர்த்துத் தமிழர் அறியு முன்னரே அவற்றைத் தாமறிந்தன போலவும், வடமொழியினின்றுமே தமி ழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்.

தமிழருட் சாமானிய சனங்கள் அவ் வாரியரது விருப்பத்திற்கேற்ப எவ்வள விணங்கிய போதிலும், புலவராயினார் அவர்களது திருத்தப்பாட்டிற்குப் பெரிதுமிணங்கினாரல்லர். ஒழுக்கச் சீர்ப்பாடு ஏற்பட்டபோதினும், பாஷைத் திருத்தம் ஏற்படவில்லை.  தமிழின் முப்பத்தோரெழுத்துகளும் அவ்வாறே யின்றளவுமிருக்கின்றன; சிறிதும் வேறுபடவில்லை.  நாங்கள் செல்லு மிடங்களுக்குத் தக்கபடி புதிய புதிய இலிபிகள் ஏற்படுத்திக்கொள்ளுமியல் புடைய ஆரியர் தமிழ்நாட்டிற்கேற்றபடி தமிழிலிபியை யொட்டிக் கிரந்தம் என்னும் பெயரிற் புதுவதோர் இலிபி வகுத்தனர்; தமிழரை வசீகரிக்குமாறு அவ்விலிபியிற் பல நூல்கள் வரைந் தனர்.  தமிழ்ப் புலவராவார் எதற்கும் அசையாது தங்கள் தமிழ்மொழியின் போக்கையே தழுவிச் செல்வாராயினர்.

இவ்வாறு தமிழருட் பண்டிதரா யினார் வடமொழியைத் தமிழின்கண் விரவவொட்டாது விலக்கியும், பாமரரா யினார் வடமொழிச் சொற்களுட் பலவற்றை மேற்கொண்டு வழங்கப் புகுந்தமையின் நாளாவட்டத்தில் வடசொற்கள் பல தமிழ்ப்பாஷை யின்கண்ணே வேரூன்றிவிட்டன. 

அவ்வாறாயின் இதுபோலவே வட மொழியின் கண்ணும் தமிழ்ச் சொற்கள் பல சென்று சேர்ந்திருத்தல் வேண்டு மன்றோ? வடமொழி தமிழ்மொழி யொடு கலக்கப் புகுமுன்னரே, முன்னது பேச்சுவழக்கற்று ஏட்டுவழக்காய் மட்டிலிருக்கும் நிலைமைக்கு வந்து விட்டது.  ஏட்டுவழக் கொன்றுமே யுள்ள பாஷையோடு இருவகை வழக்கு முள்ள பாஷையொன்று கூடியியங்கப் புகுமாயின் முன்னதன் சொற்களே பின்னதன்கட்சென்று சேருமேயன்றிப் பின்னதன் சொற்கள் முன்னதன் கட்சென்று சேரா.

இது பாஷை நூலின் உண்மைகளுளொன்று.  இதுவே வழக்காற்று முறை.  இம்முறை பற்றியே வடசொற்கள் பல தமிழின்கட் புகுந்தன.  தமிழ்ச் சொற்களிற் சில தாமும் வடமொழியின்கண் ஏறாமற் போயின.  எனினும் தொன்னாட்டு வடமொழி யாளர் மட்டிற் சிலர் ஊர்ப்பெயர், மலைப் பெயர், யாற்றுப்பெயர் முதலாயிவற்றைத் தங்கள் சப்த சாஸ்திரத்திற் கியைந்தவண்ணம், ஓசை வேறுபாடு செய்து கொண்டு தாங்கள் வகுக்கப் புகுந்த புராணாதிகளில் வழங்கு வாராயினர்.  இதுதானுண்மை; இதற் குமே லொன்றுஞ் சொல்ல இயலாது.

இனித் தமிழ்ப் புலவர்களாயினார் சமஸ்கிருதச் சொற்களை எவ்வளவோ விலக்கிப்பார்த்தும் அவற்றை விலக் குதல் முடியாது போயிற்று.  போகவே தமிழ்ப் புலவர்களுந் தங்கள் முயற்சி களெல்லாம் வீணாதல் கண்டு வேண்டா வெறுப்பாய்த் தமக்கு வேண்டிய சிற்சில சொற்களை மட்டில் தங்கள் எழுத்திலக்கணவிதிகட்குத் தக்கவாறு திரித்து மேற்கொள்வாரா யினார்; ஆரியச் சொற்கள் தமிழில் வருவதற்கேற்ற விதிகளும் வகுத்தனர் பின்னர்க் கொஞ்சங்கொஞ்சமாக வட சொற்கள் பல தமிழ் மொழியின்கண் இடம் பெறுவன வாயின.

அதன்மேல் முதலிடை கடையெனும் முச்சங்கத்தார் காலத்தினும் வட சொற்கள் தமிழ் நூல்களிலேறின.  ஆயினும் அவை சிறிதளவேயாம்.  தொல்காப்பியம் என்னும் இலக் கணத்தினுள்ளும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க் கணக்கு என்னும் நூற்றொகைகளுள்ளும் ஆங் காங்கு இரண்டொரு வடசொற் காணப் படலாமேயன்றி, அதற்குமேலில்லை.

பின்னர்ப் பவுத்தராயினார் தலையெடுத்துத் தம் மதத்தை யாண்டும் பரப்பிப் பல்லாயிரக் கணக்காகச் சனங்களைச் சேர்த்துக்கொண்டு அக் காலத்திருந்த ஆரியரை யெதிர்த்தனர்.  இப்பகைமை தென்னாட்டினும் பரவிற்று.  பரவவே தமிழருட் பலர் பவுத்தமதம் மேற்கொண்டு ஆரியரை யெதிர்ப்பதில் நோக்கமுற்றிருந்தனர்.  அக்காலத்தில் மறுபடியும் தமிழ்ப் புலவர்கள் தங்களாற் கூடியமட்டில் வடசொற்களைத் தமது தமிழ் மொழியின் கண்ணே கலக்கவொட் டாது தடுத்தனர். 

முன்னரே தமிழிற் போந்நு வேரூன்றிவிட்ட வடசொற் களைத் தொலைப்பது அவர்கட்குப் பெருங்கஷ்டமாய்விட்டது.  ஆதலின் அவர்கள் என்செய்ய வல்லர்?  முன் னரே வந்தனபோக, இனிமேலாதல் அப்பொல்லாத வடசொற்கள் தமிழின் கண் வாராதவாறு பாதுகாத்தல் வேண்டுமென்று சிறிதுகாலம் முயன் றனர். 

அவ்வாறே இவர்களது விடா முயற்சியாற் சிறிதுகாலம் வடசொற்கள்  தமிழில் அதிகமாய் வந்து கலவாம லுமிருந்தன.  இக்காலத்திலேதான் செந் தமிழ், கொடுந்தமிழ் எனத் தமிழ் இருபிரிவினதாகி யியங்கப் புகுந்தது.  செந்தமிழாவது புலவராயினார் பயிலுந் தமிழ்; கொடுந்தமிழாவது புலவரல்லாத சாமானிய மக்கள் பயிலுந்தமிழ்.
- பரிதிமாற்கலைஞர்
(தமிழ் மொழியின் வரலாறு)
விடுதலை ஞா.ம., 7.5.11

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக