பக்கங்கள்

சனி, 21 மே, 2016

தமிழும் வடஇந்திய மொழிகளும்


(சாத்தூர் சேகரன், 1.1.1998இல் பெரியார் வாசகர் வட்டத்தில்
ஆற்றிய உரைச்சுருக்கம்)

முன்னுரை:

இருதிங்கள் முன்பு (20.11.97) பேசியபோது, தமிழே தென்னிந்திய மொழிகளுக்கும், வட இந்திய மொழிகளுக்கும் தாயாக இருக்கிறது என்பதையும் தமிழின் திரிந்த மொழியே பிற திருவிட மொழிகளும் வடஇந்திய மொழிகளும் என்பதை சற்று சுட்டிக் காட்டியிருந்தேன்.
இன்றைய வரையில் குறிப்பாக நான்கு செய்திகளைக் கூற விழைகிறேன். 1) தமிழே வட இந்திய மொழிகளுக்கும் தாயாக இருக்கிறது 2) சமஸ்கிருதம் எந்த வகையிலும் இந்திய மொழிகளின் தாயாக இல்லை.
3) சமஸ்கிருதம் செய்யப்பட்ட மொழி என்பதால் தமிழின் பிற சொற்களை திரித்து, தன்சொல்லை உருவாக்கியுள்ளது. 4) இந்தியாவின் ஊர்ப்பெயர்கள் யாவும் தமிழாக உள்ளன; இவ்வாறே இந்தியாவின் மக்கட் பெயர்கள் யாவும் தமிழாக உள்ளன. இவற்றை ஒன்றொன்றாகப் பரிசீலித்து பார்ப்போம்.
1. தமிழே இந்திய மொழிகளின் தாய்
(அ) அடிப்படைச் சொற்கள் யாவும் தமிழாக உள்ளன. முகம் என்பது ‘முக்/முக’ என்று வடஇந்திய மொழிகளில் குறுகியுள்ளது. மூக்கின் மற்றொரு பெயரான நாசி என்பது ‘நாக்’ என மாறியுள்ளன. மூளை ‘முகுள’ எனத் திரிந்துள்ளது. கழுத்து, ழகரம் வட இந்திய மொழிகளில் இல்லாத காரணத்தால், அச்சொல் கள்ளம், கல்லா எனத் திரிந்துள்ளது. கண், ஆங்கண் என மருவி ஆங்க் என்றாகியுள்ளது.
செவி, காது என்பதன் பிரிதொரு வடிவமான கண் (கன்னத்தின் அருகில் இருப்பது என்ற பொருளில் உண்டான தமிழ்ச்சொல்) என்பது கான் என்றும் கர்ண என்றும் திரிந்துள்ளது. உடம்பின் மறுசொல்லான பொதி - பதன் என்று சில மொழிகளிலும், பாடி என்று ஆங்கிலத்திலும் உள்ளது என்பதை  நினைக்கும்பொழுது தமிழின் வீரியத்தையும் எங்கும் பரந்த தன்மையும் உய்த்துணரலாம்.
வீறு என்ற வல்லின ஒலிப்பில் பிறந்த சொல், வீர என்று மாறி இந்திய மொழிகளில் எல்லாம் வீரன், வீரப்பன், வீராச்சாமி, வீரு, வீரா, வீரியம் என்று மாறியுள்ளன. வல்லமை என்ற சொல்லையும் வலிமை, வலிவு என்ற சொற்களையும் மாற்றி வல்லபன் பல்லவ் என்று வட இந்திய மொழிகள் கையாளுகின்றன.
தீரம் என்ற சொல்லில் இருந்து பிறந்த தீரன் வடஇந்திய மொழிகளில் தீரன் என்று வருவதுடன், தீர, தீர் என்றும் வந்து ஆண்மையைச் சுட்டுகின்றன. போரை விழையும் ஆண்மகன் புருஷனாக்கப்பட்டான். இது பின்னர் கணவன் என்ற பொருளையும் தந்தது. சில ஐரோப்பிய மொழிகள் person என்று வந்து வீரத்தையும் குறிக்காமல், கணவன் என்ற பொருளையும் குறிக்காமல் ஒரு சாதாரண ஆணைக் குறிக்கத் தொடங்கி விட்டது.
நெய் என்ற சொல் நெருக்கத்தைக் குறிக்க வந்தது. நேயம் என்ற சொல்லை உருவாக்கியது. ய=வ=க=ச என்பதால், இது நேசம் என்று இந்திய மொழிகளில் உள்ளது. இவ்வாறே பிரியாத நட்பு அல்லது காதல் என்ற கருத்தில் பிரியா + அம் என்ற கூட்டு உருவாகிப் பின் பிரியம் என வந்துள்ளது. முற்காலத்தில் சூரியனை அடிப்படையாகவும் நிலவை அடிப்படையாகவும் கொண்டு காலத்தைக் கணித்தார்கள். நிலவின் பலப்பெயர்களும் ஒன்று பிறை. இச் சொல்லில் இருந்தே பிராயம் தோன்றியது.
ழகரம் பிறமொழிகளில் இல்லாததால் பல சொற்திரிபு ஏற்பட்டன. தோழமை தோஸ்தி ஆயிற்று. முழுத்தம் (முழுவடிவ சிலை) மூர்த்தி என்றாயிற்று. பழம் பலம் ஆகியது; பல் ஆகியது.
சகரம் ககரமாதல்: சீர்த்தி - கீர்த்தி ஆகிறது. செம்பு கெம்பு ஆகிறது. சரி (Yes- ஆம்) சில மொழிகளில் கரி ஆகிறது. (மராத்தி; இலத்தீன் & ஆங்கிலம்: correct)
லகரம் ரகரம் ஆதல்: ஆலாத்தி - ஆராத்தி ஆகி வடஇந்திய மொழிகளில் ஆர்த்தி ஆகி விட்டது. ஆலம் = வட்டம். எனவே ஆலமரம் வட்டமரமாகி, வடமரமாகி விட்டது.
காரணவிதி:
காரண விதிகளைக் கொண்டு தமிழ் வேர்சொற்களை ஆராய்வது போல் பிறமொழிகளை ஆராய முடியாது. ஏனெனில் அவற்றிற்கு வேர்ச் சொல் கிடையாது. எல்லாச் சொற்களும் தமிழ்ச் சொற்களின் திரிபே ஆகும்.
ஒருவகை மலை யாட்டின் பெயர் வருடை, ஆண்டுக்கு ஒரு குட்டி மட்டுமே போடும். இதன் காரணமாக ஆண்டிற்கு வருட என்ற பெயர் ஏற்பட்டு இன்று வருஷ ஆகி விட்டது. வருடை, ஆடை, ஆடு என்றனர். இதுவும் வருடத்தின் பெயராக ஆடு (ஆட்டை/யாட்டை) என்றாகியது. பின்னர் மூக்கொலிபெற்று ஆண்டு ஆயிற்று. அய்ரோப்பிய மொழிகளில் அன்னம் அன்யூவல் என்று மாறலாயிற்று.
புணர்ச்சியால் பல:
சொற்கூட்டுகளால் சேதாரம் அதிகமாகிப்பல ஆயிரம் சொற்கள் தமிழில் இருந்து வட இந்திய மொழிகளுக்கும் உலக மொழிகளுக்கும் சென்றுள்ளன.
முதல் + தனம் என்பதே மூலதனம் ஆகியது. கணவனை இழந்து விட்ட +அவ்வை (பெண்) என்ற சொல்லே விதவை என்று இந்திய மொழிகளில் மாறிட (widow) வீடோ என்று சில அய்ரோப்பிய மொழிகளில் மாறியுள்ளது.
அறியாமை முறைகள்
தமிழில் முறையான வேரும் சொல்லும் இருக்கச் சில மொழிகளில் ஆகுபெயராக ஏதேனும் சிறிய காரணத்தையுடைய தமிழ்ச்சொல்லையே மூலச் சொல்லாகக் கொள்கின்றனர். கடல் நீர் உவர்ப்பாக உவரி என்ற பெயர் பெயர் பெற்றது.
உவர்ப்பு என்ற சொல் திரிந்தே உப்பு என்ற சொல் பிறந்தது. உப்பு அளத்துமூலம் (பாத்திகட்டுதல்) எடுப்பதால் கிளை மொழிகளில் அளம் என்றாலே உப்பு ஆயிற்று. சில மொழிகளில் அளதி, அலம் என்றெல்லாம் திரிய, சில அய்ரோப்பிய மொழிகளில் s+அளத் (Salt) என்று திரியவும் இடம் ஏற்பட்டது. இவ்வாறு தமிழில் இருந்தே பல்வேறு முறைகளில் தான் வட இந்திய மொழிகள் உருவாயின.
சமஸ்கிருதம் தாய்மொழி அல்ல:
சமஸ்கிருதத்தின் தோற்றம் வளர்ச்சி யாவுமே செயற்கையானது. வாரப்பெயர், மாதப் பெயர், தாவரப் பெயர், விலங்குப் பெயர், பறவைப் பெயர், ஏன் உறவுப் பெயர், உடற்கூறுப் பெயர் இன்ன பிறவும் தமிழ்ச்சொற்களைத் திரித்தே அமைக்கப் பட்டுள்ளன.
எடுத்துக்காட்டாக புதன் இந்திய மொழிகளில் இருக்க, பௌமிய என்று சமஸ் கிருதத்தில் உள்ளது; சனிக்கிழமையை அது சௌம்மிய என்கிறது. பின் ஏன் இவை தமிழல்ல என்று ஒதுக்க வேண்டும்?
ஊர்பெயர்:
இந்தியாவின் அத்தனை பெயர்களும் தமிழா கவே உள்ளன. சீர்நகரம் - ஸ்ரீநகர் ஆயிற்று. கன்னி+குமரி என்பதே கன்னியாகுமரி ஆயிற்று.
மக்கட் பெயர்:
இந்திய மக்கட்பெயர் பற்றி விரிவான ஆய்வு, முறையாக இதுகாறும் செய்யப்படவில்லை. பெயர் களைப் பகுத்து ஆராய்ந்தால் அத்தனையும் தமிழே எனலாம்.
முடிவுரை: விரிவான ஆராய்ச்சி நூலை இந்த ஆண்டே வெளியிட இருக்கிறேன். ஒவ்வொரு விதிக்கும் அய்ம்பதுக்கும் மேற்பட்ட எடுத்துக்காட்டு களைக் கூற இருக்கிறேன்.
எனவே அடுத்த பத்தாண்டுகளுக்குள் ஆராய் வோருக்கு எனது நூல் கையேடாக இருக்கும். விரைவில் தமிழ் தான் இந்தியமொழிகளில் தாய் என நிறுவப்படும். இனி எந்தச் சொல்லையும் தமிழல்ல என்று கூறாமல் ஆராய்ந்து பார்க்க வேண்டுகிறேன்.
-விடுதலை,14.5.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக