பக்கங்கள்

ஞாயிறு, 22 நவம்பர், 2015

புரட்சிப் பொங்கல்! - கவிதை



தமிழ்ப் பண்பாட்டுத் தோட்டத்தில்
தறுதலைக்  கள்ளிகளா?
தமிழினம் என்ன
ஆரியப் பண்பாட்டு
அடுப்பெரிக்கும் சுள்ளிகளா?
அவிழ்த்துவிட்ட நெல்லிகளா?
பயிரிடுதலைப் பாவமென்று
பாரினில் சொன்ன கூட்டம்
பார்ப்பனக் கும்பலின்றி
யாரேனும் உண்டா சொல்வீர்!

பயிரிடுதல் இல்லை யென்றால்
பச்சரிசி ஏது -
பார்ப்பனக் கூட்டமே!
அக்கார அடிசில் ஏது
அக்கிரகார ஆட்டமே!
சுரண்டுகின்ற தொழிலாலே
சுருக்கு மாட்டி
திராவிடத்தைத் தின்னவந்த
தீவட்டிக் கொள்ளைக்காரன்
தை முதல் நாள்
பொங்கல் என்றால்
தை தையென்று
குதிக்கின்றான்
தணல் முகத்தால்
தமிழனைத் தகிக்கின்றான்
சித்திரையென்று சொல்லி
சிறு புத்தி காட்டுகின்றான்
நாரதன் என்ற
தடியனுக்கும்
கிருஷ்ணன் என்ற - பெண்
கிறுக்கனுக்கும்
பிறந்த பிள்ளை அறுபதாம் - சுத்த
புராணப் பிதற்றல்!

தமிழ் வருடம் என்று - நம்
தலையில் கட்டுகிறான்
தன்மானம் உமக்கேதென்று
தலையிலும் குட்டுகிறான்
தமிழ் ஆண்டாம் - ஆனால்
மருந்துக்கும் ஒரு பெயர்
தமிழில் இல்லை,
தடிப் போத்தா தமிழனெல்லாம்?
நம்மைக் கிறுக்கன்
என்றா நினைத்தான்?
நாடு நமது
நாவின் தேரில் நடன மாடுவது - நமது
தேன் தமிழ் தென்றலன்றோ!

செத்துப்போன
சவமாம் சமஸ்கிருதத்தை
ஜிகினா தேரில் ஏற்றி
சித்து வேலை காட்டுகின்றான்
எட்டப்பன்களும்
எம்மினத்தில் பிறந்த
மட்டப்பன் களாம்
வீடணர்களும்
தோளினை இரவல் தந்து
தொழும்பனாய்க் கிடக்கின்றானே!

ஏடா, தமிழா!
எழு கதிர் நீ!
ஈரோட்டுச் சாணையில்
எழுந்த பெருந் தீ
போர்ச் சங்கு ஊது!
புரோகிதக் கூட்டம்
புற முதுகிட்டு ஓட
புதுநானூறு படைப்போம்!

தை முதல் நாள்
தமிழன் ஆண்டுக்கு
முதலெழுத்து!
உழவன் விழாவிற்கு
உயிர் எழுத்து!
தமிழர் வாழ்வுக்கோ
மெய்யெழுத்து!
புரட்சிப் போருக்கோ
ஆயுத எழுத்து!

பொங் கட்டும்
புது வெள்ளம்!
தங்கட்டும் நெஞ்சில்
தமிழ்வெல்லம்!
பொங்கலோ பொங்கல்
புரட்சிப் பொங்கல்!
- கவிஞர் கலி. பூங்குன்றன்
-விடுதலை ஞா.ம.,12.1.13

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக