பக்கங்கள்

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

வந்தவர் மொழியா..? செந்தமிழ்ச் செல்வமா..?-6

விஞ்சை

இதை விந்த்யா என்பதன் திரிபு என்பார் தமிழறியார். விஞ்சுதல் (மிஞ்சுதல்) என்ற சொல் தமிழில்தான் உண்டு. வித்யா என்பதோ விந்த்யா என்பதோ விஞ்சை என வராது, வரத் தேவையுமில்லை.

விஞ்சுதல், விஞ்சை, விஞ்சு என்பவை முதனிலையாகக் கொண்ட தொழிற்பெயர்களே. பொருளும் ஒன்றுதான்.

சடை

இதைப் பலர் ஜடை என்று கூறி இழுக்குவர். இதுமட்டுமன்று. அவர்கள் சகரத்தையெல்லாம் ‘ஜ’ என்றே வாய்ப்படுத்து மகிழ்ந்து கொள்வர். இது பிழை என்பதும், மானக்கேடான செயல் என்பதும் அவர் அறியார். இந்தப் பிழையுணர்ச்சி எங்கிருந்து தோன்றியது எனில், சடை என்பது ஜடா என்ற வாய்ச் சொல்லின் சிதைவென்று கூறித் திரியும் ஆரியச் சார்பினரிடமிருந்தே தோன்றியது என அறிதல் வேண்டும்.

சடை தூய தமிழ்க் காரணப் பெயர். திரித்துவிட்ட தலை மயிரைக்  குறிக்கும் சடை என்ற இச்சொல், முதலில் ஆலின் விழுதையும், வேரையும் குறித்தது. இது பின்னர் விழுது, வேர் போன்றதான மயிர்த்திரிக்கு உவமை ஆகு பெயராயிற்று. வடசொல் அன்று, வடநூற்களில் அச்சொல் உள்ளதே எனின் தமிழினின்று எடுத்தாண்டனர் எனத் துணிக.
(குயில்: குரல்: 1, இசை: 44, 7-4-59)

அவிசு

அவிசு, அவிது, அவிதல் ஒரே பொருளில் அமைந்த தொழிற் பெயர்கள். அ, து, தல் தொழிற்பெயர் இறுதி நிலைகள். வேகவைத்தல் என்பது பொருள். இது அவி என முதனிலைத் தொழிற் பெயராகவே நிற்பதும் உண்டு.

“அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று”
என்ற குறட்பாவில் நோக்குக!

அவிசு, அவிது, அவிதல், அவி இவை தொழிலாகு பெயராய், அவிக்கப் போகும் ஆடுமாடுகளின் தசையையும் அவித்த, அதாவது வெண்ணெயை அவித்த - -வேவைத்த - -காய்ச்சிய நெய்யையும் குறிக்கும்.

வேள்வியின் பெயரால் ஆடுமாடுகளைப் பலியிட்டு வேகவைத்துத் தின்னும் ஆரியர், இத்தமிழ்ச் சொல்லை எடுத்தாண்டார். அவர் ஆவிஸ் என வாயாடுவர். எனவே, அவி, அவிசு தூய தமிழ்க் காரணப் பெயர்கள்.

அவை, சவை
அவை என்னும் தூய தமிழ்க் காரணப்பெயர். ஆரியரால் சவை, சபை, சபா என்றெல்லாம் வாயாட்டுப் பெற்றது. பெறவே இடைக்காலத்தில் அவை வேறு, சபை வேறு என்று ஆகிவிட்டது.
அவை சவை குழாம்விற் பந்நர்
அஃறிணைப் பன்மைச் சுட்டாம்
சவைவீடு அம்பலம் தக்கோரின்
சமூகம்பண் டிதன் சூது என்ப.
என்னும் நாநார்த்த தீபிகையிற் காண்க.
அவ்வுதல் என்பதும் அவ்வை என்பதும் தொழிற் பெயர்களே. அழுந்துதல், வீழ்தல் என்பன இவற்றின் பொருள். மனம் நன்னெறிக்கண் அழுந்துதல், வீழ்தல் என்று பொருள் கொள்க. வீழ்தல் - --மனஞ்செலுத்தல் மனம் ஆழ்தல் என்க!
வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அணி என்ற குறட்பாவில் நோக்குக.
அவ்வை என்பது வகரத் தொகுத்தல் பெற்று அவை என ஆயிற்று.
எனவே அவை தூய தமிழ்க் காரணப் பெயராதல் காண்க.
இனி அவையினின்று தோன்றிய சவை, சபை, சபா என்பன தமிழ் வேர்ச்சொல் பெற்றவையேனும் அவைகளைத் தமிழர் எடுத்தாளல் சிறப்பன்று. சவையை எடுத்தாளுவதில் குறைவு இன்று.

சங்கமே கணைக்கால் ஓரம்
சவை சங்கு புலவர் நெற்றி

என்ற நிகண்டாசிரியர் சவை என்பதை எடுத்தாளல் நோக்குக!

(குயில்: குரல்: 1, இசை: 46, 2-4-59)
- -உண்மை இதழ்,1-15.7.16


மேதை
இதை வடசொல்லா, தமிழ்ச் சொல்லா என்று கேட்கின்றார் ஒரு புலவர். அவர் பெயரை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. காரணம் அச்சம் போலும்!
மேதை மட்டுமன்று, மேதாவி, மேது, மேதகு, மேதகை இவை அனைத்தும் தூய தமிழ்க் காரணப் பெயர்களே.
மேதக்க சோழவளநாடு என்பதில், மேதக்க என்பதை நோக்குக! இதில் மேன்மை என்பதன் அடியாகிய மே என்பதை ஊன்றி அறிவார்க்கு, இச்சொற்கள் அனைத்தும் வடவருடையன அல்ல என்பதை அறிந்து கொள்வது எளிதாகும்.
மீ என்பது மீது என வந்ததுபோல, மே என்பது மேது எனவந்து, மேன்மையை விளக்கியது காண்க! மேதை என்பதில் ஐ பெயர் இறுதிநிலை காண்க. ஒருமைக்குரியது. மேதகு மேன்மைத் தகுதி உடைமை. எனவே, இவை தூய தமிழ்க்காரணப் பெயர்கள் என்று தெளிக.
கம்பலம் - கம்பளம்
இது தூய தமிழ்க் காரணப் பெயர். விளக்கிக் காட்டி, படிப்போருக்குத் தமிழின் தொன்மை உணர்த்தப்படும்.
செந்நெ ருப்புணும் செவ்வெ லிம்மயிர்
அந்நெருப் பளவு ஆப்பொற் கம்பலம்
இச் சீவகசிந்தாமணி மேற்கோளை நுணுகி ஆராய்ந்தால் செவ்வெலி மயிர் கொண்டு நெய்ததே கம்பலம் - ---கம்பளம் என விளங்கும்.
இவ்வடிகட்கு நெருப்பைத் தின்னும் எலிமயிர்க் கம்பளம் என்று நச்சினார்க்கினியார் பொருள் கொண்டது பொருந்தாது. செந்நிறம் ஏறிய எலி மயிர் என்பதே அதன் பொருளாகும்.
இனி முதலாவதாகக் கம்பலம் என்னும் சொல் எதனின்று தோன்றியது என்பது ஆராயப்பட வேண்டும். சொல்லாராய்ச்சி இல்லாதவர் இதனை ஒரு வடசொல் என்று கூறுவர். அவ்வாறானால் வடமொழியில் அதற்குப் பொருத்தமான அடிச்சொல் கூற முடியுமா? வாசசுபத்தியம் முதலிய அகரவரிசை நூலோர், ஆசைப்படுதல் என்னும் பொருளுள்ள ‘கம்’ என்ற அடியினின்று இது பிறந்தது என்பர். அது பொருந்தாது. அன்றியும் கம்பலம் என்ற சொல், கிரேக்கர், இலத்தீனியம், பழைய ஆங்கிலம் முதலிய பிற ஆரியமொழிகளுள்ளும் இல்லை. வடமொழியில் இச்சொல் ஒருவகை மானின் பெயராய் வழங்குவதுண்டு. கம்பலி என்னும் சொல்லுருவம் காலத்தால் மிக முற்பட்டது என்று மோனியர் உ. வில்லியம்சு, தம் அகரவரிசை நூலில் கூறியுள்ளதும் நினைற் கொள்ளத்தக்கதாகும். அவர் சொல்லியபடி காலத்தால் முற்பட்ட நாகரிகம் வாய்ந்த தமிழில் இக் கம்பலம் ஆடு என்று கூறிற்றுப் பிங்கலந்தை.
மேழகம் கம்பளம் தகரே திண்ணகம்
ஏழகம் கடாதுரு ஆட்டின் ஏறே
8-2_482
என்பதால் அறிக! இதனால் கம்பலம் -- கம்பளம் ஆட்டின் பெயர்.
இனி, எலி மயிர் என்று வந்துள்ளதை ஆட்டு மயிரால் அன்றோ ஆனது கம்பளம் என ஐயுறுவர். எலி மயிர் என்பதில் உள்ள எலி என்ற சொல் ஆடு என்பதே என்பதை மேஷம் என்பது பற்றி விளக்கும் போது விளக்கப்படும்.
(குயில்: குரல்: 1, இசை: 45, 14-4-59)
மேஷம்
இது மேழகம் என்ற தூய தமிழ்க் காரணப் பெயரின் திரிபு. இவ்வாறு திரித்து மேற்கொண்டனர் ஆரியர்.
மேழகம் கம்பளம் தகரே திண்ணகம்
ஏழகம் கடாதுரு ஆட்டின் ஏறே
(பிங்கலந்தை கஎஉ)
இதில் மேழகம் ஆட்டின் பெயராதலை அறிக! “மே’’ அல்லது “மேழ்’’ என்று கத்துதலைக் கொண்டுள்ளதால் மேழகம் என்பது காரணப் பெயர் என்பதை அறிதல் வேண்டும்.
வடவரால் திரிக்கப்பட்டதால் மேஷம் என்பதைத் தமிழர்கள் மேற்கொள்ளுவது சிறப்பில்லை. இதுவே தொகுத்தல் பெற்று மேழம் என்றும் வரும். மேடம் என்றும் வரும். இவைகளையெல்லாம் தள்ளுக! மேழகம் என்பதை மட்டும் கொள்ளுக!
(குயில்: குரல்: 1, இசை: 47, 28-4-1957)
- -உண்மை இதழ்,16-31.7.16


அம்பரம்
ஆடைக்கும், வானுக்கும், திசைக்கும், கடலுக்கும், மன்றத்திற்கும், துயிலிடத்திற்கும், உதட்டுக்கும் பெயராகிய அம்பரம் என்பது தூய தமிழ்க் காரணப் பெயர்.
அம்முவது என்றால் சூழ்ந்திருப்பது. அரம் உறுவது என்ற பொருள் பட்டு வருவதோர் கடைநிலை. இடையில் ‘ப்’ விரித்தல். இந்தக் கடைநிலை ‘ப’ கரத்தையும் இழுத்துக் கொண்டு (பரம்) கடைநிலையாய் வருவதும் உண்டு. விளம்பரம் என்பதிற்காண்க. எனவே, அம்பரம் சூழ்ந்திருப்பது. ஆடை உடலைச் சூழ்ந்திருப்பது காண்க. திசையும் அவ்வாறே, கடலும் அவ்வாறே. மன்றம் அமைந்திருப்பாரைச் சூழ்ந்திருப்பதைக் காண்க! துயிலிடமும் அவ்வாறே! உதடு உள்வாயைச் சூழ்ந்திருப்பதைக் காண்க!
இவ் வம்பரமே அம்பலம் என வேறுபட்டு வரும்.
(குயில் : குரல் : 1, இசை : 52, 2-6-59)
ஆகுலம்
ஆகுல நீரபிற என்ற குறளடியில் வரும் “ஆகுலம்’’ வடமொழி என்று என் நண்பர் கூறுகிறார். அதுபற்றி விளக்கியுதவுக என நமக்கு ஓர் அஞ்சல் கிடைத்துள்ளது. ஆகுலச் சொல்பற்றி முன்னொரு முறை விளக்கினேன் ஆக நினைக்கிறேன். இருப்பினும் தெளிவுறுத்த எண்ணுகிறேன். அகங்கலித்தல், அங்கலித்தல், அங்காலித்தல், அங்கலாய்ப்பு, ஆகலித்தல், ஆகுலித்தல், ஆகுலம் அனைத்தும் ஒரு பொருளுடையவை. அகம் கலித்தலின் மரூஉக்களே. உள்ளக் கருத்தே வெளியில் ஒலிப்பது என்பது பொருள். ஆகுலம் ஒலி என்பது காண்க. வருத்தமுமாம் எனவே ஆகுலம் தூய தமிழ்க் காரணப் பெயர் என்று கடைபிடியுங்கள்.
“ஆகுலம் வருத்தம் ஓசை” நாநார்த்ததீபீகை 55, இதன் உரையில் ஆகுலம் என்ற சொல் வடமொழியில் இல்லாமை குறிக்கப்பட்டதும் காண்க.
உஷட்ர
இது வடமொழியில் ஒட்டகத்தின் பெயர். இப்பெயர் வடவர்க்கு எங்கிருந்து கிடைத்தது? தமிழில்  இருந்த ஒட்டகத்தையே இவ்வாறு திரிந்து மேற்கொண்டனர். ஒட்டகம் குளிர்ந்த காடாகிய வடநாட்டில் இல்லை. தமிழில் ஒட்டகம் உண்டா? ஒட்டகம் என்ற பெயரால் குறிக்கப்படும் பொருள் தமிழகத்தில் உண்டா? இரண்டும் உண்டு.
“ஒட்டகம் அவற்றோடு ஒரு வழிநிலையும்’’ என்பது தொல்காப்பிய மரபியல் நூற்பா.
இதனால் ஆராயிரம் ஆண்டுகளுக்குமுன் தோன்றிய தொல்காப்பியத்தில் ஒட்டகம் என்ற சொல் காணப்படுகின்றதல்லவா?
இனி, ஒட்டகம் தமிழகத்தில் இருந்ததா எனில், கூறுவோம்.
இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகட்கு முன் கடலால் விழுங்கப்பட்ட தென்தமிழ்க் குமரி நாட்டினிடையில் இருந்த பாலை நிலத்தைக் கடக்க உதவும் பொருட்டு இயற்கை தர இருந்தது ஒட்டகம். இதன் விரிவை மறைமலை அடிகளார் அருளிச் செய்த ‘மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்’ என்ற நூலின் 762,763,764 ஆம் பக்கங்களில் கண்டு மகிழ்க.
எனவே உஷட்ர என்பது ஒட்டகம் என்ற தூய தமிழ்க் காரணப் பெயரின் சிதைவே என்பது பெறப்பட்டது.
ஒட்டகம், ஒட்டு+அகம் எனப் பிரிந்து, உதவும் உள்ளமுடையது எனப் பொருள் பயப்பது. இதுஒட்டை எனவும் வழங்கும். இது இழிவழக்கு.
(குயில் : குரல் : 1, இசை : 53, 9-6-1959)
மங்களம், மங்கலம்

மங்களம் என்பது மங்கலம் என்ற தூய தமிழ்க் காரணப் பெயர். வடவரால் திரிக்கப்பட்ட சொல்.
மங்கு+அலம், மங்குதல் அல்லாத நிலை என்பது பொருள், இலம் வறுமை, இல்லாத நிலை என்பதிற்போல,
எனவே மங்கலம் தூய தமிழ்க் காரணப் பெயர் என்பதும், மங்களம் அதன் திரிபு என்பதும் நினைவிற் கொள்க.
(குயில் : குரல் : 1, இசை : 53, 9-6-1959)
-உண்மை இதழ்,16-31.8.16, -உண்மை இதழ்,1-15.9.16

தூலம்
ஸ்தூலம் என்ற வடசொல்லுக்கும், தூலம் என்ற தூய தமிழ்க் காரணப் பெயருக்கும் தொடர்பு உண்டு என்று எண்ணுவோரும் இருக்கின்றார்கள்.
சுலவு என்ற சொல்லடியாகத் தோன்றிய பல சொற்களில் தூலமும் ஒன்று என்று உணர்தல் வேண்டும். தூலம், சுற்றி நீண்டது. காரணப் பெயர்.
இலேசு
இது இளைது என்பதன் மரூஉ. இளைதாக முண்மரம் கொள்க என்ற குறளடி காண்க. இளைது, இளப்பம், இளைப்பம், இளசி என்பன ஒரு பொருளன. முதுமையால் பெறப்படும் வன்மை இலாதது. இது புலன்களுக்குப் புலப்படுவதில் அரிதின்மையும், தூக்குவதற்குத் தொல்லையின்மையையும் குறித்து வழங்குகிறது.
பலபம்
பலகை என்ற சொல் ஈறு திரிந்த ஓர் ஆகுபெயர். பலகை- - கற்பலகை, அதன் துகளைக் குழைத்துச் செய்த கற்குச்சி பலபம்.
எனவே பலபம் வந்தவர் மொழியன்று.
சுலபம்
இது சுளுவு என்றும் மருவி வழங்கும். சுலவு என்பதினின்று தோன்றியது. புலன்களுக்கு அண்மையானது, இதை வடசொல் என்று எண்ணி மலைத்தல் வேண்டாம். இது செந்தமிழ்ச் செல்வமே.
(குயில்: குரல்: 1, இசை: 54, 16-6-59)
தாளம்
தாள்- - ஒட்டு, இசையில் கால அளவுடைய அசையும் மற்றோர் அசையும் ஒட்ட வைப்பதோர் ஒட்டு, ஆகுபெயர். அம்சாரியை, குன்றம் என்பது போல.
இதை வடசொல் என்று காட்டும் வடவரைப் பின்பற்றித் தமிழரும் அவ்வாறே எண்ணியிருக்கின்றனர். எனவே, தாளம் வந்தவர் மொழியன்று. செந்தமிழ்ச் செல்வமே.
மேளம்
இது வடசொல் அன்று, மேழம் என்பதின் திரிபு. மேழம்- - -ஆடு, ஆட்டுத் தோலால் ஆனது மேழம், மேளம் ஆகுபெயர். எனவே மேளம் தூய தமிழ்க் காரணப் பெயர் எனக் கடைப்பிடிக்க.
அருச்சனை
இது வடசொல் என்று மயங்கற்க! அருத்தனை என்பதின் போலி. அருத்து முதனிலை. அன்சாரியை, ஐ தொழிற்பெயர். இறுதிநிலை, அருந்துதல் என்பதில் அருத்து முதநிலை. தல் தொழிற்பெயர் இறுதிநிலை. எனவே அருத்தனை அருத்துதல் ஒன்றே. உண்பித்தல் என்பது பொருள். அருந்துதலின் பிறவினை இது.
அருத்தனை, பொருத்தனை என்பது சொல் வழக்கு. இவற்றில் பொருத்தனை என்பது பொருப்பேற்றல் என்று பொருள்படும். விரதம் என்னும் வடசொல் இதே பொருளில் இடம் பெறும். வேண்டிக் கொள்ளுதல் என்றும் கூறுவதுண்டு. அறுத்தல் பெருத்தல் என்பன வேறு பொருளில் அமைந்தவை.
(குயில், குரல்: 2, இசை: 3, 23-6-59)
வியாழன்
இது வயவாளன் என்பதன் திரிபு. வயம்-வல்லமை. ஆளன்- - --உடையவன். வல்லமை உடையவன் என்பது பொருள். எனவே வியாழன் என்பது தூய தமிழ்க் காரணப் பெயர்.
இதைத் திரிபு பெற்ற நிலையில் வியாழன் என்றோ எழுதுவதில் எப்பிழையும் நேராது.
ஏழு நாள்களின் பெயர்களில் சனி என்பதைப் பழந்தமிழ் நூற்கள் காரி என்ற தூய தமிழ்ச் சொல்லால் வழங்குகின்றன.
ஆதலின் சனிக்கு காரியையே தமிழர்கள் எடுத்தாள வேண்டும். காரிக் கிழமை என்று வாய் மகிழச் சொல்க-- - -கை மகிழ எழுதுக.
(குயில், குரல்: 2, இசை: 4, 30-6-59)
-உண்மை இதழ்,16-30.9.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக