பக்கங்கள்

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

வந்தவர் மொழியா..? செந்தமிழ்ச் செல்வமா..? - 8


 
பெட்டி
இது பேட் என்ற வடசொல்லின் சிதைவென்று ஒரு பன்மொழிப் புலி, சொல்லித் திரிவதாக, மற்றொரு பன்மொழிப் புலி நம்மிடம் கூறக்கேட்டு நகைத்தோம். அந்தப் பன்மொழிப் புலி, இந்தப் பன்மொழிப் புலியிடம் ஏன் சொல்லும்? இந்தப் புலி ஏன் கேட்டுக் கொண்டிருக்கும்? இல்லாததைச் சொன்னால் முகத்தில் உமிழ்வானே என்று நினைத்தால் அப்புலி இப்புலியிடம் சொல்லத் துணியுமா?
பெட்டு, பெட்டல் இரண்டுக்கும் ஒன்றே பொருள் பேணுதலும் விரும்புதலும்.
பெட்டலின் அடியாகிய பெட்டு என்பது ‘இ’ பெயர்-இறுதிநிலைப் பெற்று பெட்டியை உணர்த்திற்று. எனவே பெட்டி-விருப்பத்தைப் பெற்றிருப்பது.
பெட்டி என்பது தூய தமிழ்க் காரணப் பெயரன்றோ. இதனைப்,
பிளையும் பேணும் பெட்பின் பொருள்
என்ற தொல்காப்பிய நூற்பாவாலும்,
பெட்ட வாயில்பெற் றிரவுவலி யுறுப்பினும் காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும்
என்ற கற்பியல், அடியாலும், நம் தமிழ்ப் புலவர்கள் உணர்ந்து வைத்தும், வடநாட்டானிடம் ஓடி, பெட்டி என்றதற்கு ஒத்த ஒலி வடமொழியில் ஏதாவது உண்டா, தமிழைத் தாழ்த்திக் கூறவேண்டும் என்று கேட்டு அங்கிருந்து ஓடிவந்து தமிழரை நோக்கிப் பெட்டி என்பது பேட் என்ற வடசொல்லின் சிதைவென்று மானமற்ற வகையில் சொல்லித் திரிவது ஏன்? காட்டிக் கொடுத்து வயிற்றை வளர்க்கத்தானே!
(குயில்: குரல்: 2, இசை: 19, 17-11-1959)
புத்தகம்
புஸ்தகம் வடமொழி என்று அதன் சிதைவே புத்தகம் என்றும், ஆதலால் புத்தகம் வடசொல்லே என்றும் கூறி மகிழ்வர் வடசொல்காரர். அவரடிநத்தும் தமிழர்களும் அப்படியே?
புத்தகம், புதுமை அகம் எனும் இரு சொற்கள் சேர்ந்த ஒருசொல். புதுமையின்மை இறுதி நிலை கெடப் புது என நின்று, அதுவும் தன்ணாற்றிரட்டல் என்ற சட்டத்தால் புத்து என ஆகி அகம் சேர - உயிர்வரின் - உக்குறள் மெய் விட்டோடும் என்பதால் புத்தகம் ஆயிற்று. புத்தகம்-புதுமைக்கு இடமானது, புதுமையான உள்ளிடம்.
அந்நாளில் ஒலி வடிவை வடிவிற் கொணர்ந்தார் எனில் அது புதுமை அன்றோ. எனவே புத்தகம் தூய தமிழ்க் காரணப் பெயர்.
புத்தகத்தை புஸ்தகம் என்றது வடவர் செயல். வேட்டியை வேஷ்டி என்றும், முட்டியை முஷ்டி என்றும் அவர்கள் கூறவில்லையா?
(குயில்: குரல்: 2, இசை: 22, 8-1-59)
மேகம்
இது வடசொல் அன்று, தூய தமிழ்க் காரணப் பெயர். மேகு-மேல் அம்சாரியை. “மேக்கு மேற்றிசை மேலும் பேர்’’ என்ற கண்ட காண்க. மேலே தவழும் முகிலுக்கு பெயர். மேல் என்பதே மேற்கு, மேக்கு, மேகு எனத் திரியும்.
இதை வடவர் வடசொல் என்று கூறி மகிழ்வார். அது கடைபட்ட முடிச்சுமாறித்தனம் என்க.
சொத்து
இது வடமொழியா என்று ஒரு தோழர் கேட்கின்றார். கேட்க வேண்டிய கேள்வி! ஏனெனில் சிறந்த பொருள் மறைந்துள்ள ஒரு சொல்.
இது தூய தமிழ்க் காரணப்பெயர். என்னை? சொல்+து = சொற்று, து ஒன்றன் பால் குறிப்பு வினை முற்று இறுதிநிலை. சொல்-புகழ். புகழுடையது என்ற காரணத்தால் சொற்று என்றனர். முன்னைத் தமிழர்கள், சொற்று என்பது சொத்து என மருவியது.
ஒருவனுக்குள்ள செல்வம் முழுவதையும் சொத்து என்பார்கள். எனவே அது புகழுக்குரியது. ஆதலால் சொத்து எனப்பட்டது ஆகுபெயர்.
(குயில்: குரல்: 2, இசை: 23, 15-12-1959)
- உண்மை இதழ், 1-15.1.17

படித்தல்
“கற்றல் என்ற பொருளில் படித்தல் என்ற சொல் பண்டைத் தமிழ் நூல்களில் ஓரிடத்தும் காண இயலாது என்றும்,
பட் என்ற வடமொழி வேர்ச் சொல்லின் அடியாகப் பிறந்ததே அச்சொல் என்றும், இலக்கணச் சிந்தனை என்ற நூலின் 101ஆம் பக்கத்தில் திரு. எஸ். வையாபுரிபிள்ளை எழுதி உள்ளார். இதைத் தயை கூர்ந்து விளக்குக!’’ என்றும், திருமதி குன்றம் திரு. அ. கணபதி அவர்கள் நமக்கு எழுதுகின்றார்கள்.
படித்தல் என்பது கற்றல் என்ற பொருளில் அமைந்திருப்பதாக வையாபுரியார் எண்ணினார். ஆயினும் அதன் நேர் பொருளை அவர் உணர்ந்திருந்தார் என்று எண்ண முடியவில்¬. அதன் மேல் அவர் ‘பட்’ என்றதன் அடியாகவே படித்தல் வந்தது என்றார். செய்தி முதற்கோணல் முற்றும் கோணலாக முடிந்தது.
படித்தல் என்பதன்  பொருள் ஒன்று கண்டு அவ்வொன்றைக் கொள்ளல் என்பதேயாகும். எனவே படி என்றால், ஒன்று கண்டு அவ்வொன்றைக் கொள் என்பது பொருள். நீ அந்நூலைப் படி என்றால், நீ அந்நூலிலிருந்து ஒன்றைக் கண்டு அவ்வொன்றைக் கொள், மனத்துள் வை -என்பது அன்றோ பொருள்? இதில் வரும் ‘படி’ வடசொல்லடியா? அன்று! தூய தமிழ்ச் சொல்லே.
இதுவன்றி மிதித்தேறும் படி ஒன்று இருக்கிறது. அதுவும் ஒன்று கண்டு அவ்வொன்றை (அதாவது அதே போன்ற மற்றொன்றை) அடைத்தல் என்ற தொழிலே ஆகுபெயராயிற்று. அவ்வாறு வரும் ‘படி’யும் வடசொல்லாகிய ‘பட்’ என்றதன் தோற்றமா? அது தூய தமிழ்க் காரணப் பெயரே.
இனியும், பிடி என்பது உலகுக்குப் பெயராய் வரும், காரணம்? ஒருபால் ஒருவன் நடத்தலை-இருத்தலை மற்றொருவன் காணுகின்றான். அம் மற்றொருவன் அது கண்டு நடத்தலை, இருத்தலை மேற்கொள்கிறான். இதுவும் ஒன்று கண்டு அதைக் கொள்வது என்பதுதான். இது தொழிலும் ஆகுபெயராயிற்று.
மேலும், படிவம் என்றதில் வரும் படியை நோக்குக! இதில் படி என்றதே வேர்ச்சொல். ஒன்றைப் பார்த்து வார்ப்படம் செய்த மற்றோர் உருவம் என்பது அதனால் பெறப்படும். இதுவும் ஒன்று கண்டு அவ்வொன்றைக் கொள்வது தான்.
மற்றும், அப்படி இப்படி எனச் சுட்டை அடுத்து வருவனவும், எப்படி என வினாவை அடுத்து வருவனவும், வரும்படி இருக்கும்படி என வினையை அடுத்து வருவனவும் ஆகிய எப்’படி’யும் மேற்சொன்ன பொருளிலேயே அமைந்திருப்பதைக் கூர்ந்து நோக்குக!
கீழ்ப்படிதல் என்பதிலுள்ள படி, எப்படி என்று கேட்பின்-அதுவும் அப்பொருளிலேயே அமைந்திருக்கின்றது. என்னை?
ஆணையிட்டானிடம் ஒன்று கண்டு (அவன் படிந்து போதலை விரும்புகின்றதை) அதை மேற்கொள்ளுவதே கீழ்ப்படிதல் ஆகும் என்க.
படி என்பவை அனைத்தும் ஒரே பொருள் உடையவை என்பது கண்டோம். காணவே படி என்ற சொல், தமிழ் தோன்றிய நாள் தொட்டே தமிழிலக்கியங்களில் உண்டு என்பதும் கண்டோம்.
வையாபுரியார் தம் வாழ்வையே பார்ப்பனர் மெச்சிச் சலுகை தரவேண்டும் என்ற பிச்சைக்காரத்தனத்துக்கு அடகு வைத்தவர்.
இந்தப் படி என்பதையே வடவர் ப்ரதி என்றார்கள். படி என்பது மட்டுமன்று. தமிழே வடமொழியினின்று வந்தது என்று கூறித் தமிழர்களால் கான்று உமிழப்பட்டவர் அவர்.
இலக்கணச் சிந்தனை-- -_ --சிந்தனை ஒன்று வையாபுரியார்க்குத் தனியாக உண்டோ? இல்லவே இல்லை. ஆனால் வையாபுரியாரிடம் ஓராற்றல் அமைந்திருந்தது. அது என்ன தெரியுமா?
தமிழையும் தமிழரையும் தமிழகத்தையும் ஆரியர்களுக்குக் காட்டிக் கொடுத்துப் பிழைக்கும் ஒரு கீழ்மைச் செயலைப் பின்பற்றவும் அவர் ஆட்களைத் தோற்றுவித்தார். தெ.பொ. மீக்கள் முதலிய எத்தனை பேர்கள் இந்த நாட்டில் இருக்கின்றார்கள் பாருங்கள்.
இது செயற்கரிய செயல்தானே! படி என்பது தூய தமிழ்க் காரணப் பெயர் என்பதில் எட்டுணையும் ஐயுற வேண்டா.
(குயில், குரல்: 2, இசை: 26, 5.1.1960)
-- உண்மை இதழ், 1-15.2.17


உத்தரவு, உத்திரவு, உத்தாரம்
இவைகள் வடசொற்கள் அல்ல. தூய தமிழ்க் காரணப் பெயர்களே.
உம் என்பது ஆடுமாடு மேய்ப்பவர்களிடம் கேட்கின்றோம். உம் என்பதன் பொருள் என்ன? செல். அதாவது ஓரிடத்தினின்று செல், ஏறு, உயர்வு, கொள் என்பன. ஆடு மாடு பேய்ப்பவர்களிடம் கேட்கப்படுதால் உம் என்பதைப் பற்றி இங்கு நாம் எடுத்துச் சொல்கிறோம் என்பதில்லை. பழங்காலத்தில் மேற்சொன்ன பொருளில் உம் என்பதைத்தான் மேற்கொண்டார்கள் சொற்கள் பொருளாகக் காலமாதலால்.
உம் என்ற பிறகு உந்து எனத் திரிந்தது, திரிந்தாலும் பொருள் மாறாது, மேற்சொல்லிய பொருள்கள் தான்.
உந்து என்பதிலிருந்து உந்தி என்பது தோன்றிற்று. இது வந்து என்பதன் அடியாகப் பிறந்த பெயர்ச்சொல். இதில் இ. பெயர் இறுதியில்லை. பொருள் உந்தப்படுவதாகிய ஆள் கூட்டம்.
மற்றும் உந்து என்பது உயிர்ப்பினை உந்தும் இடமாகிய கொப்பூழ் மற்றும் உந்தி உந்துதலால் பெற்ற இடமாகிய உயர்ச்சியையும் குறித்தது. பிறவும் உண்டு.
உந்து என்பதனடியாகப் பிறந்தது உந்தல். உந்துதல் தொழிற்பெயர்.
இனி,
உந்து - உத்து என வலித்தல் பெற்றது என்ன பொருள் முன் சொன்னதே.
உத்து-உத்தரவு. உந்து-அரவு. அரவு தொழிற்பெயர் இறுதிநிலை பெற்று உத்தரவு ஆயிற்று.
அரவு தொழிற் பெயர் இறுதி நிலையால் வருவதைத் தேற்றிரவு முதலியவற்றை காண்க.
உத்தரவு என்ன பொருள்? ஒருவன் தன் ஆணையை மேற் செல்ல வைப்பது.
உத்தரம்-(உத்து+ஆர்+அம்) இதில் அரவு என்ற இறுதிநிலை அர் எனத் திரிந்து அம் முச்சாரியைப் பெற்றது.
உத்தரவு, உத்தரம், உத்தாரம் இது சார்ந்த பிற பொருளிலும் வரும். ஆயினும் அப் பிற பொருள்களும் மேலே சொல்லிய பொருளுக்கு அப்பாற் சொல்ல மாட்டா.
எனவே, இவை தூய தமிழ்க் காரணப் பெயர்கள் ஆதல் அறிக. இன்னும் உத்து என்பதன் அடியாக உத்தித்தல், உத்துதல் என்றும் என்பனவும் வருவதுண்டு.
(குயில்: குரல்:2, இசை:27, 12-1-1960)
கண்ணியம்
இது கண்யம் என்ற வடசொல்லின் சிதைவென்பர் வடசொற் பற்றாளர். வடசொல் என்ற எண்ணத்தால் எடுத்தாள்வாரும் உளர்.
இஃது தூய தமழ்க் காரணப் பெயர் ஆதலை அவர் அறியார். கண்ணல், கண்ணம், கருதுதல், குறித்தல், மகிழ்தல் என்றும் பொருளுடையவை.
கண்ணம் என்பது கண்ணியம் ஆனது. ஓவம் ஓம் ஆனதபோல என்க.
“கொடிநிலை வள்ளி கந்தழி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலான மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே” என்ற தொல்காப்பிய நூற்பாவிலும் காண்க.
கண்ணியம்-கருதத்தக்கது, மேன்மை ஆதலின் கண்ணியம் தூய தமிழ்க் காரணப்பெயர் என்று கடைப்பிடிக்க.
கவனம்
இது வடசொல் அன்று, கவற்சி_விருப்பம், கவல், விருப்பம் கெடுதலினால் ஆகும் வருத்தம்.
அதனடியாகப் பிறந்ததே கவனம், கவல் கவன் எனத் திரிந்து அம்முச் சாரியை பெற்றதென்க.
கவனம்- _ கருத்து, விருப்பம், கண்காணிப்பு.
எனவே கவனம் தூய தமிழ்க் காரணப் பெயர் ஆதல் அறிக.
(குயில்: குரல்:2, இசை:28, 26-1-1960)
தீந்தா
இது இறகு தொட்டு எழுதுவதற்கான வண்ணநீர். இதை இக்காலத்தார் ஆங்கிலத்தில் இங்க் என்பர். தீந்தா என்னும் இப்பெயர் வடசொல் என்று எண்ணுவாரும் உளர். அன்று, இது தீண்டு என்பதன் திரிபாகத் தீந்தா ஆனது.
தீண்டு-_இறகால் தீண்டப்படுவது, எனவே தீந்தா தமிழ்க் காரணப் பெயர்.
(குயில்: குரல்:2, இசை:38, 31-5-1960)
-- உண்மை இதழ், 1-15.3.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக